மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வனச்சட்டம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை


வரலாற்றில், கடவுள் நம்பிக்கையை ஆதிக்க சக்திகள் பயன்படுத்தி உருவாக்கிய தடங்கல்கள் காரணமாகவும், பின்னர் நம்மை அடிமைப்படுத்திய காலனிய வாதிகளின் சுரண்டல் வெறியாலும், அதற்கும் பின்னர் பெரு முதலாளிகளின் கையில் அரசியல் அதிகாரம் சிக்கிவிட்டதாலும், இந்திய மக்களின் ஒரு பகுதியினர் பழைய குடி வாழ்வைத் தாண்டி நடைபோட இயலாமல் போனது. அவர்கள் காடுகளைப் பேணி வாழ்ந்தனர். காடுகள் அவர்களைப் பேணியது. காடுகள் அழிவதற்கு அவர்கள் தான் காரணம் என்று, இன்று ஆளுவோர் பிதற்றுகின்றனர்.

இன்று இந்தியாவில் நம்மில் ஒருசிறு பகுதியினர் பழங்குடி வாழ்விலும், பெரும்பகுதியினர் நவீன வாழ்வு முறையிலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. வரலாற்றோடு நடைபோடவிடாமல் தடுக்கப்பட்ட அம்மக்களை அந்நியமாக்கியும், ஆராய்ச்சிப் பொருளாகப் பார்க்கவும் நமது நாட்டு மேல்தட்டு தர்ம பிரபுக்கள் பிரச்சாரக் கருவிகள் மூலம் சாதனைகள் புரிந்து வருகின்றனர். அம்மக்களை மிருக ராசிகளில் ஒன்றாகப் பார்த்துச் செல்லப் பிராணிகள்போல் காக்க கடும் முயற்சிகள் செய்கின்றனர்.

அவர்கள் நமது ரத்தத்தின் ரத்தங்கள். செம்மொழியாம் தமிழ்மொழி அவர்கள் உதிரத்திலிருந்து உதித்தது என்பதையே நமது அறிவுலகம் ஏற்கத் தயாரில்லை. நல்லவேளையாக இந்திய அரசி யலில் இடது சாரிகளின் தீர்மானகரமான பாத்திரம் இப்பொழுது உருவானதால் பழங்குடி மக்களின் பிறப்புரிமைகளைப் பாதுகாக்கும் பிரச்சனை, ஏடுகளிலும், ஆளும் மன்றங்களிலும் பேசும் பொரு ளானது, சட்டங் கள் இல்லாமல் அந்த உரிமைகளை அவர்கள் பெற முடியாது என்பதும் தெளிவானது. மக்கள் நலச்சட்டங்களைச் செயல்பட இயலாமல் செய்யும் ஷரத்துக்களை உருவாக்கும் சூழ்ச்சி கள் கற்ற ஆளும் கூட்டம், பெயரளவிற்கு வனச்சட்டம் கொண்டுவர அரும் பாடுபட்டனர். மார்க்சிஸ்ட்டுகளும், இதர இடதுசாரிகளும் அதனை எதிர்த்து நின்றனர். இதற்காக, மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம், சர்ச்சைகள் ஒரு தனிக்காவியமாகும். ஆனால், நாட்டு மக்கள் இதனை அறிய வாய்ப்பில்லை. பழங்குடி மக்களைத் தங்களது வாக்குவங்கிகளுக்குப் பயன்படாத ஜீவன்கள் என்பதால்,பூர்சுவா கட்சிகள் எடுத்த நிலைபாடுகளையும் நாட்டு மக்கள் அறியார்.

இடதுசாரிகளின் குரல் நாடாளுமன்றத்திலே ஒலிப்பதால்தான் இன்று ஓரளவு பாதுகாப்பை நல்கும் வனச்சட்டம் வந்துள்ளது. இந்தச் சட்டம் பற்றிய சில விபரங்களை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும், உடையையும் தவிரத் தங்களுக் குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளி லிருந்தே பெற்றனர். இது 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை. காடுகள் முழுவதும் பழங்குடிச் சமூகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தனி நபர் களுக்கு உடமை என்றில்லாவிட்டாலும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர். மன்னர்கள் ஆண்ட காலத்திலும் வரிவசூல் செய்தார்களே தவிர, அம்மக்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கவில்லை. காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாகவும், நீர்நிலைகளும் உருவாக்கப்பட்டன. குடிகளாக வாழ்ந்த மக்கள் சேர்ந்து வாழும் ஊர்களாக வாழும் நிலை ஏற்பட்டது. புதிய ஊர்களும் உருவாக்கப்பட்டன. “காடுகொன்று நாடாக்கி” எனப் பட்டினப்பாலை உட்பட ஏராள மான இலக்கியங்களில் ஆதாரங்கள் உள்ளன.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் காடுகள் அழிப்பு

1805 இல் பிரிட்டிஷாரின் கண் வனத்தின் மீதுபட்டது. 1846 இல் முதல் வனச்சட்டம் கொண்டு வரப்பட்டது. பழங்குடி மக்கள் காட்டைத் தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசு, காட்டை வியாபார ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது. 1854 ஆம் ஆண்டு வனக்கொள்கை அதை வெளிப் படுத்தியது. சென்னை ராஜதானியில் 1856 இல் வன இலாகா என்றத் துறை அமைக்கப்பட்டது. இத்துறை மூலம் 1865 இல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேற்படிச் சட்டம் மற்றும் ஆணைகள் மூலம் அனைத்து வனப் பகுதிகளும் “வனப்பாதுகாப்பு” என்ற பெயரில் ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால், ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டுவரப்பட்டது. இத்தடை பழங்குடி மக்களின் வாழ் வையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது.

“இயற்கையை ஒருமுறை கெடுத்தால், அது பதிலுக்கு பலமுறை நம்மை கெடுத்துவிடும்” என ஏங்கல்ஸ் கூறுகிறார். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் வளர்ச்சி, கொள்ளை லாபம் என்ற நோக்கில் காட்டைப்பயன்படுத்தத் துவங் கினர். இரயில் பாதைகள் அமைக்கவும், கப்பல்கள் கட்டுவதற்கும், பிரம்மாண்ட மான சொகுசு மாளிகைகளை அமைப்பதற்கும், இந்தியக் காடுகளில் இருந்த வானுயர்ந்த மரங்களை வெட்டியது மட்டுமல்லாமல், மர ஏற்றுமதிக்காகவும் காடுகளை அழித்தது. இதே காலத்தில், நிலங்களை உணவு தானிய உற்பத்திக்கு மட்டுமே பழங்குடி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் பணப்பயிர் உற்பத் திக்கு மாற்றியது பிரிட்டிஷ் காலனிய அரசு. பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஏராளமான காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். எந்த அளவுக்கு இதில் அரசு ஆர்வம் காட்டியது என்பதற்கு, 1885 இல் ஏற்காடு மலைப் பகுதியில் மட்டும், 10, 789 ஏக்கர் நிலப்பரப்பில் 331 காப்பித் தோட்டங்கள் இருந்தன என்றால், நாடு முழுவதும் எவ்வளவு இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்தகைய தோட்டங்களில் அடிமைகளாகவும், பின்னர் கூலிக் காரர்களாகவும் ஆதிவாசிகள் ஆக்கப்பட்டனர்.

காட்டையே தங்களது தாய் வீடாகவும், கடவுளாகவும் பாவித்த மக்கள், காடுகள் தங்கள் கண் முன்னே வெட்டி அழிக்கப்பட்டதைக் கண்டு கண்ணீர்விட்டனர். சட்டமும், நிர்வாக ஏற்பாடுகளும், வனத்துறை அதிகாரிகளும் அம்மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. வனத்தைப் பாதுகாப்பதற்கு அம்மக்கள் அறிந்திருந்த முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது இந்தப் புதிய அணுகு முறை. விஞ்ஞானப் பூர்வமாகக் காட்டை நிர்வகிக்கிறோம் என்ற பெயரில் வனத்திலிருந்து மக்களை முற்றிலும் அந்நியப்படுத்தும் செயலில் வனத்துறை ஈடுபடுத்தப்பட்டது. 1882 ஆம் ஆண்டு மதறாஸ் வன ஆணையின் படி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை அரசு அறிவித்தது. இந்த ஆணைப்படி 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 11,72,314 ஏக்கர் அதாவது 1672 சதுர மைல் பரப்பளவுள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக ஆக்கப்பட்டது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அனுமதி பெற்றே மக்கள் பயன்படுத்த வேண்டும். அதிலும், வரையறுக்கப்பட்ட, அதாவது விறகுகள், விவசாயத்திற்குத் தேவையான மரக்கட்டைகள், மூங்கில்கள், மூலிகைகள் போன்ற வற்றை சிறிய அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. மீறினால் ரூபாய் 500 அபராதம் அல்லது ஆறுமாதம் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டது.

இதேகாலத்தில் பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஆதிவாசிகளிடமிருந்து நிலங்களை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி எஸ்டேட்டுகளை உருவாக்கினர். 1860 இல் ஏற்காடு மலையில் ஒரு ஏக்கர் நிலத்தை எட்டு அணாவுக்கு வாங்கியுள்ளனர். இந்த விபரம் 1869 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளது. மற்ற பல மலைகளில் நல்ல கம்பளிக்கும், சீமைச்சாரயத்திற்கும் நிலங்கள் உரிமை மாற்றம் செய்யப்பட்டன. அப்போது வனத்துறை மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பிலே இருந்தது. இதைப்பயன்படுத்தி பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மக்களிடமிருந்து நிலங்களை அபகரித்து தனதாக்கிக் கொண்டுள்ளனர். ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் இப்படி மோசடி செய்ததைத் தொடர்ந்து மற்றவர்களும் மலைகளில் குடியேறி நிலங்களை வளைக்கவும், வாங்கவும் தொடங்கினர். இப்படித்தான் பழங்குடி மக்களிடமிருந்து காடுகள் பறிபோனதின் ஆரம்ப வரலாறு. இவ்வளவுக்குப் பிறகும் பிரிட்டிஷார் நமது நாட்டை விட்டுச் செல்லும் போது, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 40 சதம் காடுகளாக இருந்தது.

பழங்குடி மக்களின் எழுச்சிகள்

நாட்டின் தலை சிறந்த மானுடவியலாளர்களில் ஒருவரான அமரர் திரு.கேஎஸ்.சிங் அவர்கள் ஆதிவாசிகளுக்கும், நிலத்திற்குமுள்ள உறவு குறித்து இவ்வாறு கூறுகிறார். “பழங்குடி மக்களைப் பொறுத்த வரையிலும் நிலம் என்பது ஒரு ஏக்கர் என்ற கணக்கீட்டிற்குட்பட்ட ஒரு பொருளல்ல. மாறாக, அது அவர்களின் சமூகப் பண்பாட்டு மரபின் ஒரு பகுதி. அவர்களுடைய மூதாதையரின் கல்லறை. அவர்கள் தங்கள் முன்னோர்களோடு கொண்டுள்ள பிணைப்பிற்கு அடையாளம்”. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு, வனத்தோடு ஆதிவாசிகளுக்குள்ள இத்தகைய பண்புகளைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அவர்கள் வனத்தைச் ‘சரக்காகவே’ பார்த்தனர்.

ஆதிவாசிகள் தங்களின் நில உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், பிரிட்ஷாரின் ஏஜெண்டுகளாக இருந்து வரிவசூ லில் ஈடுபட்ட ஜமீன்தார், ஜாகீர்தார்களின் கொடுமைகளுக்கு எதிரா கவும் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். செங்கொடி இயக்கத் தலைவர்களின் தலைமையில் மகாராஷ்ட்ராவில் ‘வார்லிகள்’ எழுச்சி, திரிபுராவில் மன்னர்களை எதிர்த்து எழுச்சி, பீகாரில் சந்தால் எழுச்சி, தமிழகத்தில் கொல்லிமலையை ஜமீன்தார் பிடியிலிருந்து விடுவிக்கும் போராட்டம், வனத்துறை அதிகாரிகளின் அத்து மீறல்களை எதிர்த்தும், வரிக்கொடுமைக் கெதிராகவும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் ஓரளவிற்காவது காட்டின் மீதான தங்களது பிடிமானத்தை ஆதிவாசிகள் தக்க வைத்துக் கொண்டனர். பழங்குடி மக்களின் ஒற்றுமையும், வீரம் செறிந்த போராட்டமும் செங்கொடி இயக்கத் தலைவர்களின் தன்னலமற்ற உதவியும் அம்மக்களைப் பாதுகாத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

டாக்டர். அம்பேத்கரின் தொலைநோக்கு

நாடு விடுதலை பெற்ற பிறகு மாமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் பழங்குடி மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுத்தது. இவை ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணைப் பகுதிகள் என அழைக்கப்ப டுகின்றன. இவ்வட்டவணையிலுள்ள பிரிவுகள் பழங்குடி மக்கள் வாழுமிடங்களை ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணையின் கீழ் கொணர்ந்து அவர்களின் நலன்களைப் பாதுகாத்தல், மாநில ஆளுநரின் கடமைகள் குறித்துத் தெளிவான வரையறைகளை முன்வைக்கின்றன. அதன்படி,

  • பழங்குடிப் பகுதிகளில் பழங்குடி அல்லாதோருக்கு நிலமாற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும்.
  • பழங்குடிகளுக்கு முறையாக நிலம் வழங்கப்படுதல் வேண்டும்.
  • பழங்குடி மக்களுக்கு கடன் அளிப்பவர்களுக்கான வழிமுறை களைக் கொணர்தல் வேண்டும்.
  • மேற்க்கண்டவற்றை நடைமுறைப்படுத்த தேவைப்பட்டால் சட்டங்கள் இயற்றவோ அல்லது சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குடியரசுத் தலைவரி ஒப்புதலுடன் இவை நடைமுறைக்கு வரும். மேற்கண்ட விதிகளை அமல்படுத்த, நெறிப்படுத்த மாநிலப் பழங்குடி ஆலோசனைக் குழுக்கள் இருக்கும்பட்சத்தில் அவை கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
  • பழங்குடிகள் வாழும் பகுதிகளில் சிறப்பு நிர்வாகப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
  • பழங்குடிகளின் நலனுக்கென மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் இடங்களை ஒதுக்க வேண்டும்.
  • தனிப்பட்ட நியமனங்களை வழங்க வேண்டும்.
  • பழங்குடி மக்கள் வளர்ச்சிக்காக சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
  • தேவைப்பட்டால் பழங்குடி மக்கள் நலனை மத்தியஅரசின் நேரடிக் கண்காணிப்பில் கொணரலாம்.

இந்த அரசியல் சாசனப் பிரிவுகளே இதுகாறும் பழங்குடி மக்களின் நில உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும், பாதுகாப்புக்கும் ஆதாரமாக விளங்குகின்றன.

பழங்குடி மக்கள் குறித்த இந்திய அரசின் கொள்கை

1952 இல் ஜவஹர் லால் நேருவின் பழங்குடிகள் குறித்த பஞ்சசீலக் கொள்கை இந்திய அரசு பழங்குடிகளின்பால் எத்தகைய அணுகு முறைகளைக் கடைபிடிக்கப் போகிறது என்பதை வெளியிட்டது. அவை,

  1. பழங்குடியினர் தங்களது சொந்தப் புத்திக் கூர்மையைப் பயன்படுத்தி மேம்பாடடைவதற்கு அனுமதிக்க வேண்டும்.
  2. நிலம் மற்றும் வனத்தில் பழங்குடியினருக்குரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
  3. அதிக அளவில் வெளியாரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்து பழங்குடியினர் தாங்களே நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலும் வகையில் பழங்குடியினர் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
  4. பழங்குடியினர் வகுப்பின் சமூக மற்றும் கலாச்சார அமைப்பு களுக்குப் பாதகமின்றி அவர்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  5. பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான குறியீடு அவர்களுடைய வாழ்க்கைத் தரமாகத்தான் இருக்க வேண்டுமேயொழிய செலவிடப்பட்டத் தொகையாக இருக்கக் கூடாது.

பழங்குடி மக்களின் பிரச்சனைகளைப் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் கூட, மேற்குறிப்பிட்ட நேருவின் கொள்கைப்படி ஆளுகின்ற வர்களோ, அதிகார வர்க்கமோ சிறிய அளவில் கூட நடந்து கொள்ளவில்லை என்பதை அறிய முடியும். மாறாக “படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்” என்ற பழமொழிக்கொப்ப எதிர் மறையான நடவடிக்கைகளையே மேற்கொண்டனர்.

இந்திய ஆட்சியாளர்களும் வனத்திலிருந்து மக்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தும் விதத்திலேயே சட்டங்களை இயற்றினர். 1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வனச்சட் டத்தை வைத்துக் கொண்டே 1972 ஆம் ஆண்டு கானுயிர் பாதுகாப்புச் சட்டம், 1976 ஆம் ஆண்டு வன (திருத்தச்) சட்டம், வனப்பாது காப்புச் சட்டம் 1980, வனப்பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் 1988 போன்ற சட்டங்கள் மூலம் மக்களை வனத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடர்ந்தது. வனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த மக்களை 1988 வனப்பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் ‘ஆக்கிரமிப் பாளர்கள்’ என முத்திரைக் குத்தியது. இதனால், அரசுக்கும், மக்க ளுக்குமான முரண்பாடுகளும், மோதல்களும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

எனவே தான், இந்த மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து அம்மக்களை அமைதியாக வாழவிட வனச்சட்டத்தை மாற்றியமைப்பது அவசியம் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக் கப்பட்டது. வனத்தின் மீதான அம்மக்களின் பாரம்பரிய உரிமைகள் சட்ட ரீதியான உரிமைகளாக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட் டது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிவாசிகள் குறித்த பிரகடனம் இவ்வாறு குறிப்பிடுகிறது. “ஆதிவாசி நிலங்களை மீட்பது, சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைப்பது, மோசடி நில மாற்றத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது போன்றவை நமது அடிப்படைக் கோரிக்கைகளாகும்… ஆதிவாசிகள் வனங்களில் வாழும் உரிமையை மீட்பது, வனப் பொருட்களைச் சந்தைப்படுத்தக் கூட்டுறவு விற்பனை நிலையங்களை அரசின் உதவியுடன் நிறுவுதல், தாவரம் மற்றும் மூலிகைகளைப் பற்றி ஆதிவாசிகளின் பாரம்பரிய அறிவுச் சொத்தைப் பேணுதல் ஆகியவை முக்கிய விசயங்கள்” எனக்குறிப்பிடுகிறது. இந்தக் கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப நாடு முழுவதுமுள்ள பழங்குடி மக்களை ஒன்று திரட்டவும், பாதுகாக்கவும், மார்க்சிஸ்ட் கட்சி முயற்சிகளை மேற்க்கொண்டு அகில இந்திய அளவில் ஒரு சிறப்பு மாநாட்டையும் நடத்தியது.

உச்சநீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு

உச்சநீதி மன்ற வழக்கு ரிட் மனு எண் 202/95 இடைக்கால மனு எண் 703 இன் மீது 23.11.2001 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பழங்குடி மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியது. நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டப்படி, தனி நபரின் பெயரில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிலமும் அரசுக்குச் சொந்தமாகும். இதைப்பயன்படுத்தித்தான் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டம் எனும் ஆயுதத்தின் மூலம் அரசும், அதிகாரிகளும் பழங்குடி மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெகுசுலபமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மலையுடன் மக்களுக்குள்ள தாய் – மகள் உறவைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், சட்டம் – விதி என்ற அடிப்படையை மட்டும் கணக்கில் கொண்டு பிரச்சனைகள் அணுகப்பட்டு வந்ததற்கு உச்ச நிதிமன்றத் தீர்ப்பே சாட்சி. அதாவது, “30.9.2002 க்குள் வன நிலங் களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” என்பது. இந்தத் தீர்ப்பு ஒரு மனிதனை ஒரே நேரத்தில் ஆயிரம் தேள்கள் கொட்டினால் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமோ அத்தகைய அதிர்ச்சியலைகளை நாடு முழுவதுமுள்ள பழங்குடி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அநியாயமான உத்தரவுக் கெதிராக இடதுசாரிகள் குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சி மக்களை அணிதிரட்டி யது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுகிற மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்த உத்தரவை அமல்படுத்தமாட் டோமென்றும், தீர்ப்புத் திருத்தப்பட வேண்டும் என்றும் கோரியது.

ஆதிவாசிகளுக்கு எதிரான பி.ஜே.பி அரசின் நடவடிக்கை

ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பி.ஜே.பி. அரசு, நிராயுதபாணியான பழங்குடி மக்கள் மீது உச்ச நீதி மன்ற உத்தரவு எனும் பலமிக்க ஆயுதத்தை ஏந்தி, களத்தில் இறங்குவதற்கான உத்தரவுகளை 3.5.2002 அன்று அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும், வனத்துறைத் தலைவர்களுக்கும் அனுப்பியது. அப்போது, தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்த ஏழைகளின் ‘சகோதரி’ ஜெயலலிதா மேற்படி மத்திய அரசின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு அமல்படுத்தத் துரிதமாக உத்தரவிட்டார். மத்திய அரசின் உத்தரவை தமிழகத்தில் செயல்படுத்த ஒரு கமிட்டியையும், செய்து முடிப்பதற்கான காலவரையறையையும் தீர்மானித்து 17.6.2002 அன்று தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் ஒரு உத்தரவை வெளியிட்டார்.

இந்த நில வெளியேற்ற உத்தரவுக்கெதிராக தமிழகத்தில் தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தால் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடத்தப் பட்டன. நிலவெளியேற்றத்தை எதிர்த்துப் போராடிய தலைவர்கள் மீதும், மக்கள் மீதும் வனத்துறையினரால் போடப்பட்ட பொய் வழக்குகள் இன்றுவரை நடைபெற்று வருகின்றன. ஆனால், ஒரு ஆதிவாசியோ அல்லது விவசாயிகளோ தங்கள் நிலத்திலிருந்தும் – குடியிருப்புகளிலிருந்தும் அப்புறப்படுத்தப்படாமல் பாதுகாத்தது செங்கொடி இயக்கம் என்றால் மிகையல்ல. இதேபோல் நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.

புதிய சட்டத்தை உருவாக்குவதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான முயற்சிகள்

இந்த நிலையில்தான் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கட்சி தோற்கடிக்கப்பட்டு, மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவுடன் தான் அரசு அமைய முடியுமென்ற அரசியல் சூழல் ஏற்பட்டது. இந்த வாய்ப்பை மக்களுக்குச் சாதகமாக பயன்படுத்த இடதுசாரித் தலைவர்கள் திட்டமிட்டனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் எந்தத் திட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அதில் ஒரு அம்சம், “பழங்குடி மக்களை காடுகளிலிருந்து வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பதும், அவர்களின் காடு களின் மீதான பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் ஒரு புதியச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதும்”. இந்தக் கோரிக்கை பழங்குடி மக்களைப் பொருத்த வரை மிக மிக முக்கிய மான கோரிக்கையாகும். இடதுசாரிக் கட்சிகளின் வற்புறுத்தலால், காடுகளிலிருந்து மக்களை வெளியேற்றும் உத்தரவு 2004 ஜூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

பழங்குடி மக்களின் (காடுகள் மீதான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2005, மத்திய அரசால் 2005 டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளு மன்றத்தில் வைக்கப்பட்டது. இந்த மசோதாவைப் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி 2005 நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நாடுமுழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதாவில் நோக்கங்களாக குறிப்பிட்டிருப்பதாவது, “காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களை யும், காடுகளையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. ஒன்றில்லாமல் மற்றொன்று உயிர் வாழவே இயலாது. காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் சுற்றுப்புற ஆதார வளங்களைப் பாதுகாப்பது குறித்து பழமையான இலக்கியங்களும், எழுத்துக்களும் சுட்டிக்காட்டி வந்துள்ளன. எனினும் காலனியாதிக்க ஆட்சியில் பொருளாதார லாபங்களுக்காக அந்த யதார்த்தமானது புறக்கணிக்கப்பட்டு வந்தது” என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளது. மேலும், “நமது நாட்டின் விடுதலைக்குப் பிறகு இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நமது உற்சாகத்தின் விளைவாக காலனியாதிக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்த சட்டங்களையே நாம் தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளோம். பழங்குடி மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்த இயற்கை வளப்பாதுகாப்பு என்ற நமது நாட்டின் வளம் மிக்க பாரம்பரியத்திலிருந்து கற்றுக் கொள்வதற்கு மாறாகக் காடுகளின் வளங்களைப் பாதுகாக்க சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளையே நாம் மேற்கொண்டு வந்தோம் என மிகச் சரியாகவே விமர்சித்துள்ளது. எனவே, பலத் தலைமுறை களாக அனைத்து விதமானக் காட்டு நிலங்களின் மீது உரிமை கொண்டிருந்த காடுகளில் வசிக்கும் பழங்குடி பிரிவினரின் காடுகளின் மீதான உரிமையை அங்கீகரித்து, அவர்கள் உயிர் வாழ்வதற்கு காட்டு நிலங்களின் மீதான நியாயமான தேவையை, காட்டினை அடிப்படையாகக் கொண்ட ஆதார வளங்களைப் பயன்படுத்துவதற்கான தேவையையும் அடிப்படையான அம்ச மாகக் கொண்டதாகவே இந்தச் சட்டம் திகழும்” என குறிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும், இந்த மசோதா பழங்குடி மக்களின் வனத்தின் மீதான முழுமையான உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் அமையவில்லை. மேலும், பாரம்பரிய வனத்தில் வாழ்ந்து வரும் மற்ற இன மக்களைப் பற்றி இம்மசோதாவில் எதுவும் குறிப் பிடப்படாமல் இருந்தது. அது மட்டுமல்லாமல், உண்மையில் பழங்குடி மக்களாக இருந்தும், பட்டியலில் சேர்க்கப்படாத காரணத்தால் பாதிக்கப்படக் கூடிய மக்கட் பகுதியினரும் இருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக 1980 அக்டோபர் 25 ஆம் தேதிக்கு முன்பாக மலையில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது பெருமளவு பழங்குடி மக்களை வெளியேற்றவே இந்தச்சட்டம் வகை செய்யும் என நாடாளுமன்றத் தில் மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எச்சரித்தது. இதன் விளைவாக, வேறு வழியின்றி காங்கிரஸ் அரசு நாடாளுமன்றக் கூட்டு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது. இக்கூட்டுக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆக்கப் பூர்வமான பங்களிப்பின் மூலம் இப்போதைய சட்டம் கொண்டு வரப்பட்டது.

புதிதாக உருவாக்கப்ட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி 2006 ஜூலை 18 ஆம் தேதி நாடுமுழுவதும் பழங்குடி மக்கள் பங்கேற்ற பெரும் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. நாடாளுமன்றத்திற்குள்ளேயும் தொடர்ந்து இந்தப் பிரச்சனையை எழுப்பியது. 2006 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நாடுமுழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் செயற்படும் பழங்குடி மக்கள் அமைப்புகளின் தலைவர்கள் தோழர். பிருந்தா காரத் தலைமையில் இந்தியப் பிரதமர் டாக்டர். மன் மோகன்சிங் அவர்களைச் சந்தித்து இந்த மசோதாவை நடைபெற விருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென வற்புறுத்தினர். நவம்பர் மாதம் 29 ஆம் தேதி மேற்படி கோரிக்கையை வற்புறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்கள் பங்கேற்ற ஒரு பெரும் பேரணியை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது.

இந்த நிர்பந்தங்களின் விளைவாக, இந்திய நாட்டில் முதன் முறையாக, ஆதிவாசிகளுக்கும், வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்களுக்கும், மிக, மிக, மிகச் சாதகமான வரலாற்றில் முத்திரை பதிக்கத்தக்கச் சட்டம் 2006 டிசம்பர் 15 ஆம் தேதி நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மீண்டும் ஓர் விடுதலைப் பெரு மகிழ்ச்சியை பழங்குடி மக்கள் பெற்றுள்ளனர். வரலாற்றில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தச் சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சாதனை

இந்தச் சட்டம், பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீ கரிக்கும்) சட்டம் 2006 என அழைக்கப்படும். இந்தச் சட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்கள் பின்வருமாறு.

  1. 2005 டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்பாக காடுகளில் வசிக்கும், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு இச் சட்டம் பொருந்தும்.
  2. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஏக்கருக்கு மிகாத அளவு நிலம் வழங்கப்படும். இந்த நிலத்தை பரம்பரையாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர விற்க அனுமதி கிடையாது. இந்த நிலம் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கூட்டாகவே பதிவு செய்யப்படும்.
  3. பழங்குடிகள் அல்லாத பரம்பரையாக வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்கள் மூன்று தலைமுறைகளாகக் காடுகளில் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். ஒரு தலைமுறை என் பது 25 ஆண்டுகள் எனக் கணக்கிடப்படும்.
  4. வனச் சிறு மகசூல்களை இலவசமாக சேகரிக்கவும், விற்கவும் உரிமை.
  5. மக்கள் தங்கள் சொந்தத் தேவைக்கு மட்டும் வியாபார நோக்கமில்லால் மரம், மூங்கில் உள்ளிட்ட வனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள உரிமை.
  6. பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த பாதைகள், நீர்நிலைகளைப் பயன்படுத்த உரிமை.
  7. மேய்ச்சலுக்கான உரிமை.
  8. சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், ஜாகீர்தாரர்களால் உரிமைகள் ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால் அவை அங்கீகரிக்கப்படும்.
  9. காட்டு நிலங்களின் மீது எந்தவொரு மாநில அரசோ அல்லது உள்ளூர் அதிகார அமைப்போ வழங்கியுள்ள பட்டாக்கள் அல்லது ஈனாம்களை அவர்களது பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கான உரிமை.
  10. வனக் கிராமங்களை (Forest Settlement) வருவாய்க் கிராமங்களாக மாற்றிக் கொள்வதற்கான உரிமை.
  11. காடுகளில் உயிரியல் மற்றும் கலாச்சார ஆதாரங்கள் தொடர்பான பாரம்பரியமான அறிவு மற்றும் அறிவுச் சொத்து ஆகியவற்றிற்கான ஒட்டு மொத்த குழுவிற்கான உரிமை மற்றும் உயிரியல் ஆதாரங்களை அணுகுவதற்கான உரிமை.
  12. காட்டு வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்வதற்கான உரிமை.

மேற்படி சட்டத்தின்பயனாளிகளைக் கிராமசபை முடிவு செய்யும். மேல்முறையீட்டுக்கான கமிடிகளுக்கும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

அநேகமாக, வேட்டையாடும் உரிமையைத் தவிர பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் இச்சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளன. வனவிலங்குச் சரணாலயங்கள், தேசீயப்பூங்காக் களில் வசிக்கும் மக்களைப் பொருத்தவரை அவர்களின் ஒப்புதலு டன் மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுவரை அவர்கள் வெளியேற்றப்பப்படமாட்டார்கள்.

பிற்காலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காட்டு நிலங் களை எடுக்கும்போது ஒரு ஹெக்டேரில் 75 மரங்களுக்கு மிகாத பகுதிகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கீழ்கண்ட நோக்கங்களுக்காக கிராமசபையின் பரிந்துரையின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும். அவை, பள்ளிக் கூடம், மருத்துவமனை, அங்கன்வாடி, நியாயவிலைக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், குளம் மற்றும் தடுப்பணைகள், குடிதண்ணீர், மழைநீர் சேகரிப்பு, சிறு பாசன கால்வாய்கள், சாலைகள், தொழில் நுடபப் பயிற்சி நிலையங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகிய நோக்கங்களுக்கு மட்டுமே நில மாற்றம் செய்யலாம்.

இதில் பழங்குடியினர் அல்லாத மற்ற இனத்தவரை பொருத் தவரை மூன்று தலைமுறை என்பதற்கான கால அளவை (75 ஆண்டு கள்) குறைக்க வரும் கூட்டத் தொடரில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே, இந்தச்சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வில் ‘ஒரு வரலாற்றுத் திருப்புமுனை’ என்றே சொல்ல வேண்டும். தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சில குறைபாடுகள், விதிகள் உருவாக்கப்படும் போது, அது சரி செய்யப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு பழங்குடியினருக்கும் உரக்கச் சொல்லுவோம்

மக்களுக்குச் சாதகமான இந்தச் சட்டத்தை விரைவில் அமல்படுத்தச் செய்ய மார்க்சிஸ்ட் கட்சி தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில், இந்தச்சட்டம் குறித்த விழிப்புணர்வை மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டியது நாம் செய்ய வேண்டிய உடனடிக்கடமை. இச்சட்டத்தின் பலனை தகுதி யற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பழங்குடி மக்களின் நில உடைமையைப் பாதுகாப்பதற்காக செங் கொடி இயக்கம் மேற்கொண்ட முயற்சிகளையும், இந்தச் சட்டத் தைக் கொண்டு வர மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளையும் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும்.

எல்லாவற்றிற்கும்மேலாக, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பழங்குடி மக்களின் மத்தியில் இடதுசாரி சக்திகளின் வலுவை அதிகப்படுத்தவும், ஸ்தாபனத்தை விரிவுபடுத்துவதும் அவசியம். அதோடு பழங்குடி மக்களின் ஒற்றுமையும், அவர்களின் தொடர்ச்சி யான வற்புறுத்தலும் தான் இச்சட்டத்தை அமல்படுத்தச் செய்வதில் முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இந்த வரலாற்றுச் சாதனையை மலைகளில் வசிக்கும் மக்களின் இல்லங்கள் தோறும் எடுத்துச் செல்வோம். எப்படி வாழ்ந்தவர்கள் யாரால் வீழ்த்தப்பட்டார்கள், எவரால் மீட்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை ஒவ்வொரு பழங்குடிக்கும் உரக்கச் சொல்லுவோம்!



%d bloggers like this: