பல நாடுகளில் மார்க்சீயவாதிகளிடையே இன்றைய ஏகாதிபத் தியத்தின் பன்முகத் தன்மைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
உலக உழைப்பாளி மக்களின் நலன்களுக்கு எதிரி, ஏகாதிபத்தியம். இதனால், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், சோசலிச லட்சியம் கொண்டோர் அனைவருக்கும் பிரதான எதிரியாக ஏகாதிபத்தியம் விளங்குகிறது. அதன் உலகளாவிய ஆதிக்கத்தையும், பொருளாதார அதிகாரத்தையும் ஒழிப்பது தான் கம்யூனிஸ்ட் டுகளின் லட்சியம். சோசலிசத்தின் உதயமும், எகாதிபத்தியத்தின் அழிவும் ஒன்றாகவே நிகழக் கூடியது.
இந்த எதிரியின் பலம், பலகீனம், மாறி வரும் தன்மைகள், அதன் குணாதிசயங்கள் பற்றியெல்லாம் சிறந்த புரிதல் ஒவ்வொரு புரட்சியாளனுக்கும் தேவை. எனவே, இது பற்றி மார்க்சிய அறிவாளர்களிடையே நடைபெற்று வரும் விவாதங்களை கிரகித்து கொள்வது அவசியத் தேவை. இது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு மேலும் உரமூட்டும்.
மீண்டும் பேரரசா?
இடதுசாரி எழுத்தாளர்கள் ஏகாதிபத்தியத்தை குறிப்பிடும் போது பேரரசு (Empire) என்ற சொல்லைப் பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது.பேரரசு என்ற சொல் பழைய அரசர்களின் ஆட்சிகளை குறிப்பிடுவதாகத் தான் நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். சோழர் பேரரசு, பாண்டிய பேரரசு, மௌரிய பேரரசு, ரோமானிய பேரரசு என்ற சொற்றொடர்கள் வரலாற்றில் மிகவும் பரிச்சயமானது.
ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பற்றி எழுகிற பல மார்க்சீய இடதுசாரி எழுத்தாளர்கள் அமெரிக்காவையும் பேரரசு என்றே குறிப்பிடுகின்றனர். மேற்கத்திய உலகில் வெறுப்பை உமிழும் சொல்லாக, இது பயன்படுத்தப்படுகிறது. பேரரசு எனும்போது – இழிவான செயல்களை செய்திடுகிற, ஜனநாயகத்திற்கு விரோதமான அரசு என்று எளிதாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். (ஆனால், தமிழகத்தில் பேரரசு என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அவ்வாறு அர்த்தம் வருவதில்லை. அரசாங்கத்தின் மேன்மையை செல்வாக் கைப் பற்றி பாராட்டுவதாக க் கூட பலர் நினைத்துக் கொள்ளக் கூடும். அரசு, ஜனநாயகம் போன்ற கருத்துகள் குறித்து ஆழமான விவாதம் தமிழகத்தில் நடைபெறாததால் இந்த பிரச்சனையை இங்கு நாம் எதிர் கொள்கிறோம்.)
பழங்கால அரசுகள் நாடுகளைப் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு போர் நடத்துவதுண்டு. அந்தக் காலம், ஜனநாயகம், நாகரீகம் பற்றிய அறிவோ, மனித மாண்புகளைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகளோ, அறிவியலோ வளராத ஒரு காலம். அதனால் இப்படி போரில் ஈடுபடும் அரசர்களை மக்கள் கண்டிக்கவோ, எதிர்ப்பைக் காட்டவோ வாய்ப்பில்லாமல் இருந்தனர்.
ஆனால், சிந்தனையும், அறிவியலும், ஜனநாயகத்தின் மேன்மை பற்றிய புரிதலும் வளர்ந்துள்ள இந்த சூழலில் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது படையெடுத்து கைப்பற்றுவது காட்டு மிராண்டித் தனம் அல்லவா? அதாவது பேரரசினை நிறுவி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த, நாகரிக அறிவு வளர்ச்சி பெறாதவர்களின் செயலுக்கு நிகரானது அல்லவா?
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்கா படையெடுத்து கைப்பற்றிய பிறகு தான், அமெரிக்காவை பேரரசு என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினர். நவீன ஜனநாயக காலத்துக்கு முந்தைய அறிவு படைத்தவர்கள் அமெரிக்க ஆட்சி யாளர்கள் என்ற புரிதலை ஏற்படுத்த இந்த ஒரு சொல் உதவுகிறது.
பழைய பேரரசுகள் – வேறுபாடுகள்
நேரடி படையெடுப்பு நடத்தும் காட்டுமிராண்டி காரியத்தை செய்வதில் அமெரிக்கா பழைய பேரரசுகளை ஒத்திருக்கிறது என்பது உண்மையே என்றாலும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், பழைய நிலப்பிரப்புத்துவ பேரரசுகளுக்கும், இன்றைய எகாதிபத்திய, முதலாளித்துவ பேரரசுகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. முதலாளித்துவத்தின் முக்கிய கட்டமாக காலனியாதிக்கம் இருந்தது. உதாரணமாக பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவை காலனி நாடாக வைத்திருந்தது. பிரிட்டிஷ் வைஸ்ராய்கள், அதிகாரிகள், படைத் தளபதிகள் கொண்ட பிரிட்டிஷ் அரசு நம்மை நேரடியாக ஆட்சி செய்தது.
இது போன்று இன்றைய ஏகாதிபத்தியம் ஆட்சி செய்வதாக சொல்ல முடியாது. (ஈராக், ஆப்கானிஸ்தான் தவிர) மற்ற நாடுகளில், தனது படைகளை வைத்துக்கொண்டு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தவில்லை.
காலனி ஆதிக்க நாட்களில் கடல் வாணிகம் செய்ய பல கடற்பாதைகளை முதலாளித்துவ அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதற்கென்று வலுவான படைகளையும் வைத்துக் கொண்டிருந்தனர். இந்தக் கடற்பாதைகளை கைப்பற்ற ஏராளமான சண்டைகள் நடந்ததை வரலாற்றில் படிக்கின்றோம்.
ஆனால், இப்போது அத்தகைய நிலை இல்லை. அமெரிக்காவே இதர ஏகாதிபத்திய நாடுகளோ அப்படி கடற் பாதைகளை ராணுவ வல்லமை கொண்ட தங்களது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளதாக சொல்ல இயலாது.
எனினும், அமெரிக்காவிற்கு ராணுவ தளங்கள் உண்டு. ஏறத்தாழ 140 நாடுகளில் தற்போதும் ராணுவ தளங்களை அது வைத்துள்ளது. ஆனால் இந்த இடங்களில் வெளிப்படையாக உத்தரவுகள் போட்டு அந்தப்பகுதி நாடுகளை தனக்கு கீழ்ப்படிந்து செயல்படுமாறு அமெரிக்கா ஆணையிடுவதாக சொல்ல முடியாது.
உதாரணமாக, இந்தியப் பெருங்கடலில் டியகோ கார்சியாவில் அமெரிக்காவின் ராணுவ தளம் உள்ளது. அதை வைத்துக் கொண்டு, இந்திய ராணுவம் என்ன செய்ய வேண்டும் என்று உத்திரவுகளை அமெரிக்கா அறிவிப்பதில்லை. அதாவது வெளிப்படையான ஆதிக்கம் இல்லை.
காலனிய ஆட்சி காலங்களில் அதிகாரம் செலுத்துவதும், பொருளாதார சுரண்டலும், கொள்ளையும் வெளிப்படையாக கண்ணுக்குத் தெரிந்து நடந்தது. வரி, கப்பம் மூலமாகவும், இன்னும் பல வழிகளில் செல்வம், அடிமை நாடுகளிலிருந்து, காலனியாதிக்க எஜமானர்களுக்கு செல்வதும் வெளிப்படையாகத் தெரிந்தது.
இதற்கு முந்தைய சமுதாயமான நிலப்பிரபுத்துவத்தில் நிலப்பிரபு எப்படி விவசாயிகளின் உழைப்பையும், அவர்களது வருவாயையும் கொள்ளையடிக்கிறான் என்பது நன்றாக, வெளிப் படையாகத் தெரிந்தது. மாறாக, முதலாளித்துவத்தில் தொழிலா ளர்கள், வார வாடகையோ, கப்பமோ, வரிகளோ முதலாளிக்கு செலுத்துவதில்லை.
அதேபோல, காலனி ஆதிக்கக் காலத்திலும், ராணுவ வல்லமை மூலமாகவும், எண்ணற்ற படுகொலைகள் நிகழ்த்தியும் கூட உள்நாட்டு செல்வங்களை காலனி ஆதிக்க வாதிகள் அபகரித்தனர். இதுவும் வெளிப்படையாகத் தெரிந்தது.
இது போன்று, ஏன் இன்றைய ஏகாதிபத்திய சுரண்டலும் ஆதிக்கமும் வெளிப்படையாக தெரிவதில்லை? இங்கு தான், மார்க்சின் உபரி மதிப்பு தத்துவம் புரிதலுக்கு உதவுகிறது. காரல் மார்க்ஸ், மூலதனம் எவ்வாறு உழைப்பைச் சுரண்டுகிறது என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளார். தொழிலாளர் செலுத்தும் உழைப்பின் ஒரு பகுதி உழைப்பு கூலிக்காகவும், ஒரு பகுதி உபரி உழைப்பாக மூலதனப் பெருக்கத்திற்கு உதவுதையும் மார்க்ஸ் விளக்கியுள்ளார். பொருளாதார அடக்குமுறை கருவியாக சந்தை பயன்படுகிறது.
இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை விற்று கூலியைப் பெற்றால் மட்டுமே, தான் உயிர் வாழத் தேவையான பொருட்களை சந்தையில் அவரால் வாங்க முடியும். வாங்கிய பொருட்களை நுகர்ந்தால் தான், அவர் இழந்த உழைப்புச் சக்தியை மீண்டும் அவர் பெறுர். மீண்டும் அவர் உழைத்திட இயலும். ஆக, சந்தை தான் தொழிலாளியை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிட கட்டாயப்படுத்துகின்றது. இதனால், முதலாளியின் சுரண்டல் வெளியில் தெரிவதில்லை.
ஆனால், வெளியில் பார்ப்பதற்கு முதலாளிகள் – தொழிலாளி கள் உறவு சுதந்திரமாக செயல்படும் மனிதர்களுக்கு இடையேயான உறவு போன்று தோன்றிடும். மாறாக, நிலப்பிரப் புத்துவ காலத்தில் நிலப்பிரப்புக்கும் விவசாய அடிமைக்கும் உள்ள உறவு அடக்குமுறை உறவாக வெளிப்படையாகத் தெரியும்.
இன்றைய உலகமயச் சந்தை
இதே போன்ற நிலைதான், இன்றைய முதலாளித்துவ ஏகாதிபத்திய சூழலிலும் நிலவுகிறது. முன்பு, காலனித்துவ காலங்களில் பலவீனமான நாடுகளிலிருந்து சொத்துக்கள் பலமான நாடுகளுக்கு சென்றடைவது நன்கு வெளிப்படையாக தெரிந்தது. இன்று அவ்வாறு வெளிப்படையாக தெரிவதில்லை.
ஆனால், தற்போதும் ஏழை நாடுகளிலிருந்து செல்வங்கள் பணக்கார நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முந்தைய காலங்களை விட மிக அதிக அளவில் இது நடக்கிறது. ஆனால், ஒரு நாட்டை மிரட்டி பணிய வைத்து அடக்குமுறை செய்து இது நடப்பதில்லை. பிறகு எப்படி நடக்கிறது?
இங்கு தான் சந்தை சக்திகளின் பங்கு உள்ளது. எளிதில் புலப்படாத வகையில், சந்தையே இங்கு அடக்குமுறை கருவியாக செயல்படுவதாக வெளிப்பார்வைக்குத் தெரியும். அதாவது, நாடுகள் சட்டப்படி செயல்படுகிற, பொருட்களை விற்பவர், வாங்குபர் களாக, கடன் கொடுப்பவர் பெறுபவர்களாக, சுதந்திர சுயாதிபத்திய நாடுகளாக இயங்குவது போன்று வெளியில் தெரியும். வரையறுக்கப் பட்ட சட்டங்களும் இருக்கும். ஆனால், ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கரங்கள் உலகச் சந்தை, வணிகம் மூலமாக பணக்கார நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும். இதன் மூலம் ஏழை நாடுகளின் வளங்கள் செல்வங்கள் பணக்கார நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பு வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் கொண்ட அமைப்பு. இது போன்ற அமைப்புக் கள் மற்றும் வர்த்தகம் மூலமாக இந்தச் சுரண்டல் நடைபெறுகிறது.
பொருளாதாரம் அல்லாத அதிகார மையங்கள்
ஆக இது போன்ற பொருளாதாரம் சார்ந்த அதிகாரம் தற்போதைய சகாப்தத்தில் செயல்படுகின்றது. அதே நேரத்தில் பொருளாதார ளம் அல்லாத அதிகாரங்களும் இதில் முக்கிய பங்கு வசிக்கின்றன. அரசியல், ராணுவம், சட்டம் ஆகிய தளங்களிலும் இந்த சுரண்டல் அடக்குமுறை நிகழ்கிறது.
பொருளாதாரம் சார்ந்த அதிகாரம், முதலாளித்துவ ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு தூணாக விளங்குகிறது. ஆனால், முதலாளித்துவம் எப்போதுமே வன்முறை, படையெடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றையும் கைவிடுவதில்லை. இரண்டும் இணைந்து தான் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
முதலாளித்துவம் தோன்றிய காலத்திலிருந்து அதன் முகத் தோற்றம் தொடர்ந்து மாறிவருகிறது. முகத் தோற்றங்கள் மாறினாலும், உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டுவதும், ஏழை நாடுகளைச் சுரண்டுவதும் அதன் உயிர் வாழ்தலுக்கு அடிப்படை யாக இருந்து வந்துள்ளது.
தொடர்ந்து மூலதன விரிவாக்கமும், விரிந்து பரந்த பொருளாதாரச் சுரண்டலும் கொண்ட அதன் முகத் தோற்றத்தை பல நிகழ்வுகளில் நாம் அறிய முடியும். ஆங்கில முதலாளித்துவம் அயர்லாந்தை ஆதிக்கம் செலுத்தியது. பிறகு அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. பிறகு வற்றாத சுரண்டலுக்கு தளமாக இந்தியாவை ஆதிக்கம் செலுத்தியது, – இவையெல்லாம் முதலாளித் துவம் பிரமாண்ட வளர்ச்சி காண உதவின.
முதலாளித்துவம் என்ற நிலையிலிருந்து ஏகாதிபத்தியம் எனும் முகத் தோற்றத்தை 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அது பெற்றது. (இந்த தோற்றத்தின் கூறுகளை புரிந்து கொள்ள லெனினது ஏகாதிபத்தியம் உதவுகிறது).
இதன் தொடர்ச்சி தான் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலகமயம் என்ற இன்றைய முகத்தோற்றம். மேற்கண்ட நீண்ட வரலாற்றின் தொடர்ச்சி தான் இது.
இன்றைய நிலை – ஒரு வரையறை
முதலாளித்துவத்தின் இன்றைய நிலையைப் பற்றி எல்லன் மெய்க்கின்ஸ் வுட் அவர்களின் வரையறைதான் பொருத்தமாக இருக்கிறது. பலகேள்விகளுக்கு விடையளிப்பதாகவும், செயல் பாட்டுக்கு வழிகாட்டுவதாகவும் உள்ளது. எல்லன் இவ்வாறு வரையறுக்கிறார்.
- இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவம் என்பது நன்கு உலகமயமாக்கப்பட்ட ஒரு பொருளாதாரம்.
- இன்றைய உலக ஏகாதிபத்தியதை ஒரு சங்கிலித் தொடர் என்று வர்ணித்தால், அதன் பல கண்ணிகள் பிணைக்கப்பட்ட நிலையில் இருப்பது போன்று உள்நாட்டு அரசுகள் விளங்குகின்றன. பல அரசுகள் சேர்ந்து (Multiple States) இந்த ஏகாதிபத்திய சங்கிலியை வலுவாக்கிடவும், பாதுகாத்து வளர்க்கவும் உதவுகின்றன.
- ஏகாதிபத்திய மூலதனம் தழைக்க பொருளாதாரம் அல்லாத தளங்களும், அதற்கு தேவைப்படுகிறது. குறிப்பாக ராணுவபலம் என்பது முக்கியத் தேவை. இந்த ராணுவ வல்லமை மிகவும் புதிய வழிகளில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. புதிய வடிவங்களில் போர்கள் மேற் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு, இன்றைய முதலாளித்துவ முகத்தோற்றம் பற்றி புரிந்து கொள்ள முற்படும்போது பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அதுபற்றிய விவாதங்களும், அதிகரிக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று.
உலகப் போராட்டமா? உள்ளூர் போராட்டமா?
இன்று பொருளாதாரம் உலகமயமாக்கப்பட்டுள்ளது. மூலதனம், குறிப்பாக நிதி மூலதனம், ஒரு நாட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை மாறி, உலகம் முழுவதும் அசுர வேகத்தில் வலம் வருகிறது. எங்கெல்லாம் அதிவேக லாபம் கிடைக்கிறது, அதிகமான சுரண்டல் கொள்ளைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் பல நேரங்களில் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் நிலை இருக்கிறது. அதாவது உள்நாட்டு அரசுகளின் (Nation State) சுயாதிபத்தியம் கேள்விக் குறியாக உள்ளது.
இதனால், தேசிய அரசுகளே இல்லை, அவையெல்லாம் பொம்மைகள்தான்; அவற்றை எதிர்த்துப் போராடி பயனில்லை. என்ற கருத்துக்களுக்கு சிலர் வந்து விடுகின்றனர். அவர்கள் மேலும் கூறுவது, உலக மூலதனத்தையும், அதன் தலைமையாக உள்ள அமெரிக்காவையும் எதிர்த்த உலகந்தழுவிய போராட்டம் தான் சரியானதாக இருக்கும் என்கின்றனர். இதற்கு உலகந் தழுவிய அமைப்புகள் தான் தேவை – என்ற விவாதங்கள் எல்லாம் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், உண்மை நிலை என்ன, உலக மூலதன வருகைக்கும், அதன் சுரண்டலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் (Facilitator) அளிக்கும் வேலையை அந்தந்த தேச முதலாளித்துவ அரசுகள் செய்கின்றன. மூலதன ஆட்சியை நிலை நிறுத்த உள்நாட்டு ஆட்சியாளர்கள் பக்கபலமாக இருக்கின்றனர். எனவே உள்நாட்டு அரசுகளை எதிர்த்த போராட்டம் இல்லாமல், உலகந்தழுவிய போராட்ட அறை கூவல்கள் உழைப்பாளி வர்க்கத்திற்கு பலன் தராது. இரண்டும் இணைந்து நடத்தப்பட வேண்டும்.
இந்த நிலைபாட்டுக்கு வருவதற்கு எல்லன் அவர்களின் மேற்கண்ட வரையறை இன்றைய ஏகாதிபத்தியம் பற்றிய சரியான புரிதலைத் தருகிறது. எனவே, இன்றைய முதலாளித்துவத்தை உலக ஏகாதிபத்தியம் என்றும் அழைக்கலாம்; பேரரசு என்றும் அழைக்கலாம் – எப்படி பெயரிட்டாலும் அதன் இன்றைய தன்மைகள் குறித்த புரிதலில் தவறு ஏற்படக் கூடாது. மார்க்சீய வாதி எல்லன் அவர்கள் அளித்துள்ள வரையரை சரியான புரிதலுக்கு உதவுகிறது.
ஆதாரம்
எல்லன் மெய்க்சின்ஸ் எழுதிய The Empire of Capital (Left Word – பதிப்பகம்)