உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களின் ஒருமைப்பாட்டையும் போராட்ட உணர்வையும் மே தினக் கொண்டாட்டாங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் மே தினத்தைக் கொண்டாடும் போது இந்திய பாட்டாளி வர்க்கம் ஒரு கடுமையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் உலகின் பல்வேறு பகுதியிலுள்ள பாட்டாளி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை இந்தியப் பாட்டாளி வர்க்கமும் எழுப்பியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை பொறுத்த வரை கூலி, பணிப்பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதகாப்பு போன்றவை முக்கியமான சில பிரச்சினைகளாகும்.
மேலும், பாட்டாளி வர்க்கம் தான் விரும்பிய தொழிற்சங்கத்தைத் துவக்கி நடத்துவது என்பது உள்ளிட்ட தனது உரிமைகளை நிலைநாட்டுவது போன்ற பிரச்சனைகளும் முக்கியமாகும். மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் கடந்த 23 ஆண்டுகளாக நம் நாட்டில் கடைபிடிக்கப்படும், நவீன தாராளமயக் கொள்கைகளோடு தொடர்புள்ள பிரச்சனைகளாகும். உழைக்கும் வர்க்கம், இந்தப் பிரச்சனைகளின் மீது மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரச்சனைகள் பாட்டாளி மக்களின் வாழ்வாதாரங்களோடு தொடர்புடையவை. அதுமட்டுமின்றி நாட்டின் பெரும்பகுதி மக்களின் எதிர்காலத்தோடும் தொடர்புடையது.
இந்திய பாட்டாளி வர்க்கம் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் கடந்த 5 ஆண்டுகளாக பாட்டாளி வர்க்கம் நடத்தி வரும் மாபெரும் ஒன்றுபட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இந்தக் காலகட்டத்தில் இந்திய பாட்டாளி வர்க்கம் துறைவாரியான மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளது. பல ஒன்றிணைந்த போராட்டங்களையும் நடத்தியுள்ளது. நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை நடத்தியுள்ளது. அரசு பின்பற்றும் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் இவையனைத்தும் உலக முழுவதிலும் உள்ள பாட்டாளி மக்கள், பல்வேறு பகுதிகளிலும் நடத்திவரும் மாபெரும் போராட்டங்களோடு ஒத்திசைந்தவை எனலாம்.
நீக்கமற நிறைந்த பிரச்சனைகள்
கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகைக் கடுமையான பிரச்சனைகள் வாட்டி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பல பகுதி மக்களின் வாழ்வு இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம். இத்தகைய சிக்கல்களின் பின் விளைவுகளை எதிர்த்துதான் ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. ஐரோப்பாவில் வேலையின்மை, மிக முக்கியப் பிரச்சனையாகும். கிரீஸில் வேலையற்றோரின் விகிதம் 27.4 சதவீதம் என்பது அதிகாரப்பூர்வமான தகவல்: ஸ்பெயின் 26.7 சதவீதம்: போர்ச்சுகல் 15.5 சதவீதம்: பல்கேரியா 12.9 சதவீதம்: இத்தாலி 12.7 சதவீதம். பெண்கள், இளைஞர்கள் இவர்களைப் பொறுத்த வரையில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. அனைத்து நாடுகளிலும் இந்த இரண்டு பிரிவினரும் வேலையற்றோரில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த காலகட்டத்தில், வேலையின்மை பெருகும்: மேலும் தொழிலாளர்களின் கூலியின் மீதும் சமூகப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளின் மீதும் தாக்குதல் நடைபெறும். இதுதான் வரலாறு நமக்குப் புகட்டும் பாடம். சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குகின்றன. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை ஏவுகின்றன. கொள்கை ரீதியில் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் கூட ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவற்றின் இத்தகைய கொள்கைளை ஏற்கத் தயங்குகிறார்கள். ஏப்ரல் 4 ஆம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் மிகப் பெரிய பேரணி ஒன்று நடந்தது. அதில் ஐரோப்பா முழுவதிலிருந்தும் வந்திருந்த ஆயிரமாயிரம் உழைப்பாளர்கள் சிக்கன நடவடிக்கைகள் ஒழிக என்றும் இன்னொரு ஐரோப்பா சாத்தியமே என்ற கோஷங்களை முழங்கினார்கள். இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகிகள் வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை ஆகிய சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
துரதிருஷ்டவசமாக இந்த மாபெரும் போராட்டங்கள், அநீதியை எதிர்த்த கோஷங்கள், ஏழைகளுக்கும், செல்வந்தவர்களுக்கிடையே அதிகரித்து வரும் இடைவெளியை எதிர்த்த கோஷங்கள் போன்ற போராட்டங்கள் வால்ஸ்டிரீட் முற்றுகை போராட்டத்தைப் போலவே, ஓர் அரசியல் குறிக்கோள் இல்லாமலே முடிந்து விடுகின்றன. எதிர்ப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்திய பின்னர் அடங்கி விடுகின்றன.
தற்போதைய அமைப்புக்குச் சவால்
மேற்கூறிய அனைத்துப் பிரச்சனைகளையும் வர்க்க நோக்கோடு பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது மே தினம். உழைப்பாளிகளைச் சுரண்டினால்தான் முதலாளித்தவம் நிலைத்து நிற்க முடியும். நாம் தற்போது சந்திக்கும் அத்தனைப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம் முதலாளித்துவம்தான். அதனால், முதலாளித்துவ அமைப்புக்கு நாம் சவால்விட வேண்டும். இந்த குறிக்கோளை எட்டுவதற்காக பாட்டாளி வர்க்கமும் மற்ற எல்லா உழைக்கும் மக்களும் ஓரணியாகத் திரண்டுவர வேண்டும். அவர்களுடைய அன்றாடப் போராட்டங்களை ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளின் மீதான விமர்சனத்துடன் இணைக்க வேண்டும். இந்த ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் மிக முக்கியமான பணியாகும். மே தினத்தின் உத்வேகம் நிறைந்த அறைகூவல் முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டத்தை வலுப்படுத்தவோம் என்பதுதான் இன்றைய உலகில் குறிப்பாக நம் நாட்டில் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்த மட்டங்களில் நமது செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். நவீன தாராளமயக் கொள்கைகள், நமது சமுதாய அமைப்பில் கடுமையான தாக்குதலை நிகழ்த்திச் சமுதாயத்தைச் சீரழித்துவிடுகிறது. இத்தகைய நவீன தாராளமயக் கொள்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆழ்ந்து பரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்தச் சமுதாயச் சீரழிவைத் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டும்.
45 கோடிக்கும் மேல் உழைப்பாளர்களைக் கொண்ட நம் நாட்டில், அதில் மிகச் சிறிய பகுதியினரே வெகுஜன அமைப்புகளில் உறுப்பினராக உள்ளனர். இந்த நிலையில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்துவதே நம் தலையாய கடமையாகும். இந்தியாவில் உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் ஆவர். தொழிற்சங்கங்கள் இந்த மக்களின் பிரச்சினைகளையும் கையிலெடுக்க வேண்டும். இந்தப் பகுதி மக்கள் ஈவு இரக்கமின்றிச் சுரண்டப்படுகிறார்கள். லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்கள். உழைக்கும் மக்களிடையே நிலப்பிரபுத்துவக் கருத்துக்களும், திருத்தல்வாத மனோநிலையும் காணப்படுவது இன்னொரு பெரும் சவாலாகும். இது நம் பணியை மேலும் முக்கியமானதாக்குகிறது. தொழிற்சங்கங்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டுவதும், பாட்டாளி மக்களிடையே விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களைப் பரப்புவதும் நமது மிக முக்கியமான பணியாகும். நமது போராட்டங்களில் ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய தனிப்பட்ட பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் போது, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்கள், அதன் தலையீடு இவற்றைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.
இந்த ஆண்டு முதல் உலகப்போர் நிகழ்ந்து நூறாண்டு நிறைவு பெறுகிறது. இந்தப் போர் முடிந்தாலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலேயே உலகம் இன்னொரு கொடூரமான போரைச் சந்தித்தது. இதன் விளைவாக ஏராளமான பொருட்சேதமும், உயிர் சேதமும் விளைந்தன. ஆனால், இன்னமும் போர் வெறி குறையவில்லை. ஏகாதிபத்திய நாடுகள், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு கண்டங்களிலும், பல்வேறு நாடுகளிலும் அவற்றின் விவகாரங்களில் தலையிட்டு, அந்நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முனைகின்றன.
ஏகாதிபத்திய சதிக்கு ஆளாகியிருக்கும் நாடுகளான சிரியா, வெனிசுலா, பாலஸ்தீன், கியூபா முதலிய நாடுகளின் மக்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நாடுகளில் ஏகாதிபத்திய சதியை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும். லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்நாட்டு மக்களுக்கும் ஆதரவாக நிற்க வேண்டும்.
நம்முன் இருக்கும் பணிகளை நமக்கு நினைவூட்டும் நாள் மே தினம். இந்தியாவில் தற்போது மதவெறி வகுப்புவாதம் தலைவிரித்தாடும் நிலைமையைக் காண்கிறோம். இத்தகைய வகுப்புவாதம் மக்களைக் கூறுபோடுவதோடு சமூக அமைதியைச் சீர்குலைக்கிறது. அதுமட்டுமின்றி உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் குலைத்துத் தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் இன்னொரு பிரச்சினை சாதியம். சாதிய மோதல்களை ஊக்குவிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு, சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.
இந்திய தொழிற்சங்க மையத்தைத் தோற்றுவித்தவரும், அதன் தலைவருமான பி.டி.ரணதிவே “மே தினத்திற்குப் புரட்சிகரமான பாரம்பரியம் உண்டு. இந்தப் பாரம்பரியம் எப்போதும், மக்களின் கோரிக்கைகளோடு, உழைக்கும் மக்களின் சர்வதேச ஒருமைப்பாட்டையும் இணைத்துக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் நம்பிக்கையும், திண்மையும் கொண்டது. உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று உறுதி பூண்டது” – என்கிறார்.
உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டங்களில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் மகத்தான தியாகங்களை நினைவு கொள்வோம். வர்க்க ஒற்றுமையை மனதில் இருத்திப் புரட்சிப் பதாகையை உயர்த்திப் பிடித்து நமது இலக்கை நோக்கி வீறு நடை போடுவோம்.
– தமிழில் பேராசியர் ஹேமா
Leave a Reply