அறிமுகம்
இந்தியா விடுதலை பெற்று இன்றைய தமிழகம் தனி மாநிலமாக உருவான பொழுது தமிழகம் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருந்தது.காலனி ஆட்சியில் வேளாண் துறை பெரும்பாலும் தேக்க நிலையில் தான் இருந்தது.ஐம்பதுகளின் துவக்கத்தில் மாநிலத்தின் நெல் உற்பத்தி 20 லட்சம் டன் என்ற அளவில் தான் இருந்தது. மகசூலும் ஏக்கருக்கு ஏழு க்விண்டால்(700 கிலோ) என்று குறைவாகவே இருந்தது. தொழில் துறையிலும் பெரும் முன்னேற்றம் காலனி ஆட்சிக்காலத்தில் நிகழவில்லை. ஜவுளி, சிமெண்ட், சர்க்கரை என்று சில துறைகளில் நவீன ஆலை உற்பத்தி துவங்கியது. ஆனால் ஆமை வேகத்தில் தான் அதிகரித்தது.தொழில்துறையின் பெரும்பகுதி ஆலை அல்லாத முறைசாரா உற்பத்தியாகவே இருந்தது. தொழில்துறை உழைப்பாளர்களில் பெரும் பகுதியினர் முறைசாரா உற்பத்தியில் தான் இருந்தனர். கட்டமைப்பு துறைகளில் காலனீய அரசு மிகக் குறைவான அளவில் தான் முதலீடுகளை மேற்கொண்டது. 1950 இல் தமிழகத்தின் மின் உற்பத்தித்திறன் 160 மெகாவாட் என்ற அளவில் மிகவும் சொற்பமாக இருந்தது. சமூக குறியீடுகளிலும் நிலைமை மோசம் தான். தமிழகத்தின் எழுத்தறிவு விகிதம்1950களின் துவக்கத்தில் சுமார் 20%என்ற அளவில் தான் இருந்தது. உயிருடன் பிறக்கும் ஆயரம் சிசுக்களில் ஏறத்தாழ நூற்றைம்பது சிசுக்கள் ஒரு ஆண்டு நிறைவடையும் முன்பே இறக்கும் நிலை இருந்தது.
இந்திய விடுதலைக்குப் பின்னான கடந்த அறுபத்தியெட்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. 1951இல் (5 வயதிற்கு மேற்பட்ட மக்கள் மத்தியில்) 20 % ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2011 மக்கள்தொகை கணக்குப்படி (7வயதிற்கு மேற்பட்ட)ஆண்கள் மத்தியில் 87 %, பெண்கள் மத்தியில் 74 %. 1950 இல் 150 ஆக இருந்த சிசு இறப்பு விகிதம் 2012 ஆம் ஆண்டுகணக்குப்படி 21 ஆகக் குறைந்துள்ளது. மின் உற்பத்தி திறன் 22,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.1950களின் துவக்கத்தில் 20 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி தற்சமயம் ஏறத்தாழ மூன்று மடங்காக 60 லட்சம் டன் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில் தேச உற்பத்தி மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 3 சதவிகிதம் என்ற அளவில் 1950 முதல் 1966 வரையிலான காலத்தில் அதிகரித்துவந்தது. அக்காலகட்டத்தில் தமிழக மாநில உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இதை விட குறைவாக இருந்தது. 1970-71 முதல் 1982-83 வரையிலான காலத்திலும் அகில இந்திய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. 1980-81 முதல் 1990-91 காலத்தில் தமிழக வளர்ச்சி விகிதம்5.38 %ஆக இருந்தது (இந்தியா 5.47%).1990-911998-99 களில் இது 6.02 % ஐ எட்டியது(இந்தியா 6.50%). தமிழக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1980-1990களில் கணிசமாக குறைந்தது. இதனால் தமிழக தலா உற்பத்தி மதிப்பு இவ்விரு காலகட்டங்களில் ஆண்டுக்கு முறையே3.87 % மற்றும் 4.78 % அதிகரித்தது. பத்தாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-2007) தமிழக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டு சராசரி கணக்கில் கிட்டத்தட்ட 9.7 % ஐ எட்டியது.அடுத்த பதினொன்றாவது திட்ட காலத்தில் (2007-12) இது 7.7 % ஆக குறைந்தது.
இவ்வாறு அரசு புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால், தாராளமய காலத்தில் – அதாவது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் – தமிழக பெருளாதார வளர்ச்சி, அகில இந்திய அளவை விட சற்று குறைவாக இருந்தாலும், பொதுவாக வேகமாகவே இருந்துள்ளது எனலாம். மேலும் அதற்கு முந்தைய காலத்தை விட அதிகம் என்றும் கூறலாம். ஆனால் இதை வைத்து தமிழக வளர்ச்சி பாராட்டுக்குரியது என்ற முடிவுக்கு செல்ல இயலாது. வளர்ச்சியின் துறைவாரி தன்மை, அதன் பலன்கள் யாரை சென்று அடைந்துள்ளன ஆகிய விஷயங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.வேறு வகையில் சொன்னால், தமிழக பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மையை ஆராய வேண்டும்.
வளர்ச்சியின் துறைசார் கட்டமைப்பு
அட்டவணை 1 தமிழக மாநில உற்பத்தியின் துறைசார் விகிதங்களை தருகிறது:
நாம் முதலில் கவனிக்க வேண்டியது, கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பயிர் மற்றும் கால்நடை வேளாண்மை, வனம் மற்றும் மீன்பிடி ஆகியவையை உள்ளடக்கிய முதல் நிலைத்துறையின் பங்கு மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 43.5% இலிருந்து செங்குத்தாக 7.8%ஆக குறைந்துள்ளது என்பதாகும். குறிப்பாக தாராளமய காலகட்டத்தில் –அதாவது, கடந்த 20-25 ஆண்டுகளில் – 23.42% இலிருந்து 7.81% ஆக மிக வேகமாக குறைந்துள்ளது. ஆனால் தமிழக உழைப்பாளி மக்களில் வேளாண்மை துறையில் இருப்பவர்கள் சதவிகிதம் இன்றளவும் கிட்டத்தட்ட 40%ஆக உள்ளது. கிராமப்புறத்தில் இந்த சதவிகிதம் 51% ஆக உள்ளது. நவீன பொருளாதார வளர்ச்சியில் மொத்த உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்கு கணிசமாக குறைவது வியப்பிற்குரிய விசயமல்ல. ஆனால், உழைப்பாளி மக்களுக்கு வேளாண் அல்லாத துறைகளில் வேலைவாய்ப்புகள் மிக மந்தமாகத்தான் அதிகரித்துள்ளன என்பது தமிழக வளர்ச்சியின் ஒரு முக்கிய ஊனம் ஆகும். அகில இந்திய நிலையும் இது தான். அகில இந்திய அளவில் கிராமப்புறங்களில் 2011-12 இல் உழைப்புப் படையில் 64% வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளில் தான் இருந்தனர்.
இரண்டாவதாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தொழில்துறை வளர்ச்சியில் பெரும் வேகம் இல்லை.சொல்லப்போனால், தாராளமய காலத்தில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61 இல் இந்த பங்கு 20.27% ஆக இருந்தது. 1980-81இல் 33.49% ஆக உயர்ந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதேநிலையில் தொடர்ந்தது. ஆனால் தாராளமய கட்டமான கடந்த இருபது-இருபத்தைந்து ஆண்டுகளில் இப்பங்கு சரிந்து 2012-13 இல் 29% க்கும் கீழே சென்றுவிட்டது. அது மட்டுமல்ல. மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் பதிவுசெய்யப்பட்ட ஆலை உற்பத்தி (registered manufacturing) யின் பங்கு 1960-61 இல் 6.85% ஆக இருந்தது.இது 1990-91 இல் 16.22% ஆக உயர்ந்தது. ஆனால் தாராளமய காலத்தில் 2012-13 இல் கணிசமாக குறைந்து 11.56% ஆக உள்ளது. பதிவு செய்யப்படாத ஆலைத்துறை உற்பத்தியும் 5.17% ஆக சரிந்து 1960-61 இல் இருந்த 7.91% ஐயும் விட கீழே சென்றுள்ளது.
இந்த விவரங்கள் சொல்லும் செய்தி என்ன? தாராளமய கால வளர்ச்சி என்பது வேளாண்துறையிலோ, தொழில்துறையிலோ சாதிக்கப்படவில்லை. நவீன கால வளர்ச்சியின் இலக்கணமாக இருந்த தொழில்மயமாக்கல் இங்கே நிகழவில்லை. ஒருசில தொழில்கள் தமிழகத்தில் கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் விரிவடைந்துள்ளன என்பது உண்மை. மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, துணி மற்றும் பின்னலாடை துறை ஆகியவற்றை இவ்வாறு குறிப்பிடலாம். அனால் பொதுவான பலதுறை தொழில்மயம் இங்கே நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால் எங்கிருந்து வந்துள்ளது வளர்ச்சி? மூன்றாம் நிலைத்துறை – இது சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது – தான் அதிகமாக வளர்ந்துள்ளது. இத்துறையின் பங்கு 1960-61 இல் 36.22% ஆக இருந்தது. 1990-91 இல் 43.4 % என்ற அளவிற்குத்தான் உயர்ந்தது. ஆனால் அடுத்துவந்த தாராளமய காலத்தில் சுமார் இருபது ஆண்டுகளில் 63.65% என்றார் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் உள்ளடக்கம் என்ன? உற்பத்தி மதிப்பு அடிப்படையில் சேவைத்துறையின் மிகப் பெரிய பகுதி என்பது நிதி மற்றும் ரியல் எஸ்டேட்தான். இது 2012-13 இல் சேவைத்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான மதிப்பைக் கொண்டுள்ளது. 2012-13 இல் மாநில மொத்த உற்பத்தியில் நிதி மற்றும் ரியல் எஸ்டேட்டின் பங்கு 23.13% ஆக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி என்பது மாபெரும் தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி என்றெல்லாம் சித்தரிப்பது மிகையானது என்பது தெளிவு.
வளர்ச்சியின் வர்க்கத்தன்மை
துறைவாரி உற்பத்தி பெருக்கம், அதில் அதிகரித்துவரும் சேவைத்துறையின் பங்கு, தொழில்துறையின் மந்தமான வளர்ச்சி, வேளாண்துறையின் தேக்கம்/துயரம் இவை ஒருபுறம் இருக்க, தமிழக வளர்ச்சி பல்வேறு வர்க்கங்களின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை பார்ப்போம்.
பொதுவாக காங்கிரஸ் ஆட்சியிலும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் பெரும் ஆதாயம் பெற்றுள்ளனர் என்பது உண்மை. தமிழக கிராமப்புற மாற்றங்களை 197௦களின் இறுதியில் ஆய்வு செய்த பேராசிரியர் குரியன் 1961-62 முதல் 1971-72 வரையிலான காலத்தில் நிலச்சீர்திருத்தம் பற்றி பரவலாக பேசப்பட்டிருந்தாலும், கிராமப்புறக்குடும்பங்களில் 1 சதமாக இருந்த பெரும் செல்வந்தர்களின் கையில் குவிந்திருந்த சொத்து மதிப்பு 1961-62 இல் 33% ஆக இருந்தது, 1971-72 இல் 39%ஆக உயர்ந்தது. இதே காலத்தில் உயர்மட்ட 10% நீங்கலாக மீதம் 90% குடும்பங்களிடம் இருந்த சொத்துப்பங்கு 27.43% இல் இருந்து 22.36% ஆக குறைந்தது. 1970களிலும் அதன் பின்பும் நில மறுவிநியோகம் என்பது இடதுசாரிகள் அஜண்டாவில் மட்டுமே இருந்தது. அரசுகள் இப்பிரச்சினையில் செயல்பட மறுத்துவிட்டன. 1990களிலும் அதன் பின்பும் எதிர்மறையான நிலச்சீர்திருத்தம் – அதாவது, உச்சவரம்பை உயர்த்துவது, உச்சவரம்பு சட்டங்களை செயலற்றதாக ஆக்குவது, செல்வந்தர்களுக்கும் கார்ப்ப்ரேட்டுகளுக்கும் சாதகமாக விதிமுறைகளை மாற்றி விலக்குகளையும் அளித்து நில ஏகபோகத்தை தக்கவைப்பது, வலுப்படுத்துவது என்பதே அரசின்கொள்கையாக இருந்துவந்துள்ளது. இது இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கும் பொருந்தும். 2001-2006 காலத்தில் அரசின் வசம் இருந்த நிலங்களை ஏகபோக முதலாளிகளுக்கு அற்ப குத்தகைக்கு அளிக்க மாநில அ.இ.அ.தி.மு.க. அரசு முனைந்ததும் அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல், ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் என்று 2006 இல் தேர்தல் வாக்குறுதி அளித்து, பின்னர் வழங்க அரசிடம் நிலம் இல்லை என்று தி,மு,க. அரசு நிலை எடுத்ததும் நினைவில் கொள்ளத்தக்கதே. ஆக பல நிலா உச்சவரம்பு சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள போதிலும் நிலா ஏகபோகம் என்பது பெருமளவில் தகர்க்கப்படவில்லை.
அதேசமயம், வேளாண்வளர்ச்சிக்கு என்று அரசு நடைமுறைப் படுத்தியுள்ள, நடைமுறைப் படுத்திவரும் திட்டங்களாலும் மானியங்களாலும் மிக அதிகமாக அபயன் அடைந்திருப்பது நிலப்பிரபுக்கள், பெருமுதலாளித்துவ விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகள்தான் என்று கள ஆய்வுகள் கூறுகின்றன. சில நஞ்சை பகுதிகளில் பாரம்பர்ய நிலப்பிரபுக்கள் நிலங்களை விற்று காசாக்கி வேறுதுறைகளில் முதலீடு செய்துள்ளனர். இது அப்பகுதிகளில் உள்ள குடியானவ சாதியினருக்கு நிலபலத்தை கூட்டியுள்ளது. இவ்வாறு உருவாகியுள்ள பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நவீன உற்பத்திமுறைகளில் முதலீடு செய்துள்ளனர். வங்கி, கூட்டுறவு அமைப்புகள் அரசின் விரிவாக்கப்பணி அமைப்பு, அரசு மான்யங்கள் மற்றும் அனைத்து வேளாண்சார் திட்டங்களையும் ஏற்கெனவே இருந்த நிலப்பிரபுக்களும் இவ்வாறு வளர்ந்துள்ள பெரிய முதலளித்வ விவசாயிகள்/ பணக்கார விவசாயிகள் ஆகியோரும் பயன்படுத்தியுள்ளனர். விவசாயத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய மற்றும் அந்நிய கம்பனிகளும் நுழைந்துள்ளன. இவர்கள் நேரடி விவசாயத்தில் ஈடுபடுவது குறைவு தான். ஆனால், அனைத்து இடுபொருள் சந்தைகளிலும் நுழைந்துள்ளனர். விதை, உரம், பூச்சிமருந்து, இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள், என்று அனைத்தும் இன்று கார்ப்பரேட்டுகளின் கைகளில் உள்ளது. தாராளமய கொள்கைகளின் பகுதி யாக அரசின் வேளாண் ஆராய்ச்சி அமைப்பும் விரிவாக்க அமைப்பும் பலவீனமடைந்துள்ளதால் விவசாயிகள் கார்ப்பரேட்டுகளை கூடுதலாக சார்ந்துநிற்கும் நிலை உருவாகியுள்ளது. நிறுவனக்கடன் வசதிகளும் சிதைந்துள்ளதால் லேவாதேவிகள், வர்த்தகர்கள், மற்றும் கார்ப்பரேட்டுகளின் முக்கியத்துவம் தமிழக வேளாண்மையில் அதிகரித்துள்ளது. 1970களில் இருந்தே பொதுப் பாசன வசதிகளை மேம்படுத்துவதில் அரசின் பங்கு குறையத்துவங்கியது. அரசு அளித்த மானியங்களை பயன்படுத்தி கிணற்று பாசனத்தை பம்புசெட்டுகள் வைத்தும் ஆழ்குழாய்கிணறுகள் அமைத்தும் பயன்படுத்தும் வாய்ப்புகள் சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்கெனவே குறைவாக இருந்தது. தாராளமய காலத்தில் இது கிட்டத்தட்ட எட்டாக்கனியாக ஆகிவருகிறது. நவீன பாசன முறைகள், நவீன வேளாண் இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் அனைத்துமே ஒருசிறிய பகுதி பெருமுதலாளித்துவ விவசாயிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் கைகளில் தான் குவிந்துள்ளன.
சுருங்கச்சொன்னால், விவசாயிகள் மத்தியில் வர்க்க வேறுபாடு பெரிதும் அதிகரித்து ஒருபுறம் முதலாளிதத்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் (பாரம்பர்யமாக ஊரின் நிலக்குவியலில் இடம் பெறாதிருந்தாலும் காலப்போக்கில் அரசின் திட்டங்களையும் மானியங்களையும் பயன்படுத்தி பணக்கார விவசாயி நிலையில் இருந்து) பெரிய முதலாளித்வ விவசாயிகளாக மாறியுள்ளவர்களுமே கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழக கிராமங்களில் ஆளும் வர்க்கமாக உருவாகியுள்ளனர். பெரும் பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பொருத்தவரையில், தாராளமய கொள்கைகளால் பயிர் சாகுபடி விவசாயம் கட்டுபடியாகாததாக மாறியுள்ளது. இடுபொருள் விலைகள் உயர்வு, விளைபொருள் விலைகளின் வீழ்ச்சி மற்றும் உத்தரவாதமின்மை, உள்ளிட்ட அரசுகொள்கைகளின் விளைவுகளால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழக கிராமங்களில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்துவது என்பது பெரும்பாலான நடுத்தர விவசாயிகளுக்குக் கூட சாத்தியம் இல்லை.ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள “சமூக-பொருளாதார –சாதிவாரி கணக்கெடுப்பு” (SECC) தரும் விவரங்கள்படி, தமிழக கிராமப்புறங்களில் நூறு குடும்பங்களை எடுத்துக் கொண்டால், அதில் சாகுபடியை பிரதான வருவாயாக கொண்டிருப்பது 19 குடும்பங்களுக்கும் குறைவானவை தான் (18.63%). மறுபுறம், ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் (65.77%) பிரதான வருவாய் ஆதாரமாக கொண்டுள்ளது உடல் உழைப்பைத்தான். மேலும், சாகுபடிசெய்யும் குடும்பங்களை எடுத்துக் கொண்டால், ஒரு ஹெக்டேருக்கு (2.47 ஏக்கர்) குறைவாக சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடிசெய்யும் குடும்பங்களில் 77%. ஆனால் இவர்கள் வசம் உள்ள சாகுபடி நிலப்பரப்பு மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 35.4% தான். இது தான் தாராளமய காலத்தில் தமிழக கிராமப்புற வர்க்க கட்டமைப்பின் தன்மை.
தொடரும்…
One response to “தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 1”
[…] முதல் பகுதி ஜூலை மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்தது. அதில் நாடு […]
LikeLike