மத்திய பட்ஜெட் 2016 – 17: ஏமாற்றுவித்தை பொருளாதாரம் தொடர்கிறது


 

வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெயட்லி  பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் .தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் என்று பல ஆலோசனைகள் பெருமுதலாளிகள் சார்பாக முன்வைக்கப்பட்டன, பொதுவாக அவை அனைத்துமே (இதுவும் வழக்கம் போல்தான்!) உணவு எரிபொருள் மற்றும் உர மானியங்கள் வெட்டப்படவேண்டும், பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்கப்படவேண்டும், கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள் தரப்படவேண்டும் என்ற பாணியில் இருந்தன. ஓரிருவர் அரசு முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்ன பொழுதும், இதற்கான வளங்களை வரி விதித்து திரட்டக்கூடாது என்றும் மானியங்களை வெட்டியே வளங்கள்  திரட்டப்படவேண்டும் என்றும் கூறினர். ஜெயட்லியின் பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதாகவே, பெருமுதலாளிகள் மற்றும் அந்நிய நிதி மூலதனத்தை தாஜா செய்வதாகவே அமைந்துள்ளது.

வரி விதிப்பு: வரி ஏய்ப்போருக்கு அழைப்பு

பா.ஜ.க. அரசின் மூன்றாம் பட்ஜெட் இது. ஆட்சிக்கு வரும் முன்பு தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் வங்கி கணக்குகளிலும் வேறுவகைகளிலும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு திருப்பிக் கொணர்ந்து ஒவ்வொரு வாக்காளர் வங்கி கணக்கிலும் பல லட்சம் ரூபாய் போடுவதாக வாக்குறுதி மோடி துவங்கி அனைத்து பா ஜ க தலைவர்களும்.தேர்தல் மேடைகளில் உரக்க முழங்கினர். ஆனால் தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே அடிக்கடி நம்மை எல்லாம் பாகிஸ்தானுக்குப் போகச் சொல்லிவரும் பா ஜ க தலைவர் அமீத் ஷா இந்த வாக்குறுதியின் குட்டை உடைத்துவிட்டார். ஒரு பேட்டியில், தேர்தலில் தரப்பட்ட இந்த வாக்குறுதி “ஜூம்லா” தான் – அதாவது, ஒரு பேச்சு வழக்காக சொல்லப்பட்டதுதான் –இதையெல்லாம் அமல்படுத்த முடியாது என்று மிகத் தெளிவாக கூறிவிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அமீத் ஷாவிற்கு ஒருபடி மேலே போய், ஜெய்ட்லி அவர்கள், மறைத்த பணத்தை அரசிடம் ஒப்புக் கொண்டுவிட்டால், அந்த தொகையில் நாற்பத்தி ஐந்து சதமானம் வரியாக  கட்டினால் போதும். மீதி பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளலாம். உங்கள் மீது எந்த வழக்கும் தொடரமாட்டோம், நீங்கள் சட்டத்தை மீறி, அதனை ஏமாற்ற முயன்றதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். நீங்கள் வருமானத்தை வேண்டுமென்றே மறைத்துள்ள போதிலும் உங்களை தண்டிக்க மாட்டோம்.’ என்று பொருள்பட தனது பட்ஜெட் உரையில் கருப்பு பணக்காரர்களை அன்புடன்  அழைத்துள்ளார்.

தனி நபர் வருமானத்தின் மீது வரி விதிப்பை பொறுத்தவரையில் பட்ஜெட் பெரிதாக மாற்றம் செய்யவில்லை. ஆனால் ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப்படவேண்டும் என்று கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜெயிட்லி, தனது மூன்றாவது பட்ஜெட்டிலும் அதை செய்யவில்லை.  அதேசமயம், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து பணம் அவர்கள் எடுக்கும் பொழுது அதை வருமானமாக கருதி அதன் மீது வரி விதிக்கப்படும் என்று முன்மொழிந்திருப்பது உழைப்பாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

மொத்தத்தில், நேர்முக வரியான, கொடுக்கும் திறன் அடிப்படையிலான,  வருமான வரி தொடர்பாக பட்ஜெட் முன்மொழிவுகளின்படி அரசுக்கு 1000 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று ஜெயிட்லி கூறியுள்ளார். மறுபுறம், சாதாரண மக்கள் மீது கடும் சுமையாக உள்ள மறைமுக வரிகள் –கலால் வரி, சுங்க வரி, சேவை வரி- ஆகியவை தொடர்பான பட்ஜெட் முன்மொழிவுகளால் அரசுக்கு ரூ 20,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் பட்ஜெட் உரை கூறுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. 2015 – 16 பட்ஜெட்டில் கார்ப்பரேட் வருமான வரி, தனி நபர் வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி ஆகிய வரி இனங்களின் மூலம் அரசுக்கு எவ்வளவு வரி வருமானம் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஜெயிட்லி கொடுத்தார். இம்முறை தனது பட்ஜெட் உரையில் இவ்வரி இனங்கள் மூலம் கிடைத்துள்ள வருமானம் பற்றிய திருத்தப்பட்ட மதிப்பீட்டை கொடுத்துள்ளார். அதன்படி, கார்ப்பரேட் வருமான வரி வசூல் பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ 18.000  கோடி குறைவாகவும் தனி நபர் வருமான வரி வசூல் ரூ 28,000  கோடி குறைவாகவும் தான் இருக்கும் என்று பட்ஜெட் உரை தெரிவிக்கிறது. ஆக மொத்தம், செல்வந்தர்களிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தில் அரசுக்கு விழுந்துள்ள துண்டு 46,000 கோடி ரூபாய். ஆனால், கலால் வரி மூலம் பட்ஜெட்டில் கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டதை விட 55,௦௦௦ கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதன் சூட்சுமம் என்ன? பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணய் விலை பாரெல் ஒன்றுக்கு 130 அமெரிக்க டாலரில் இருந்து 30 க்கு குறைந்த பொழுது  மீண்டும் மீண்டும் கலால் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலை குறையாமல் மத்திய அரசு பார்த்துக்கொண்டது. இதனால் அரசுக்கு கலால் வரி வருமானம் பட்ஜெட் மதிப்பீட்டை விட பெருமளவு கூடியுள்ளது. அதாவது, அரசின் மொத்த வரிவருமானத்தில் மக்களை வாட்டி வதைக்கும் மறைமுக வரிகளின் பங்கு கணிசமாக கூடியுள்ளது. ஆனால் செல்வந்தர்கள் தர வேண்டிய வரி வருமானம் உரிய அளவு வரவில்லை.

சென்ற ஆண்டு ஜெயிட்லி தனது பட்ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். நூறு டாலர் சீமான்கள் கையில் தலா 1 பில்லியனுக்கு அதிகமாக சொத்து குவிந்துள்ள நாடு நமது இந்தியா. அதாவது, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ 7000 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்து வரி வேண்டாம், வாரிசு வரி வேண்டாம், வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர். அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65% க்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன. (தீப்பெட்டி வாங்கும் பொழுதும் மண்ணெண்ணய் வாங்கும் பொழுதும் எந்த ஒரு பொருளையோ சேவையையோ வாங்கும் பொழுதும் சாதாரண மக்கள் மறைமுக வரி கட்டுகின்றனர். இந்த வரி வாங்கும் பொருளின் விலையில் ஒளிந்திருப்பதால் மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரிகள் அம்பானிக்கும் ஒன்றுதான் ஆண்டிக்கும் ஒன்றுதான். ஏழைகளின் வருமானம் குறைவாக இருப்பதால், ஏழைகள் மீது இவை பெரும் சுமையாக ஆகின்றன. செல்வந்தர்களுக்கு இது ஒரு கொசுக்கடிதான்.)

வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, பட்ஜெட் வரி தொடர்பான சச்சரவு அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம்  தீர்த்துக் கொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அரசின் வரவு-செலவு கொள்கை   

மத்திய பட்ஜெட் என்பது அடிப்படையில் மத்திய அரசின் ஒரு ஆண்டுக்கான வரவுகள் மற்றும் செலவுகள் பற்றிய மதிப்பீடுகள் தரும் அறிக்கை. இதன் அடிப்படையாக இருப்பது நாட்டின் பொருளாதார நிலையும் அரசின் வரவு மற்றும் செலவு தொடர்பான கொள்கைகளும் தான். அரசின் நடப்பு வரவுகளில், வரிகள் தவிர, பொதுத்துறை  நிறுவனங்கள் ஈட்டும் லாபங்கள், மற்றும் அரசு தான் வழங்கும் சேவைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்கள் ஆகியவையும் சேரும். மூலதன வரவு என்பது அரசு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறும் தொகையும் அரசு கடன் வாங்கி பெறும் தொகையும் தான். கடந்த ஆண்டு பட்ஜெட் சமர்ப்பித்த பொழுது பொதுத்துறை சொத்துக்களை விற்று அரசு அறுபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் பெறும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் சுமார் 25,௦௦௦ கோடி ரூபாய்தான் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 56,5௦௦ கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறப்போவதாக பட்ஜெட் கூறுகிறது. இப்படி, பெரும் பன்னாட்டு, இந்நாட்டு கம்பனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டுவதற்குப் பதிலாக, மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனைகிறது அரசு. கடன் மூலம் அரசின் வரவை கூட்டுவதற்கு முதலாளிகளும் பன்னாட்டு மூலதனமும் உலக வங்கி, ஐ.எம்.எஃப். போன்ற அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, தாராளமய கொள்கைகளை பின்பற்றும் மத்திய அரசு வளங்களை திரட்டுவதற்குப் பதிலாக, செலவுகளை குறைப்பதற்கே அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது. இதுதான் இந்த ஆண்டும் நடந்துள்ளது.

அரசின் ஒதுக்கீடுகள்

ஊடகங்களில் அரசு இந்த பட்ஜெட்டில் வேளாண்மை, கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளுக்கு மிகவும் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் ‘வறுமை ஒழிப்பு’ பட்ஜெட் என்றெல்லாம் அபத்தமாக சொல்லப்படுகிறது; எழுதப்படுகிறது. உண்மை என்ன? எல்லா விவரங்களுக்கு உள்ளும் போக முடியாவிட்டாலும் சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

வேளாண்துறைக்கு இந்த ஆண்டு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைப் போல்  இரண்டு மடங்குக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் என்ற தலைப்பின் கீழ் முப்பத்து  எட்டாயிரத்தி ஐந்நூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் விவசாயிகள் செலுத்த வேண்டிய வங்கி கடன் வட்டிக்கு அரசு அளிக்கும் மான்யமும் அடங்கும்.. சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ள இந்த மானியம் கடந்த ஆண்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகத்தின் செலவாக அது காட்டப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கணக்கில் அதே தொகையை விவசாயிகள் நலன் என்ற இனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அவ்வளவுதான் விஷயம். உண்மையில், சென்ற ஆண்டு ஒதுக்கீட்டை விட இந்த ஆண்டு வேளான்துறைக்கான ஒதுக்கீடு சுமார் 33% தான் கூடியுள்ளது. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் உண்மையில் அதைவிட குறைவாகத்தான் அதிகரிப்பு உள்ளது. கடும் வறட்சி, விளை பொருளுக்கு நியாய விலை இல்லை, நாளும் நிகழும் ஏராளமான விவசாயிகளின் தற்கொலைகள் என்ற பின்புலத்தில் பார்த்தால் இந்த ஒதுக்கீடு உயர்வு, நிலவும் வேளாண் நெருக்கடியை எதிர்கொள்ள யானை பசிக்கு சோளப்பொறி என்பதுதான் உண்மை.

அதேபோல் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு முப்பத்தி எட்டாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட சுமார் 10 சதவீதம் அதிகம். ஆனால் சென்ற ஆண்டுக்கான கொடுபடா கூலித் தொகையே பல ஆயிரம் கோடி ரூபாய்கள். அவற்றை கொடுத்த பிறகு மிஞ்சுவது சென்ற ஆண்டை விட பண அளவிலும் உண்மை அளவிலும் குறைவாகவே இருக்கும். அது மட்டுமல்ல. 2009-10 ஆண்டிலேயே இத்திட்டத்திற்கு ,நாற்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்றைய விலைவாசியில் அதன் மதிப்பு ரூ 63,௦௦௦ கோடி ரூபாயாகும். உண்மையில், மக்கள் இடதுசாரிகள் தலைமையில் போராடிப்பெற்ற ரேகா திட்டத்தை   பா ஜ க அரசு தொடர்ந்து வெட்டிச் சுருக்கி வருகிறது. இதை வெளிப்படையாகவே நிதி அமைச்சகத்தின்  2014 நடு ஆண்டு பொருளாதார பரிசீலனை அறிக்கை கூறுகிறது. கல்வி, ஆரோக்கியம், குழந்தைகள் நலன் என்று ஒவ்வொரு சமூக நலத்துறையிலும் இதுதான் கதை. பெண்கள் மற்றும் சமூக நலத்துறையின் ஒதுக்கீடு சென்ற ஆண்டைவிட குறைந்துள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரையில், அரசே மக்களுக்கு மருத்துவ வசதிகளை உறுதிபட அளிப்பதற்குப் பதிலாக, காப்பீட்டு ஏற்பாடுகள் மூலம் மக்கள் தனியார் மருத்துவ மனைகளுக்கு தள்ளப் படுகின்றனர். இதனால் அதிகம் பயனடைவது தனியார் மருத்துவத்துறையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும்தான். அதிலும் கூட ஒதுக்கீடு மிகக் குறைவாகவே உள்ளது. அடுக்களை புகையிலிருந்து பெண்களை விடுவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் அமைச்சர், ஏழை மக்களுக்கு எரிவாயு இணைப்புக்கு வெறும் 2000 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது அரசின் அணுகுமுறையை அம்பலப்படுத்துகிறது. அதே சமயம், உணவு மானியமும், உர மானியமும் இரண்டும் சேர்ந்து 7000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் நாம் வேறு சில அம்சங்களுக்குச் செல்லலாம். .

பட்ஜெட்டும் பொருளாதார வளர்ச்சியும்

தனது பட்ஜெட் உரையில் பன்னாட்டுப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தும் இந்தியா சிறந்த வளர்ச்சி பெற்றிருப்பதாக நிதி அமைச்சர் மார் தட்டிக் கொள்கிறார். உண்மையில் இவர் தரும் வளர்ச்சி விகிதப் புள்ளி விவரங்களைப்பற்றி  அரசின் அங்கமாக செயல்படும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அடிப்படை ஆண்டு மாற்றம், மறைமுக வரிகளைக் கூட்டி சந்தை விலைகள் அடிப்படையில் உற்பத்தி மதிப்பை கணக்கிடுதல், கணக்கிடும் வழிமுறைகளில் பல மாற்றங்கள் இவையெல்லாம் அரசின் வளர்ச்சி “சாதனை”யின் பின்னால் உள்ளன. இவை ஒரு புறமிருக்க, மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, பன்னாட்டு சந்தையில் பெட்ரோலியம் கச்சா எண்ணய் .விலைகள் பெருமளவிற்கு சரிந்ததால், அயல் வர்த்தகத்தில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை பிரச்சினை எழவில்லை என்பதுதான். வரும் ஆண்டில் கச்சா எண்ணய் .விலைகள் உயரக் கூடும் என்பதும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விக்தங்களை உயர்த்த உள்ளது என்பதும் கூடுதல் சவால்களாக அமையும். பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் இந்த வளர்ச்சியின் தன்மை. அரசு தரும் புள்ளிவிவரப்படியே, வேளாண்துறை வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் மிக மந்தமாக உள்ளன. வேலை வாய்ப்புகள் மேலும் சுருங்கி, கடும் வேலையின்மை நிலவுகிறது. விவசாயிகள் தற்கொலை முடிவின்றி தொடர்கிறது. சட்டப்படி ஒவ்வொரு கிராம குடும்பத்திற்கும் ஆண்டுக்கு நூறு நாள் வேலை தர வேண்டிய சட்ட நிபந்தனை இருந்தும் சராசரி ரேகா வேலை நாட்கள் நாற்பதுக்கும் கீழே உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் கூலி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு, வளர்ச்சி பற்றி பேசப்படுகிறது.

இதுமட்டுமல்ல. பன்னாட்டு சூழல் மேலும் மந்தமாகும் என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிடும் அமைச்சர் தனது பட்ஜெட்டில் அரசின் ஒட்டுமொத்த ஒதுக்கீடுகளை போதுமான அளவு உயர்த்தியுள்ளாரா என்றால் இல்லை. மாறாக, அரசின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற தாராளமய தாரக மந்திரத்தை முன்வைத்து முதலீடுகள் உள்ளிட்டு  அரசின் செலவுகள் சுருக்கப்பட்டுள்ளன. நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவுகளில் இருந்து கடன் அல்லாத வரவுகளைக் கழிப்பதால் கிடக்கும் தொகை. இதனை குறைப்பதை இலக்காக ஆக்குவதன் பொருள் என்னவெனில், நாட்டு வளர்ச்சிக்கு அரசு கடன் வாங்கி முதலீடுகளை மேற்கொள்ளக்கூடாது என்பதாகும். முதலீடுகளை லாப நோக்கு அடிப்படையில் முதலாளிகள் செய்யட்டும், தொழிலாளிகளை கட்டுப்படுத்தி, அவர்கள் உரிமைகளை மறுத்து, சட்டம் ஒழுங்கை முதலாளிகள் சார்பாக அரசு பாதுகாக்கட்டும் என்பதுதான் தாராளமயத்தின் அடிப்படை வர்க்க அரசியல். நமது வாதம் அரசு கடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது அல்ல. முறையாக பெரும் கம்பனிகள், செல்வந்தர்கள் மீது வரிவிதித்து வசூல் செய்தாலே, அரசு கட்டமைப்புகளை மேம்படுத்தவும், கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளை வலுப்படுத்தவும் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். அதற்குப் பதிலாக, பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு பெருமுதலாளிகளுக்கு  விற்று தனது செலவுகளை அரசு செய்து கொள்கின்ற தாராளமய அணுகுமுறைதான் பட்ஜெட்டில் தொடர்கிறது. கடந்த ஆண்டிலும் இதேதான் செய்யப்பட்டது. பணக்காரர்கள் மீது வரியும் போட மாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: “ லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு ”

கட்டமைப்பு முதலீடுகள் பற்றி பட்ஜெட் உரை பேசுகிறது. ஆனால், கடந்த ஆண்டு அரசின் மூலதனச்செலவு தேச உற்பத்தியில் 1.8 %  ஆக இருந்தது, இந்த ஆண்டு  1.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பை கட்டும் பாணி பொது – தனியார் இணை பங்கேற்பு (PPP OR PUBLIC PRIVATE PARTICIPATION) என்ற முறையில் நடத்தப்படும். இது பெரிய கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்ட உதவுமே தவிர அரசின் பணம் முறையாக, மக்களுக்குப் பயன் தரும் வகையில் செலவிடப்படுவதை உத்தரவாதம் செய்யாது.

இறுதியாக ஒருவிஷயம். மத்திய மாநில உறவுகளில் கூட்டுறவுப் போக்கை கடைப்பிடிப்பதாக சொல்லிக்கொள்ளும் பா ஜ க அரசு, தொடர்ந்து மாநிலங்களின் வரி வருவாய்களை குறைத்து வருகிறது. வருமான வரிகளில் அரசு செல்வந்தர்களுக்கும் பெரும் கம்பனிகளுக்கும் அளிக்கும் சலுகைகள், மாநிலங்களின் வரி வருமானத்தை பாதிக்கிறது. பதினான்காவது நிதி ஆணையம் பகிரப்படும் வரி தொகையில்  மாநிலங்களின் பங்கை அதிகரித்துள்ள போதிலும், சர்சார்ஜ், செஸ் போன்ற வழிகளில் மாநிலங்களுடன் பகிராத வகையில் மத்திய அரசு தனது வரிப்பங்கை கூட்டிக் கொள்கிறது. திட்ட அடிப்படையிலான மாநில ஒதுக்கீடுகள் குறைந்துள்ளதால், நிகரமாக மாநிலங்கள் பெரும் வரவு தேச உற்பத்தியின் சதவிகிதமாக பார்த்தால் குறைந்து வருகிறது. மாநில முதலாளித்துவ கட்சிகள் இதை எதிர்த்து வலுவாக குரல் கொடுப்பதில்லை.

மொத்தத்தில் “அச்சே தின் “ என்ற நல்ல நாட்கள் கருப்பு பணக்காரர்கள், வரி ஏய்ப்போர், பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பெனிகள், கோடி டாலர் கனவான்கள், அந்நிய மூலதனம் ஆகியோருக்கு மட்டுமே தொடரவுள்ளன.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s