மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வாட்ஸாப் கதைக்கு விளக்கம் (1)


வாட்ஸாப் கதை:

கதை: ஒரு மலை இருந்தது. அந்த மலைக்கு மேல் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு ஏரி இருந்தது. மக்கள் தினமும் அந்த ஏரிக்குத் தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். ஒரு முறை சென்று வர 30 நிமிடம் ஆகும். ஊரில் இருந்த ஒருவன் யோசித்தான், சில வருடங்கள் கஷ்டப்பட்டு மலையைக் குடைந்து நீரை கிராமத்தின் பக்கம் திருப்ப ஒரு சுரங்கம் தோண்டினான். இப்பொழுது நீர் கிராமத்துக்கு அருகில் ஒரு வெட்டவெளியில் குளமாக்கியது. பிறகு பெருகி ஒடி புது நீரோடை உண்டானது. சுரங்கம் வெட்டியவன் நீரை விற்க அனுமதி வாங்கினான். நீரின் விலையை எப்படி நிர்ணயிப்பது? அதற்காக அவன் ஒரு கணக்கு போட்டான். ஒரு முறை தண்ணீர் எடுத்துவர 30 நிமிடம் ஆகும். ஒருமுறைக்கு இரு குடங்கள் தண்ணீர் எடுத்துவர முடியும். ஆக 15 நிமிடம் ஒரு குடத்திற்கு.

ஒரு மனிதனின் சராசரி வருமானம் 8 மணி நேர உழைப்பிற்கு 160 ரூபாய். அதாவது மணிக்கு 20 ரூபாய். 15 நிமிட நேரத்திற்கு 5 ரூபாய். ஆக நீரின் தற்போதைய விலை ஒரு குடம் 5 ரூபாய். எனவே தன்னுடைய குளத்திலிருந்து எடுக்கும் நீர் குடம் 3 மூன்று ரூபாய் என நிர்ணயித்தான்.

மக்களும் அவனின் விளம்பரத்தில் மயங்கி குடம் 3 ரூபாய்க்கு வாங்கத் தொடங்கினர். இதைக் கண்ட இன்னொருவனுக்குத் தானும் ஒரு சுரங்கம் வெட்டவேண்டும் எனத் தோன்றியது. அவன் இன்னும் கொஞ்சம் தாழ்வாக வரும்படிக்கு தன் சுரங்கத்தை வெட்டி நீரை கிராமத்தின் இன்னொரு பக்கம் சேமித்தான். அவன் குடம் நீர் இரண்டு ரூபாய்க்கு விற்கத் தொடங்கினான். அதனால் முதலாமவனும் விலையைக் குறைக்க வேண்டியதாயிற்று. இதில் நல்ல இலாபம் இருப்பதைக் கொண்ட இன்னும் சிலர் சுரங்கம் வெட்ட முனையவே… முதலில் தொழில் ஆரம்பித்த முதலாளிகள் அதற்குத் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

ஏரியின் நீரை கிராமத்திற்குக் கொண்டுவர முதலில் முயன்றதால் ஏரி நீர் முழுக்கத் தங்களுக்கே சொந்தம் என்று அவர்கள் வாதாடினர். தங்களின் முயற்சியால் கிராமம் செழித்தது. கிராமம் முன்னேறியது. மக்களுக்கு எவ்வளவு இலாபம் கிட்டியது எனக் கணக்கு காட்டினார். ஒரு குடம் தண்ணீருக்குக் கிராமத்திற்கு மூன்று ரூபாய் மிச்சமானது. ஆகவே இத்தனை ஆண்டுகளில் கிராமத்திற்கு எவ்வளவு சேமிப்பை வழங்கி இருக்கிறோம் எனப் பட்டியலிட்டுக் காட்டினர்.

மனம் திருப்தியடைந்த நீதிபதியும் ஏரியின் நீர் முழுதும் அவர்களுக்கே உரியது என்றும், வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார். அது மடுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது. இதுதாங்க முதலாளித்துவம்.

இந்தக் கதையில் வந்துள்ள விளக்கம் சரியான ஒன்றா?

– ராமன் குட்டி, திருப்பூர்.

விளக்கம்: மேற்சொன்ன கதை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. எளிமைப்படுத்தியதில் பல உண்மைகள் விடுபட்டுள்ளன. பொதுச் சொத்தாக உள்ள தண்ணீர் விற்பனைப் பண்டமாக மாற்றப்படுவதை நாம் நடைமுறையில் கண்டுள்ளோம். பல பொதுக் குடிநீர் திட்டங்களும் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களால் மக்களின் அலைச்சல் குறைந்து பலன் கிடைப்பதைப் பார்க்கிறோம். மனிதனின் இயல்பே தான் சந்திக்கும் சிக்கல்களுக்குப் புதுமையான தீர்வுகளை நாடுவதுதான்.

மலைக்கு மேல் உள்ள ஏரியில் இருந்து நடந்து சென்று தண்ணீர் எடுக்கும் பலருக்கும் சுரங்கம் வெட்டும் எண்ணம் தோன்றும். செயலாக்குவற்கான மூலதனத்தை யார் செலுத்துகிறாரோ அவர்தான் முதலாளியாகிறார். ஒருவரால் சுரங்கம் வெட்ட முடியாது, அதற்கான தொழிலாளர்களை அமைதி வேலை வாங்குகிறார். சுரங்கம் வெட்டவும், பராமக்கவும் செலுத்தப்படும் உழைப்பும், அதற்கு நியாயமான கூலி என்ன வழங்கப்பட்டது என்பதும் கதையில் இல்லை.

தேவைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் முதலாளித்துவத்தின் பங்கை யாரும் மறுப்பதில்லை. ஆனால், உற்பத்திப் பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவது மேற்சொன்ன அடிப்படையில்தானா?

தண்ணீர் என்ற பொதுவான வளத்தை விற்பனைச் சரக்காக ஆக்கினால் என்ன நடக்கும் என்பதை ஒரு நடைமுறை உதாரணத்தோடும் பார்க்கலாம். 2006-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாகத் தனியார் முதலீட்டோடு அமலுக்கு வந்தது திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டம். கிராமப்புற மக்களுக்கு 1,000 லிட்டர் தண்ணீர் ரூ.3; நகர்ப்புற மக்களுக்கு ரூ.4.50 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. பத்தாண்டுகளில் இந்தக் குடிநீர் கட்டணம் ரூ.21 ஆக உயர்ந்துள்ளது. அதில் ரூ.7.50 மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசு ரூ.13.50 கொடுக்கின்றன. அரசு செயல்படுத்தும் குடிநீர் திட்டங்களில் கட்டணம் உயரவில்லை என்பதையும் இணைத்து நோக்கினால் மேற்சொன்ன கதை தவறவிட்டுள்ள உண்மைகள் புரிபடும்.



%d bloggers like this: