மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஜவஹர்லால் நேரு நூற்றாண்டில் ஒரு மதிப்பீடு!


(சென்ற மாத தொடர்சி) …….

பி.டி.ரணதிவே

தமிழில் : எஸ்.ரமணி

பாசிசம் மற்றும் போருக்கு எதிரான இயக்கம்

நேரு சர்வதேச நிகழ்ச்சிப் போக்கை கூர்ந்து கவனித்ததோடு காங்கிரஸ் கட்சியை சரியான திசையில் வழி நடத்தினார். பாசிசம் மற்றும் ஆங்கிலோபிரெஞ்சு ஏகாதிபத்தியம் கடைபிடிக்கும் கொள்கைகள் குறித்து மக்களையும், காங்கிரஸ் கட்சியையும் நேரு எச்சரிக்கை செய்தார். மேலாதிக்கம் செலுத்திய தலைவர்கள் வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் மீது அக்கறையற்று இருந்தனர். நேருவின் வெளிநாட்டுக் கொள்கை அறிக்கைகள் அலட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஹரிபுராவில் 1938ல் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டுப் பாதுகாப்பிற்கு ஆதரவளித்தது. மேலும் அது போர் அபாயத்தை நோக்கித் தள்ளும் பாசிச ஆக்கிரமிப்புடன் சமரசம் செய்து கொள்ளும் கொள்கையினைக் கண்டித்தது.

ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனா மீது தாக்குதல் நடத்தியதோடு அல்லாமல் அதன் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்தும், 1938ல் ஜப்பானிய பொருட்களை நிராகரிக்க வேண்டுமென மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 1938ல் இளவேனிற் காலத்தில் திரிபுராவில் நடைபெற்ற மகாசபைக் கூட்டத்தில் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசினுடைய மூனிச் கொள்கையிலிருந்து வெளிப்படையாக தன்னை விடுவித்துக் கொண்டது. பிரிட்டிஷ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் விளைவாக உருவான மூனிச் ஒப்பந்தம், ஆங்கிலோ இத்தாலி ஒப்பந்தம் மற்றும் ஸ்பெயின் கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்தது போன்ற நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் ஏற்கவில்லை என்பதை பதிவு செய்தது. இந்தக் கொள்கைகள் திட்டமிட்டு ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல், வாக்குறுதிகளை தொடர்ந்து மீறிய செயல், கூட்டுப் பாதுகாப்பு அமைப்பு முறைக்கு முடிவு கட்டியது, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரிகளான அரசுகளுடன் ஒத்துழைக்க முன்வந்தது ஆகும். “பிரிட்டிஷ் அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக அதனிடமிருந்து காங்கிரஸ் தன்னை முழுமையாக விடுவித்து கொள்கிறது. ஏனெனில் அச்செயல் தொடர்ந்து பாசிச சக்திகளுக்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயக நாடுகளை நிர்மூலமாக்கவும் உதவி புரிவதாக உள்ளது.

(ஆர்.பி. தத் குறிப்பு, பக்கம் 551-552)

உலகம் சிக்கலான காலகட்டத்தை கடந்து கொண்டிருந்த பொழுது, நேருவின் வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் கட்சி ஒரு கொள்கையை முன்னிறுத்தியது. அந்தக் கொள்கை உலகிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் முன்வைத்த மற்றும் ஆதரித்த ஒன்றாகும். நேருவின் வழிகாட்டுதல்படி காங்கிரஸ் பாசிசத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தது. மேலும் உலகத்தில் இருந்த ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கொண்டது.

பிரிட்டிஷ் அரசு 1939ல் ஜெர்மனிக்கு எதிராக போர் அறிவித்த ஒரு சில மணித்துளிகளில் வைஸ்ராய் இந்திய மக்களில் எந்தப் பகுதியினரையும் கலந்தாலோசிக்காமல் இந்தியா போரை ஆதரிப்பதாக தெரிவித்தவுடன் காங்கிரசிற்கு கடுமையான சோதனை ஏற்பட்டது. காங்கிரசின் முன்னிருந்த கேள்வி இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தையும் எப்படி பார்ப்பது என்பதாகும். செப்டம்பர் 1839ல் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி இதனை சரியாக புரிந்து கொண்டது. இந்தப்போர் ஏகாதிபத்தியங்களின் குறிக்கோளை அடைய நடக்கும் போர் என்று புரிந்து கொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த நிலைபாட்டிற்கு முன்னரே வந்ததுடன், மக்களிடம் போருக்கு எதிராக பிரச்சாரமும் செய்தது. காரியக் கமிட்டி தனது தீர்மானத்தில் தெரிவித்தது “கமிட்டி இந்தப் போரில் தன்னை இணைத்துக் கொள்ளாது, ஆதரவு தராது. ஏனெனில் இந்தப் போர் ஏகாதிபத்தியம் வகுத்த பாதையில் நடைபெறுகிறது. இதன் பொருள் இந்தியா மற்றும் இதர நாடுகளில் ஏகாதிபத்தியத்தை கெட்டிப்படுத்த நடக்கும் போர் ஆகும்”. மேலும் அது கூறுகிறது. “இந்திய மக்களுக்கு சுயநிர்ணயம் செய்யும் உரிமை உண்டு, தங்களுக்கான அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை மூலம் வெளியார் குறுக்கீடின்றி உருவாக்கும். தங்களது சொந்த கொள்கைகள் மூலம் வழி நடத்திச் செல்லும்.”

எனவே காரியக்கமிட்டி பிரிட்டிஷ் அரசை, தெளிவாக இந்தப் போரின் நோக்கத்தை, குறிப்பாக ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்தியம் இவைகளுடன் சம்பந்தப்படுத்தி அறிவிப்பதுடன், அதற்குப் பின்னர் உருவாகும் புதிய சூழலில் இந்தியாவிற்கு அவற்றை எவ்வாறு பொருத்துவது மற்றும் செயலாக்கம் புரிவது…..”

(அதே புத்தகம் பக்கம் 533)

போர் சம்பந்தமாக காந்தியின் நடவடிக்கை ஜவஹர்லால் நேருவிற்கு மாறானதாக இருந்தது. போர் குறித்து காந்தி பிரிட்டனுக்கு தன்னிச்சையான ஆதரவை தந்தார். அவர் வைஸ்ராயிடம் தெரிவித்தது இந்தப் போரை வெள்ளையர்கள் இதயத்துடன் தாம் பார்ப்பதாகவும், தன்னுடைய சகாக்கள் கருத்தாக இதனை தெரிவிக்காமல், தனது சொந்தக் கருத்தாக தெரிவிப்பது முழுமையாக, எந்தவித மறுப்புமற்ற ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார். (எஸ். கோபால், வால்யூம் 1, பக்கம் 249-50). அவருடைய “வெள்ளையர்கள் இதயம்” அவருடைய போர் காலங்களில் ஏற்படும் வன்முறைக்கு எதிரான உணர்வை தாண்டி வந்துள்ளது. காங்கிரசில் மேலாதிக்கம் செலுத்திய தலைவர்களும் எந்தவித நிப்பதனையுமின்றி பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைப்பு நல்கதயாராக இருந்தனர். சர்வ பள்ளி கோபல் இதற்கு ஆதாரமாக “ஹேக்” என்பவர் செப்டம்பர் 17, 1939ல் வைஸ்ராய்க்கு அனுப்பிய தந்தி மற்றும் வேறொருவர் செப்டம்பர் 3, 1939 அன்று அனுப்பிய தந்தியையும் குறிப்பிடுகிறார். “.பி.யில். மந்திரிகள், போர்க் கைதிகள் விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு தரத் தயாராக இருந்தனர். அதே சமயம் மதராசில், மோதல்கள் வெடித்தபோது, ஜெர்மனியர்களை கைது செய்ய, அவர்களுடைய வங்கிக்கணக்கை முடக்க ராஜகோபாலாச்சாரியர் முயன்ற போது, கவர்னர் அதை தடுத்து நிறுத்தினார், அதன்பின்பு பிரிட்டிஷ் அரசு உயர்நீதிமன்ற ஆணைப்படியே போர் தொடுக்க விரும்பியதாக தெரிவித்தார்.” (பக்கம் 250). மந்திரிகள் தேசப்பற்றை, ஏகாதிபத்திய எதிர்ப்பை முற்றிலுமாக கைவிட்டதுடன் பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் புரியத்தயாராக இருந்தனர். மந்திரிசபையில் சேர்வது என்பது ஏகாதிபத்தியத் திடம் முற்றிலும் சரணடைவதறகு ஒப்பாகும் என்ற ஜவஹர்லால் நேரு பயப்பட்டது உண்மையென தற்போது நிரூபணமானது.

தெளிவான பாதையை வகுத்த ஜவஹர்லால், உணர்வுபூர்வமான காரணங்களைச் சுட்டி, காந்தி வற்புறுத்தினாலும், அரசியல் சந்தர்ப்பவாத காரணங்களினால் மந்திரிகள் வற்புறுத்தினாலும், பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பை நல்க தயாராக இல்லை. இருப்பினும், ஜவஹர்லால், நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல் அரசிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்பதற்காக காத்திருந்தார். ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக பிரிட்டன் இந்தப் போரில் ஈடுபட்டிருப்பதை நேரு புரிந்து கொண்டிருந்தார். ஆனால் பாசிச எதிர்ப்பு, பாசிச ஆக்கிரமிப்பின் விளைவாக பாதிப்படைந்தவர்கள் மீது ஏற்பட்ட பரிவு இவைகளின் காரணமாக, போருக்கு எதிரான போராட்டங்களில் உடனடியாக அவர் கலந்து கொள்ளவில்லை. எனவே, போருக்கான நோக்கத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

காங்கிரஸ் தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் வைஸ்ராய் காங்கிரசின் கோரிக்கையை நிராகரிக்கப்பதாகவும், அரசு இந்தியாவின் எதிர்காலம் குறித்து எதனையும் சொல்லத் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். அக்டோபர் 1939ல் கூடிய காரியக்கமிட்டி அரசுடன் ஒத்துழைப்பது இல்லை என்று முடிவெடுத்து அதன் முதல் நடவடிக்கையாக மாகாண மந்திரி சபையில் இருந்தவர்களை பதவி விலகச்சொன்னது. ஆனால் வெகுஜன இயக்கம் குறித்து கமிட்டி முடிவு எதுவும் எடுக்கவில்லை. சத்தியாகிரக போராட்டத்திற்கு அழுத்தம் தந்ததோடு, மக்களின் எதிர்ப்பியக்கத்தை நடை முறைப்படுத்த திட்டம் வகுத்தது. ஒத்துழையாமை இயக்கம் ஒத்திப் போடப்பட்டது. சமரசம் ஏற்படும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இன்னமும் இருந்தது.

அரசிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி ஆதரவு தந்த போதிலும், போர் குறித்த பிரிட்டிஷ் அரசின் செயல்பாடு குறித்து ஒரு தர்மசங்கடமான நிலைபாட்டை காங்கிரஸ் எடுப்பதை விரும்பவில்லை. பிரட்டிஷ் அரசு நடத்திய ஏகாதிபத்திய யுத்தம் இந்திய மக்களின் பணம் மற்றும் ராணுவத்தை பயன்படுத்த ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருந்தது. காங்கிரஸ் தனது மனசாட்சிக்கு ஏற்ப அரசிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தது.

இரண்டு வளர்ச்சிப்போக்குகள் கண்ணெதிரே தெரிந்தது. காந்தி மற்றும் ராஜாஜி போன்ற அவரது சீடர்கள் டொமினியன் அந்தஸ்துடன் கூடிய இந்தியா கிடைக்கப்பெற பிரிட்டிஷ் அரசுடன் சமரசமாக போகவிரும்பினர். போருக்குப் பின்னர் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற உத்தரவாதம் தரும் பட்சத்தில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுடன் ஒத்துழைக்க நேரு தயாராக இருந்தார். சில அவசிய தேவைகளுக்காக இந்த இரு போக்குகளும் சிற்சில சமயங்களில் ஒன்று சேர்ந்தன.

உலக வளர்ச்சிப்போக்குகளை உணராத நிலை

சோவியத்தும் ஜெர்மனும் செய்து கொண்ட அனாக்ரமிப்பு ஒப்பந்தம் நேருவிற்கு அதிர்ச்சியளித்தது. பிரிட்டனும், பிரான்சும் இட்லரை சோவியத் யூனியனுக்கு எதிராக போர் தொடுக்க சதித்திட்டம் தீட்டியதையும், இந்த ஒப்பந்தம் ஏகாதிபத்தியத்தின் கூட்டுச்சதியை முறியடிக்க எடுத்த செயல் என்பதை நேரு அறிந்திருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் வர்க்கத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியாத நேரு, இந்த ஒப்பந்தம் இரு தேசங்களின் சந்தர்ப்பவாத ஒப்பந்தம் எனக் கருதினார். இருப்பினும் சோவியத் யூனியன் பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றுதான் இது என்பதை முணுமுணுப்புடன் பின்னர் ஏற்றுக் கொண்டார். போலந்தின் தற்காலிக பிரிவினையும் பின்லாந்தில் ஏற்பட்ட மோதலும் நேருவிற்கு அதேமாதிரியான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோவியத் யூனியன் பாதுகாப்பிற்கு இவைகள் அவசியம் என்ற உணர்வு இருந்தபோதும் இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அவருக்கு அதிர்ச்சியளித்தன.

ஆறுதல் வேண்டி பின்னர் அமெரிக்காவின் பக்கம் ஜவஹர்லாலின் மனம் எங்கே திரும்பியது. “இந்தச் சூழ்நிலையில் தான் அவர் பார்வை அமெரிக்கா பக்கம் திரும்பியது. செக் குடியரசு பிரச்சனையில் ரூஸ்வெல்டின் நடவடிக்கை அவரை ஈர்த்தது. எது அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது என்றால் எதிர்கால பாரம் அமெரிக்காவின் தலையில் தான் விழும் என்று கருதியதுதான். “அமெரிக்காவை விட்டு விலகி வெகுதொலைவில் இந்தியா இருக்கிறது. உலகம் முழுவதும் ஏகாதிபத்தியமும், பாசிசமும், கோலோச்சுவதும் வன்முறையும், ஆக்கிரமிப்பும் தலைவிரித்து ஆடுவதும், சந்தர்ப்பவாதம் கொடி கட்டிப்பறக்கும் இந்த பூமியில் ஜனநாயக சுதந்திரத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு அமெரிக்கா என்னும் நமது எண்ணங்கள்தான் நம்மை வழிநடத்துகிறது.”

(எஸ்.கோபால், வால்யூம் 1, பக்கம் 260-61)

இப்படிப்பட்ட அமெரிக்க மீதான நம்பிக்கை, நேருவிற்கு சோவியத்ஜெர்மன் ஒப்பந்தம் ஒரு கடுமையான அதிர்ச்சியை அளித்தது; இது சர்வதேச நிலைமைகள் குறித்த அவரது தெளிவான பார்வைக்கு ஊனம் விளைவித்தது.

நேரு மட்டுமே இந்த எண்ணத்தில் இருக்கவில்லை. அவரைப் போல் கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள், உலக வளர்ச்சிப்போக்குகளை, வர்க்க சக்திகளின் செயல்பாடுகளை வைத்து உணர முடியாத மற்றவர்களும் இதே கருத்தினை கொண்டிருந்தனர். ஆனால் நேருபாராட்டத்தக்க விதத்தில் தனது புரிதலின் சமநிலையை வெகுசீக்கிரம் அடைந்தார். இட்லர் சோவியத்யூனியன் மீது தாக்குதல் தொடுத்தவுடன், சோவியத் மீது பரிவும், அனுதாபமும் கொண்டார்.

அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய நாடு என்பதை கவனிக்கத் தவறியதோடலலாமல், அமெரிக்கா மீது நேருவுக்கு ஏற்பட்ட மாயபிம்பத் தோற்றம் ஆச்சரியப்படத்தக்கதாகும். ரூஸ்வெல்ட் அமெரிக்காவில் ஒருவிதமான சோசலிசத்தை உருவாக்க முயற்சித்தாகவும், தனியுடைமைக்கு எதிராக செயல்படுபவர் என்ற எண்ணமுடையவர்கள் சிலரிடம் ரூஸ்வெல்ட் குறித்து சிலாகித்து நேரு பேசினார்.

எதிரெதிர் போக்குகள் ஒன்றிணைதல்

மார்ச் 1940ல் கூடிய காரியக்கமிட்டி ஒத்துழையாமை போராட்டம் தவிர்க்க இயலாதது எனக் கருதியது. “…… ஒரு வரையறைக்குள் அல்லது பெருமளவில் மக்கள் பங்கேற்கும் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என்ற நேருவால் முன்மொழியப்பட்ட ஆலோசனையை கமிட்டி நிராகரித்தது; மேலும் காங்கிரஸ் சமரசப்போக்கை கடைபிடிக்கிறது என்ற குற்றச்சாட்டை போக்கும் வண்ணம் முழுமையான சுதந்திரம் தவிர மற்ற எதுவும், குறிப்பாக டொமினியன் அந்தஸ்து மற்றும் அரசியல் நிர்ணய சபை உட்பட எதுவும் ஏற்பதற்கில்லை என்று உறுதிபட தெரிவித்தது. (அதே புத்தகம் பக்கம் 262)

பிரிட்டிஷ் அரசு எந்தவித கோரிக்கையையும் ஏற்க மறுத்த நிலையில், முன்னர் தெரிவித்த சமரசம் செய்து கொள்ளும் அல்லது சமரசமற்ற போக்குகள் கொண்ட இரு அணிகளும் ஒன்று சேர வேண்டிய தருணம் ஏற்பட்டது. காரிய கமிட்டி தீர்மானம், சோவியத் யூனியன் குறித்து நேரு தனது பழைய நிலை பாட்டுக்கு திரும்பி வந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது…. “தெளிவற்ற பிரச்சனைகளை தவிர்க்கும் நோக்குடன் ஜவஹர்லால் அளித்த வரைவு தீர்மானத்தில் இருந்த பின்லாந்துக்கு எதிரான சோவியத் யூனியன் நடவடிக்கை நீக்கப்பட்டது; நேருவே தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அதாவது சோவியத்யூனியன் பின்லாந்தை தாக்கியது தவறு என்று தெரிவிப்பதன் வாயிலாக பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் திசை திரும்பிவிடக்கூடாது; பின்லாந்து போரைப் பயன்படுத்தி ரஷ்யாவை பலவீனப்படுத்தும் அவர்களின் முயற்சியை; மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் வளையத்திற்குள் அந்த நாட்டை சிக்கவைக்கும் முயற்சியை, ஐரோப்பாவில் நடைபெறும் போரை ரஷ்யாவிற்கு எதிராக மெய்யாகவே நடக்கும் போரின் துணை நிகழ்ச்சியாக மாற்றும் நோக்கத்தை புரிந்து கொள்வதுடன், ரஷ்யா மட்டுமே அனைத்து விதமான ஏகாதிபத்தியத்தியங்களுக்கும் சமரசம் செய்து கெள்ளாத எதிரி என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.” (அதே புத்தகம்)

காங்கிரஸ் கட்சி எப்பொழுது காலம் கணிந்துள்ளது எனக் கருதுகிறதோ அப்பொழுது ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தலாம் என மார்ச் 1940ல் ராம்கரில் கூடிய காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது. ஒத்திப்போடும் எண்ணமும், சமரசம் காண முடியும் என்ற எண்ணமும் இன்னமும் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்தது.

எக்கால கட்டத்திலும் வன்முறையை தாம் ஆதரிக்க முடியாது என்றும் வன்முறை எதிர்ப்பு என்றும் சாக்கு போக்கு காரணம் சொல்லி எந்தவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் தனது விருப்பமின்மையை காந்தி தொடர்ந்து தெரிவித்தார்.

போர் துவங்கிய மூன்று மாதத்திற்குள் ஏற்பட்ட புதிய திருப்பத்தின் விளைவாக தலை வர்களுக்கு பதவியில் அமர எவ்வித நிபந்தனையுமின்றி ஒத்துழைப்பு நல்க காங்கிரசுக்கு வாய்ப்பு கிட்டியது. ஜூன் மாத வாக்கில் பிரான்சு கவிழ்ந்தது. ஹாலந்தும், பெல்ஜியமும் சரணடைந்தது. இட்லரின் ராணுவம் பிரிட்டனில் நுழைய வாயில் முன்காத்து நின்றது. காந்தி, நேரு இரு வரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்த தகுந்த தருணமல்ல இது என்பதை ஒத்துக் கொண்டனர். ஜூன் மாதம் கூடிய காரியக்கமிட்டி இரண்டு நிபந்தனைகள் விதித்தது. ஒன்று இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட வேண்டும். இரண்டு அனைத்து கட்சிகள் அடங்கிய அரசு உடனடி யாக அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஜூலை மாதத்தில் கூடிய காரியகமிட்டி ஒருபடி மேலே சென்றது. காந்தி மற்றும் ஜவஹர்லாலை புறந்தள்ளி, காரியக்கமிட்டியில் இருந்த பெரும்பான்மையினர் சுதந்திரம் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டு தேசிய அரசு அமைக்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தால் போருக்கு தங்கள் ஆதரவை தருவதாக தெரிவித்தனர். அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதிலிருந்து இறங்கி பதவியைப் பெறுவது என்பது பிரிட்டிஷ் அரசின் சட்ட விதிகளின் கீழ் செயல்படுவதாகும் என்று ஜவஹர்லால் வாதிட்டார். மேலும் இந்த பதவியைப் பெறுவது என்பது முன்னர் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிரானதும், அழிவுக்கு இட்டுச் செல்வதும் ஆகும் என்றார். ஆனால், இந்த தீர்மானத்தின் கர்த்தா ராஜ கோபாலாச்சாரி, சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத்தை தனது பக்கம் இழுத்தார். பின்னர் நேருவும் அதற்கு ஒத்துக்கொண்டார். அவர் இந்த ஆலோசனை இந்தியாவிற்கு ஆதரவான நிலைபாடு அல்ல என்பதை உணர்ந்திருந்தாலும், பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக இதனை ஏற்றுக் கொண்டார்.

வைஸ்ராய் காங்கிரசின் ஆலோசனையை நிராகரித்தார். அதற்கு மாற்றாக ஆகஸ்ட் ஆலோசனை என்ற பெயரில் ஒரு ஆலோசனையை முன் வைத்தார். அதனை காங்கிரஸ் நிராகரித்தது. காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டுகோள் விடுத்தது. அப்போராட்டம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் நடத்த வற்புறுத்தியது. தனிநபர் சத்தியாக்கிரகம் மட்டும் நடத்தவும், அதில் போரில் கலந்து கொள்ளும் உரிமை பற்றி பேசும் சுதந்திரம் உண்டு என்ற வரையறைக்குள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இது ஒரு கேலிக்கூத்தான சத்தியாக்கிரகம்; ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை பகடி செய்யும் செயலாகும். காந்தியும் மற்றும் மேலாதிக்கம் செலுத்திய தலைவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் நடைபெற்ற கால கட்டத்தை எவ்வித எதிர் வினையுமாற்றாமல் வீணடித்தனர். அரசு விரிவாக கைது நடவடிக்கையை மேற்கொண்டது; நேரு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கமும் நேருவின் பங்களிப்பும்:

1941 ஜூன் வாக்கில் போர் மற்றொரு திருப்பத்தை சந்தித்தது. இட்லர் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தது; அதன் விளைவாக போரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. “…… குறிப்பாக சோவியத் யூனியன் மீது நாஜிகளின் தாக்குதல் தொடர்ந்த பின்பு, பிரிட்டிஷ் அரசின் மடத்தனமான செயலின் விளைவாக நடைபெற்று வரும் நிகழ்வுகளில் அவரையும், இந்த தேச மக்களையும் பங்கேற்கவிடாமல் செய்ததை கண்டு ஆத்திரமடைந்தார். அவர் தனிப்பட்ட கடிதங்கள் எதுவும் அனுப்பவில்லை என்றாலும் அவர் அனுப்பிய பிரிட்டிஷ் நண்பர்களுக்கான நீண்ட கட்டுரைகளில் அவர் மனதிற்குள் மறைந்திருந்த வெறுப்பு பீறிட்டு வெளியே வந்ததை காண முடிந்தது”.

(எஸ்.கோபால், வால்யூம் -1, பக்கம் 272)

ஜவஹர்லால் சிறையிலிருந்து டிசம்பர் 4, 1941 அன்று விடுதலையானார்; அப்பொழுது தான் பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா பிரதிநிதித்துவப்படுத்தும் முற்போக்கு சக்திகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவிற்கு நேரு வெளிப்படையாக தனது ஆதரவினை தெரிவித்தார். ஆனால் அதேசமயத்தில், பிரிட்டிஷ் அரசு எந்தவிதமான உறுதிமொழியையும் தராத போது காங்கிரஸ் தனது கொள்கையிலிருந்து விலகக்கூடாது எனவும் தெரிவித்தார்.

ஆனால் கிறிஸ்துமஸ் கூட்டத்தில் ராஜ கோபாலாச்சாரி தலைமையில் இருந்த மேலாதிக்கம் செலுத்திய காரிய கமிட்டி தலைவர்கள் மீண்டும், தேசத்தை பாதுகாக்க தேசிய அளவில் ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தார்.

காந்தி, வழக்கம் போல, உறுதியற்ற நிலைபாட்டை எடுத்தார். வன்முறை மூலம் கிடைக்கப் பெறும் சுதந்திரம் பெற அவர் விரும்பாததினால், ஸ்தாபனத்திலிருந்து விலகினார். ஆனால், காரியக்கமிட்டிக்கு ராஜகோபாலாச்சாரி அளித்த தீர்மானத்தை ஆதரித்தார். அதே சமயத்தில் ஜவஹர்லாலை தாஜா செய்யும் விதத்தில் அவரை தனது வாரிசு என்று அறிவித்தார். “சிலர் பண்டிட் ஜவஹர்லால் அவர்களுக்கும் எனக்கும் பேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். எங்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி அதையும் விட கூடுதலாக ஏதேனும் உருவானால்தான் பேதம் உண்டாகும். நாங்கள் சக ஊழியர்கள் என்ற நிலையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டு; எனினும் கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்து வருவதும் தற்போது தெரிவிப்பதும் என்னவென்றால் ராஜாஜி (ராஜகோபாலாச் சாரி) எனது வாரிசல்ல; அதற்கு மாறாக, ஜவஹர்லால்தான் என் வாரிசு. அவர் என்னுடைய சொற்களை புரிந்து கொள்ள முடியாதவர்; அவர் பேசும் சொல் எனக்குப் புரியாத ஒன்றாகும். இது உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் இரு இதயங்கள் சங்கமத்திற்கு அது ஒரு தடையல்ல. இது நான் அறிவித்த ஒன்று. நான் சென்ற பிறகு என்னுடைய சொற்களில் அவர் பேசுவார்.” (அதே புத்தகம் பக்கம் 275)

நேருவின் எதிர்ப்பை மீறி காந்தி மீண்டும் தன்னுடைய படைத்தளபதிகளை, அவருடைய புனிதமான வன்முறைக்கு எதிரான கொள்கையை மீறினாலும் ஆதரித்தார். அதேசமயத்தில் நேருவின் மீது தனது நம்பிக்கையையும் தெரிவித்தார். காந்தி, தன் வர்க்கத்தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கவும், அதேசமயம் நேருவின் பங்கை அங்கீகரிப்பதன் மூலம் எவ்வித ஒளிவு மறைவு மின்றி தன்னுடைய வர்க்க உள்ளுணர்வை வெளிப்படுத்தத் தவறவில்லை.

கிழக்குப் பகுதியில் ஜப்பான முன்னேறியதும், ரங்கூன் வீழ்ந்ததும், பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகளுடன் சமரசம் காண விரும்பியது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

காங்கிரஸ் வெகுஜன இயக்கத்தை கட்டவிழ்த்துவிட வேண்டி இருந்தது. மீண்டும் காந்தி மற்றும் நேரு இருவருக்கும் கூர்மையான கருத்து வேறுபாடு தென்பட்டது. பாசிச சக்தி குறித்த நேருவின் புரிதலும், ஜப்பான் ராணுவத்தை எதிர்த்து வன்முறையற்ற போராட்டம் நடத்த அவர் மக்களை அறைகூவி அழைத்தார். தேவையேற்படின் கொரில்லா யுத்தம் நடத்தவும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். இதனை காந்தி எதிர்த்ததுடன், தானே உருவாக்கிய தீர்மான அறிக்கையை காரிய கமிட்டிக்கு அனுப்பினார். தன்னுடைய வரைவு அறிக்கை ஏற்கப்படாவிட்டால், தான் விலகுவதாக காந்தி அச்சுறுத்தினார். இந்திய பிரிவினைக்கு கிரிப்ஸ் வழங்கிய ஆலோசனை மீது காந்தி ஆத்திரமடைந்தார். இந்தியாவை பிரிவினை செய்யும் நோக்குடன் இருக்கும் அரசுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ள காந்தி மறுத்தார். அவருடைய வரைவு தீர்மானம் பிரிட்டிஷ் ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். பின்னர் இந்தியா ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தும். ஜப்பானின் சண்டை இந்தியாவுடன் அல்ல, மாறாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் தான்.

காந்தியின் வரைவு தீர்மானம், போர் துவங்கியதிலிருந்து காங்கிரஸ் கடைபிடித்து வந்த கொள்கையிலிருந்து விலகி இருந்தது என்பது தெளிவாக அறிய முடிந்தது. இது நேருவிற்கு அதீதமாக தெரிந்தது. எனவே, ஜவஹர்லால் காந்தியின் வரைவு தீரமானத்தை முற்றிலுமாக நிராகரித்தார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் இதுவரை கடைபிடித்த நாசிசம், பாசிசம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

காரியக்கமிட்டி ஜவஹர்லாலின் வரைவு தீர்மானத்தை இறுதியாக ஏற்றுக் கொண்டது. இந்தியாவிற்கு ஆதரவாக ரூஸ்வெல்ட் தலையீடு செய்வார் என்ற பிரமை ஜவஹர்லாலுக்கு இருந்தது. ஆனால் ரூஸ்வெல்ட் தலையிட மறுத்துவிட்டார். எந்தப் பகுதியினரும் தனக்கு ஆதரவாக இலலை என்ற நிலையில் பிரிட்டிஷ் அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க காந்தி முடிவெடுத்தார். நேரு மீண்டும் ரஷ்யா, சீனா, அமெரிக்கா இவைகளின் நோக்கங்கள் நிறைவேற தீங்கு விளைவிக்கக்கூடாது என்று வாதிட்டார். காந்தி தன்னுடைய ஜப்பான் ஆதரவுக்கொள்கையை கைவிட்டார். பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தியாவிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் நேச அணி நாடுகளின் ராணுவம் இந்தியாவில் இருப்பதற்கும் கூட்டணி நாடுகளின் ராணுவ ஒப்பந்த அடிப்படையில் முதல் நடவடிக்கை தேசிய அரசு அமைப்பதுதான் என காந்தி என்ற நிலைபாட்டை ஏற்றுக் கொண்ட பின்னணியில், ஜவஹர்லால் காந்தியின் தீர்மானத்தை எதிர்க்கும் தனது நிலைபாட்டை விலக்கிக் கொண்டார்.

இந்தச்சமயத்தில் விரிவான மக்கள் பங்கேற்கும் ஒத்துழையாமை இயக்கத்தை நேரு எதிர்த்தார். ஆனால் காந்தி அதனை வலியுறுத்தினார். அதற்கு மாற்றாக எதுவுமில்லை என்பதை தெரிவித்தார். இந்தியாவின் நிலைபாட்டை சீனாவும், அமெரிக்காவும் புரிந்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஜவஹர்லால் எடுத்தார். காந்தி அனுப்பி ஜவஹர்லால் தயாரித்த வரைவு கடிதத்தில் “சீனா, அமெரிக்கா வுடன் முழுமையாக ஒத்துழைப்பை நல்குவதே இந்தியாவின் உண்மையான விருப்பமாகும். ஆசியாவோ அல்லது அதனைப் போன்ற உலகத் தின் பெரிய நிலப்பரப்பில் பாசிசம், நாசிசம் கோலோச்சுவது என்பதை என்னால் சிந்தித்தும் பார்க்க முடியாது. அதனை எதிர்த்திட இந்தியா தன்னால் இயன்றதை செய்யும். இதனைப்பார்க்கத்தவறும் பிரிட்டிஷ் அரசின் குருட்டுத்தனமும், பிடிவாதமும் இந்தியாவில் ஒரு கடுமையான சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் இதுகுறித்த ஞானம் உடனடியாக அவர்களுக்கு தோன்றும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் காங்கிரசுடனும், தேசிய சக்திகளுடனும் மோதலை உருவாக்கும் திட்டத்துடன் அவர்கள் இருப்பதாக தோன்றுகிறது”.

(எஸ்.கோபால், வால்யூம் -1, பக்கம் 293)

மோதலை தவிர்க்க காரிய கமிட்டி கடைசி நிமிட முயற்சியை எடுத்தது. இறுதி முடிவு எடுக்க மூன்று வாரங்களுக்கு பின்பு ஆகஸ்ட் 7,8 தேதிகளில் கூடியது. பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய ஆலோசனையையும் ஏற்கவில்லை. அதன் பின்னர், நேரு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் “வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். ஜவஹர்லால் நேருவால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்தில் போர் குறித்த காங்கிரசின் புரிதல், காங்கிரசின் சர்வதேச பார்வை, ஆசியக்கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் விடுதலை, சுதந்திரமடைந்த நாடுகளின் உலக கூட்டமைப்பு இவைகள் அடங்கியிருந்தன. அந்த அறிக்கை ஒரு மாதிரி அரசை உருவாக்கவும், அதன் தலையாய நோக்கம் இந்தியாவை பாதுகாப்பதும், அமைப்புச்சட்டம் இயற்றும் நிர்ணய சபை உருவாக்க ஒரு திட்டம் தீட்டுவது ஆகியவற்றை தெரிவித்தது. போருக்குப் பின்னர் உள்ள நிலைமைகளை அந்த அறிக்கை தெரிவிப்பது “இந்தியாவின் சுதந்திரம் அன்னியர் ஆதிக்கத்தில் இருக்கும் இதர ஆசிய நாடுகளின் விடுதலைக்கு முன்னோட்டமாக அமையும். பர்மா, மலேயா, இந்தோசீனா, டச்சு ஆட்சியின் கீழுள்ள கிழக்கு இந்திய நாடுகள், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் முழுமையான சுதந்திரம் அடைய வேண்டும். எதிர்கால உலக அமைதிக்காக சுதந்திரமடைந்த நாடுகளின் உலக கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதில் இந்தியாவும் சேரும். கூட்டமைப்பு நாடுகளின் அமைப்புச்சட்ட விதிகளை மதித்து ஏற்றுக் கொள்வது, ஒரு தேசம் மற்ற தேசத்தின் மீது ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டாத தன்மை, தேசிய சிறுபான்மையினர் பாதுகாப்பு, பின்தங்கிய தேசம் மற்றும் மக்களின் முன்னேற்றம், உலக செல்வ ஆதாரங்களை ஒன்று குவித்து சாதாரண மக்களுக்கு பயன்தரும் நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு கூட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும்.”

அந்த கமிட்டி மேலும் தெரிவிப்பது, “சீனா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது; அந்த தேசங்களின் சுதந்திரம் புனிதமானது, பாதுகாக்கப்பட வேண்டியது; ஐக்கிய நாடுகளின் ராணுவத்தினை சீர்குலைக்காது.’ அது மேலும் தெரிவிப்பது “இன்னமும் இந்த தேசங்களின் மீது தடை விதித்திருப்பது நியாயமல்லஎனவே அதை விலக்கிக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் சுதந்திரம் பிரிக்கப்பட முடியாத ஒன்று என்பதையும், பொதுஜன போராட்டங்களை வன்முறையற்ற முறையில் நடத்துவதும் சரி என இந்தச் செயல் நிரூபிக்கும்”.

(ஆர்.பி.துபே குறிப்பு, பக்கம் 236-37)

ஜவஹர்லால் நேருவால் வழிநடத்தப்பட்ட காங்கிரசின் சர்வதேசிய பார்வையை இது முழுமையாக வெளிப்படுத்தியது. இதனுடைய தொடர் நிகழ்வாக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 1944ம் வருடத்தில் தான் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருந்தனர். தற்போது அவர்கள் மக்கள் சக்தியை உணர்ந்திருந்தனர். மேலும் நேரு எதிர்ப்பு மனோநிலையில் இருந்தார். பிரிட்டிஷ் அரசு, ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக் மற்றும் சமஸ்தானங்களின் உதவியுடன் துண்டாடப்பட்ட சுதந்திரம் வழங்க முன்வந்தது. இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டால் அண்டை நாடுகளில் நிரந்தரமான எதிரிகள் இருப்பார்கள். நேருவும் இதர தலைவர்களும் இதனுடைய அபாயத்தை உணர்ந்தனர். அதிலிருந்து மீள ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக்குடன் முதலில் உடன்பாடு காண முற்பட்டனர். ஆனால் ஜின்னாவும், முஸ்லிம் லீகும், இந்துக்களும், முஸ்லிம்களும் இருவேறு தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெகு காலத்திற்கு முன்னரே அவர்கள் அறிவித்திருந்தனர். எனவே, ஜனநாயகத்தன்மை அடிப்படையில் எந்த ஒப்பந்தத்தையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. முஸ்லிம்களுக்கு தனிநாடு கோரிய பின்னணியில் அவர் வாக்களிக்கும் சம உரிமை அல்லது சிறுபான்மையினருக்கு ரத்து அதிகாரம் தந்தால் இந்திய யூனியனுடன் சேர்ந்து இருக்க ஏற்றுக் கொள்வோம் என்றனர். எனவே, பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு சென்ற பின்னர் பிரிவினை என்பது தவிர்க்க முடியாத ஒன்றானது. ஆரம்ப காலகட்டத்தில் காந்தி பிரிவினைக்கு தனது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்தார். மற்றவர்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முன்வந்த சூழலில், அவர் தன்னுடைய எதிர்ப்பை விலக்கிக் கொண்டார்.

தொடரும்



%d bloggers like this: