கேள்வி: அகிலன், ஈரோடு.
பதில்: ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் பாஜக அரசுக்குமான உறவு தற்போது நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது தாங்கள் அறிந்ததே. மாநில அதிகாரத்துக்கு வந்தவுடனே இந்துத்துவத்திற்கு உதவி செய்திடும் மாற்றங்களை பாடத்திட்டத்தில் ஏற்படுத்திட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஈடுபடத் தொடங்கியது. கல்வியில், குறிப்பாக ஆரம்பக் கல்விக்கான பாடத்திட்டத்தில் அபத்தங்களையும், கற்பனையை வரலாறாக்கியுள்ளனர். பத்ரா என்றொரு அபத்தஜீவியின் வழிகாட்டுதலில், குஜராத் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் சில பத்திகளை வாசித்தால் அபத்தத்தின் அளவுகோல் புரியும்.
“இந்தியாவில் வாழ்ந்த ரிஷிகள் தங்கள் யோகக் கல்வியின் மூலம் திவ்ய திருஷ்டியை எட்டினார்கள். அதுதான் தொலைக்காட்சி என்ற அறிவியல் கண்டுபிடிப்பின் தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை. மஹாபாரதத்தில், ஹஸ்தினாபுர அரண்மனையின் உள்ளே அமர்ந்துகொண்டிருக்கும் சஞ்சயா தன் திவ்ய சக்தியை பயன்படுத்தி, போர்க் காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வார்… பார்வையற்ற திருதிராஷ்டருக்கு. (பக்கம் 64)
இதைப் போலவே, கார், குளோனிங் தொழில்நுட்பம் வேத காலத்தில் இருந்ததென்ற விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத் தலைமுறை அறிவியல் பார்வையில் சிந்தித்துவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.