வாசகர்களுக்கு,
பொதுவாக, உயில் என்பது வசதியானவர்கள் தங்கள் சொத்துக்களை யாருக்கு, எப்படி அளிக்க விரும்புகின்றனர் என்ற விபரங்களைக் கொண்டிருக்கும். ஆனால் இது வித்தியாசமான உயில். மக்களின் அன்பு, மரியாதையை விலை மதிப்பில்லா சொத்தாகக் கருதி, மக்களுக்காகவே போராடிய மா மனிதனின் இறுதி ஆசைகளை உள்ளடக்கிய ஆவணம். வாசிப்பை நேசிப்போருடன் இதை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஹனோய் மத்தியக்குழு
19, ஆகஸ்ட், 1989 எண்.151/ TB/TU
செய்திக்குறிப்பு
நமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஹோ-சி-மின் நமது கட்சிக்கும், நமது மக்களுக் கும் விலை மதிப்பில்லாத உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார். தேசிய விடுதலை இயக்கம் வெற்றி பெற்று முன்னேறவும், நமது நாட்டை சோஷசலிசத்தை நோக்கி தளராமல் முன்னெடுத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொள்ளவும், நமது கட்சி, மக்கள், ராணுவத்தை ஊக்குவிக்கும் வண்ணம் அந்த உயில் அமைந்துள்ளது. அதனால்தான் அவர் மறைந்த உடனேயே அதை வெளியிட்டோம்.
ஹோ-சி-மின்னின் மறைவுக்குப் பின்னர் அவருடைய 20ம் ஆண்டு நினைவையொட்டியும், நூறாவது பிறந்த ஆண்டு நிகழ்ச்சிகளின் தயா ரிப்பில் ஈடுபட்டுள்ள சூழலில் கட்சியின் 6-வது மத்தியக்குழுவின் அரசியல் தலைமைக்குழு தொடர்பான விஷயங்களை நமது கட்சி, மற்றும் மக்களுக்குத் தெரியப்படுத்தும் பொறுப்பு உள்ளது எனக் கருதுகிறது. 1965ம் ஆண்டு ஹோ-சி-மின் எழுதி, அவரே தட்டச்சு செய்த 15, மே 1965 தேதியிட்ட கடிதம் அவருடைய கையெழுத்துடன் உள்ளது. அதன் மறுபுறம் அன்றைய மத்தியக்கமிட்டியின் முதன்மை செயலர் தோழர் லேதுவான் அவர்களின் கையொப்பமும் உள்ளது. ஹோ-சி-மின் மறைந்த பொழுது, அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த இயக்கமும் முற்றுப் பெறவில்லை.
வெளியிடப்பட்ட உயில்
வியட்நாம் ஜனநாயகக் குடியரசு விடுதலை மகிழ்ச்சி
10, மே 1969
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, தேசிய விடுதலைக்காக நமது மக்கள் நடத்தும் போராட்டம், நம் மக்கள் அனைவரும் படும் கஷ்டங்கள், அவர்களின் தியாகங்களைத் தாண்டி முற்றிலுமாக வெற்றியடையும். இந்த வெற்றி நிச்சயம்.
வெற்றி கிட்டிய பின்னர், தெற்கு வடக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, நமது மக்களை, தோழர்களை, ஊழியர்களை, போராளிகளை, முதியோர், இளைஞர்கள், குழந்தைகளை நேரில் சந்தித்து வீரத்துடன் போராடியதற்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.
பின்னர், நம் மக்களின் சார்பில் சோஷலிச முகாமிலுள்ள சகோதர நாடுகளுக்கும், நேச நாடுகளுக்கும் சென்று, அமெரிக்க ஆக்கிர மிப்பை எதிர்த்த நமது இயக்கத்திற்கு முழு மனதுடன் ஆதரவளித்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பேன்.
சீனாவின் “டாங்” கால கவிஞர் து பூ எழுதினார் : “எல்லாக் காலங்களிலும் எழுபது வயதை எட்டியவர்கள் சிலரே” இந்த ஆண்டு 79 வயதை தொடும் நான் அந்த சிலரில் ஒருவன் என நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் எனது உடல்நலம் சற்று மோசமாகியுள்ள போதிலும், என்னால் தெளிவாக சிந்திக்க முடிகிறது. எழுது வசந்தங்களைக் கண்ட ஒருவரின் உடல்நலம் வயதாகும்போது குறைவது இயல்பு. அது ஒன்றும் அதிசயமல்ல.
ஆனால், என் தாய் நாட்டிற்கு எனது மக்களுக்கு, புரட்சிக்கு நான் இன்றும் எவ்வளவு நாட்கள் பணியாற்ற முடியுமென யாரால் கூற இயலும்? எனவே, கார்ல் மார்க்ஸ், வி.ஐ.லெனின் மற்றும் இதர புரட்சியாளர்களை நான் சென்றடையும் முன்பு சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் மூலம் நமது மக்கள், கட்சித் தோழர்கள், உலகெங்கிலுமுள்ள நமது நண்பர்கள் ஆச்சரியமடையத் தேவை இருக்காது.
முதலில் கட்சி பற்றி
நமது கட்சி துவக்கப்பட்டது முதல் ஒற்றுமையுடன், அனை வரையும் திரட்டி, தீர்மானகர மான போராட்டத்திற்கு தலைமை ஏற்று வெற்றி மேல் வெற்றி பெற்றுள்ளோம். உழைக்கும் வர்க்கம், மக்கள், தாய்நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடனும், நெருக்கமான ஒற்றுமையை கட்டி காத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமை என்பது நமது கட்சியின் மக்களின் விலை மதிப்பில்லாத பாரம்பரியமாகும். மத்திய கமிட்டி தோழர்கள் முதல் கிளை வரை ஒருமித்த சிந்தனையுடன் ஒற்றுமையாக கட்சி இருப்பது கண்ணின் மணி போன்றது.
கட்சிக்குள் பரந்த ஜனநாயகம் வேண்டும். அதேசமயம் விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் முறையாக, கவனத்துடன் நடைபெறுவது கட்சியின் ஒற்றுமையை வளர்க்க, கட்டிக்காக்க உதவும், தோழமை உணர்வு நிலவுவது அவசியம். நம் கட்சி தற்போது அதிகாரத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும், ஊழியரும் புரட்சிகர ஒழுக்கத்தை ஆழமாக தமக்குள் கொண்டிருக்க வேண்டும். திறமை, கடும் உழைப்பு, சேமிப்பு, உண்மை, மக்கள் நலனில் முழு அர்ப்பணிப்பு, சுயநலம் இன்றி முழு பொதுநலனுக்காக பாடுபடும் குணங்களை கொண்டிருத்தல் அவசியம். மக்களின் நம்பிக்கையான ஊழியன் மற்றும் சிறந்த தலைவன் என்ற பெருமைக்கு உகந்த கட்சியாக செயல்பட, நம் கட்சி தூய்மையுடன் செயலாற்ற வேண்டும்.
உழைக்கும் இளம் சங்க உறுப்பினர்கள் மற்றும் இதர இளைஞர்கள் பொதுவாக நல்லவர்கள், கஷ்டங்களை கண்டு அஞ்சாது, முன்னேற்றத்தை விரும்பி, எப்பொழுதும் செயல்படத் தயாராக உள்ளனர். அவர்களுடைய புரட்சிகர நல்லெண்ணங்களை வளர்த்து, சோஷலிசத்தை கட்டுவதற்கு தகுந்த வண்ணம், ‘சிவப்பான’ தியமையான அடுத்த தலைவர்களாக வளர்வதற்கு கட்சி பயிற்சி அளிக்க வேண்டும். அடுத்த தலைமுறையை பயிற்றுவிப்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியமானது. மிகவும் அவசியமானது. மலைகளிலும், சமவெளிகளிலும் உள்ள நமது தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர்கள். நிலப்பிரபுத்துவ காலனிய ஆதிக்கம், சுரண்டலுக்கு ஆட்பட்டவர்கள் அத்துடன் பல ஆண்டுகளாக போரையும் எதிர் கொண்டவர்கள்.
இருப்பினும், நமது மக்கள், வீரம், தைரியம், ஊக்கத்துடன் கடும் பணியாற்றுகின்றனர். நமது கட்சி துவக்கப்பட்டதிலிருந்து அதை பின்பற்றுபவர்களாக, விசுவாசிகளாக இருந்து வருகின்றனர்.
பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களைத் தீட்டி, நமது மக்களின் வாழ்க்கை முன்னேற தொடர்ந்து கட்சி பாடுபட வேண்டும்.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் தொடரலாம். நமது மக்கள் புதிய தியாகங்களை செய்ய வேண்டி வரலாம். உடைமைகளை இழக்கலாம். ஆனால் எது நடந்தாலும், இறுதி வெற்றி கிட்டும் வரை அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து போரிடும் உணர்வை தளரவிடக் கூடாது.
‘நமது மலைகள் எப்பொழுதும் இருக்கும்
நமது ஆறுகள் எப்பொழுதும் இருக்கும்
நமது மக்கள் எப்பொழுதும் இருப்பார்கள்:
அமெரிக்க படையெடுப்பாளர்கள் தோற்பார்கள்,
நாம் நமது பூமியை மேலும்
பத்து மடங்கு அழகாக நிர்மாணிப்போம்’
எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருமோ தெரியாது. ஆனால் நம் மக்கள் முழு வெற்றி கிட்டுமென உறுதி பூண்டுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கண்டிப்பாக நம் நாட்டிலிருந்து வெளியேறுவர். நம் தாய்நாடு மீண்டும் ஒன்றிணையும். தெற்கிலுள்ள நமது சகோதரர்களும், வடக்கிலுள்ள நம்மக்களும், மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைவார்கள். நாம் சிறிய நாடுதான். ஆனால் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம், உலகின் இரண்டு, மாபெரும் ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்காவையும் பிரான்சையும், போராடி தோற்கடித்தோம் என்ற பெருமை நமக்கு உண்டு. உலக தேசிய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தி இருக்கிறோம் என்ற பெருமை உண்டு.
உலக கம்யூனிச இயக்கம் பற்றி..
எனது வாழ்க்கை முழுவதையும் புரட்சிக்கு அர்ப்பணித்தவன் என்ற முறையில், சர்வதேச கம்யூனிச இயக்கமும், தொழிலாளர் இயக்கமும் வளர்ச்சி அடைவதைக் கண்டு கூடுதல் பெருமை அடைகிறேன். சகோதர கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவு என்னை வருத்தமடையச் செய்கிறது.
மார்க்சிய – லெனினியம் மற்றும் தொழிலாளி வர்க்க சர்வதேசியம் என்ற அடிப்படையில் உணர்வு மற்றும் காரண காரியங்களைக் கொண்டு சகோதர கட்சிகளிடையே ஒற்றுமையை மீட்டெடுக்க நமது கட்சி சிறந்ததொரு பங்களிப்பை செலுத்துமென நம்புகிறேன். சகோதர கட்சிகள், நாடுகள் மீண்டும் இணையும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றி
எனது வாழ்க்கை முழுவதையும் முழு மனதுடன், பலத்துடன், தாய்நாட்டிற்காக, புரட்சிக்காக, மக்களுக்காக பணியாற்றுவதில் அர்ப்பணித்துவிடும். இவ்வுலகிலிருந்து, நான் மறையும் பொழுது, இன்னும் நீண்டகாலம் என் பணி தொடர இயலாதே என்பதைத் தவிர, வருத்தப்பட எனக்கு எதுவுமில்லை.
நான் இறந்த பின்பு ஆடம்பரமான இறுதி நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் மக்களின் நேரமும், பணமும் விரயமாகும்.
இறுதியாக, அனைத்து மக்களுக்கும், கட்சி முழுமைக்கும், ராணுவம் முழுமைக்கும், எனது மருமகன்கள், மருமகள்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எல்லையற்ற, அளவில்லா என் அன்பை விட்டுச் செல்கிறேன். உலகிலுள்ள நமது தோழர்கள், நண்பர்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதியான, மீண்டும் ஒன்றிணைந்த, சுதந்திரமான, ஜனநாயகப்பூர்வமான மற்றும் செழிப்பான வியத்நாமை கட்டுவதற்கு கட்சி முழுவதும், மக்கள் அனைவரும், நெருக்கமாக இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டு மென்பதும், உலக புரட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்த வேண்டுமென்பதே எனது இறுதி ஆசை.
– ஹனோய் 10, மே 1969
ஹோ-சி-மின்
வியத்நாம் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டி விடுத்த இரங்கல் அறிக்கை
குடிமக்களே, நாடு முழுவதிலுமுள்ள போராளிகளே, தோழர்களே, நண்பர்களே, நமது மரியாதைக்கும், அன்பிற்கும் உரிய தலைவர் ஹோ-சி-மின் மறைந்துவிட்டார். இது அளவிட இயலா நஷ்டம்! நமது துயரத்திற்கு எல்லையில்லை! தலைசிறந்த தலைவரை அறிவாளியை, ஆசானை நமது மக்களும், நம் கட்சியும் இழந்துவிட்டது.
சர்வதேச கம்யூனிச இயக்கமும், தேசிய விடுதலை இயக்கங்களும், உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகளும் மிகச்சிறந்த போரா ளியை, வலுவான தோழனை, அருமை நண்பனை இழந்துள்ளன.
நமது மக்களும், போராளிகளும், நாடும் அளவிலா துயரத்தில் மூழ்கியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகள் நமது ஆழ்ந்த துயரத்தில் பங்கேற்கின்றனர்.
இளமைக் காலம் முதல், இறக்கும் வரை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிபர் ஹோ-சி-மின் நமது மக்களுக்காகவும் உலக மக்களுடன் புரட்சிக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். கஷ்டங்களும், தியாகங்களும் நிறைந்த அவரது வாழ்க்கை, அளவிட இயலா தூய்மை, அழகு, நேர்மையுடன் கூடியதாக இருந்தது.
ஆழ்ந்த தேசப்பற்றுக் கொண்ட ஹோ-சி-மின் மார்க்சிய – லெனினியப் பாதை மட்டுமே மக்களுக்கும், நாட்டிற்கும் விடியலைத் தருமென நம்பினார். வியத்நாம் சூழலுக்கேற்ப மார்க்சிய – லெனினியக் கொள்கையை ஹோ-சி-மின் தான் முதன் முறையாக அமலாக்கினார். படிப்படியாக, வெற்றிக்குப் பின் வெற்றி ஈட்டும் வண்ணம் வியத்நாம் புரட்சிப் பாதையை அவர் வகுத்தார்.
அதிபர் ஹோ-சி-மின் நமது கட்சியை அமைத்தவர். அதன் தலைவர் கட்சி கல்வியாளர். வியத்நாமின் ஜனநாயக குடியரசை கட்டி அமைத்தவர். நமது கட்சி மக்கள் ராணுவத்தின் ஆன்மாவாக விளங்கி, நம் தாய்நாட்டின் வரலாற்றை பொன்னெழுத்துக்களில் பொறித்தவர். நமது நாடு சிறந்த தேசப்பற்றுக் கொண்ட வரை தோற்றுவித்தது. அவர் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
வியத்நாம் மக்களின் நாலாயிரமாண்டு வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளமாக ஹோ-சி-மின் திகழ்ந்தார். “விடுதலையை விட அரிதானது எதுவுமில்லை” ‘சுதந்திரமின்றி அடிமைகளாக வாழ்வதை விட, கஷ்டங்களை, தியாகங்களை எதிர்கொள்வது எவ்வளவோ மேல். வியத்நாம் ஒரே நாடு, வியத்நாமியர்கள் ஒரே தேசத்தவர்கள். தெற்கின் ரத்தம், வியத்நாமிய ரத்தும், வியத்நாமிய சதை” என்றார். தெற்கின் விடுதலைக்கு இரவு, பகலாக உழைத்தவர்.
“எனக்கு ஒரே ஒரு ஆசை தான் உள்ளது. உண்மையான ஆசை… நமது நாடு முழு விடுதலை யடைய வேண்டும். நம் மக்கள் முழு விடுதலை பெற்று, போதிய அளவு உணவு, உடை, கல்வி பெற வேண்டும்” என்று அவர் “வடக்கும் சோசலிசத்தை நோக்கி செல்ல வேண்டும்” என்றார்.
அவருக்கு பிரியாவிடை செலுத்தும் இத்தருணத்தில், உழைக்கும் மக்களின் வளமான வாழ்க்கைக்கு, மகிழ்ச்சிக்கு அடிப்படையாக சோசலிச சமுதாயத்தை உருவாக்குவோம் என சபதமேற்போம்!
கட்சியின் பலம் அதன் ஒற்றுமையே என்பதை அவர் எப்பொழுதும் வலியுறுத்தி வந்தார். தெற்கு – வடக்கு சகோதரத்துவம், ஒரே சிந்தனை என்பதை கட்டிக் காக்க வேண்டுமென்பதை சுட்டிக் காட்டினார். மார்க்ஸ், லெனின் ஆகி யோரின் தீவிர சீடராக தம்மை கருதிய அவர் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கும், தேசிய விடுதலை இயக்கத்திற்கும் அயராது பாடுபட்டார். அவரை பிரிந்துள்ள நிலையில், மார்க்சிய லெனினிய கோட்பாடுகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் சர்வதேசியத்தை வளர்க்க பாடுபடுவோம். உலக மக்களின் அமைதிக்காக தேசிய விடுதலைக்காக, ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்காக பாடுபடுவோம்.
அற்புதமான பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். அருமைத் தோழர்களே, மக்களே, அவருடைய இழப்பின் துக்கத்தை தாங்கிக் கொண்டு, தெற்கும், வடக்கும், இணைந்து, வளமான எதிர்காலத்தை உருவாக்க சபதமேற்போம்!
ஹோசிமின் என்றும் வாழ்வார். அவர் சென்ற பாதையில் நாம் செல்வதே அவருக்கு நாம் பிரியா விடை அளிப்பதாகும்.