ஓவியம்: இராமமூர்த்தி
கேலிச் சித்திரத்துடன் இணைத்து புரிந்துகொள்வதற்காக …
தொழிலாளி வர்க்கத்தின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதற்கு வகைசெய்யும் மூலப்பொருள்கள், எந்திரங்கள், கருவிகள், நிதி ஆகியவற்றின் உடைமையாளர்களுக்குச் சொந்தமாக உள்ளன. ஆக, தொழிலாளி வர்க்கம் தான் உற்பத்தி செய்யும் பொருள்களின் ஒட்டுமொத்தத் திரளில் ஒரு பகுதியை மட்டுமே திரும்பப் பெறுகிறது. மறுபகுதியை முதலாளித்துவ வர்க்கம் தன்னிடமே வைத்துக்கொள்கிறது. அதிகப்பட்சம் நிலவுடைமை வர்க்கத்துடன் மட்டும் அதனைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கலாம். நாம் சற்றுமுன் பார்த்தவாறு, முதலாளித்துவ வர்க்கம் வைத்துக்கொள்ளும் இந்தப் பங்கு, ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பையும் புத்தாக்கத்தையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே வேளையில், தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைக்கும் பங்கானது (ஒரு நபருக்குக் கிடைப்பது) மிகக் குறைவாகவும் மிக மெதுவாகவும் அதிகரிக்கிறது. அல்லது அதிகரிக்காமலே உள்ளது. சில நிலைமைகளில் குறையவும் செய்கிறது.
ஆனால், மென்மேலும் அதிகரித்துச் செல்லும் வேகத்தில் ஒன்றை இன்னொன்று மிஞ்சுகின்ற இந்தக் கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கங்களையும் தொடர்ந்து, இதற்குமுன் கண்டு கேட்டிராத அளவுக்கு நாளுக்குநாள் அதிகரிக்கும் இந்த மனித உழைப்பின் உற்பத்தித் திறன், இறுதியாக ஒரு மோதலுக்கு வழி வகுக்கிறது. இந்த மோதலில் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம் சிதைந்தழிந்தே தீரும்.
ஒருபுறம், அளவிட முடியாத செல்வமும், வாங்குவோரால் சமாளிக்க முடியாத அளவுக்குத் தேவைக்கு அதிகமான உற்பத்திப் பொருள்களும் [குவிந்து கிடக்க], மறுபுறம், சமுதாயத்தின் மிகப்பெரும் மக்கள் திரள் பாட்டாளிகளாக்கப்பட்டு, கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு, அதன் காரணமாக, அவ்வாறு தேவைக்கு அதிகமாகக் குவியும் உற்பத்திப் பொருள்களைத் தங்களுக்கென உடைமையாக்கிக் கொள்ள இயலாதவர்களாய் ஆக்கப்பட்டுள்ளனர். அளவு கடந்த செல்வமுடைய ஒரு சிறு வர்க்கம், சொத்து ஏதுமற்ற கூலித் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வர்க்கம் எனச் சமுதாயம் பிளவுறுவதானது, இந்தச் சமுதாயத்தைத் தன்னுடைய தேவைக்கதிக உற்பத்தியில் தானே சிக்கி மூச்சுத் திணரும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அதேவேளையில், சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மிகக் கொடிய வறுமையிலிருந்து சொற்ப அளவுக்கே பாதுகாக்கப் படுகின்றனர் அல்லது ஒருசிறிதும் பாதுகாப்பே இல்லாமல் இருக்கின்றனர்.
இத்தகு நிலை ஒவ்வொரு நாளும் மென்மேலும் அபத்தமாகி வருகிறது. மென்மேலும் தேவையற்றதாகவும் ஆகிவருகிறது. இந்நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
– கூலியுழைப்பும் மூலதனமும் – எங்கல்ஸ் முன்னுரை (1891)