மனிதர்கள் தங்கள் கருத்துக்களை – சிந்தனையை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவிமட்டும்தான் மொழி என்கிற கருத்தை நாம் ஏற்க முடியாது. மொழியின்றிச் சிந்தனை இல்லை.சிந்தனையின்றி மொழியில்லை. விலங்கிலிருந்து மனிதனை வேறுபடுத்தும் ஒரு முக்கிய அம்சமாக மொழி விளங்குகிறது. மொழியின் வாயிலா கவே சிந்தனை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப் படுகிறது. உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளிகள் தங்கள் அறிவுத்திறனை-தொழில் திறனை மொழியின் வாயிலாகவே தங்களுக்கிடையே பரிமாறிக்கொள்கிறார்கள்.அவ்வகையில் மொழி உற்பத்திக் கருவியாகவும் ஒரு பங்காற்றுகிறது.மொழி என்பது வெறும் கடத்தி அல்ல.வாகனம் அல்ல. வெறும் சொற்களின் கூட்டம் அல்ல.சொற்கள் என்பவையும் வெறும் சொற்கள் அல்லவே? நம் மரபின் , பண்பாட்டின், அறிவுப்பாரம்பரியத்தின் அத்தனை அசைவுகளையும் உள்ளடக்கியதாக – நம் முன்னோர்களின் தலைமுறை தலைமுறையான உழைப்பின் -சிந்தனையின் விளைச்சலாகப் பிறந்த ஒன்றல்லவா சொல்-மொழி.
ஆகவேதான் எந்த ஒரு இனத்தின் முக்கியமான அடையாளமாக மொழி திகழ்கிறது.இந்தியாவில் 1956 இல் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அவை மொழிவழி மாநிலங் களாகத்தான் பிரிக்கப்பட வேண்டும் என்று இடதுசாரிகள் போராடினார்கள்.சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயரிடக்கோரி 64 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, தான் இறந்த பிறகு தன் சடலத்தைக் கம்யூனிஸ்ட்டுகளிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி மறைந்த தியாகி சங்கரலிங்கனார் ,.சட்டமன்றத்தில் முதன் முதலாகத் தமிழில் தான் பேசுவோம் என்று போராடிப் பேசிய தலைவர்கள் பி.இராமமூர்த்தி, ஜீவானந்தம்,தோழர் என்.சங்கரய்யா, தமிழில் தந்தி கொண்டுவந்த தோழர் ஏ.நல்லசிவன் என உண்மையிலேயே தமிழுக்காகப் போராடி ஆனால் அதற்கான எந்தப் பெருமிதத் தையும் பட்டத்தையும் எதிர்பாராத இவர்கள் எல்லோருமே மொழிப் போராளிகள் தான். காலந்தோறும் தமிழ் வளர்ச்சிக் காகச் செய்ய வேண்டியது என்ன என்று இடதுசாரிகள் போராடி வருகிறார்கள். அக்கோரிக்கைகள் பலவும் இன்னும் கோரிக்கைகளாகவே நீடிக்கின்றன. இச்சூழலில் உலகச் செம்மொழித்தமிழ் மாநாட்டைத் தமிழக அரசு ஜூன் மாதத்தில் கோவையில் நடத்துகிறது.
இம்மாநாடு தொடர்பாக எதிரும் புதிருமான கருத்துக்கள் தமிழ்கூறு நல்லுலகில் வெளி வந்தன..இலங்கையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் முகாம்கள் என்ற பெயரில் முள் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக்கிடக்கும் துயர்மிகு வேளையில் இம்மாநாடு தேவையா? என்பது முன்வைக்கப்படும் ஒரு கேள்வி. இரண்டாவதாக உலகத் தமிழ் மாநாடுகளால் தமிழுக்கு எந்தப்பயனும் விளைந்ததில்லை. ஆகவே இந்த மாநாடும் பயனற்றதுதான் என்பது இன்னொரு வாதம்.இப்படி ஒரு அற்புதமான மாநாட்டை நடத்துவதற்காக கலைஞருக்கு எழுத்தாளர்கள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றும் ஒரு தரப்பு.
இம்மூவகை நிலைபாடுளையும் நாம் ஏற்கவில்லை. இலங்கைத்தமிழர் துயர் துடைக்க மக்கள் இயக்கங்களும் இந்திய அரசுக்கு நெருக்கடி தருவதும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகளைச் செய்வதும் போன்றவை இடையறாது தொடர வேண்டும். அதையும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் இணைக்க வேண்டியதில்லை என்பதே நமது நிலைப்பாடு.
இரண்டாவதாக இதுவரை நடைபெற்ற எல்லா உலகத் தமிழ் மாநாடுகளும் வீண் என்ற வாதம் சரியானதல்ல.சற்றே பின்னோக்கிப் பார்ப்பது அவசியம். இதுவரை நடைபெற்ற மாநாடுகள்:-
- முதல் மாநாடு- 1966- கோலாலம்பூர் (மலேசியா)
- இரண்டாவது மாநாடு-1968 -சென்னை (இந்தியா)
- மூன்றாவது மாநாடு-1970-பாரிஸ்( பிரான்ஸ்)
- நான்காவது மாநாடு- 1974 – யாழ்ப்பாணம் (1974)
- ஐந்தாவது மாநாடு- 1981- மதுரை (இந்தியா)
- ஆறாவது மாநாடு-1987-கோலாலம்பூர் (மலேசியா)
- ஏழாவது மாநாடு -1989 – மொரீசியஸ்
- எட்டாவது மாநாடு- 1995-தஞ்சாவூர் (இந்தியா)
உயர்தனிச்செம்மொழியான நம் தமிழ் மொழியின் பெருமை உலகறிந்த ஒன்றுதான் என்றாலும் 1960களில் சில புதிய திறப்புகள் ஏற்பட்டன. 1938இல் தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை உருவாக்கிய தமிழ் லெக்சிகன் மற்றும் 1964இல் எமனோ பரோ உருவாக்கிய திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி ஆகியவை தமிழ் மொழி குறித்த சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான குறியீடுகளாக அமைந்தன.இச்சூழலில் 1964 ஜனவரியில் டெல்லியில் அகில இந்தியக் கீழ்த்திசை மாநாடு
நடைபெற்றது.அதில் பெரும்பாலும் சமசுக்கிருதம் சார்ந்த ஆய்வுகளுக்கே வாய்ப்பளிக்கப்பட்டது.திராவிட மொழிகள் சார்பான ஆய்வுகள் அதில் இடம்பெறவில்லை. ஆகவே தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் போன்றோர் முன் முயற்சியில் தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளுக்காக 1964இல் உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம் தொடங்கப்பட்டது
இக்கழகம் முதல் கூட்டத்தில் இரு பணிகளை ஏற்றுக்கொண்டது. 1. ஆண்டுதோறும் உலகில் எப்பகுதியில் தமிழ் அல்லது தென்னிந்தியப் பண்பாட்டில் எத்துறையில் ஆராய்ச்சி நடப்பினும் அதனைச் சேகரித்து ஆண்டறிக்கை யொன்றினை வெளியிடுவது.முதல் அறிக்கை கடந்த (1964க்கு முந்திய 5 ஆண்டுகள்) ஐந்து ஆண்டுகளில் வெளியான ஆராய்ச்சிக் குறிப்புகளைத் திரட்டி வெளியிடுவது.அந்த அறிக்கை 1966க்குள் வெளியிடப்படும்.
2.இரண்டாவது பகுதித் திட்டமாக 1966இல் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கை ( – ) நடத்துவது. 1966 ஏப்ரல் 16 முதல் 23 வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது.உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் மலேசியாவின் இந்தியப்பள்ளிகளுக்கான தேசியக் கல்வி வளர்ச்சிக் கவுன்சிலும் மலேயாப் பல்கலைக்கழகமும் இணைந்து இம்மாநாட்டினை நடத்தின.132 பிரதிநிதிகளும் 40 பார்வை யாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்று ஆய்வுகளை முன்வைத்தனர். அப்போதெல்லாம் இவை உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் என்றே அழைக்கப் பட்டன. ஆய்வுகள்தான் முக்கியம். அப்போது மலேயப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய தனிநாயகம் அடிகள் இம்மாநாட்டை முன்னின்று நடத்தினார்.
இம்மாநாட்டில் 150 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மலேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க சோசலிச நாடுகளின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை.மலேசிய அரசின் வர்க்க அரசியல் காரணமாக இக்குரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது.தமிழ்நாட்டிலிருந்து அழைக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலருடைய பெயர்களை நீக்கிவிட்டு ஆராய்ச்சிக்குத் தொடர்பற்ற ஆனால் செல்வாக்குப் பெற்ற பல தனிநபர்களை கோலாலம்பூர் மாநாடு அழைத்துக் கொண்டது. இவைபோன்ற முதல் கோணல்களையும் முதல் மாநாடு கொண்டிருந்தது.
அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் 1968 ஜனவரி 4 முதல் 10 வரை 500 பிரதிநிதிகள் பங்கேற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் நடைபெற்றது. தமிழுக்காக ஒரு மாநாட்டை சென்னையில் நடத்தும்போது அதை வெறும் ஆய்வரங்க மாநாடாக நடத்துவதால் தி.மு.கவின் அரசியலுக்கு என்ன லாபம் என்றெண்ணிய அண்ணாவின் அரசு ஜனவரி 1 முதலே சிலைகள் திறக்கும் விழாக்களும் பொதுமக்கள் பங்கேற்கும் விதமான ஓர் உலகத்தமிழ் ஆய்வு மாநாடு தனியாகவும் பண்பாட்டு விழாவாக ஓர் உலகத்தமிழ் மாநாடு தனியாகவும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இம்மாநாட்டில் ஒன்பது ஆய்வரங்குகளும் 36 உபகுழு ஆய்வுக்கூட்டங்களும் நிகழ்த்தப்பட்டு முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. சிந்து சமவெளிக் குறியீடுகள் ஆதிகாலத் திராவிடப் பண்பாட்டின் குறியீடுகளாக இருக்கலாம் என்பது பற்றிய தன் ஆய்வை அறிஞர் ஐராவதம் மகாதேவன் இம்மாநாட்டில்தான் முன்வைத்தார்.இன்று அத்திசையில் மேலும் பல குறிப்பிடத்தக்க ஆய்வுகள் வந்துள்ளன.
சென்னை மாநாட்டுக்காக நடந்த ஆடம்பரமான ஏற்பாடு களைப் பார்த்து அன்று தந்தை பெரியார் இது வீண் செலவு என்று கண்டித்தார்.
1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடத்தப்பட்ட்டது. 1995இல் தஞ்சை மாநாடு அறிவிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று சென்னையில் தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.அம்மாநாட்டின் ஐந்தாவது தீர்மானம் கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது:-
உலகத்தமிழ் மாநாட்டினைப் பயனுள்ள முறையில் நடத்துக!
1995 ஜனவரித்திங்களில் உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தப் போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.இத்தகைய மாநாடுகள் தமிழகத்தில் நடப்பது என்பது ஆட்சிக்கு வரக்கூடியவர்களின் விருப்பத்தைப் பொறுத்த விஷயமாக உள்ளது.இந்த நிலையை மாற்றி உரிய கால இடைவெளியில் இந்த மாநாடுகள் நடத்தப்பெற வேண்டும்.அதே நேரத்தில் இவை வெறும் திருவிழாக்களாக’ நடத்தப்பெறாமல் ,தமிழ் வளர்ச்சிக்கான உருப்படியான திட்டங்களை உருவாக்கக்கூடிய – சர்வதேச ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய மாநாடு களாக நடத்தப்படவேண்டுமென்று தமிழக அரசினை இம்மாநாடு வலியுறுத்துகிறது. உலகத்தமிழ் மாநாடு ஆலோசனைக் குழுவிலும் அதன் ஆய்வரங்கங்களிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்பு களுக்கும் இடம் தர வேண்டும் என்றும் இந்த மாநாடு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் சென்னையிலும் எம்.ஜி.ஆர் காலத்தில் மதுரையிலும் , ஜெயலலிதா காலத்தில் தஞ்சையிலும் நடைபெற்ற மாநாடுகளில் விளம்பரம் மற்றும் படாடோபத் தன்மைகள் மிகுந்திருந்த படியால் இப்போது அதில் வல்லவரான கலைஞர் காலத்தில் அதைத்தவிர வேறு ஏதும் இல்லாமல் போகுமோ என்கிற அச்சம் நிலவுவது உண்மை. இம்மாநாட்டில் எத்துறைகளில் தமிழாராய்ச்சி நிகழும்?தமிழ் மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பண்பாட்டு முன்னேற்றத் துக்கும் எவ்வாறான வழிகளை இம்மாநாடு சுட்டிக்காட்டப் போகிறது? தமிழ்ப் பண்பாட்டின் எவ்வெத் துறைகளில் புதிய புதிய ஆராய்ச்சிகள் துவங்கப்படும்? தமிழின் பெருமையையும் தமிழிலக்கியச் செல்வங்களின் சிறப்பையும் உலகறியச்செய்ய எவ்வித முயற்சிகள் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்படும்? கேரளம், கருநாடகம், ஆந்திரம் முதலிய அண்டை மாநிலங்களின் வரலாறு களெல்லாம் அண்மையில் எழுதப்பட்டிருக்கும்போது தமிழக த்தின் தொடர்ச்சியான வரலாறு வரையப்படவில்லையே அது குறித்து வரலாற்றறிஞர்கள் என்ன முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறார்கள்? தமிழை உயர்தனிச்செம்மொழி என்று வானளாவப் புகழும் நாம் அம்மொழியை அயல் நாட்டினர் கற்றுக் கொள்வதற்கு எவ்விதத்தில் உதவி செய்யப் போகின் றோம்? இம்மாநாடு இத்துறையில் வழிகாட்டுமா?
அயல்நாட்டினரின் மொழிகளையும் இலக்கியங்களையும் தமிழ் மக்கள் அறிந்து சுவைப்பதற்கு ஏதேனும் ஏற்பாட்டை இம்மாநாடு செய்யுமா? தமிழர் பண்பாட்டை சகோதர மொழிகள் பேசுவோர் பண்பாடுகளோடு ஒப்பிட்டு இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழர் பண்பாடு அளிக்கும் சிறப்பான அம்சங்களை எடுத்துக் காட்டுமா?மானிடவியல் துறைகளில், சமூக வளர்ச்சி, சமயம்,தத்துவம், கலைகள் முதலியவற்றில் எல்லாம் எத்தகைய ஆராய்ச்சிகள் புதிதாகத் தொடங்கப்படும்? பண்டைக்காலம் முதல் கடல் கடந்து அயல்நாடுகளோடு தமிழர் கொண்டுள்ள தொடர்புகளின் மூலம் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்புகள் பற்றியும் அவை இன்றிருக்கும் நிலைகள் பற்றியும் எத்தகைய ஆராய்ச்சிகள் நிகழும்?’
இவைபோன்ற அடிப்படையான கேள்விகளுக்கு இம்மா நாட்டை நடத்தும் அரசு மக்களுக்கு பதிலும் விளக்கமும் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. இயல்-இசை-நாடகம்-அறிவியல் – நாட்டுப்புறவியல் எனத் தமிழ் மொழியின் பரிமாணங்கள் ஒவ்வொன்றும் வளர்ச்சி பெற அரசியல் உறுதியோடு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பலவும் இன்னும் நிலுவையிலேயே உள்ளன.தமிழ் தமிழ் என்கிற முழக்கம் தமிழ் நிலத்தில் கேட்ட அளவுக்குத் தமிழுக்கான செயல்பாடுகள் கடந்த காலத்தில் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.இம்மாநாட்டை ஒட்டியும் பொதுவாகவும் செய்யப்பட வேண்டியவை பற்றித் தொகுத்துப் பார்க்கலாம்:-
- சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் என மிகப்பெரும் பாரம்பரியமும் செழுமையும் மிக்க மொழி தமிழ் மொழி. நீண்ட நெடுங்காலமாகவே இச் செல்வங்கள் யாவும் பண்டிதர் கைச்சரக்குகளாகவே நீடிப்பது கொடுமை. எளிய வாசகனும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் சந்தி பிரித்து அருஞ்சொற்பொருளுடன் உரிய விளக்கங்களுடன் இவை யாவும் அரசின் செலவில் மிகமிகக் குறைந்த விலையில் நல்ல தாளில் அச்சிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இம்மாநாட்டுக்குள் அதைச் செய்து முடிக்க இயலாதெனினும் அதற்கான அறிவிப்பையேனும் இம் மாநாட்டில் செய்ய வேண்டும்.
- தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம், தலித் இயக்கம்,பெண்ணிய இயக்கம் என இவை ஒவ்வொன்றும் தமிழுக்காற்றிய பங்கு பற்றிய விருப்பு வெறுப்பற்ற ஆய்வரங்குகள் இம்மாநாட்டில் இடம் பெற வேண்டும். அவை தொகுக்கப்பட்டு நூல் வடிவில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
- முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் பற்றிய உணர்வு நம்மிடம் அறவே இல்லாத நிலையே நீடிக்கிறது.பள்ளி கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இசைத்தமிழ் என்பது அறவே இல்லை.
தொல்காப்பியம் தொடங்கி இடைக்கால இலக்கியங்கள் ஊடாக ஆய்வு மேற்கொண்டு தமிழிசை இயல் உருவாக்கப்பட வேண்டும். இதன் தொடர்ச்சியாக முந்தைய முன்னோடி ஆய்வுகளை முன்வைத்தும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டும் இசைத்தமிழ் வரலாறு எழுதப்பட வேண்டும். அரசு நடத்தும் இசைப்பள்ளிகள், இசைக்கல்லூரிகளில் அவ்வப்பகுதியைச் சேர்ந்த எல்லா நாட்டுப்புற இசை வடிவங்களும் சேர்க்கப்பட வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்கள் அங்கு வருகைதரு பேராசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
4.நீண்ட நெடிய கூத்து மரபுகொண்ட நம் தமிழ்மொழியில் முறையான ஒரு நாடகத்தமிழ் வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை. அதற்கான முயற்சிகளை அரசு துவக்க வேண்டும்.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தவிர தமிழகத்தில் வேறு எங்குமே நாடகத்துறை என்பது இல்லை. அங்கும் உருப்படியான பாடநூல்கள் இல்லை. நாடகப்பள்ளிகள் உருவாக்குவதும் எல்லாக்கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் நாடகம் இணைக்கப் படுவதும் அவசியம். கூத்து மற்றும் நாடகப்பயிலரங்குகள் தமிழ்ப் பாடத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும்.
வீதி நாடகங்கள் என்னும் புதிய மக்கள் கலை வடிவம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவும் புதிய நாடகங்கள் தயாரிப்ப தற்கான ஆதரவை வழங்குவதற்குமான நிரந்தர ஏற்பாடு ஒன்றினை அரசு உருவாக்க வேண்டும்.
5.நாட்டுப்புற இலக்கியங்கள் உண்மையில் உழைக்கும் மக்களின் படைப்பிலக்கியமாகும். உழைக்கும் மக்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை அவை கொண்டுள்ளன. இழிசனர் வழக்கென்று பன்னெடுங்காலமாகப் புறக்கணிக்கப் பட்ட வாய்மொழி இலக்கியங்களாக உள்ள நாட்டுப்புற இலக்கியங்கள் பள்ளி மற்றும் கல்லூரித் தமிழ்ப்பாடத் திட்டத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும். இதுவரை தொகுக்கப்படாத நிலப்பரப்புகளில் இவற்றைத் தொகுத்திட அரசின் செலவில் தமிழ் கற்ற ஆய்வாளர்கள், களப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுப் பணிகள் துவக்கப்பட வேண்டும்.
அரண்மனைகளும் ஆடலரங்குகளும் புறக்கணித்த நாட்டுப்புறக்கலைகள் காலம் காலமாக உழைப்பாளி மக்களால் ஆதரித்து வளர்க்கப்பட்டவை. ஆதரிப்பார் யாருமின்றி அழிந்து போன நாட்டுப்புறக்கலைகள் எத்தனையோ. நாட்டுப் புறவியல் பல்கலைக்கழகம் ஒன்றைத்துவக்கி இக்கலை களும் இலக்கியங் களும் அழியாமல் பாதுகாக்க இம்மாநாட்டை ஒட்டியேனும் அரசு சிந்திக்க வேண்டும்.
- தமிழ்வழிக்கல்வி என்பது நமது நெடுங்காலக் கோரிக்கை யாக நீள்கிறது. உயர்கல்வியில் குறிப்பாக மருத்துவம் பொறியியல் கல்வியைத் தமிழ்வழியில் கொண்டுவராமல் ஆரம்பக் கல்வியில் தமிழ்வழியை வற்புறுத்துவதில் அர்த்த மில்லை. 1967இல் தமிழை ஓர் அரசியல் அணிதிரட்டலுக்கான உபாயமாகக் கைக்கொண்ட திராவிட இயக்கத்தார் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் ஆங்கில வழிக்கல்வி நிறுவனங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் புற்றீசல்கள் போலப் புறப்பட்டு இடறி விழுந்தால் ஒரு இங்கிலீசுப் பள்ளியில் விழும் நிலை தமிழகத்தில் உருவானது என்பது வேதனையான வரலாறாக நம் முன்னே நிற்கிறது. ஆகவேதான் நாம் தமிழ் வழிக்கல்வியைப் போலவே சமச்சீர் கல்விக்காகவும் போராட்டங்கள் நடத்தினோம்.
ஆனால் முழுமையான தமிழ்வழிக்கல்வி அதிலும் அருகமைப் பள்ளியில் என்பதை நோக்கியும் தமிழைத்தாய் மொழியாகக் கொண்ட குழந்தைகள் தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் கல்வியை முடிக்க இனி வாய்ப்பில்லை என்கிற நிலையை நோக்கியும் சென்றாக வேண்டும்.
7.மொழி என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டு வேர்களை, விழுமியங்களை, பண்பாட்டுச் செல்வத்தைத் தனக்குள் பொதிந்து வைத்துக் கொண்டுள்ள – தலைமுறை தலைமுறைக்கு அவற்றைக் கடத்திச்செல்லுகின்ற வாழும் வளரும் உயிர்ச் சக்தியாகும். ஒரு சொல்லிலிருந்து பலகாலத்துக்கு முன்னர் மறைந்துபோன ஒரு பண்பாட்டு அசைவினை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. பண்பாட்டு அசைவு களின் வழி அச்சமூகம் வாழ்ந்த வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திடவும் முடிகிறது.
தமிழ்ச்சமூகம் மிக நீண்ட ஆழமான பண்பாட்டு வரலாறு உடையது. மானிடவியல் ஆய்வுகள் மூலம் அவற்றை வெளிக்கொணர வேண்டும்.தமிழகத்தில் இன்று இயங்கும் மானுடவியல் ஆய்வறிஞர்களை () விரல் விட்டு எண்ணி விடலாம். இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட தமிழ்ச் சமூகத்தில் மானுடவியல் அறிஞர்கள் போதிய அளவில் இல்லை என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் மானுடவியல்துறை உடனடியாகத் துவங்கப்பட வேண்டும்.
- வழிபாட்டு மொழியாகத் தமிழ் வரவேண்டும் என்பது ஜனநாயக எண்ணம் கொண்டோரின் நீண்ட காலக்கனவாகும். வேண்டுகோள் அடிப்படையில் தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும் நிலைதான் தமிழ் நாட்டில் தொடர்கிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதுவும் வெறும் அறிவிப் போடு நிற்கிறது. கோவில்களுக்கு வெளியே எங்கும் தமிழ் முழக்கம் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல தமிழ் நாட்டின் எல்லாக் கோயில்களுக்கு உள்ளேயும் நடைமுறையில் இன்னும் தமிழ் நீசபாஷையாகவே தொடர்கிறது என்பதை வெட்கத்தோடும் வேதனையோடும் நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
- தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு வரலாறு இதுவரையிலும் எழுதப்படவே இல்லை. அதுகுறித்து எந்தப்பல்கலைக்கழகமோ உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமோ கவலைப்படவும் இல்லை. பன்முகப்பட்ட – பல்வேறு பண்பாடுகளின் கலப்பாகத் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற (சிதைந்தும் கொண்டி ருக்கிற) தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இப்போதுகூடச் செய்யவில்லை யெனில் வரலாறு நம்மை மன்னிக்காது. சமூக வரலாற்றின் அடிப் படையில் அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் வாய்மொழி வரலாறுகளையும் இணைத்துக்கொண்ட ஒரு பண்பாட்டு வரலாறே நாம் கோருவது.
10.(அ)ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் உள்ளிட்ட அகராதிகளின் நிலை குறித்து இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்பது அவசியம்.1960களில் பல்கலைக்கழக மான்யக்குழுவின் நிதி உதவியோடு சென்னைப்பல்கலைக்கழகம் முனைவர் ஏ.சிதம்பரநாத செட்டியாரை முதன்மை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட ஆங்கிலம்-தமிழ் அகராதிக்குப் பிறகு அரசு சார் நிறுவனரீதியாக எந்த முயற்சியும் இல்லை.அந்த ஒரு அகராதியும் இன்னும் தற்காலப்படுத்தப்படாமலே உள்ளது.தமிழக அரசு இது தொடர்பாக ஒரு அறிஞர் குழுவை போதிய நிதி ஆதாரத்துடன் நியமித்துப் பணிகளைத்துவக்க வேண்டும்.
(ஆ) வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தமிழின் மொழியியல் வளர்ச்சிக்கு மிக அடிப்படையான தேவையாகும். கி.ராஜநாராயணன்,பெருமாள் முருகன்,கண்மணி குணசேகரன் போன்ற சில தனிப்பட்ட ஆளுமைகளின் கடும் உழைப்பால் சில வட்டார வழக்குச் சொல்லகராதிகள் வந்துள்ளன.அரசு சார் நிறுவனங்களோ பல்கலைக் கழகங்களோ இதுபற்றிக் கிஞ்சித்தும் கவலை கொண்டதில்லை.உலகத்தமிழ் மாநாடு போன்ற பெரும் செலவிலான நிகழ்வுகள் நடக்கும் போதேனும் இதுபற்றிக் கவலை கொண்டு தமிழகம் முழுவதும் வட்டார வழக்குகளை அகராதிகளாகத் தொகுக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி ஏற்பாடு செய்வது மிகமிக அவசியமாகும்.
- 1960இல் தமிழக அரசு வெளியிட்ட கலைக்களஞ்சி யத்துக்குப் பிறகு எந்த முயற்சியும் இத்துறையில் செய்யப் படவில்லை. 60க்குப்பிறகு அதிவேகப்பாய்ச்சலில் அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.ஆகவே தற்காலப்படுத்தப்பட்ட கலைக்களஞ்சியம் உடனடியான தேவையாகும். தொடர்ச்சியாக துறைவாரியான கலைச்சொல் அகராதிகளை அரசு முன்னின்று முயன்று வெளிக்கொணர வேண்டும்
16.கணினிக்கான பொதுவான தமிழ் எழுத்துரு என்பது இன்னும் கனவாகவே உள்ளது.கணினிக்குப் பொருத்தமான மொழியாக நம் தமிழ் இருப்பது நமக்குப் பெருமைதான்.ஆனால் ஒரு பொதுவான தமிழ் விசைப்பலகையைத் தயாரித்து சில ஆயிரம் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாக மக்களுக்கு வழங்கும் பணியை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.
- மருத்துவம்,பொறியியல் போன்ற அறிவியல்துறை சார் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடமும் தமிழ் மொழியியல் பாடமும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.புதிய கலைச்சொல் ஆக்கங்களில் அவர்கள் ஈடுபட இது அவசியமல்லவா? இத்தகு கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியர்களை நியமிப்பதும் அவசியமாகும்.
- கீழமை நீதிமன்றங்களில் சாட்சிகள் தமிழில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். தீர்ப்பு தமிழிலோ ஆங்கிலத்திலோ வழங்கலாம் என்கிற விருப்பத்தேர்வு முறை இருக்கிறது.உயர்நீதி மன்றத்திலோ தமிழ் இல்லவே இல்லை. தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
தமிழக அரசு அரசியல் உறுதியுடன் மத்திய அரசோடு போராடி நீதித்துறையில் தமிழே ஆளும் நிலையை உருவாக்கிட வேண்டும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் (பிரிவு 17இன் சரத்து 345) வகை செய்யப்பட்டுள்ளதற்கிணங்க தமிழ் நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக்கும் தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் 1956இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதனைச் செயல்படுத்துவதில் அரசுக்கு அறிவுரைகள் வழங்குவதற்கென ஆட்சி மொழித்திட்ட நிறைவேற்றக் குழு’ 1957இல் அமைக்கப் பட்டது. அதுவே 1968இல் தமிழ் வளர்ச்சித் துறை என உருமாறியது. தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் வந்ததிலிருந்து இன்றுவரை அரசு நிர்வாகத்தில் தமிழைப்பயன்படுத்த பல கட்டங்களில் பல ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.அரசு கடிதப் போக்குவரத்து (1958), அரசு ஊழியர் பணிப்பதிவேடு பதிவுகள் (1971)அரசு ஊழியர் கையெழுத்திடுதல்(1978), அரசு ஆணைகள்-விதிமுறைகள்(1989). ஆனாலும் ஆட்சிமொழித்திட்ட நிறைவேற்ற நிலை குறித்து அவ்வப்போது அரசு ஆய்வு செய்து எதிர்பார்த்த அளவு இச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றே அறிவித்துள்ளது.
இது அரசின் இயலாமையையும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் விருப்பமின்மையையுமே காட்டுகிறது.அரசின் உறுதியான உரிய நடவடிக்கை தேவை.
- உலகமயத்தின் தத்துப்பிள்ளைகளாகச் சேவகம் செய்து வரும் தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்களின் உள்ளடக் கத்திலும் பேச்சு மொழியிலும் தமிழ்ப் பண்பாடும் இல்லை நல்லதமிழ்ச் சொற்களும் இல்லை.
தமிழ்த் தொலைக்காட்சி உலகின் முடி சூடா மன்னர்களாக முத்தமிழ் வேந்தர் டாக்டர் கலைஞரின் குடும்பத்தாரே திகழ்வதை வரலாற்றின் நகைச்சுவை என்றுதான் கொள்ள வேண்டும். திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் வைத்தால் சலுகை வழங்கும் தமிழக அரசு அன்றாடம் 24 மணி நேரமும் தமிழர்தம் மூளைகளைச் செதுக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களிட மிருந்து தமிழ் வாழ்வையும் மொழியையும் மீட்க என்ன செய்யப் போகிறது? இதுபோன்ற ஏராளமான கடமைகள் செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டியிருக்க வெறும் விளம்பரமாகவும் கொண்டாட்டமாகவும் வெடிச்சத்தம்போல அந்த நேரத்தில் காதுகளைச் செவிடாக்கிப் பின் காற்றில் கரைந்து காணாமல் போகிற ஏற்பாடாக ஒரு செம்மொழிக்கான உலகமாநாடு போய்விடக்கூடாது என்கிற அக்கறையுடன் மேற்கண்ட பணிகளை நாம் நினைவு படுத்தியுள்ளோம்.
மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்து முடித்துவிட முடியாது என்பதையும் அரசு மட்டுமே எல்லா வற்றையும் செய்து முடித்திட முடியாது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் கடந்த பின்னும் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 53 ஆண்டு கள் கழிந்த பின்னும் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தி மக்களை அணிதிரட்டிய திராவிட இயக்கத்தினர் ஆட்சிக்கு வந்து 42 ஆண்டுகள் கழிந்தபின்னும் இவையெல்லாம் இன்னும் நிறைவேற்றப்படவில்லையே என்பதுதான் நம் வேதனை. எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம் குறைகளைந்தோமில்லை
தமுஎகச வெளியிட்டுள்ள செம்மொழித்தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன என்கிற சிறுநூலை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.
Leave a Reply