இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமைந்த இரண்டாவது காங்கிரசில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் விளக்கமாக எடுத்துரைக்க இங்கு வாய்ப் பில்லை. சுருங்கக் கூறின் மாநாட்டின் முக்கிய ஆவணமாக, ஆழமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொருள், ‘கட்சியின் அரசியல் நிலைபாட்டின் அடிப்படைகள்’ என்ற ஆவணமாகும். (ஆங்கிலத்தில் பொலிட்டிக்கல் தீசிஸ்) என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் கல்கத்தா ‘தீசீஸ்’ என்ற பெயரில் பிற்காலத்தில் பிரபலமாயிற்று.
இரண்டாவதாக, முந்தைய காலகட்டத்தில் கட்சி பின்பற்றிய அரசியல் நிலைபாடுகள் அடிப்படையிலேயே ‘திருத்தல்வாத பார்வையை’ பிரதிபலித்ததாக கருதப்பட்டது என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மாநாட்டின் விவாதத்திற்கு எடுத்தக் கொள்ளப்பட்ட அறிக்கை, ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றிய வலதுசாரி திரிபுகள்’ திருத்தல்வாத திரிபுகள் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது’. இந்த அறிக்கையானது, பிற்கால கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிரபல மாகிய இடதுசாரி – வலதுசாரி திரிபுகளில் ஒரு முக்கியமான திரிபினை விளக்கக் கூடியதாகவே அமைந்தது. சிந்தனைக்குரிய பல கருத்துக்கள் இதில் முன்வைக்கப்பட்டன. – சர்ச்சைகளுக்கும் பெரும் உட்கட்சி விவாதங்களுக்கும் இந்த அறிக்கையானது பெருமளவில் வழி வகுத்தது.
மூன்றாவதாக, விவாதிக்கப்பட்ட விஷயங்களில் நடை முறை அனுபவத்தின் அடிப்படையில் எவ்வாறு இத்திரிபுகள் காரணமாக கட்சி முழுவதும் பாதிக்கப்பட்டது என்பதை பற்றிய புரிதல் கூர்மைப்படுத்தப்பட்டது.
மொத்தத்தில், அதுநாள் வரை கட்சி பல விஷயங்களில் தவறான பாதையை பின்பற்றியதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றி ஆழமான பரிசீலனைகள் நடைபெற்றன. இயல்பாகவே இந்த விவாதங்கள் எல்லாம் சேர்ந்து கட்சியை ஒரு புதிய திசை வழியில் அழைத்துச் செல்ல காரணமாக இரண்டாவது காங்கிரசின் முடிவுகள் அமைந்தன.
மிதவாத போக்கினை உடைத்தெறிந்து தீவிரமான புரட்சிகரமான போராட்டங்களுக்கான அழைப்பை 2வது காங்கிரஸ் விடுத்ததாகவே கட்சி அணிகள் கருதின. இதன் எதிரொலியாக கட்சி காங்கிரஸ் முடிந்தபின் நாடு முழுவதும் ஏராளமான, தீவிர தன்மை கொண்ட போராட்டங்கள் நடைபெற்றன. மாநாட்டின் இறுதி நாள் பேரணியில் அரசியல் தலைமைக்குழு சார்பாக பேசிய தோழர் பவானி சென் – ‘தெலுங்கான பாதை தான் நமது பாதை’ என்று உரக்க பறைசாற்றியதானது, மிகப்பெரிய உணர்ச்சிப் பெருக்கை கட்சி முழுவதும் ஏற்படுத்தியது. தெலுங்கான பாதை என்று கூறும்போது, மக்களின் தீவிரப் போராட்டம் – அதுவும் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்ற முறையில்தான் நாடு முழுவதும் கருதப்பட்டது. இதேபோல், அதுநாள் அடக்கி வைக்கப் பட்டிருந்த உணர்ச்சிகளெல்லாம் பீறிட்டு வெடித் தெழுந்தது. இந்த போராட்டங்களை முறியடிக்க ஆளும் வர்க்கம் மிகக் கொடூரமான முறையில் அடக்குமுறையை ஏவி விட்டது என்பதும் இரண்டவது காங்கிரசுக்குப் பின் வெளிப்பட்ட முக்கிய அம்சமாகும்.
அடக்குமுறைகளும் சித்தரவதைகளும்
ஆயிரக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டதும், மூர்க்கத்தனமான – நேரடித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தோழர்களின் உயிர் பறிக்கப்பட்டதும், சொல்லொண்ணொ சித்திரவதைகளை நமது அணிகள் சந்திக்க வேண்டிய சூழல் உருவானதும் மறக்கவே முடியாது. தெலுங்கானாவில் மட்டுமின்றி, போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டாக இருப்பது கூட ஒரு குற்றமாக கருதப்பட்டு மிருகத்தனமாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தோழர்களின் பயங்கரமான அனுபவங்களை நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய கொடூமைகளை வரலாறு இந்திய நாடு முழுவதும் பரவி நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்தன.
ஆக, இரண்டாவது காங்கிரசுக்கு பிறகு பல்லாயிரக் கணக்கான தோழர்களும், அனுதாபிகளும் எதிர் கொண்ட அடக்குமுறைகளை பார்க்கும் போதே, அத்தகைய சூழ்நிலையில் கூட உறுதியுடன் நெஞ்சு நிமிர்ந்து இயக்கத்தையும், இலட்சியத் தையும் காப்பாற்றி செங்கொடியை உயரப் பிடித்த வரலாற்றின் ஏராளமான சம்பவங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நம்முடைய தோழர்கள் இத்தகைய தியாக வரலாற்றின் காரணமாக 1951 – 52 நடைபெற்ற அகில இந்திய பொதுத் தேர்தல்களில் அடக்குமுறை தாண்டவமாடிய பல்வேறு பகுதி களிலும் (தொகுதிகளிலும்) கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர்கள் வெற்றி கொடியை எடுத்துச் சென்ற சம்பவங்களும் படிப் பினைகள் நிறைந்தவையாக இருக்கத்தான் செய்கின்றன.
ஆக, இரண்டாவது காங்கிரசுக்குப் பின் அதி தீவிரவாத செயல்கள் பல நடைபெற்றபோதும், அடக்குமுறைகளை எதிர் கொண்டு அத்தகைய சூழ்நிலைமைகளிலும் உறுதி காட்டிய நிகழ்வுகளையும் பார்க்கக்கூடிய நேரத்தில், கம்யூனிஸ்ட்டுகளின் தியாகத்தையும், உறுதிப்பாட்டினையும் மனதார வாழ்த்திய மக்கள் பிற்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட்டு களை ஆதரித்ததை கண்கூடாக காண முடிந்தது.
தேர்தலில் மகத்தான வெற்றிகள் சில விபரங்கள்
இந்தக் காலத்தில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் பெருவாரியாக ஆதரவளித்ததை காண முடிகிறது. குறிப்பாக மதராஸ், திருவாங்கூர் – கொச்சியில் மாகாணங்களில் இது வெளிப்படை யாகவே தெரிந்தது. ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 41 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தெலுங்கான பகுதியில் கட்சி மகத்தான வெற்றியை ஈட்டியது.
குறிப்பாக ஹைதராபாத்தில் 45 இடங்களும், திருவாங்கூர் – கொச்சியில் 37 இடங்களும், மதராசில் 62 இடங்களும், பெங்காலில் 30 இடங்களும், திரிபுராவில் 19 இடங்களும் கிடைத்தது. சென்னை மாகாணத்தில் பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது. அப்போது சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 152 இடங்களே கிடைத்தது. ஹைதராபத்தில் காங்கிரஸ் 93 இடங்களை பெற்றது. அங்கும் பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது.
கடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியில் கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றி கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளுக்கு தலைமை தாங்கியதன் வெளிப்பாடாக அமைந்தது.
மொத்தத்தில், ஆழமான அரசியல் படிப்பினைகளை பெருமளவில் அள்ளித் தந்திருக்கக்கூடிய இரண்டாவது கட்சி காங்கிரசிஸ் நேர்மறை – எதிர்மறை தன்மைகள் கொண்ட ஒன்றாக இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை.
பல்லாயிரக்கணக்கான கட்சி ஊழியர்களும், ஆதரவாளர் களும் கட்சியை நேசித்து, பாதுகாத்து வந்த பெருமைமிக்க காலம் அது. அதே சமயம் கட்சிக்குள் ஆழமான கருத்து வேற்றுமை களும், கட்சி செல்ல வேண்டிய திசை வழி குறித்தும் ஆழ்ந்த விவாதங்களும் நடைபெற்றன. போராட்டங்களை நடத்தும் துணிவும் – மன உறுதியும் போதுமானதல்ல; கொள்கை ரீதியான தெளிவும் முன்னேறுவதற்கு இன்றியமையாத அம்சங்களாகும் என்ற படிப்பினையும் நாம் பெற்றோம். போராட்டங்களில் இறங்கும் போதும், அவற்றை நடத்திச் செல்லும் நேரத்திலும் அவற்றில் பங்கேற்க வேண்டிய மக்களின் மனோ நிலைமைகள், தயார் நிலைகள் போன்றவற்றை மதிப்பீடு செய்வது அவசியம் என்ற கோட்பாடும் பல சந்திர்ப்பத்தில் புறக்கணிக்கப்படடதும் ஒரு பெரிய தவறாக அமைந்தது. நடைமுறை தந்திரங்களைப் பற்றி தெளிவில்லாத சூழ்நிலைகள் கட்சியை பாதித்தது என்பது உண்மை. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் விரும்புகின்ற புரட்சிகரமான மாற்றத்திற்கு எத்தகைய தந்திரங்களையும் – நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது பற்றி கட்சிக்குள் மிக ஆழமான கருத்து மோதல்கள் நடைபெற்றது. இதுவும் கட்சியை பாதித்தது என்பதுதான் உண்மை.
ஆயுதம் தாங்கிய வெகுஜனப் போராட்டம் மூலமாகத் தான் புரட்சி முன்னேற முடியும் என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. ஆயினும், ரஷ்யாவில் புரட்சி நடந்த அதே சூழ்நிலைகளில், அதே பாதையைப் பின்பற்றிதான் நாம் முன்னேற முடியும் என்ற கருத்து. கட்சியில் வலுவாக இருந்தது. கிராமப்புறங்களில் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி, சீனாவில் நடந்தது போல ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்தும் கட்சியில் ஆழமாக முன்வைக்கப்பட்டது. சீனாவில் புரட்சியின் மாபெரும் முன்னேற்றங்களின் பின்னணியில் இந்த எண்ணங்கள் வலுப்பெற்றன. ஆக, இந்தியாவில் புரட்சியின் பாதையானது ரஷ்யாப் பாதையைப் பின்பற்றியா? அல்லது சீனப் பாதையைப் பின்பற்றியா? என்ற விவாதம் கூர்மையாக நடைபெற்றது. இத்தகைய விவாதங்களின் காரணமாக எதார்த்தத்தில் கட்சி தலைமையிலும் அணிகளிலும் ஒற்றுமை பெருமளவில் பாதிக்கப்பட்டது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். இதுபோன்ற ஏராளமான அடிப்படைப் பிரச்சனைகளும் நடைமுறைப் பிரச்சனைகளும் தீர்வு காண்பதற்காக கட்சிக்குள் கடுமையான விவாதங்களும் நடைபெற்றது. நமது கட்சிக்குள் நடைபெற்ற விவாதங்களின் விளைவாகவும், நம்முடன் நேச உறவு வைத்திருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற கட்சிகள் ஆகியவற்றின் உதவியுடனும் தத்துவார்ர்தப் – நடைமுறைப் பிரச்சனைகளை பற்றியெல்லாம் கட்சி 1950 இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த முடிவுகளை பற்றி விவாதிப்பதற்காகவும், முறைப்படுத்துவதற்காகவும் 1950 டிசம்பரில் கல்கத்தாவில் கட்சியின் விசேஷ மாநாட்டினை ரகசியமாக நடத்தப்பட்டது. விசேஷ மத்தியக்கமிட்டி கூட்டமாக இக்கூட்டம் அமைந்த போதிலும், இக்கூட்டமானது ஒரு மாநாடாகவே கருதப்பட வேண்டும் என்று அங்கு ஏகமனதாக முடிவு செய்தது. இந்த விசேஷ மாநாட்டில் முடிவுகளை 1953 டிசம்பரில் மதுரையில் நடைபெற்ற 3வது கட்சி மாநாடு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது கட்சி வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.
– தொடரும்