இன்று நமது நாட்டில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பென்பது தன்னார்வ குழுக்களின் அரசியல் சார்பற்ற பணிகளாக கருதப்படுவது பரவலாக உள்ளது. சுகாதாரமற்ற மக்கள் தாங்களாக திருந்தி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்குமளவிற்கு உயர்த்திட இதுதான் வழியென்று ஆளுவோரும், அதிகாரிகளும் பறைசாற்றுவதையும் காணலாம். இதே கும்பல் சுத்தமும், அசுத்தமும், பண்பாட்டு சமாசாரம் என்று ஒரு தத்துவத்தையே முன்வைப்பர்!
இந்த தன்னார்வ குழுக்களும் அவர்களின் கொடையாளிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கோடு இயங்குவதால் ஒருதலைப் பட்சமான கருத்துக்களே மக்களை சென்றடைகிறது. விஞ்ஞான உலகில் நடைபெறும் சர்ச்சைகளை மக்களிடம் கொண்டு செல்லும் கடமையை பத்திரிகைகளும், மீடியாக்களும் சரிவர செய்வதில்லை. கருத்துக்களை சீர்தூக்கி பார்க்கும் ஆற்றலை மக்கள் சங்கடங்களை சந்தித்து சொந்த அனுபவத்தின் மூலமே பெறும் நிலை இன்று உள்ளது. லாபத்தை பணமாக குவிக்க வேண்டும் என்ற வெறியில் முதலாளிகளே திருப்பூர் முதல் திண்டுக்கல் வரை, நிலத்தடி நீர், ஆற்று நீர், குளத்து நீர் அனைத்தும் கெடும் தொழில் நுட்பத்தை கையாண்டனர். பெயரளவிற்கு இருக்கும் மாசுகட்டுப்பாடு சட்டம், ஊழல் மலிந்த ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் இருக்க வழிவகுத்தது. எல்லா நீரும் கெட்டு கையை மீறி போனபின் நீதிமன்றத் தீர்ப்பால் அரசு தொழில்களை மூடியது. தொழிலாளர்களை தெருவிலே நிறுத்தியது. நீரையும், நிலத்தையும் கெடுக்காத தொழில் நுட்பங்களுக்கு இப்பொழுது பஞ்சமில்லை. அவைகளை பெற அரசும், முதலாளிகளும் அக்கறை காட்டவில்லை.சுற்றுப் புறச் சூழல் கெட்டால் தானும் வாழ முடியாது என்ற உணர்வற்ற ஜடங்களாக, ஆளுவோரும், முதலாளிகளும் இருந்ததினால்தான் சங்கடங்கள் நேர்ந்தது என்பதை பின்னர்தான் மக்கள் பார்க்க நேர்ந்தது.
எனவே சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பது, ஆளுவோரின் அரசியலோடும் அணுகுமுறைகளோடும் சம்பந்தப்பட்டதாகும். இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் சுருக்கமாக, ஆனால் தெளிவாக கட்சியின் நிலைபாட்டை 18-வது மாநாட்டில் முடிவு செய்துள்ளது. அரசியல் தீர்மானத்தின் 2.48 பாரா காடு அழிவது, மண்வளம் குன்றுவது, காற்று கெடுவது போன்ற கேடுகளை பட்டியலிட்டு இதனை திருத்திட அரசின் அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. எந்த தீர்வும் மக்கள் நலனை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்கிறது. காடு அழிவதை தடுப்பதாக கூறி காட்டை நம்பி வாழும் மக்களை அடித்து துரத்தக் கூடாது. அதற்குப் பதிலாக காட்டை மெட்டை அடிக்கும் காண்டிராக்டர்கள் மீதும், அவர்களது பாதுகாவலர்கள் மீதும் அரசு பாய வேண்டும் என்கிறது.
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், மண்ணையும், நீரையும் காற்றையும் கெடுக்கும் தொழில் நுட்பங்களை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. கை மீறிப் போனபின் அதிரடியாக ஆலைகளை மூடி தொழிலாளர்களை தெருவிலே நிறுத்தக் கூடாது. இயற்கையை பாதிக்கும் என்று தெரிந்த தொழில் நுட்பங்களை கையாளவிடக் கூடாது. கண்டிப்புடன் இருக்க வேண்டும். பெட்ரோலிய எரிபொருள் அதிகமாக எரிப்பதை மட்டுப்படுத்த பொது போக்குவரத்தை பலப்படுத்தி காற்று மண்டலத்தை காக்க வேண்டும். மொத்தத்தில் மக்கள் நலனையும் இயற்கையையும் பேணுகிற அணுகுமுறை அரசிற்கு தேவை. இன்று ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்திருக்கும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு கொள்கை அறிவிப்பில் இந்த அணுகுமுறை இல்லை என்று அந்த தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், இந்தப் பிரச்சினையில் மக்கள் விரோதத் தன்மை மட்டும் மாறுவதில்லை. 1952 இல் இருந்தே நீர் நிலைகளை பாதுகாக்க அரசு தவறியது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தினால் பிரச்சினை எழாது என்று ஒரு தவறான கண்ணோட்டத்தோடு நடவடிக்கை எடுத்தனர். காடுகள் அழிவதை தடுக்கவில்லை. நிலத்தடி நீர் வற்றுகிற வரை உறிஞ்சினர்; கெட்ட தொழில் நுட்பங்களை அனுமதித்து கெடுத்தனர் இன்று உணவிற்கு நீரா? தாகத்திற்கு நீரா என்ற சண்டையை மூட்டிவிட்டுள்ளனர். அன்று மாசற்ற கடற்கரையாக்குவோம் என்று மீனவர்களை விரட்டினர். இன்று சுனாமியை காட்டி மீனவர்களை விரட்டி அடிக்கின்றனர், அந்நிய, இந்திய பெரு முதலாளிகள் உல்லாச விடுதிகள் நடத்திட, அவ்விடங்களை ஒப்படைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது.
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது ஒரு சிக்கலான விஞ்ஞான சமூக பிரச்சினை. முரண்பாடான அணுகுமுறைகள் உருவாக முக்கிய காரணம், இப்பிரச்சினைகள் பற்றிய தத்துவார்த்த பார்வைகளே அடிப்படையாகும். இந்த அரசுகளின் கொள்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கான அடிப்படைகளை மட்டும் இக்கட்டுரை அலசுகிறது.
மோதும் தத்துவங்களும் – நடைமுறையும்
ஆதிகால முதலே இயற்கைக்கும் அதனுடைய பகுதியான மானுட சமூகத்திற்கும் உள்ள உறவுகள் பற்றி அந்தந்தக் காலத்து அறிவு வளர்ச்சிக்கேற்ப தத்துவ ஞானிகள் விளக்கம் கொடுத்து வந்துள்ளனர். அன்று கடவுள் படைப்பின் ரகசியமாக இதைப் பார்த்த தத்துவ ஞானிகளும், இதை மறுக்கிற தத்துவ ஞானிகளும் முட்டி மோதினர். அதன் விளைவாக தர்க்க இயலும், விஞ்ஞானமும் தோன்றின. உண்மையைத் தேட தர்க்க இயலும், விஞ்ஞானமும் கருவிகளானது. அதற்குள் இப்பொழுது நாம் போக விரும்பவில்லை. அதன் பின்னர் மனிதன் விஞ்ஞான தொழில் நுட்ப கண்டு பிடிப்புகளால், இயற்கையை பயன்படுத்த முடியும் என்று துணிந்த காலத்திலிருந்து இயற்கை – மனித சமூகம் இரண்டிற்குமிடையே உள்ள பந்தங்களின் தன்மைகளைப் பற்றிய சர்ச்சைகள் புதிய வடிவில் தத்துவ மோதல்களாக எழுந்தன. ஐரோப்பாவில் தான் இந்த மோதல்கள் முதலில் உருவானது பின்னர் உலகெல்லாம் பரவியது.
பிரபுக்களும், பழமைவாதிகளும் விஞ்ஞானத்தை சாத்தானின் வேலை என்று சாடினர். மத பீடங்களும் இதற்கு துணையாக நின்றன. ஐரோப்பாவில் செல்வத்தை, தங்கமாக குவிக்க வேண்டும் என்று பேராசை கொண்ட புதிதாக முளைத்த முதலாளித்துவ கூட்டமோ விஞ்ஞானத்தை கொண்டு இயற்கையை அடக்கி ஆளலாம் என்று கருதியது. பகைமை நிறைந்த பழமை சமூகத்தின் பழைய சூத்திரமான
செய்க பொருளை, செறுநர்
செருக்கறுக்கும் எஃகதனிற் கூறியது இல்
(குறள் 739)
(பொருள்தான் எதிரியை வீழ்த்தும் கூறிய ஆயுதம்)
என்பதை மாற்றி, கடல் தாண்டிய வர்த்தகத்தின் மூலம் தங்கத்தை குவித்திடுக; அதற்காக போரிடுக; விஞ்ஞானத்தை வைத்து அடக்கி ஆள்க என்பது இந்த புதிய பேராசைக்காரர்களின் முழக்கமாயிற்று.
ஐரோப்பாவில் சுற்றுப்புற சூழலை கெடுக்கும் தொழில் நுட்பங்களால், கூலித் தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்டி சரக்குகள் குவிக்கப்பட்டன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்தாடியது விஞ்ஞானம் என்பது மனிதனை மனிதன் அடக்கவும், சுரண்டவுமே பயன்படும் கருவியாக மக்கள் கண்டனர். இந்த சீர்கேடுகள் விஞ்ஞானத்தை சாத்தானின் வேலை என்ற கருத்தை மக்கள் மனதிலே பதிய வைத்தது. மதபீடங்கள் விஞ்ஞானத்திற்கு எதிராக தொடுத்த போர் அன்று துவக்கத்தில் ஐரோப்பாவில் வெற்றி அடைய இதுதான் காரணம். பின்னர் முதலாளித்துவ உற்பத்தியாளர்களின் கை ஓங்கியது.
19 ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்க போராட்டத்தின் விளைவாக புரட்சிகரமான தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும் தோன்றினர். இந்தக் கட்டத்தில் தத்துவ உலகின் மோதல்கள் வேறு வடிவம் பெற்றன.
தத்துவங்கள் மோதும் மத விளக்கங்களாக, பல்வேறு மார்க்கங் களாக இருந்த நிலை மாறியது. மோதும் வர்க்கங்களின் ஆயுதங்களாக தத்துவங்கள் புதிய வடிவங்கள் எடுத்தன.
இயக்கஇயல் பொருள் முதல் வாதம் வரலாற்று பொருள் முதல் வாதம் என்ற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களை கொண்ட புரட்சிகர தத்துவப் பார்வை பிறந்தது. இந்த தத்தவ அணுகுமுறையை உருவாக்கிய பெருமை காரல் மார்ச்சையும், எங்கெல்சையும் சாரும்.
அவர்கள்தான் விஞ்ஞானம் என்பது சாத்தானின் வேலை அல்ல, உண்மையில் சாத்தானின் வேலை என்பது சுரண்டல்தான். முதலாளித்துவ உற்பத்தி முறை விஞ்ஞானம் வளர, வளர மாற வேண்டும்; இல்லையெனில் புரட்சிகளால் மாற்றப்படும் என்றனர். அதுபோல் விஞ்ஞானத்தை வைத்து இயற்கையை அடக்கியாள முடியும் என்பது அறிவீனம். இதுபற்றி எங்கெல்ஸ் இயற்கையின் இயக்கயியல் என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
ஒரு நாட்டின் மக்களை படையெடுத்து பிடித்தவன்போல் இயற்கையை பிடித்து வெளியிலிருந்து வந்தவன்போல் மனித குலம் அடக்கியாள முடியாது. சதை, ரத்தம், மூளை அனைத்தும் இயற்கையினுடையது. இயற்கையின் நியதிகளை கற்று பயன்படுத்தும் ஆற்றல் வேறு ஜீவராசிகளுக்கில்லாத மனித குலம் மட்டுமே பெற்ற அனுகூலமாகும்.
விஞ்ஞானம் என்பது இயற்கையின் நியதிகளை கற்று பயன் படுத்துவது என்பதுதான். விஞ்ஞானத்தின் மூலம் எதையும் செய்யலாம் என நினைப்பது பேதமை இவ்வாறு விஞ்ஞானத்தை பற்றிய சரியான பார்வையை உணர வைத்த முதல் தத்துவ ஞானிகள் மார்க்சும் எங்கெல்சும் ஆவர்.
19 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவச் சுரண்டல், விஞ்ஞான கண்டு பிடிப்புகளை முரட்டுத்தனமாக பயன்படுத்தியது, சமூகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது தத்துவ உலகிலும் மோதலாக வெடித்தது. பொருள் உற்பத்தி பெருக்கத்தால், மானுடமும், இயற்கையும் அழியுமா, அழியாதா என்ற சர்ச்சையாக வெடித்தது.
வரலாற்றை ஒருவரால் இரண்டாக பிரித்து காண முடியும்; ஒன்று மானுட வரலாறு; மற்றொன்று இயற்கையின் வரலாறு. ஆனால், இவையிரண்டும் பிரிக்க முடியாது. மனிதகுலம் இயற்கையை சார்ந்துதான் இருக்கும். இயற்கையும் மனித குலம் உள்ளவரை அதை சார்ந்துதான் இருக்க முடியும். (ஜெர்மன் தத்துவம்) என்று மார்க்ஸ் எழுதியது இந்த தத்துவ சர்ச்சையையொட்டிதான்.
19ஆம் நூற்றாண்டிலே விஞ்ஞானம் வேண்டாம், பழைய அடிமை வாழ்வே அமைதியானது என்று குழம்பியவர்களையும், விஞ்ஞானம் இயற்கையையும் கெடுத்து நம்மையும் அழித்து விடுமென பயந்தவர்களையும், கண்மூடித்தனமாக விஞ்ஞானத்தை கையாண்டு இயற்கையை ஆட்டிப்படைக்கலாம் என்று ஆணவ சூரத்தனத்தில் மிதந்தவர்களையும் இந்த தத்துவார்த்த சர்ச்சை சரியான பார்வையைப் பெற உதவியது.
இந்த தத்துவ மோதலால் சாத்தானின் வேலை என்பது முதலாளித்துவ சுரண்டலே என்பதை குறிப்பாக ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் உணர ஆரம்பித்தது. இதனை கண்டு பயந்த சுரண்டும் வர்க்கமும், அதனுடைய கருத்துக்களை வைத்து மோதியது.
அன்று மதவாத விளக்கங்கள், மதசார்பற்ற சுரண்டும் முதலாளித்துவ கருத்துக்கள், இயக்கஇயல் பொருள் முதல்வாத அடிப்படையில் எழுந்த விளக்கங்கள் என மூன்றும் போட்டியிட்டன. மானுட வாழ்வின் எல்லா அம்சங்களையும் மூன்று விதமாக விளக்கிட ஒரு போட்டி அன்று இருந்தது. (மார்க்ஸ் இதனை சித்தாந்தங்களின் போட்டி நடப்பதாக கூறினார்) வரலாற்றில் நடந்த இந்த தத்துவார்த்த போட்டியை விளக்குவது இங்கு நமது நோக்கமல்ல; அது சுவராஸ்மான, சாகஸங்கள் நிறைந்த வரலாறு. இந்த தத்துவார்த்த போட்டியினால் இயற்கை – மனித குலம் – பொருள் உற்பத்தி இம்மூன்றிற்குமிடையே உள்ள உறவுகள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதில் மேலும் தெளிவு ஏற்பட்டது.
மதவாத விளக்கஙகள் மங்கி மறைந்தன. முதலாளித்துவமா? சோசலிசமா? எது இயற்கையையும், மனித குலத்தையும் அழியாமல் காக்கும் என்ற சித்தாந்த போட்டி பல புரட்சிகர மாற்றங்களுக்கு வித்திட்டது. தங்கத்தை குவிக்க கண்மூடித்தனமாக நரவேட்டை யாடும் முறையிலிருந்து முதலாளித்துவம் மாற வேண்டியிருந்தது. முதலாளித்துவம் மக்கள் நல சுரண்டலாக தன்னை மாற்றிக் கொள்ள முயன்றது. இருந்தாலும், முதலாளித்துவ கருத்திற்கும், புரட்சிகர சோசலிச கருத்திற்கும் தத்துவார்த்த மோதல் நடக்கும் மேடையாக உலகமே மாறியதை தடுக்க முடியவில்லை.
20 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானத்தின் நூற்றாண்டானது. பிரம்மிக்கத் தக்க முன்னேற்றங்கள் ஏற்ப்பட்டன.
இந்த கட்டத்தில், மோதும் தத்துவங்களின் அடிப்படையில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றியும் அதனோடு நேரடி தொடர்புள்ள பொருள் உற்பத்தி பற்றியும், விஞ்ஞான ஆய்வுகளின் தன்மை பற்றியும் கருத்துக்கள் மோதின. உலக அளவில் மாநாடுகள் நடத்தப்பட்டு அங்கேயும் மோதினர். அவைகளைப் பற்றியும் விஞ்ஞான ஆய்வுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இனி சுருக்கமாக பார்க்கலாம்.
தத்துவ மோதல்களும் – விஞ்ஞானமும்
19ஆம் நூற்றாண்டை சித்தாந்த மகா போட்டிகளின் ஆண்டுகள் என்றால் 20ஆம் நூற்றாண்டை விஞ்ஞான தொழில் நுட்ப மகா போட்டிகளின் ஆண்டுகள் எனலாம். இந்த இரண்டு போட்டிகளினால் மானுடத்தின் ஆற்றல் பல மடங்காக உயர்ந்து நின்றது. மக்களின் அபிப்பிராயங்களுக்கு மரியாதை உயர்ந்து நின்றது. மக்களின் அபிப்பிராயங்களும் செல்லுபடியாகும் நிலை வந்தது. கடந்த காலம் போல் ஆளுவோர் மக்களை உதாசீனப்படுத்த இயலாது என்ற நிலை எய்தியது. ஆளுவோர் அமைதியான வகையில் மாற்றங்களை ஏற்க முன்வரவில்லையானால், மக்கள் புரட்சியின் மூலம் மாற்றி விடுவர் என்பதை உணர்ந்தனர்.
இன்று விஞ்ஞான ஆற்றலால் மலைகளை நகர்த்த முடியும், ஆறுகளை திருப்ப முடியும், பாலை வனங்களை பசுஞ்சோலை ஆக்க முடியும். நாசகர கிருமிகளையும் ஆக்க பூர்வமான பணிகளை செய்ய வைக்க முடியும்; இயற்கையின் ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றி பயன்படுத்த முடியும்.
அண்ட வெளிப் பயணம் மனித ஆற்றலை மட்டுமா உயர்த்தியுள்ளது. பூமியின் சிறப்பையும் உணர வைத்துள்ளது. செயற்கை கோளில் இருந்து விண்வெளி வீரர்கள் இயற்கை கோள்களுக்கிடையே சுழன்று வரும் பொழுது விண்வெளியில் ஜீவனற்ற பிற கோள்களுக்கிடையே, நீல நிறக் கோளம் போல் பூமி சுழன்று வரும் அழகை விவரிக்கிற பொழுது பூமியின் மீது ஒருவித பாசம் நமக்கும் பொங்கி வழியும்.
எந்த விஞ்ஞான ஆற்றல் பூமியை அளவிலா பாசத்தோடு நேசிக்க வைத்ததோ, அதே விஞ்ஞான ஆற்றலால் பேரழிவு ஆயுதங்களையும், கிருமி ஆயுதங்களையும் கண்மூடித்தனமான தொழில் நுட்பங்களால் நீல நிறக் கோளத்தின் மேற்பரப்பு விஷமாக்கிடும் நிலையை காண்கிறோம். மானுட அழிவை நேரடியாகவே கொண்டு வருவதற்குப் பயன்படும் இந்த விஞ்ஞான முரண்பாட்டை எப்படி கையாள்வது! மானுடம் கைபடாத காலங்களில் ஜீவராசிகள் அழிந்தது போல் இயற்கையின் முரட்டு விதிகளுக்கு மானுடமும் பலியாகிட வேண்டுமா? அல்லது, மானுடமே தன்னைத்தானே அழித்துக் கொள்ளுமா? என்ற கேள்வி தத்துவ உலகில் சர்ச்சையானது!
அதில் ஏற்பட்ட திருப்பங்கள் நாடுகளிடையே பகைமை உணர்வை போக்கும் திசையில் உலகை திருப்பியது.
இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் ஏற்பட்ட கோரமும், சோகமும் நிறைந்த நிகழ்வு மனித குலத்தையே உலுக்கி விட்டது. அமெரிக்க ராணுவம் ஜப்பான் நகர்கள் மீது அணுகுண்டுகளை வீசி பல லட்சம் மக்களை கண்திறந்து மூடும் முன் சாம்பலாக்கியது. மேலும் பல லட்சம் பேரை கதிர் வீச்சு நோய்களால் நடை பிணங்களாக்கியது. நடைப்பிணங்களை பெற்றெடுக்கும் நடை பிணங்களாக அவர்கள் வாழத் தள்ளப்பட்டனர்.
இந்த கோர சம்பவம், உலகளவில் விஞ்ஞானிகளை சிந்திக்க வைத்தது. இவர்களில் பலர் அமெரிக்காவிற்கு அணுகுண்டு செய்ய உதவிய விஞ்ஞானிகள்.
1955 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மாநாடு நடத்தி கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். மனித குலத்தையும் இயற்கையையும் பாதுகாக்கும் பொறுப்பு விஞ்ஞானிகளுக்கும் உண்டு என்பதை அதில் சுட்டிக் காட்டினர்.
விஞ்ஞானிகளின் தத்துவப் பார்வை மாற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஐன்ஸ்டீன் – ரஸ்ஸல் கூட்டறிக்கை என்று புகழ் பெற்ற அந்த அறிக்கையின் கடைசி வாசகம் மனித குலமிருக்கிற வரை நினைவிலிருக்கும் வாசகமாக, சுரண்டல் நோக்கோடு செயல் படுபவர்களையும் சுண்டியிழுக்கும் மனச் சாட்சியாக ஆகி விட்டது எனலாம்.
நாங்கள் ஒரு நாட்டை சார்ந்தவர்கள் அல்ல; ஒரு மார்க்கத்தை சார்ந்தவர்களுமல்ல; மனித குலத்தை சார்ந்தவர்கள், என்ற முறையில் மனித குலத்தை வேண்டுகிறோம். மனித குலத்தை நினைவில் கொள்ளுங்கள் மற்றதை மறந்து விடுங்கள்.
உங்களால் அப்படி செய்ய முடிந்தால் சொர்க்கத்திற்கான பாதை திறந்து விடப்படும். அப்படி செய்ய முன்வரவில்லையானால் அண்டமே சவக்குழிக்கு போகும் பாதைதான் உறுதிபடுத்தப்படும்
இந்த வேண்டுகோள் அன்று உலக நாடுகளில் பரவிக் கிடந்த சோசலிச முகாமினாலும், சோசலிச நாடுகளினாலும் உலகளவில் மக்களிடையே வேகமாக கொண்டு செல்லப்பட்டது. முதலாளித்துவ முகாம் இதைக் கண்டு பதறியது. சுரண்டலை பாதுகாக்க வேண்டுமானால் மேலும் மாற வேண்டும், மக்களை தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தது.
மக்களின் பேரெழுச்சியால், பேரழிவு ஆயுதங்கள் சோதனை, ஏவுகணைகள் சோதனை, ஆகியவைகளை கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்கள் மட்டுமல்ல; இயற்கையை பாதுகாக்க ஒப்பந்தங்கள் மட்டுமல்ல; இயற்கையை பாதுகாக்க உள்நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தது. இப்பொழுது இந்த ஒப்பந்தங்களை அமெரிக்கா ரத்துச் செய்தாலும் அவைகள் உருவாக்கிய தார்மீக உணர்வை அமெரிக்கா மீறும் நிலையில் இல்லை. காற்று மண்டலத்தை சுத்தமாக வைக்கும் பிரச்சினை முன்னுக்கு வந்தது. உலக தத்துவ மாநாடுகள், உலக விஞ்ஞானிகள் மாநாடுகள் இப்படி பல உலகளவிலான மன்றங்களிலே இயற்கையையும், மானுடத்தையும் காப்பது முதலாளித்துவமா? சோசலிசமா? என்ற தத்துவார்த்த போர் கூர்மை அடைந்தது. இதன் விளைவாக முதலாளித்துவத்தின் முரட்டுத்தனம் கட்டுப்பட்டது. ஆனால் சுரண்டல் முறை புதிய முரண்பாடுகளை கொண்டு வந்தன. இயற்கையை கெடுப்பது நின்றபாடில்லை. மானுட சமூக உறவை சமதர்ம அடிப்படையில் மாற்றி அமைக்காமல், பொருள் உற்பத்தி செய்யும் பொருளாதார உறவுகளை மாற்றி அமைக்காமல் இயற்கையை பாதுகாக்க இயலாது என்பது மேலும், மேலும் வெளிப்படையானது. காற்று மண்டலம், நிலம், நீர், காடுகள் என்று தனித்தனியாக பகுத்து, அதனை மட்டும் பாதுகாக்கும் நடவடிக்கைகளோ, ஒப்பந்தங்களோ சுரண்டல் முறை இருக்கிற வரை தோல்வியில் முடியும் என்பது அனுபவமானது. இந்த அனுபவங்கள் மக்களை சோசலிச வாழ்வை நாடத் தள்ளியது. முதலாளித்துவ முகாமோ அதனை தடுக்கும் தத்துவார்த்த பிரச்சாரத்தை முடுக்கி விட்டது.
1970-ல் ரோம் குழுமம் (கிளப் ஆஃப் ரோம்) தோன்றி முதலாளித்துவ முகாமின் ஊதுகுழலானது. இந்த தன்னார்வக்குழு, இயற்கை – மனிதன் இடையே உள்ள உறவுகள் பற்றி பிரச்சினைகளை கையில் எடுத்தது. இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தோடு அது அமைக்கப்பட்டதாக அறிவித்தது. ரோம் குழுமம் என்பது அமெரிக்க, ஐரோப்பிய பெரும் புள்ளிகளால் உருவாக்கப் பட்ட அமைப்பாகும். ராக்பெல்லர் போன்ற பெரு முதலாளிகள் இந்த குழுமத்தின் அமைப்பு உறுப்பினர்கள் ஆவர்.
1972-ல் ரோம் குழுமம் சார்பில் நிபுணர்கள் ஆய்வு நடத்தி அதிர்ச்சி தரும் நூல் ஒன்றை வெளியிட்டனர். வளர்ச்சிக்கு எல்லை உண்டு (லிமிட்ஸ் ட்டு குரோத்) என்ற இந்த நூலின் மூன்று கோடி பிரதிகள் விற்கப்பட்டன. இன்று இயங்கும் பல தன்னார்வக்குழுக்கள் இப்புத்தகம் உருவாக்கிய பார்வையோடு இயங்கி வருகின்றனர் என்றால் மிகையாகாது. இந்த நூலின் சாரமென்ன?
நூறு ஆண்டுகளுக்கு மேல், பூமியில் மானுட வாழ்வில் வளர்ச்சி, வளர்ச்சி என்று அதனுடைய ஆதிக்கம்தான் நிலவுகிறது. மக்கள் தொகையில் பெருக்கம், பொருள் உற்பத்தியில் பெருக்கம், வருவாயில் பெருக்கம் மூலதன வளர்ச்சியில் பெருக்கம், மானுடத்திற்கு களைப்பும் பெருகிறது, இயற்கைக்கு மாசும் பெருகுகிறது. எனவே அரசுகள் வளர்ச்சியை தடுக்க வேண்டும். இல்லையெனில் இயற்கை தடுத்து விடும் முதலாளித்துவமோ, சோசலிசமோ என்பதல்ல பிரச்சினை; மானுடம் வாழ பொருள் உற்பத்தியில் வளர்ச்சியை தடுத்திட வேண்டும் என்பது ரோம் குழுமத்தின் வாதமாகும்.
இயற்கையின் செல்வங்கள் ஒரு கட்டத்தில் வற்றி விடும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். என்றும் பயமுறுத்தியது. முதலாளித்துவ உலகில் உள்ளமக்கள் ரோம் குழுமத்தின் இந்த எச்சரிக்கையை கண்டு குழம்பி நின்றனர். சமுதாய மாற்றமும் தீர்வாகாது என்ற குழப்பமேற்பட்டது. ரோம் குழுமம் முன்வைக்கும் விளக்கங்களும் தீர்வுகளும் மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி படு பிற்போக்குத்தனமான சுரண்டலை பாதுகாக்கவே பயன்படும். இப்பொழுது அனுபவம் உணர்த்துகிறது.
ரோம் குழுமம், முன்வைத்த விளக்கமும் தீர்வும், சோசலிச முகாமிலிருக்கும் நிபுணர்களாலும், தத்துவ அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
1980-ல் நடந்த 17-வது தத்துவ உலக மாநாடு இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது எனலாம். 17-வது உலக தத்துவ மாநாட்டில் தத்துவமும் – பண்பாடும் என்ற தலைப்பில் இரண்டு முகாம்களும் கடுமையாக மோதின. இயற்கையை மனிதன் அடக்கி ஆளமுடியுமா? என்ற பிரச்சினை இங்கு மீண்டும் எழுந்தது. இயற்கை முரட்டுத்தனமானது, இயற்கை தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றது என்ற பிரச்சினைகளை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு எதிரும், புதிருமான விளக்கங்கள் இங்கே மோதின.
இயற்கையிலிருக்கும் முரட்டுத்தனங்களை மனிதன் தனக்கு சாதகமாக ஆக்க முடியும். பூமி அதிர்ச்சி, புயல், வெள்ளம், சூறைக்காற்று, பனிப்புயல், ஆட்களை கொல்லும் பனிமூட்டம் ஆகிய முரட்டுத்தனங்களை மனிதன் கையாள முடியும். ஆனால், இந்தச் செயல், பூமி உட்பட ஜீவராசி மண்டலத்தின் இயக்க விதிகள், வளர்ச்சி விதிகள், பரிணாம வளர்ச்சி விதிகள் ஆகியவைகளுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும். பூமி தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றது. தேவையின் அடிப்படையில் பொருள் உற்பத்தியும், சமூக உறவுகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்து இயற்கையையும் மானுடத்தையும் பாதுகாக்க முடியும். இல்லை யெனில் மானுடம் அழிவை நோக்கும் என்று சோசலிச முகாமை சார்ந்தவர்கள் வாதிட்டனர். மேலும் மக்கள் நலனை காவு கொடுக்காமல் இயற்கையை பாதுகாக்க முடியாது என்ற ரோம் குழுமம் முன்வைத்த கருத்திற்கு இது முற்றிலும் எதிராக நின்றது.
தனியார் வசமிருக்கும் தொழில் நுட்பங்கள் சமூக நலனையும், இயற்கையையும் கெடுக்கிறது. பணம் குவிக்கும் நோக்கோடு தொழில் நுட்பம் இருப்பதை மாற்றி, மக்கள் நலம் பேணுவதாக மாற்றிட வேண்டும். என்றது.
ரோம் குழுமம் பரப்பிய பதட்ட விளக்கத்தை மூலாதாரமாகக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகள் சுரண்டலை ஒழிக்காமலே, மற்ற நாடுகளை மீது கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுப்புற சூழல் மேலும் கெடாமல் இருக்க முயற்சிக்கின்றனர். தங்களது ஊதாரித்தனமான பணம் குவிக்கும் பண்பாட்டை நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர். தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக, ஆசியா, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் வறுமையில் தள்ளவும் அவர்கள் தயங்கவில்லை.
பணம் குவிப்பதுதான் மானுடப் பண்பாடு என்றால் மானுடம் தன் அழிவை நோக்கித்தான் பயணம் செய்ய இயலும். இன்று முதலாளித்துவ பண்பாட்டின் சிகரமான அமெரிக்க சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த பண பக்தி பண்பாடுதான் உயர்ந்தது என்று உலகமே அதை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன நிகழும் என்பதை எடுத்துக் சொல்ல வேண்டியதில்லை!
அமெரிக்காவில் ஆளுக்கொரு கார் என்பது கவுரவம் மட்டுமல்ல; பொருளாதாரத்தின் அச்சாணியாகவும் உள்ளது. இதே பண்பட்டை பின்பற்றி இந்தியாவும், சீனாவும், ஆளுக்கொரு கார் என்று பொருளாதார உற்பத்தியில் இறங்கினால் என்னவாகும். சாலைகள் தாங்குமா? காற்று மண்டலம் என்னவாகும்? புகை மண்டலம் சூழ மக்கள் சுவாசிக்க முடியுமா? கேள்வி என்னவெனில் மக்களின் நலன் காக்க பொது போக்குவரத்தை பலப்படுத்துவதா பணப்பெருக்கம் ஏற்பட மக்களை உதாசீனப்படுத்துவதா?
இன்று காற்று மண்டலத்தை தூய்மையாக வைக்க உலக நாடுகள் பல விதமான சர்ச்சைகளை நடத்தி ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி எங்களது நாட்டு பொருளாதாரம் படுத்து விடும் என்று கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார்.
இன்றுள்ள உலக நிலையில் அமெரிக்காவை கட்டுப்படுத்த யாராலும் இயலாது. ஏனெனில் உலகில் எரிபொருள் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடங்களை ராணுவ பலத்தால் மடக்கி வைத்துள்ளது. சம்மதிக்காத நாடுகளை மிரட்டுகிறது. எனவே ஏகாதிபத்திய ஆதிக்கமும், அதற்கு அடிப்படையான முதலாளித்துவ பொருளாதார உறவும், மானுட சமூகத்தை சவக்குழிக்கு அனுப்பும் பாதையைத்தான் திறந்து வைத்துள்ளது.
விஞ்ஞான உலகிலும் தத்துவ வட்டாரங்களிலும் நடைபெறும் சர்ச்சைகள் மூலம் நாம் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பிரச்சினையில் விஞ்ஞான ரீதியான தீர்வை தெரிந்து கொண்டோம். ஆனால், அரசியல் ரீதியாக சிக்கலான பிரச்சினையாக இயற்கை பாதுகாப்பு சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு ஆக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாபவெறிக்காக மற்ற நாட்டு மக்களை வறுமைக்கு காவு கொடுக்க வேண்டும் என்று புஷ் கோருகிறார். நாமோ வறுமையை போக்கிட அமெரிக்க லாப வெறிக்கு கடிவாளம் தேவை என்கிறோம். மேலும் இறுதியில் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே சாவு மணி அடிக்க வேண்டும் என்கிறோம். இந்த மகத்தான போருக்கு சித்தாந்த ரீதியாக மக்களை தயார் செய்யும் கடமை மார்க்சிஸ்ட்டுகளுக்கு இருக்கிறது. அரசியல் தீர்மானமும் அதையே முன்மொழிகிறது.