மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஏகாதிபத்திய கொலைவெறி, ஊடகங்களின் பேரிரைச்சல் – எதிர்கொள்ளும் வடகொரியா


சுமார் 2 1/2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பும் 2 1/4 கோடி மக்கள் தொகையும் கொண்ட வடகொரியா, 1950-லிருந்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும், சொத்து முடக்கத்தையும், ஐ.நாவின் சமீபத்திய கட்டளைகளையும் மீறாமல்  சாமாளித்து சுதந்திரமாக நிற்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில்  வடகொரியா அணுகுண்டு தயாரித்து, தென் கொரியாவையும், ஜப்பானையும் அழிக்க முயற்சிப்பதாக பரபரப்பு செய்தி, அமைதியை விரும்பும் உலக அரசியல் தலைவர்களை கவலை கொள்ள செய்துள்ளது. வடகொரியா அணுகுண்டை தயாரித்து யுத்தத்தை துவக்கும் என்பதால் இந்த கவலை எழவில்லை. ஒரு சுண்டைக்காய் நாட்டின்  மக்கள் அவர்கள் வழியில் வாழ்வதை தடுத்து மொத்த கொரிய பூமியையும் அமெரிக்க ராணுவ தளமாக இயங்க வைக்க எப்படியெல்லாம் மேலை நாடுகள் கதைகளை ஜோடிக்கிறார்கள் என்பதை அறிந்தே இந்த கவலை.

19-ம் நூற்றாண்டில் காலனி வேட்டையில் ஈடுபட்ட காலத்திலிருந்து மேலை நாடுகளும், ஜப்பானும் பின்பற்றி வரும் வெளியுறவு அரசியல் உபாயங்களின் உள் விவகாரம் அறிந்தவர்களே இந்த ஜோடனைகளையும் அவைகளின் நோக்கத்தையும் கணிக்க முடியும்.

சிறிய நாடுகளின் சுதந்திரத்தை வல்லூறு நாடுகள் மிதிப்பதை இனி உலகம் ஏற்க கூடாது என்பதற்காக முதலில் குரல் கொடுப்பவர் காஸ்ட்ரோ. அவர் அமெரிக்காவின் மறைமுக மிரட்டலை சுட்டிக் காட்டி உலக யுத்தத்தை தூண்டும் வேண்டாம். இந்த கொலை வெறிகூத்து என்று எழுதி உலக நாடுகளின் கவனத்தை யுத்தத்திற்கு எதிராக திருப்ப முயற்சித்துள்ளார். மறுபக்கம் வல்லூறு நாடுகளின் ஆக்கிரமிப்பை தடுக்க கொரியாவின் அருகிலிருக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அரசியல் பக்குவத்தோடு அணுக முயற்சிக்கிறார்கள். கொரிய தீபகற்பத்தில் மோதலை உருவாக்குவது எளிது, அமைதியை நிலை நாட்டுவது கடினம். அந்த கடினமான பொறுப்பை சீனாவும், ரஷ்யாவும் ஏற்று இருப்பது பாராட்டுக்குறியது.

வியட்நாம் வெற்றிக்கு வழிவகுத்தது போல்  உலகளவில் மக்களில் கணிசமான பகுதியினர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதில் தெளிவடைகிற வரை அநியாயத்திற்கு பணியாமல் காத்திருப்பது என்பதே வட கொரியாவின் நட்பு நாடுகளின் அரசியல் ராஜதந்திரத்திற்கு அடிப்படையெனத் தெரிகிறது.

பார்வைக்குப் அப்பால்

வட கொரியா-தென் கொரியா- அங்கு அணுகுண்டுகளை ஏந்திய ஏவுகனைகளை கொண்ட ராணுவ தளத்தை வைத்திருக்கும் அமெரிக்கா, இம்மூன்று நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு, பற்றிய வெளிப்படைதன்மை குறைவாக இருப்பதால்  நம்பத் தகுந்த மாதிரி கதைகள் பின்னுவது எளிதாக உள்ளது. இதன் விளைவாக  பிரான்ஸ், யுனைட்டெட் கிங்டம், யுனைட்டெட் ஸ்டேட்ஸ் சுருக்கமாக பி.யு.கே.யு.எஸ் (Fukes) நாடுகளின் ஓநாய் ரக நிறுவனங்கள், நடத்தும்  ஊடகங்களும், நடுநிலை ஏடுகளும் எப்பொழுதெல்லாம் அமெரிக்கா  ஆசியப் பகுதியில்  கன்போட் டிப்பளமசி (ராணுவ பலத்தை காட்டி அசமத்துவ  உறவிற்கு ஒப்பந்தம் போடுவது – Gunboat Diplomacy)-யில் இறங்குகிறதோ அப்பொழுதெல்லாம்  வடகொரியாவை நோக்கி ஊளையிடத் தொடங்கிவிடும். தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய இம்மூன்று நாடுகளும் வட கொரியாவை மூச்சுதிணற அடிக்க எடுக்கிற எந்த நடவடிக்கைகளையும், ஓர வஞ்சகத்தையும் இந்த ஊடகங்கள் விமர்சிப்பதே இல்லை. நல்லுறவை உருவாக்கவும், சந்தேகங்களை போக்கவும் வடகொரியா எடுக்கிற நடவடிக்கைகளை இந்த ஊடகங்கள் விஷம் கலக்காமல் சித்தரிப்பதில்லை.

சமீபத்தில்  அமெரிக்க தென்கொரிய ராணுவப் பயிற்சியும், தென்கொரிய அதிபரின் மிரட்டலையும் எதிர் கொள்ள தயாராகும் படி  தனது நாட்டு மக்களிடம் வடகொரிய அதிபர் ஆவேசமாக கூறியதை வெட்டி ஒட்டிக்காட்டி ஆபத்து! ஆபத்து! வடகொரியா, ஜப்பானுக்கும், தென்கொரியாவிற்க்கும் எதிராக அணு ஆயுத யுத்தம் நடத்தப் போவதாக மிரட்டுகிறது என்று கூச்சலிட தொடங்கிவிட்டன. அவர் பேசியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் எப்படி புரிந்து கொண்டார் என்பது தெறியவில்லை.

தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள் அணு ஆயுதங்களை கொண்டு தாக்க முயன்றால் , நாமும் அணுகுண்டுகளை தயார் செய்து (இனி மேல்!) அமெரிக்க ராணுவ தளத்தின் மீது வீசுவோம் என்று அந்த இளைய அதிபர் ஆவேசமாக பேசினார். எதற்காக இப்படி பேசினார் என்பதை நாம் அறியோம். அவர் வீராப்பை கேட்ட கொரியாவின் நட்பு நாடுகளே முகம் சுளித்தன. தென் கொரியாவில் பரவலாக கிடக்கும் அமெரிக்க ராணுவ தளங்களில் நடக்கும் ராணுவ பயிற்சிகளை கண்டு வடகொரிய மக்களின் அச்சத்தை போக்க வீராப்பாக பேசினாரா என்பதையும் அறியோம், அல்லது தென்கொரிய அதிபரின் அணு ஆயுத மிரட்டலுக்கு பதிலடியா என்பதையும் அறியோம், அல்லது அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலா என்பதும் தெரியவில்லை. ஆத்திர மூட்டலுக்கு இறையாக வேண்டாம். அதே வேளையில் சுதந்திரத்தையும் தேச ஒற்றுமை லட்சியத்தையும்  விட்டுக் கொடுக்க வேண்டாம் என்பதே வட கொரியாவின் நட்பு நாடுகளின் ஆலோசனை. ஆனால் அந்த பேச்சை வைத்து மேலை நாடுகளிலும் மற்றும் ஜப்பானிலும் சுதந்திர சந்தை கொடுக்கும் பீதியில் ஏற்கனவே தவிக்கும் ஒவ்வொரு குடிமகனையும்  ஓநாய் ரக நிறுவனங்களின் ஊடகங்கள் அணுகுண்டு பீதியை கிளப்பி மரண பயத்தில் ஆட வைத்து வருகின்றன.

வட கொரியாவின் அரசியல் வரலாற்றை பார்த்தால் அந்த நாடு எந்த நாட்டையும் ஆக்கிரமித்ததாக சொல்ல முடியாது. 19-ம் நூற் றாண்டில் ஜப்பான் கொரிய அரசியை கொலை செய்து அந்த நாட்டை ஆக்கிரமித்ததை வரலாறு குறிப்பிடுகிறது.1945-ல் கொரியாவிற்குள் அமெரிக்க ராணுவம் புகுந்து  கொரியாவை பிளந்ததும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. இன்று வரை அமெரிக்க ராணுவம் அங்கிருந்து போக மறுக்கிறது என்பதையும் உலகமறியும். வட கொரியா எந்த நாட்டின் மீதும் அணுகுண்டு வீசியதாக கூற முடியாது. பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக பீலாவிட்டு இன்னொரு நாட்டை ஆக்கிரமித்து மக்களைக் கொன்றது கிடையாது. சுதந்திர அரசுகளை கவிழ்க்க ராணுவ சர்வாதிகாரிகளுக்கு உதவியதும் கிடையாது. வேற்று நாடுகளில் மக்கள் நேசிக்கும் புரட்சிகர அரசியல் தலைவர்களை உளவுத்துறை மூலம் புற்று நோய்க்கு இரையாக்கிட சதி செய்ததது கிடையாது. அமெரிக்க ஜனாதிபதிகள் போல் உலகை ஆளவேண்டும் என்ற ஆசை அந்த இளம் அதிபருக்கு சுத்தமாக கிடையாது. அமெரிக்க போஸ்டன் நகரில் உண்டி சமைத்து உயிரைக் காக்கும் குக்கரை உயிரைப் பறிக்கும் குண்டுகளாக்கி தொலைதூர ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவர்களை கொன்றவனை கண்காணித்த அமெரிக்கக் காவல்துறை ரஷ்ய நாட்டிற்கு பயங்கரத்தை ஏற்றுமதி செய்பவன் என்று ஏமாந்து போகும் பண்பாடும் அங்கில்லை.

உலக நகரங்களிலே ஆக சுத்தமான மிக குறைவான குற்றங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் வடகொரிய தலைநகர் பியாங்நாங் உள்ளது. பொருளாதார தடைகளால் பல சிரமங்களை அம்மக்கள் சந்திக்கின்றனர்.

கடுமையாக உழைக்கும் ஆற்றலும், தொழில்நுட்பத் திறனும் சமத்துவப் பண்பாடும் அம்மக்களை வாழ வைக்கிறது. தங்களது கஷ்டங்களுக்கு காரணங்களை அறிந்ததால் “கொரியா இணையும் அமைதிவரும்”  என்ற கனவுகளுடன் அம்மக்கள் உறுதியுடன் இருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. சோவியத் காலத்து உதவியும் திட்டமிட்ட பொருளாதாரமும் மக்களின் உழைப்புத் திறனை மேன்மைபடுத்தும் அணுகுமுறையும் அந்த நாட்டின் பொருளாதார அண்டி பலத்தை உறுதியாக வைத்துள்ளது.

அணு உலையை மூடினால் அனல் மின்நிலையத்திற்கு எரிபொருளும். வறட்சியால் உணவு உற்பத்தி பாதித்தால் தானியமும் தருவதாக ஜப்பானுடனும், தென்கொரியாவுடனும் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை நம்பி வடகொரியா அணு மின்நிலையத்தை மூடியது. ஏவுகணை ஆய்வில் ஈடுபட்டதாக கூறி ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவும் முதலீடு செய்து உருவாக வேண்டிய மின் நிலையம் கட்டுவதை பாதியிலேயே நிறுத்திவிட்டன.

பெயருக்கு கொஞ்சம் தானியம்  கொடுத்துவிட்டு ஏற்றுக் கொண்ட அளவை மறுத்துவிட்டன. மின் உற்பத்தி பாதிப்பாலும், உணவுப் பற்றாக் குறையாலும் பட்டினி கிடக்கும் வட கொரிய மக்கள் கலவரம் செய்யட்டும் என்று காத்திருந்தனர். அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சீனா, ரஷ்யா, வடகொரியா இந்த ஆறு நாடுகளும் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட ஏற்பட்ட ஒப்பந்தங்களையும், நடவடிக்கைகளையும் பரிசீலிக்கிற எவரும் வட கொரியா பயங்கரத்தை உற்பத்தி செய்கிறது என்றோ இரும்புத் திரை நாடு என்றோ குற்றம் சுமத்த முடியாது.

பொருளாதாரத் தடைகளாலும், அவதூறுகளாலும் வடகொரியா திணறுகிறது என்றே கூறுவர். சென்ற வருடம் செயற்கைக்கோளை ஏவிய பொழுது வட கொரிய அரசு உலக செய்தி நிறுவனங்களையும் நேரில் பார்க்க அழைப்பு விட்டது. அந்த நிகழ்ச்சியை கண்ட மேலை நாட்டு ஊடகங்கள் செயற்கை கோளை ஏவிய தாக தெரிகிறது என்று எழுதி சந்தேகத்தை விதைத்தது. எச்சரிக்கை! அபாயம்! மூடிக் கிடக்கும் அணு உலைகளை வடகொரிய சர்வாதிகாரி முடுக்கிவிடப் போகிறார். வடகொரிய ஏவுகனைகள் செயற்கை கோளை செலுத்தும் ரகமல்ல அது அணுகுண்டுகளை வீசும் ரகம் இப்படி பயமுறுத்திவிட்டு அடுத்த வரியிலேயே  மக்களை பட்டினியில் கொன்று குவிக்கும் ஹிட்லர் காலத்து முகாமாக வட கொரியா இருப்பதாகவும் எழுதுகின்றனர். மக்கள் எந்த நிமிடமும் எரிமலை ஆவர் என்றும் எழுதுகின்றனர். எகிப்தில் எழுப்பியது போல் வடகொரிய மக்களை உசுப்பிவிட கொலைவெறி  மெட்டில் பாட்டுக்களை  மின் காந்த அலைகளாக  அனுப்புகின்றனர். கம்மிஸ் ஆர் புரோக், வட கொரியா ஜோக், சுருட்டி உருட்டு,  உருட்டி சுருட்டு. பின் சிரி, சிரி. (அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகளை கம்மிஸ் என்றே விழிப்பர் கில் ஏ கம்மி பார் யுவர் மம்மி என்பது அங்கு நர்சரி ரைம்மாகும்)  இப்படி தன்னாலேயே அழிவைத் தேடுகிற வடகொரிய அரசியலமைப்பு என்று சித்தரித்துவிட்டு  பின் எதற்கு தென் கொரியாவில்  அமெரிக்க முப்படைத் தளங்கள் வட கொரியா ஒரு சுண்டைக்காய் நாடு என்பதை  ஊடகங்கள் அறியாத ஒன்றா? ஏன் அமெரிக்க, பிரிட்டானிய, பிரெஞ்சு ஊடகங்கள் வடகொரியாவிற்கு எதிராக ஊழையிடுகின்றன? அணுகுண்டை வைத்து உலகை மிரட்டும் பயங்கர நாடாக சித்தரிப்பதேன்? மக்கள் எந்த உரிமையும் இல்லாமல் பயந்து வாழ்வதாக சித்தரிப்பதேன்? இரும்புத்திரை நாடு என்று சித்தரிப்பதேன்?.

ஒபாமாவின் மிரட்டல்

மேலை நாட்டு  முதலாளித்துவத்தை பாதுகாத்துக் கொண்டே நல்ல பெயரெடுக்க ஓபாமா விரும்புகிறார். அதற்காக கொரியா முழுவதையும் அமெரிக்க ராணுவத் தளமாக ஆக்க வடகொரியாவை துவைப்பது, அல்லது இவ்வட்டாரத்திலிருந்த பழைய ராணுவ தளங்களை புதுப்பிப்பது. இந்த நோக்கத்தோடு சமீபத்தில் கிழக்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த ஓபாமா, பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளோடு ஒரு ராணுவ ஒப்பந்தம் போட முயற்சி எடுத்தார். எப்பொழுதுமே ஏகாதிபத்தியவாதிகள்  கன்போட்டில்லாமல்  பேச்சுவார்த்தைக்குப் போனதே கிடையாது. முன் காலத்தில் இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்துகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்துவிட்டே அமெரிக்க ஆட்சியாளர்கள் வருவர்.

தென் கொரியாவிலிருக்கும் ராணுவ தளத்தில்  ஒத்திகை பார்ப்பதாக கூறி எடுத்த நடவடிக்கைகளும், அங்கு தென்கொரிய ஜனாதிபதி பேச்சும் வடகொரியாவையே மட்டுமல்ல இவ்வட்டார நாடுகளை மிரட்டும் நோக்கம் கொண்டது. இதைத்தான் அவர்கள் டிப்பளமசி என்கிறார்கள். நேரடியாக சொல்லாமல் மறைமுக மாக உணர்த்துவது அமெரிக்காவிற்கு கைவந்த கலை. சோவியத் யூனியனை பயமுறுத்தவே சரணடைந்த ஜப்பான் மீது அணுகுண்டு வீசி னோம் என்று ட்ரூமன்   சொன்னதாக அன்று பத்திரிகைகள் எழுதின.

இந்த ஊடகங்களும் மேலை நாடுகளின் கன்போட் டிப்பளமசியை நியாயப்படுத்த வடகொரியவை பயங்கர நாடாக சித்தரிக்கும் பக்கவாத்தியமாக செயல்படுகின்றன. மேலை நாடுகளைத் தவிர வேறு எந்த நாடும் அந்நிய நாட்டில் ராணுவதளத்தை வைத்து பராமரிப்பதாக கூறமுடியாது. பிலிப்பைன்சில் தென் வியட்நாமில், இந்தோனேசியாவில் அமெரிக்க ராணுவதளம் இருந்ததும், மக்களின் எதிர்ப்பால் வெளியேறியதும் வரலாறாகும். மேலை நாட்டு முதலாளித்துவம் உலக மக்களுக்கு நன்மை பயக்குமானால் எதற்கு பிற நாடுகளில் ராணுவ தளம்?

68 ஆண்டுகளாக தொடரும் துயரம்

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில் 1943-ல் கெய்ரோவில் கூடிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன் தலைவர்கள் ஜப்பானின் காலனியாக இருந்த கொரியாவை விடுவித்து சுதந்திர நாடாக அங்கிகரிப்பது என்ற முடிவிற்கு வந்து அறிக்கையும் விட்டனர். அமெரிக்க நிர்வாகிகளும் இதற்கு மாற்று கருத்து கூறவில்லை. 1945-ல் ஜப்பான் சரணடைந்த சில வாரத்தில் அமெரிக்கப் படைகள் கொரியாவிற்குள் புகுந்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ஜப்பான் சரணடைந்தாலும் கொரியாவிலிருக்கும் ஜப்பானிய ராணுவத்திடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக புகுந்தோம் என்றனர்.

உள்ளே புகுந்தவுடன் நடந்தது வேறு. ஜப்பானிய அதிகாரிகளும் அவர்கள் தயவில் செல்வ கொழுப்பில் திளைத்த கொரிய பிரபுக்களும், பெரும் வர்த்தகர்களும் அமெரிக்கத் தளபதி ஜான்ஹாட்ஜின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். அமெரிக்கப் படை புகு முன்னரே, கொரிய உழைப்பாளர் கட்சியின் வீரம் செறிந்த போராட்டம் காரணமாக ஆங்காங்கு மக்கள் சபை உருவாகியிருந்தது.  சோவியத் ராணுவத்தின் தாக்குதலால் ஜப்பான் அங்கு சரணடைந்ததேடு அரசும் செயலிழந்து கிடந்தது. தியாகத்தாலும், நேர்மையாலும், தத்துவத் தெளிவாலும் கிம்.இல்.சுங் கொரிய மக்களின் இதயங்களில்  குடியிருப்பவரானார். கொரியா முழுவதும் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு பரவியது. அமெரிக்க ராணுவம் புகுந்தவுடன் செய்த முதல் வேலை கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. விடுதலை இயக்கத்தினரிடம் இருந்த ஆயுதங்களை பறித்தது, மக்கள் சபையை கலைத்தது. ஜப்பானிய அதிகாரிகள் தயாரித்த பட்டியலடிப்படையில் தேசப்பற்றுடன் போராடியவர்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும் கொன்று குவித்தது கொரியாவை இரு கூறாக ஆக்கியது. தேச ஒற்றுமைக்கு பாடுபடுபவர்களை வடகொரிய ஏஜென்ட் அல்லது தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் என்று கொன்று விடுவது அன்றாட நடவடிக்கையானது. ஏன் கொரியாவை இப்படி சிதைக்க வேண்டும்.

மக்கள் கையில் அதிகாரத்தை தக்க வைக்கும் சோவியத் ஆட்சி முறை செல்வாக்கு பெறுவது மேலை நாட்டு முதலாளித்துவ ஆட்சி முறைக்கு ஆபத்து என்பதை உணர்ந்தே அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆட்சியாளர்கள் கொரிய தீபகற்பத்தை தங்களது ஆளுகைக்குள் வைக்க தீடீரென முடிவு செய்தனர். அந்த பொறுப்பை அமெரிக்காவிடம் ஒப்படைத்தனர். அந்த அடிப்படையில் அமெரிக்கா புகுந்தது. அமெரிக்க ராணுவம் புகுந்தவுடன் ஒரு பொம்மை அரசை உருவாக்கியது. சிங்மென்ரீ என்பவனை ரகசியமாக தளபதி மாக் ஆர்தர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அவன் தலைமையில் ஒரு பொம்மை அரசை அமைத்தது.

ஆனால் அதிகாரம் மாக் ஆர்தர் நியமித்த தளபதி ஜான் ஹாட்ஜ் என்பவரிடம் இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட சிங்மென்ரீ ஜப்பானை எதிர்த்த விடுதலைப் போரில் எந்த பங்கும் செலுத்தியவரல்ல. இளமைக் காலத்தில் ஜப்பான் எதிர்ப்பு குழுவில் இருந்து சிறை சென்றதைத் தவிர வேறு எதுவும் சாதித்தவரல்ல. விடுதலைப் போர் காலத்தில் இவர் அமெரிக்காவில் கிருத்துவப் பிரச்சாரம் செய்து வந்தார். இவர் செய்த துரோகத்தால் கொரியாவில் வாழ முடியாத நிலை வந்ததால் அமெரிக்காவில் குடியேறியவர். அமெரிக்கத் தளபதி மாக் ஆர்தர் அத்தகைய நபரை இறக்குமதி செய்ததோடு கலைக்கப்பட்ட மக்கள் குழு மேற்கொண்ட  நிலச் சீர்திருத்தத்தை அமுலாக்க பொம்மை அரசிற்கு உத்தரவிட்டார். அதன் மூலம் விவசாயிகளை தன்பக்கம்  அரசு வைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அதே வேளையில் தேச ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடிய மக்களை அமெரிக்க ராணுவ உதவியுடன் கொன்று குவிக்கவும் சிங்மென்ரீ தயங்கவில்லை. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிற்கே  இவனது கொடுமை பிடிக்காமல் போகவே, பதவியை ராஜினாமா செய்ய வைத்து  ரகசியமாக அமெரிக்காவிற்கே மீண்டும் கொண்டு போய்விட்டனர். பின்னர் அவன் பிணம் தான் கொரியாவிற்கு வந்தது. சிங்மென் ரீயை குப்பை கூடையில் வீசிய பிறகு ஏற்பட்ட நெருக்கடியை சாமாளிக்க அமெரிக்கா பார்க் சுங்-கி  ராணுவ தளபதியை  சர்வாதிகாரியாக  அமெரிக்கா நியமித்தது.

1961-லிருந்து 18 ஆண்டுகள் ராணுவ சர்வாதிகாரி பார்க் சுங்கி தென்கொரிய மக்களை அடக்கி ஆண்டான். மக்கள் போராட்டம் வெடித்தது, குவாங்ஜியு எழுச்சியை  அவன் அடக்கிய விதம், பலரை தூக்கிலே போட்ட விதம்  மேலை நாட்டு ஓநாய் ரக ஊடகங்களே கண்டித்தன. இந்த கொடியவனுக்கு அமெரிக்க ராணுவம் உதவியதை கண்டு கொள்ளாமலே அவனை மட்டும் தாக்கி எழுதின. 1979-ல் மேலிடத்து உத்தரவுப் படி தென்கொரிய ஜனாதிபதி  சாப்பிடும் பொழுது அவனது பாதுகாவலனால்  சுட்டுக் கொல்லப்பட்டான். மொத்தம் 30 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் அமெரிக்க உதவியால் சுரண்டும் கூட்டத்தில் ஒரு பகுதி பெருமுதுலாளிகளாக உருவெடுத்தது. இன்று அந்த வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது.

கேரட் அன்ட் ஸ்டிக் கொள்கை மூலம் இன்றைய ஜனாதிபதிகள் ஆட்சி நடத்துகின்றனர். இவர்களில் யாராவது அமெரிக்க நலனை பாதிக்கிற முறையில் நடந்தால் அவதூறுக்கு ஆளாகி உயிரையே பறிகொடுக்க நேரிடும் என்பதை அறிந்தே பதவி சுகத்தை அனுபவிக்கும் நிலை உள்ளது. இன்று ஜனாதிபதியாக இருப்பவர் பழைய சர்வாதிகாரியின் மகள் ஆவார். தென்கொரியாவில் பக்குவமான ஜனநாயகம் இருப்பதாக சி.ஐ.ஏ தவிர வேறு யாரும் சான்றிதழ் வழங்கியதாக தெறியவில்லை. அங்கு இன்று அமெரிக்க உதவியுடன் பெரு முதலாளிகளின்  அடக்கு முறை ஆட்சியே நடக்கிறது.  வன்முறையில் கம்யூனிசம் பரவுவதை தடுக்கவே தென் கொரியாவில் ராணுவ தளம் என்று அமெரிக்கா கூறிவருகிறது. ஆனால் நடந்த தென்ன? இப்பொழுதும் நடப்ப தென்ன? தென் கொரியாவில் மேலை நாட்டு முதலாளித்துவம் அமெரிக்க ராணுவத்தின் மூலம் திணிக்கப்பட்டது. இன்றும் அதனை காப்பாற்ற உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கு அந்த ராணுவமே பக்க பலமாக உள்ளது.

கம்யூனிசம் என்பது மேலை நாட்டு முதலாளித்துவம் போல் துப்பாக்கி முனையால் திணிக்க கூடியதல்ல, ஜனநாயகமும், சமத்துவமும், அசமத்துவ முதலாளித்துவ ஏற்பாடுகளை தகற்கும் மக்களின் எழுச்சியாலும் மக்களின் விருப்பத்தாலும் அமைவதாகும். கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஆயுதம் தறிப்பது தற்காப்பிற்காகவும், அடக்குமுறை கருவிகளின் தாக்குதல்களிலிருந்து மக்களை காக்கவும் தவிர வேறு நோக்கம் கிடையாது. இந்த விவரத்தை மேலை நாட்டு  அரசியல் நிபுணர்கள் நன்கு அறிவர்.

இன்று அவர்களின் கணக்குப் படி கம்யூனிசம் பரவும் அபாயம் இல்லை! மார்க்சிசம் காலாவதியான சரக்கு என்று தூக்கத்திலும் புலம்புகிறவர்களை பார்க்கலாம்! பின் ஏன் கொரியாவில் ராணுவ தளம்? உலகளவில் மேலை நாட்டு முதலாளித்துவத்திற்கு வேறு வகையில் ஆபத்து இருப்பதாக கருதுவதால் முதலாளித்துவத்தின் எல்லை பாதுகாப்பு படையாக அங்கே ராணுவம் தளம் உள்ளது. மத்திய ஆசியாவிலும், ஆப்பிரிக்கக் கண்டத்திலும் நாட்டோ படைகளின் நடமாட்டமும் இதே நோக்கத்துடன் இருப்பதை காணலாம். இன்று புதிய சமத்துவ சந்தை உறவிற்கான போராட்டம் உலகளவில் நடப்பதையும் காணலாம். அதற்கான வாய்ப்புக்களும்  பெருகி வருகின்றன. அதனை தடுத்து மேலை நாட்டு சந்தை முறையை பாதுகாப்பதே இன்றைய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ஆட்சியாளர்களின் ஆசை, வெறி உயிர் மூச்சு எல்லாமாகும்!

தென் கொரியாவின் வேதனைகள்

தென் கொரியாவில் பரவலாக அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. இங்குள்ள அமெரிக்கப் படை தென்கொரிய அரசின் காட்டுப் பாட்டில் இல்லை. கொரியாவின் ஜனநாயகத்தை காக்க அந்த ராணுவம் கொரிய மக்களில் சந்தேகப்படுகிறவர்களை சுட்டுக் கொல்லலாம் பெண்களை துன்புறுத்தலாம். 1967- 1998 வரை 50 ஆயிரம் குற்றங்களை ராணுவம் செய்ததாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அந்த குற்றங்களில் கொலைகள், வன்புணர்ச்சி ஆகியவைகளே. கொரிய அரசு அந்த நபர்களை தண்டிக்க முடியாது.

வேதனை என்னவெனில் இதில் ஒரு புகாரைக் கூட அமெரிக்க அரசு ஏற்கவில்லை. உண்மையில் அமெரிக்க ராணுவம் புகுந்த அன்றே கொரியாவின் தென்பகுதி மக்கள் ராணுவத்தை எதிர்த்த போராட்டத்தை துவக்கிவிட்டனர். ஜப்பானிடமிருந்து அமெரிகாவிற்கு அதிகாரம் கைமாறியதை அனுபவத்தால் கண்டனர். துவக்கத்தில் மக்கள் எதிர்ப்பினை அமெரிக்க ராணுவம் வடகொரியாவிற்கும், சுதந்திர தென்கொரியாவிற்கும் இடையே போர் என்று சித்தரித்தது. வடகொரிய ஊடுறுவலை முறியடிக்க தென்கொரிய மக்களுக்கு  அமெரிக்க ராணுவம் உதவுவதாக மேலை நாட்டு ஊடகங்கள் சித்தரித்தன.

2005-லிருந்து கொரிய விடுதலை தினம், கொரியப் போர் முடிந்த தினம், சர்வாதிகாரி சுங்கி பார்க்கை எதிர்த்த குவான்ங்ஜு மக்கள் எழுச்சி தினம் இம்மூன்று நாளையும்  அமெரிக்க ராணுவ தளங்களை அகற்ற கோறும் தினங்களாக தென்கொரிய மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தேதிகளில் பெரும் திரளாக மக்கள் திரண்டு அமெரிக்க ராணுவத்தின் அட்டுழியத்தை எதிர்த்து முழக்கமிடுவார்கள். காவல் துறையோடு சில இடங்களில் மோதவும் செய்வார்கள். பல ஆயிரம் மக்கள் காவல்துறை யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஊணமடைவர். முண்டானி உண்மையை வைத்து  பொய் மலைகளை உருவாக்கும் மேலை நாட்டு ஊடகங்கள் இந்த இயக்கம் பற்றி எதுவும் எழுதுவதில்லை.

வடகொரியாவும் அணுசக்தியும் 1985-ம் ஆண்டு தென் கொரியாவிலிருக்கும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அகற்றறினால் வடகொரியா அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதித்தது. அமெரிக்கா சம்மதிக்காததால் 1991-ம் ஆண்டு வரை இழுபறி நிலை நீடித்தது. 1991-ம் அமெரிக்க சுமார் 100 அணு ஆயுதங்களை தென் கொரியாவிலிருந்து அகற்றியது. அதே ஆண்டில் தென் கொரிய ஜனாதிபதியும் அணு ஆயுத தயாரிப்பில் இறங்க மாட்டோம் என்று அறிவித்தார்.

அதே ஆண்டு இறுதியில் வடகொரியாவும், தென் கொரியாவும் கூட்டாக கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்கிட ஒப்பந்தம் செய்தனர். அணுகுண்டின் மூலப்பொருளையும் தயாரிப்பதில்லை என்றும் சம்மதித்தனர். ஒருவரை ஒருவர் கண்காணிக்கவும் சம்மதித்தனர். 1992-ல் வட கொரியா அணுகுண்டு செய்ய பயன்படும் புளுட்டோனியம் பற்றி தகவல்களை சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் ஒப்படைத்தது அவர்கள் அணுசக்தி வளாகத்தை மேற்பார்வையிடவும் அனுமதித்தது. 1992-ம் ஆண்டு வட கொரியா ஏவுகணை ஆய்வில் இறங்குகிறது என்று குற்றம் சாட்டி 1950 ஆண்டு அறிவித்த பொருளாதார தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. பதிலுக்கு வடகொரியா அணு பரவல் தடுப்பு கட்டுப்பாட்டிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது.

1993-ல் வடகொரியா அமெரிக்கா இரண்டு நாட்டின் பிரதிநிதிகளும் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் அமெரிக்கா வடகொரியா உள்விவகாரத்தில் தலையிடாது, ராணுவ பலத்தை காட்டி மிரட்டாது என்ற வாக்குறுதியை கொடுத்தததை ஏற்று கட்டுப் பாட்டிலிருந்து விலகும் முடிவை தள்ளிப்போட்டது. பொருளாதாரத் தடையை நீக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. முடக்கிய சொத்தையும் திருப்பித் தர மறுத்து விட்டது.

1994 அமெரிக்க உளவு அமைப்பு வடகொரியா அணுகுண்டு செய்ய 12 கிலோ புளுட்டோனியத்தை ரகசியமாக தயாரித்து வைத்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தியது. சர்வதேச அணுசக்தி குழுமம் பார்வையிட்டு அப்படி எதுவும் நடக்கவில்லை என்று பின்னர் அறிவித்தது.

1996-ல் வட கொரியாவை ஏவுகனை கட்டுப்பாட்டு திட்டத்தை ஏற்க அமெ ரிக்கா வற்புறுத்தியது. சகஜ உறவை உருவாக்க வடகொரியா நிபந்தனை போட்டது. அமெரிக்கா மறுக்கவே பேச்சுவார்த்தை முறிந்தது. அதே ஆண்டில் வடகொரியா ஈரானுக்கு ஏவுகணை உதிரி பாகங்கள் கொடுத்ததாக குற்றம் சுமத்தி அமெரிக்கா   இரண்டு நாட்டிற்கும் தடைகளை விரிவுபடுத்தியது. 1998-ல் பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில் நுட்பத்தை பகிர்ந்ததாக கூறி வடகொரியா பாகிஸ்தான் மீது மேலும் தடைகளை இறுக்கியது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை அமெரிக்க கொடுக்கலாம், ஆனால் வடகொரியா செயற்கை கோள் ஏவ தேவையானவைகளை பாகிஸ்தானிலிருக்கும் கான் ஆராய்ச்சிமையத்திற்கு கொடுப்பது ஆபத்தாம்.

1998-ல் வடகொரியா எடை குறைவான செயற்கைகோளை ஏவியது. அது ஏவுகணை சோதனை என்று அமெரிக்காவும் ஜப்பானும் குற்றம் சுமத்தின, ஒப்பந்தப்படி கட்ட வேண்டிய அணுமின் நிலையத்தை கட்ட மறுத்துவிட்டன. மேலும் தடைகளை விதித்தன. 2012-ல் வடகொரியா செயற்கை கோளை வெற்றிகரமாக வானத்திலே செலுத்தியது. ஏவுகனை ஆய்வில் ஐ.நாவின் முடிவை மீறாமல் ஒரு செயற்கை கோளை வடகொரியா ஏவி இருக்க முடியாது  என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. வட கொரியா  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர் மானம் ஆயுத உற்பத்தியைத்தான் தடுத்திருக்கிறது. நாங்கள் அதில் ஈடுபடவில்லை. ஆக்கபூர்வமான ஆய்வில் ஈடுபடுவோம் என்று பதிலடி கொடுத்துள்ளது.

வடகொரியா, மூன்று நாடுகளின் (அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா) பொருளாதார முற்றுகையால் கஷ்டங்ளை தாங்கி நிமிர்ந்து நிற்கக் காரணம் இதர உலக நாடுகளின் ஆதரவும், அம்மக்களின் உறுதியுமே என்பதை விளக்க வேண்டியதில்லை. இல்லையெனில் என்றோ வடகொரியா மீது நியூட்ரான் குண்டை ஏவி அமெரிக்கா கொலை வெறி கூத்தை அரங்கேற்றியிருக்கும்.

ஜப்பான் வட கொரிய உறவு

19-ம் நூற்றாண்டின் இறுதியிலும். 20-ம் நூற் றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பியர்களும், அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்களும் அடிமைகளை  சந்தையில் விற்பதை விட நாடுகளை அடிமைப்படுத்துவது அதிக லாபம் தரும் என்ற முடிவிற்கு வந்தனர். நாடுகளை அடிமைப்படுத்த அவர்கள் கையாண்ட யுக்தியை கன்போட்டிப்பளமசி என்பர். இது அசமத்துவ வர்த்தக உறவை துப்பாக்கி முனையில் உரு வாக்குவதாகும். ஜப்பானும் அதனை காப்பி அடித்தது 1876-ல் கொரியாவில் ஜப்பான் புகுந்தது.1895-ல் கொரியாவை ஆண்டு கொண் டிருந்த ராணியை கொன்று ஒரு பொம்மை அரசை உருவாக்கியது. 1910-ல்  கொரிய அரசனை மிரட்டி  கொரியாவை ஜப்பானின் காலனியாக ஆக்கியது. அடிமைப்பட்ட நாடுகளில் மக்கள் அடைந்த துயரங்கள், அதை எதிர்த்த போராட்டங்கள் எல்லாம் கொரிய மக்களுக்கும் பொறுந்தும்.

கொரிய பெண்களை ஜப்பான் ராணுவத்தினர் போகப் பொருளாக ஆக்கியதும், மக்களை சோதனைப் பொருளாக சித்ரவதை செய்து கொன்றதும் வரலாற்றிலிருந்து அளிக்க முடியாது. வேதனை என்னவெனில் அமெரிக்க ராணுவம் தென்பகுதியில் புகுந்தவுடன்  ஜப்பானிய அதிகாரிகளை ஆலோசகர்களாக ஆக்கியது தான். ஜப்பான் மீது அணுகுண்டு வீசுகிற அளவிற்கு பகைமை கொண்டிருந்த அமெரிக்க ராணுவம் எந்த வகையில் ஜப்பானியர்களை நண்பர்களாக கருதினர் என்பது பலருக்கு புதிராக இருக்கும்.

ஏகாதிபத்திவாதிகள் 19-ம் நூற்றாண்டில் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். காலனிகளை பிடிப்பதற்கு சண்டை போட்டுக் கொள்ளலாம். போரில் வெற்றி பெற்ற வருடைய  காலனியாக அது ஆகிவிடும். எந்த ஏகாதிபத்திய  நாடும், சுதந்திர வர்த்தகத்திற்கும் முதலீட்டிற்கும் தடைகள்  விதிக்க கூடாது. இது எனது காலனி முதலீடு செய்ய உள்ளே வராதே என்று இன்னொரு ஏகாதிபத்திய நாட்டை தடுக்க கூடாது. அது போல் எந்த ஏகாதிபத்திய நாடும் இன்னொரு நாட்டின் காலனி அரசியலில் அவர்களது சம்மதமில்லாமல் தலையிடக் கூடாது. இந்த ஏற்பாட்டை ஹிட்லர் உடைக்க முயன்றதும் இரண்டாம் உலகப் போர் நிகழ காரணங்களில் ஒன்றாகும்.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இன்றும் கொரியா ஜப்பானின் காலனிதான். இந்தியா பிரிட்டனின் காலனிதான். கொரிய விவகாரத்தில் ஜப்பானை இணைக்காமல் அமெரிக்க ஒரு துரும்பைக் கூட அசைக்காது. அது போல் பிரிட்டனை கலக் காமல் இந்திய அரசியலில் அமெரிக்கா தலையிடாது.

தனி நபர் துதி

வடகொரியாவின் அரசியலில் தனி நபரை பூசனை செய்யும் போக்கு இருப்பது அந்த நாட்டு மக்களின் சோசலிச லட்சியத்தை அடைவதற்கு சிரமங்கள் ஏற்படுத்தும்  என்ற கவலை மார்க்சிஸ்ட்களுக்கு உண்டு. தனி நபர் எல்லாம் சாதிப்பார் என்ற நம்பிக்கையை உருவாக விடுவதோ, அல்லது உருவாக்குவதோ சோசலிச நிர்மானத்திற்கு இன்றி அமையாத மக்களின் அரசியல் பங்கேற்பை  சுருக்கி விடுகிறது.

கார்ல் மார்க்சும், எங்கெல்சும் இதில் தெளிவாக இருந்தனர். தங்களது செல்வாக்கு மேலாண்மை பெறுவதை அவர்கள் விரும்பியதே இல்லை. 1877-ல் வில்ஹெம் பிலாஸ் என்ற ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ஒருவனை அதிசய மானுடனாக கருதவைக்கும் பக்தி உணர்வை அதாவது பெர்சனாலிட்டி கல்டை தானும், எங்கெல்சும் விரும்பியதில்லை அதை எப்படி தவிர்த்தனர் என்பதை குறிப்பிடுகிறார்.

19-ம் நூற்றாண்டில் உருவான சர்வதேச தொழிலாளர் சங்க உணர்வோடு உருவான சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமும் ஹிரோ ஒர்சிப்பின் ஆபத்தை சுட்டிக் காட்டுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த பொழுது, பாடப் புத்தகங்களிலே தனி நபரை பூசிக்கிற மாதிரி பாடங்கள் எழுதப்படக் கூடாது என்பதை அமுலாக்கினர். குழந்தைப் பருவத்தில் உருவாகும் எண்ணங்களே பிற்காலத்தில் நம்பிக்கைகளை அளக்கும் அளவு கோலாக மாறிவிடுகிறது என்பதை உணர்ந்தே இதைச் செய்தனர். பின் நாளில் மாசேதுங்கை பற்றி மிகையாக கூறியதை ஏற்காமல் அவரது நிறைகுறைகளை கணிக்கிற பக்குவம் மக்களுக்கு இருந்ததால் கம்யூனிஸ்ட் கட்சி நீடித்து நிற்கிறது.

நல்லுறவிற்கு வட கொரியாவின் முயற்சிகள்

1953-லிருந்து நடுநிலை நாடுகளின் கண்காணிப் பில்தான் வடகொரியா, தென்கொரியா இடையே எல்லை இருந்து வருகிறது. இரண்டு நாட்டையும் இணைக்கிற ரயில், சாலைப் போக்கு வரத்தை உத்தரவாதப்படுத்த அது தயாராக இருந்தாலும் சந்தேகங்களை தென் கொரியா கிளப்பிவிடும். அதனை போக்க நடுநிலை நாடுகளின் உதவியோடு போக்க வடகொரியா தயங்கியதே இல்லை. அமெரிக்காவோடு பல சமரச ஒப்பந்தங்கள் வடகொரியா போட்டுள்ளது. ஆனால் எந்த கட்டத்திலும் 1953-ல் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்க அமெரிக்கா சம்மதித்தது கிடையாது.

1988-லிருந்து வடகொரியா – தென் கொரியா இடையே வர்த்தக உறவு உள்ளது. கிசாங் தொழில் வளாகத்தில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் கமிஷன் அடிப்படையில் பொருட்களை உற்பத்தி செய்து எடுத்துச் செல்கின்றனர். பல ஆயிரம் தென் கொரியத் தொழிலாளர்கள் தினசரி வேலைக்கு வந்து போகின்றனர். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி உள்ளது. ஆனால் ஏற்றுமதிக்கு அமெரிக்கா பல தடைகளை போட்டுள்ளது. தாதுக்களிலிருந்து உலோகத்தை பிரிப்பதிலிருந்து, நவீன ஏவுகணை உதிரி பாகங்கள் எந்திர பாகங்கள் வரை செய்யும் தொழில்கள் இங்கு உள்ளன. அந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் கொரிய இணைப்பையே மூச்சாக கொண்டுள்ளனர். ஆனால் ஏகாதிபத்திய உலக அரசியல் இணைப்பைத் தடுக்கவும், வடகொரிய தேர்ந்தெடுத்த பொருளாதாரப் பாதையை சிதைக்கவும் முயற்சிக்கிறது. அதன் விளைவாக அமெரிக்கா கொரிய தீபகற்பத்தை சுற்றி ஏவுகணைகள் விமானம் தாங்கிய கப்பல்கள் பயிற்சி என்ற பெயரில் கொலை வெறிக் கூத்தாடுகிறது. அதற்கு பக்க வாத்தியமாக  மேலை நாட்டு ஊடகங்கள் ஊளையிடுகின்றன, வட கொரியா திணறுகிறது.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: