மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தூணிலும் இருப்பாரா?


ம. சிங்காரவேலர்

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்  என்று பிரகலாதன் சரித்திரமொன்றைக் கட்டி விட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின் படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை தூசும், தும்புமே. இதனைக் கடவுளென்பதில் அர்த்தமில்லை. ஆதலின், கண்டவரையில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு நியாயமுமில்லை. வேதாந்திகள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும் பிரபஞ்சத்தில் காணோம். அங்கு மிங்கும் ஓடுங்கிரணங்களும் (Radiation), தூசும் (Dust), பரமாணுக்களும் (Electrons and Protons) இருப்பதாக யூகையேயொழிய நிலைத் திருக்கும் சத்தாகிலும், அறியும் சித்தாகிலும், உணர்வாகிய ஆனந்தமும், மனிதனுடைய எண்ணத்தின் அதாவது வார்த்தை அல்லது சொற்கள் அன்னியில் வேறு தனிது இருப்பதாக யூகிக்க இடமே இல்லை. உலகில் பரவியுள்ள பற்பல தத்துவஞானங்களெனக் கூறும் (Philosophies) வார்த்தைகள் யாவும் கற்பனைகளாக முடிகின்றபடியால், எதையும் அனுபவமாகப் பார்க்க முடியவில்லை.

அந்தந்த தத்துவப் பொருள்களெனப்படும் சொற்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டே இருக்கின்றன. கடவுளைப் பற்றிப் பேசும் ஞானிகளும், பக்தர்களும் யானையைக் கண்ட குருடர் களைப் போல் பேசுகின்றார்கள். யானையைக் கண்ட குருடர்களா கிலும் ஏதோ ஒரு மிருகத்தைக் கண்டு தங்கள் அனுபவத்திற்குத் தக்கவாறு சொல்லுகின்றார்கள். ஆனால், ஞானிகளோவெனில், யாதொன்றையும் பார்க்காமலேயே வாய்க்கு வந்தவாறு சொற்களைக் கட்டி விடுகிறார்கள். கடவுள், ஆன்மா, பிரம்மன், சிவன், விஷ்ணு முதலிய முப்பத்து முக்கோடி தெய்வங்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும், கின்னரர், கிம்புருடர், அஷ்டபாலர் முதலிய உபதெய்வங்களும், இருளவன், வீரன், சுரியன், காட்டேரி, பெத்தண்ணன், மாரி, முனியன், சங்கிலி, பாவாடை, குழி இரிசி முதலிய பேய், பிசாசுகளும், நாம் தொட்டிலில் பழகிய சில வார்த்தைகளைக் கொண்டு வயது வந்த பிறகு கட்டிய கற்பனை வார்த்தைகளேயாகும்.  (கடவுளும், பிரபஞ்சமும் என்ற நூலில்)



%d bloggers like this: