மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சிங்காரவேலரின் அரசியல் உத்தி!


தமிழக சிந்தனை வரலாற்றுப் பாரம்பரியத்தில் எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் மேன்மை போற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதிகார பீடத்தில் இருந்து வந்துள்ள உடைமை வர்க்கங்களின் சிந்தனை மரபுகள் உழைப்புக்கும், உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக்கும் மதிப்பளிப்பதில்லை. முரண்பட்ட இந்த இரண்டு போக்குகளும் தமிழக சிந்தனை மரபில் உண்டு.

20ம் நூற்றாண்டில் உழைப்பின் மேன்மை பேசுகிற இந்த சிந்தனை மரபின் தொடர்ச்சியாக புரட்சிகர சமூக மாற்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் வல்லமையை உணருகிற கட்டம் உருவானது. 1908ல் வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் இந்த கருத்தாக்கத்திற்கு வரத்துவங்கினர். இந்த கருத்தாக்கம் மேலும் வலுப்பெற 1917 ரஷியப் புரட்சியின் தாக்கம் முக்கிய பங்கு வகித்தது. எனினும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வல்லமை எனும் கருத்தாக்கம் வெளியிலிருந்து இறக்குமதியான கருத்தாக்கமே என்கிற புரிதல் சரியானது அல்ல. தமிழக சிந்தனை மரபில் இருந்து வந்துள்ள உழைப்பின் மேன்மை போற்றும் கருத்தியலின் தொடர்ச்சியே தொழிலாளி வர்க்கம் புரட்சிகரமானது என்ற கருத்திற்கு இட்டுச்சென்றது. மார்க்சியம் இதற்கு அறிவியல் அடிப்படையை வழங்கியது.

இந்த வளர்ச்சிப் போக்கில், சிங்காரவேலரின் செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உழைப்பாளி வர்க்கத்தின் அரசியலை, விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக மாற்றிய பெருமை சிங்காரவேலரையே சாரும். இதையொட்டிய அவரது படைப்பாற்றல் மிகுந்த முன்முயற்சிகளில் ஒன்றுதான் அவர் நிறுவிய தொழிலாளி – விவசாயிகள் கட்சி.

தொழிலாளர் சுயராஜ்ஜியம்

1920ம் ஆண்டுகளிலேயே தொழிலாளர் விவசாயி வர்க்கக் கூட்டணி பற்றிய சிந்தித்தவர் தோழர் சிங்காரவேலர். இந்த வர்க்கங்கள் இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்று தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள, ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முனைந்தார். அக்கட்சிக்கு ஹிந்துஸ்தான் தொழிலாளர் விவசாயி கட்சி எனப் பெயரிட்டார்.

இக்கட்சிக்கென்று, ஹிந்துஸ்தான் லேபர் கிஸான் கெஜட் என்ற பத்திரிகையை அவர் துவக்கினார். 1923ம் ஆண்டு மே தினமன்று கட்சி யின் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

தொழிலாளர், விவசாயிகள் கட்சியின் நோக்கம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, பாட்டாளி வர்க்க அரசு அமைப்பது என்பதை சிங்காரவேலர் அந்த மேதினக் கூட்டத்தில் அறி வித்தார். இந்தியத் தொழிலாளரின் குறிக்கோள், தொழிலாளர் சுயராஜ்யமாக இருக்க வேண்டு மென்று அவர் முழங்கினார்.

சுயராஜ்ஜியத்தில் நிறைவான வாழ்க்கை நடத்தும் உரிமை தொழிலாளர்களுக்கும், விவ சாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். தொழிலாளி வர்க்கத்தலைமை கொண்ட அரசே உண்மையான சுயராஜ்ஜியம் என்று பொருள்பட, சுயராஜ்ஜியம் இன்றேல் வாழ்வில்லை; தொழிலாளி இன்றேல் சுயராஜ்ஜியமில்லை என்றும் அழுத்தமாகக் கூறினார். பிரிட்டிஷ் ஆட்சி அகன்று முதலாளித்துவ உடைமை வர்க்கங்களின் அரசு அமைவதற்கு பதிலாக, உழைப் பாளி வர்க்க அரசு அமைய வேண்டுமென்பது அன்றைய கம்யூனிஸ்டுகளின் இலட்சியப் பிரகடனம். இதன் செயல்வடிவமே சிங்காரவேலர் அமைத்த தொழிலாளர் – விவசாயிகள் கட்சி.

காங்கிரசோடு நட்புறவு ஒப்பந்தம்

பெரும்பான்மையான தொழிலாளர் விவ சாயிகள் தங்களது உரிமைகளை உணராது, முதலாளித்துவ வர்க்கங்களின் பின்னால் அணி திரள்கின்றனர். அவர்கள் ஒடுக்கும் வர்க்கங்களின் கட்சிகளுக்கு ஆதரவாகத் திரளுகிற நிலை நீடித்து வருகின்றது,

இப்பிரச்சனையைப் பற்றி 1920ம் ஆண்டு களிலேயே தீவிரமாக சிந்தித்தவர் தோழர் சிங்காரவேலர். தனது உழைப்பைச் சுரண்டுப வனுக்கு அடிபணியும் உழைப்பாளி வர்க்கங்களை எவ்வாறு சரியான வழிக்குக் கொண்டு வருவது? உழைப்பாளி வர்க்கங்கள் தங்கள் நலனையும், உரிமைகளையும் பாதுகாத்து முன்னேறுவதற்கு எத்தகு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? இவை அனைத்துக்கும் சிங்காரவேலர் தீர்வுகளை நாடினார்.

பெரியாரோடு இணைந்திருந்த சமயத்திலும், சிங்காரவேலர் சாதி ஒழிப்பு, சமய மூடநம்பிக்கை கள் எதிர்ப்பு உள்ளிட்ட சுயமரியாதைக் கருத்துக் களை இடைவிடாது எழுதி வந்தார். அதுமட்டு மல்லாது, ஐக்கிய முன்னணி உத்தியையும் அவர் கைவிடவில்லை.

சுயமரியாதைக்காரர்களிடம் சமதர்ம பிரச்சாரம்

சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும், அவர்கள் மூலமாக மக்களுக்கும் சிங்காரவேலர் பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கருத்துக்களை பரவச் செய்தார். சுயமரியாதை இயக்கத்தவர்கள்,  ஜனநாயகம் எனும் பெயரில் முதலாளித்துவம் பேசுகிற பசப்பு வார்த்தைகளை நம்பிடக்கூடாது என்றார் சிங்காரவேலர்.

சுயமரியாதைக்காரர்களாகிய நாம், டிமாக்கிரஸி என்ற மோசத்தை இனியும் கையாளுவதா? என்று கேட்டுவிட்டு, … அல்லது சோவியத் முறையென்ற உண்மையான திட்டத் தைக் கையாளுவதா? என்று கேட்டு, சிந்திக்கத் தூண்டினார். சோவியத் முறை என்பது என்ன வென்ற விளக்கத்தையும் அளித்தார்.

… எந்தத் தொழிலை எவன் புரிகின்றானோ, எந்தெந்த நிலத்தை எவன் உழுது பயிரிடுகின்றா னோ அவன்தான் அவனுடைய ஆட்சியை நடத்த வேண்டும். அந்த அரசியலுக்கு அவனே உரிய வன்; மற்றவர்கள் யாருக்கும் எவ்வித ஆதிக்கமும் கொடுக்கலாகாது…

எந்த இயக்கங்களோடு ஒரு கம்யூனிஸ்டு உறவு கொண்டாலும், சமதர்ம சமுதாயம் எனும் இலட்சியத்திற்காக மக்களைத் திரட்டுவதில் உறுதியாக உழைக்க வேண்டுமென்பது சிங்கார வேலர் கற்றுத்தரும் பாடம்.

சிங்காரவேலர் படைத்த இரண்டு திட்டங்களும், தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றுத் தேவைகள். தமிழர்களின் பண்பாட்டு நிலைகள், கருத்தியல் உணர்வுகளின் வெளிப்பாடே இந்தத் திட்டங் கள். இந்தத் திட்டங்கள் சிங்காரவேலர் எனும் தனிப்பட்ட மனிதரின் மேதைமையால் எழுத்துக்களாக வடிவம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்தத் திட்டங்களின் தேவை தமிழ்ச்சமூகத்தில் இயல் பாக கருக்கொண்டிருந்தது.

சுயமரியாதையும், சமதர்மமும் செயல்பட்டது தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுத் தேவை. அது இடையில் தடைபட்டது. ஒரு சூழ்ச்சியின் விளைவே. ஆங்கிலேய ஏகாதிபத்தியமே இதில் முதல் குற்றவாளி.

ஒரு சமூகப் போராளி, ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான சூழல் நிலவாத போது, நம் பிக்கையிழந்து சோர்ந்து போய்விடக் கூடாது. இந்த புரட்சிகரமற்ற சூழல், அவருக்கு புதிய பரிசோதனைகளை நிகழ்த்துவதற்கான சுதந்திரத் தைத் தருகிறது.

புதிய முயற்சிகளுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஜெர்மானிய கம்யூனிஸ்ட் போராளி ரோசா லக்சம்பர்க், புரட்சிக்கான சரியான நேரத்திற்காக பொறுமையாகக் காத்திருப்பதில் பயனில்லை; ஒருவர் இவ்வாறு காத்திருந்தால், அந்த தருணம் வரவே வராது; பக்குவம் பெறாத முயற்சிகளாக இருப்பினும், அவற்றைத் துவக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த பக்குவமற்ற முயற்சிகளின் தோல்வி களில்தான் புரட்சிக்கான அகநிலை வாய்ப்புக்கள் உருவாகின்றன. இதனால்தான், மாவோ, தோல்விகளிலிருந்து (மீண்டும்) தோல்விக்கு, பிறகு இறுதி வெற்றிக்கு என்றார். இதையே இலக்கியவாதி சாமுவேல் பெக்கெட் கூறினார்: மீண்டும் முயற்சி செய்; மீண்டும் தோல்வியை பெற்றிடு; மேலான தோல்வியை மீண்டும் பெற்றிடு. .இந்த உறுதியை சிங்காரவேலர் வாழ் வில் காணலாம்.

சோவியத் புரட்சி போன்ற மாற்றம் நிகழ்கிற சூழல் நிலவிடாதபோது, சிங்காரவேலர் கம்யூனிச இலட்சியங்களுக்காக பாடுபட்டார். படைப் பாற்றல்மிக்க  பல முன்முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றில் தோல்வி பல கண்டாலும், மீண்டும் முயற்சிகளைத் தொடர்ந்தார். கம்யூனிஸ்டுகளின்  ஐக்கிய முன்னணி உத்திகளை இன் றைக்கும் தமிழகத்தில் பலர் பழித்தும், இழித்தும் எழுதி வருகின்றனர். இந்த எழுத்துக்களுக்கு அஞ்சியும், சங்கடப்பட்டும், சிங்காரவேலர்  காட் டிய பாதையில் தீரமுடன் நடைபோட முற் போக்காளர்கள் சிலரும் கூட தயங்குகின்றனர். ஆனால், மேலான தோல்வி கிட்டினும், சிங்கார வேலர் காட்டிய வழியே இறுதி வெற்றி பெறும்.

– சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் – அறக்கட்டளை – சிங்காரவேலர் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் பிரசுரமானது



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: