நாட்டு மக்களே! வரலாற்றிலிருந்து நாம் நழுவ இயலாது இப்படிச் சொன்னவர் ஆப்ரஹாம் லிங்கன். ஆனால் நழுவுதல் என்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரலாறு மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் அல்லது திருத்தப்படுவதும் அந்த நழுவுதலின் சில வடிவங்கள் ஆகும். அத்தகைய முயற்சிகளுக்கு தற்போது புதிய வேகம் கிடைத்திருக்கின்றது. இந்தச் சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மையங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாவதையும் காண்கிறோம். ஆசியாவில் செயல்படத் துவங்கியிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, லத்தின் அமெரிக்காவில் எழுந்து வரும் அமெரிக்காவிற் கான பொலிவிய மாற்று போன்ற அமைப்புகள் ஏகாதிபத்திய வீச்சினை (அப்படி ஒரு நோக்கம் இருப்பதாக அறிவிக்கப்பட வில்லை யென்றாலும்) தடுத்து நிறுத்தும் உள்ளடக்கம் கொண்டதாக உள்ளன. மத்திய ஆசியப் பகுதியில் நடப்பு நிகழ்வுகள் ஏகாதி பத்தியத்தின் கோரமான முகத்தை தெளிவாக உலகுக்கு வெளிக் காட்டுகின்றன. ஆகவே, நிலைமைகளை சந்திக்க ஏகாதிபத்தியத்திற்கு புதிய முகம் தேவைப்படுகிறது. தன்னொளி பொங்கும் முகம் அதற்கு உண்டு என்று சொல்லும் முயற்சி தான் தற்பொழுது துவக்கப் பட்டிருக்கும் வரலாற்றுப் புரட்டல். பேராசிரியர்கள் சிலர் ஊடகங்களின் துணை கொண்டு ஏகாதிபத்தியம் ஆற்றிய நல்ல பணிகள் குறித்து வரலாற்றின் பக்கங்களைப் புரட்டி எழுதத் துவங்கியிருக்கிறார்கள்.
காலனி ஆதிக்கத்தின் உண்மை முகம்
பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்த தத்துவார்த்த விளையாட்டினை துவக்கியிருக்கின்றன. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திருமதி. பிரியம் வதா கோபால் தி கார்டியன் பத்திரிக்கைக்கு சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், கடந்த கால காலனி ஆதிக்கத்திற்கு புனிதமான தோற்றம் கொடுக்கும் இந்த ஊடக முயற்சிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். வரலாற்றைத் திருப்பி எழுத அல்ல, திருத்தி எழுதி பிரிட்டிஷ் பேரரசின் கொடுங்கோல் ஆட்சியினை மூடி மறைக்கும் வேலை பி.பி.சி.யின் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் செய்யப்படுகிறது. ஏகாதிபத்திய அமைப்புக்கு வக்காலத்து வாங்கி எழுதிக் கொண்டிருக்கும் நியாலி பெர்கூசன் என்பவர் அந்த பி.பி.சி நிகழ்ச்சிக்கான வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவர் கூறும் வரலாறு ஒரு சுகமான கற்பனைக் கதை என்கிறார் பிரியம் வதா. அமெரிக்க வலது சாரி சிந்தனைப் போக்கால் உந்தப்பட்டு வலிந்து புகுத்தப்படும் வரலாற்றுப் புரட்டல் அங்கே அரங்கேறு கிறது. காலனி ஆதிக்கம் என்றால் எது நம் நினைவுக்கு வருகிறது? அடிமைத்தனம், சூறையாடல், யுத்தம், ஊழல், ஏழ்மை, நில அபகரிப்பு, பஞ்சம், சுரண்டல், கொத்தடிமை இப்படிப் பல இருட்டுப் பகுதிகளைக் கொண்டது தான் காலனி ஆதிக்கம். ஆனால், இந்த நிகழ்வுக ளெல்லாம் நல்ல நோக்கத்துடன் செயல் பட்ட காலனி ஆதிக்கத்தின் குறுக்கே விழுந்த தவிர்க்க முடியாத சம்பவங்கள், தவறுகள் மற்றும் அத்து மீறல்கள் என்ற குறிப்போடு அவைகள் மூடப்படுகின்றன. பாதி உண்மைகளும், பாதி கற்பனை கலந்த ஊகங்களும் எந்த வகையான நிரூபணமும், அடிக்குறிப்பு களும் இல்லாமல் அதிகாரப் பூர்வமான வரலாறு இதுதான் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.
தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வெளியிட்ட உலகின் யுத்தம் என்று பெர்கூசன் எழுதிய புத்தகம் கடந்த காலத்தில் கடைபிடித்த இனவெறிக் கொள்கையினைத் தூக்கிப் பிடிக்கின்றது. பொதுவாக மக்கள் தங்கள் இனத்தைச் சார்ந்த மக்களை நம்புவார்கள் என்றும், காலனி மக்களை நவீனப்படுத்த வெள்ளை மனிதர்கள் மேற்கொண்ட சுமை பற்றியும், அவர்கள் புரிந்த வீர சாகசங்கள் குறித்தும் பெர்கூசனின் வரலாறு நிறையவே சொல்லுகிறது.
வரலாற்றை மறைக்கும் முயற்சிகள்
இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சிகளும், பேச்சுக்களும் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. நவீன பிற்போக்குவாதிகளின் முற்போக்கு சொல்லாடல்கள் இவை. பெர்கூசன் புதிதாக எதையும் சொல்லவில்லை. மெக்காலே, மில் போன்ற ஏகாதிபத்திய ஆதர வாளர்களும், தற்போது புஷ் நிர்வாகம் கொஞ்சம் சுத்தப்படுத்தி வெளியிடும் உளுத்துப்போன சுய விளம்பரக் கனவுகளையும், பரப்பப்பட்ட பொய்களையும்தான் பெர்கூசன் பட்டை தீட்டி நம்முன் வைக்க விரும்புகிறார். அவர் போன்றவர்களை அதிகாரப் பூர்வமான வரலாற்றாசிரியர்கள் என பிரிட்டிஷ் ஊடகங்கள் அங்கீகரிப்பதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேன்மை யைப் பரப்பும் பிரச்சார பீரங்கிகளாக அவர்கள் மாற்றப்படுகிறார்கள்.
பிரிட்டனில் குடியுரிமை வேண்டுவோர் பிரிட்டனின் வரலாறு படித்து தேர்வு பெற வேண்டும் என பிரிட்டிஷ் குடியுரிமை விதிகள் கூறுகின்றன. அதற்காக ஒரு வரலாற்றினை எழுதியிருப்பவர் பேராசிரியர் பெர்னார்ட் க்ரிக் – இவரை நியாலி பெர்கூசனின் மறுபதிப்பு எனலாம். 9000 வார்த்தைகளைக் கொண்ட இந்தப் புத்தகம். பிரிட்டனின் மேன்மைக் குடியைப் பற்றி பலவாறு குறிப்பிடுகிறது. பிரிட்டனின் உயர்தனிக் குடும்பங்களைப் பற்றி 210 வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளது. ஆனால், பிரிட்டன் நாட்டு பாமர மக்களின் சாசன இயக்கம் (Charter Movement) பற்றியோ, தொழிற்சங்க இயக்கத்தின் துவக்கம் பற்றியோ, 1927 ல் நடந்த மிகப் பெரிய வேலை நிறுத்தம் பற்றியோ ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. தாட்சர் ஆட்சி பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது; ஆனால், அர்ஜென்டினாவுக்கு எதிராக அந்த அரசு நடத்திய தார்மீக நெறியற்ற ஃபாக்லண்ட் யுத்தம் பற்றி ஏதுமில்லை. அட்லாண்டிக் பெருங்கடல் தாண்டி நடத்தப்பட்ட அடிமை வியாபாரம் தீதானது என்று குறிப்பிடும் போது, பிரிட்டிஷ் பேரரசின் கொடிய செயல்களை வெண்பட்டு முக்காடு கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. பெர்னார்டு கிரிக் காலனி ஆதிக்கத்தை சித்தரிக்கும் விதமே அலாதியானது. “ஆப்பிரிக்காவின் பூர்வ குடி மக்களுக்கும், இந்திய உபகண்டத்தில் உள்ள மக்களுக்கும் நடுநிலையான சட்ட ஒழுங்கு அமைப்பை கொடுத்தும், ஆங்கிலக் கல்வி கொடுத்தும், சிதறிக்கிடந்த மக்களை ஒற்றுமைப் படுத்தி, மக்கள் நலன், கல்வி முதலியவற்றில் கவனம் செலுத்தி அமைதி காத்து, யார் தங்களை ஆளுகிறார்கள் என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படாமல் இருக்கச் செய்தது” என்கிறார். இதைப் படித்துவிட்டுத்தான் நம் நாட்டின் பிரதமர் அண்மையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு “நல்லாட்சி” (Good governance) விருது வழங்கியிருப்பாரோ?
காலனி அரசின் அலங்கோலம்
அமர்த்தியா சென், நிக்கோலஸ் டிர்க்ஸ், மைக் டேவிஸ் மகமூத் மம்தானி, கரோலின் எல்கின்ஸ், வால்டர் ரோட்னி போன்றவர் களெல்லாம் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் பற்றி ஆய்வு செய்து எழுதியவற்றில் காலனி நல்லாட்சி என்பது வறுமையும், ரத்தக்களறியும், அடக்கு முறையும், துன்ப துயரங்களும் நிறைந்த ஆட்சியாக இருந்தது என்பதை விளக்கியிருக்கிறார்கள். மைக் டேவிஸ் எழுதிய கடந்த விக்டோரியா காலப் படுகொலைகள் என்ற புத்தகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் அவலங்களைப்பற்றி எழுதியிருக்கிறார். 1896-1900 காலத்தில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 12 லிருந்து 29 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் இறந்து போனார்கள். அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் அப்படி இறந்தவர்களைக் காட்டிலும் இது அதிகம். பிரிட்டிஷ் ஆட்சியால் அந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்கிறார் டேவிஸ். எல்நினோ என்றழைக்கப்பட்ட வறட்சி நிலை 1876ல் இந்தியாவின் தக்காணப் பகுதியினைத் தாக்கியது. அரசிடம் போதுமான அரிசியும், கோதுமையும் இருப்பில் இருந்தது. அன்றைக்கு இந்திய வைஸ்ராய் பொறுப்பில் இருந்த லிட்டன் எந்தச் சூழ்நிலையிலும் பிரிட்டனுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியினைத் தடுத்து நிறுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். பஞ்சம் நிலவிய உச்ச கட்டத்தில் 320,000 டன் உணவுப் பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
பட்டினியால் வாடிய விவசாயிகளுக்கு கொடுத்த நிவாரண உதவிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது. சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் குறுக்கீடு இருக்கிறது என்று சொல்லி அறவழி நன்கொடைக்கு எதிராக 1827-ம் ஆண்டு சட்டத்தினைப் பயன்படுத்தி தனியார் நிவாரண உதவிகளும் தடைசெய்யப்பட்டன; மீறினால் தண்டனைக்குள்ளாவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டது. கடும் உழைப்புக்கு மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். நாஜி ஜெர்மனியின் புக்கன் வால்ட் கைதிகள் முகாமில் கொடுக்கப்பட்ட உணவைக் காட்டிலும் மிகக் குறைவான உணவே அந்த உழைப்புக்கு வழங்கப் பட்டது. அந்த உழைப்பிற்கான முகாம்களில் மாதாந்திர இறப்பு விகிதம் 94 சதம். இதுவே ஓர் ஆண்டு இறப்பு விகிதமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும் போது, வரி வசூலை முடுக்கிவிட்டது காலனி அரசு. அந்தப் பணம் லிட்டன் நடத்திய ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்டது. பஞ்சாப் மற்றும் (இன்றைய) உத்திரப்பிரதேசப் பகுதிகளில் அபரிமிதமான அறுவடை இருந்தது; ஆனால் காலனி அரசின் ஏற்றுமதிக் கொள்கையால், இந்தப் பகுதியில் மட்டும் 12.5 லட்சம் பேர் இறந்தார்கள். இதுதான் அந்த நல்லாட்சியின் அளவீடு.
நல்லாட்சியின் அம்சங்கள்
ஜனநாயகம், விடுதலை, சகிப்புத்தன்மை போன்ற மனித குலம் போற்றும் பண்புகளை நாங்கள் தான் காலனி மக்களுக்குக் கொடுத் தோம் என்று காலனி ஆதிக்கவாதிகள் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்கிறார்கள். கென்யாவில் பிரிட்டன் நடத்திய வெறியாட்டம் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து நடத்திய கொடுஞ்செயலாகும். விரல்விட்டு எண்ணக்கூடிய பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் ராணுவத்தின் துணைகொண்டு 12000 சதுர மைல் நிலங்களை அபகரித்து, 2000 சதுர மைல் பரப்பளவுப் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட கிராமங்களில் 12.5 லட்சம் கிகியூ இனத்தவரை அடைத்துப்போட்டது என்ன விடுதலை உணர்வோ! எதிர்த்துப் போரிட்ட மாவ்மாவ் இயக்கத்தினரை கொலை, சித்தர வதை போன்ற அடக்கு முறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி ஆட்சி செய்தது என்ன சகிப்புத்தன்மையோ! 3.20 லட்சம் பேர் அந்த சித்தரவதை முகாம்களில் இருந்தனர். செவி மடல்களை வெட்டியும், உடலில் மெழுகை ஊற்றி பின்பு எரித்தும், எரியும் சிகரெட் துண்டுகளை செவிகளில் நுழைத்தும் கைதிகள் விசாரிக்கப்பட்டார்கள் என கரோலின் எல்கின்ஸ் பிரிட்டனின் குலாக் என்ற புத்தகத்தில் எழுதுகிறார். 1 லட்சம் பேர் கொல்லப்பட்டும், நோயினாலும், பட்டினியாலும் மடிந்து போனார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை காலனி ஆதிக்கத்தின் வெறித்தனத்தை வெளிக்காட்டிய செயல். டாஸ்மானி யாவில் நடந்த இனப்படுகொலை, 1948 – 60 ல் மலேயாவிலும், சைப்ரஸிலும் (1955-59) நடத்திய ராணுவ நடவடிக்கைகள், ஓமன் கிராமங்களின் மீது நடத்திய குண்டு வீச்சு, வடக்கு ஓமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யுத்தம், டியோகா கார்சியா தீவிலிருந்து மக்களை வெளியேற்ற எடுத்த நடவடிக்கைகள், 1953-62 ல் கயானாவில் மக்களின் ஜனநாயக முடிவினை எதிர்த்து நடத்திய ராணுவ நடவடிக்கை, 1956 ல் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து சூயஸ் கால்வாயினை மீண்டும் பிடிக்க எடுக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் இவைகள் தான் பிரிட்டிஷ் அரசின் நல்லாட்சிக்கான வரலாற்றுப் பூர்வ நிரூபணங்கள். நமது நாட்டில் மத அடிப்படையிலான பிரிவினையை நடத்தி வைத்த பெருமை பிரிட்டிஷ் அரசுக்கு உண்டு; 1 கோடி மக்கள் புலம் பெயர்ந்து பரிதவித்த சோக வரலாற்றினை நாம் கண்டோம்.
பேராசை, வன்முறை
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க மேலாதிக்கம் நிறுவப்படுவதற்கு முன் இந்த உலகம் எப்படி இருந்தது? என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில் நாம் தோல்வியடைந்திருக்கிறோம் என்கிறார் பிரியம் வதா. பேராசையும், வன்முறையும் ஒரு குறிப்பிட்ட பண்பாடு அல்லது கலாச்சாரத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. ஆனால், காலனி ஆதிக்கத்தின் இந்த நடைமுறைகள் முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுகளை அழித்துவிட்டது. முகலாய மன்னர் அக்பரின் அட்சி முறை சுல்-எ-குல் அல்லது அனைவருக்கும் நன்மை என்ற பிரதான கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டது; ஆனால், இதையெல்லாம் மாற்றி பிரிட்டன் இங்கே அதன் பேராசையின் வரலாற்றிற்கு புதிய அத்தியாயம் எழுதியது. பருத்தி, கரும்பு, தேக்கு, ரப்பர் மற்றும் பல்வேறு கனிமங்கள் போன்ற இந்த நாட்டின் இயற்கைச் செல்வம் பெரிய அளவில் சூறையாடப்பட்டது. பிரிட்டிஷ் வருவதற்கு முன் இந்தியாவின் துணி உற்பத்தி மிகவும் வளர்ந்த நிலையில் இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு அரைநூற்றாண்டு காலத்தில் அதை அழிவுக்குக் கொண்டு வந்தது. மார்க்ஸ் மூலதனம் புத்தகத்தில் குறிப்பிடுவது போல், பருத்தி துணி நெய்யும் நெசவாளிகளின் எலும்புகள் இந்திய சமவெளியினை வெளிறச் செய்துவிட்டது. ஜார்ஜ் மான்பியாட் என்ற கட்டுரை யாளர் தி கார்டியன் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையில் 18ம் நூற்றாண்டில் தென் இந்தியத் தொழிலாளர்கள் அதே காலக் கட்டத்தில் இருந்த பிரிட்டன் தொழிலாளர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதித்தார்கள். நல்ல பொருளாதாரப் பாதுகாப்போடு வாழ்ந்தார்கள் என (பி.பார்த்த சாரதி என்பவர் ஆய்வினை மேற்கோள் காட்டி) குறிப்பிடுகிறார். 1757 லிருந்து 1947 வரை இந்தியாவில் தனிநபர் வருமானம் எள்ளவும் உயரவில்லை என்று மைக் டேவிஸின் கருத்தினையும் முன் வைக்கிறார். 2 கோடி ஆப்பிரிக்க மக்களும், 15 லட்சம் இந்தியர்களும் கொத்தடிமைகளாக கடல் கடத்தப்பட்டு தேயிலை, கரும்புத் தோட்டங்களில், சுரங்கங்களில் பணி புரிய நிர்பந்திக்கப்பட்டனர். ஃபிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமையாய் வெந்து மடியும் இந்தியர்களைப் பற்றி பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது.
நாட்டை நினைப்பாரோ எந்த
நாளினைப் போவதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ – அவர்
விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே! – துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? அவர்
விம்மியழவுந் திறங்கெட்டுப் போயினர்…
நாடுகளை அடிமைப்படுத்தி, செல்வங்களைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி திரட்டிய செல்வத்தில் உருவாகி, வளர்ந்த முதலாளித்துவ உலகம்; ஏகாதிபத்தியமாக உருவெடுத்தது.
பிரிட்டன் வழியில் அமெரிக்கா
ஏகாதிபத்திய உலகில் பிரிட்டனின் வாரிசாக பிரிட்டனையே பின்தள்ளிவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னே வந்து நிற்கிறது. இவர்களுக்கும் உண்மையான வரலாறு படிப்பதில் சங்கடங்கள் உண்டு. ஈராக் யுத்தம் முடிவுற்ற போது, (இன்னும் முடிவு பெறவில்லை என்பது வேறு விஷயம்) புஷ் பேசினார்: வரலாறு? எங்களுக்குத் தெரியாது. முடிவில் நாம் எல்லோரும் இறந்து போவோம். இப்படி ஒரு வாழ்க்கைத் தத்துவத்தில் வரலாற்றை ஒதுக்க நினைத்தாலும், அது ஒதுங்குவதாக இல்லை. சென்ற ஆண்டு (நவம்பர் 11) போரில் சிறப்பாக பணி புரிந்தோர் தினத்தில் பேசும்போது புஷ் எப்படி போர் துவங்கியது என்று வரலாற்றைத் திருப்பி எழுத முயற்சிப்பது எல்லையற்ற பொறுப்பின்மை என்று குற்றம் சாட்டினார். ஈராக் யுத்தம் எப்படி பொய்களையும், உளவுத்துறை செய்திகளின் திருத்தங்களையும், ஏகாதிபத்திய உள்நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு துவக்கப் பட்டது என்று ஆராயத் துவங்கியதன் விளைவுதான் இந்தக் கோபம். ஜனநாயகம், விடுதலை நாகரீகம் என்பதையெல்லாம் உலகுக்கு கற்றுக் கொடுக்க எடுத்த அவதாரம் தான் தங்கள் அமெரிக்கா என்று பறைசாற்றுகிறார்கள். 5 லட்சம் ஈராக் குழந்தைகளைப் பலி வாங்கி, தொன்மையான யூப்ரிடிஸ் – டைக்ரிஸ் நதிக்கரை நாகரிகத்தின் வரலாற்றுச் சின்னங்களையும் அழித்துவிட்டு, அவர்கள் சுட்டு விரலுக்கு அசையும் பொம்மை அரசினை நிறுவிவிட்ட பின் னணியில், அந்த அழிப்பு வேலை வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறுவதை புஷ் கும்பல் விரும்பவில்லை. கடந்த கால வரலாறு எழுதுவது நிறுத்தப்பட்டால் மனிதாபிமானம் என்பது நிறுத்தப் படுகிறது என்று பொருள். கடந்த காலம் என்ன சொல்கிறது?
உங்களுடைய தளர்வுற்ற, ஏழ்மையுற்ற, தாழக் குனிந்து விடுதலை வேண்டும் என்று கெஞ்சுகிற மக்களை – உங்கள் கடலலைகள் உமிழ்ந்து கொட்டி துயருற்று பயனற்றதென கழிவு செய்த மக்களை – உறைவிடம் ஏதுமற்று, சூறாவளியினால் அலைக்க ழிக்கப்படுகிற அந்த மக்களை என்னிடம் அனுப்புங்கள் என நியூயார்க் துறைமுக வாயிலில் தீபத்தைக் கையில் ஏந்திய சுதந்திர தேவியின் சிலைக்கு அடியில் எழுதப்பட்ட வாசகங்கள் இவை. அந்த மக்கள் வந்தார்கள். அமெரிக்க வரலாறு சொல்கிறது வந்தவர்கள் அப்படியே வாழ்ந்தார்கள் என்று ஃபெலிக்ஸ் க்ரின் தன்னுடைய எதிரி என்ற புத்தகத்தில் குறிப்பிடுவது போல், அமெரிக்காவின் புதிய உலகக் கனவில் துவக்கத்திலிருந்தே கேடு விளைவிக்கும் ஊனம் இருந்தது – மனிதர் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் மீது கட்டப்படும் எந்தச் சமூகமும் ஒரு அடிமைச் சமூகமாக இருக்க முடியாது;
ஆனால், அமெரிக்கா அப்படித்தான் ஆனது; அந்த மண்ணில் வாழ்ந்த பூர்வீக குடிகளான இந்திய மக்களை (செவ்விந்தியர்கள் என்று ஹாலிவுட் படங்கள் சித்தரித்தன) ஈவிரக்கமின்றி படுகொலை செய்ததை மன்னித்துவிட முடியுமா? உற்பத்திச் சாதனங் களை தனியார் கையில் கொடுத்துவிட்டு மனித சமத்துவம் உருவாக்க முடியுமா? பகட்டான வார்த்தைகளில் வெளியிடப்படும் உன்னத லட்சியத்திற்கும், செயலில் வெளிப்படும் யதார்த்த நிலைக்கும் உள்ள இந்த முரண்பாடுகள் சொல்லொணா விளைவுகளைக் கொண்டு வரும் என்று எச்சரிக்கிறார். ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பு நிற அடிமைகள், அங்கேயே உள்ள இந்திய இன மக்கள், சுதந்திர தேவி அழைத்த முறையில் வந்து குடியேறிய மக்கள் – இவர்களின் உழைப்பு கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டது. நிலம் வேண்டி, தங்கம் தேடி அமெரிக்காவில் மேற்கு நோக்கி நகர்ந்த ஐரோப்பி யர்கள் 10 லட்சம் இந்தியர்களில், கிட்டத்தட்ட 7 1/2 லட்சம் பேரைக் கொன்று குவித்துவிட்டுத்தான் நிலத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொண்டார்கள். டிசம்பர் 28, 1870 ல் வூண்டட் நீ (Wonded Knee) என்னுமிடத்தில் அரசுப் படைகளுக்கும், இந்தியர்களுக்கும் நடந்த மோதலின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பற்றி டீ ப்ரௌன் (Dee Brown) என்பவர் My Heart at Wounded Knee என்ற புத்தகத்தில் எழுதியதை குறிப்பிடுவது மறந்து போன அமெரிக்க வரலாற்றினை நினைவுக்குக் கொண்டு வரும். அந்த வெறித்தனம் முடிந்த பொழுது பிக்ஃபூட் (இந்தியர்களின் ஒரு குழுத் தலைவர்) மற்றும் அவர் குழுவில் பாதிக்கும் மேல் இறந்து போனார்கள். பலர் படுகாயமுற்றனர்; தெரிந்த அளவில் 153 பேர் இறந்து போனார்கள். காயமுற்ற பலரும் ஊர்ந்து போனார்கள், கடைசியில் அவர்களும் மாண்டனர்.
ஒரு கணிப்பு கொடுத்த தகவலின் படி, மொத்தம் 350 பேரில் ஆண், பெண், குழந்தைகள் உட்பட, 300 பேர் கொல்லப் பட்டனர். ராணுவத்தினர் 25 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காய முற்றனர்; அதுவும் அவர்களின் துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடித்த உலோகத் துண்டுகள் மூலமாகத்தான் இந்த நிகழ்வுக ளெல்லாம் அனை வரையும் சமமாகப் பாவிக்கும் அமெரிக்க அரசியல் சட்டம் நிறை வேற்றிய பிறகு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரலாற்றாசிரியன் ஆராய்கின்ற கடந்த காலம் அழிந்து போன கடந்த காலம் அல்ல. ஆனால், ஒரு அர்த்தத்தில் நிகழ்காலத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கடந்த காலம் அது என இ.எச்.கார் தன்னுடைய வரலாறு என்றால் என்ன? புத்தகத்தில் குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்வோம். அந்த அடித்தளத்தில் கட்டப்பட்டது தான் இன்றைய அமெரிக்கா.
ஆக்கிரமிப்பு எல்லை விரிவடைகிறது
பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் வளர்ந்தது. 1898 ல் ஸ்பெயின் பிடியில் இருந்த பிலிப்பைன்ஸ், ப்யூர்டோ-ரிகோவினை அமெரிக்கா கைப்பற்றியது. ஃபெலிக்ஸ் க்ரீன் கேட்கிறார்: ஹவாய் மற்றும் ப்யூர்டோரி கோவினைக் கைப்பற்ற அமெரிக்காவிற்கு கடவுள் கொடுத்த அதிகாரம் ஏதேனும் உண்டா என்று அமெரிக்க மக்கள் கேட்ட துண்டா? அந்த மக்களிடம் இது பற்றி விவாதித்ததுண்டா? இரண் டாம் உலகப் போருக்கு முன்பே பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, கியூபா, நிகரகுவா, பனாமா, ஹைதி, கொலம்பியா, பெரு, டொமினிகன் குடியரசு, கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ் மற்றும் கரீபியன் பகுதியில் உள்ள நாடுகளில் அமெரிக்க ராணுவம் அத்துமீறி நுழைந்ததை அமெரிக்க மக்களின் மனச்சாட்சி ஏற்றுக் கொள்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு பதில் ஏதும் கிடைக்க வில்லை. 1954 ல் 72 சதம் வாக்குகளைப் பெற்று ஜாக்கோபா அரபென்ஸ் கவுதமாலாவின் குடியரசுத் தலைவரானார்;
நிலச் சீர்திருத்தம் கொண்டு வந்தார், அன்றைக்கு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த டல்லசின் குடும்பம் பங்கு கொண்ட ஒரு நிறுவனம் பறிக்கப்பட்டது. நஷ்ட ஈடு போதாது என்று சொல்லி அதற்காக ராணுவ தளபதி காஸ்டில்லோ அராமாஸ் என்பவனைத் தூண்டி அண்டை நாடான ஹோண்டுராஸிலிருந்து படையெடுத்து, அரபென்ஸ் அரசைக் கவிழ்த்த வரலாறு அதிகமாகப் பேசப்படாத ஒன்று. ராணுவ ஆக்கிரமிப்பு முடிந்தவுடன் டல்லஸ் சொன்னது; அமெரிக்க நாடுகளின் சிறப்பான பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. சிலியில் இதே முறையில் அலெண்டே அரசும் கவிழ்க்கப்பட்டதும் ஒரு வரலாறு. அமெரிக்கா நடத்திய வியட்நாம் யுத்தம் எளிதில் மறந்து விடக் கூடிய வரலாற்று நிகழ்வா? இப்போது ஈராக். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அண்மையில், ஈராக்கில் மீண்டும் ஒரு வியட் நாமை சந்திக்க நேரும் என்று அமெரிக்க அரசை எச்சரித்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு வரலாற்றை எழுதினால் புத்தகத்தின் பக்கங்கள் முடிவு பெறாமல் போய்க்கொண்டே இருக்கும். ஆனால், புஷ் மற்றும் ஏகாதிபத்தியத்திய வாதிகள் அந்த வரலாறு நினைவு படுத்தப்படுவதை விரும்பவில்லை.
நாணயமான வரலாறு மதிப்பீடு
வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கக் கூடும். அதை மறந்தால் சமூகம் முன்னேறுவதற்கான திறனை முற்றிலும் இழந்துவிடும். திருத்தும் பேராசிரியர்கள் கடந்த காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில் ஆட்சி செய்த கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி ஏன் விமர்சிப்பதில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு கொடுங்கோன்மை அமைப்பிலிருந்து மீண்டும் மற்றொன்றின் கீழ் வாழ மக்கள் விரும்புவதில்லை. ஜனநாயகம், பாராளுமன்ற அமைப்பு முறை, நிர்வாக அமைப்பு முறை இவைகளையெல்லாம் நாங்கள் தானே கொடுத்தோம் (நம் நாட்டின் பிரதமர் உட்பட சிலர் நம்புவது போல்) என்று பறைசாற்றும் மேலை நாட்டு காலனி ஆதிக்க ஆதரவாளர்கள் அந்த நாடுகளின் பாரம் பரியத்தையும், பண்பாட்டையும் முழுமையாகப் புரிந்து கொள்ளா தவர்களாகத்தான் உள்ளனர். அமர்த்தியா சென் போன்றவர்க ளெல்லாம் இந்த மண்ணுக்கு சுதந்திரமான சிந்தனையும், விவாதங் களும், கருத்துப் பரிமாற்றங்களும் மேற்கொண்ட பாரம்பரியம் உண்டு என்று பல ஆய்வுகளில் சுட்டிக் காட்டி யுள்ளனர். மக்கள் பங்கு கொள்ளும் முறைகளைக் கொண்ட கிராமப்புற அமைப்புகள் இங்கே இருந்ததுண்டு.
ஜனநாயகப் பண்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் அசைவுகள் என்று குறுக்கிவிடும் பேதமை யினை நாம் சந்திக்கிறோம். அமிதாவ் கோஷ் போன்ற வரலாற்றா சிரியர்கள் சுதந்திரச் சந்தை என்று இன்று அதிகமாகப் பேசப்படும் வணிக முறை கூட இந்தியாவிற்குப் புதிதல்ல என்றும், பிரிட்டிஷ் இங்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகள் கடல் கடந்த வணிகம் ஆப்பிரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கும் நம்நாட்டில் செயல்பட்ட பல்வேறு பேரரசுகளுக்கிடையே இருந்திருக்கிறது என்றும் விவரிக்கிறார்கள். ஆனால், காலனி ஆதிக்கவாதிகளும், ஏகாதிபத்தியமும் புதிய வரலாறு எழுத முயற்சிக்கும் போது ஒரு விஷயத்தை நமக்குச் சொல்ல விரும்புகிறார்கள். அதாவது அவர்களது உயர்ந்த நாகரிகம் மற்ற நாகரிகங்களோடு மோதுவதைத் தவிர்க்க முடியாது. ரட்யார்ட் கிப்ளிங்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதுவதுபோல், கிழக்கு கிழக்கு தான், மேற்கு மேற்கு தான்; இரண்டும் என்றும் சந்திக்க முடியாது என்ற நோக்கத்தோடு அவர்கள் செயல்படுகிறார்கள். பல வகையான பண்பாட்டு நுழைவினைத் தடுத்து, அந்தந்தப் பண்பாட்டினைக் கெட்டிப்படுத்தி நிறுத்துவது (இரண்டும் சந்திக்க முடியாது) ஏகாதிபத்திற்கு தேவைப்படுகிறது. அப்படிச் சந்திக்க முடியாது என்று சொல்வது காலனி ஆதிக்கத்தின் அவலச் சுவை கொண்ட பொய் என்கிறார். பிரான்ஜ் பெனான் (Franz Fanon) இக்கருத்தின் செயல்வடிவம் தான் இஸ்லாமுக்கு எதிராக புஷ் தொடங்கியிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு; யுத்தம், அதற்குப் பதிலடி கொடுப்பதாக எழுந்திருக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளும், அக்கருத்தின் மோசமான விளைவுகள்தான். இந்த ஏகாதிபத்திய அணுகுமுறை உடைத்தெறியப்பட வேண்டும். அது உண்மையான வரலாற்றுக்குப் பொய்யான முகம் கொடுத்து வண்ண வண்ண கற்பனைக் கதைகள் உலா வருவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.
கடந்த காலத்தைப் பற்றி நாணயமான மதிப்பீடு செய்ய வேண்டும். அமெரிக்க மக்களின் வரலாறு எழுதிய ஹோவர்ட் ஜின் (Howard Zinn) குறிப்பிடுகிறார் வரலாறு சாதாரண மக்களால் உருவாக்கப்படுகிறது. அவர்களில் பலரின் முகங்கள் யாருக்கும் தெரியாது; பலர் சமூகத்தின் கடைக் கோடியில் உள்ளவர்கள்; பலர் பழிதூற்றலுக்கு உள்ளானவர்கள். ஆனால், உண்மையினைப் பேச உரம் பெற்றவர்கள். நமது நாட்டு வரலாற்றைத் திருத்தி எழுதும் முயற்சியினை தேசிய ஜனநாயக முன்னணி அரசு (பா.ஜ.க.வின் வழிகாட்டுதலால்) மேற்கொண்டது நமக்குத் தெரியும். உலக வரலாற்றை மாற்ற ஏகாதிபத்தியம் எடுக்கும் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகத்தான் அது இருந்தது. கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் மக்களின் நன்மைக்கே என்ற பிரச்சாரத்தை ஏகாதிபத்தியம் துவக்கியிருக்கும் போது, உண்மை யினைப் பேச உரம் பெற்றவர்களை பேச வைக்க வேண்டும்.
ஆதாரங்கள்
- Dr. Priyam vada Gopal – The Guardian 28.6.20006
- George Monbiot – The Hindu 28.12.2005
- Mike Morqusee – The Hindu 6.8.2006
- Felix Greene – “The Enemy”
- Howard Zinn – “Voices of the Peoples’s history of United States”
- Dee Brown – “Bury my Heart at Wounded Knee”