மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சோசலிசமே அம்பேத்கரின் இலக்கு !


ஆனந்த் டெல்டும்டே

(அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகளைத் தாராளமயக் கண்ணோட்டம் கொண்டதாகத் திரிக்கும் முயற்சிகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக, அம்பேத்கரின் பேரனும், இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த முற்போக்குச் சிந்தனையாளருமான ஆனந்த் டெல்டும்ப் டே எழுதிய கட்டுரையை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு வழங்குகிறோம். – ஆசிரியர் குழு)

தமிழில்: மகிழ்நன்

சர்வதேச நிதியமும், உலக வங்கியும் நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்த கட்டளையிட்ட போது, அரசின் கண்ணோட்டத்தில் ’நல்லவர்’ பட்டம் வாங்க வேண்டும் என்ற விருப்பில் பொருளாதார அறிவு இருந்தோ, இல்லாமலோ ஆதரித்த அறிவு சீவிகளின் ஆதரவோடு, 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவின் அரசு, நம் நாட்டில் நாமே செய்து கொள்ளும் சீர்திருத்தம் என்றும், வேறு வழியே இல்லை என்றும் பொய் சொல்லி, நவதாராளமய கொள்கைகளை அறிமுகப்படுத்தியது.

சுயலாபத்திற்காகச் சில சக்திகள் இரண்டு வகைத் தோராயத் தர்க்கங்களை முன்வைத்து பொருளாதார அரசியல் என்பதை எப்பொழுதும் தலித் சிந்தனை தளத்திலிருந்து முற்றிலுமாக அகற்றி, அதைக் கம்யூனிஸ்டுகளோடு சுருக்கிவிட்டனர்.

அதில் முதன்மையானது, கம்யூனிஸ்டுகள் பொருள்முதல்வாதிகள் ஆவர்; பொருளாதாரம் பொருளோடு தொடர்புடையது, ஆகவே அது குறித்துச் சிந்திப்பதே கம்யூனிசம்.

அடுத்தது, தீண்டப்படாத தலித் மக்கள் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள். அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர். ஆகவே, தீண்டப்படாத மக்கள் பொருளாதார அரசியலிலிருந்து விலகியே இருக்க வேண்டும். இந்தப் பிரச்சாரங்களில் எவையும் சரியானவை இலையென்றாலும் வெகுச்சாதாரணமாக உண்மை போலவே நம் மீது வீசப்படுகின்றன.

அந்த அறிவுஜீவிகள்(!) நம்முடைய போராட்டம் என்பது ரொட்டிக்கானது மட்டுமல்ல, மாறாக அது சுயமரியாதைக்கானது என்று அடிக்கடி பெருமிதத்தோடு முழங்குவர். ஆகையால், பொருளாதாரம் தொடர்பான பரந்த விவாதம் எதுவும் தீண்டப்படாத மக்களிடையே நிகழ்த்தப்படவில்லை. ஆனாலும், உள்ளுக்குள் இருக்கும் சில சக்திகள் அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகத் தம் தொண்டை தண்ணீர் வற்ற கத்துகின்றனர். அவர்களுக்குரிய பலனை அரசாங்கங்கள் உரிய(!) முறையில் தந்தும் விடுகிறது. தொடக்கக் காலத்தில், இவற்றை வெறும் சந்தர்ப்பவாதம் என்றுதான் கருதி வந்தேன். ஆனால் பிற்காலத்தில், மிசஸ் போன்ற நவதாராளமய நச்சு வைரசை பரப்பும் நிறுவனங்களின் ஆதரவுடன் தலித் முதலாளியம், தலித் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் போன்றவற்றிற்கான பிரச்சாரத்தையோ, அம்பேத்கரை சுதந்திர பொருளாதாரவாதி என்று திரிப்பதையோ பிரதான விசச்சூழலாக மாற்றிவிட்டனர்.

லுத்விக் வோன் மிசஸ் இன்ஸ்டியூட்டில் ”அம்பேத்கர் – மறக்கப்பட்ட தாராளமய சந்தை பொருளாதாரவாதி ” [http://blog.mises.org/16519/ambedkar-the-forgotten-free-market-economist/ ] என்ற தலைப்பில் அம்பேத்கரிடம் பிறர் இது காணத்தவறிய மிக முக்கியமான அம்சம் ஒன்றைக் கண்டுபிடித்தது போன்ற ஒரு குயுக்தி மனிதன் ’முட்டாள்தனமான’ ஆய்வொன்றை சமர்ப்பித்துள்ளார்.

சுதந்திர பொருளாதாரவாதி என்று அம்பேத்கரை அழைப்பது என்பது வெறும் அவதூறு மட்டுமல்ல, அவரை மிகக்கடுமையாக இழிவுப்படுத்துவதாகும். அண்ணல் அம்பேத்கர் குறித்து அதிகமாக எழுதப்பட்டும், அம்பேத்கர் எதற்காக உழைத்தார் என்பதைப் புரிந்து கொள்ளாமல்தான் தலித்துகள் இருக்கின்றனர் என்பது மிகப்பெரிய சோகம் ஆகும். இந்தக் கட்டுரையின் நோக்கம், நவதாராளமய கொள்கைகளைப் பொறுத்தவரையில் அம்பேத்கரின் அணுகுமுறை என்னவாக இருக்கக் கூடும் என்பதை அறிந்து கொள்வதுதான்.

 

சுதந்திர சந்தையைப் புரிந்து கொள்வது

பணம் என்னும் பரிமாற்ற ஊடகத்தின் வழியாகப் பண்ட பரிமாற்றம் நடக்கும் இடம்தான் சந்தை. வாங்கும் திறனை பொறுத்து, அதாவது அவனது பாக்கெட்டில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் வாடிக்கையாளரின் மதிப்பை சந்தை தீர்மானிக்கிறது என்பது வெளிப்படை. ஒரு மனிதனோ, குடும்பமோ தங்களுக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியாது என்ற நிலையில் பண்டமாற்றத்திற்கான களமாக ஆதி நாகரிகம் தொட்டு சந்தை என்பது பங்காற்றியிருக்கிறது. கிராமத்தினர் காய்கறிகளை உற்பத்தி செய்தாலும், அவற்றைச் சமைக்கத் தேவையான எண்ணையோ, உப்போ இல்லாத பட்சத்தில், கிராமப்புற சந்தைக்குச் சென்று தங்களிடம் உபரியாக இருக்கும் காய்கறிகளைக் கொடுத்து உப்பையோ, எண்ணெய்யையோ பெற்று வந்தனர். தொடக்கத்தில் பண்டமாற்றத்தில் ஈடுபட்டுவந்தாலும், பண்டமாற்றை எளிதாக்கும் வேலையைப் பணம் செய்தது. பணத்தின் கண்டுபிடிப்பு பரிவர்த்தனையை இலகுவாக்கினாலும், தேக்கி வைப்பதை ஊக்குவித்தது. தானியங்களும், உப்பும் சேதாரத்திற்கு உள்ளாகும் (நட்டத்தை உண்டாக்கும்) என்ற நிலையில், பணத்தைச் சேமித்து வைக்க முடியும் என்பது வெகுவாக வரவேற்ப்புக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, வாங்கும் சக்தியோடு சூதாடும் சுதந்திர சந்தையை ஊக்குவித்தது.

சுதந்திர சந்தையானது வாங்குபவரையும், விற்பவரையும் சமம் என்று யூகித்துக் கொள்வதோடு, இரு தரப்பாரும் சம அளவிலான தரவுகளோடும், அந்தத் தரவுகளின் அடிப்படையில் வந்த புரிதலின் அடிப்படையில் வகுத்த உத்தேச விலையின் அடிப்படையிலேயே வணிகம் நடைபெறுவதாகவும் கருதிக் கொள்கிறது.

இந்தச் சுதந்திர சந்தையால் (தேவைக்கு அதிகமாகச் சிலர் சொத்து சேர்த்துக் கொள்வதையும், அதன் விளைவாகப் பிறர் மீது பணம் மற்றும் தரவின் அடிப்படையிலும் அதிகாரம் செலுத்தும் படியான நிலையை உருவாக்கியிருக்கிறது) உருவாக்கப்பட்டிருக்கும் நிஜ உலகில் இந்த யூகம் எதார்த்தத்தில் இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. நடைமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வான சூழலில் சுதந்திர சந்தையானது சுரண்டலுக்கே வழிவகுப்பதாக இருக்கிறது. தனிநபரோ அல்லது சில வணிகர்களோ ஒன்றாக இணைந்து பொருட்களின் விலையை நிர்ணயிப்பதற்குப் பெயர் பொதுவாகத் தனியுரிமை ( Monopoly ) என்றும் சிலருரிமை ( Oligopoly ) எனவும் முறையே அழைக்கப்படுகிறது. சுதந்திர வணிகர்களைப் பொறுத்தமட்டில் விலை நிர்ணய பொறிமுறையின் ஊடாக வளங்களின் தேவை மற்றும் பகிர்மானத்தைச் சமநிலைப்படுத்துவதற்குச் சந்தை என்பதே சிறந்த இடம் என்று மிகையாகப் போற்றப்படுகிறது. ஆனால், தேவையையும், பகிர்ந்தளிப்பையும் அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் வசதிக்கேற்ப உண்மை நிலைக்குப் புறம்பாகத் திரிப்பதோடு, குவிப்புக்கே அனைத்து வழிகளையும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரையில் சந்தை தோல்வி என்பது சிலரின் சுயலாப அணுகுமுறையால் ஏற்பட்டது என்றும் சமாதானப்படுத்திக் கொண்டு, பொதுநோக்கோடு சிந்தித்தால் அதை நிவர்த்திச் செய்யலாம் என்று சொல்லலாம்தான்.

ஆக, சந்தை என்பது பண்டமாற்றுக்கான இலகுவான வழிமுறை என்று கூறுபவர்கள், தங்களது தெளிவான கருத்தியல் சாய்வினால், கருத்தியல் பிழை காரணமாகவோ அல்லது திட்டமிட்டே அந்தத் தவறை செய்யும் நோக்கோடோ செய்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

”ரூபாயின் சிக்கலை” தவறாக வாசித்தறிதல்

அம்பேத்கரை பணவிய(Monetarist), சுதந்திர சந்தை அல்லது தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர் என்று அடையாளப்படுத்துபவர்கள் ஒன்று அவரது ரூபாயின் சிக்கல் என்னும்(D.Sc) பட்டய ஆய்வை தவறாகப் புரிந்திருக்க வேண்டும் அல்லது தீய நோக்கோடு வாசித்திருக்க வேண்டும்.

இதில் அவருடைய காலப் பண மாற்று முறையைக் குறித்த ஆய்வையே அம்பேத்கர் முன்வைக்கிறார். எ.கா: தங்கத்திட்டம் (எதிர்) தங்க பரிமாற்றுத் திட்டம். மிகவும் ஆணித்தரமாக ஜான் மேநார்ட் கீய்ன்ஸ் உள்ளிட்ட அன்றைய பிரபல பொருளாதாரவாதிகளின் கருத்தோடு மிகக்கடுமையாக முரண்பட்டு நின்றதோடு, முந்தைய தங்கத்திட்டத்தையே ஆதரித்து நின்றார்.

தரப்படுத்தப்படாத நாணய மதிப்பு என்பது அரசின் மீது மிகக்கடுமையான நிதி சுமையைக் கூட்டுவதாகவும் அமையும் என்று கூறியவர், அதன் விளைவாக விலைவாசி உயர்வு என்பது அடித்தட்டு மக்கள் மீது அந்தச் சுமையைக் கூட்டுவதாக அமையும் என்று கருதிய அண்ணல் அம்பேத்கர் தரப்படுத்தப்பட்ட நாணய திட்டமாகத் தங்கத்திட்டத்தைக் கண்டுகொண்டு அதனைத் தீவிரமாக ஆதரித்தார்.

(எட்வின் கேனன் என்ற ஆசிரியர் அண்ணலின் ஆய்வு குறித்து அந்த நூலுக்கு வழங்கிய முன்னுரையில்,

“விலைகள் உயரும் போது கூடுதலான லாபத்தை அடையலாம் என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாதவர்களிடம் இந்த வாதம்(அதாவது அம்பேத்கரின் வாதம்) எடுபடாது; ஆனால், இந்த அதிகப்படியான, உழைத்துச் சம்பாதிக்காத லாபத்தை எந்த மிகப்பெரும்பான்மையான மக்களிடமிருந்து பிழிந்து எடுக்கப்படுகிறதோ, அந்த மக்கள்பால் கொஞ்சம் அனுதாபம் கொள்பவர்கள் இதை ஏற்பார்கள் என நான் நம்புகிறேன்.)

இது தான் ஆய்வின் மையப் புள்ளி.

தனியார் முகவர் எதிர் அரசாங்க ஊழியர்களின் திறன் வீணாகும் தன்மைக்கு எதிராகவோ அல்லது மதிப்பை நிர்ணயிக்கும் சந்தையின் இயங்கும் வழிமுறை குறித்தோ இந்த ஆய்வில் ஆங்காங்கே சில தவறான கணிப்புகள் இருக்கிறதுதான். அவருடைய இந்த ஆய்வானது அன்றைய சூழலை மையமாகத் தன் பேசு பொருளை அமைத்துக் கொண்டது. இதை வைத்து அம்பேத்கர் கருத்தியல் சார்படிப்படையில் சோசலிசத்திற்கு எதிராகவோ, ஆதரவாகவோ இருந்தார் என்ற முடிவிற்கு வருவது அடிமுட்டாள்தனமாகும்.

இளவயது அம்பேத்கர் மீது எவ்வகையான தாக்கங்கள் இருந்தன என்பதைக் குறித்து ஒருவர் அறிந்து கொள்ள விளைந்தாலே அவரைக் குறித்து இன்னும் தெளிவான சித்திரம் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. அவருடைய கொலம்பியா ஆசிரியர்களில் பலர் பேபியன்கள்(Fabian). குறிப்பாக, அம்பேத்கரின் மனதில் ஆழமாகப் பதிந்த ஜான் டேவி அமெரிக்காவில் புகழ்பெற்ற பேபியன்.

வறியவர்களுக்கு உதவ வேண்டும், அமெரிக்காவில் மட்டுமில்லாது பிற பிரதேசங்களிலும் ஒடுக்குமுறை வடிவங்களை ஒழிக்கக் கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அம்பேத்கரின் ஆர்வத்தைப் பேரா.டெவி வெகுவாக ஊக்குவித்தார். டெவியின் தாக்கம் எந்தளவுக்கு அம்பேத்கரிடம் ஆழமாக இருந்ததென்றால் 1952 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தொகுத்ததற்காகக் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் சிறப்பு எள்.எள்.டி பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்ட தருணத்தில் தன்னுடைய துணைவியார் சவிதா அம்பேத்கருக்கு எழுதிய கடிதத்திலும் கூட”இதுவரையிலான என்னுடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்த அறிவுத்துறை சார் செயல்பாடுகளுக்கு நான் பேரா.ஜான் டேவிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.” என்று பிற்காலத்திலும் அவரை நினைவுகூர்வதை அவர் தவிர்த்துவிட வில்லை.

1884 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் சோசலிச இயக்கமான ஃபேபியன் சொசைட்டியின் தொடக்கத்தோடு ஃபெபியனிசம் தோற்றம் பெற்றது. இங்கிலாந்துக்கு வெளியேயும் தன் அபிமானிகளை உருவாக்கிய அதன் நோக்கம் என்பது, புரட்சிகர வழியில் அல்லாமல் படிப்படியாக ஜனநாயக சோசலிசத்தை உருவாக்குவதுதான். சோசலிசம் என்பது பரிணாம வளர்ச்சி போல நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று கருதிய அவர்கள் மார்க்சியத்தின் புரட்சிகர அரசியலை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆயினும் பேபியனிஸ்டுகள் என்பவர்கள் சாரத்தில் சோசலிஸ்டுகள்தான்.

அண்ணல் அம்பேத்கர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸில் கற்ற போதுதான் ”ரூபாயின் சிக்கல்” என்ற அவரது டி.எஸ்.சிக்கான ஆய்வேட்டை சமர்ப்பித்தார். ஃபேபியனிசத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட, ஃபேபியன் சங்கத்தால் நிறுவப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்தைப் பெர்னாட் ஷா, சிட்னி மற்றும் பேட்ரிக் வெ போன்ற ஆளுமைகள் இணைந்து உருவாக்கியதோடு மடுமில்லாமல், அந்தப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தும் வந்தனர். ஆக, அம்பேத்கர் தன் ஆய்வை மேற்கொண்ட அறிவுத்தளம் என்பது சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.

’கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்’ என்ற (அம்பேத்கரிய இயக்கங்களிடையே பிரபலான) முழக்கம் கூடப் பிரபலமான ஃபேபினிச முழக்கம்தான். பகிஸ்கிரித் பாரத் (புறக்கணிக்கப்பட்ட இந்தியா) என்னும் தன்னுடைய பத்திரிக்கைக்கு இலக்காகவும், தொண்டர்களுக்கும் அதையே தாரக மந்திரமாக வழங்கினார்.

ஆக, முக்கியமான இந்த அம்சத்தைத் தவறவிட்டு, அது அமிழ்ந்தே/ மறைந்தே இருக்கும்படியான லட்சணத்திலேயே இதுகாறும் அம்பேத்கரைக் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்க முடியாது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அம்பேத்கரின் வாழ்க்கையை ஆய்வு செய்வார்களேயானால் அவருடைய பெரும்பாலான கருத்தியல் நிலைப்பாடுகளில் ஃபேபியன் கருத்தாக்கம் செல்வாக்கு செலுத்துவதை உணரலாம்.

1960ல் தோன்றிய பணவிய கோட்பாட்டை அம்பேத்கரின் ஆய்வுகளில் (அம்பேத்கர் இவ்வுலகத்தை விட்டு மறைந்த பிறகும், ரூபாயின் சிக்கல் ஆய்வை சமர்ப்பித்து ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழித்தும்) தேடிக் கண்டுபிடிக்க முனைவது சுத்த பைத்தியக்காரத்தனம். கீனிசியனிசம்(Keynesianism) என்ற ஒரு கோட்பாடு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், தன்னைத் தானே சீர் செய்து கொள்ளும் மரபான சந்தை ஒழுங்குமுறையைத்தான் பெரும்பாலான பொருளாதார வாதிகள் ஆதரித்தனர். அதில் பணமுறை சார்ந்தோ, நிதிக் கொள்கை சார்ந்தோ அரசின் தலையீடு இருக்க வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை. அம்பேத்கரும் 1930களின் மரபார்ந்த இந்தப் பொருளாதாரவாதிகள் இடையேதான் பணி புரிந்து வந்தார் என்பதைக் குறித்து எந்தச் சந்தேகமும் எழ வாய்ப்பில்லை. 1930களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகத்தான் கீன்ஸ் என்னும் நபர், மொத்த தேவையை உருவாக்க அரசின் நிதிக் கொள்கையில் மாற்றம் வர வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். போருக்கு பிந்தைய காலத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியிலிருந்து கீனிசியனிசம்தான் முதலாளித்துவத்தைக் காப்பாற்றியது. முதலாளித்துவத்தைக் காத்தது மடுமில்லாமல் அதன் பொன்னாட்களை உருவாக்கிக் கையளித்தது.

ஆனால், 1960 களில் முதலாளித்துவம் மீண்டும் ஒரு நெருக்கடியைச் சந்தித்த போது, நிதிக் கொள்கையைவிட, பணக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று கூறியவர், அதுவே வேலைவாய்ப்பை பெருக்குமென்று என்ற கருத்தை முன்வைத்து, சிகாகோ பள்ளியைச் சார்ந்த மில்டன் ஃபிரிட்மேன் (Milton Friedman) தலைமையில் கீனிசியினசத்திற்கெதிராக எதிர்புரட்சிகர நடவடிக்கை நிகழ்த்தப்பட்டது.

அந்தக் கொள்கை மாற்றமானது மரபார்ந்த பொருளாதாரக் கண்ணோட்டத்தின் சில கூறுகளை, சுதந்திர சந்தைக்கு ஆதரவான தலையிடா கொள்கைக்கு நியாயம் சேர்க்க சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்நேரத்தில், தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் சந்தை கோட்பாடும், சுதந்திர சந்தைக்கு ஆதரவான பணவிய கோட்பாடு ஒன்றல்ல என்பதை நினைவு கூர்வதும், புரிந்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. ஆக, அம்பேத்கர் சுதந்திர பொருளாதாரத்திற்கு ஆதரவானவர் என்றோ, குறிப்பாகச் சோசலிசத்திற்கு எதிரானவர் என்றோ புரிந்து கொள்வது குயுக்தியானது.

சாரத்தில் உறுதியான சோசலிஸ்ட் :

அண்ணல் அம்பேத்கரைத் தெரியும் என்று அறிவித்துக் கொள்பவர்களில், மிக மேலோட்டமாகத் தெரிந்து கொண்டவர்கள் கூட “ என்னுடைய சமூகச் சித்தாந்ததமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மூன்று சொற்களில் பொதிந்திருப்பதாக உணர்கிறேன். எனது சித்தாந்தத்தின் வேர்கள் மதத்தில் உள்ளதே அனறி, அரசியல் தத்துவத்தில் இல்லை. அவற்றை எனது ஆசான் புத்தனிடத்தில் இருந்தே பெற்றேன்.” என்ற வாசகத்தை அறிந்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

மனித வாழ்க்கையின் எதிர்காலம் குறித்த அவரது கண்ணோட்டம் இந்தச் சொற்களில் அடங்கியுள்ளதோடு, பௌத்தம் தழுவுவதற்கான முக்கியமான காரணமாகவும் அவையே இருந்தன. இதை எப்படிப் புரிந்து கொள்வது? அந்தச் சொற்கள் பிரெஞ்சு புரட்சியின் கிளர்ச்சியூட்டும் கோஷமாகவும், ஊக்கமாகவும் இருந்தது என்பதையும், புத்த மதத்தில் எங்கும் காணப்படவில்லை என்பதை உலகறியும். ஆனாலும், பிரெஞ்சு புரட்சியில் அது பூர்சுவா வர்க்கத்தின் வெற்று கோஷமாகவும், பௌத்தத்தில் அவை உள்ளடக்கமாகவே இருப்பதும்தான் அம்பேத்கர் அப்படிக் கூறுவதன் காரணமாக இருக்க வேண்டும். புத்தர் எதிர்பார்த்ததைப் போல மனித சமூகம் அவற்றை முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று அண்ணல் எதிர்பார்த்தார். ஆனால், அந்த எதிர்பார்ப்பு என்பது கற்பனாவாத உலகில்தான் சாத்தியம்.

மனித சமூகத்தின் உயர்ந்த இலக்காகப் பிரதான முரண்பாடுகள் களையப்பட்டு, ஒவ்வொரு மனிதனும் தம் ஆற்றலுக்கேற்ப பங்களித்து, தனக்குத் தேவையானதை பெற்றுக் கொள்ளும் ஏற்பாடான கம்யூனிசத்தை மார்க்ஸ் கனவு கண்டார். இந்த லட்சியங்கள் ஒன்றோடொன்று ஒத்துப் போகவில்லையா? ஆம் என்றால், மார்க்சிய பொருள்முதல்வாதம் எப்படிச் சோசலிசத்தைக் கடந்து கம்யூனிசத்தை நோக்கியதாக இருக்கிறதோ, அதேபோல, அம்பேத்கரின் தத்துவார்த்த நிலைப்பாடும் சோசலிசத்தை அங்கீகரிப்பதோடு, ஏறக்குறைய மார்க்ஸை ஒத்ததாகவே இருக்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுகளோடு, கம்யூனிசத்தோடும் அம்பேத்கருக்கு இருந்த முரணான கருத்துகளை மட்டுமே வைத்துக் கொண்டு மார்க்சிய விரோதி என்றும், மார்க்ஸ் சொன்ன அனைத்திற்கும் எதிரியென்றும் சிலர் கட்டமைக்க முயல்கிறார்கள். இதைச் செய்வதன் மூலம் அவரை எதிர்முகாமிற்குள் தள்ளுகிறார்கள்.

முதலாளித்துவ ஆதரவாளர், உலகமய ஆதரவாளர், சுதந்திர சந்தையின் ஆதரவாளர் என்று அவரைத் திரிப்பதன் ஊடாகவே அதைச் செய்கிறார்கள். ஏற்கனவே விளக்கியதைப் போல, கொலம்பியா மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸின் பேராசிரியர்களின் தாக்கம் அம்பேத்கருக்கு அவருடைய சிறு வயதிலேயே இருந்தது, அவர் சோசலிசத்தின் மீது நாட்டம் கொண்டவராக இருந்தாலும், மார்க்சியத்தின் புரட்சிகர வழிமுறைகளோடு முரண்பாடு இருந்தது. மார்க்சியம் குறித்துக் கிட்டத்தட்ட அதே மாதிரியான அணுகுமுறையைக் கொண்டிருந்த அவர், தன்னுடைய வழிமுறைகளை மதிப்பிடும் அடிப்படை அலகாகவும் மார்க்சியத்தையே கருதினார். அம்பேத்கர் குறித்த இந்த மதிப்பீட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அவர் சோசலிஸ்ட் என்பதை மறுக்கவே முடியாது. தத்துவார்த்த ரீதியான சாய்வில் மட்டுமல்ல, தம் வாழ்நாள் நெடுக்க சோசலிச லட்சியங்களையே ஆதர்சமாகப் பின்பற்றினார்.

அவருடைய முதல் அரசியல் கட்சியான இந்திய தொழிலாளர் கட்சி, இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த ஃபேபியன் தொழிலாளர் கட்சியின் அடியொற்றித்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே, பரவலாக அறியப்பட்டதைப் போல, தீண்டப்படாத மக்களுக்கு இரண்டு எதிரிகள் எனப் பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் அடையாளம் காட்டியிருந்தார். அடையாள அளவில் தீவிர இடதுசாரிகள் நம் சமூகத்தை அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவச் சமூகம் என்று வரையறுப்பதோடு ஒத்துப் போகின்ற முழக்கமாகத்தான் அவரின் பிரகடனமும் இருக்கிறது. உண்மையில் இந்திய தொழிலாளர் கட்சியானது, சோசலிச லட்சியத்தை வரித்துக் கொண்ட, செங்கொடி ஏந்திய கட்சியாகவே இருந்தது. சாதியையும், வர்க்க வேறுபாட்டைப் போராட்டங்களின் வழி எப்படி ஒழிக்க இயலும் என்று சாலைகளில் நிகழ்த்திக் காண்பித்த கட்சி அது.

அந்தக் கட்சி தனது இடது அரசியல் பாதையில் வெற்றியடைந்தாலும், அன்றைய அரசியல் மதவாத திசையில் திரும்பிக் கொண்டிருந்த சூழலில், தமது அரசியல் செயற்பாடுகளைக் கைவிட நேர்ந்தது. 1942 க்ரிப்ஸ் கமிசன் சமர்ப்பித்த அறிக்கை இதர சிறுபான்மையினரின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, தாழ்த்தப்பட்டோர் நலனை நிராகரித்தது அவரை உடனடியாக வேறு முடிவெடுக்க நிர்ப்பந்தித்தது. தனது உத்தியை மாற்றிக் கொண்டு, இந்திய தொழிலாளர் கட்சியைக் கலைத்துவிட்டு, சாதி கட்சி போன்ற தோற்றம் கொண்ட பட்டியல்சாதிகள் கூட்டமைப்பை உருவாக்கச் செய்தது. இதே காலக்கட்டத்தில் வைசிராயின் நிர்வாகக் குழுவிலும் அவர் நியமிக்கப்பட்டார். தீண்டப்படாதவர்கள் மதவாத அரசியலிலிருந்து விடுவிக்கும் வேலையைத் தீவிரமாகச் செய்து கொண்டே, அரசியல் நிர்ணய குழுவிற்குப் பட்டியல்சாதிகளின் கூட்டமைப்பின் சார்பாகப் பரிந்துரைகளின் வரைவையும் கையளித்தார் என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும். பிற்காலத்தில் காலனிய காலத்திற்குப் பின்பான இந்தியாவில் அரசு சோசலிசம் என்ற அவருடைய விளக்கத்தின் அடிப்படையில் “மாநிலங்கள் மற்றும் சிறுபான்மையினர்” என்ற தலைப்பில் வெளிவந்தது.

அம்பேத்கர் சோசலிசத்திற்கு எதிராக இருந்தாரென்று அம்பேத்கரைத் திரிக்கும் போலி அறிவுஜீவிகள் சொல்லும் முதன்மையான காரணம் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் ‘சோசலிசம்’ என்ற சொல்லை இணைப்பதை அம்பேத்கர் எதிர்த்தார் என்பது. அப்படித் திரிபு வேலை செய்பவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கர் வரிக்கு வரி எழுதியது கிடையாது; அது அரசியல் நிர்ணய சபையில் கூட்டு மனசாட்சி. அம்பேத்கருடைய பணியானது அந்தக் குழுவிற்கிடையில் கருத்தொற்றுமை கொண்டு வருவதுதான். அரசியல் நிர்ணய சபையில் அவருடைய பங்கை, அவருடைய பணி எல்லையை வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். சோசலிசம் என்ற சொல்லை சேர்ப்பதைப் பொறுத்தவரையில் அவருடைய கருத்தே நேரடியாகக் கிடைப்பது நல்வாய்ப்பாகும், அதனூடாக அவர் மீது வீசப்படும் சந்தேகக் கணைகளை அவரே வீழ்த்துகிறார்.

”அரசின் கொள்கை எப்படி இருக்க வேண்டும். சமூக, பொருளாதாரத் துறையில் சமுதாயம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை எல்லாம், காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மக்களே முடிவு செய்ய வேண்டிய விசயங்களாகும். இவற்றை அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்க முடியாது; ஏனெனில், அத்தகைய ஏற்பாடு ஜனநாயகத்தை அழித்துவிடும். அரசின் சமூக அமைப்பு ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையினைப் பெறும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் நாம் கூறினால், தாங்கள் எத்தகைய சமூக அமைப்பு முறையில் வாழ விரும்புகிறோம் என முடிவு செய்து கொள்கின்ற மக்களின் உரிமையை நாம் பறித்துக் கொள்கிறோம் என்பது என்னுடைய கருத்தாகும்.”

மேலும், சோசலிசம் என்ற சொல்லை பெயரளவில் மட்டும் இணைப்பதில் அவருக்கு ஏன் உடன்பாடில்லை என்று விளக்குவதோடு, அரசியல் அமைப்பு சட்டத்தின் கூறுகளாகச் சோசலிசம் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்

அரசியலமைப்புச் சட்டத்தில் நாம் இணைந்துள்ள அடிப்படை உரிமைகளைத் தவிர, அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றிக் கூறும் இதர பிரிவுகளையும் நாம் சேர்த்துள்ளோம் என்ற உண்மையை என்னுடைய மதிப்பிற்குரிய பேராசிரியர் ஷா கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. பாகம் 4ல் கண்டுள்ள விதிகளை என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் படித்துப் பார்ப்பாரேயானால், சட்டமன்றமும், நிருவாகமும் அவற்றின் கொள்கையை வகுத்துக் கொள்வதில் சில குறிப்பிட்ட கடமைப் பொறுப்புகளை மேற்கொள்ள இந்த அரசியலமைப்புச் சட்டம் பணித்துள்ளதைக் காண்பார்.

இதுபற்றிக் கூறும் விதி 31 ஐ சட்டம் பணித்துள்ளதை காண்பார். இந்த விதி கூறுவதாவது: பின்வருபவற்றை அடைய அரசு தன்னுடைய கொள்கையை நெறிப்படுத்துதல் வேண்டும்:

  • குடிமக்கள், ஆணும், பெண்ணும் சரிநிகராகப் போதிய வாழ்க்கையை நடத்துவதற்கான உரிமை பெறுதல்;
  • பொதுவான நலனைப் பேணும் வகையில் சமுதாயத்தின் மூலப்பொருள் ஆதாரங்கள் மீதான சொத்துரிமையினையும், கட்டுப்பாட்டினையும் பகிர்ந்தளித்தல்;
  • பொருளாதார அமைப்பின் செயல்பாட்டினால் உற்பத்தி சாதனங்களும், செல்வமும் சமுதாய நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு சிலரிடம் குவிந்துவிடாதபடிப் பார்த்துக் கொள்ளுதல்;
  • ஆண், பெண் இருபாலருக்கும் சம்மான வேலைக்குச் சமமான கூலி கிடைக்கச் செய்தல்;

அனேகமாக இம்மாதிரி வகையிலான இதர இனங்களும் உள்ளன. நான் பேராசிரியர் சாவிடம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்:

நான் இங்குக் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் சோசலிச நோக்கமும் உள்ளடக்கமும் இல்லையா? இல்லையென்றால், இதைவிட மேலாகச் சோசலிசம் என்பதுதான் என்ன என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

எனவே, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தச் சோஷலிசக் கோட்பாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றும், இந்தத் திருத்த்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்றும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். -அண்ணல் அம்பேத்கர் (தொகுதி 27, பக்கம் 6-7), 15 நவம்பர், 1948

அவருடைய கடைசிச் சில உரைகளில் ஒன்றான காத்மாண்டு உரையின், போது பௌத்தத்தையும், மார்க்சியத்தையும் ஒப்பிட்டுத்தான் பேசினார். அதாவது, அவருடைய தேர்வுகளில் இறுதிக்காலத்திலும் கூட மார்க்சியம் இரண்டாவது தேர்வாக இருந்தது. இரண்டு சித்தாந்தங்களில் லட்சியங்கள் ஒன்றென்றாலும், வழிமுறைகள் வேறு என்று கருதிய அவர், புத்தரின் வழிமுறையை ஒப்பீட்டளவில் சிறந்ததாகவும், வன்முறையற்றதாகவும், ஜனநாயகமானதாகவும் கண்டார். ஒடுக்குமுறையற்ற, சுரண்டலற்ற சமத்துவச் சமூகத்தைச் சமைப்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது, அது சோசலிச சமூகத்தில்தான் சாத்தியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். மார்க்ஸாகட்டும், அம்பேத்கராகட்டும் சோசலித்துக்கு அப்பாலுள்ள ஒரு கற்பனையைக் குறித்தும் கனவு கண்டனர். எவ்வகையிலும் அப்படியான சமத்துவச் சமுதாயம் என்பது மனித பேராசையையும், சொத்து குவிப்பையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவச் சமூக அமைப்பில் சாத்தியமேயில்லை.

சுதந்திர சந்தை பொருளாதாரத்தை வலியுறுத்தும், முதலாளித்துவமாகட்டும் அல்லது நவதாராளமயமென்னும் முதலாளித்துவத்தின் தீவிர பிரதியாகட்டும் சமூக நீதிக்கான அச்சே அங்கே சுழல வாய்ப்பில்லை. மாறாக, சமூக அமைப்பில் அவரவர் தகுதிக்கேற்பதான் பொறுப்புகள் கிடைக்கும் என்று சமூக நீதிக்கெதிரான கருத்துகளைப் பரப்புவதும், சமத்துவமின்மை இருந்தால்தான், வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும் என்பது போன்ற அநீதிக்குத் துணை போகும் வாதம் அங்கே மேலெழும். இப்படியான ஏற்றத்தாழ்வுகளையும், அநீதியையும் வலியுறுத்தும் முதலாளித்துவத்திற்கும், நவதாராளமய உலகமயமாக்கலுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்தான் அம்பேத்கர் என்று பேசுவதே மிகப்பெரிய மோசடியன்றி வேறில்லை

சாதிய நிலவுடமையைவிட முதலாளித்துவம் முற்போக்கானது. அடிப்படையில் நிலவுடமை கட்டுகளிலிருந்து தொழிலாளியை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது என்ற புரிதலின் அடிப்படையில்தான் முதலாளித்துவத்தின் வளர்ச்சி சாதியை அமைப்பைத் தகர்க்கும் என மார்க்ஸ் கணித்தார். ஆனால், அம்பேத்கரோ முதலாளித்துவமும், பார்ப்பனியமும் ஒரே நேரத்தில் இயங்குபவை மட்டுமல்ல, ஒன்றையொன்று சார்ந்து இயங்குவதோடு, ஒன்றுக்கொன்று உதவி செய்வதாகவும் இருக்கிறது என்று கணித்தார். அதுமட்டுமில்லாமல், ஒன்றுக்குப் பலமுறை தன்னைச் சோசலிஸ்ட் என்று அறிவிக்கவும் செய்திருக்கிறார். அம்பேத்கர் குறித்த இந்தப் புரிதலில்லாமல் பேசுபவர்கள், அவரைக் குறித்துப் பேசாமல் இருப்பதே நலம்.

அம்பேத்கரும் உலகமயமாக்கலும்

சர்வதேச முதலாளித்துவத்தின் தீவிர வடிவமான உலகமயமாக்கலுக்கும் அம்பேத்கருக்கும் இருக்கும் தொடர்பு குறித்துப் பேசுபவர்கள் யூகத்தின் அடிப்படையில்தான் பேசுகிறார்கள். ஆனால், தேவதைகள் நுழைய அச்சப்பட்டும் இடத்திற்குப் பயணிக்கும் முட்டாள்கள் இருக்கவே செய்கிறார்கள். உலமயமாக்கலுக்கு ஆதரவான தங்களது ஆதரவை நேரடியாக வெளிப்படுத்தும் துணிவில்லாமல், அம்பேத்கர் ஒருவேளை வாழ்ந்திருந்தால் உலகமயமாக்கலை ஆதரித்திருப்பார் என்று புளுகித் தள்ளுகிறார்கள். அறிவாளுமை மிக்கவர்களாக, மக்கள் செல்வாக்குள்ள இது போன்ற குயுக்தியாளர்களைப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக அறிந்திட வாய்ப்பில்லாத அப்பாவிகள், மிக எளிதாக நம்பியும் விடுகிறார்கள்.

ஆனால், உலகமயமாக்கல் என்பது என்ன என்பது குறித்துப் புரிந்து கொண்டால், உலகமயமாக்கல் தொடர்பாக அம்பேத்கர் என்ன நிலைப்பாடு எடுத்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்வதும் மிக எளிது.

கீனியனிசம் மற்றும் கம்யூனிச சவாலை எதிர்கொள்ள முடியாத தாராளவாதத்தின் எழுச்சியுற்ற தீவிர வடிவம்தான் உலகமயமாக்கல். தனிநபர்வாதம், வளர்ச்சிக்குப் போட்டிதான் அடிப்படை, சுதந்திர சந்தையே முன்மாதிரி போன்ற கருத்துகளால்தான் உலகமயமாக்கலின் அடித்தளம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அது ஒவ்வொரு தனி நபரையும் ஒட்டுமொத்தமாக உலகத்தோடு போட்டியிடச் செய்து, வலியது வாழும் என்ற டார்வினிய கோட்பாட்டின் மூலம் சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் சமூக அநீதிகளை நியாயப்படுத்துகிறது. அதாவது பணக்காரர்களுக்கு ஆதரவான, ஏழைகளுக்கெதிரான அநீதியான இரட்டை நிலைப்பாடு கொண்ட தத்துவம், அது தோற்றவர்களை முற்றாக நிராகரித்துவிட்டு வென்றவர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடும். ஆக, அதன் செயல்பாடு என்பது தாக்குப்பிடிக்க முடியாதததாகவும், சகித்துக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

எளியவர்களையும் ஏழைகளையும் கணக்கிலேயே கொள்ளாத தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், தாராளமயமாக்கல் என்று பரவலாக அறியப்படும், இதைப் பொருளாதாரக் கொள்கை என்று அலங்காரம் செய்து வேறு பொட்டலத்தில் மடித்துத் தருகின்றனர்.

சோவியத் யூனியன் வீழ்ந்ததால் பெற்ற துணிச்சலைக் கொண்டு, ஊடக தொழில்நுட்பத்தின் வழி சர்வதேச மூலதனம் வகுத்துக் கொண்ட யுக்திதான் இது. மனித இனத்தின் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் விளைவுகளைக் குறித்தும் கூடக் கிஞ்சித்தும் அக்கறையே இல்லாமல்தான், சுரண்டலின் வழி மூலதனத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான வழிமுறையை வடிவமைக்கிறது. இதனால், மக்களிடம் இருக்கும் சொற்ப உடமைகளும் பறிக்கப்பட்டுச் சந்தைக்குக் கொண்டுவரப்படுகிறது.

அரசோ மக்களுக்குக் கல்வி, சுகாதாரத்தை உறுதி செய்யும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சர்வதேச மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளும் சுயநல சக்திகளுக்கு ஏதுவாகத் தரகு வேலை செய்வதைத் தன் வேலையாகக் கொண்டிருக்கிறது.

உலகமயமாக்கலின் பண்பு இதுதான் எனும் போது, மனித சமூகத்தின் விடுதலையைச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கனவு கண்ட அம்பேத்கர் உலகமயத்தை எப்படி ஆதரித்திருக்க முடியும். ஆக, அம்பேத்கருக்கு எதிரான கருத்துநிலைகளைப் பட்டியலிட்டால் கண்டிப்பாக உலகமயமாக்கல் அதில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும்.

உலகமயமாக்கலும் தலித்துகளும் :

பூமி பந்து முழுவதும் உலகமயமாக்கல் ஏற்படுத்திய சீரழிவை பற்றிய தெளிந்த சித்திரத்தை அடையாள அரசியலால் வயிறு நிரப்பும் தலித்துகள் கண்டிப்பாகக் காண சகிய மாட்டார்கள்தான். சுதந்திர சந்தை பொருளாதாரம் என்பது எந்த அளவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறதோ அதே அளவு நேர் விகிதத்தில் சமத்துவமின்மையும் பெருகியிருக்கிறது. நிரந்தர வேலை, ஜனநாயவெளி , இருப்பிடம், நல்ல சுற்றுச்சூழல், சமூகப் பாதுகாப்பு என அனைத்தும் பெருந்திரளான மக்களுக்கு மறுக்கப்படுவது பரவலாக நடக்கிறது. ஆனால், அடையாள அரசியலில் திளைக்கும் தலித்துகள் சாதி என்னும் பிரத்தியேகமான சிக்கலை எதிர்கொள்ளும் தனிக்குழுவினர் நாங்கள் என்று வாதிடுவதோடு நிறுத்திக் கொண்டு, (தலித் மக்களையும்) மிகக்கடுமையாகப் பாதிக்கும் மலை போன்ற பிரச்சினைகள் குறித்துத் திட்டமிட்டுக் கண்டுங்காணாமல் இருக்கிறார்கள். தலித்துகளுக்கிடையே குழுவாதம் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது என்பது கெட்டுவாய்ப்பாக இருந்தாலும், மேற்கண்ட பொறுப்பில்லாத வாய்ப் பந்தல்கள், தலித்துகள் சமகாலத்தில் உண்மையாகச் சந்திக்கும் சிக்கல்கள் எவை, எவை என்பதின் மீது கவனம் செலுத்தவே நம்மைத் தூண்டி விடுகின்றது.

உலகமயமாக்கல் சமூகப் படிநிலையில் கீழிருக்கிற மக்களையே அதிகம் பாதிக்கிறது எனும் போது, தலித்துகள்தான் அதனால் அதிகம் பாதிக்கப்படுகிறாகள் என்பது வெள்ளிடைமலை. ஆனால், அவற்றைப் பேசுவதும் தலித்துகளுக்கு ஈர்ப்புடையதாக இருக்காதுதான். ஆனால், அதைப் புரிந்து கொள்ள, உலகமயம் தலித்துகள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேச, நாம் அவர்களின் விடுதலைக்கான முன்வரைவு வேலைத்திட்டம் போன்ற ஒன்றை முன்வைக்கலாம்.

அந்த வேலைத்திட்டம் என்பது நான்கு அதிகாரப்படுத்துதல்கள் மீது கவனம் குவிக்க வேண்டும்

  1. தனிநபர் அதிகாரப்படுத்துதல்
  2. சமூக-பொருளாதார அதிகாரப்படுத்துதல்
  3. சமூக- அரசியல் அதிகாரப்படுத்துதல் மற்றும்
  4. சமூக – கலாச்சார அதிகாரப்படுத்துதல்

இந்த நான்கு அதிகாரப்படுத்துதலும் ஒரு வேளை சாதிக்கப்பட்டால், தலித்துகளின் விடுதலை ஏறக்குறையச் சாத்தியமாகிவிட்டது என்று ஒருவர் முடிவுக்கு வரலாம். ஒவ்வொரு அதிகாரப்படுத்துதலுக்கும் சில மாதிரி லட்சியங்களைக் கீழ்க்கண்டவாறு உருவாக்கிக் கொள்வோம்.

அ) தனிநபர் அதிகாரப்படுத்துதலுக்குக் கல்வி மற்றும் வேலை,

ஆ) சமூக-பொருளாதார அதிகாரப்படுத்துதலுக்கு நிலச்சீர்திருத்தம் மற்றும் வேலை

இ) சமூக-அரசியல் அதிகாரப்படுத்துதலுக்கு ஜனநாயகத்தன்மை

ஈ) சமூக-கலாச்சார அதிகாரப்படுத்துதலுக்கு நவீனத்தன்மை

இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் உலகமயமாக்கல் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்தால் உண்மையான சித்திரம் நமக்குப் புலப்படும்.

உலகமயமாக்கலின் உண்மையான தாக்கம் என்பது அரசு தன்னுடைய பொறுப்பிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு, பொதுத்துறைகளைத் தனியாருக்கு விடுவது. திறன் மேம்பாட்டுக்கு முக்கியக் குறியீடாகக் கருதப்படும் கல்வி என்பது தலித் மக்களின் கைக்கு எட்டாக்கனியாகிக் கொண்டே இருக்கிறது. கல்வித்துறை என்பது மிக வேகமாக வணிகமயமாகி வருவதையும், படிநிலைக்கேற்ப தரம் தீர்மானிக்கப்படுவதையும் மிக வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. இந்தப் படிநிலை ஏறக்குறைய பண்டைய சாதிய படிநிலையோடு ஒத்துப் போவதாகவே இருக்கிறது.

சுகாதாரச் சேவை துறையைப் பொறுத்தவரை ஏற்கனவே பெரும்பாலும் தனியார்மயமாகித்தான் இருந்தது, தற்போது, பொதுத்துறையிலிருந்து ஏறக்குறையக் காணாமலேயே போய்விட்டது.

நிலச்சீர்திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அந்தப் பணியே முற்றிலுமாக நின்று போனது, நிலச்சீருத்தத்திற்கு மாறாக, வளர்ச்சியின் பெயரால் கார்ப்பரேட்டுகள் நிலத்தைப் பிடுங்குவதுதான் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாக நில உரிமை என்பது மேலும் குறைந்திருப்பதோடு, நிலமற்ற தலித்துகளின் எண்ணிக்கை மேலும் கூடிப்போயிருக்கிறது. வேலைகள் மிக வேகமாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. தலித் மக்களுக்குக் கிடைத்து வந்த பொதுத்துறை வேலைகள் 1997க்கு பிறகு மிக வேகமாகக் குறைந்து வருவது, இட ஒதுக்கீட்டை மிகத் தீவிரமாகக் காணாமல் போகச் செய்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தை எடுத்துக் கொண்டால் மக்களுக்கு மிகக்குறுகிய வரம்புக்குட்பட்ட தேர்வுரிமையை மட்டும் வழங்கிவிட்டு அது வெறும் அடையாளமாகவே இருக்கிறது. தேர்தல் அமைப்புக்கு வெளியே சின்ன முனக்கலை கூட இந்த அமைப்பு அனுமதிப்பதில்லை. எளிய விமர்சனம்கூடத் தலித் இளைஞர்கள் மீது நக்சல், மாவோயிஸ்ட் முத்திரைக்குக் குத்துவதற்குக் காரணமாகிறது.

இறுதியாக நவீனம் பற்றிப் பேச வேண்டும். ஆதிக்கம் செலுத்தும் உரையாடல் வெளியில், உலகமயமாக்கலோடு ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பை பொறுத்தி பார்க்கும் உரையாடல்கள் பிரதானமாக இருப்பதால், இதைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமானதாய் இருக்கலாம்,

நவீனமென்றால் மூலம் எது என்று வேற்றுமை பார்க்காமல், சிதைந்து போன பண்டைய மரபுகளையும், வழக்கங்களையும் அறிவியல் அணுகுமுறையோடு அணுவது என்றாகிறது. இதுகாறும் நடைமுறையில் அது அப்படியில்லை. உண்மையில் நவீனம் என்பது கலப்பு என்பதாகத்தான் நடைமுறையில் இருக்கிறது. அதுவும் குறிப்பாக உள்ளூர் உயர்வர்க்கத்தினர் எதை உயர்வாகக் கருதுகிறார்களோ, அதனோடு உலகளாவிய கலாச்சாரம் இணைவதாகவே இருக்கிறது.

ஒருவிதக் குற்றவுணர்வோடும், தயக்கத்தோடும்தான் 1980கள் வரை பேசப்பட்டு வந்த இந்துக்களின் சாதி உள்ளிட்ட பண்டைய மரபுகள், தற்போது வன்மத்தோடுதான் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. நவதாராளமய தலைமுறைகள் அவற்றைப் பெருமையாகவே பேசி வருகின்றது. சாதிய அடக்குமுறைகள் சாதியத்தை அளப்பதற்கான அளவுகோலாக (சாதிய அடக்குமுறைகளைத்தான் மிகச்சிறந்த அளவுகோலாக நான் பார்க்கிறேன்) பார்ப்போமெனில், சாதியம் என்பது உலகமயமாக்கலின் விளைவாக வெகுவாகக் கூடியிருப்பதை உணரலாம்.

ஆக, உலகமயமாக்கல் என்பது தலித்துகளின் முன்னேற்றத்துக்காக நாம் எடுத்துக் கொண்ட மாதிரி திட்டத்தை மிகக் கடுமையாகச் சிதைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், உலகமயமாக்கலால் மிகப்பலமாகப் பலன் பெற்ற சில தலித்துகள் கண்டிப்பாக இருப்பர்தான். இலவே இல்லை என்று கூற முடியாது. உலகமயமாக்கல் இப்படி மந்தையிலிருந்து சிலருக்கு எல்லா வளங்களையும் அளிக்கும்படிதான் உருவாக்கப்பட்டிருக்கிறது, அப்படி மேலே வந்தவர்களை அடையாளங்காட்டி போட்டி போடும் திறனிருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பது போன்ற தோற்றத்தை அது உருவாக்குகிறது.

தலித் முதலாளியம், தலித் பூர்சுவா அல்லது தலித் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மற்றும் சிலவற்றுக்காகப் பிரச்சாரம் செய்யும் ’பிரச்சாரக்’குகளுக்குப் பிரச்சினையின் முழுப் பரிமாணம் குறித்துச் சிறிய புரிதல் கூட இல்லை; அதைக்கூட விடுங்கள் எதிரியை சித்தாந்தத்தைக் கைக்கொள்வது தற்கொலைக்கு ஒப்பானதில்லையா?

முடிவுரை

தலித் உளவியலில் மிக முக்கியமான இடத்தை அண்ணல் அம்பேத்கர் வகிக்கிறார். அவர் அவர்களின் லட்சியம், தத்துவம் மற்றும் மேலான விசயங்களைப் பிரதிபலிப்பவராக இருக்கிறார். அவரோடு ஒத்துப் போகாத விசயங்களைத் தலித்துகள் தமதாகக் காணுவது மிகக்கடினம். இதைப் பல்வேறு குழுக்களும் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே அந்தத் தீய சக்திகள் அவரை வெற்று வழிபாட்டு அடையாளமாக மாற்றிவிட்டனர். ஆக, எதைக் குறித்து ஆய்வு செய்வதானாலும் அவரைக் குறிப்புக்காக அணுகுதல் இயல்பாக நடக்கிறது. இதன் விளைவாக, அவரோடு ஒத்துப் போகாத விசயங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதும், அவரோடு ஒத்துப் போகிற விசயங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுவதும் நடக்கின்றன. உலகமயமாக்கல் அப்படியானதொரு சங்கதியாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இங்கே நடைமுறையில் இருக்கும் உலகமயமாக்கல் தலித் மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. ஆனாலும், அம்பேத்கருக்கு இணக்கமான சிந்தனை என்று கருதப்படுவதால், உலகமயமாக்கலுக்கு எதிரான தங்களின் எதிர்வினையைக் கூடத் தலித் மக்கள் ஆற்றவில்லை. தலித்துகள் முதலில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது என்பது உண்மையான புரட்சிகர அம்பேத்கரின் முகத்தைத்தான். அப்படியான அம்பேத்கரின் புரட்சிகர முகமென்பது கண்டிப்பாகச் சோசலிச முகம்தான். அவர் உண்மையைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தார், மக்களின் இருப்புக்கு-சுதந்திரத்திற்கு உத்தரவாதமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துவம் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்ட சமூகத்தைக் கனவு கண்டார். இதைப் பொத்தாம் பொதுவாகத் தலித்துகள் புரிந்து கொண்டிருந்தாலே சுயநலமிகளின் வலைகளிலிருந்து தலித்துகள் எளிதாக வெளியே வந்திருப்பர்.

சர்வதேச மூலதனம் தனது வெறியாட்டத்தை மறைக்கப் பயன்படுத்திய மெலிதான சொல்தான் உலகமயமாக்கல். சாரத்தில் அது முதலாளித்துவமானாலும், அதிலும் தீவிரமானது, தன்னுடைய இருப்பைக் குறித்தே கவலைப்படாமல் லாபவெறியை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. முதலாளித்துவம் கூலியின் உழைப்பிலிருந்து சுரண்டும் உபரிக்கு எல்லை வகுத்து வைத்திருந்தது, கூலியானவர் மறுநாள் மீண்டும் உழைக்கவும், முழுமையடைந்த பொருட்களைச் சந்தையில் வாங்க அவருக்கு வாங்கும் சக்தியை காப்பதும் அது தன் பணியாகக் கருதிற்று.

தொழில்நுட்ப வளர்ச்சியால் நந்தத்தன்மை ஊட்டப்பட்ட உலகமயமாக்கல் என்பதோ, கூலியுழைப்பை குறைத்து எடை போடுவதிலும், இருக்கின்ற சொற்க தொழிலாளர்களையும் வெளியேற்றுவதிலும் மிகத்தீவிர முனைப்போடு இருக்கிறது. சந்தையை நுகர முடியாத, வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்களை, ஒட்டுண்ணிகள் போல இந்தக் கிரகத்தின் வளங்களை நுகர்பவர்களாகக் கருதி அவர்களை வெளியேற்றி அழித்திட ஆர்வம் கொண்டதாக இருக்கிறது. இப்படியான லாபவெறி அமைப்பு என்பது அம்பேத்கரின் சிந்தனைக்கு முற்றிலும் எதிரானது என்பதைப் புரிந்து கொள்ள எந்த அறிவுஜீவித்தன்மை தேவையில்லை என்பது வெளிப்படை.



%d bloggers like this: