பிரகாஷ் காரத்
தமிழில். சி.சுப்பாராவ்
1950ல் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது சுதந்திர இந்தியாவின் முக்கியமான சாதனையாகும், ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை தனது குடிமக்களுக்கு ஜாதி, மத, இன, பால் பேதமின்றி சம உரிமை அளிக்கும் ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறையை உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் மிகப் பெரிய சாதனைதான் என்று தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சொல் அமைப்பிலும், செயல்படும் முறைகளிலும், பல தடைகளும் எல்லைகளும் கொண்டதாக இருந்தாலும் கூட, சாமானியனும் அரசியலில் ஈடுபட அது வழி வகுத்தது. பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்திய அரசுச்சட்டம் 1935 ன் படி, வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், நியமன உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப் பட்ட அரசியலமைப்புச் சட்டமானது, 1947ல் அதிகாரத்திற்கு வந்த ஆளும் வர்க்கத்தின் முத்திரையைப் பெற்றதில் வியப்பில்லை. எனினும், தேச விடுதலைப் போராட்டத்தின் போது மக்களிடையே இருந்த எதிர்பார்ப்புகளையும் அது முன்னெடுத்துச் சென்றது.
இவற்றில் சில வழிகாட்டும் கொள்கைகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் மக்களின் சில குடி உரிமைகளைப் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளன. அதே நேரத்தில், வழிகாட்டும் கொள்கைகளை நீதிபூர்வமாக நடைமுறைப்படுத்தும் கட்டாயமில்லை. நடைமுறையில் பல அடிப்படை உரிமைகள் மீறப்படுவதும், அவை அணுக முடியாத உயரத்தில் இருப்பதும் மக்களின் வாழ்பனுபவமாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததன் முக்கியக் காரணம் இந்திய அரசின் அடிப்படைத் தன்மையில் – அதன் நிலப்பிரபுத்துவ, பூர்ஷ்வாத் தன்மையில் உள்ளது. அரசியல் ஜனநாயகம் ஒரு புறமாகவும், செல்வக்குவிப்பும், பொருளாதார ஆதாரங்கள் குவிப்பும் மறுபுறமாகவும் முரண்பட்ட நிலையை உருவாக்குகின்றன.
பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் தான் ஒரு கட்டமைப்பைத் தந்துள்ளது. இந்த முறையை ஏற்றுக் கொண்டுள்ள பல முன்னாள் – காலனி நாடுகளைக் காட்டிலும், இங்கு அது உயர்வாக இயங்குகிறது. ராணுவம், அதிகார வர்க்கம் ஆகியவற்றை அரசியல் கட்டுப்பாட்டில் வைக்கவும், ஓரளவு சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றை இது அளித்துள்ளது.
இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் முதலாளித்துவ நாட்டில் ஜனநாயக முறை பெற்று இருக்கும் அடிப்படை குறுகியதாக இருந்தாலும், அதற்கும் தடைகள் இருந்தாலும் அவைகளை மீறி, பாரளுமன்ற ஜனநாயகம் தன் ஜீவனை, உயிர்ப்பை பல அண்டுகளாகக் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது. சுதந்திரத்திலிருந்து இன்று வரை ஜனநாயகத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளனவே தவிர குறையவில்லை. அனைத்து மட்டத் தேர்தல்களிலும், சாதாரண மக்கள் உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். கிராமப்புற ஏழைகளும், ஒடுக்கப்பட்டோரும் தேர்தல்களை, சந்தேகக் கண்ணோடு பார்ப்பதில்லை. மாறாக, பல இடங்களில், கிராமப்புறங்களில், வன்முறை மூலம், நிலப்பிரபு / ஆதிக்க ஜாதியினர் ஏழைகளை, தலித்துகளை வாக்களிக்க விடாமல் தடுப்பதைப் பார்க்கிறோம். உட்கட்சி ஜனநாயகத்தைத் தம் கட்சிக்குள் கொண்டு வருவதில் பல கட்சிகள் தோல்வியடைந்தாலும், அது ஒட்டு மொத்தமாக கட்சி அரசியல் முறையின் சிதைவில் முடியவில்லை. கட்சி அரசியல் முறையின் உயிரோட்டத்திற்குச் சாட்சியாக, அரசியல் கட்சிகள் பல்கிப் பெருகி வருகின்றன. நாட்டின் அரசியலை இருகட்சி முறைக்கு மாற்ற நினைத்தவர்களின் ஆசையில் மண் விழுந்தது.
பல குறைபாடுகளும், எல்லைகளும் இருந்தாலும், குடியரசு அரசியலமைப்பு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஒரு அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. ஜனநாயகத்தில் வெகுஜனப் பங்கேற்பை ஏற்படுத்தி, அரசியல் சட்டப் பூர்வ மதிப்பை அளித்துள்ளது. இது 1950 களில் தோன்றிய அரசியல் முறையின் சாதகமான அம்சமாகும்.
ஆனால், இவைகளால் ஜனநாயக முறையின் ஆபத்தான குறைபாடுகளையும், அது சந்திக்கும் சவால்களையும் மறைக்க முடியவில்லை. நவீன தாராளமயக் கொள்கைகள், தடையில்லாத தனியார் மயம் என்று போய்க்கொண்டிருக்கும் இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், பொருளாதார அமைப்பின் வர்க்கப் படிநிலையிலிருந்து அரசியல் ஜனநாயகம் சிறிது சிறிதாக விலகி வருகிறது. அரசியலமைப்பின் சிற்பி.டாக்டர்.அம்பேத்கர் இப்பிரச்சனை குறித்து சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக, பொருளாதார ஜனநாயகம் இல்லாத இடத்தில் அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற இயலாது என்பதை புரிந்து கொள்ளத் தவறும் இரண்டாவது தவறான தத்துவப் பார்வை, பாராளுமன்ற ஜனநாயகத்தை பலகீனப்படுத்திவிடும் ஊறு உள்ளது. சுதந்திர இந்தியாவில் முன்பு எப்போதையும் விட இப்போது இருப்பவர் – இல்லாதவர்களிடையே உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது. பெரும்பாலோருக்கும் பயனளிக்கவில்லை என வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் கூட, அத்தகைய பொருளாதார வளர்ச்சி போற்றப் படுகிறது. அரசியலமைப்பின் வழிகாட்டும் கொள்கைகளில் கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்பு உரிமை, கல்வி, உழைப்போர்க்கு வாழ்வதற்கேற்ற ஊதியம், குழந்தைகளுக்கு இலவசக்கட்டாயக்கல்வி என்ற பல்வேறு வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்குவது தற்போது அதிகமாகியுள்ளது.
குறைபாடுகளும், சவால்களும்
சமூகத்தில் சமத்துவம் நிலவுவதாக காட்டும் தோற்றத்தைக் கூட ஏற்படுத்த இயலாமல் குடியரசு தோல்வியடைந்துள்ளது தெளிவு. அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கண்துடைப்பு நடவடிக்கையாக இடஒதுக்கீடு ஆகிவிட்ட நிலையில், தலித்துகள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். 8.4 கோடி ஆதிவாசிகள் நிலப்பிரபுத்துவ – லேவாதேவி – காண்டிராக்டர்களின் வட்டாரத்தால் கடுமையாகச் சுரண்டப்படுகின்றார்கள். இதற்கும் மேலாக, அவர்களது நிலம், வாழ்க்கை, வாழிடம் அனைத்தையும் பிடுங்கும் இடையறாத தாரளமய, தனியார்மயத்திற்கு அவர்கள் இரையாகிறார்கள். ஆதிவாசிகளின் மீதான உட்சபட்சத் தாக்குதலை கலிங்கா நகர் படுகொலையில் பார்த்தோம். குடியரசாகி ஐம்பத்திஆறு ஆண்டுகளான பின்னும், அரசு மக்களுக்கு எழுத்தறிவே தரவில்லை யெனும் போது, 14 வயது வரைக்கும் கட்டாயமான, இலவசக்கல்வி குறித்து நாம் பேச முடியுமா? மக்கள் தொகையில் முப்பத்தி ஐந்து சதம் கல்வியறி வில்லாதவர்கள் தான்.
மற்ற உலக நாடுகளோடு ஒப்பிட முடியாத அளவு கோரமான வறுமை இந்தியாவில் நிலவுகிறது. பசி, ஊட்டச்சத்துக்குறைவு, நோய்கள் என இது தொடர்பான பிரச்சனைகள் ஏராளம். முழுமுதல் அடிப்படையான தோல்வி வறுமை ஒழிப்பில் தான்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்படும் தாரளமய, தனியார்மயக் கொள்கைகள் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை நாட்டில் பரப்பியுள்ளன. தாரளமய சித்தாந்தங்களின் விளைவாக ஜனநாயகத்தின் மீது புதுத் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. உழைக்கும் வர்க்கத்தைக் தட்டி வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. 1990 களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அப்பட்டமான மதவாதத்தின் வளர்ச்சி; வலது சாரி சர்வாதிகாரத்தை நோக்கிய சாய்வு என்று கொள்ளலாம். பா.ஜ.க. வும் அதன் தலைவர் திரு.எல்.கே.அத்வானியும் தற்போதுள்ள பாராளுமன்ற ஆட்சி முறையை மாற்றி ஜனாதிபதி ஆட்சி முறை ஏற்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில் வியப்பொன்றும் இல்லை. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதில் சில கட்டுப்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே கல்வித் தகுதிகள், இவைபற்றியெல்லாம் பல வதந்திகள் உலவுகின்றன. இவை ஏதோ சில தனிநபர்கள் அல்லது அரசியல் கட்சிகள் கூறுவதாக நினைப்பது தவறு. இவை சர்வதேச நிதி மூலதனத்தைத் தேடும் மிகப் பெரிய பண முதலைகளின் ஜனநாயக விரோதக் கொள்கைகள்.
இது போன்ற கொள்கைகளை நாட்டின் மிக உயரிய நீதி அமைப்பும் வெளியிடுகிறது. மக்களின் கூட்டுப் போராட்ட உரிமைகளை அது சகித்துக் கொள்வதில்லை. ஹர்த்தால்கள், பந்த்கள் தடை செய்யப்படுகின்றன. கூட்டங்கள் நடத்துவது, கண்டம் தெரிவிப்பது போன்ற நடவடிக்கைகளுக்குப் பல கட்டுப்பாடுகள். மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுப்பது இப்படி தொழிலாளர்கள் குறித்த பழமைவாதப் போக்கை உச்ச நிதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் காணலாம். அரசியலிலும், பொருளாதாரத்தில் மட்டும் வலதுசாரிச் சிந்தனைகள் தோன்றுகின்ற நிலையைத் தாண்டி, தற்போது நிலவும் பழக்க வழக்கங்களை நிலைபெறச் செய்வது, ஜாதிய வெறுப்புணர்வுகளை மங்கவிடாமல் வளர்ப்பது, விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் பொருந்தாத விஷயங்களை தலைமேல் வைத்துக் கொண்டாடுவது – இவைகளும் தான் இன்றைய நிலவரமாக உள்ளது. சுதந்திரம் அடைந்த புதிதில், ஜனநாயக நெறிகளையும், விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறையையும் பாதுகாக்கப்போவதாக ஆளும் பூர்ஷ்வா வர்க்கம் அன்று பேசியதற்கும், இப்போது நடப்பதற்கும் சம்பந்தமே இல்லை. பா.ஜ.க. ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் மதவாதமும், சமூகக் கட்டுப்பெட்டித் தனமும் ஊடுருவின. இன்றும் அதில் பெரும்பகுதி நேராக்கப்படாமலேயே உள்ளது.
அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழலால், அரசாங்க அமைப்பின் எல்லாத் துறைகளும் சீரழிந்துவிட்டன. அரசியல் கட்சிகள் உரிமை கொண்டாடும் அம்சமாக ஊழல் ஆகிவிட்டது. இதுவரை அதிகார பீடத்தில் ஏறாத அரசியல் கட்சி, ஜாதிச் செல்வாக்கில் ஆட்சிக்கு வரும் போது மக்கள் ஏற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது. வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள், நலப்பணிகள் மக்களைச் சென்று அடையாததன் முக்கியக் காரணம் மேல்மட்ட அதிகாரிகள், பூர்ஷ்வா அரசியல் வாதிகள் ஆகியோர் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது தான்.
எனினும், இத்தகைய எல்லா பாதகமான அம்சங்களும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடவில்லை. பூர்ஷ்வா வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் வடிவமாக இருந்தாலும் கூட, இன்றைய பாராளுமன்ற அமைப்பு மக்களின் முன்னேற்றத்தையும், பிரதிநிதித்துவப்படுத்துகிறது.. அது மக்களுக்குத் தங்கள் நலன்களைப் பாதுகாக்க சில வாய்ப்புக்களைத் தருகிறது. ஓரளவு அரசின் செயல்பாடுகளில் மக்களால் தலையிட முடிகிறது. சமூக முன்னேற்றத்திற்கும், ஜனநாயக முன்னேற்றத் திற்குமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வழி வகுக்கிறது.
இறையாண்மையின் வீழ்ச்சி
குடியரசின் இறையாண்மைத் கோட்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றொரு ஆபத்தான விஷயமாகும். குடியரசாகிப் பல ஆண்டு களுக்கு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் சுயேச்சையான செயல்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது. 1991 ல் தாராளமயக் கொள்கைகள் வந்தபோது, அணிசேராக் கொள்கையை கைவிட முன்வைப்பப்பட்ட வாதங்கள் இறுதியில் சுயேட்சையான அயலுறவுக் கொள்கையை கைவிட வழிவகுத்தது. ஆறாண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் போது, அமெரிக்காவின் இயல்பான துணையாக இருப்பது தான் நமது குறிக்கோள் என்ற ரீதியில் செயல்பட்ட போது இது அதிர்ச்சி தருகிற முறையில் வெளிப்பட்டது. பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம், நமது பொருளாதாரக் கொள்கைகளில் அமெரிக்கா மற்றும் சர்வதேச நிதி மூலதனங்களின் தாக்கம் ஆகியன வெளியுறவுக் கொள்கைகளில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சுயேட்சையான வெளிநாட்டுக் கொள்கை, பல துருவ உலக உறவை பலப்படுத்துவது என்று வாக்குறுதி அளித்த ஐக்கிய முற்போக்கு அணி அரசு இப்பொழுது ஆளும் வர்க்கங்களின் நிலைபாடான அமெரிக்வின் அரசியல் பங்காளியாக இருப்பது என்ற நிலைபாட்டை உறுதி செய்து வருகிறது. இந்திய – அமெரிக்க ராணுவ ஒப்பந்தமும், ஜூலை 2005 ல் பிரதமர் வாஷிங்டனில் அளித்த கூட்டு அறிக்கையும் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை தேய்ந்து போனதைத்தான் காட்டுகின்றன. கடந்த செப்டம்பரில் ஈரான் அணுசக்தி விஷயத்தில் சர்வதேச அணுசக்தி குழுமத்தில் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது இந்தியாவின் அமெரிக்க சார்புக்கு முக்கியமான அடையாளமாகும்.
இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் கோரிக்கைகளை முன்வைப்பதில் தயக்கம் காட்டாமல் அமெரிக்கா நடந்து கொள்கிறது. வடகிழக்கில் குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் புலனாய்வு செய்ய அமெரிக்க உள்நாட்டு புலனாய்வு அமைப்பை அனுப்புவதாக அமெரிக்கத் தூதரால் சொல்ல முடிகிறது. இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி மூலதனத்தை உயர்த்தாமல் நம்பிக்கைத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டவும் முடிகிறது. ஈரான் – இந்தியா – பாகிஸ்தான் கூட்டு முயற்சியாக எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கவும் முடிகிறது. முன்னாள் இருந்த பா,ஜ,க, தலைமையிலான அரசும் சரி, இப்பொழுது ஐக்கிய முற்போக்கு அணியும் சரி, அமெரிக்காவுடன் இணைந்து, அமெரிக்காவின் ஜனநாயகத்தைப் பரப்புவது என்ற போர்வையில், அதன் மேலாதிக் கத்தை திணிக்கும் முயற்சிக்கு உதவுவதில் எந்தத் தவறும் இருப்பதாகக் கருதவில்லை. இன்றைய அரசியல் அமைப்பில் வெளிப்படும் அனைத்து ஜனநாயக விரோதப் போக்குகளையும் சி.பி.எம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மதச்சார்பின்மையை உள்ளடக்கிய ஜனநாயக நெறிகளைப் பாதுகாப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதவாத ஆபத்தை எதிர்த்து, நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க, அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாட்டின் அரசியலில், இடதுசாரிகள் தான் மாற்று என்பதை உணர்த்த இன்னும் அதிகமான பணிகள் செய்ய வேண்டும்.
பாராளுமன்ற ஜனநாயக முறையை வலுப்படுத்த, தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். பணபலம் மற்றும் அடியாள் பலத்தைக் கட்டுப்படுத்த தேர்தல்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation) அடிப்படையான தேவையாகும். தேர்தல் செலவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட தொகையில் அனைத்து செலவீனங் களையும் அடக்கும் விதமாக சட்டங்கள் கடுமைக்கப்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கான அனைத்துப் பொருட்களை யும் அரசே தரும் விதமாக சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
1994 ல் ஒன்பது பேர் அடங்கிய உச்ச நீதி மன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் மதச்சார்பின்மை தான் அரசியலமைப்பின் ஆதாரம் என்றும், அதன் பொருள் அரசில் மதம் தலையிடுவதும், மதத்தில் அரசு தலையிடுவதும் இன்றி, இரண்டும் தனித்தனியாக இருப்பது என்று வரையறுத்தது. இந்த வரையறை அரசியமைப்பில் தெளிவாக இடம் பெற வேண்டும்.
இன்றைய நிலையில், பொருளாதாரக் கொள்கைகளின் மோசமான போக்கை எதிர்த்து இடதுசாரிகளும், சி.பி.எம்.மும் போராட வேண்டும். வர்க்கப் பிரச்சனைகளான நிலச் சீர்திருத்தம், கூலி, வேலை வாய்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு, உழைக்கும் மக்களைப் பாதிக்கும் தாரளமயத்தை எதிர்த்துப் போராட்டம். இவையனைத்தும், வர்க்கப் போராட்டத்தையும், வெகுஜன இயக்கத்தையும் விரிவு படுத்த அடித்தளமாக அமைய வேண்டும். பெண்ணுரிமை, தலித்துகள், ஆதிவாசிகள் முன்னேற்றம், சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உரிமையைப் பாதுகாக்கும் அனைத்துப் போராட்டங்களையும் இடதுசாரிகள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். மதவாத விஷத்திற்குப் புத்துயிர் அளிக்க பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி செய்யும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க சார்பு நிலையை எதிர்ப்பது, குடியரசு, இறையாண்மை மாட்சியைப் பாதுகாப்பதில் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை அவசியம் என்பதை நிறுவுவது, நமது போராட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த இருபது மாதங்களாக ஆட்சியில் இருக்கும் சூழலில் இப்பணிகள் அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். ஐ.மு.கூ. அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்ய வலியுறுத்தும் அனைத்து வேலைகளையும் தற்போது நடந்து வருகின்றன. இப்பாதையில் மேலும் நடைபோட செப்.29 வேலை நிறுத்தம் நமக்கு உத்வேகம் அளித்துள்ளது. இந்தியர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைக்க மாட்டார்கள் என்பதை அறிவிக்க, எதிர்வரும் அமெரிக்க அதிபர் புஷ் வருகிற நேரம் இடதுசாரிகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த அருமையான வாய்ப்பாகும்.