என்.சிவகுரு
மருந்து துறையில் பல உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா நல்ல முன்னேற்றம் (குறிப்பாக உற்பத்தியில்) அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி நாம் துவக்கத்திலேயே சொல்வதினால் இந்தியா தன்னிறைவு அடைந்து விட்டதாகவோ, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது என்றோ தீர்மானித்து விட முடியாது. இந்தியாவில் ஒப்பீட்டுளவில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்கான அடிப்படை காரணம் 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காப்புரிமை சட்டம் தான்.
1970 ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் அமலான பிறகுதான் இந்தியாவில் வர்த்தக போட்டி ஏற்பட்டு, அதுவரையில் கொள்ளை லாபமீட்டிய பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து சாமானிய மக்கள் கூட மருந்து வாங்கும் நிலை உருவானது.
ஏராளமான இந்திய நிறுவனங்கள் (தனியார்) மருந்து உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட துவங்கின. இதனூடே, ஏற்றுமதியும் அதனால் உலக சந்தையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் போட்டியை கொடுத்தன. இதனால் பல நாடுகளில் இந்திய மருந்துகள் (வணிக பெயரில்லாத ஜெனரிக்) அமோக வரவேற்பை பெற்றது. இது பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒரு பெரிய தடையாகவும் ,கண் உறுத்தலாகவும் இருந்தது.
வந்தது உலகமய சூறாவளி:
உலகமயம் எனும் பொருளாதார சூறாவளியும் அதன் தாக்கமும் 1990 களில் துவங்கியது என்பதும் அதனால் நாடு சந்திக்கும் பல்துறை பிரச்சினைகளின் தன்மையை பற்றி நாம் அறிவோம். மற்றைய துறைகளில் இருப்பது போல் அல்லாமல் மருந்து துறையில் ,மேலும் காப்புரிமை சார்ந்த பல அறிவியல், விஞ்ஞான விஷயங்களில் கூட அது நமது சுயசார்பை பாதிக்கின்றது. இன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் காப்புரிமையை பன்னாட்டு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதன் காரணமாக மறைமுகமாக ராயல்டி எனும் நவீன கப்பம் செலுத்த வேண்டியுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக இந்தியாவின் முன்னணி செல்போன் தயாரிப்பாளாரான மைக்ரோமெக்ஸ் ( MICROMAX) புது வகை செல்போன்களை அறிமுகப்படுத்தியபோது, பன்னாட்டு நிறுவனமான எரிக்சன் ( ERICSSON) தன் தயாரிப்புகளை போல் உள்ளது என்றும் அதற்கான ராயல்டியை தர வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் தன்னுடைய உற்பத்தியை நிறுத்தி கொள்ள வேண்டும் அல்லது தன்னோடு இணைந்து தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் அவசியம் என சொன்னது. அதற்கு ஏற்றாற் போல் தீர்ப்பு வரும் முன்னரே இரு தரப்பு கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகமய சூறாவளியின் ஓர் உதாரணம் இது. இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம் .
மோடி அரசின் களவாணித்தனம்:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அப்பட்டமான தீவிர தாராளவாத, பொருளாதார கொள்கைளை அமல்படுத்துவோம் என்று உறுதி பூண்டுள்ளது. அதற்காக பல சாகசங்களை அந்த அரசு திட்டமிட்டு செய்து வருகின்றது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் மோடி அங்குள்ள கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவில் வந்து தொழில் துவங்க அழைப்பு விடுக்கின்றார். தன் அரசின் கனவு திட்டங்களை அனைத்து முதலாளிகளையும் அழைத்து விவரிக்கின்றார். அவருடன் செல்லும் இந்திய பெரு நிறுவனங்கள் பல இரு தரப்பு ஒப்பந்தங்களை கையெழுத்திடுகின்றன. இவரும் பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து இங்கு வந்து தொழில் துவங்க தேவையான உதவிகள் என்ன, எந்த சட்டங்களை திருத்தியமைக்க வேண்டும் , எந்த கட்டுப்பாடுகளை தளர்த்திட வேண்டும் என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய வர்த்தக சுரண்டலுக்கு வழி வகுக்கிறார்.
இப்படியெல்லாம் செய்து கொண்டே, தன் அரசின் மிக முக்கிய வலதுசாரி பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதற்கான வேலைகளையும் வேகமாக சேர்ந்தே செய்கின்றார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடித்த அதே அமெரிக்க சார்பு நிலை கொள்கைகளை சிறிதளவு கூட மாற்றாமல் அப்படியே, நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஓபாமா வருகைக்கு முன்னதாக அமெரிக்க வர்த்தக குழு ஒன்று நம் நாட்டிற்கு வந்தது. அக்குழுவில் மிக முக்கியமாக அந்நாட்டின் முன்னணி மற்றும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மருந்து நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் வருகையின் அடிப்படையே, இந்திய காப்புரிமை சட்டத்தில் ஒரு தலை கீழ் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.
அமெரிக்க பெருமுதலாளிகள் சொன்ன யோசனையை மோடி அரசு மறுக்குமா? இதற்கென ஒரு திட்டம் உருவாகியது. அதன்படி இந்தியாவில் அறிவு சார் சொத்துரிமை சட்டத்தில் சில விதிகளில் மாற்றம் செய்தால்தான் நம் வர்த்தகம் பெருகும் எனும் பொய்யை சொல்லி, என்ன மாற்றங்கள் வேண்டும் என்பதை பரிந்துரைக்க ஒரு சிந்தனை குழுவை (THINK TANK) நியமித்துள்ளது. இங்கிருந்து அவர்களின் அரசியல் சாகசங்கள் துவங்குகின்றது.
என்ன தைரியம்?
காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே, காப்புரிமை சட்டத்தில் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வந்தபோது திருத்தங்கள் கொண்டு வந்து, இன்னும் நம் நாட்டின் சுய சார்பை பாதுகாத்தது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் என்பதை மறந்து விட இயலாது. இந்த திருத்தங்களை முன்மொழிவதற்கும் ,அமல்படுத்துவதற்கும் பெரும் போராட்டங்களை நடத்திட வேண்டியிருந்தது.
அதற்கு பிறகு பல்வேறு கட்டங்களில் பல திருத்தங்கள் கொண்டு வர கொல்லைப்புற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் கடும் எதிர்ப்பு வந்ததால் அவையனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. ஆனாலும் தங்களின் கார்ப்பரேட் விசுவாசத்தை பல வடிவங்களில் காட்டினர். இறுதியாக தங்கள் ஆட்சியின் இறுதி கட்டத்தில் அறிவுசார் சொத்துரிமை குறித்து ஒரு விரிவான அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை நியமித்தது. அதில் இடம் பெற்றவர்களின் முக்கியமானவர்கள் ஓரளவுக்கு அந்த துறை சார்ந்த அறிவு பெற்றவர்கள்.
மோடி ஆட்சி ஒரு தலைகீழ் மாற்றத்தை அதில் உருவாக்கியது. பழைய குழுவை கலைத்து புதிய குழுவை உருவாக்கியது. அதில் இணைக்கப்பட்டவர்கள் கார்ப்பரேட் விசுவாசிகள். நாட்டின் சுய சார்புக்கு எதிரானவர்கள். குழுவின் இடம் பெற்றுள்ள ஒருவர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உறவினர். அவருக்கும் அறிவு சார் சொத்துரிமைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. பிரதிபா சிங் எனும் மற்றொரு உறுப்பினர் பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அறிவு சார் சொத்துரிமை வழக்குகளில் ஆஜராகும் பெரும் செல்வாக்கு படைத்த வழக்கறிஞர். இந்தியாவில் குறிப்பாக குஜராத்திலிருந்து மருந்து உற்பத்தி செய்யும் கெடிலா கம்பெனியின் உரிமையாளர் உன்னத் பண்டிட் மற்றுமொருவர். இப்படி இந்த குழுவே உண்மையான மக்கள் தேவையை , சுயசார்பைப் பிரதிபலிக்காத ஒரு கூட்டம்.
மருந்து துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் முக்கிய அதிகாரியே இதை ஒப்புகொள்கிறார் எனில், இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் யார் நலனை சார்ந்திருக்கும் என்பதில் நமக்கு இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.
காப்புரிமை சிக்கல்கள்:
தற்போது நடைமுறையில் உள்ள 1970 ஆம் ஆண்டு சட்டத்தை மாற்ற துடியாய் துடிக்கும் மோடி அரசு ஒரு பக்கத்தில் மருந்து துறையிலும், வேறொரு பக்கத்தில் கனரக, மென்பொருள், தொழில் நுட்ப சாதனங்கள், வலைதளங்கள் என சகலத்திலும் கை வைக்க துடிக்கிறது என்றே தெரிகிறது. மருந்து துறையில் ஏற்படும் விவகாரங்களை முன்னுதாரணமாக கொண்டு அடுத்தடுத்து தொடரலாம் எனும் கருத்தோட்டம் நிலவுவதாக தெரிகிறது.
ஹெபடைடிஸ் சி எனும் வகை நோய் தாக்குதல் மிக மோசமானது. அது மரணத்தை நோக்கி இட்டுச்செல்வதாகும் . அந்நோய்கான மருந்தை பன்னாட்டு நிறுவனமான கில்லேட் உருவாக்கியுள்ளது. சோவோஸ்பிர் எனும் அந்த அடிப்படை மருந்தை தற்போது நம் நாட்டில் உள்ள காப்புரிமை சட்டத்தின் 3(d) விதியின்படி மாற்று வழிமுறையில் தயாரிக்க வாய்ப்புள்ளது. அப்படி செய்யப்பட்டால் விலை குறைவாக கிடைக்கும். அப்படி கிடைத்தால் நோய் பாதிப்படைந்த அனைவருக்கும் அது பலனாக அமையும்.
லாபம், லாபம், மேலும் லாபம் என்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ள கார்ப்பரேட்டுகள் இதை ஏற்பார்களா? காப்புரிமை பதிவு அலுவலகம் இருக்கும் டில்லியில் தங்கள் மருந்தை யாரும் எவ்வழியிலும் தயாரிக்க கூடாது என்றும், தங்களை தவிர யாரும் இதை வர்த்தகம் செய்ய கூடாது எனவும் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. விந்தை என்ன தெரியுமா? வழக்கை போட்டவர் வேறு யாருமல்ல….. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிந்தனை குழுவின் உறுப்பினரான பிரதிபா சிங் . இதை விட கொடுமை வேறு இல்லை.
ஒரு பக்கம் ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் வர்த்தகம் சார் அறிவு சார் சொத்துரிமை திட்டங்களை அமல்படுத்த இந்தியாவை கடுமையாக அழுத்தம் கொடுக்கின்றது. மறு புறத்தில் உலக மருந்து லாபியின் முக்கியஸ்தர்களான அமெரிக்க நிறுவனங்கள் சட்டங்களை தலைகீழாக மாற்ற துடிக்கின்றனர். மோடி அரசு இந்த இரண்டு திட்டங்களுக்கும் பச்சை கொடி காட்டுகின்றது.
இந்திய நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ள போதிலும் எவ்விதமான அசைவையும் அரசு செய்யாமல் இருக்கின்றது.. காரணம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். இந்திய காப்புரிமை சட்டம் திருத்தப்பட வேண்டும்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைய பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருவது இப்போது பொது வெளியின் விவாதத்திற்கு வந்த பிறகும் கூட அரசு தன் அடிப்படை நிலையை மாற்றி கொள்வதாக இல்லை. அரசின் சார்பாக சட்ட திருத்தத்தை ஆதரித்து அதிலும் குறிப்பாக 3(d) எனும் மிக முக்கியமான விதியை மாற்றினால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என தொடர்ந்து வலியுறுத்தும் விதமாக உலகமயத்தை ஆதரிக்கும் சிலரை வைத்து பேச வைக்கின்றது, ஊடகங்களின் மூலமும் பதிய வைக்கின்றது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி உலக தரத்துடன் இணைந்தவாறு நம் நாட்டு காப்புரிமை சட்டம் இருந்தால்தான் நம்மால் சாதிக்க முடியும் என்று சொல்லுகின்றார். இது போதாதா? இந்தியாவின் பல நாளேடுகளில் இப்படி பிரதமர் பேசியிருப்பது சுயசார்புக்கு நல்லதல்ல என தலையங்கமே எழுதியுள்ளது. ஆனாலும் என்ன…..அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த மருந்து கம்பெனிகளின் அதிகார மையங்கள் அவர்கள் நாட்டின் வர்த்த்க பிரதிநிதியிடம் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி நம் நாட்டை முன்னுரிமை கண்காணிப்பு பட்டியலில் வைக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகள் பல்வேறு நாடுகளின் 90% தேவையை நிரப்பும் பணியை தொடர்ந்து செய்து வருவதையும் அந்நாடுகளில் தங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை எனும் கோபம் ஒரு புறம், அப்படியே புதிய மருந்துகளை இங்கேயே விற்க முயற்சிக்கும்போது, சட்டங்கள் வலுவாக இருப்பதாலும், நீதிமன்றங்களின் அனாவசிய தலையீடுகள், வர்த்தகத்தை முற்றிலும் தடுக்கும் தீர்ப்புகள் என்று பெரும் முதலீடுகளை வழக்குகளுக்கே செலவிட வேண்டியுள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வினை நோக்கி செல்லவே சட்ட மாற்றம்.
தரம் எனும் ஆயுதம்
இந்திய நிறுவனங்கள் உலகின் பல நாடுகளின் தங்களின் வர்த்தகத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதும், பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம் சரிவதும் பிரச்சினையாக உருமாற எப்படி இவர்களை முடக்குவது எனும் யோசனையில் இறங்கிய கம்பெனிகள் தங்கள் அதீத ஆற்றலை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களை ஒட்டு மொத்தமாக வாங்க துவங்கினர். இது ஒரு கட்டம் வரை சென்றது. நிலையான வியாபாரத்தையும் இந்திய சந்தையை பற்றியும் ஆழ்ந்த அறிவை அளித்தது. ஆனாலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை.
அடுத்த கட்டமாக மற்றொரு முறையை கையாண்டனர். உலக அளவில் மருந்துகள் தரம் பற்றி சொல்லும் போது அமெரிக்காவின் தரக்கட்டுபாடுதான் சிறந்தது எனும் விஷயத்தை கொண்டு இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளில் தரம் இல்லை என்றும், முறையாக சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை எனும் பொய் காரணத்தை சொல்லி வர்த்தகத்தை முடக்கினர். தங்கள் நாட்டு மக்களுக்கு இந்திய மருந்துகளால் ஆபத்து என்று வாதத்தை எழுப்பி சில பொது நல அமைப்புக்களின் மூலம் அமெரிக்காவின் நீதிமன்றங்களில் வழக்கு போட வைத்தனர் . இவ்வழக்குகளுக்கு செலவிட முடியாமலும், பெரும் தொகையை இழந்த பல நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை ஏற்றுமதி செய்வதையே நிறுத்தினர்.
இதுவும் போதாது என்று தற்போது அமெரிக்காவின் தரக்கட்டுப்பாட்டு அலுவலகம் இந்தியாவில் திறக்கப்பட்டு அடிமடியிலேயே கைவைத்து விட்டனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், குறிப்பாக உலகையே அச்சுறுத்தும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு மிக குறைந்த விலையில் கிடைக்க வைத்தது காப்புரிமை சட்டத்தால் ஏற்பட்ட சாதனைகள். அது இன்று ஒரு கேள்வி குறியாக மாறியுள்ளது.
தரம் இல்லாமலா நாம் சாதனைகள் செய்துள்ளோம்? அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் இத்தனை அட்டூழியங்கள் நடக்கின்றது. அரசின் துணையோடு நல்லாசியோடு முடக்கப்படுகின்றது.
நமது பாரம்பரியம்:
உலகமயமாக்கலுக்கு பிறகும் கூட, நாம் ஒரு சமச்சீரான நிலையைத்தான் கடைபிடித்து வந்துள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்குவது, காப்புரிமை அடிப்படைகளை பாதுகாப்பது, மக்கள் வாங்கும் சக்திக்கேற்ப முடிவுகளை எடுப்பது, நல்வாழ்வுக்கான உரிமையை நிலைநாட்டுவது என தன்னகத்தே பல நல்ல அம்சங்களை கடைபிடித்து வருகின்றது.
முதலாவதாக இந்திய காப்புரிமை அலுவலகம் கடுமையான தகுதி ஆய்வு செய்கிறது. இரண்டாவதாக, மக்கள் நலன் மற்றும் தேவையை கணக்கில் கொண்டு கட்டாய லைசென்சிங் முறையை கொண்டு அனுமதியும், மூன்றாவதாக, இந்திய நீதிமன்றங்கள் காப்புரிமை அமலாக்கத்தில் ஏற்படும்சாதக பாதகங்களை கணக்கில் கொண்டு தேவையை தீர்மானிக்கிறது, இறுதியாக இந்திய வர்த்தக பிரதிநிதிகள் (அமைச்சக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்) கட்டுபாடற்ற வர்த்தக ஒப்பந்தங்களை அறிவுசார் சொத்துரிமை விஷயங்களில் ஏற்று கொள்வதில்லை எனும் கொள்கையை நிலையாக பின்பற்றி வருகிறது. ஆனால் இன்றோ எல்லாம் தலை கீழ் மாற்றத்தை நோக்கி. காரணம் பிஜேபியின் கொள்கை நிலை.
மேற்கண்ட கொள்கை முடிவுகள் உருவானதற்கு மிகப்பெரிய அடிப்படையாக இருந்தது மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றதிலும், பொதுவெளியிலும் தொடர்ச்சியாக நடத்திய இயக்கங்களும் உரிய நேரத்தில் செய்யப்பட்ட தலையீடுகளும்தான் என்பதை நாடறியும். பிப்ரவரி மாதம் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் நம் நாட்டிம் சுயசார்பை கேள்வி குறியாக்கும் காப்புரிமை சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படகூடாது என்று சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
முழு சுரண்டல்
மருந்து துறை மட்டுமல்லாமல் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பல பொருட்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமையை எப்படி பெற்று கொள்கிறது என பட்டியலிட்டால் நமக்கு அதிர்ச்சி ஏற்படும். ஆனால் நாம் அதை இதுநாள் வரையில் பெரிதாக எடுத்து கொள்ளாமல் போனதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் இன்று நம் அன்னிய செலாவணி எப்படி யெல்லாம் காப்புரிமையாக செல்கிறது என்பது புலப்படும்.
ஒரு சிறு உதாரணத்தை பார்ப்போம். இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களாக உள்ள ஹீரோ ஹோண்டா நிறுவனம் ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் தயாரித்தது. அவர்களின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எரிபொருள் பயன்பாட்டை குறைத்து எடை குறைவாக உள்ள மோட்டார்கள் உருவாக்கப்பட்டு இந்திய சாலைகளுக்கு ஏற்ப சந்தைக்குள் வந்தது. அதேபோல் ஜப்பானின் சுசுகி நிறுவனம் மற்றொரு பெரிய குழுமமான டிவிஎஸ்ஸுடன் கூட்டு தயாரிப்பை துவங்கியது. இன்று அந்நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக பார்த்தால் முழு இந்திய நிறுவனங்கள். ஆனால் இன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சாலைக்கு வரும் ஒவ்வொரு வண்டிக்கும் காப்புரிமைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து கொண்டுதான் இருக்கின்றன என்று நினைக்கும் போது எவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு என எண்ணி பார்ப்போம்.
இது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் நாம் அறியாமல் கொடுக்கும் தொகையை யோசித்தால் நாம் எப்படியெல்லாம் சுரண்டப்படுகின்றோம் என்பது புரிய வரும்.
இப்போது கூட நாம் கணிணி துறையில் மிக பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளோம் என்றும், பல சாதனைகள் புரிந்துள்ளோம் என்று சொல்லப்படுகின்றது. சென்ற மாதம் அமெரிக்கா சென்ற நமது பிரதமர் மோடி புகழ் பெற்ற சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று பல முக்கிய மென்பொருள், கணிணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க வேண்டும், கிராமங்களில் கூட அகண்ட அலைவரிசை சேவை கிடைக்கப்பெற ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் .அதை ஏற்றுக்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் போட்டியில் ஈடுபடும். அப்படி அமையும் பட்சத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உட்பட பல கம்பெனிகள் மறைமுக கொள்ளை சுரண்டலில் லாபமீட்டும்.
அதேபோல இப்போது நம்மில் அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப் (WHATS APP) முகநூல் (FACEBOOK) உட்பட பல சமூக வலைதளங்களை இலவசமாக பயன்படுத்துகிறோம். ஒரு நிமிடம் யோசிப்போம். இவைகளை காப்புரிமை வட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்னவாகும்? அப்படி ஆவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை என்பதைத்தான் இன்று நடக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் காட்டுகின்றன.
வர்த்தக ரீதியான சுயசார்பை முடக்கி காலம் முழுதும் பொருளாதார அடிமைகளாக நம்மை மாற்றும் ஒரு திட்டம்தான் காப்புரிமை மாற்றமும். அதனால் ஏற்படவுள்ள விளைவுகளும், எனும் கருத்தோட்டதை நாம் இன்று மக்களிடத்தில் உணர்த்த வேண்டிய மிக முக்கிய தேவை உள்ளது.
இன்று மருந்து துறையில் அதிலும் குறிப்பாக சுயசார்போடு மருத்துவம் எனும் கொள்கையில் கியூபா உலகுக்கே வழிகாட்டியாக திகழ்கின்றது. பல உயிர் கொல்லி நோய்களுக்கு தங்களின் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி புது வகை மருந்துகளை உருவாக்கியுள்ளனர். அதை தேவைப்படும் நாடுகளுக்கு குறைந்த விலையில் தருவோம் எனவும் அந்நாடு சொல்லியுள்ளது. ஒரு புது கண்டுபிடிப்பு மனிதகுலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டால் அது சமூக மேன்மைகாகவென்றே என்று கொள்ளுதல் அவசியம்.
இதை விட விவசாயத்தில் கூடுதல் பாதிப்புகளை காப்புரிமை சட்டத்தின் மாற்றங்கள் ஏற்படுத்தும் என்பதும், அதனால் நம் நாட்டு விவசாயம் எப்படி நலிவடைந்தது என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. .விதைகள் துவங்கி, பூச்சி கொல்லி மருந்துகள் உட்பட நாம் சுயசார்பை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டது என்பதை அறிவோம். இப்படி சகல துறைகளில் காப்புரிமை எனும் சட்டவிதி மூலம் நம்மை அடிமையாக்க முயற்சி நடைபெறுகின்றது என்பதை விரிவாக பிரச்சாரம் செய்திடல் அவசியம்.
இறுதியாக சென்ற வாரம் ஹைத்ராபாத்தில் இயங்கி வரும் ஜிவிகே நிறுவனம் நடத்தும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு விவகாரத்தில் அந்நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு முறைகேடு சம்பந்தமாக தகவல் வெளிவந்துள்ளது. அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் ஒரு புது தகவலை வெளியிட்டார். பொதுவாக இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் (ஜெனரிக்) அதாவது வர்த்தக பெயரில்லாத மருந்துகள் ஏற்றுமதிக்கு முன்னதாக கடுமையான தரக்கட்டுப்பாடிற்கு உள்ளாக்கப்படும். அப்படி தரசான்றிதழ் வழங்கப்பட்ட மருந்துகள் மட்டுமே அந்தந்த நாடுகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இதில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் எழும்பும். மறையும். ஆனால் இப்போது அந்த ஊழியர் வெளியிட்டுள்ள தகவலின்படி ஏற்பட்டுள்ள சிக்கலால் அமெரிக்க தரக்கட்டுப்பாடு நிறுவனம் இனிமேல் பொறுப்பதிற்கில்லை;காப்புரிமை சட்டம் மாற்றியிருந்தால் இப்படி சிக்கல் எழுமா? என்று நீட்டி முழக்கி அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி அதிவேகமாக காப்புரிமை சட்டமாற்றத்தை கொண்டு வர பல்துறை கார்ப்பரேட் முதலாளிகள் அமெரிக்காவின் துணையோடு எடுக்கும் முயற்சிகளை அனைத்து தளங்களிலும் விவாத பொருளாக்கி இந்திய சுயசார்பை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்பதை கவனத்தில் கொள்வோம். .
சிவப்பு கம்பள வரவேற்பு:
மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் சுமார் 334 கூட்டு மருந்துகளை (COMBINATION DRUGS) தடை செய்யபட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடையை பற்றி விளக்கும் போது, உலக அளவில் இது போன்ற கூட்டு மருந்துகள் இல்லை என்பதாலும், மேலும் இந்தியாவும் உலகதரத்துடன் ஒப்பீட்டு அளவில் இருப்பது அவசியமாக இருப்பதாலும், மக்களின் உயிருக்கு இம்மாதிரியான மருந்துகள் கேடு விளைவிக்கும் என்பதாலும்தான் இந்த அறிவிப்பு என்று சொன்னாலும், இதற்கு பின்னால் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருக்கிறது என்பதை சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. காரணம், இந்திய தன்மைகளுக்கேற்ப இந்திய நிறுவனங்கள் முறைப்படி இந்திய மருந்து கட்டுப்பாடு துறை மூலமாக சந்தையில் மருந்துகளை உற்பத்தி செய்யவும் மற்றும் வர்த்தகம் செய்யவும் அனுமதி பெறுகின்றன. இந்த மாதிரியான கூட்டு மருந்துகள் ஏதோ இப்போதுதான் தங்களின் கவனத்துக்கு வந்ததை போலவும், வெறும் 344 மருந்துகள்தான் தடை செய்யப்படவேண்டியதை போலவும், வேறு மருந்துகள் அனைத்தும் முறையாக இருப்பதை போலவும் ஒரு தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
ஒருபக்கம் தடை, மறு பக்கம் நீதிமன்ற தடையாணை பெறுவது என இரட்டை நிலைக்கு அடித்தளமிடுபவர்களும் இவர்கள்தான். உண்மையிலேயே நிலை என்னவென்றால் இந்தியாவின் கிராமப்புற மருந்து சந்தையை பன்னாட்டு நிறுவனங்களால் பெரிய அளவுக்கு ஊடுருவ முடியாமல் தவிக்கின்றனர். காரணம் இந்திய நிறுவனங்கள் தங்களின் கோட்டையாக இந்த சந்தையை வைத்துள்ளது ஒரு பெரிய தடையாக இருப்பதால் இந்த மருந்துகளுக்கு தடை விதித்தால் நாம் நேரிடையாக அந்த இடத்தையும் ஆக்கிரமித்து மேலும் லாபம் ஈட்டலாம் எனும் ஏற்பாடுதான் இந்த தடைக்கான ஊற்றுக்கண் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் சத்தமில்லாமல் மோடி அரசு ஜெனரிக் மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய, இனிமேல் கட்டாய லைசென்சிங் திட்டம் இருக்காது என அறிவித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற விற்பனைக்கு வழி வகுத்துள்ளது என்பதும் மேலும் பல தலைகீழ் மாற்றங்களை இந்திய மருந்து துறையில் உண்டாக்கும் என்பது உறுதி. இந்த மக்கள், தேச விரோத கொள்கைகளை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவதே நம் தேச பக்த கடமையாகும்.
Leave a Reply