மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வெல்வதற்கோர் பொன்னுலகம்


‘கம்யூனிஸ்ட் பிரகடனம்’ பற்றிய இந்த நூல், அதன் நூற்றைம்பதாம் ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வெளியிடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பிரகடனத்தின் நூற்றைம்பது ஆண்டு நிறைவு விழா உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டது.

  • மகத்தானதொரு ஆவணமாகிய கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை மறுமதிப்பீடு செய்வதற்கு,
  • மார்க்சியத் தத்துவத்தின் சமகால நிலைமை பற்றி விமர்சனப் பூர்வமான முறையில் கூர்மையாகப் பரிசீலிப்பதற்கு,
  • 21 ஆம் நூற்றாண்டுக்குள் நுழையும் வேளை யில் உழைப்பாளி வர்க்க இயக்கம் பயணிக்க வேண்டிய புதிய திசைவழிகளை ஆராய்வதற்கு

இதுவே தக்க தருணம் என்று கருதப்பட்டது.

கம்யூனிச இயக்கத்தின் முதல் திட்ட அறிக்கை என்று இப்பிரகடனத்தைக் குறிப்பிடலாம். (மார்க்ஸ்- ஏங்கல்ஸ்) சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியின் உரையான வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற கோட்பாட்டின் வளர்ச்சி பெற்ற வடிவத்தின் வெளிப்பாடாக – ஒரு விளக்க உரையாக இப்பிரகடனம் அமைந்தது. கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் முக்கியத்துவத்தை லெனின் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்:

“ஒரு மேதைக்கு உரிய தெளிவுடனும் மதிநுட்பத்துடனும் உலகத்தைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பிரகடனம் வழங்குகிறது.

சமூக வாழ்க்கைக் களத்தை உள்ளடக்கிய ஒரு முரண்பாடற்ற பொருள் முதல்வாதத் தத்துவ மாகவும்,

வளர்ச்சி பற்றிய விரிவான, மிகச் சிறந்த கோட்பாடாகிய இயக்கவியல் தத்துவமாகவும்,

வர்க்கப் போராட்டத் தத்துவமாகவும்,

ஒரு புதிய பொதுவுடைமைச் சமூகத்தின் படைப்பாளியாகிய உழைப்பாளி வர்க்கத்தின் (உலக) வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சிகரப் பங்களிப்பை விளக்கும் தத்துவமாகவும் கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளது”.

முதலாளித்துவ எதிர்ப்புப் புரட்சியின் புரட்சிகர சாசனமாக கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளது. சோஷலிச சமுதாய அமைப்பு, கம்யூனிச சமுதாய அமைப்பு ஆகிய புதிய தரிசனங்களை – மாற்றுப் பார்வைகளை – உழைப்பாளி வர்க்கத்துக்கும், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் வழங்கக்கூடிய செயல்திட்டமாக கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளது. முந்தைய சோஷலிச கற்பனாவாத குட்டி முதலாளித்துவவாதிகளின் சோஷலிசம் போன்றதொரு திட்டம் அல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம். சமுதாய அமைப்பின் யதார்த்த நிலைகளையும் வரலாற்று வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி ஏறிந்துவிட்டு சோஷலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்கான பாதையை அது விளக்குகிறது. முதலாளித்துவத்திற்குக் கல்லறை கட்டக்கூடிய ஒரே புரட்சிகர வர்க்கம் என்ற வகையில் உழைப்பாளி வர்க்கத்துக்கு மையமான பாத்திரத்தை பிரகடனம் வழங்குகிறது. சுரண்டலிலிருந்து சமுதாயம் முழுமையையும் விடுவிக்காமல் உழைப்பாளி வர்க்கம் தன்னை மட்டும் விடுவித்துக் கொள்ள முடியாது என்பதைப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது.

புரட்சிகர இயக்கத்தின் அடிப்படையான இலக்குத் திட்டமும், அறிவியல் ரீதியான தத்துவத்தின் வலிமையும் இணைந்து உருவாக்கப்பட்ட ஆவணமாக கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளதால்தான் ஒரு உயிரோட்டமுள்ள ஆவணமாக அது தொடர்ந்து நீடிக்கிறது. எளிய நடையில், ஆனால் ஆழமாக பொருளுடன் எழுதப்பட்டிருப்பதால், புரிவதற்குக் கடினமான தத்துவம் கூட சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக, கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கம்யூனிச இயக்கம் உருவாக்கியுள்ள நூல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நுலாக கம்யூனிஸ்ட் பிரகடனம் இன்றளவும் நீடிக்கிறது.

பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் புரட்சியை ஒரு பிப்ரவரி மாதத்தில் துவக்கி னார்கள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காலத் தில் உருவானதான் கம்யூனிஸ்ட் பிரகடனம். ஆனால் இப்புரட்சி கருவிலேயே சிதைந்து போனது. இருபது ஆண்டுகள் கழித்து- 1871ஆம் ஆண்டில் ‘பாரிஸ் கம்யூன்’ (பாரிஸ் சமூக ஆட்சி மன்ற) புரட்சி அரங்கேற்றப்பட்டது. பாரிஸ் நகரின் உழைப்பாளி மக்கள் அமைத்த பாரிஸ் கம்யூன் சிறிது காலம் மட்டும் நீடித்தது. உழைப்பாளி வர்க்க இயக்கம் நிகழ்த்திய இந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் விஞ்ஞான சோஷலிசம் என்ற தத்துவத்திற்கு மார்க்ஸ் – ஏங்கல்ஸ் இருவரும் இறுதி வடிவம் அளித்தனர். முதலாளித்துவம் பற்றிய முதிர்ச்சிமிக்க ஆய்வாக ‘மூலதனம்’ (முதல் பாகம்) 1867 ஆம் ஆண்டில் வெளியானது.

அதே காலகட்டத்தில் 1864 ஆம் ஆண்டில் ‘உழைப்பாளி மக்களின் சர்வதேச கங்கம்’ அமைக்கப்பட்டது. உழைப்பாளி வர்க்கத்தை ஒரு வர்க்க உணர்வு படைத்த சக்தியாகத் திரட்டுவதற் காக மார்க்சிய சிந்தனைகள் விரைவான முறையில் அக்காலத்தில்தான் வளர்ச்சி பெற்றன. இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளின்பால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இது பற்றி கம்யூ னிஸ்ட் பிரகடனத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

பாரிஸ் கம்யூன் தோல்வியைச் சந்தித்த பிறகு அடுத்த புரட்சி அலை ரஷ்யாவிலிருந்து கிளம்பும் என்று மார்க்சும் – ஏங்கல்சும் எதிர்பார்த்தனர். 1882 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் ரஷ்ய மொழிப் பதிப்புக்கு தாங்கள் கூட்டாக எழுதிய முன்னுரையில் அவர் களிருவரும் இது பற்றிக் குறிப்பிடுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் நிகழவிருக்கின்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடையாளமாக ரஷ்யப் புரட்சி அமையும் என்ற தங்கள் கணிப்பை அவர்கள் அப்போது வெளிப்படுத்தினர்.

முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய தத்துவ ஆய்வில் ஏகாதிபத்தியம் என்ற கருத்தைப் பற்றிய லெனின் அளித்த விரிவான விளக்கம் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். 1917 ஆம் ஆண்டு நிகழ்வுற்ற ரஷ்யப் புரட்சிக்கான களத்தை அமைத்த ஒருங்கிணைந்த தத்துவத்தில் இது இரண்டாவது சிகரம் என்று பிரபாத் பட்நாயக் தமது புரட்சி உலக அளவில் உருவாக்கிய பேரலைகளின் காரணமாக கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் செய்தி உலகம் முழுவதும் பரவியது.

1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றபோது, முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு உலகம் வந்திருந்தது. தீரமிகு தியாகங்களுக்குப் பிறகு சோவியத் யூனியன் பாசிச வீழ்ச்சிக்குக் காரணியாக இருந்தது; உலகம் சீனப் புரட்சியின் வெற்றியைக் காணும் தறுவாயில் இருந்தது; வியட்நாம் மற்றும் கொரியப் புரட்சிகளில் பெரும் முன்னேற்றங்களை உலகம் காணவிருந்தது. கிழக்கு ஐரோப்பாவின் பல நாடுகளில் “மக்கள் ஜனநாயக அரசுகள்” மலர்ந்திருந்தன. தேசிய விடுதலை இயக்கங்கள் அலையாக எழுந்திருந்தன – இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு அரங்கேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களாக இவை அமைந்திருந்தன.

சோவியத் யூனியனில் சோஷலிசப் பரிசோதனை முடிவுக்கு வந்ததை ஒரு சகாப்தத்தின் முடிவாகக் குறிப்பிடலாம். 1980களின் இறுதி ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட பிரதிபலிப்பின் பின்னணியில் முற்போக்கான வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் தடைபட்டுப் போயின. ஒரு தத்துவம் என்ற அடிப்படையிலும் ஒரு அரசியல் என்ற வழிமுறை வகையிலும் மார்க்சியம் தனது நிலைத்திருத்தலுக்கும், நடைமுறைப்படுத்துதலுக்கும் ஒரு பெரும் சவாலை எதிர் கொண்டது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கழிந்த ஒன்பதாண்டுகளில் இடையறாத பிரச்சாரம் ஒன்றை உலகம் சந்தித்து. “சோசலிசம் செத்துவிட்டது”, “மார்க்சியம் காலாவதியாகிவிட்டது” என்ற பிரச்சாரத்தை ஏகாதிபத்திய வட்டாரங்களும், அதன் தத்துவவாதிகளும் இடையறாமல் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த தத்துவார்த்தத் தாக்குதல் நடைபெற்றபோதே அதற்கு இணையான முறையில் உலக நிதி மூலதனம் தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் முயற்சியிலும், உலகின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது தலையை நுழைப்பதற்கான முயற்சியிலும் மிகுந்த உறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்தது. உலகமயமாக்கல் என்ற பெயரில், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் வசிக்கும் உழைப்பாளி மக்களின் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. இந்த பாதகமான வளர்ச்சிப் போக்குகளின் தொடர் விளைவாக சில கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலை குலைந்துபோயின. மார்க்சியம்தான் வழிகாட்டும் தத்துவம் என்ற நிலைப்பாட்டை அவை கைகழுவின.

இத்தகைய பின்னணியில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா, தற்காலத்துக்குப் பொருத்தமற்றதாகிவிட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தின் நினைவைப் போற்றும் விழாவாகவோ, விஞ்ஞான சோஷலிசத்தைக் கருக்கொண்டிருந்த அந்த நூலில் என்ன தவறு நிகழ்ந்தது என்ற பரிசீலனையாகவோ நடந்திருக்கக்கூடும். மாறாக, உலக முதலாளித்துவத்தின் பலவீனங்களைப் பரிசீலனை செய்யும் விழாவாக, உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு முறையைப் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் எவ்வாறு பொருத்தமாக உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டும் விழாவாக அந்த விழா அமைந்தது. 1998-ல் நிகழ்ந்த தென்கிழக்கு ஆசிய நிதி நெருக்கடி உலக முதலாளித்துவ நெருக்கடியின் துவக்கமாகக் காணப்பட்டது. அது பின்னர் கிழக்கு ஆசியப் பகுதிக்குப் பரவி தென்கொரியாவைத் தாக்கியது. வலிமை மிக்க பொருளாதார நாடுகளின் வரிசையில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த ஜப்பானில் நிதி நெருக்கடியையும், பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பிரேசில் நாட்டின் பொருளாதார அடித்தளம் ஆட்டம் கண்டது.

இத்தகைய இருள் கவிந்த சூழலில உலக முதலாளித்துவம் தனது வெற்றிக் களிப்புக்கு விடைகொடுக்க நேரிட்டது. ஐ.எம்.எப். பின்பற்றி வரும் கொள்கைகள் பற்றி, உலகமயமாக்கலுக்குத் தொடங்கின. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் போக்கு வெளிப்படத் துவங்கியது. “பனிப்போர் முடிவடைந்த பிறகு உலகத்தை ஆட்கொண்ட சுதந்திரச் சந்தை பற்றிய ஆச்சாரக் கோட்பாடுகள் சந்தித்த மிகப் பெரிய சவாலாக இந்தக் கொள்கைப் பின்னடைவு அமைந்திருந்தது” என்று ‘வால் ஸ்ட்ரீட ஜர்னல்’ என்ற இதழ் குறிப்பிட்டது. இதற்கு நேர் மாறான நிலையில் 90களின் மத்திய காலத்தில் உழைப்பாளி வர்க்கப் போராட்டங்கள் புதிய உத்வேகம் பெற்று எழுந்தன. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிற்சங்க இயக்கம் நீண்ட காலமாக சந்தித்து வந்த பின்னடைவு நிலைகள் மாறத் தொடங்கின. பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் 1995 ஆம் ஆண்டில் நடத்திய வேலை நிறுத்தம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. உழைப்பாளி வர்க்கத்தின் எதிர்ப்பு இயக்கத்தை மேலும் மேலும் எழுச்சி மிக்கதாக அது மாற்றி அமைத்தது.

இத்தகைய பின்னணியில்தான் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றைம்பதாண்டு நிறைவு விழா நடைபெற்றது. உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான கூட்டங்கள், விவாதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒரு நிகழ்ச்சியாக பாரிஸ் மாநகரில் 1998 மே மாதத்தில் நடைபெற்ற மாநாடு அமைந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள், வேறு பல நிறுவனங்கள் ஆகியவை சார்பாக 1500 பேர் அந்த மாநாட் டில் கலந்து கொண்டனர். 300க்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகள் அந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளின் போது வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்களைப் பற்றிய விபரங்களுக்குள்ளும் செல்வது இப்போது சாத்தியமானதல்ல. ஓராண்டு காலம் நடைபெற்ற 150 ஆம் ஆண்டு நிறைவு விழா 1999 பிப்ரவரியில் நிறைவடைந்தது. மாநாடுகள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் நடைபெற்ற விவாதங்களின் தன்மையையும், உள்ளடக்கத்தையும் கூர்மையாகப் பரிசீலிக்கும்போது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் வெளிப்படையாகத் தெரிந்தது. மார்க்சியதைப் பின்பற்றுபவர்களிடையே 1991 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை காணாமல் போயிற்று; மீண்டுமொருமுறை ஆழமாக சிந்திக்க வேண்டியதன் தேவை மையமான அம்சமாக வலியுறுத்தப்பட்டாலும் தத்துவார்த்த ரீதியாகப் புதுப்பித்துக் கொள்வதிலும் நடைமுறைக்கான வழியிலும் நம்பிக்கை உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின.

நூற்றாண்டு விழாவினையொட்டி இந்தியாவில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் அறிவுத்தளப் பணிகள் பற்றிய ஒரு மதிப்பீட்டைப் பெறுவதற்காக மூன்று முன்னணி மார்க்சிய அறிஞர்களை இந்த நூலுக்குப் பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் எழுதியுள்ள மூன்று கட்டுரைகள் பின்வரும் அம்சங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றன:

  1. மார்க்ஸ் – ஏங்கல்ஸ் சிந்தனைகளின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் பங்குப் பணி.
  2. மார்க்சிய தத்துவக் கருவூலத்தில் பிரகடனத்தின் முக்கியத்துவம்
  3. எதிர்காலக் கொள்கை மற்றும் செயற் முறைக்கான வழிகாட்டி என்ற முறையில் பிரகடனத்தின் பங்குப் பணி.

கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று தொடர்பான கருத்தையும் அதன் பிந்தைய கால வளர்ச்சியையும் இர்ஃபான் ஹபீப் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.

மார்க்சிய தத்துவம் புதிய சிகரங்களை எட்டும் வகையில் செய்யப்பட வேண்டிய மறு கட்டுமானத்துக்கான முயற்சியில் தேவையை பிரபாத் பட்நாயக் விளக்குகிறார். இதற்காக சமகால உலகப் பொருளாதாரத்தில் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டிய வளர்ச்சிப் போக்குகளை அவர் ஆய்வு செய்துள்ளார்.

கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள, புரிந்து கொள்வதற்குக் கடினமான புரட்சிகரமான சிந்தனைகளை அய்ஜாஸ் அகமது தெளிவான முறையில் விளக்குகிறார்.

பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் தொடர்புடைய அரசியல் மற்றும் பண்பாட்டு அம்சங்களின் மீது அந்தப் புரட்சிகர சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கத்தை அவர் மதிப்பீடு செய்துள்ளார்.

‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ள முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய கோட்பாடுகளில் காலனி ஆதிக்கம் குறித்து போதுமான அளவில் மார்க்ஸ் கவனம் செலுத்தவில்லை என்பதை சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள மூன்று கட்டுரைகளும் சுட்டிக் காட்டுகின்றன. சோவியத் யூனியனில் சோஷலிசத்தைக் கட்டும்போது ஏற்பட்ட அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளுதல் தொடர்பான பிரச்சனைகள் பற்றி இக்கட்டுரையில் பரிசீலிக்கப்படவில்லை. மார்க்சியத் தத்துவத்தையும், அதன் செயல்முறையை மறுஆய்வு செய்வதற்கும் புத்துயிர் ஊட்டுவதற்கும் சோவியத் யூனியன் அனுபவம் குறித்த பரிசீலனை தேவையான ஒரு அம்சமாகும். இந்த அம்சம் குறித்து தனியாகவும், விரிவாகவும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

முதலாளித்துவ அமைப்பு குறித்து கம்யூனிஸ்டு பிரகடனம் அளித்துள்ள விளக்கங்கள் இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையைத் திகைப்பூட்டும் வகையில் துல்லியமான முறையில் பிரதிபலிக்கின்றன. இந்த அம்சம் மார்க்சியவாதிகளாலும் மற்றவர்களாலும் கவனிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ உறவு முறைகளின் விரிவாக்கம் பற்றிய பத்திகளில் கம்யூனிஸ்ட் பிரகடனம் 20 ஆம் நூற்றாண்டின் உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவத்தை கூர்ந்த மதிநுட்பத் தெளிவுடனும், தீர்க்க தரிசனத்துடனும் படம் பிடித்துக் காட்டுகிறது. “முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு மேலும் மேலும் விரிவடையும் சந்தை தேவைப்படுகிறது. இந்தத் தேவை முதலாளித்துவம் வர்க்கத்தைப் புவிப் பரப்பு முழுவதும் தொடர்ந்து விரட்டுகிறது. முதலாளித்துவ தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அனைத்து இடங்களிலும் தனக்கென உறைவிடத்தையும் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்புகளையும், இணைப்புகளையும் உருவாக்கிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.”

1848 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வு முழுமை பெறவில்லை. ‘மூலதனம்’ நூலில் இந்த ஆய்வு முழு வடிவத்தைப் பெற்று முன்னேறியுள்ளது. அதன் பின்னர், ‘ஏகாதிபத்தியம்’ பற்றிய லெனினின் சிந்தனை கம்யூனிச இயக்கத்துக்கு புதிய முன்முயற்சிகளுக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபதாண்டுகளில் ஏகாதிபத்தியக் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகள், குறிப்பாக ஊகச் சூதாட்ட சர்வதேச நிதி மூலதனத்தின் வளர்ச்சி, மார்க்சியத் தத்துவமும் உலகளாவிய உழைக்கும் வர்க்க இயக்கமும் பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டியவையாகும்.

சர்வதேச நிதி மூலதனத்தின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. உலகமயமாக்கப்பட்ட ஏகாதிபத்திய அமைப்பில் தேசிய அரசுகளின் பங்குப் பணி என்ன என்பதே புதிதாக முன்னுக்கு வந்துள்ள கேள்வி. இந்த அம்சம் வர்க்கப் போராட்டத்தின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். சர்வதேச நிதி மூலதனம் கடுமையான ஏற்ற இறக்கங்களுடன் செயல்படும் தன்மை வாய்ந்தது. ஊகச் சூதாட்ட சர்வதேச நிதி மூலதனம் எத்தகைய கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல், நாடுகளின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல் சுதந்திரமாகப் பயணம் செய்கிறது. இந்த சர்வதேச நிதி மூலதனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோ அதன் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதோ தேசிய அரசுகளுக்கு இயலாத காரியமாக ஆகிவிட்டது. இதனால் தேசிய அரசுகளின் தன்னாளுமையே  அரிக்கப்பட்டுவிட்டது. சர்வதேச நிதி மூலதனத்தின் இத்தகைய தன்மையும் அதன் பிரம்மாண்டமான வளர்ச்சியும் நம்முடைய ஆய்வுக்குக் குறுக்கே வரத் தேவையில்லைதான்.

ஆனால் நிதி மூலதனத்தின் இடம்விட்டு இடம் பாயும் தன்மை தேசிய அரசுகளுக்கு ஏற்படுத்தி வரும் ஏராளமான இன்னல்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. தேசிய அரசுகளால் தமது நாடுகளுக்குள் நுழைந்து கொள்ளை லாபம் அடிக்கும் நிதி மூலதனத்தின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. சர்வதேச நிதி மூலதனம் தனது ஏவல் அமைப்புகளாகச் செயல்படும் பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்.), உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் துணையோடு நாடுகளின் மீது திணிக்கும் கொள்கைகளை தேசிய அரசுகளால் எதிர்க்க முடிவதில்லை. தேசிய அரசுகளை பயன்படுத்தி சர்வதேச நிதி மூலதனத்தால் உருவாக்கக்கூடிய தீய விளைவுகளை எதிர்த்துப் போராட முடியுமா என்பதும், வர்க்கப் போராட்டத்தின் மையமான அம்சமாக தேசிய அரசுகளை மாற்ற முடியுமா என்பதுமே தற்போது எழுந்துள்ள கேள்விகள்.

தேசிய அரசுகளை வர்க்கப் போராட்டம் நிகழும் களமாகப் பயன்படுத்தவது பற்றிய முறையான பரிசீலனை தற்போது தேவைப்படுகிறது. முதலாளித்துவச் செயல்பாடுகளின் உலகளாவிய தன்மையினை விளக்குகின்ற கம்யூனிஸ்ட் பிரகடனம் அதேநேரத்தில் தேசிய எல்லைகளுக்குள் நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது? முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் உள்ளடக்கத்தில் தேசியத் தன்மையுடன் இல்லை என்றாலும் வடிவத்தைப் பொறுத்த வரை முதலில் அது ஒரு தேசியப் போராட்டமாகவே அமையும். ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது நாட்டின் முதலாளி வர்க்கத்துடன் முதலில் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. “கம்யூனிஸ்ட் பிரகடனம் வெளியிடப்பட்டு நூற்றைம்பது ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், மூலதனம் விரிவான அளவில் மேலும் மேலும் அதிகமான அளவில் சர்வதேசியத் தன்மை பெற்றுவிட்ட நிலையிலும், வர்க்கப் போராட்டம் குறித்த இந்தக் கோட்பாடு இன்றும் செல்லத்தக்கதாக இருக்கிறது.

குறைவான அளவிலேயே வளர்ச்சி பெற்றுள்ள முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் பங்குப் பணி பற்றி புரிந்து கொள்வது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாடுகளின் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள், தங்களுடைய நாடுகள் சுயேச்சையான ஒரு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை கைவிட்டுவிட்டன. எதிர்ப்பு அரணாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் உலக அரங்கில் இல்லாமல் போனது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தின் உலக ஒழுங்கமைப்பில் தங்களையும் இணைத்துக் கொள்வதுதான் தங்களின் வர்க்க வளர்ச்சிக்கான ஒரே பாதையாக அவை கருதுகின்றன. ஆனால், இதுவே ஒரு நிரந்தரமான நிகழ்ச்சிப் போக்காக இருக்க முடியாது. உலக முதலாளித்துவ அமைப்பில் முரண்பாடுகள் தீவிரமடையும்போது உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

சர்வதேச நிதி மூலதனத்தின் ஊடுருவலால் தேசிய அரசுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவது உண்மையே. ஆனால் நிதி மூலதனத்தை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாதே என்ற நிலைக்கு அவை தள்ளப்பட்டுவிட்டதாக நாம் அதனை மிகைப்படுத்திவிடக் கூடாது. மூலதனத்தின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதிக்காமல் எந்தவொரு நாடும் உயிர்வாழ முடியாது என்றும், வளர்ச்சி அடைய முடியாது என்றும் ஐ.எம்.எப். உலக வங்கியின் ஆச்சார சீலர்கள் அடித்துப் பேசி வருகின்றனர். ஆனால், எத்தகைய கட்டுப்பாடுமற்ற முறையில் மூலதனப் பாய்ச்சலை அனுமதிப்பது தவறு என்று தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தித்த நிதி நெருக்கடிகள் தெளிவான முறையில் படம் பிடித்துக் காட்டியுள்ளன. நிதி மூலதனத்தின் தாக்குதலால் ஏற்படக்கூடிய சீரழிவுகளை கட்டுப்படுத்தக்கூடிய கருவியாக இருக்கக் கூடியது தேசிய அரசுகள் மட்டுமே என்பதும், சர்வதேச அமைப்புகளின் பரிசீலனைக்கு இதனைக் கொண்டு செல்லக் கூடிய நிலையில் தேசிய அரசுகள் மட்டுமே உள்ளன என்பதையும் தென்கிழக்கு ஆசியாவின் அனுபவங்கள தெளிவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, மலேசியாவின் மகாதிர் ஆட்சி, தன்னை ஒரு முதலாளித்துவ ஆட்சிதான் எனக் கூச்சமின்றிக் கூறிக் கொண்டாலும்கூட, ஐ.எம்.எப் / உலக வங்கியின் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக சவால் விடுத்தது. நிதி மூலதனப் பாய்ச்சலுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.

தேசிய அரசுகளையும் அவற்றின் ஆட்சி இயந்திரத்தையும் பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டு வர்க்கங்கள் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைகளைச் செயல்படுத்துவதை அனுமதிக்க முடியாது? உழைப்பாளி வர்க்கத்தின் உடனடி நலன்களைப் பேணிப் பாதுகாக்கவும், ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடவும் ஏற்ற வகையில் தேசிய அரசுகளை சரியான திசைவழிக்கு நெறிப்படுத்துவதான போராட்டம் உறுதியுடன் நடத்தப்பட வேண்டும்.

இதற்கான அனைத்து வகைப் போராட்டங்களுக்கும் உழைக்கும் வர்க்க இயக்கம் தலைமைப் பாத்திரத்தை ஏற்க வேண்டும். “உழைக்கும் வர்க்கம் தேசத்தை வழிநடத்தும் இயக்கமாக உயர வேண்டும்”, “உழைக்கும் வர்க்கம் தன்னையே தேசமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியல் மேலாதிக்கத்தை அது பெறமுடியும்” என்றெல்லாம் கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் போராட்டத்துக்கு உழைக்கும் வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டும் என்ற பொருளில்தான் மேற்கண்டவாறு கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாடுகளை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்தியத்தின் போக்குகளுக்கு எதிராக உழைப்பாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் ஜனநாயக இயக்கம் வர்க்க சக்திகளின் பலாபலன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். அத்துடன் உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் மத்தியில் உருவாகக் கூடிய ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்தவும், அதனை எதிர்த்துப் போராடவும் அது வழிவகுக்கும்.

நாடுகளின் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில்தான் வர்க்கப் போராட்டங்கள் பெருமளவில் நடைபெறுகின்றன. இவ்வாறு நிகழ்வது சர்வதேசியக் கோட்பாட்டுக்கு எதிரானது அல்ல. தனது கொள்கைகளை தேசிய அரசுகளின் மீது திணிப்பதற்காக லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் ஏகாதிபத்தியம் வன்மத்துடன் கையாள்கிறது. உள்நாட்டு வர்க்கங்கள் மற்றும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய அரசுகள் செயல்படுவதற்கு ஏகாதிபத்தியம் அனுமதிப்பதில்லை. ஒரு நாடு தனது உயர் தன்னாளுமையை இழக்கிறது என்றால் அந்த நாட்டு மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் உரிமையையும் பிற உரிமைகளையும் இழக்கிறார்கள் என்றுதான் பொருள். தேசிய அரசுகளையும் அதன் குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஜனநாயக அமைப்புகள் மூலம்தான் ஒரு நாட்டின் மக்கள் தங்களின் சுயாதிபத்திய உரிமையை வெளிப்படுத்துகிறார்கள். உயர் தன்னாளுமை பறிபோகிறது என்றால் அது பொருளாதார அடிப்படையில் மட்டும் தாக்கம் ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது. அது நாட்டில் அரசியல் அமைப்புகளையும், ஏன் அந்த நாட்டின் ஜனநாயகத்தையும் கூட சீர்குலைக்கும். பொதுக்கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கான மக்களின் உரிமைகளும் இதனால் பாதிக்கப்படும்.

குறிப்பாகச் சொல்லப்போனால் இந்தியா தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் மேலே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்தவைதான். மூன்றாம் உலக நாடுகளுக்குள்ளே வளர்ச்சியடைந்த ஒரு முதலாளித்துவ வர்க்கத்தையும், குடியரசுத் தன்மையுடன் கூடிய ஒரு அரசமைப்புச் சட்டத்தையும் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

அந்த அரசமைப்புச் சட்டத்தில் அடித்தளமாக இருப்பது, குறைபாடுகளுடன் கூடிய, ஆனால் செயல்படக்கூடிய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை. 1990களில் துவங்கி இந்திய ஆளும் வர்க்கம் பின்பற்றி வரும் உலகமயமாக்கல் திட்டம் இந்த ஜனநாயக வடிவத்தின் மீது நேரடியான தாக்குதலுக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளது.

ஜனநாயக வடிவம் கொண்ட அரசியல் அமைப்பு முறை ஒருபுறம்; சமத்துவத்தன்மை அறவே இல்லாத சர்வாதிகாரத் தன்மை மிக்க பொருளாதாரக் கட்டுமானம் மறுபுறம்; இப்படிப்பட்ட முரண்பட்ட தன்மையைக் கொண்ட ஒன்றாகவே இந்தியா தொடர்ந்து காட்சி அளிக்கிறது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில்தான் இப்படிப்பட்ட முரண்பாடு சாதாரணமாகக் காணப்படும். மற்றொரு முரண்பட்ட தன்மையும் இந்திய அரங்கில் முன்னுக்கு வந்துள்ளது. மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிக்கும் அரசாங்க முடிவுகள் எடுக்கப்படும் தன்மைக்குமான முரண்பாடுதான் அது. எந்த முதலாளித்துவ கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது பின்பற்றும் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் அமைகின்றன. 1991 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய தொடர்ச்சியான மூன்று அரசாங்கங்கள் – அவை வெவ்வேறு அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளைச் சேர்ந்தவையாக இருந்தபோதிலும் – ஒரே மாதிரியான அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளைத்தான் பின்பற்றின. நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து அரசு விலகி நிற்பது போன்ற கொள்கைகளை முறியடிப்பதற்கு மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கிடையே நிலவும் பொதுவான கருத்தொற்றுமை பெரும் தடையாக அமைந்துள்ளது.

இத்தகைய கருத்தொற்றுமையில் இடதுசாரிகள் தங்களை இணைத்துக் கொள்ள மறுத்து வருகிறார்கள். ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்களுக்கு எதிரான இயக்கங்களை உருவாக்க வருகிறார்கள் என்பது வெளிப்படை. அதேநேரத்தில், பொருளாதாரக் கொள்கை மாற்றங்களின் அடிப்படையில் மட்டுமே உண்மையான மாற்றுத் திட்டத்தை முன் வைத்துவிட முடியாது. பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் முக்கியமானவைதான். ஆனால், அவை மட்டுமே போதுமானவை அல்ல. தன்னாளுமைக்கான போராட்டத்தை நடத்துவது, ஜனநாயகத்துக்கான போராட்டத்தை நடத்துவது மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது ஆகிய அனைத்துக்கும் ஒரு அரசியல் தத்துவார்த்த உள்ளடக்கம் தேவைப்படுகிறது.

கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல வர்க்கப் போராட்டம் என்பது உண்மையில் ஒரு அரசியல் போராட்டம்தான்? பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வர்க்க போராட்டத்தை நாம் திறமையான முறையில் கையாள்வதை பொறுத்துதான் மூன்றாம் உலக நாடுகளில் – ஏகாதிபத்திய உலக நாடுகளில் – மார்ச்சியத் தத்துவத்தையும் அதன் செயல் முறைகளையும் முன்னுக்குக் கொண்டுவர முடியும்.

உலக முதலாளித்துவ ஆதிக்கத்தின் வெற்றிகரமான வளர்ச்சியை தீர்க்கதரிசனத்துடன் சரியாகக் கணித்துக்கூறிய பிரகடனம் மற்றொரு அம்சத்தில் மிகையான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. தேசியத் தடைகளை முறிக்கக் கூடியதாக உலக முதலாளித்துவத்தின் ஆற்றல் பற்றி மிகையான முறையில் மதிப்பீடு செய்தது. “நாடுகளுக்கிடையேயும், மக்களுக்கிடையேயும் நிலவிவந்த கருத்து வேறுபாடுகளும், பகைமைப் போக்குகளும் மேலும் மேலும் அதிக அளவில் மறைத்து வருகின்றன. முதலாளிகளின் வளர்ச்சி, வர்த்தகத்துக்கான சுதந்திரம், உலக அளவிலான சந்தை, உற்பத்தி முறையில் காணப்படும் ஒரே மாதிரியான தன்மை போன்றவையே இதற்குக் காரணம்” என்று பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஏகாதிபத்திய சகாப்தத்தில் இரண்டு உலகப் போர்களை இருபதாம் நூற்றாண்டு கண்ணுற்றது. ஆதிபத்திய நோக்கத்துடன் முடுக்கிவிடப்பட்ட தேசங்களுக்கிடையேயான போட்டிகளும், தேசங்களுக்கிடையே ஏற்பட்ட வேறு பல மோதல்களும் மிகப்பெரும் மனித பலிகளுக்கு இட்டுச்சென்ற அந்த இரு உலகப் போர்களுக்கு காரணமாயின. தேசங்களுக்கிடையோன முரண்பாடுகளை மேலும் கிளறிவிட்டுள்ளது. முதலாளித்துவத்திலிருந்து மாறி வந்த நாடுகளில் கூட அதன் விளைவுகள் தொடர்கின்றன என்பது வெளிப்படை.

இனக்குழுவாத அடிப்படையிலும், தேசிய அடிப்படையிலும், மத அடிப்படையிலும் எழுந்துள்ள எண்ணற்ற சிக்கல் மிகுந்த பிரச்சனைகள் மூன்றாம் உலக நாடுகளிலும் முன்னாள் சோஷலிச நாடுகளிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடையாக அமைந்துள்ளன. சுதந்திரச் சந்தைக் கோட்பாடுகள் திணிக்கப்படுதல், சோஷலிச முகாமின் செல்வாக்கில் ஏற்பட்ட பின்னடைவுகள், சமுதாய மற்றும் கலாச்சார அரங்கங்களில் உலகமயமாக்கலால் ஏற்படும் சீரழிவுகள் ஆகியவை இனக்குழு மற்றும் மத அடையாளங்களையும் – உணர்வுகளையும் தூண்டிவிடுபவையாகவும் அவற்றை மேலும் மோசமடையச் செய்பவையாகவும் அமைந்துள்ளன. உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள தேசங்களிலும், பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடுகளிலும் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் பிற்போக்குத்தனமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளில் மத சகிப்புத் தன்மையற்ற இயக்கங்களும் இன மற்றும் சாதிய மோதல்களும் வளர்ந்து வருகின்றன. இத்தகைய சக்திகளுடன் இணக்கமான முறையில் செயல்படும் ஆற்றல் ஏகாதிபத்தியத்துக்கு கைவந்த கலையாக உள்ளது. தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்னும் அடிப்படைவாத அமைப்புடனும், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுடனும், இந்திய நாட்டில் இத்து மதவாதிகளுடனும் இணைந்து செயல்படுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சாத்தியமாகியுள்ளது. சிறுபான்மை மக்களின்பால் ஆளும் வர்க்கங்கள் காட்டக்கூடிய மதவெறிப் போக்கு மற்றும் ஜனநாயகத் தன்மையற்ற போக்குகளால் மக்களின் ஒற்றுமை சீர்குலைகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் வளர்ந்து வரும் சகிப்புத் தன்மையற்ற சக்திகளும் மக்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கின்றன. இதனையெல்லாம் உழைக்கும் வர்க்க இயக்கமும், இடதுசாரி சக்திகளும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

இனக் குழுக்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கும் உரிமைகளை வழங்கக்கூடிய, அவற்றுக்கு உத்தரவாதமளிக்கக் கூடிய ஒரு ஜனநாயக இயக்கத்தை, தேசிய அளவிலான தலைமைப் பாத்திரத்தை எதிர்பார்க்க முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசியத்துக்கு தலைமைப் பாத்திரம் வகித்த உழைக்கும் வர்க்கம் விரும்பினால் அது சிறிய அளவிலான மத, இன, மொழி, பிராந்திய வாதப் போக்குகளுக்கு எதிராகவும், பெரிய அளவில் இத்தகைய போக்குகளுக்கெதிராகவும் போராட வேண்டியிருக்கும். சிறுபான்மை மக்களின் ஜனநாயக வேட்கைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதேநேரத்தில் பிரிவினை வாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கும் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக மாநில சுயாட்சிக் கோட்பாடுகளுக்கும் பிரதேச சுயாட்சி உரிமைகளுக்கும் இடதுசாரிகள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தெற்கு ஆசிய நாடுகளில் கிடைத்துள்ள அனுபவங்கள் இதனையே உணர்த்துகின்றன. நிர்வாக அமைப்புகளிலும் பொருளாதார அம்சங்களிலும் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கீழ்மட்டத்துக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பதற்கான போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றன. மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களின் பிரதிபலிப்பாகவே இவற்றை கருத வேண்டும்.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டிருந்த சோவியத் யூனியனும், யூகோஸ்லேவியாவும் பிளவுபட்டு உடைந்துபோன காட்சியை நாம் கண்டோம். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளின் பிரச்சனை பற்றி மார்க்சியத் தத்துவம் மற்றும் நடைமுறைகள் காட்டும் வழிகாட்டுதல் குறித்த ஒரு புதிய பார்வையின் அவசியத்தை இந்த அனுபவங்கள் உணர்த்துகின்றன.

சமூக அமைப்பைப் புரட்சிகரமான முறையில் மாற்றிட நடத்தப்படும் இயக்கத்தின் தலைமைப் பாத்திரத்தை பாட்டாளி வர்க்கத்துக்கு கம்யூனிஸ்ட் பிரகடனம் வழங்குகிறது. பிரகடனம் அளிக்கும் இச்செய்தியை நிராகரிப்பதற்கான முயற்சிகள் அனைத்து வகையிலும் நடைபெற்று வருவதை நாம் காண முடிகிறது. கடந்த பத்தாண்டுகளில் சோஷலிசம் சந்தித்த பின்னடைவுகள் மார்க்சியத் தத்துவத்தின் இந்த அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் திரிபுவாதப் போக்குகளுக்கு உரம் சேர்த்துள்ளன. உலகமயமாக்கலுக்கு எதிராக நடைபெற்றுள்ள அண்மைக்கால போராட்டங்களின் அனுபவங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவாதப் போக்குகளுக்கு எதிராக அமைந்துள்ளன. அவை பாட்டாளி வர்க்கத்தின் மையமான பாத்திரத்தின் தேவையை வலியுறுத்திக் கூறுவதற்கான போதிய அடிப்படைகளை உருவாக்கியுள்ளன. ஏகாதிபத்தியத் தாக்குதலைத் தொடர்ச்சியாக எதிர்த்து வரும் வர்க்கம் தொழிலாளி வர்க்கம் மட்டுமே. அந்த எதிர்ப்பு எவ்வளவு தற்காப்புத் தன்மையுடன் இருந்தாலும் கூட அதுதான் உண்மை நிலை. 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், 1996 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் ஒரு மாத காலம் நடைபெற்ற தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலை நிறுத்தமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருமுதலாளி ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராக மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வரக்கூடிய தொழிற்சங்கங்களின் புதிய ஒருங்கிணைந்த ஆரம்ப கட்டப் போராட்டங்களும் வரக்கூடிய காலங்களில் பாட்டாளி வர்க்கம் ஆற்றவுள்ள மையமான பங்களிப்பை உறுதி செய்துள்ளன.

உழைக்கும் வர்க்கம் இன்று ஒரு மறைந்துவரும் வர்க்கமோ, எண்ணிக்கையில் சுருங்கி வரும் வர்க்கமோ அல்ல என்பதை அய்ஜாஸ் அகமது தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் கூட இதே நிலைதான் காணப்படுகிறது. உழைப்பாளி வர்க்கத்தின் கூட்டமைவுகளிலும் உள் கட்டமைவுகளிலும் முந்தைய நிலைகளிலிருந்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மையே. இந்திய நாட்டைப் பொறுத்த வரை தொழிலாளர்களின் உணர்வுகளில் சாதி மற்றும் இனக்குழு அடிப்படையிலான வேறுபாடுகள் இன்றும் தொடர்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க உணர்வை மேம்படுத்த அதன் அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகள் மட்டும் போதுமானவையல்ல. தத்துவார்த்த ரீதியிலும், கலாச்சார அடிப்படையிலும் குறுக்கிடுவதன் மூலம் வர்க்க உணர்வை மேலும் வளர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த அம்சத்தில் மிகச் சிறிய அளவுக்கே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர தொழிற்சங்கங்களும் உழைக்கும் வர்க்க இயக்கமும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது. நாம் குறிப்பிடுவது – தொழிற்சங்க இயக்கத்தில் பெண் தொழிலாளர்களின் பங்குப் பணி பற்றய அம்சம். தொழில்துறை உழைப்பாளிகளின் அணியில் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பிரகடனம் முன்கூட்டியே மதிப்பீடு செய்திருந்தது. “நவீன தொழில்துறை மேலும் மேலும் வளரும் போது ஆடவரின் உழைப்பு மேலும் மேலும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவர்” என்று கம்யூனிஸ்ட் பிரகடனம் மதிப்பிடப்பட்டிருந்தது. மலிவான உழைப்புச் சக்தி என்ற வகையில் வளர்ந்து வரும் பாட்டாளிகளின் அணியில் பெண்களும் இணையும் நிலை உருவாகும் என்று கருதப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின் படி முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் உழைப்பாளர் படையில் 60 சதம் பேர் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது? பணித் துறையிலும், குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. பகுதிநேரப் பகுதிகளிலும்? ஒப்பந்தப் பணிகளிலும் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பெரிய அளவில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளிலும்கூட இதே நிலையைக் காண முடிகிறது. இந்தியாவில் உள்ள பெண் தொழி லாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியே 70 லட்சம் பாட்டாளி வர்க்கத்தின் முக்கியமான அங்கமாக அவர்களும் விளங்குகின்றனர் என்பது உரிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் வர்க்க சுரண்டல், சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் பாலியல் ரீதியில் அவர்கள் சந்திக்கும் பிரத்தியேகமான பிரச்சனைகளின் மீதும் உழைக்கும் வர்க்கக் கட்சி கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். உழைக்கும் வர்க்க இயக்கத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக பெண் தொழிலாளர்கள் மாற்றப்படவில்லையானால் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் மிகப் பெருமளவில் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை வென்றெடுப்பது என்ற பிரகடன நோக்கம் நினைத்து பார்க்கக்கூட முடியாத ஒன்றாகவே இருக்கும்.

ஜெர்மன் தொழிலாளர்களின் கட்சியாகிய கம்யூனிஸ்ட் லீகிற்காக கம்யூனிஸ்ட் பிரகடனம் எழுதப்பட்டது. (அக்கட்சி ஒரு சிறிய கட்சியே) கம்யூனிஸ்ட்டுகள் பின்பற்ற வேண்டிய இலக்கு, திட்ட முறைகள் பற்றியும் உடனடி நடைமுறைகளைப் பற்றியே அது விளக்குகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் பிற்காலத்தில் பின்பற்றிய நடைமுறைகளுக்கு அவை முன்னோடியாக இருந்தன. அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட ஒரு கட்சியாக உழைப்பாளி வர்க்கம் மாற வேண்டியதன் தேவையை பிரகடனம் விளக்கியுள்ளது. பாட்டாளிகளை வர்க்கமாகத் திரட்டுவது பற்றியும், பின்னர் அதனை அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றியுமான கருத்து கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் அதன் ஆரம்பகட்ட வடிவத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த கருத்துக் கருவின் அடிப்படையில் ஒரு புரட்சிகரக் கட்சி பற்றிய முழுமையான கோட்பாட்டை லெனின் பின்னர் வடிவமைத்தார். “அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்குள்ள கம்யூனிஸ்ட்கள்தான் மிகவும் முன்னேறிய, மிகவும் நெஞ்சுறுதி படைத்த பகுதியினர்” என்று கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்கள் உழைப்பாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற கோட்பாடு இந்த வாசகங்களின மூலம் பிரகடனத்திலேயே இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிடலாம். சிலர் இக்கருத்துக்கு எதிராக வாதிடுகின்றனர் என்ற போதிலும் இதுவே சரியான நிலை. அதேநேரத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பல தொழிலாளி வர்க்கக் கட்சிகள் உருவாகும் என்று மார்க்சும் ஏங்கல்சும் கருதினார்கள். சொத்துடைமை வர்க்கங்களின் கட்சிகளுக்கும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

அப்படிப்பட்ட புரட்சிகரத் தத்துவார்த்த அடிப்படைகளை நிலைநாட்டுவதற்காகத்தான் கம்யூனிஸ்ட் பிரகனடத்தின் மூன்றாவது பகுதி சோஷலிசம் பற்றிய தவறான கண்ணோட்டங்களை நிராகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்தியுள்ளது. விஞ்ஞான சோஷலிசத்துக்கும் மற்ற தவறான சோஷலிசக் கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மையும், முரண்பாடுகளும் அப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. பல்வேறு வரலாற்றுக் காலங்களில் உழைப்பாளி வர்க்கக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்காத பல்வேறு விதமான சோஷலிசக் கோட்பாடுகள் உருவாகக்கூடும். இவற்றுக்கு எதிரான தொடர்ச்சியான தத்துவப் போராட்டங்கள் தேவையானவை என்பதை நினைவுபடுத்தும் வகையிலேயே கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் இப்பகுதி அமைந்துள்ளது.

ஐரோப்பாக் கண்டத்தின் பல்வேறு நாடுகளிலுமுள்ள எதிர்க் கட்சிகளின்பால் கம்யூனிஸ்ட்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை பற்றி கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் கடைசிப் பகுதி விளக்குகிறது. தொழிலாளி வர்க்கத்தின் உடனடி நோக்கங்களை வென்றெடுப்பதற்கு கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய யுக்திகளைப் பற்றி, அதாவது ‘ஐக்கிய முன்னணித் தந்திரம்’ பற்றி இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் தொழிலாளி வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பின்பற்றப்படும் உத்திகளாகவே அவை குறிப்பிடப்பட்டுள்ளதால் அத்தகைய சூழ்நிலை மாறும்போது அவற்றைக் கைவிட்டுவிட வேண்டியது அவசியமானது என்று புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் பிந்தைய காலப் பதிப்பு ஒன்றிற்கு எழுதியுள்ள முன்னுரையில் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்திகள் சில காலாவதியாகிவிட்டதைப் பற்றி மார்க்சும் ஏங்கல்சுமே குறிப்பிட்டுள்ளனர். கட்சியின் பங்குப் பணி, வர்க்கத்துடனான அதன் தொடர்பு, முதலாளித்துவ அரசின் தன்மை, புரட்சிகர இயக்கத்தின் இலக்குத் திட்டம் மற்றும் உடனடி நடைமுறைத் திட்டங்கள் ஆகியவை கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் அரசியல் சார்ந்த பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. இந்த வளமான சிந்தனை ஆதாரங்கள் பிற்காலத்தில் கட்சிகளின் வளர்ச்சி தொடர்பாகப் பெறப்பட்ட அனுபவங்கள், அகிலங்களின் வளர்ச்சியில் கிடைத்த அனுபவங்கள ஆகியவற்றின் அடிப்படையில் சிந்திக்கப்பட வேண்டியவை, பரிசீலிக்கப்பட வேண்டியவை. 20 ஆம் நூற்றாண்டில் உருவான சோவியத் யூனியன் மற்றும் இதர சோஷலிச நாடுகள் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் கட்சி பற்றியும், வர்க்கம் பற்றியும் அரசு பற்றியும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இன்றளவும் விடை காணப்படாதவையாகவே அவை நீடிக்கின்றன.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள படைப்புகள் மார்ச்சியத் தத்துவம் மற்றும் நடைமுறை பற்றிய பொதுவாக விளக்கங்களாக அமைந்துள்ளன. இருந்தபோதிலும் இந்தியச் சூழல் பற்றியும் தொடர்ச்சியான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்திய நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது எழுபதாண்டு வரலாற்றில் ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது. மதிப்புமிக்க பல அனுபவங்களைப் பெற்றுள்ளது. அவைகளெல்லாம் ஆழமான ஆய்வு செய்யப்பட்டு, அலசப்பட்டு கோட்பாடுகளாகத் தொகுக்கப்பட வேண்டியவை. 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் (வேறு பல நாடுகளைப் போலன்றி) இந்திய நாட்டில் மார்சியத்தைப் பின்பற்றும் கட்சிகள் மக்கள் ஆதரவுத தளத்துடன் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்திய நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் குழுக்களிலுமுள்ள உறுப்பினர் எண்ணிக்கை 15 லட்சம். இது தவிர இடதுசாரி தன்மையுள்ள வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களில் 5.5 கோடி முதல் 6 கோடி பேர் வரை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்த செல்வாக்குடன் ஒப்பிடுகையில், தத்து வார்த்த ரீதியான பணிகள் கண்டு கொள்ளப்படவில்லை. தத்துவார்த்துவப் பணிகளை வலுப்படுத்துவதற்காக அடிப்படைகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள மார்ச்சியப் படைப்புகள் பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் மட்டுமே விதி விலக்காக உள்ளன. இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு மொழிகளில் கம்யூனிஸ்ட் பிரகடனம் வெளியிடப்பட்ட வரலாறு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்பது இந்த நூலை தயாரிக்கும் போது உணரப்பட்டது. இது பற்றிய சில விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான குறிப்புகள் இந்த நூலின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலும், இதர இயக்கங்களிலும் முனைப்புடன் ஈடுபட்ட சில மிகச் சிறந்த இந்திய உள்ளங்களை 1920 ஆம் ஆண்டுகளிலிருந்தே கம்யூனிஸ்ட் பிரகடனம் ஈர்த்துள்ளது.

சிறந்த தேசிய இயக்கத் தலைவரும் இஸ்லாமிய அறிஞருமாகிய அபுல் கலாம் ஆசாத், தலைசிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும் திராவிட இயக்க முன்னோடித் தலைவருமான பெரியார் ஆகியோர் முதல் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களாக உருவான பி. சுந்தரய்யா, இ.எம்.எஸ். நம்பூதிபாட் வரை கம்யூனிஸ்ட் பிரகடனத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்தான். அவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் பிரகடனத்தை மொழிபெயர்ப்பதிலோ பதிப்பிப்பதிலோ தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அந்தத் தலைவர்களின் மாறுபட்ட அரசியல் பின்னணிகளைப் பார்க்கும்போது, விடுதலைப் போராட்டக் காலத்தில் மார்ச்சியச் சிந்தனைகள் எத்தகைய விரிவான செல்வாக்கைக் கொண்டிருந்தன, எவ்வளவு விரிவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கம்யூனிஸ்ட் பிரகடனம் பற்றிய இந்த நூலுடன் ‘லெஃப்ட் வேர்டு புக்ஸ்’ பதிப்பகம் துவங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல அறிகுறி. மார்க்சியத் தத்துவ மற்றும் செயல்முறைகள் குறித்துப் புத்தொளி பெறுகிற முயற்சியில் கம்யூனிஸ்ட் பிரகடனம் பேருதவியாக அமையும். முன்னோக்கிய பயணத்துக்கான பாதையைப் புரிந்து கொள்ள உதவும்.

இந்த நூலை உருவாக்குவதற்கான சிந்தனை 1998 ஆம் ஆண்டில் பிறந்தது. இந்த நூலுக்கான முன்னுரையை எழுதித் தருமாறு தோழர் இ.எம்.எஸ். அவர்களைக் கேட்டிருந்தோம். அந்த முயற்சியில் பெரும் ஆர்வம் காட்டிய அவர் முன்னுரையை எழுதித்தர ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், அது நடைபெற முடியவில்லை. சில வாரங்களில் அவர் மறைந்துவிட்டார். அவரது நினைவுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்குகிறோம்.

குறிப்புகள்:

  1. வி.ஐ. லெனின் – தொகுதி நூல்கள் 21 பக்.48 (ஆங்கிலம்)
  2. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் குறிப்பிட்டதாக ராபர்ட் வேட் மற்றும் ஃரபாக் வெனரசோ எழுதிய, ‘மூலதன ஆதிக்கத்திற்கான போராட்டம்’ என்ற நியூ லெஃப்ட் ரிவ்யூ பத்திரிகைக் கட்டுரை, பக்.231, செப்.4 1998.
  3. பிரபாத் பட்நாயக் மற்றும் அய்ஜாஸ் அகமது ஆகிய இருவருமே தேசிய அரசு மற்றும் உலகமயமாதல் குறித்து எழுதியுள்ளனர். பார்க் கவும் பட்நாயக்., ‘உலகமயமாகும் மூலதனமும், ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாடும்’, ‘சோசியல் சயின்டிஸ்ட் 282-83, நவ.டிச.1996 மற்றும் அகமது ‘உலகமயமாக்கலும் தேசிய அரசும்’ செமினார் 437, ஜனவரி 1996..
  4. எல்லன் மெய்சின்ஸ்வுட் முதலாளித்துவ அமைப்பில் எவ்வாறு அரசியலும், பொருளா தாரமும் வேறுவேறாகப் பிரிக்கப் படுகின்றன என விளக்கியுள்ளார். அவருடைய ‘முதலாளித்துவத் துக்கு எதிராக ஜனநாயகம்: வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைப் புதுப்பித்தல்’, (கேம்பிரிட்ஜ் 1995) என்ற நூலைப் பார்க்கவும்.
  5. ‘தொழில் வளர்ச்சி அடைந்த (OECD ) நாடுகளில் 1994 ஆம் வருட கணக்குப்படி மொத்தமாக 11.5 கோடி மக்கள் தொழிற்சாலைகளில் பணி புரிகிறார்கள். இது 1973-ல் 11.2 கோடி ஆகும்’. கிம் மூடி, ஒர்க்கர்ஸ் இன் எ லுன் வோர்ல்ட், லண்டன் 1997.
  6. OECD நாடுகளில் 15 முதல் 64 வயது வரை பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் எண் ணிக்கை 1980ல் 53 சதவீதமாக இருந்தது. 1990ல் 60 சதவீதமாக உயர்ந்தது என உலகத் தொழிலாளர் அமைப்பின் வேலை நியமன அறிக்கை (1994) குறிப்பிடுகிறது.
  7. “சொத்துடைமை படைத்த வர்க்கங்களுடைய ஒட்டுமொத்தமான சக்தியை எதிர்த்த தனது போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம், மற்ற அனைத்து சொத்துடைமை வர்க்கங்களி லிருந்தும் மாறுபட்ட, அவற்றை எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு அரசியல் கட்சியை உருவாக்காமல் ஒரு வர்க்கமாக நின்று போராட முடியாது.” ஹேக் நகரில் கூடிய உலகத் தொழிலாளர் அமைப்பில் 1872 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மார்க்ஸ், ஏங்கல்ஸ், தொகுதி நூல்கள் (ஆங்கிலம்) 23, பக்.243.


%d bloggers like this: