மோ(ச)டி பிரச்சாரம்
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் பாஜகவும் வாக்குறுதிகளை அள்ளிவீசினர். அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், பொருளாதாரம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும் என்றார்கள். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவது மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனு(ளு)க்கும் அவர் வங்கிகணக்கில் பல லட்சம் ரூபாய் ஏற்றப்படும் என்றார்கள். விவசாய நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்கள். விவசாயிகளின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்கள். ஆனால் தங்கள் பொருளாதாரக்கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அதிகம் பேசவில்லை. எனினும் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை என்பதும் இருவருமே தாராளமய தனியார்மய உலகமய நாசகர கொள்கைகளைத்தான் பின்பற்றுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே.
மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் என்ன நடந்துள்ளது என்பதை காண்போம்.
நிதி நிலை அறிக்கைகள்
பாஜக அரசின் இரண்டு பட்ஜெட்டுகள் அவர்களின் வர்க்கப் பாசத்தை தெளிவாக்குகின்றன. 2014-15 பட்ஜெட்டும் சரி,2015-16 பட்ஜெட்டும் சரி, முழுக்க முழுக்க அந்நிய நிதி மூலதனத்திற்கும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் என்றே போடப்பட்டவை தான்.
2014-15 பட்ஜெட்பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி மூலதனத்தின் பங்கின் வரம்பை 26% இலிருந்து 49% ஆக உயர்த்தியது.. அதேபோல், காப்பீட்டு துறையிலும் இந்த காரியத்தை செய்தது. இவ்விரு துறைகளும் நாட்டின் தற்சார்பிற்கு மிக கேந்திரமான துறைகள். இதில் பாதிப்பங்கு அன்னியமூலதனத்தின் கையில் தரப்படுவது என்பது நாட்டின் இறையாண்மையைக் காவு கொடுப்பதாகும்.அது மட்டுமின்றி, இப்படி செய்வதற்கு எந்தப் பொருளாதார காரணமும் கிடையாது.காப்பீட்டு துறையில் அந்நிய மூலதனம் வெறும் பணமாக வருகிறது. எந்த புதிய தொழில்நுட்பத்தையும் அது கொண்டு வரப்போவதில்லை.மூன்றாவது அபாயகரமான முன்மொழிவு ஒன்றும் 2014-15 பட்ஜெட்டில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த மூலதன அஸ்திவாரத்தை உயர்த்திட, அரசு இந்த வங்கிகளுக்குள் கூடுதல் மூலதனம் செலுத்தி இப்பணியை செய்ய தயாராக இல்லை. மாறாக, புதிய பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் என்றும் அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அஸ்திவாரம் பலப்படுத்தப்படும் என்றும் இந்த பட்ஜெட் கூறுகிறது. இதன் பொருள் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது என்பதே.2014-15 பட்ஜெட்டைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய சரக்குகளின் விலைகள் பாஜக அரசின் கொள்கைகள் காரணமாக அதிகரித்துள்ளன. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்த பொழுதும் அதன் பயன் மக்களுக்குப் போய்ச்சேராமல் இருக்க கலால் வரிகளை மீண்டும் மீண்டும் உயர்த்தியது அரசு. உணவுப் பாதுகாப்பு சட்ட அமலாக்கத்தைத் தொடர்ந்து ஒத்திவைத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரம்பை உயர்த்தவும், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தை பெருமுதலாளிகளுக்கு சாதகமாகத் திருத்தியும் அவசரச் சட்டங்களை பிறப்பித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்து தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்கிறது. ரயில்வே சரக்கு கட்டணங்களை உயர்த்தி விலைவாசி உயர்வை தீவிரப்படுத்தியுள்ளது.
2015-16பட்ஜெட்செல்வந்தர்களுக்கும் இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கும் மேலும் பல சலுகைகளை வழங்கியுள்ளது. சொத்துவரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. சொல்லப்படும் காரணம் என்ன? “ஆயிரம் கோடி ரூபாய் கூட வசூலாவதில்லை, இதை வசூலிப்பதற்கு நிறைய செலவாகிறது, எனவே நீக்கிவிடலாம்” என்பது அரசின் வாதம். இது என்ன வாதம்? திருடனைப் பிடிக்க முடியாவிட்டால் திருட்டை சட்டப் பூர்வமாக ஆக்கி விடலாமா? அது மட்டுமல்ல. இது எந்த சூழலில் சொல்லப்படுகிறது? நூற்று இருபத்தைந்து கோடி மக்கள் வசிக்கும் நமது நாட்டில் நூறு செல்வந்தர்கள் வசம் தலா ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. இவர்கள் வசம் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு தேச உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்கு என்று கணக்கிடப்பட்டுள்ளது. மறுபுறம் பல கோடி மக்கள் – குறைந்த பட்சம் நாற்பது கோடிக்கும் அதிகமானோர் – அரசு கணக்குப்படியே வறுமை கோட்டின் கீழ் உள்ளனர். இத்தகைய ஏற்றத்தாழ்வு நிலவும் நாட்டில் சொத்து வரியும் வாரிசு வரியும் இல்லை என்பது பெரும் கொடுமை அல்லவா?2015-16 பட்ஜெட்டில் கலால் வரி, சுங்க வரி, சேவை வரி என்ற மறைமுக வரிகள் மூலம் 23,568 கோடி ரூபாய் வரிப்பளு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மறுபுறம் தனி நபர் மற்றும் கார்ப்பரேட் வருமானவரி சலுகைகளால் அரசுக்கு 8000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட்கூறுகிறது. மக்களுக்கு வரிச்சுமை, செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை, இது தான் பாஜக பட்ஜெட்டுகளின் வர்க்க அரசியல்.விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால்மோடி அரசின் இரண்டு பட்ஜட்டுகளிலுமே விவசாயம், கல்வி, ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கான அரசின் திட்ட ஒதுக்கீடுகள் உண்மை அளவில் சரிந்து வருகின்றன.கணக்குகளின் பொது கட்டுப்பாட்டு அதிகாரி (Controller General of Accounts) தரும் விவரப்படி, 2012-13 இல் மத்திய அரசின் மொத்த செலவு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 14.1% ஆக இருந்தது. 2014-15 இல் 13% ஆக குறைந்துள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் கடுமையாக வெட்டி சுருக்கப்படுவதை இந்த புள்ளி விவரங்கள் தெளிவாக்குகின்றன.
மக்களை வஞ்சிக்கும் “வளர்ச்சி”
மத்திய அரசின் நிதி அமைச்சகம் 2014-15க்கான நடு ஆண்டு பரிசீலனை அறிக்கை (Mid Year Review) ஒன்றை தனது இணைய தளத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் போட்டது. அதில்பண வீக்கம் குறைந்திருப்பதாக தன்னைத்தானே மெச்சிக் கொண்டது. அரசின் பணவீக்க கணக்கில் உள்ள மோசடிகளை விட்டுவிடுவோம். விலைவாசி உயர்வின் வேகம் குறைந்தது என்று கூறிய அந்த அறிக்கை அதற்கான் காரணங்களை பட்டியல் இட்டது. பன்னாட்டு சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிந்ததை ஒரு காரணம் என்று ஏற்றுக்கொண்டது. (அரசு வரிகளை உயர்த்தியதால் இதன் பலன்கள் மக்களை சென்று அடையவில்லை என்ற செய்தியை அது கூறவில்லை). மேலும் அது விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுத்ததும் ஒரு காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. அது மட்டுமல்ல. ஊரக வேலை உறுதி சட்டத்திற்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் கூலி உயர்வு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் முக்கிய காரணம் என்று பகிரங்கமாகவே கூறுகிறது. பாடுபடும் விவசாயிகளையும் கிராமப்புற கூலித் தொழிலாளிகளையும் வஞ்சித்துத்தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முனைகிறது என்பது தான் இதன் பொருள். “தொழில் மந்த நிலையும் வேலை இன்மையும் கூலி முடக்கமும் விவசாயிகளுக்கு உரிய விலை மறுக்கப்படுவதும் தான் வளர்ச்சியின் லட்சணமா?” என்ற கேள்வி இயல்பாக எழுகிறதல்லவா?
அண்மையில் ஒரு கார்ப்பரேட் வணிக பத்திரிகை ஒரு ஆண்டு மோடி ஆட்சியில் யாருக்கு நலன், யாருக்கு தீது என்று ஒரு பட்டியல் தந்துள்ளது. லைவ்மின்ட் என்ற இப்பத்திரிகையில் மே மாதம் பத்தொன்பதாம் தேதி இதில் வெளியான கட்டுரை தரும் விவரப்படி:
- சென்செக்ஸ் புள்ளிகள் பல ஆயிரம் உயர்ந்துள்ளதாலும் கடந்த ஒரு ஆண்டில் தினசரி பங்குச்சந்தையில் மொத்த விற்பனை மதிப்பு இரட்டிப்பானதாலும் பங்கு சந்தை சூதாடிகள் பயனடைந்துள்ளனர்.
- பங்கு முதலீடுகள் தொகை 2013-14 இருந்ததைப்போல் இரண்டு மடங்காக 2014-15இல் இருந்தது. இதனால் முதலீட்டு வங்கிகள் பெரும் லாபம் ஈட்டின.
- பெரிய கம்பனிகளின் லாபமும் லாப விகிதமும் பெருகியது. ஆனால் சிறு நடுத்தர முதலாளிகள் நட்டத்தை சந்தித்தனர்.
- கார், வீடு போன்ற அதிக மதிப்பு கொண்ட பொருட்கள் விற்பனை அதிகரித்தது.
- விவசாயிகள் இடுபொருள் விலை உயர்வு, விலை பொருள் விலை வீழ்ச்சி, கொள்முதல் விலை தேக்கம் ஆகிய காரணங்களால் நட்டமடைந்தனர்.
- கிராமப்புற கூலித் தொழிலாளிகள் கூலி தேக்கம் அடைந்ததால் இழப்புகளை எதிர்கொண்டனர். நகர்ப்புற தொழிலாளிகள் நிலையும் அப்படித்தான்.
- கட்டமைப்பு பணிகள் நடைபெறாததால் காண்ட்ராக்டர்கள் கூட லாப இழப்பை சந்தித்தனர்.
ஒரு கார்ப்பரேட் நிறுவன பத்திரிக்கையே கூட சாதாரண உழைப்பாளி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறு நடுத்தர தொழில்முனைவோருக்கும் மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் பயன் கிடைக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
ரேகாவை குழி தோண்டி புதைக்கும் மோடி அரசு
ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீட்டை கடந்த ஆண்டும் அரசு வெட்டியது. இந்த ஆண்டிலும் வெட்டியுள்ளது. 2009 முதல் 2012 வரை ஓரளவு செயல்பட்ட இத்திட்டத்திற்கு முந்தைய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைத்தது. மோடி அரசோ இத்திட்டத்தை மொத்தமாக ஒழிக்கும் பணியில் இறங்கியுள்ளது. ஒதுக்கீட்டை குறைத்தது மட்டுமல்ல. கூலியே கொடுக்காமல் பல மாதங்கள் இழுத்தடிப்பது, வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கே வாய்ப்பு மறுப்பது என்று பல யுக்திகளை பயன்படுத்தி கிராமப்புற கூலி தொழிலாளிகளை திட்டத்தை விட்டு விரட்டும் வேலை நடந்து வருகிறது. 2012-13 இல் நூறு நாள் வேலை பெற்ற குடும்பங்கள் கிட்டத்தட்ட ஐம்பத்திரண்டு லட்சம். அடுத்த ஆண்டில் –முந்தைய அரசின் கடைசி ஆண்டில் – இது சுமார் நாற்பத்தேழு லட்சமாக குறைந்தது. பாஜக ஆட்சியின் முதலாண்டில் அதிலும் பாதியாக, இருபத்திமூன்று லட்சமாக குறைந்துள்ளது. 2013-14 இல் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 27.48 ஆயிரம் கோடியாக இருந்தது.2014-15 இல் இது 17.07 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சட்டப் பூர்வமான உரிமையையே காலில் போட்டு மிதிக்கிறது மோடி அரசு என்றால் எந்த அளவிற்கு சட்டத்தை அது மதிக்கிறது என்பது தெளிவாகிறது.
எதையும் ஏலம் போடும் அரசு
முந்தைய யு.பி.ஏ அரசு நிலக்கரி மற்றும் அலைக்கற்றை ஊழல்களில் “சாதனை” படைத்தது என்றால், மோடி அரசு தனது பாணியில் நாட்டின் இயற்கை வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏலம் போடுவதில் மிகுந்த முனைப்பு காட்டுகிறது. நிலக்கரி துறையை தனியார்மயம், இந்த ஆண்டில் அறுபத்து எட்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்று விடுவது, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வளங்களை தனியாருக்கு தாரை வார்த்து, அவர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து நுகர்வோரை வாங்க வைப்பது என்று பல தளங்களில் நாட்டின் வளங்களை பன்னாட்டு இந்நாட்டு ஏகபோகங்களுக்கு வாரி வழங்கும் விதேசி அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
தொழிலாளர் விரோத அரசு
ஆட்சிக்கு வந்த நாள் முதல் பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அரசாகவே மோடி அரசு செயல்பட்டுள்ளது. இந்திய நாட்டின் உழைப்புப் படையில் 95 சதமானோர் எந்த சட்டப் பாதுகாப்புமின்றி முறைசாரா நிலையில் உள்ளனர். இத்தகைய நாட்டில் தொழிலாளர் நல சட்டங்கள் தான் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்று வாதாடுவது அபத்தம் மட்டுமல்ல, அப்பட்டமான முதலாளித்வ விசுவாசம். இருக்கும் ஓரிரு சட்டப் பாதுகாப்புகளையும் நீக்க வேண்டும் என்பதில் பெருமுதலாளிகளும் மோடி அரசும் மிகவும் தீவிரமாக உள்ளன. இத்திருப்பணியை துவக்கி வைத்தது ராஜஸ்தான் பாஜக அரசு. இப்பொழுது மோடி அரசு ஒரு படி மேலே சென்று குழந்தை உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு வழி வகுக்கும் சட்ட முன்வரைவைக் கொண்டுவந்துள்ளது, கடந்த மாதம் மே 13 அன்று மோடியின் அமைச்சரவை 19 ஆம் ஆண்டு குழந்தை உழைப்புத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தில் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உழைப்பை வயல்வெளியிலும் இதர குடும்ப தொழில்களிலும் வனப் பகுதிப் பணிகளிலும் ஈடுபடுத்தலாம் என்ற மிக மோசமான பகுதியைச் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது. பீடி, தீப்பெட்டி, கண்ணாடி, நெசவு, காட்டு வேலை, தோட்ட வேலை உள்ளிட்ட துறைகளில் பெற்றோர்களையே மேற்பார்வையாளர்களாக மாற்றி குழந்தை உழைப்பை முதலாளிகள் சுரண்ட இத்திருத்தம் வழி தரும். பாஜகவின் தேர்தல் செலவுகளையும் அவர்களுக்கு என்று ஊடகங்களில் ஏராளமான நேரத்தையும் தங்கள் செலவில் செய்து கொடுத்த பெருமுதலாளிகளுக்கு மிகவும் ஆர்வத்துடன் மோடி அரசு சேவை செய்வதாக இதை கொள்ளலாமா?
2013 நிலம் கையகப்படுத்தும் சட்டமும்
நிலம் கைப்பற்றும் அவசரச் சட்டங்களும்
பாஜக சென்ற நாடாளுமன்றத்தின் இறுதி காலத்தில் நிறைவேற்றப்பட்ட 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனேயே மோடி அரசு இச்சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டுவந்து அவற்றை மக்களவையில் தனது பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றி விட்டது. இத்திருத்தங்கள் அனைத்துமே விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதானவை. இவற்றின் முக்கிய அம்சங்கள் இவை தான்:
- நிலங்களை கையகப்படுத்தும்முன் திட்டத்தின் சமூக தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை.
- “பொது நோக்கம்” என்ற பெயரில் நிலம் கையகப்படுத்த அரசு விரும்பினால், விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை. இந்த ஷரத்தை பொது-தனியார் பங்கேற்பு திட்டங்களுக்கும் பொருத்தலாம். ‘பொதுநோக்கம்’ என்பது பெருமுதலாளிகளுக்கு சாதகமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு மட்டுமே நட்ட ஈடு தரப்படும் என்ற ஷரத்தும் உள்ளது.
- இருப்புப்பாதை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் இருமருங்கிலும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தொழில் வழி அமைவு (Industrial corridor) என்ற பெயரில் அரசு விரும்பினால் விவசாயிகளின் ஒப்புதல்இன்றி அரசு கையகப்படுத்தலாம்.
இதுபோன்று இன்னும்பல மோசமான, விவசாயிகளுக்கும் கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் விரோதமான அம்சங்கள் உள்ளன.மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து செயலாற்றியதாலும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் சிலவும் இத்திருத்தங்களை எதிர்ப்பதாலும் இவை நிறைவேறவில்லை. எனவேதான் தொடர்ந்து மூன்றாம் முறையாக அவசரச் சட்டத்தை பிறப்பித்து தனது கார்ப்பரேட் எஜமான விசுவாசத்தை மோடி அரசு வெளிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவிடம் மசோதா உள்ள பொழுதே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றிய பாஜகவின் பார்வையைக் கோடிட்டுக் காட்டுகிறது. விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில், விவசாயம் அரசின் கொள்கைகளாலும் பன்னாட்டு நிலவரங்களாலும் பருவநிலையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் மோடி அரசின் இந்த நடவடிக்கை இந்த அரசு விவசாயிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் எதிரான அரசு என்பதை உறுதி செய்கிறது.
வளர்ச்சியின் தன்மையும்வளர்ச்சி விகித மோசடியும்
தனது தேர்தல் பிரச்சாரத்தில் மோடிய ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவரது பாஜக சகாக்கள் அப்பட்டமான இந்துத்வா மதவெறி பிரச்சாரத்தில் அன்றாடம் ஈடுபட்டனர். மோடியும் மேற்கு வங்கம் சென்ற பொழுது தனது பிரச்சாரத்தில் அகதிகள் பிரச்சனையை மதவெறி கண்ணோட்டத்தில் தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்தினார். ஆட்சிக்கு வந்தபின்பும் இந்த இரட்டை வேடம் தொடர்கிறது. அண்மையில் பொருளாதார வளர்ச்சி பற்றி மோடியும் மத்திய அமைச்சர்களும் அதிகமாக பேசுகின்றனர். அரசின் புள்ளி விவரக்கணக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இந்திய உலகிலேயே மிக வேகமாக வளரும் நாடாக இந்த ஆண்டு இருக்கும் என்று மத்திய அரசு தம்பட்டம் அசித்து வருகிறது. உண்மை என்ன? இதுவரை நாட்டின் உற்பத்தி மதிப்பை உற்பத்திக் காரணிகளுக்கான மொத்தச்செலவு என்ற அடிப்படையில் (GDP at factor cost) கணக்க்கிட்டு வந்தனர் ஆனால் இப்பொழுது உற்பத்திக்குப் பின் அரசு வசூலிக்கின்ற சரக்குவரிகளையும் (இதில் கலால் வரி, சுங்கவரி, விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்டு அனைத்து மறைமுக வரிகளும் அடங்கும்) சேர்த்து உருவாகும் சந்தை விலை அடிப்படையில் மொத்த உற்பத்தியை கணக்கிடுகிறது. இதன் பொருள், ஒரு ஆண்டில் உற்பத்தியில் எந்த மார்ரமும் இல்லாமல், ஆனால் சரகுகள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டால், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு அந்த வரிகள் அளவிற்கு அதிகரிக்கும். ஆகவே வளர்ச்சி ஏற்பட்டதாக தோற்றம் உண்டாகும். இது ஒருமாற்றம். அரசு செய்துள்ள மற்றொரு மாற்றம் என்பது, உற்பத்தி மதிப்பை 2004-05 விலைவாசிகளுக்குப்பதிலாக 2011-12 விலைவாசிகள் அடிப்படையில் கணக்கிடுவது என்பதாகும். இவ்விரண்டு அண்மை ஆண்டுகளின் வளர்ச்சி விகிதங்களை உயர்த்திக் காட்டும். உதாரணமாக, புதிய கணக்கிடும் அடைப்படையில், ஏற்கெனவே 4.7 % என்று கணக்கிடப்பட்ட 2012-13 வளர்ச்சி விகிதம் 5.0 % என்று திருத்தப்பட்டுள்ளது.5.1 % என்று கணக்கிடப்பட்ட 2013-14 வளர்ச்சி விகிதம் 6.9 % என்று திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்விரண்டாண்டுகளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த ஆண்டுகள். எனவே இந்த உயர்வுகள் மோடி அரசு கணக்கில் சேர்க்க முடியாது. 2014-15 ஆண்டில் புதிய கணக்குப்படி வளர்ச்சிவிகிதம் 7.5 % என்று அரசு அனுமானித்தது. ஆனால் ரிசர்வ் வங்கி 7.3 % தான் இருக்கும் என்று அறிவித்துள்ளது.ஆகவே சென்ற ஆண்டு வளர்ச்சி விகிதத்திற்கும் இந்த ஆண்டு விகிதத்திற்கும் மிக குறைவான வேறுபாடு தான் இருக்கும். மோடி அரசால் வளர்ச்சியை வேகப்படுத்த முடியவில்லை என்பது தெளிவு. இந்த அதிகப்படியான வளர்ச்சி விகிதக் கணக்கும் வரையறை மாற்றப்பட்டதாலும் அடிப்படை ஆண்டு 2004-05 இலிருந்து 2011-12 என்று மாற்றப்பட்டதாலும் அரசு சரக்குவரிகளையும் சேவை வரிகளையும் உயர்த்தியதாலும் தான் பெரும்பாலும் நிகழ்ந்துள்ளது.
வளர்ச்சி கணக்கு பற்றிய சர்ச்சையைவிட முக்கியமானது வளர்ச்சியின் தன்மை. இது கடந்த ஒரு ஆண்டில் எப்படி உள்ளது என்று பார்த்தால் நிலைமை புரியும். வேளாண் துறை வளர்ச்சி 1%ஐக்கூட எட்டாது. உணவுதானியங்களின் மொத்த உற்பத்தி2013-14இல் 26.5 கோடி டன்களாக இருந்தது.2014-15 இல் 25.1 கோடியாக சரிந்துள்ளது.இது அண்மைகாலங்களில் மிகப் பெரிய சரிவாகும். மோடி அரசின்முதல் ஆறு மாதங்களில் தொழில் உற்பத்தி கிட்டத்தட்ட 5.6 % குறைந்தது. அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2.2 % என்ற அளவிற்குத்தான் அதிகரித்துள்ளது.
நெருங்கி வரும் பேராபத்துகள்
மோடி அரசு நமது நாட்டின் அந்நியச்செலாவணி கையிருப்பு கூடியுள்ளதையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளதையும் சாதனைகளாக சித்தரிக்கிறது. உண்மை என்ன? கடந்த ஆறுமாதங்களாக ஏற்றுமதி குறைந்து வருகிறது. மேலை நாடுகளில் பொருளாதாரம் மந்தமாகவே நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பிரசர்க்குகளின் இறக்குமதி மதிப்பு பெரிதும் கூடியுள்ளது. அமெரிக்க அரசு தனது பணக்கொள்கையை மாற்றி அங்கே வட்டி விகிதம் உயர உள்ளது. அது நிகழும்பொழுது அந்நிய நிதி மூலதனம் நம் நாட்டை விட்டு அங்கே செல்லும். இதுவெல்லாம் சேர்ந்து அந்நிய செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தும். ஏற்கெனவே ஒரு அமெரிக்க டாலருக்கு 64 ரூபாய் என்ற அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. மேலும் சரியலாம். இது பணவீக்கத்தை அதிகரிக்கும். வேளாண்மை, தொழில் இரண்டுமே மந்தமாக உள்ள நிலையில் வேலை வாய்ப்புகளும் முடங்கியே உள்ளன. கடும் நெருக்கடியை நோக்கி மோடி அரசு நாட்டை இட்டுச்செல்கிறது.
மோடி அரசின் அரசியல் பொருளாதாரம்
மோடி அரசின் பொருளாதார கொள்கைகளுக்கும் முந்தைய ஐக்கிய முற்போக்கு முன்னணியின் கொள்கைகளுக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. எனினும், தனது பெரும்பான்மை பலத்தை வைத்து முந்தைய அரசைவிட மிகத்தீவிரமாக அதே கொள்கைகளை மோடி அரசு கடந்த ஓராண்டாக அமலாக்கி வருகிறது. எதிர்கட்சிகள் சிதறுண்டு இருப்பதும் இடது சாரிகள் பலவீனம் அடைந்துள்ளதும் இந்தத்தன்மையில் பயணிக்க மோடி அரசுக்கு இடமளித்துள்ளன.இக்கொள்கையின் சில அடிப்படை அம்சங்கள் வருமாறு:
- தனியார் மூலதனத்தை மையமாக வைத்து வளர்ச்சியை சாதிப்பது.
- அந்நிய நிதி மூலதனத்திற்கு கட்டுப்பாடுகளின்றி செயல்பட அனுமதி அளிப்பது
- அந்நிய, இந்திய பெருமுதலாளிகளுக்கு அனைத்துச் சலுகைகளையும் அளிப்பதன் மூலம் அவர்களை “குஷி”ப்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது.
- இதன் பகுதியாக, வரிச்சலுகைகள் அளிப்பது, உழைப்பாளர் உரிமைகளை பறிப்பது, பெருமுதலாளிகளின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்குவது, கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு உள்ளிட்டு அனைத்துத் துறைகளையும் பெரும் கம்பனிகள் லாபம் ஈட்டும் வேட்டைக்காடாக மாற்றுவது, ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, பரந்த சந்தையை பெருமுதலாளிகளுக்கு உருவாக்கிக் கொடுப்பது, இதற்கென இந்தியாவிற்கு உள்ளேயும் ஒரே சந்தையைவரி அமைப்பு மாற்றங்கள் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பது (இது தான் GST – பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி என்ற முயற்சி) ஆகிய நடவடிக்கைகள்
- அந்நிய நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியே சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்றால் இந்திய பொருளாதாரத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பணவீக்கம் கட்டுக்குள் இருக்க வேண்டும். அரசு பொருளாதாரத்தில் குறைந்த பங்கே ஆற்ற வேண்டும். அரசின் வரவு-செலவு சிக்கனமாக இருக்கவேண்டும். வரவு செலவு இடைவெளியை குறைக்கவேண்டும். மேலும் இதை பணக்காரர்கள் மீது வரிகள் போட்டு வளங்களை திரட்டி செய்யக் கூடாது. அப்படி செய்தால் “முதலீட்டாளர்கள்” என்று செல்லமாக அழைக்கப்படும் செல்வந்தர்கள் உற்சாகம் இழந்து வேறு எங்கேனும் சென்றுவிடுவார்கள். ஆகவே, அரசின் செலவுகளை குறைத்துதான் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.இந்த எல்லைகள் தான் அரசின் பட்ஜெட்டுகளை நிர்ணயிக்கின்றன.[1]
இந்த கோணத்திலிருந்து பார்த்தால் மோடி அரசின் கொள்கைகள் புரியும். சமூக நலத்துறை ஒதுக்கீடுகள், அறிவியல் தொழில்நுட்பத்திற்கான ஒதுக்கீடுகள், வேளாண் மற்றும் கட்டமைப்பு துறைகளில் அரசு முதலீடுகள் இவை அனைத்தும் ஏன் வெட்டப்படுகின்றன என்றால் நாட்டையே இந்திய அந்நிய பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக ஆக்கிட இதையெல்லாம் செய்தாக வேண்டும்.
ஆனாலும், இதில் பல முரண்பாடுகளும் உள்ளன. உலக முதலாளித்துவம் தொடர்ந்து கடும் நெருக்கடியில் உள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதி வரவை உயர்த்துவதை கடினமாக்குகிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இறக்குமதி கூடுகிறது. அந்நியச்செலாவணி பிரச்சனை ஏற்படுகிறது. இதை எதிர்கொள்ள எப்படியாவது அந்நிய மூலதனத்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்று அரசு முனைகிறது. இதற்காக அந்நிய நிதி மூலதனத்தை கட்டுப்பாடின்றி உள்ளே வரவும் வெள்யே செல்லவும் அரசு அனுமதிக்கிறது. வரிச்சலுகைகளையும் அளிக்கிறது. இதனால் அரசு வரி வருமானம் சரிகிறது. இது அரசின் செலவுகளை வெட்டும் திசைவழியில் செல்லவைக்கிறது. ஏற்றுமதியும் பலவீனமாகி, அரசின் செலவும் வெட்டப்பட்டு மக்களின் வாங்கும் சக்தியும் நாட்டின் ஏற்றத்தாழ்வு, நிறைவு பெறாத ஜனநாயகப் புரட்சி, தொடரும் நில ஏகபோகம் ஆகிய நிலைமைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு சந்தை விரிவடைவதில்லை. எனவே எவ்வளவு சலுகைகளை மூலதனத்திற்கு அளித்தாலும் வண்டி வேகமாக செல்வதில்லை. உலக முதலாளித்வத்தில் ஏற்படும் மீட்சியையும் உள்நாட்டில் ஒரு சிறிய பகுதி செல்வந்தர்களின் வாங்கும் சக்தியை சார்ந்தும் உள்ள இந்தியப் பொருளாதாரத்தை தாராளமய கொள்கைகள் மூலம் பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சி அடைய வைக்க இயலும் என்ற ஆளும் வர்க்க கனவு கனவு தான். அவ்வப்பொழுது இவை நிகழலாம், சில ஆண்டுகள் பன்னாட்டு சூழலாலும் உந்தப்பட்டு வண்டி சற்று வேகமாக ஓடலாம். ஆனால் இவை அதே வேகத்தில் தொடர்வது கடினம் என்பது மட்டுமல்ல. அத்தகைய வளர்ச்சி பல ஆண்டுகள் ஏற்பட்டாலும் பெரும்பகுதி மக்களுக்கு – உழைப்பாளி மக்களுக்கு – வழ்வாதாரப் பிரச்சனைகள் தொடரும் என்பது தான் நமது அனுபவம்.
நிறைவாக
லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் வேளாண் நெருக்கடியின் துயரமான வடிவமாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி அது மட்டுமல்ல. அதை விட ஆழமானது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்காத, சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி தான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துள்ளது. தொழில் வளர்ச்சி என்பதும் வேலை வாய்ப்பு விரிவாக்கம் என்பதும் விவசாய உறவுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் எளிதில் நிகழாது. மக்கள் சீனத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் இதுவும் ஒன்று.
விவசாய உறவுகளை முற்றிலும் மாற்றி அமைக்காமல், நில ஏகபோகத்தை தகர்க்காமல், விவசாய மலர்ச்சி சாத்தியமில்லை. ஆனால் அது மட்டும் போதாது. அதைத்தொடர்ந்து அரசு முன்முயற்சியில், திட்டமிட்ட வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி நடக்க வேண்டும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இது பற்றி இன்னும் விவரமாக பார்க்கலாம். இங்கே நாம் கோடிட்டுக் காட்டியிருப்பது நமது இடது ஜனநாயக மாற்றின் ஒரு அம்சம் என்பதை மட்டும் பதிவு செய்து இக்கட்டுரையை முடிக்கலாம்.
[1]நிதி மூலதனத்தின் சுழற்சி மீது கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது இயலாத காரியமாகக் கருதப்படுகிறது. அப்படி ஒரு நாடு செய்தால் அந்நிய நிதி மூலதனம் வேறு நாட்டுக்கு ஓடி விடும் என்று தாராளமயவாதிகள் மிரட்டுகின்றனர். உண்மையில் இதை எதிர்கொள்ளமுடியும். சொந்தக்காலில் நின்று நமது உபரிகளையும் வளங்களையும் தக்க வகையில் திட்டமிட்டு பயன்படுத்தினால், நாடு வளரும். நாட்டை நோக்கி உள்நாட்டு வெளிநாட்டு நிதி மூலதனம் அல்ல, உற்பத்தி மூலதனமே வரும் என்பது சீன சோசலிச அனுபவம் தரும் பாடம்.அதற்கு நிதி அமைப்பு அரசின் கையில் இருக்கவேண்டும். இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். உற்பத்தி சொத்துக்கள் பயன்படும் விதங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசிடம் இருக்க வேண்டும். அரசின் வர்க்கத்தன்மை உழைக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும்! சுருங்கச் சொன்னாள் சோசலிசம் நோக்கி நாடு பயணிக்க வேண்டும்!