முதலாளியின் மூலதனமும், தொழிலாளியின் உழைப்பும் சேர்ந்து உருவாக்கிய பொருளின் விற்பனையில் கிடைக்கும் லாபம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயமான போராட்டங்களே தொழிலாளர்களின் போராட்டங்கள் என்று, வறுமையையும் ஏழ்மையையும் பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
இந்த உண்மை தொழிலாளர்களையும், மக்களையும் சென்றடைய வேண்டும். உழைப்பதற்கான கூலி மட்டும் கொடுக்கபட்டு, உழைப்பின் பயனாக உருவாகும் லாபத்தில் பங்கு மறுப்பது என்பது உழைப்பு சுரண்டல். உழைப்பினால் உருவான உபரியே லாபம். மூலதனமே அந்த லாபத்தை முழுமையாக எடுத்துக் கொள்வது என்ன நியாயம்? இது தான் முதலாளித்துவத்தின், உடமைவர்கத்தின், திட்டமிட்ட அடிப்படை. ஏமாற்று வேலை. லாபம் என்பது பொருளை வாங்கு பவனிடமிருந்து பெறப்படுவது அல்லது எடுக்கப்படுவது.
லாபத்தின் எல்லை
லாபத்தின் எல்லைதான் என்ன? மூலதனம் போட்ட முதலாளியின் ஆசையின் எல்லை தான் லாபத்தின் எல்லை. எந்தவிதக் கட்டு பாடும் இல்லை. போட்டிக்கு ஏற்ப சற்றே குறையலாம். ஆனால் கணிசமாக லாபம் இல்லாமல், எவ்வளவு போட்டிருந்தாலும், உற்பத்தியாளர்கள் விலையே குறைக்கமாட் டார்கள். ஏனென்றால் அவர்கள், தாங்கள் வாழ்வதற்கான தேவைக்காக மட்டும் லாபம் தேடவில்லை. மேலும் மூலதனத்தை உரு வாக்கிட, வெவ்வேறு முதலீடுகள் செய்து, அவையும் பலவாக பெருகிட, குறைந்த காலத்தில், அவர்களுக்குத் தேவை எல்லை யற்ற லாபம். நோக்கம் உறுதியானால், அதற்கான வழிபற்றி கவலையில்லை.
பொருள் உற்பத்தியின்றியே, ஊக வாணிபம் என்ற சூதாட்ட வழிகளை உருவாக்கி விரைவு லாபங்களை, உலகெங்கும் தேடும் குணம் கொண்டது மூலதனம். புதிய தாராளமயக் கொள்கை என்ற பெயரில் அவற்றின் மீது இருந்த கட்டுப்பாடுகள் முழுதும் நீக்கப்பட்டுள்ளன. இருக்கும் தொழிலில் அதிகலாபம் இல்லை என்றால் அதை மூடிவிட்டு, அதிக லாபம் கொடுக்கும் முதலீட்டுக்கு மூலதனம் சென்றுவிடும். மக்களின் வாழ்வுக்கு அத்தியாவசிய தேவை களைப் பற்றி அது கவலை கொள்ளாது. இதைத்தான் உலக முதலாளித்துவம், உலக நாடுகள் மீது திணித்து செயல்படுத்தி வரு கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்தில் அனைத்தும் சந்தை மயம். லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம் என்பதுதான் மையக்கோட்பாடு. அரசுகளும் இதில் அடக்கம்.
லாபம் எப்படி உயர்கிறது ?
ஒவ்வொரு காலாண்டு முடிந்த பின்னும், ஆண்டு முடிந்த பின்னும் நிறுவனங்கள் தங்கள் லாப-நட்ட கணக்கை பத்திரிக்கைகளில் வெளியிடுவதை படிக்கிறோம். சென்ற ஆண்டு அதே காலத்தில் இருந்த லாபத்தை ஒப்பிட்டு இந்த ஆண்டு லாபம் எவ்வளவு உயர்வு அல்லது குறைவு என்பது கூறப்பட்டிருக்கும். பெரும்பாலான நிறுவனகளின் லாபம் ஆண்டுதோறும் உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம். சில நிறுவனங்களின் லாபம் சிறிது குறைந்திருப்பதாகக் காட்டப்படுகின்றன. மிக அரிதாகவே நட்டம் என்று எப்போதாவது காட்டப்படும். பல மூலதன முதலீடு மாற்றங் கள் திட்டமிடப்பட்டு அத்தகைய நாட்டம் உருவாக்கப்படுவதுண்டு.
எந்த நிறுவனமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால்தான், காட்டப் படும் இந்த கணக்குகள் அந்த நிறுவனத்தின் உண்மை நிலையை பிரதிபலிக்கும். இது அந்த நிறுவனத்தை நடத்தும் தலைமை மற்றும் நிர்வாகிகளின் நேர்மையைப் பொருத்தே அமையும். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பல ஆண்டுகளாய் கணக்கில் செய்யப்பட்ட மோசடி அம்பலமாக, அதன் பொறுப்பாளர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, சிறையில் இருந்து வருவது இதற்கு உதாரணம். அமெ ரிக்க நிறுவனம் என்ரான் திவாலா அறிவித்தது இதற்கு மற்றுமொரு உதாரணம்.
ஒரு நிறுவ னத்தின் லாபம் உயரக் காரணிகளானவை:
1. அதிக விற்பனை
2. விலையை உயர்த்துதல்
3. செலவீனங்களை குறைத்தல்
லாபத்தின் நிறம் சுரண்டல், ஊழல்
பல நிறுவனங்களின் கணக்குகளைப் பார்த்தால், விற்பனை வருவாய் உயர்வதைவிட, லாபம் பல மடங்கு உயர்ந்திருப்பதைக் காண லாம். இது எப்படி சாத்தியம்? ஒன்று விற் பனை விலையை உயர்த்திக் கொண்டே போவது. இரண்டாவது உற்பத்தி செலவீனங் களை குறைத்தல். வாடகை, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பயணச் செலவு, விளம்பரச் செலவு, விற்பனைக் கமிஷன் என இவற்றை குறைக்கவே முடியாது. ஏனென்றால் இவை விற்பனையைப் பெருக்கும் செயலோடு நேரடியாக தொடர்புள்ளவை. இவற்றை குறைத்தால் விற்பனை பாதிக்கும். இன்று பொருட்களின் விலை என்பதும் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஆகவே லாபத்தை அதிகரிக்க நிறுவனங் கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் முதலான பயன்களின் ஒட்டுமொத்த அளவை குறைப்பது ஒன்றே வழியாக உள்ளது. அதாவது, வேலையின் தேவைக்கு ஏற்ப புதிய ஊழியர்களை நியமனம் செய்யாமலிருப்பது, வேலை நேரத்தை அதிகரிப்பது, குறைந்த சம்பளத்தில் தற்காலிக காண்ட்ராக்ட் ஊழியர் களை நியமித்தல், இருக்கும் நிரந்தர ஊழியர்களை விருப்பு ஓய்வு போன்ற திட்டங்கள் மூலம் குறைத்தல், பல படிகளை நிறுத்துதல் அல்லது குறைத்தல், ஓய்வுப் பாதுகாப்பு செலவீனங்களை தவிர்த்து, புதிய திட்டங்களை செயல் படுத்துதல் போன்ற வழிகளை கடைபிடிக்கின்றன.
இன்னொருபுறம், இரண்டு வகை கணக்கு களை கடைபிடித்து அரசின் வரியை ஏய்த்து கருப்புப்பண குவியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உருவாக்குகிறாகள். நாட்டின் அரசு திட்டமிட்டதை தோல்வி அடையச் செய்வதுடன், பொருளாதாரத் தையும் சீர் குழைக்கிறது. வளர்ச்சி, விலைவாசி, பணவீக்கம் எதுவும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை. பெரும்பகுதி மக்களின் அன்றாட துன்பங்கள் தனி ஆட்சி நடத்து கிறது. உற்பத்தி நிறுவனங்கள், ஒத்துக் கொண்ட சுற்று சூழல் மாசுகட்டுபாடுகளை செயல்படுத்தாமல், தங்கள் லாபத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றன. குறுக்கே வரும் அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்கள். காவல் மற்றும் நீதி நிர்வாகங்கள், கருப்புப் பணத் தாலேயே அடித்து வீழ்த்தப்படுகின்றன. லாபத்தின் நிறம் சுரண்டல், ஊழல், கொழுத்தல்.
எங்கே செல்கிறோம்?
எதையும் செய்யும் திறமையுள்ளவன் வாழ்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் முடியு மட்டும் வாழ்ந்து போகலாம். சமுதாய நோக்கம் என்றெல்லாம் பேசுவது தேவையற்றது என்கிற நிலை. இந்திய அரசியல் சாசனம், பல்வேறு சட்டங்கள் அப்படியே இருந்து விட்டுப்போகட்டும். அரசுகளும், பணம் படைத்தோரையும் இவை எதுவும் ஒன்றும் செய்யாது என்ற நிலை. காரணம், பணம் படைத்தோர் கையில் இவற்றை செயல்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள்.
இப்போது மக்கள் முன் உள்ள கேள்வி, இதை எவ்வளவு தூரம், எவ்வளவு நாள் அனுமதிக்கப் போகிறோம் என்பதுதான்.