இந்திய நாடு கூட்டாட்சி கோட்பாட்டின் ஒரு சில அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் சாசனத்தையும், அரசியல் அமைப்பு முறையையும் கொண்டுள்ளது. அரசியல் சட்டம் மத்திய அரசுக்கு உயர் அதிகாரங்களை வழங்கியுள்ளது. இது நிர்வாக அதிகாரத்தையும், நிதி அதிகாரத்தையும் குவித்துள்ளது. அதே நேரத்தில் வரையறுக்கப்பட்ட விதத்தில் மத்திய மாநில அரசுகளுக்குகிடையில் அதிகாரங்களையும் ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்தலும் இருந்து வருகிறது. விடுதலை பெறும் தறுவாயில் நிகழ்ந்த தேசப் பிரிவினையின் அனுபவங்கள், அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களை பாதிக்கச் செய்தது. இதுவே கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக இருந்து வரும் அரசியல் சட்டத்தில் பல்வேறு அம்சங்களை இடம் பெறச் செய்தது.
பாராளுமன்றத்தின் மூலம் மாநிலங்களை முறைப்படுத்திடும் அதிகாரத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால், மாநில சட்ட மன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். மாநிலங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை தேசிய நலன் கருதி பாராளுமன்றத்தால் நிராகரிக்க முடியும். மாநில அரசுகளை உருவாக்குவதில் ஆளுநர்கள் பங்காற்ற முடியும். தவிர அரசியல் சட்டப் பிரிவு 356-ன் படி மாநில அரசை பதவி நீக்கம் செய்யக்கூடிய அதிகாரத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. வரையறை செய்யப்படாத இதர அதிகாரங்களையும் மத்திய அரசு தன்னகத்தே கொண்டுள்ளது. பெரும்பாலான வரி விதிப்பு அதிகாரங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. மத்திய அரசையே சார்ந்திருக்கக்கூடிய இத்தகைய அம்சங்களோடு, மத்திய அரசு மாநில அரசுகள் ஆகியவற்றுக்கிடையில் பல்வேறு அம்சங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டுள்ள தோடு, பொதுப்பட்டியலொன்றும் இருந்து வருகிறது.
மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான உறவு பற்றிய நீதிமன்ற பரிசீலனை என்பது கூட்டாட்சி அமைப்பு முறையில் உள்ளதைப் போன்று இருந்து வருகிறது. சீர்தூக்கிப் பார்த்தால் இந்திய அரசியல் அமைப்பு கூட்டாட்சி குணாம்சங்களை ஒரு முகப்படுத்தும் கூறுகளை சுற்றி வளைத்து கட்டப்பட்டுள்ளன.
கூட்டாட்சி கோட்பாடு மற்றும் மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் ஆகியவற்றின் வரலாற்றில் மேலும், மேலும் கூட்டாட்சி கோட்பாட்டினை கொண்ட மத்திய – மாநில உறவுகளாக அமைத்திடும், அரசியல் இயக்கமும், அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களும் நிறைந்து உள்ளது. இத்தகைய செயல்பாடுகளும் கூட்டாட்சியை நோக்கிய மேலும் கூடுதலான நடவடிக்கைகளும் அரசியல் சட்டத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தவில்லை என்றாலும், இவை முழுக்க முழுக்க பயனற்றது என்று கூறிவிட முடியாது. கூட்டாட்சி அமைப்பு முறைக்கான நீண்ட நெடிய இயக்கத்தினை அறிய பயனுள்ளதாகவே இருக்கும். அறுபதுகளின் இறுதி வரையிலான முதல் கட்டத்தில் தேசத்தை நிர்மாணிப்பதும் வளர்ச்சியும்தான் ஆட்சியாளர்களின் பிரதான பணியாக இருந்தது. ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கில் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாத பிரச்னைகள் இருந்து வந்தது. தேசிய ஒருமைப்பாடு, தேசப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எதிரான சவால்களாகவே இப்பிரச்னைகள் கருதப்பட்டது. இதே காலத்தில்தான் மத்தியில் அதிகார குவிப்பை நோக்கிய முயற்சிகள் துவங்கியது. இதே கால கட்டத்தில் மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது என்பதும் இதன் ஒத்திசைவாய் இருந்தது.
இந்த காலகட்டத்தில் முழுக்க முழுக்க மத்தியத்துவப்போக்கு மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை. மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான இயக்கமானது, சுதந்திரத்திற்குப் பிந்திய ஜனநாயக இயக்கங்களில் முக்கியமானதொன்றாகும். ஐம்பதுகளில் இவ்வியக்கம் வீறு கொண்டது. இது 1956-ல் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கிட வழி வகுத்தது. ஆளும் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் வெகுஜன இயக்கங்களின் எதிர்ப்பினால் இக்கோரிக்கையை ஏற்றது. பின்னாளில் மேலும் கூடுதல் அதிகாரங்களுக்காக மாநிலங்கள் கோரிக்கை விடுப்பதற்கு இது அடித்தளமாய் அமைந்தது. 1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் இரண்டாவது கட்டம் துவங்கியது. காங்கிரஸ் கட்சி முதன் முறையாக ஒன்பது மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் உருவாயின. மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடது சார்புடைய ஐக்கிய முன்னணி அரசுகள் பதவியேற்றதும் இதில் உள்ளடங்கும். மத்திய மாநில உறவுகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெற்றது. இக்கோரிக்கைகளுக்கு அரசியல் ரீதியில் பதிலளிக்கும் முகமாய் திருமதி இந்திரா காந்தி தலைமையிலான மத்தியில் உள்ள ஆளும் கட்சி, இழந்த தனது அரசியல் தளத்தை மீட்கும் வகையில் சூதான செயல்முறைகளை மேற்கொண்டது. தவிர மத்தியில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேலும் கூடுதல் அதிகாரங்களை குவித்திடும் வகையில் உருவாக்கப்பட்ட கொள்கைகளை காங்கிரஸ் கட்சி பின்பற்றி வந்தது.
எனவே எழுபதுகளிலும் எண்பதுகளிலும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கக் கோரி நடைபெற்ற மோதல்களை காண முடிந்தது. ஒரு புறம் காங்கிரஸ் கட்சியும், மற்றொரு புறம் இதர பிராந்திய கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் இந்த போராட்டத்தில் நின்றது. 1969 இல் திமுக அரசு அமைத்த ராஜமன்னார் குழுவிலிருந்து இது தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 1977 இல் மேற்கு வங்கத்தின் ஆளும் இடதுசாரி அரசு மத்திய மாநில உறவுகள் குறித்த அறிக்கையொன்றை தயாரித்தது. 1983 இல் ஸ்ரீநகரில் மத்திய மாநில உறவுகளை பரிசீலனை செய்திட எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. இது மத்திய மாநில உறவுகளை வரையறை செய்திட அடிப்படையாக அமைந்தது. மேலும் கூடுதலான அதிகாரங்களை கொண்ட கூட்டாட்சி அமைப்பு முறை பற்றி வரையறைகளும் தயாரிக்கப்பட்டன. இவற்றை ஏற்கும் வகையில் மத்திய அரசு 1983 இல் மத்திய மாநில உறவுகளுக்காக சர்க்காரியா தலைமையிலான குழுவொன்றை அமைத்தது.
1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டது ஜனநாயக அதிகாரப் பரவலுக்கு வகை செய்தது. மத்தியில் அதிகாரத்தை குவித்திடும் செயல்முறைகள் இவற்றை பின்னுக்கு தள்ள முயற்சித்தது, அதிகாரப் பரவலையும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகார கோரிக்கையையும் எதிர்ப்பது என்பது வர்க்கத் தன்மை பொருந்தியதாகும். அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டு மையத்தில் இருந்து வரும் அரசின் அதிகாரத்தை குறைத்திடும் முயற்சியை இந்திய பெரும் முதலாளிகள் எதிர்த்து வந்தனர். ஒரே தன்மை வாய்ந்த சந்தையை உருவாக்கிடும் அவர்களது பேராசை மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கையை நிராகரித்திட வழி வகுத்தது. இதனால் இந்திய துண்டாடப்படும் என்று அவர்கள் கண்டனம் செய்தனர்.
மாநில அரசுகளை பதவி நீக்கம் செய்திட மத்திய அரசு தொடர்ச்சியாக அரசியல் சட்டப் பிரிவு 356 ஐ பயன்படுத்தியது என்பது கூட்டாட்சி கோட்பாட்டின் மீதான அரசியல் தாக்குதலை வெளிப்படுத்தியது. இப்படி பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசுகளில் பெரும்பாலானவை எதிர்க்கட்சிகளின் அரசாங்கங்கள் ஆகும். அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற பதவி என்ற பெயரால் மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாகவே மாறினர். மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முற்போக்கான சட்டங்களுக்கு பல ஆண்டுகள் வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. மேற்கு வங்க சட்டமன்றத்தில் நிலச்சீர்திருத்தம் பற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காததை குறிப்பிட்டு சொல்ல முடியும். நிதியாதாரங்களை மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்து கொள்வது என்பது அரசியல் சட்ட உரிமையாகும். இதற்கு மாறாக மாநிலங்கள் மத்திய அரசை சார்ந்திருக்கச் செய்வதற்கும், கீழ் நிலையில் வைப்பதற்குமான செயல் முறையாக இது இருந்தது. எங்கெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கிறதோ அப்பொழுதெல்லாம் மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள இனங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்துள்ளது. உள்நாட்டு அவசரநிலை இருந்து வந்த கட்டத்தில், அரசியல் சட்டத்தில் 42-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது இத்தகைய செயல்பாடுகள் உச்சநிலையை அடைந்தது.
மத்திய அரசு பேராதிக்கம் பெற்றதாய் ஏகபோக அதிகாரம் கொண்டதாய் இருந்து வந்தது. இத்தகைய அரசியல் அமைப்பு முறையின் நெகிழ்ச்சியற்ற தன்மை எதிர்ப்புகளை எதிர்கொண்டது. திமுக, அகாலிதளம் போன்ற பிராந்திய கட்சிகள் எழுச்சி பெற்றது இதன் துவக்கமாகும். இதன் தொடர்ச்சியாக பிராந்திய கட்சிகள் பல்கிப் பெருகின. இக்கட்சிகளின் பொருளாதாரம் வர்க்கத் தன்மை கொண்டிருந்ததோடு, இவை பிராந்திய பண்பாட்டியலை பிரதிபலிப்பதாயும் இருந்தது. இந்தியாவில் பெரும்பாலான மொழிவாரி தேசிய இனங்களில் இந்தி அல்லாத மொழிகளின் தேசிய இனங்களே பிராந்தியக் கட்சிகளை முதலில் உருவாக்கியது. அந்தந்த மொழியினரின் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் வளர்ந்து வரும் வர்க்க நலன்களை இந்த பிராந்திய கட்சிகள் வெளிப்படுத்தின. தவிர இந்த கட்சிகள் மக்களின் மொழி பண்பாட்டு அபிலாஷைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டன. எண்பதுகளில் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி எழுச்சி பெற்றது இத்தகைய வளர்ச்சியின் குறியீடாகும்.
மத்தியில் அதிகார குவிப்பிற்கு ஆதரவான சக்திகளுக்கும் கூட்டாட்சிக்கு ஆதரவான சக்திகளுக்கும் இடையிலான போட்டியில் எத்தரப்பிற்கும் வெற்றி கிட்டவில்லை. அரசியல் சட்டம், நிதி அமைப்பு முறை, மத்தியத்துவம் ஆகிய அம்சங்களில் குறிப்பிடத்தக்க விதத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லையென்றாலும், அரசியல் கட்சிகளின் முறை என்பது கூட்டாட்சி கோட்பாட்டில் உருவானது. எண்பதுகளின் இறுதியில் காங்கிரசின் ஒரு கட்சி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இது தீவிரத்தன்மை வாய்ந்த மத்தியத்துவத்தை நிறுத்தி வைக்கும் சூழலை உருவாக்கியது.
1989 இல் முதன் முறையாக வி.பி.சிங் தலைமையிலான ஒரு தேசிய முன்னணி கூட்டு அரசு மத்தியில் இடம் பெற்றது. தெலுங்கு தேசம், திமுக, அசாம் கண பரிஷத் போன்ற முக்கியமான பிராந்திய கட்சிகள் இந்த முன்னணியில் அங்கம் வகித்தன. குறுகிய காலமே பதவியில் இருந்தாலும் இந்த அரசு கூட்டாட்சி கோட்பாட்டினை வலுப்படுத்தும் வகையில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1990ல் மாநில அரசுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இத்தகைய குழுவொன்றினை அமைத்திட அரசியல் சட்டத்தில் இருந்த ஷரத்துகள் மத்திய அரசால் முன்னர் பயன்படுத்தப் படவில்லை. 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு உருவானதற்குப் பின் இதன் தொடர்ச்சியாக 1998, 1999-ல் பாஜக தலைமையிலான அரசிலும், தற்போது காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அணி அரசிலும், பிராந்திய கட்சிகள் பங்கேற்றன. மத்தியில் உள்ள கூட்டணி அரசுகளில் பிராந்திய கட்சிகள் பங்கேற்பது என்பது இன்றைய தினம் வழக்கமானதொன்றாக மாற்றம் கண்டது, 1989-ல் உருவான தேசிய முன்னணி அரசையும், 1996 1998ல் இருந்து வந்த ஐக்கிய முன்னணி அரசையும், கூட்டாட்சி கோட்பாட்டின் தீவிர ஆதரவாளர்களாக உள்ள இடது சாரிகள் ஆதரித்தனர்.
மத்தியில் கூட்டணி அரசுகளில் பிராந்திய கட்சிகள் பங்கேற்பது மத்திய அரசின் மத்தியத்துவ முயற்சிகளை தடை செய்வதற்கு வகை செய்தது. கூட்டணி அரசுகளின் அரசியல் ரீதியிலான விட்டுக் கொடுக்கும் அணுகுமுறை, மாநிலங்களுக்கு எதிரான மோதல் சாத்தியப்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தது. கூட்டாட்சி கோட்பாடுகள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாத பாஜக கூட மாநில கட்சிகளின் கவலை கூறித்து தனது அக்கறையை வெளிப்படுத்தியது.
மத்தியில் உள்ள ஆளும் கட்சி அரசியல் சட்டப் பிரிவு 356 ஐ பயன்படுத்துவது என்பது கூட்டாட்சிக்கு எதிரான மிகவும் வெறுக்கத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். இச்சட்டப் பிரிவினை நீக்க கோருவது அல்லது திருத்தங்களை மேற்கோள்வதன் மூலம் இச்சட்டப் பிரிவினை தன்னிச்சையாக பயன்படுத்துவதை தடுப்பது என்பது மத்திய மாநில உறவுகளில் மேலும் கூடுதலான சமத்துவத்திற்காக வாதிடக்கூடிய சக்திகளின் முதன்மையான பணியாகும். 1994-ல் கர்நாடக மாநிலத்தில் திரு பொம்மை தலைமையிலான அரசு நீக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், மத்திய அரசு இத்தகைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் விதத்தில் குறிப்பிடத்தக்க விதத்தில் பங்காற்றியது. பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை பயன்படுத்துவது என்பது தன்னிச்சையானது என்றும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் மாநில அரசினை பதவி நீக்கம் செய்யும் குடியரசுத் தலைவரின் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வரை, மாநில சட்டமன்றத்தை கலைத்திடும் முடிவை அமல்படுத்தலாகாது என்று உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்தது. இது மாநில அரசுகளுக்கு பாதுகாப்பளிப்பதாக அமைந்தது, அது வரை பதவி நீக்கம் செய்வது என்பது அமல்படுத்தப்படாமல் அங்கீகாரமற்ற நிலையிலேயே இருக்க வேண்டும் என்றும் இது தவிர எந்த அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்பதை குடியரசுத் தலைவர் திட்டவட்டமாக விளக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் இதை சட்ட ரீதியிலான பரிசீலனைக்கும் உட்படுத்தியது. கூட்டாட்சியும் ஜனநாயகமும் ஒன்றோடொன்று இணைந்தது என்றும், மற்றொன்றுக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஒன்றை மீறலாகாது என்றும் அரசியல் சட்டத்தின் பின்னணியில் உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.
ஒரு கட்சி ஆதிக்கத்தின் முடிவுடன் சம்பந்தப்பட்ட அரசியல் மாற்றங்களும், பிராந்திய கட்சிகளின் வளர்ச்சியும், மேலும் கூடுதலான அதிகாரங்களை கொண்ட கூட்டாட்சி முறைக்காக இடதுசாரி சக்திகளின் உறுதிப்பாடும் கூட்டாட்சி அமைப்பு முறையின் சாதகமான அம்சங்களாகும். இவை இருப்பினும் இது நிகழவில்லை என்றே கூற முடியும். இரு எதிரெதிரான அம்சங்களே இதன் பிரதான காரணிகளாகும்.
முதல் காரணம் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளின் கண்ணோட்டம். பெரும் முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றிணைந்த இந்திய ஆளும் வர்க்கம், வலுவான மத்திய அரசு என்பதற்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது. இத்தகைய பார்வையையே இவ்விரு கட்சிகளும் கொண்டுள்ளன. காங்கிரசைப் பொறுத்த மட்டில், மத்தியத்துவமற்ற ஜனநாயகப் பகிர்வு என்பது பஞ்சாயத்து அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது என்ற மட்டில்தான் உள்ளது. மாநிலங்களின் உரிமைகளை அது புறக்கணிக்கிறது. ஒன்றுபட்ட தேசத்தை நிர்மாணம் செய்யும் திட்டத்திலிருந்து இது மாறுபட்டதாகும் என்று அக்கட்சி கருதுகிறது. தத்துவார்த்த ரீதியில் அகண்ட பாரதம் என்ற கோட்பாட்டை பாஜக பின்பற்றி வருகிறது. பேரதிகாரம் கொண்ட தேசீயம் என்ற கருத்தை ஏற்காத வலுவான மாநிலங்களுக்கும் அல்லது பிராந்திய சக்திகளுக்கும் அது எதிரானது. இதனால்தான் மொழிவாரி மாநிலங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கு பாஜக எதிராக உள்ளது. இதற்கு பதிலாக நிர்வாக அடிப்படையில் சிறு மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று அக்கட்சி வாதிடுகிறது. இத்தகைய சின்னஞ்சிறு மாநிலங்கள் பலவீனமானதாக மத்திய அரசை சார்ந்ததாகவே இருக்கும்.
இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், பிராந்திய கட்சிகள் ஆகியவை முன் வைக்கக்கூடிய மூன்றாவது மாற்றுக் கருத்து இன்னமும் ஒரு திட்ட வட்டமானதாக உருப்பெறவில்லை. அவர்கள் மத்திய மாநில உறவுகளை சீர் செய்திட வேண்டும் என்பதோடு கூட்டாட்சி அமைப்புக்காகவும் உறுதியாக வாதிட்டு வருபவர்களாகும். மத்தியில் இச்சக்திகளின் கை ஓங்குகையில் இத்திசை வழியில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் இரண்டாவது எதிரான அம்சமாகும். தாராளவாதிகளும், அவர்களை முடுக்கி விடக்கூடிய பன்னாட்டு நிதி அமைப்புகளில் இருக்கக்கூடியவர்களும் ஒரு விதமான சந்தை கூட்டாட்சிக்கு முயற்சித்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் கட்டு திட்டங்கள் நீக்கப்பட்ட நிலையில், ஒரு சில முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார செயல்பாடுகளிலிருந்து மத்திய அரசு பின்வாங்கிக்கொள்கிறது. மாநிலங்கள் அந்நிய நேரடி மூலதனத்தை ஈர்க்கும் வகையில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக வரம்புகளுக்கிடையிலான இத்தகைய போட்டி, கூட்டாட்சி உணர்வுக்கு பாதகமானதாகும். மாநிலங்களின் நிதியாதாரங்களை பலவீனப்படுத்தக்கூடிய வரிச் சலுகைகள், வரி த் தள்ளுபடி போன்றவற்றை வழங்குவதில் இது போட்டிக்கு வழி வகுக்கும். மத்திய அரசும் தன் பங்குக்கு நவீன தாராளமயக் கொள்கைகளை மத்திய மாநில உறவுகளில் திணிக்க முயலும். மத்திய அரசின் நிதிப் பிரச்னைகளை மாநிலத்திற்கு மாற்றிடவும், மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய கடன்களின் வட்டி விகிதத்தை உயர்த்திடவும் இக்கொள்கைகள் வகை செய்யும். மேலும் மாநிலங்கள் சிக்கியுள்ள கடன் வலையை காரணம் காட்டி, மத்திய அரசு அவற்றின் மீது நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரமாக திணிக்க முயற்சிக்கும்.
மாநிலங்களில் உள்ள வலுவான அரசியல் கட்சிகள் மத்தியில் ஆட்சியாளர்களாக மாறிய நிலையில், மாநில அரசுகளின் பேரம் பேசும் திறனை பலவீனப்படுத்தி, அவற்றின் நிதி நிலைமையை தாராளமயக் கொள்கைகள் மோசமடையச் செய்வது என்பது முரண்பட்டதாகும். தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் கூட்டாட்சிக் கோட்பாட்டின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது, மத்திய மாநில நிர்வாகத்திலும், மாநிலங்களுக்கிடையேயும் செயல்பட்டு வரக்கூடிய தேசிய வளர்ச்சி சபை, மாநிலங்களுக்கான குழு, திட்டக்குழு போன்ற அனைத்து அமைப்புகளும் பலவீனமடைந்துள்ளது. நிதிக்குழு என்பது நவீன தாராளமயக் கொள்கைகளை திணிக்கக்கூடிய ஒரு கருவியாகவே மாறிவிட்டது. முதலீடுகளையும், மூலதன நிதியாதாரங்களையும் பெறுவது மாநிலங்களின் உரிமை என்பதற்கு பதிலாக இவற்றுகாக மற்ற மாநிலங்களோடு போட்டியிடும் நிலைக்கு மாறிவிட்டது.
1990களில் மாநிலங்களுக்குள்யேயும் மாநிலங்களுக்கிடையேயும் பிராந்திய வேறுபாடுகள் விரிவடைந்து வருவதை காண முடிந்தது. தாராளமயக் கொள்கைகளினால் மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற ஒரு சில மாநிலங்கள் பலமடைந்தது. இம்மாநிலங்கள் அந்நிய நேரடி முதலீட்டில் பெரும் பங்கினையும், வங்கிக் கடன்களையும் பெற்றது.
1991 ஆகஸ்ட் முதல் 1998 டிசம்பர் வரையிலான காலத்தில் ஐந்து மாநிலங்கள் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கோரிக்கைகளில் 51 விழுக்காட்டை பெற்றன. இந்தி பேசக்கூடிய அனைத்து மாநிலங்களின் அந்நிய நேரடி முதலீட்டுக் கோரிக்கைகளின் மொத்த தொகை என்பது, தமிழ் நாடு மட்டும் பெற்றிட்ட முதலீட்டுக்கு ஈடாக இருந்தது, 2002ம் ஆண்டில் வங்கிகளின் வைப்பு த் தொகையில் மகாராஷ்டிர மாநிலத்தின் பங்கு ஐந்தில் ஒன்றாகும். ஆயின் அம்மாநிலம் பெற்றிட்ட ஒட்டு மொத்த கடன் மூன்றில் ஒரு பங்காகும். மிகப் பெரும் மாநிலங்களான உத்தர பிரதேசமும், பீகாரும் சமூக பொருளாதார அளவீடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது.
இன்றைய தினம் மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி மட்டும் விரிவடைந்து வரவில்லை. மாநிலங்களுக்குள் பிராந்திய ஏற்றத் தாழ்வும் வளர்ந்து வருகிறது. பின்தங்கிய பகுதிகளை இணைத்து, தனி மாநிலங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இது உசுப்பி விடுகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து தனித் தெலுங் கானாவும், மகாராஷ்டிரத்திலிருந்து விதர்பாவும் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பின் தங்கிய நிலை என்ற வாதத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. கூட்டாட்சி அமைப்பிற்கு, அறுபதுகளில் உருவான மொழிவாரி மாநிலங்களை துண்டாடுவது பலம் சேர்க்காது. மொழி வழி மாநிலங்களோ மத்திய அரசுடன் பேரம் பேசி முடித்திட அனுகூலமாக இருக்கும்.
மத்தியத்துவத்தை நோக்கிய தீவிர செயல்பாடுகள் இருந்த போதிலும், பாராளுமன்ற ஜனநாயகமும் வெகு ஜன இயக்கங்களும் அரசியல் சமூகம் பண்பாட்டியல் ஆகியவற்றின் பன்முக கூறுகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று மத்திய அரசையும் அரசியல் அமைப்பு முறையையும் நிர்ப்பந்தித்து வருகிறது. வடகிழக்கு பிராந்தியத்தின் தேசிய இனத்தவர், பல்வேறு மொழிகளை பேசுவோர் ஆகியோரின் விருப்புகளுக்கு மத்திய அரசு எழுபதுகளில் செவி சாய்த்தது. அதன் பேரில் மத்திய அரசு ஏழு மாநிலங்களை உருவாக்கியது. பிராந்திய கட்சிகள், இடது சாரி கட்சிகள் ஆகியவற்றின் நிர்ப்பந்தமும் இதற்கு ஒரு காரணமாகும். 5வது 6வது அட்டவணை மூலம் ஒரு சில மலையின மக்களுக்கு அரசியல் சட்டம் பிராந்திய சுயாட்சி வழங்கியுள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்தினை வழங்கியுள்ளது. நாகாலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களின் வழக்கமான சட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, ஒரு சில மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளில் மேம்பாட்டு வாரியங்களை உருவாக்கிடவும், விசேஷ பிரிவுகளை அரசியல் சட்டப் பிரிவு 371 கொண்டுள்ளது.
பன்மொழிகள் பேசி வரக்கூடிய ஒரு நாட்டில் மொழிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதோடு, அந்தஸ்தினை வழங்குவது என்பது கூட்டாட்சி கோட்பாட்டின் முக்கியமானதொரு அம்சமாகும். அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணை 22 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் போடோ, டோக்ரி, மைதிலி, சந்தாலி ஆகிய மொழிகளும் இப்பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ் மொழியை செம்மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
மக்களின் அரசியல் ஜனநாயக உறுதிப்பாடுதான் அரசியல் சட்டத்திற்கு வடிவம் கொடுத்தது. அல்லது அரசியல் சட்டத்தில் வெளிப்பட்டது. இருப்பினும் இச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் ஒரு எல்லைக்குள் இருந்து வருகிறது. இவை விரிவடைந்திட வேண்டும். அரசு கட்டமைப்பில் இருந்து வரக்கூடிய கூட்டாட்சி கோட்பாட்டின் கூறுகள், மாநிலங்களை பகுப்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. தனி மாநிலங்களை உருவாக்கியதன் மூலம் நாகாலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாத இயக்கங்களை எதிர் கொள்ள முடிந்தது. சமூக அடக்குமுறை, பண்பாட்டியல் தாக்குதல், பொருளாதார ஒடுக்கு முறை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுவரும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் தனி அடையாளத்தை நிலை நிறுத்துவதற்கான கோரிக்கையாக மாற்றம் பெறுகிறது. அசாமில் போடோ மக்களைப் பொறுத்த மட்டில், சுயாட்சி அதிகாரம் கொண்ட போடோ ஆட்சி மன்ற குழுவை நிறுவுவது என்ற உடன் பாட்டின் மூலம் தீர்வு காணப்பட்டது. மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மலை வாழ் மக்களைப் பொறுத்தமட்டில், கோர்க்கர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாவட்ட நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது.
வரம்புகளைக் கொண்டதாக இருப்பினும், நீக்குப் போக்கான கூட்டாட்சி கோட்பாட்டினை அதிருப்தியுடன் ஏற்றுக் கொண்டதன் மூலம் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. தன்னாட்சி நிர்வாக சபைகள் நிறுவப்பட்டது. வேறு சில பகுதிகளுக்கு விசேஷ அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனால் தேசிய இனப் பிரச்னை, பிராந்தியப் பிரச்னை, மொழிப் பிரச்னை போன்றவற்றை தீர்க்க இந்திய அரசியல் அமைப்பு முனைப்பு காட்டியது.
தேசிய இறையாண்மையின் மீது தொடர்ச்சியான தாக்குதல் இருந்து வரக்கூடிய இடங்களில் எல்லாம், தாராளமயமாக்கல் தீவிரமடைந்து வருகிறது. முதலாளித்துவ உலகமயம், ஏகாதிபத்தியத்தின் பேரதிகாரம் ஆகிய இரு செயல்முறைகளும் புதிய கோட்பாட்டிற்கு வழி வகுக்கிறது. சந்தைக்குள் நுழைவது, தேசிய சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை பாதுகாப்பது என்ற கோரிக்கைளின் பேரில் இது தேசிய இறையாண்மையை புறந்தள்ளுகிறது. இக்கோரிக்கைகளை ஏற்காத பல்வேறு இனங்களைக் கொண்ட மிகப் பெரும் மாநிலங்கள், அம்மாநிலங் களையே சிதைக்கக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மூலதனத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் வகையில், தேசிய இனங்களையும் மத உணர்வுகளையும் பயன்படுத்த ஏகாதிபத்தியம் முனைப்பு கொள்கிறது. சமீப காலங்களில் மிகப் பெரும் கூட்டாட்சி அமைப்பாக விளங்கிய யூகோஸ்லாவியா தேசிய இனப் பிரச்னையால் உடைந்து நொறுங்கியது. ஏகாதிபத்தியம், நிதி மூலதனம் ஆகியவற்றின் முழுமையான ஆதரவின்பேரில் இது நிகழ்ந்தது. இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தில் பிளவுபட்ட பிரிவினருடன் செயல்பாடுகளை மேற்கொள்வது என்பது சுலபமாகவே இருக்கும் என்பதை சர்வதேச நிதி மூலதனம் அறிந்து வைத்துள்ளது. இன, மொழி சிறுபான்மையோரை உள்ளடக்கிய பல்வேறு இனங்களைக் கொண்ட மிகப் பெரும் மாநிலங்கள் மட்டுமின்றி, சிறிய மாநிலங்களும் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
மத்தியத்துவமற்ற ஜனநாயக பரவல் அடிப்படையில் கூட்டாட்சி அமைப்பு முறை செயல்படுவது, ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் வழிமுறைகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பது ஒரு புறம் இருப்பினும், மறு புறம் அதற்காக இந்த அமைப்பு முறையே பொருத்தமற்றது என்று வாதிடுவதும் இருந்து வருகிறது. இது தவறானதாகும். இந்தியாவைப் பொறுத்த மட்டில் பல்வேறு மொழிகளை பேசக் கூடிய தேசிய இனங்களின் உணர்வோட்டம் உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய மாநிலங்களிலும், உள்ளூர் அளவிலான ஜனநாயக கட்டமைப்பு மேம்பட்டு இருக்கக்கூடிய மாநிலங்களிலும் தாராளமயத் தாக்குதல்களையும் ஏகாதிபத்திய உலக மயமாக்கலையும் தடுத்து நிறுத்துவதற்கான கிளர்ச்சிகள் உருப் பெற்று வருகிறது. உலக வங்கி தீர்மானிக்கக்கூடிய நிதிக் கட்டமைப்பில் சீரமைப்பினை மேற்கொள்ளக்கூடிய கொள்கைகளை ஆந்திரம் பின்பற்றியது. அங்கே கடுமையான எதிர்ப்பியக்கம் வலுப்பெற்றது. தாராளமயமாக்கலின் அடையாளமாக திகழ்ந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு தேர்தல் அரசியல் ரீதியிலான தண்டணை கிடைத்திட வழி வகுத்தது. இக்கொள்கைகளுக்கு மாற்றானவைகளின் வாய்ப்புகள் குறிப்பிட்ட எல்லைகளை கொண்டுள்ளது. இருப்பினும் ஆளும் வர்க்கத்தின் கருத் தோட்டத்தை ஏற்காத கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கக் கூடிய மாநிலங்களில், மாற்றுக் கொள்கைகளை முயற்சிக்கலாம்.
இடதுசாரிகளின் கண்ணோட்டத்தில் மொழிவாரி மாநிலங்களுக் கான கிளர்ச்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சி சக்தியாக திகழ்ந்தது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்திய ச் சூழலுக்கு பொருத்தமான கூட்டாட்சி அமைப்பு முறைக்கான முழுமையான திட்டத்தை இடது சாரிகள் வரையறை செய்துள்ளனர். விரிவான வித்தியாசமான பல்வேறுபட்ட தன்மைகளை கொண்டதாக திகழக்கூடியதன் அடிப்படையில், இந்த தேசத்திற்கு வலுவாக செயல்படக்கூடிய ஒரு மைய அரசு தேவையாகும். இந்நாட்டில் 28 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் அடங்கியுள்ளன. பாதுகாப்பு, வெளிவிவகாரம், பொதுவான நாணயம் ஆகிய பொறுப்புகளுடன் மிகக் குறைந்த அளவிலான செயல்பாடுகளை உடைய ஒரு மத்திய அரசினை கொண்டிருப்பது என்பது சரியானதல்ல. பொருளாதார ஒருங்கிணைப்பு, ஆதாரங்களை சரியான முறையில் பகிர்வதை உறுதி செய்வது, சிறு பான்மையினரின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வது எல்லை பகுதிகளின் விசேஷ தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவற்றிலும் மத்திய அரசு முக்கியமான பங்கினை கொண்டுள்ளது. தேசிய இறையாண்மையையும், ஒருமைப் பாட்டையும், அதன் அதிகாரத்தின் கீழ் இருந்து வரக்கூடிய கூட்டாட்சி அமைப்புகளையும் அது பாதுகாக்க வேண்டும். இந்த அமைப்புகள்தான் மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு தீர்வு காண முயற்சிக்கின்றன.
எனவே கூட்டாட்டசி அமைப்பு முறை மத்திய அரசுக்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட அம்சங்களில், போதுமான அதிகாரத்தையும் ஆதாரத்தையும் ஒதுக்கிட வேண்டும்.
மாநிலங்களின் அதிகார எல்லைக்குள் மத்திய அரசு தலையிடுவதையும், மாநில அரசின் செயல்பாடுகளிலும் சட்ட மன்றத்திலும் குறுக்கிட்டு ஜனநாயகத்தை புறந்தள்ளுவதையும் அனுமதிக்கக்கூடிய அரசியல் சட்டப் பிரிவுகளில் திருத்தம் தேவைப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அமைப்பதிலும், அவற்றை செயல்படுத்தி வருவதிலும் மாநிலங்களின் உரிமை மத்திய அரசின் குறுக்கீடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருந் திடும் வகையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசும் மாநிலங்களும், வரி வருவாயையும் ஆதாரங்களையும் தங்களுக் கிடையில் பகிர்ந்திட மேலும் சமத்துவம் இருக்க வேண்டும்.
அதிகாரங்கள் மத்தியிலிருந்து மாநில அரசுகளுக்கு மாற்றி வழங்ப்பட வேண்டும். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிர்வாகத்தை பரவலாக்குவதோடு, மாவட்டங்கள் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றுக்கு ஆதாரங்களை அளித்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இடதுசாரிகள் இவற்றை மாநில அரசினை கலைக்கக் கூடிய நடவடிக்கையாகவோ அல்லது தனது பொறுப்பிலிருந்து நழுவிடும் செயல்பாடாகவோ கருதவில்லை. மாறாக அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கு கடமைப்பட்டதாக மாநில அரசை மாற்றுவதாகவே இது அமையும்.
மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநில அரசுகளை நிர்வகித்துவரக்கூடிய இடதுசாரிகள்தான் பஞ்சாயத்துக்களுக்கு ஜனநாயக ரீதியில் கூடுதல் அதிகாரத்தை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வேகமாகவும் மேம்பட்ட வழியிலும் இது இருந்து வருகிறது. மக்களின் விருப்புகளை நிறைவேற்றுவதோடு அவர்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக பஞ்சாயத்துக்களை மாற்றுவதில் இடதுசாரிகள் தலைமையிலான அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கேரளத்தில் 1996 முதல் 2001 வரையில் இடது முன்னணி அரசு திட்ட செயல்பாடுகளை பரவலாக்கி கிராம மட்டத்திற்கு கொண்டு செல்லும் முகமாய், மக்களின் திட்டம் குறித்து விரிவான அளவில் பிரச்சாரத்தை மேற்கொண்டது.
கூட்டாட்சி அமைப்பானது பழங்குடியினர் மற்றும் குறிப்பிட்ட சில தேசிய சிறுபான்மையினர் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு சுயாட்சி வழங்கக்கூடிய முறையை கொண்டிருக்க வேண்டும். தன்னாட்சி நிர்வாக சபைகளுக்காக 6வது அட்டவணையில் தற்போது பல்வேறு சட்ட விதிகள் இருந்து வருகிறது. இச்சபைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரங்களையும், நிதி அதிகாரங்களையும் கூடுதலாக வழங்குவதன் மூலம் இவற்றை வலுப்படுத்த வேண்டும்.
ஒரு கூட்டாட்சியில், ஜனநாயகப் பரவலில் ஜனநாயகத்தின் தேவைகளை மேலும் சிறப்பான வழியில் நிறைவே ற்ற முடியும். பாராளுமன்றத்திலிருந்து மாநில சட்ட மன்றங்களுக்கும், மாவட்ட சபைகளுக்கும், கிராம சபைகளுக்கும் இதை விரிவுபடுத்திட முடியும். சர்வதேச நிதி மூலதனத்தின் நெருக்குதல்களினால் ஜனநாயகத்தை விரிவுபடுத்தாமல் குறுக்கக்கூடிய மனோபாவமும், முடிவெடுப்பதில் வெகு ஜன பங்கேற்புக்கு வகை செய்வதை பொருத்தமற்றதாக்குவதும் இருந்து வருகிறது. இவற்றை முறியடிக்கும் வகையில் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதோடு, சங்கிலித் தொடராய் இருந்து வரக்கூடிய கூட்டாட்சி அமைப்புகளில் வெகு ஜன பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டும்.
தெற்காசியாவில் வெவ்வேறு வடிவங்கள்
தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு பண்பாட்டியலையும் பல்வேறு தேசிய இனங்களையும் உள்ளடக்கிய சமூகங்களாக இருந்து வருகிறது. தேசிய இறையாண்மை, தேச ஒருமைப்பாடு, தேசிய இனங்கள் மதங்கள் ஆகியவற்றுக்கிடையில் இணைப்பு, சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியை செழுமைப்படுத்தக்கூடிய ஜனநாயக அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தக்கூடிய அரசு கட்டமைப்பை கட்டுவது அல்லது மாற்றங்களை மேற்கொள்வது என்பது ஒரு சவாலாகும். கூட்டாட்சி அமைப்பு என்பது எண்ணற்ற வித்தியாசமான வடிவங்களை கொண்டதாகும். எந்த ஒரு குறிப்பிட்ட வடிவமும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்துவதாக இருக்க முடியாது. பதினெட்டு தேசிய மொழிகளையும், இருபத்தெட்டு மாநிலங்களையும், எண்ணற்ற மத சாதிக் குழுக்களையும் கொண்ட மிகப் பெரும் நாடாக திகழும் நாம், நாட்டை இணைத்து, ஒன்றுபடுத்தி, சமூக பொருளாதார மேம் பாட்டிற்கான தளத்தை அளித்திடக்கூடிய ஒரு ஜனநாயக மதச் சார்பற்ற கூட்டாட்சி அமைப்புக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகம் என்பது சிறுபான்மையோரின் உரிமைகளுக்கு உரிய பாதுகாப்புடன் கூடிய பெரும்பான்மையினரின் ஆட்சியாகும். பெரும்பான்மை சிறுபான்மை ஆகிய இரண்டு இனத்தவர் பற்றிய வெறுப்பு, இந்தியாவையும் இதர தெற்காசிய நாடுகளையும் பீடித்துள்ளது. அவை நிராகரிக்கப்பட வேண்டிய தாகும்.
ஸ்ரீலங்காவில் மத்தியத்துவ அமைப்புக்கு எதிராக கூட்டாட்சி என்ற சர்ச்சைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1990களில் ஸ்ரீலங்காவில் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கக்கூடிய அரசு கட்டமைப்பில் ஒரு கூட்டாட்சி வடிவத்தை உருவாக்கக்கூடிய முயற்சிகள் மேம்பட்டது. அதிகாரத்தை கீழே மாற்றுவதற்கும், சிறுபான்மையோரின் நலன்களை பாதுகாப்பதற்கும் இது வகை செய்தது. 1997ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் நகல் அறிக்கையும், 2000 ஆகஸ்டில் உருவான நகலும் அரசியல் சட்ட சீர்திருத்தங்களுக்கான கோரிக்கையாகும். இன மோதல்களுக்கு ஒரு சுமுகமான தீர்வை கண்டிடும் நன்முயற்சியின் துவக்கமாக இது இருந்திருக்கக்கூடும். பிராந்தியம், மொழி-பண்பாட்டியல் அடிப்படையில் தேசங்களை கபளீகரம் செய்யக்கூடிய சர்வதேச சூழலில் சவால்களை எதிர் கொள்ளும் விதத்தில் ஒரு அரசின் கட்டமைப்பிற்குள் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கக்கூடிய கூட்டாட்சி வடிவத்தை காண முடிந்தது. கூட்டாட்சி கோட்பாடு என்பது சிறிய மாநிலங்களிலும் சரி, பெரிய மாநிலங்களிலும் சரி பொருத்தமானதாக செயல்படக்கூடியதாகவே இருக்கும். தெற்காசிய நாடுகள் கூட்டாட்சி, ஜனநாயக அதிகாரப் பரவல் ஆகியவற்றின் கூறுகளை கொண்ட சுதந்திரமான இறையாண்மை பொருந்திய நாடுகள் என்ற அடிப்படையில், உலகில் ஏழ்மையில் ஏதுமற்ற நிலையில் இருக்கக்கூடிய வறியோரில் ஒரு பகுதியாக இருக்கும் மிகப் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் விருப்பங்களை எதிர் கொள்ளும் வகையில், பிராந்திய வரையறைக்குள் ஒன்றுபட்ட செயல்பாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
தமிழில் : ராமச்சந்திர வைத்தியநாத்