மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வகுப்புவாத அரசியல்!


“மதவெறி மற்றும் பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டம் வளர்ந்து மத்தியில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளதால் மதச்சார்பின்மை அடித்தளத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசு, நிர்வாகம், கல்வி அமைப்பு, தகவல்தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை மதவெறிமயமாக்க திட்டமிட்ட வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. பெரும்பான்மை மதவெறியின் வளர்ச்சி சிறுபான்மை மதவெறி சக்திகளை வலுப்படுத்தும், மேலும் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும். பெரும் முதலாளிகளில் ஒருபகுதியினர் பாஜக மற்றும் அதன் மதவெறி அமைப்புகளுக்கு ஆதரிவளிப்பது நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு தொடர்ச்சி யான ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, மதச்சார் பின்மை கோட்பாடுகளை தொய்வின்றி செய லாக்க வேண்டுமென்பதற்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்த நமது கட்சி உறுதி பூண்டுள்ளது”.

2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கட்சித்திட்டம் வகுப்புவாத அபாயம் பற்றியும், அதை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டத்தின் அவசியம் பற்றியும் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

1999-ஆம் ஆண்டிலிருந்து 2004-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகள் வரை பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தது. பாஜக அரசின் நடவடிக்கை பற்றியும், ஆர்.எஸ்.எஸ் பற்றியும் கட்சித்திட்டம் துல்லியமாக மதிப்பீடு செய்துள்ளது. தற்போது அறுதிப் பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.

16-வது மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகாரத்திற்கு வந்தது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.

“பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்திருப்பது இந்திய அரசியலில் வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டுள்ளதையே எடுத்துக்காட்டு கிறது”.

ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசு இந்துத்துவா கொள்கையான இந்து ராஷ்டி ராவை உருவாக்கிட முயற்சிப்பதோடு நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளையும் வேகமாக அமலாக்கி வருகிறது. இதனால்தான் பாஜக ஆட்சிக்கு வந்திருப்பதை ஒரு வலதுசாரி திருப்பமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.

நாடு விடுதலையடைந்த போது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாடு முழுவதும் இந்து, முஸ்லிம் கலவரத்தை உருவாக்கியதோடு, மகாத்மாகாந்தியின் படுகொலைக்கும் ஆர்எஸ்எஸ் காரணமாக இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாத நடவடிக்கைதான் காந்தியின் படுகொலைக்கு காரணமென அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேல் கூறினார். ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. இனி அரசியலில் ஈடுபட மாட்டோம் என ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதிமொழி அளித்த பிறகே மத்திய அரசு ஆர்எஸ்எஸ் மீதான தடையை 1949-இல் நீக்கியது.

காந்தியின் படுகொலையையொட்டி ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டதும் இனி அரசியலில் பங்கு பெற மாட்டோம் என ஆர்எஸ்எஸ் வாக்குறுதியளித்த பின்னணியில், தன்னுடைய வகுப்புவாத நடவடிக்கையை தொடர ஒரு அரசியல் பிரிவு வேண்டும் என்ற நோக்கத்தோடு 1951 ஆம் ஆண்டு ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை ஆர்எஸ்எஸ் உருவாக்கியது.

1977ம் ஆண்டு ஜனதா கட்சி உருவான போது ஆர்எஸ்எஸ் அதில் இணைந்தது. (ஜனசங்கம், முன்னாள் சோசலிஸ்டுகள், ஸ்தாபன காங்கிரஸ் இணைந்து ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது). ஜனதா கட்சி உடைந்து அதிலிருந்து வெளியேறி பாரதிய ஜனதாகட்சியை ஆர்எஸ்எஸ் உருவாக்கியது. ஜனதா கட்சியிலிருந்து போது மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களோடு ஆர்எஸ்எஸ்-க்கு ஏற்பட்ட தொடர்பைப் பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சி தன்னை விரிவுபடுத்திக் கொண்டது.

நாடு முழுவதும் இந்து, முஸ்லிம் வகுப்பு மோதலை உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய செல்வாக்கை விரிவுபடுத்தி மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி முயற்சித்தது. இதற்காக பல உத்திகளை பாஜக கடைபிடித்தது.

ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி உள்ளது என ஏற்கனவே ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட தனது வகுப்புவாத நிலைபாட்டை முன்னெடுத்துச் செல்ல பாஜக திட்டமிட்டது. 1986-89ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் ராம் ஜென்ம பூமி, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு பொதுவான சட்டம், பசுவதை தடை எதிர்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங் பரிவார் அமைப்புகள் பிரச்சாரத்தை துவக்கின.

1980களின் இறுதி ஆண்டுகளில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடைபிடித்த புதிய பொருளாதாரக் கொள்கையால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதை பாஜக பயன்படுத்தத் துவங்கியது.மேலும் பாஜகவும் புதிய பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கக் கூடிய கட்சி என்ற பின்னணியில் நேரு காலத்தில் துவங்கப்பட்ட சுயசார்பு பொருளாதாரக் கொள்கையிலிருந்து மத்திய அரசு விலகிச் சென்றது.வகுப்புவாத இயக்கம் தலை தூக்குவதும், புதிய பொருளாதாரக் கொள்கையை அமலாக்கம் துவங்கியதும் இந்தியாவில் ஒரு புதிய நிலைமை உருவானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாஜகவின் தலைவரான எல்.கே,அத்வானி தலைமையில் பிரச்சார யாத்திரையைத் துவக்கினர். இந்த யாத்திரை செல்லும் இடங்களி லெல்லாம் வகுப்பு மோதல் ஏற்பட்டது. அத்வானி தலைமையிலான ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று ஜோதிபாசு வலியுறுத்தினார். பீகார் மாநிலத்திற்கு அத்வானி தலைமையிலான ரத யாத்திரை வந்தபோது அத்வானியை கைது செய்து ரதயாத்திரையை லல்லு தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது.

நாடு முழுவதும் பல பகுதிகளில் வகுப்பு மோதல் உருவானது. பல முனைகளிலிருந்து புறப்பட்ட சங் பரிவார் அமைப்புகளின் குழுக்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதியை தகர்க்க திட்டமிட்டன. தேச ஒற்றுமைக்கு ஆபத்தை உருவாக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் தலைமையிலான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலை கூட்ட வேண்டுமென்று மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு வலியுறுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டுக்குழு கூட்டம் நடைபெற்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சுர்ஜித், ஜோதிபாசு ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். பாபர் மசூதியைப் பாதுகாக்க தேவைப்பட்டால் ராணுவத்தையும் பயன்படுத்த வேண்டுமென்று தோழர் ஜோதிபாசு ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசினார். ஜோதிபாசுவின் கருத்தை அனைவரும் ஆதரித்தனர். ஆனால், டிசம்பர் 6 அன்று மதவெறி பிடித்த ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங் பரிவார் அமைப்புகள் பாபர் மசூதியை தகர்த்தன. நாடு முழுவதும் பல பகுதிகளில் மதக்கலவரம் மூண்டு பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்திய வரலாற்றில் டிசம்பர் 6 ஒரு கறுப்பு நாள் என குடியரசுத் தலைவர் கூறினார்.

பாஜகவின் வகுப்புவாத நடவடிக்கைகளும் அதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த வகுப்பு மோதல்கள் பின்னணியில் 1991-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் களில் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக பலம் பெற்றது. 1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 161 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1999-ம் ஆண்டு பல மதச்சார் பற்ற கட்சிகள் மதவெறிக்கட்சியான பாஜக வோடு கூட்டு சேர்ந்ததையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. 1998ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்து குறுகிய காலத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 1999ம் ஆண்டு பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்த 6 ஆண்டு ஆட்சி காலத்தில் பாஜக எல்லாத்துறைகளிலும் இந்துத்துவாவை புகுத்திட திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டது. பாஜக தலைவராக இருந்த அத்வானி ஆட்சியைப் பிடிப்பது எங்களது நோக்கமல்ல, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

இதேகாலத்தில் (2002 முதல் 2007 வரை) குஜராத்தில் மோடி தலைமையிலான அரசு அப்பட்டமான வகுப்புவாத அணுகுமுறையை கடைபிடித்தது என்பதை நாடறியும். கோத்ரா ரயில் சம்பவத்தையொட்டி பாஜக தலைமையிலான மாநில அரசின் ஆசியோடு இஸ்லாமியர்களின் மீது ஏவிவிடப்பட்ட வன்முறையில் சுமார் 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இன்னமும் கூட ஒருபகுதி இஸ்லாமியர்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். இன்றும் பாஜக தலைவராக உள்ள அமித்ஷா உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரி கள் மீது இஸ்லாமியர்களுக்கு எதிரான போலி என்கவுண்டர் குறித்து சிபிஐ தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்த படுகொலையை நாடே கண்டித்தது. ஆனால், குஜராத் ஒரு பரிசோதனைக் கூடம், எதிர்காலத்தில் குஜராத் பாதையை மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்வோம் என பாஜக தலைவர்கள் இப்போதும் பேசி வருகிறார்கள்.

2004 முதல் 2014ம் ஆண்டு வரையில் 10 ஆண்டு காலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி புரிந்தது. இக்காலத்தில் மத்திய அரசு கடைபிடித்த நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பல துறைகளில் நெருக்கடியை உருவாக்கியது. பொருளாதார வளர்ச்சியில் தேக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை, இதுவரை கண்டிராத அளவிற்கு மெகா ஊழல்கள், இப்பின்னணியில் 16-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்தது.

மேற்கண்ட சூழலில் நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் கார்ப்பரேட் கம்பெனி கள் பெரும்பான்மையாக பாஜகவை ஆதரித்தன. குறிப்பாக குஜராத் மாடலை (பொய்யான பிரச்சாரம்) நாடு முழுவதும் அமலாக்கிட வேண்டுமென்ற நோக்கத்தோடு பெருமுதலாளிகளும், பெரும்பான்மையான ஊடகங்களும் மோடியை ஆதரித்தார்கள்.

மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தயாரிப்புப்பணியை பாஜக துவக்கிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு அமித்ஷா பொறுப்பாக்கப்பட்டு தேர்தலுக்கு முன்னதாக முசாபர்பூரில் மதக் கலவரத்தை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற வகுப்புவாத அணுகுமுறையை பாஜக கடைப்பிடித்தது.

இந்துத்துவா வகுப்புவாதக் கொள்கையை உடைய பாஜகவை பெருமுதலாளிகள் ஆதரிப்பது ஆபத்தான விளைவுகளை உருவாக்கிடுவதோடு, மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களுக்கு விரோதமான பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடிக்கிற போது அதை எதிர்த்து போராட முன்வரும் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை வகுப்புவாத ரீதியில் பிளவுபடுத்துகிறது.

மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்துத்துவாவை விதைத்திட பாஜக பல வடிவங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  • இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சுதர்சன ராவ் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவரை தலைவர் ஆக்கியது.
  • ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று சமஸ்கிருத மொழியில் முன்மொழிந்தது.
  • நாடு முழுவதுமுள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா கொண்டாட வேண்டுமென்று பணித்தது.
  • தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பாஜக தலைவர் மோகன் பகவத் அதிகாரப்பூர்வமாக இந்துத்துவாவை பிரச்சாரம் செய்ய அனு மதித்தது.
  • இந்துத்துவா என்பதுதான் இந்தியர்களின் அடையாளம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியிருப்பது
  • ராஜேந்திர சோழனுக்கு பாஜக விழா எடுக்க முடிவெடுத்திருப்பது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு குஜராத், கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் வேறு பல பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் தூண்டி விட்ட வகுப்புமோதல்கள் நடைபெற்றுள்ளன. அதிகமான சம்பவங்கள் நடைபெற்றது உத்தரபிரதேச மாநிலத்தில்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறிப் பிரச்சாரம் செய்து, மதக்கலவரத்தை உருவாக்கி மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி இந்துக்கள் மத்தியில் இந்துத்துவா பிரச்சாரத்தை கொண்டு செல்லும் ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படையான திட்டத்தை இன்று நாட்டின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் நிறைவேற்றி வருகிறது. நமது கட்சி திட்டம் குறிப்பிடுவது போல் வகுப்புவாத நடைமுறை இங்கு பாசிசத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியே செயல்படுத்தப்படுகிறது. ‘வன்முறை’ அதன் செயல்திட்டத்தின் ஒரு பகுதி. நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற நிகழ்வுகள்அதை உறுதி செய்கின்றன. ஆனால் வன்முறை வழியில் மட்டும்தான் பாசிசம் வேரூன்றுகிறது என்பதை கிராம்சி போன்ற அறிஞர்கள் மறுக்கின்றனர்; சமூகத்தின் அனைத்து தளங்களிலும் அதன் ஆதிக்கத்தை நிறுவுவதன் மூலம்தான் வெற்றி பெறுகிறது என்கிறார். ஆகவே, வகுப்பு மோதல் கள் மூலமாக மட்டுமல்ல, பண்பாட்டுத் தளத்திலும் ஆர்எஸ்எஸ் தன்னுடைய இந்துத் துவாவை புகுத்திட பல வடிவங்களில் செயல்பட்டு வருகிறது.

மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை ஆர்எஸ்எஸ் நடத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளையும் ஆர்எஸ்எஸ்-சினுடைய உடற்பயிற்சிக்கும், ஸ்தாபனப் பயிற்சிக்கும் பயன்படுத்துகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான அணுகுமுறையை ஆர்எஸ்எஸ் கடைபிடிக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. ராஜேந்திர சோழன் காலத்தில் எண்ணாயிரம் என்ற கிராமத்தில் (விழுப்புரம் மாவட்டத்தில்) பல்கலைக்கழகத்தை உருவாக்கி, சமஸ்கிருதம் கற்றுத் தந்ததற்காக முதலாம் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. உண்மையில் எண்ணாயிரத்தில் சமஸ்கிருதம் கற்றுத்தந்ததாக தன்னுடைய நூலில் குறிப்பிடும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அங்கு தமிழ் கற்றுத்தந்ததற் கான ஆதாரமில்லை என்று கூறுகிறார். எனவே, சமஸ்கிருதத்தை இந்து மதத்தோடும், இந்துத் துவாவோடும் இணைத்துப் பார்க்கும் ஆர்எஸ்எஸ் சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடித்ததற் காகத்தான ராஜராஜ சோழனுக்கு விழா எடுக் கிறது.

கேரளத்தில் நாராயண குருவுக்கும், ஐயங் காளிக்கும் ஆர்எஸ்எஸ் விழா நடத்துகிறது. ஆனால், இவர்கள் இரண்டு பேரும் சாதிக் கொடுமைக்கு எதிராக போராடியவர்கள். இந்து மதத்தை தூக்கிப்பிடிக்கும் ஆர்எஸ்எஸ், மனு தர்மத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் சாதி வேறு பாட்டை எதிர்த்த நாராயண குருவுக்கோ, ஐயங்காளிக்கோ விழா நடத்துவது ஒடுக்கப்பட்ட மக்களை தம் பக்கம் திரட்டுவதற்காக அவர்கள் செய்யும் மோசடி வேலை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

“வகுப்புவாதம் என்பது அடிப்படையில் ஆட்சியைப் பிடிப்பதற்கான தந்திரமே ஆகும்…. இங்கு அதிகாரம் என்பது அடிப்படை மக்களின் எண்ணங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் சமூக அதிகாரத்தை நிலை நாட்டி அதன் மூலம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதே வகுப்புவாத சக்திகளின் நோக்கம்” என கூறுகிறார் பேராசிரியர் கே.என்.பணிக்கர். கல்வி உள்ளிட்ட அனைத்து சமூக, பண்பாட்டு தளங்களிலும் ‘இந்துத்துவா’ செயல்திட்டம் செயல்படுத்தப்படு வதிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

வகுப்புவாத அரசியலின் பின்னே உள்ள பொருளாதார அடித்தளத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உலகமய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து கடுமையான போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் அல்லது வலுவற்றதாக மாற்றும் தந்திரமான வேலையினை வகுப்புவாத அரசியல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. திட்டமிட்டு செயல்படுத்தப்படும் மத, சாதிக் கலவரங்கள் மக்களின் ஒற்றுமையினை சீர் குலைக்கிறது; தொழிலாளி வர்க்க ஒற்றுமை யினையும் சிதைக்கிறது. தாராளமய கேடுகளை எதிர்த்து நடத்தப்படும் இயக்கங்களை திசை திருப்ப இந்த சாதி, மத அடையாளங்கள் பயன் படுத்தப்படுகின்றன. ஆகவேதான், இன்று நாம் நடத்த வேண்டிய அரசியல் போராட்டத்தில் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டங்களையும், தாராளமயத்திற்கெதிரான போராட்டங் களையும் ஒருங்கிணைக்க வேண்டிய அரசியல் தேவை நம்முன் உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க காலத்திலிருந்தே வகுப்புவாதத்திற்கெதிரான போராட்டத்தை அரசியல் மற்றும் பண்பாட்டு தளங்களில் தொய்வின்றி பல்வேறு வடிவங்களில் நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் பரவலாக பல்வேறு மக்கட்பிரிவினரிடையே எடுத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது என்ற உணர்வோடு செயல்படுகிறது. இது தொய்வில்லாது நடத்தப்பட வேண்டிய போராட்டம் என்பதை கட்சியின் திட்டமும் அதன் ஸ்தாபன முடிவுகளும் கட்சி அணிகளுக்கு வலியுறுத்துகின்றன.



%d bloggers like this: