மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …


தமிழில்: இரா.சிந்தன்

இந்தக் கட்டுரையை Pdf கோப்பாக தரவிறக்க இங்கே சொடுக்கவும்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு புரட்சியின் குறிப்பிட்ட கட்டம் முழுமைக்கும், தொலைநோக்கு உத்தி ரீதியான இலக்குகளைக் காட்டும் கட்சித் திட்டம்தான், முக்கியமான அடிப்படை ஆவணமாகும்.

இந்தியாவின் கம்யூனிச இயக்கத்தில், குறிப்பாக விடுதலைக்கு பின்னர், அப்படியொரு திட்டத்தை வடித்தெடுப்பது பற்றி ஒன்றுக்கொன்று வேறுபட்ட, வித்தியாசமான பார்வைகள் நிறைந்திருந்தன. ஆளும் வர்க்கத்தின் அடிப்படைப் பண்புகள், அரசு அதிகாரம் ஆகியவைகளுடன் இந்தியப் புரட்சிக்கான அடிப்படை செயல்திட்டத்தையும், உத்தியையும் உருவாக்கி ஏற்பதற்கான போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளே சுமார் பத்தாண்டுகள் நடந்தது.

விஜயவாடாவில் 1961 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 6 வது அகில இந்திய மாநாட்டில், ஒன்றுபட்ட கட்சிக்குள் ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான கடைசி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு இரண்டு வரைவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன, சமரசம் காண முடியாத வேறுபாடுகள் காரணமாக அந்தத் திட்டங்கள் அலமாரிக்குச் சென்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சிபிஐ(எம்) உருவான பின்னர், 1964 ஆம் ஆண்டில்தான், பம்பாயில் நடைபெற்ற 7 வது மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், கல்கத்தாவில் நடைபெற்ற 7 வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விவாதித்து தங்களுக்கான தனித்தனியான திட்டங்களை ஏற்படுத்தினர்.

மிக நெடிய போராட்டத்திற்குப் பிறகும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடிப்படையான திட்டம், கருத்தென்ற அளவிலேயே தொடர்ந்துகொண்டிருந்தது. இந்த சூழலில், கட்சி பிரிக்கப்பட்டு அவரவருக்கான திட்டங்களை உருவாக்கிக் கொள்வதுதான் அப்போதைய ஒரே தீர்வாக இருந்தது. ஒருவேளை அந்த வேறுபாடுகள் நடைமுறை உத்தி தொடர்பானதாகவோ அல்லது சில கருத்தியல் பிரச்சனைகளில் புரிதலில் வேறுபாடாகவோ இருந்திருந்தால் கட்சிப் பிளவு ஏற்பட்டிருக்காது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் அடிப்படை செயல்திட்ட ஆவணங்களை உருவாக்கி ஏற்றுக் கொண்டு அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு அரசியல் பிரச்சனைகளிலும், குறிப்பிட்ட அரசியல் சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை உத்திகளிலும் இரண்டு கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வர முடிந்துள்ளது. இதுதான் (நமது) இணைந்த செயல்பாட்டுக்கும், இடதுசாரி ஒற்றுமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ(எம்) கடந்த 2000 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தனது கட்சித் திட்டத்தை மேம்படுத்தியது. சர்வதேச அளவிலும், தேசிய நிலைமைகளிலும், குறிப்பாக வர்க்க உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி, மறு ஆய்வுக்கு உட்படுத்தி கட்சித் திட்டம் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், புரட்சியின் கட்டம், அரசின் தன்மை மற்றும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்கங்களின் கூட்டணி மற்றும் அதன் தலைமை குறித்த அடிப்படையான வரையறுப்புக்கள் அப்படியே தக்கவைக்கப்பட்டன. 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 14 வது மாநாடு, கட்சித் திட்டத்தை மேம்படுத்த முடிவெடுத்து, அந்தப் பணி சுமார் 8 ஆண்டுகளுக்கு நீண்டது.

நீடித்த முயற்சிகள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில் புதிய கட்சித் திட்டத்தை வரைவு செய்யும் பணி கூடுதல் காலமெடுத்ததுடன் பல கட்டங்களையும் கடந்து வந்தது. 1986 ஆம் ஆண்டு அதன் 13 வது மாநாட்டில் கட்சி ஒரு வரைவுக் குழுவை ஏற்படுத்தி 1964 ஆம் ஆண்டு ஏற்கப்பட்ட கட்சித் திட்டத்தை மறு வரையறுக்க முடிவு செய்தது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாட்னா மாநாட்டில், ஏழு பேர் கொண்ட ஆணையத்தால் ஒரு வரைவு திட்டம் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் அந்த மாநாட்டில் வரைவு அறிக்கை ஏற்கப்படவில்லை. ஹைதராபாத்தில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 வது மாநாட்டில் வரைவு திட்ட ஆவணம் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. சர்வதேச, தேசிய சூழல்களில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை கணக்கில் கொண்ட இடைக்கால நடவடிக்கையாக அது அமைந்தது. இருப்பினும், அது அரசின் தன்மை, ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்க கூட்டணி ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான கட்சித் திட்டமாக இல்லை.

இந்த வகையில், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 16 வது மாநாடு, புதிய தேசியக் குழு உடனடியாக ஒரு ஆணையம் அமைத்து வரைவுத் திட்டம் உருவாக்க பணித்தது. அந்த முயற்சிகள் தொடர்ந்தன.

இறுதியாக, புதிய கட்சித் திட்டத்தை, புதுவையில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 22 வது மாநாட்டில் நிறைவேற்றியது. நீண்டகால விவாதத்தின் வெளிப்பாடாக உருவான இந்த திட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தைக் குறித்து விமர்சனப்பூர்வமான மதிப்பீட்டுக்கு வர முயற்சிப்பது உபயோகமானதாக இருக்கும். புரட்சியின் கட்டத்தை நிர்ணயிக்கும் வர்க்க பகுப்பாய்வு, அரசின் தன்மை மற்றும் தற்போதுள்ள அரசமைப்பை மாற்றியமைத்து, சோசலிசத்தை நோக்கிய மாறுதலை உருவாக்கும் புரட்சிகர அணிச்சேர்க்கை மற்றும் அதன் தலைமை ஆகியவைதான் அடிப்படையாக ஒரு கட்சித் திட்டத்தின் சாராம்சம்.

அரசு அதிகாரத்தின் தன்மை:

1964 ஆம் ஆண்டு கட்சித் திட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போதைய புரட்சியின் கட்டத்தை ஜனநாயக கட்டம் என்றே வரையறுத்தனர். முழுமையடையாமல் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகளை நிறைவேற்றவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தே (இரு கட்சிகளும்) இந்த முடிவுக்கு வந்தோம்.

அரசியல் விடுதலையை எட்டிய பின்னர், (புதிதாக அமைந்த) அரசின் தன்மை குறித்து முடிவு செய்வதிலும், ஆளும் வர்க்கத்திற்கும், அரசுக்கும் எதிரான புரட்சிகர இயக்கத்தை கட்டமைத்து முன்னெடுக்க அவசியமான வர்க்க கூட்டணி பற்றியும் தீர்மானிப்பதிலும், மாற்றுக் கருத்துக்கள் எழுந்தன. இன்றைய சமூகத்தில் ஆளும் வர்க்கமாக அமைந்து ஆதிக்கம் செலுத்தும் சுரண்டல் வர்க்கங்கள் மற்றும் அவற்றின் தன்மை ஆகியவற்றை, இந்திய சமூகம் குறித்த வர்க்கப் பகுப்பாய்வில் நிறுவ வேண்டும். இந்த ஆளும் வர்க்கம்தான் அரசினைக் கட்டுப்படுத்தி அதன் தன்மையை முடிவு செய்கிறது. முக்கியமான எதிரி யார்? யாருக்கு எதிராக ஒரு புரட்சிகர இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று தீர்மானிப்பதுதான் நீண்டகால உத்தியில் (strategy) மிக முக்கியமானது.

அரசு அதிகாரம் பற்றிய மாறுபட்ட பார்வைகள்:

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில், அரசின் தன்மை கீழ்க்காணுமாறு வரையறுக்கப்பட்டது:

இன்றைய இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றும் பொருட்டு, அன்னிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது. (V அரசு கட்டமைப்பும், ஜனநாயகமும் 5.1)

அரசின் தன்மை குறித்த மேற்சொன்ன வரையறுப்பு, மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் தொடர்கிறது.

சிபிஐ 1964 ஆம் ஆண்டு தனது திட்டத்தில் அரசினை கீழ்க்கண்டவாறு வரையறுத்தது:

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள அரசானது, இந்தியப் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தையும், முதலாளித்துவ உற்பத்தி முறை, விநியோகம் மற்றும் பரிமாற்றத்தையும் உயர்த்திப் பிடித்து வளர்த்தெடுக்கும் தேசிய முதலாளிகளின் ஆட்சிக் கருவியாக அமைந்துள்ளது.

அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதில் பெருமுதலாளிகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்திக் கொண்டுள்ளனர். நிலப்பிரபுக்களுடன் தேசிய முதலாளிகள் சமரசம் செய்துகொண்டு அமைச்சரவையிலும், அரசாங்கக் கட்டமைப்பிலும், குறிப்பாக அரசின் மட்டங்களிலும் இடமளிக்கின்றனர்.

மேற்சொன்ன வரையறுப்பு 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 8 வது மாநாட்டில் கீழ்க்காணுமாறு திருத்தப்பட்டது:

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள அரசு பெரு முதலாளிகளின் வலுவான தலையீட்டுடன் கூடிய, தேசிய முதலாளிகளின் ஆட்சிக் கருவியாக அமைந்துள்ளது. இந்த வர்க்க ஆட்சி நிலப்பிரபுக்களிடம் வலிமையான தொடர்பு கொண்டுள்ளது. அரசு அதிகாரத்தில் இந்த காரணிகள் பிற்போக்குத்தன்மைக்கு ஊக்கமளிக்கின்றன.

அரசின் தன்மை குறித்த வரையறுப்பில் இரண்டு திட்டங்களுக்கும் இடையில் கணிசமான வேறுபாடு உள்ளது, இது இரண்டு கட்சிகளின் நீண்டகால திட்டத்திலும், வர்க்கக் கூட்டு மற்றும் நடைமுறைத் திட்டம் ஆகியவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்துகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தினுடனான குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் பின்வருமாறு:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமானது, பெரு முதலாளிகளை, இந்திய அரசைக் கட்டுப்படுத்தும் வர்க்கக் கூட்டின் தலைமைப் பொறுப்பில் வைத்துப் பார்க்கிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைமைப் பொறுப்பை மறுக்கிறது. தங்களின் 1964 ஆம் ஆண்டு திட்டத்தில் பெரு முதலப்பிடத்தக்க தாக்கம் செலுத்துகிறார்கள்” என்றவாறு அமைத்துக் கொண்டவர்கள் 1968 ஆம் ஆண்டு திருத்தத்தில் வலிமையான தாக்கத்தை கொண்டிருக்கின்றனர்” என்று மாற்றினர். இதுதான் இரண்டு திட்டங்களிலும் இந்திய அரசின் தன்மையை வரையறுப்பதில் முக்கிய மாறுபாடாக அமைந்தது.

பெருமுதலாளிகள் தொடக்கம் முதலே இந்திய முதலாளிகளுக்கிடையே ஒரு சக்திவாய்ந்த அடுக்குமுறையை ஏற்படுத்திவிட்டனர். முதலாளித்துவ வளர்ச்சியின் முதிர்வு நிலையில், பெருமுதலாளிகளின் ஏகபோகக் கட்டத்திற்கு வந்தடைந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் போல் அல்லாமல், இந்திய முதலாளித்துவம் காலனிய ஆதிக்கத்தின் கீழானதொரு தனித்துவமான சூழலில் வளர்ந்தது, பெரு முதலாளிகளும் ஏகபோக நிறுவனங்களும் முன்கூட்டியே உருவாகி வளரத்தொடங்கின. பெரு முதலாளிகளின். இந்திய விடுதலைக்குப் பிறகான பத்தாண்டுகளில், முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வலுவான பிடிப்போடு பெரு முதலாளிகள் வளர்ச்சியடைந்தனர்.

பெரு முதலாளிகளே அரசின் தலைவர்களாக இருந்ததானது ஒரு குறிப்பிட்ட விதமான முதலாளித்துவ வளர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அரசு ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டதுடன், நிலப்பிரபுக்களிடமும் தன் கூட்டணியை பராமரித்தது. மார்க்சிஸ்ட் கட்சி தன் திட்டத்தில் சொல்வதைப் போல:

ஒருபுறம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களைச் சுரண்டி தனது வர்க்க நலனை வலுப்படுத்திக் கொண்டுள்ளதோடு, மறுபுறத்தில் ஏகாதிபத்தியத்துடனும், நிலப்பிரபுத்துவத்துடனும் தனது மோதல்களையும், முரண்பாடுகளையும் பேரம் பேசியும், சமரசம் செய்து கொண்டும், அழுத்தம் கொடுத்தும் சரி செய்துகொண்டது.

மேற்சொன்ன நடவடிக்கைகளின் மூலம், அன்னிய ஏகபோகங்களுடன் தன் பிணைப்புகளை வலுப்படுத்தி தனது அதிகாரத்தை நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடன் பகிர்ந்துகொண்டது.

இந்தியாவில் அரசு ஒட்டுமொத்தமாக தேசிய முதலாளிகளுடையதென்று குறிப்பிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமானது பெரு முதலாளிகள் தலைமைப் பொறுப்பில் இருப்பதை ஏற்பதில்லை, மாறாக வலுவான தாக்கத்தைசெலுத்துவதாக மட்டும் சொல்கிறது. மேலும் முதலாளி நிலப்பிரபுத்துவ வர்க்கக் கூட்டணி இந்திய அரசின் அடித்தளமாக அமைந்திருக்கிறதென்று சொல்லும் மார்க்சிஸ்ட் கட்சியின் பார்வைக்கு மாறாக ”நிலப்பிரபுத்துவ வர்க்கத்தோடு வலிமையான பிணைப்பு” கொண்டிருப்பதாக மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிடுகிறது. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தார் அரசுக் கட்டமைப்பின் பகுதி அல்ல; அதன் பொருள் அவர்கள் ஆளும் வர்க்கத்தின் பகுதி அல்லர் என்றாகிறது.

இரண்டு கட்சித்திட்டங்களிலும் உள்ள மற்றொரு வேறுபாடு அரசின் தன்மை குறித்தானதாகும். முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையில் வழிநடத்தும் பெருமுதலாளிகளின் தலைமையில் உள்ள ஆளும் வர்க்கத்தோடு அன்னிய நிதி மூலதனம் கைகோர்த்திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி தன் திட்டத்தில் காண்கிறது. அதாவது, நிலப்பிரபுத்துவமும், ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களுடனும், அரசு கட்டமைப்பிலும் வலுவான பிணைப்புக் கொண்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை விடவும் மார்க்சிஸ்ட் கட்சி திட்டம் தெளிவாக வரையறுத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வகைப்படுத்துதலில் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு எதுவாக இருந்தாலும், ஏகாதிபத்தியமும், அன்னிய நிதி மூலதனமும் வகிக்கும் பாத்திரங்கள் குறித்து எதுவுமில்லை.

மேற்சொன்ன, அரசின் தன்மை குறித்த வகைப்படுத்துதல் நடைமுறையில் பெருத்த விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் தேசிய முதலாளிகள் தலைமையிலான அரசில், பெருமுதலாளிகள் வலிமையான ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனும்போது அரசின் மீதான அவர்களின் அணுகுமுறை மார்க்சிஸ்ட் கட்சியினுடையதிலிருந்து வேறுபடும். மேலும், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினர் ஆளும் வர்க்கத்தின் உள்ளார்ந்த பாகமாக இருந்து அரசைக் கட்டுப்படுத்தவில்லை எனும்போது முதலாளித்துவ அரசின், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு கடமைகள் பற்றி மிகை மதிப்பீடு உருவாகும். “தேசிய முதலாளிகளின்” பாத்திரம் குறித்த விசயத்திலும் மேற்சொன்ன பாதிப்பு ஏற்படும்.

இந்திய அரசு, தேசிய முதலாளிகளுடையதென்று வரையறுக்கும்போது, அது எதிரி வர்க்கத்தின் கையில் இல்லை என்றாகிறது. தேசிய முதலாளிகள் அரசை தலைமையேற்றபடியே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய ஜனநாயகப் புரட்சியில் பங்கேற்கும் தகுதியுடைய வர்க்கமாகவும் உள்ளனர். உழைக்கும் வர்க்கத்தால் முற்போக்கு திசையில் உந்தித் தள்ளி, திசை மாற்றி, ஊக்கப்படுத்த வேண்டியதொரு வர்க்கமாகவும், பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் அரசால் கொடுக்கப்படும் பிற்போக்கு அழுத்தங்களை உழைக்கும் வர்க்கத்தின் துணைகொண்டு தடுத்தாளும் நிலைமையிலும் தேசிய முதலாளி வர்க்கம் இருக்கிறது. இந்திய அரசு பற்றிய இந்தக் கருத்து, 1956 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த பார்வையின் தாக்கத்துடன் ஒத்திசைந்து ஏற்பட்டதாகும்.

இது ஆளும் வர்க்கத்தின் மீதும், முதன்மையான ஆளும் வர்க்க கட்சியின் (காங்கிரஸ்) மீதும் ஒரு மென்மையான போக்கிற்கு இட்டுச் சென்றது. ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சிக்கு அதாவது ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகபோகத்தை எதிர்த்த புரட்சிக்கு அரசும், தேசிய முதலாளிகளின் ஆளும் கட்சியும் தகுதிவாய்ந்த கூட்டாளிகளாகப் பார்க்கப்பட்டனர். நிலப்பிரபுத்துத்தையும், ஏகாதிபத்தியத்தையும் ஆளும் வர்க்கத்தோடு இணைத்துப் பார்க்கத் தவறியது இத்தகைய நீண்டகால உத்தியை முடிவு செய்ய வைத்தது. அதே சமயம் நடைமுறை உத்தி அளவிலும் இந்த வரையறுப்பானது முதலாளித்துவக் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் மத்திய அரசுகளில் இணைய வாய்ப்பு ஏற்பட்டபோது, அரசாட்சியில் பங்கேற்கும் முடிவுக்கு இட்டுச்சென்றது (1994 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில்)

கட்சித் திட்டம் பற்றிய விவாதங்களில் இந்த வரையறைகளை மறுஆய்வு செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. 1989 மார்ச் மாதம் நடைபெற்ற மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுத் திட்டத்தில் அரசு குறித்த வரையறுப்பு 1968 ஆம் ஆண்டு 8 வது மாநாட்டில் செய்யப்பட்ட திருத்தத்தை ஒத்தேதான் இருந்தது.

இந்தியாவில் உள்ள அரசு, பெரு முதலாளிகள் வலிமையான தாக்கம் செலுத்துவதாகவும், தேசிய முதலாளிகளான ஆளும் வர்க்கத்தாரின் கருவியாகவும் உள்ளது. இந்த வர்க்க ஆட்சியானது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தோடு வலிமையான பிணைப்புக் கொண்டுள்ளது. இந்த நிலைமையானது அரசு அதிகாரத்தில் பிற்போக்கு அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.

வரைவுத் திட்டத்தை உருவாக்கும் பணியை எடுத்துக் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெகநாத் சர்க்கார் வேறுபட்ட பார்வையை கொண்டிருந்தார். அரசின் தன்மை குறித்த தன்னுடைய திருத்தத்தையும் முன்வைத்திருந்தார். அந்த திருத்தத்தின் முதல் பகுதி பின்வருமாறு:

இந்தியாவில் உள்ள அரசு இந்திய முதலாளி வர்க்கத்தின் கருவியாகும், அதற்கு நிலப்பிரபுத்துவ வர்க்கம் கூட்டாளியாக உள்ளதுடன் பெரு முதலாளி வர்க்கம் தீர்மானகரமான ஆதிக்கத்தை அதன் மீது செலுத்திவருகிறது. நிலப்பிரபு வர்க்கத்துடனான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டும், பெரு முதலாளிவர்க்கத்தின் தீர்மானகரமான ஆதிக்கமும் இந்திய அரசின் மீது தாக்கம் செலுத்தி பிற்போக்குத்தனத்தை இயம்பியுள்ளன.

இந்திய அரசின் முக்கிய பகுதியான முதலாளிகள் பாரம்பரியமாகவே நிலப்பிரபுக்களிடம் நெருக்கமான உறவுகொண்டுள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது குறு மன்னர்களும், பெரு நிலக்கிழார்களும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் ஆதரவாளர்களாக இருந்தபோது சிறு நில உடைமையாளர்களும், நடுத்தர நிலவுடைமையாளர்களும் பொதுவாக காலனிய எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்தனர். இது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தார் அரசியல் தளத்தில் முதலாளிகளுக்கு நெருக்கமாக்க வகை செய்தது. இந்தக் கூட்டு விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்தது (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரைவுத் திட்டம், 1989)

சர்க்காரின் வரையறுப்பின் படி, பெரு முதலாளிகள் “தீர்மானகரமான கட்டுப்பாட்டை” இந்திய அரசின் மீது செலுத்துகின்றனர். மேலும், அவரின் திருத்தத்தில் முதலாளி வர்க்கத்திற்கும் நிலப்பிரபு வர்க்கத்திற்கும் இடையிலான கூட்டு அறியப்படுகிறது. அவர் மேலும் பெரு முதலாளிகள்தான், முதலாளித்துவ வர்க்கத்திலேயே பலம்வாய்ந்த அடுக்கு என்பதை வெளிக்கொண்டுவருவதற்காக “தேசிய முதலாளிகள்” என்ற பதத்தை தவிர்க்கிறார்.

கட்சித் திட்டத்திற்கான குழுவின் மற்றொரு உறுப்பினர் பி.கே.வாசுதேவன் நாயர் முன்வைத்த திருத்தத்திலும் பெரு முதலாளிகள் “தீர்மானகரமான தாக்கம்” செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

22 வது மாநாட்டில் ஏற்கப்பட்ட புதிய திட்டத்தில், அரசு பற்றிய வரையறுப்பில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்வருமாரு:

8.1 இந்தியாவில் உள்ள அரசு கார்ப்பரேட் பெரு முதலாளிகள் மற்றும் ஏகபோகங்களின் தலைமையிலான முதலாளிகளின் அரசாகும். இந்த வர்க்க ஆட்சி, அரைநிலப்பிரபு அரை முதலாளித்துவ நிலப்பிரபுக்களோடு வலுவான பிணைப்புக் கொண்டுள்ளது. இது ஒரு அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை தீர்மானிக்கிறது. விவசாயத்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை செயலாக்க பணிக்கிறது. உலக முதலாளித்துவ அமைப்புக்குள் செயல்பட்டு அமெரிக்கா மற்றும் உலக வங்கி, .எம்.எப் ஆகிய சர்வதேச நிதி அமைப்புகளால் வழிநடத்தப்படு சர்வதேச நிதி மூலதனத்தோடு நெருக்கமான பிணைப்பை வளர்க்கிறது.

(புதிய திட்டத்தில்) ”தேசிய முதலாளிகள்” என்ற வார்த்தைப் பயன்பாடு கைவிடப்பட்டுள்ளது ஒரு சரியான முடிவாகும். முந்தைய வரையறுப்புகளில் இருந்து மாறுபட்ட வகையில், இந்த அரசானது ”கார்பரேட் பெரு நிறுவனங்கள், ஏகபோகங்களால் தலைமையேற்கப்படும்” முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருவியாக அறியத்தருகிறது. நிலப்பிரபுக்களுடனான உறவு இப்போதும் “வலிமையான பிணைப்பு என்றே குறிக்கப்படுவதுடன், நிலப்பிரபுக்கள் “அரை நிலப்பிரபுத்துவ” “முதலாளித்துவ” தன்மையுடையதாய் குறிக்கப்படுகின்றனர். முந்தையவற்றிலிருந்து கூடுதலாக மேற்சொன்ன வரையறுப்பில் இடம்பெற்றுள்ள புதிய பகுதி சர்வதேச நிதி மூலதனத்துடன் அரசுக் கட்டமைப்பு “நெருக்கமான பிணைப்பை” வளர்த்துக் கொள்கிறது.

இந்தியாவிலுள்ள அரசுக்கு கார்ப்பரேட் பெருமுதலாளிகள் மற்றும் ஏகபோகங்கள் தலைமையேற்பதை அறியத்தருவதன் மூலம், தனது முந்தைய வரையறுப்புகளை விடவும் தெளிவானதொரு வரையறுப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடைந்துள்ளது. இந்த குணநலன் குறிப்புகளுக்கு முன், வர்க்க நிலைமைகளின் மேம்பாடு குறித்த ஆய்வு வருகிறது:

பெரும் பகுதி இந்திய முதலாளிகள் உள்ளிட்டு மக்கள் நலன்களைக் காவுகொடுத்து சில பெரும் ஏகபோக முதலாளிகள் பொருளாதார வலிமையையும், மூலதனக் குவிப்பையும் மேற்கொண்டுவருவது முதலாளித்துவ வளர்ச்சியின் போக்கில் ஏற்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான விளைவாகும்.

இருந்தாலும், ஏன் “பெருமுதலாளிகள்” என் வார்த்தைக்கு பதிலாக கார்ப்பரேட் பெருந்தொழில் மற்றும் ஏகபோகம் ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.பெருமுதலாளிகள்” பெரும் மூலதனப் பிரிவின் அனைத்துத் தரப்பையும் முழுமையாக உள்ளடக்கும் சொல்லாகும். கார்ப்பரேட் அல்லது நிறுவனங்கள் என்பவை உடைமையின் சட்டப்பூர்வ பெயர்கள் உதாரணமாக “பொது நிறுவனம்/கூட்டுப் பொறுப்பு நிறுவனங்கள். பெரும் கார்ப்பரேட்டுகள் ஆகியோர் பெரு முதலாளிகளின் ஒரு பகுதி, பெரும் ஏகபோக நிறுவனங்களும் அப்படியே. மேலும், பெரும் மூலதனம் உற்பத்தித் துறைக்கு வெளியே பல்வேறு துறைகளில், முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் இங்கே கணக்கில் கொள்ள வேண்டும். (உதாரணத்திற்கு ஊடகத் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள்). இவையெல்லாம், மூலதனச் செறிவில் குறிப்பிட்ட அளவு குவிக்கப்படும்போது, பெரு முதலாளிகளின் பகுதியாகத்தான் கருதப்பட வேண்டும். “கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் மற்றும் ஏகபோகங்கள்” என்று குறிப்பிடுவதற்கான நோக்கம் சரியானதாக இருந்தாலும் “பெரு முதலாளிகள்” என்ற சொல்லின் விரிவான பொருளைக் குறிப்பிட அது போதுமானதாக இல்லை.

நிலப்பிரபுக்களை அரசுக் கட்டமைப்பிற்கு வெளியே வைத்துப் பார்ப்பதானது, அரசு அதிகாரம் குறித்த விளக்கத்தின் பின்னடைவாக உள்ளது. விவசாய உற்பத்தியில் முதலாளித்துவ ஆதிக்கம் வளரும் அதே சமயம் அரை நிலவுடைமை நிலப்பிரபுத்துவத்தில் முறையாக வீழ்ச்சி இல்லாததால் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவம் மேலோங்குகிறது. “வலிமையான பிணைப்பு” மட்டுமே இருப்பதாகக் கருத எந்த அடிப்படையும் இல்லை. அவர்கள் ஆளும் வர்க்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவுள்ளனர். “நிலப்பிரபு” என்ற வார்த்தை இன்னமும் பயன்படுத்தப்படுவதற்கு காரணம், அழிக்கப்படவேண்டிய அரைநிலப்பிரபுத்துவ உறவுகள் இன்னமும் தொடர்வதேயாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் ஒரு இடத்தில் “ஊரக முதலாளிகள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவ நிலப்பிரபுக்களும் இந்த ஊரக முதலாளிகளில் ஒரு பகுதியாகும். அவர்கள் அரசு கட்டமைப்பின் வெளியில் இருப்பதாகக் கருதுவதானது நடைமுறைக்கு மாறானது. இந்திய அரசு குறித்து சரியான புரிதலுக்கு வருவதற்கு பெரு முதலாளிகள் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து நிலச் சீர்திருத்தத்தை அமலாக்குவதையும், ஜனநாயகப் புரட்சியை முழுமை பெறச் செய்வதையும் தவிர்த்திருப்பதை கவனிப்பது அவசியம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் இந்திய அரசுக்குமான பிணைப்பினை அங்கீகரிப்பது, சரியான திசையில் ஒரு படி முன்னேற்றம். இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் காரணமாக இந்திய முதலாளிகளுக்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் இடையிலான கூட்டிற்கு வந்து சேர்ந்ததென்ற தருக்க ரீதியான முடிவுக்கு வந்திருக்க வேண்டும். “இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் அன்னிய நிதி மூலதனத்திற்கும் இடையில் அதிகரிக்கும் கூட்டு, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக நிகழ்கிறது” என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் வரையறுப்பில் இது பிரதிபலிக்கிறது.

தொகுத்துப் பார்த்தால், இந்திய அரசு குறித்த சிபிஐ கட்சித் திட்டத்தில் சில பலவீனங்களும் பிரச்சனைகளும் இருக்கின்ற போதிலும், இந்திய அரசின் தன்மை குறித்த இந்த மதிப்பீடு, சரியான சித்தரிப்பை நோக்கிய சரியான முன் நகர்வு ஆகும்.

ஜனநாயகப் புரட்சிக்கு யார் தலைமையேற்பார்கள்?:

இரண்டு கட்சித் திட்டங்களிலும் உள்ள மற்றொரு வேறுபாடு, ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக சாதிக்கும் அணி அல்லது வர்க்க அணிச்சேர்க்கையும் அந்த அணிக்கு யார் தலைமையேற்பார்கள் என்பதுமாகும்.

இரண்டு கட்சிகளின் திட்டமுமே புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தைப் பற்றியும், ஜனநாயக முன்னணி அல்லது அணிச்சேர்க்கையில் எந்த வர்க்கங்கள் இடம்பெரும் என்பதிலும் ஒன்றுபோல பேசுகின்றன. அந்த அணிக்கு யார் தலைமையேற்க வேண்டும் என்பதில் இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த அணிக்கு தேசிய ஜனநாயக அணி என்று பெயரிட்டுள்ளது, மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயக அணி அல்லது முன்னணி என்று அழைக்கிறது.

1964 ஆம் ஆண்டு கட்சித் திட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, தேசிய ஜனநாயக அணியின் தலைமை குறித்து கீழ்க்கண்டவாறு வரையறுத்தது:

தேசிய ஜனநாயக அணியின் கைகளிலிருக்கும் தேசிய ஜனநாயக அரசு (சோசலிசத்தை நோக்கி) மாறும் கட்டத்தில் அமைந்திடும், அதன் அதிகாரம் ஏகாதிபத்திய ஒழிப்பிற்காகவும் அரை நிலப்பிரபுத்துவ சக்திகளையும், பெருகிவரும் ஏகபோகங்களின் சக்தியையும் எதிர்த்துப் போராடிய அனைத்து வர்க்கங்களாலும் கூட்டாக கைக்கொள்ளப்படும். இந்தக் கூட்டில், உழைக்கும் வர்க்கத்தின் தலைமை இன்னும் பரவலாக்கப்படவில்லை என்றபோதிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் தனித்த அதிகாரம் தொடராது” (பக்கம் 41, ஆங்கில புத்தகத்தில்)

உழைக்கும் வர்க்கத்தின் தனித்த அதிகாரமோ முதலாளி வர்க்கத்தின் தனித்த அதிகாரமோ இல்லை என்றால் அது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் கூட்டு அதிகாரமாகும் என்று மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்த விமர்சனத்தைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 8 வது கட்சி மாநாட்டில் கடைசியாக ஒரு பாராவை சேர்த்து கூடுதல் விளக்கமளித்தது. அந்த பத்தி பின்வருமாரு: “இந்தக் கூட்டணியின் தலைமை ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவ, ஏகபோக எதிர்ப்பு சக்திகளிடம் இருக்கும்”. மேற்சொன்ன வரையறுப்புக்கு பிறகும், பல்வேறு வர்க்கங்களின் கூட்டுத் தலைமையையே அது உணர்த்துகிறது.

1964 ஆம் ஆண்டு திட்டத்தில் அடுத்த பத்தி பின்வருமாறு இருந்தது:

தேசிய ஜனநாயக அணியின் அரசும், அந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க கூட்டும் தனது ஈட்டி முனையாக  உழைப்பாளர்கள் விவசாயிகளின் அணியையே கொண்டிருக்கும், அதன் தலைமைக்கு உழைக்கும் வர்க்கம்  அதிக அளவில் வந்து சேரும், இந்த வர்க்கம்தான் தேசிய ஜனநாயக அணியின் உணர்வுப்பூர்வ வாரிசாகவும், அதன் கட்டமைப்பாளராகவும் இருக்கும். (பக்கம் 48)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தில் உள்ள (முதலாளித்துவ வர்க்கம் உழைப்பாளி வர்க்கத்தின் ) கூட்டுத் தலைமை என்ற கருத்தாக்கத்தை விடவும், மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறது:

7.1 இந்தியப் புரட்சியின் அடிப்படையான கடமைகளை முழுமையாகவும், முழு நிறைவாகவும் பூர்த்தி செய்வதற்கு இப்போதுள்ள பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசை அகற்றிவிட்டு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

மேலும், இன்றைய சகாப்தத்தில், சோசலிசத்தை அடைவதற்கான பாதையில் முன்னேறிச் செல்வதற்கு தேவையான ஒரு முன் நடவடிக்கையான ஜனநாயகப் புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டியுள்ளது. இது பழைய பாணி முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி அல்ல, மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரட்டி நடத்தப்படும் புதிய வகையிலான மக்கள் ஜனநாயகப் புரட்சி ஆகும். (பத்தி 7.2)

இதுவொரு வரட்டுத்தனமான வலியுறுத்தல் அல்ல புதிதாக விடுதலையடைந்த நாடுகளில் முதலாளித்துவ வர்க்கங்களால் ஜனநாயக்ப் புரட்சியை முன்னெடுக்க முடியவில்லை என்ற வரலாற்று அனுபவத்திலிருந்து வந்தடைந்த வரையறுப்பாகும். குறிப்பாக, பெரு முதலாளிகளால் தலைமையேற்கப்படும் இந்திய அரசில், பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளி நிலப்பிரபுத்துவ வர்க்க கூட்டின் அரசு அதிகாரத்தை அகற்றுவதுதான் மையமான பணியாகும். தொழிலாளி விவசாயி இடையே வலிமையான கூட்டு உருவாவது தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலேயே சாத்தியமாகும். பெரு முதலாளிகள் அல்லாத வர்க்கப் பகுதிகளும் மக்கள் ஜனநாயக அணியின் பகுதியாக இடம்பெறலாம் என்றபோதும், அவர்கள் உறுதியான கூட்டாளிகளாக இருக்க முடியாது, தொழிலாளி விவசாயி இடையிலான கூட்டு எத்தனை வலுவாக இருக்கிறதென்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் பங்களிப்பு இருக்கும்.

இந்தியாவில், விடுதலைக்குப் பிறகான அறுபதாண்டுகளுக்கும் மேலான முதலாளித்துவ வளர்ச்சியில், குறிப்பாக புதிய தாராளவாத முதலாளித்துவக் கட்டம் தொடங்கிய பின் பெரு முதலாளிகளுக்கும் அவர்கள் அல்லாத பகுதியினருக்கும் இடையிலான வேறுபாடுகள் மெளனமாக்கப்பட்டுள்ளன. சமீபத்திய வரலாற்றின் இந்த அம்சம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் எங்கும் கணக்கில்கொள்ளப்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய திட்டம் இப்போதும், ஜனநாயகப் புரட்சியை முழுமையாக்கி சோசலிச கட்டத்திற்கு மாறிச் செல்லும் கட்டத்திற்கு பல்வேறு வர்க்கங்கள் படிநிலைகளின் கூட்டுத் தலைமை என்ற கருத்தாக்கத்தில் நிலைபெற்றுள்ளது. அதில் கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படுகிறது:

ஜனநாயகப் புரட்சிக்கான பணிகளை நடைமுறையில் முன்னெடுக்கும் வர்க்கங்கள் மற்றும் மக்கள் பகுதிகள் தொழிலாளி வர்க்கம், ஊரக (கிராமப்புற) பாட்டாளிகள், உழைக்கும் விவசாயிகள், முற்போக்கு ஜனநாயகவாதிகள், மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் புரட்சிகர பகுதியினர், ஒரு பகுதி நடுத்தர மற்றும் சிறு முதலாளிகள் ஆவர். வலிமையான விவசாயி தொழிலாளி கூட்டணியை நோக்கி அணிவகுக்கும், ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து தலைமையில் உள்ள பெரு முதலாளிகளை மாற்றியமைக்கும் வரையில் முன்னணியில் இருப்பார்கள் (பத்தி 9.1)

தொழிலாளி வர்க்கம், ஊரக பாட்டாளிகள் தொடங்கி நடுத்தர, சிறு முதலாளிகள் வரையிலான வர்க்கங்களுக்கு, சோசலிசத்தை நோக்கிய மாறுதல் கட்டம் வரையிலான தலைமையை வழங்குவதானது பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியம் மற்றும் அரை நிலப்பிரபுத்துவ எச்சங்களுக்கு எதிராக தொய்வில்லாத தலைமையை யார் கொடுக்க முடியும் என்பதை மங்கச் செய்கிறது.

மாறுதலுக்கான காலகட்டத்தில் இருக்க வேண்டிய வர்க்கக் கூட்டினை தொழிலாளி வர்க்க தலைமை இல்லாமலே கொண்டு செல்ல முடியுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் கருதுகிறது. மாறுதல் காலகட்டத்தின் முடிவில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையும், பரந்த ஜனநாயக கூட்டும் அமைக்கப்படும் என்று வெறுமனே சொல்லிச் செல்கிறது.

முதலாளிகளின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையும் ஆதன் பரந்த ஜனநாயக அணிகளும் இடம்பெறுவதானது, பல அதிர்ச்சிகளுக்கும் சமூக எழுச்சிகளுக்கும் இட்டுச்செல்லும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் புரிதலுக்கும், செயல்நோக்கிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலே தெளிவான அடிப்படை வேறுபாடு உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில் ஜனநாயகப் புரட்சியை முழுமைப் படுத்திய பிறகு சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்லும் கட்டமானது, தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் புரட்சிகர வர்க்கக் கூட்டணியின் தலைமையிலேயே சாத்தியமாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் மாறுதல் கட்டத்தின் உச்சத்திலேயே தொழிலாளி வர்க்கத்தலைமையை நிறுவ முடியும் என்று கருதுகிறது.

பெரு முதலாளிகளால் தலைமையேற்கப்படும் தற்போதைய அரசமைப்பை மாற்றியமைப்பது மிகமிக அத்தியாவசியம் என்று மார்க்சிஸ்ட் கட்சியைப் போல, சிபிஐ பார்க்கவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியையே சமூகத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று சொல்வதில் அது வெளிப்படையாகிறது.

புரட்சிகர மக்கள் இயக்கங்களை வளர்த்தெடுத்து, இடதுசாரி ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை பரவலாக்குவதன் மூலமும், அத்தகைய மக்கள் இயக்கங்களின் துணையோடு நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையைப் பெறுவதன் மூலமும் தொழிலாளி வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு எதிர்ப்பு சக்திகளின் தடுப்பை தகர்த்து நாடாளுமன்றத்தை மக்கள் விருப்பங்களுக்கான ஒரு கருவியாகவும், சமூக மாற்றத்திற்கான அடிப்படையாகவும் மாற்றுவார்கள் (பத்தி 9.4)

இதன் பொருள் தற்போதுள்ள அரசுக் கட்டமைப்புக்குள்ளேயே செயலாற்றுவதன் மூலம் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதாகும். வெளிப்படையாக 1964 ஆம் ஆண்டு கட்சித் திட்டத்தில், இந்திய அரசுக் கட்டமைப்பில் ஏகாதிபத்தியம், ஏகபோகம் மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கூறுகள் சில உள்ளதாக கூறப்பட்டது, இப்போதைய வரையறுப்பிலும் தொடர்கிறது.

வர்க்க பகுப்பாய்வு:

கட்சித் திட்டம் சுட்டும் நீண்டகால உத்தியில் உள்ள சில பலவீனங்கள், முழுமையற்றதும் பல்நோக்குடையுதுமான வர்க்கப் பகுப்பாய்விலிருந்து எழுகின்றன. கட்சியின் திட்டமானது இந்திய சமூகத்தில் நிலவும் வர்க்க உறவுகள் மீது மேற்கொள்ளப்படும் அறிவியல் பூர்வமான பகுப்பாய்வின் அடிப்படையில் இருப்பது அவசியமானது. அதன் மூலம்தான் பொருளாதார அடிப்படையிலும், சமூக ரீதியிலும் சுரண்டும் வர்க்கம் யார், சுரண்டப்படும் வர்க்கங்கள், பகுதிகள் யார் என்பதை கண்டறிய முடியும்.

நிலப்பிரபுத்துவத்தைக் கண்டுகொள்ளாமை:

விடுதலைக்குப் பிறகான விவசாய உறவுகள்”” என்ற பகுதியில் விவசாயத்துறை கண்டுள்ள பல்வேறு முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. எனினும், நிலப்பிரபுக்களின் இயல்பு குறித்து எந்த ஆய்வும் இல்லை. முதலாளித்துவ நிலப்பிரபுக்கள், பெரு முதலாளி விவசாயிகள் இடையேயான அடுக்குகளின் உருவாக்கம் குறித்த ஆய்வோ நிலக்குவியலும் பிற உடைமைகளும் எப்படி நிலப்பிரபுக்கள், பெரு முதலாளி விவசாயிகளிடம் தொடர்கின்றன என்பது பற்றிய ஆய்வோ இல்லை. அந்தப் பகுதியில், நிலக்குவியல் மற்றும் இதர சொத்துக்களின் மீது நிலப்பிரபுத்துவ பிடிமானம் பற்றி பேசாமலே நிலவிநியோகம் பற்றியும் நிலத்துக்கான போராட்டம் பற்றியும் பேசப்படுகிறது. முதலாளித்துவத்தின் கீழ் விவசாய வர்க்கத்திடையே ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் பெயரளவில் குறிக்கப்பட்டுள்ளன, விவசாயிகளிடையே உள்ள (ஏழை, நடுத்தர, பணக்கார) அடுக்குகள் குறித்தோ, வர்க்கப் போராட்டத்தில் அவர்களின் பாத்திரம் குறித்த அனுமானமோ, புரிதலோ குறிப்பிடப்படவில்லை.

உண்மையில், விவசாயிகளின் பல்வேறு பகுதிகள் குறித்த பத்தி, ஊரக (கிராமப்புற) வர்க்கங்கள் குறித்த ஆய்வின் பலவீனத்தையே காட்டுகின்றன.

பெரிய விவசாயிகளின் செல்வாக்கு காரணமாக, புதிய கொள்கையை நோக்கிய நிலைப்பாடு தெளிவற்றதாக உள்ளது. முதலில் அவர்கள் விவசாய தொழில்மயமும், தாராள வர்த்தகமும் தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கருதினர். பின்னர், தாராள வர்த்தகத்தை எதிர்த்ததுடன் அரசு தலையீட்டின் மூலம் தங்கள் பொருளாதார தளத்தை பாதுகாக்க கோரிக்கை வைக்கத் தொடங்கினர். நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் நல்ல லாபம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் பெரிய விவசாயிகளின் தலைமையையே பொதுவாகப் பின்பற்றினர். சிறு, நடுத்தர விவசாயிகள் அதிக அளவில் தங்கள் நிலங்களில் இருந்தும் இதர வளங்களில் இருந்தும் விரட்டப்பட்டுள்ளனர்.(பத்தி 6.6)

இங்கே “பெரிய விவசாயிகள்” என்று குறிப்பிடப்படுவோர் நிலப்பிரபுக்களா? முதலாளித்துவ விவசாயிகளா அல்லது பணக்கார விவசாயிகளா? “நடுத்தர, சிறு விவசாயிகள்” நடுத்தர விவசாயிகளாகவோ அல்லது ஏழை விவசாயிகளாகவோ இருக்கலாம். “வர்க்கங்கள் மற்றும் பிற பிரிவினர்: அவர்களின் பாத்திரம்” என்ற பகுதியில் ஊரக முதலாளிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் பாத்திரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதோடு இதனை இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஊரக முதலாளிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள் ஆகியோர் நிலமற்ற தொழிலாளர்களின் போராட்டத்தோடோ, நில விநியோகத்துக்கான போராட்டத்தோடோ இணைய மாட்டார்கள். அதே சமயம் பிற விசயங்களில் உதாரணமாக இடுபொருட்கள் விலையேற்றம், உள் கட்டமைப்பு வசதிகள், கட்டுப்படியான விலை மற்றும் விவசாயத்தை சாட்தியமானதாக்குதல் மற்றும் அரசு வலுக்கட்டாயமான விவசாய நிலங்களைக் கைப்பற்றுதல் ஆகிய பிரச்சனைகளில் எல்லோரும் கைகோர்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். (பத்தி 7.15)

மேற்கண்ட பத்தியில், ஊரக முதலாளிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள் விவசாயிகள் ஒட்டுமொத்த போராட்டத்தின் பகுதியாக உள்ளனர். இது ஊரக முதலாளிகளின் பாத்திரம் குறித்த தவறான புரிதலாகும். உண்மையில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகளின் போராட்டமானது அரசு வளங்களில் அதிகமான பங்கைப் பெறுவதற்கானதாகும். அந்த வளங்கள் மானியமாக இருக்கலாம், கடன் மற்றும் கட்டமைப்பு வசதியாக இருக்கலாம். மற்ற பகுதி விவசாயிகளை மேற்கண்டவைகளுக்காக அவர்கள் திரட்டுவார்கள். அதே சமயம் முதலாளி நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைவை எதிர்த்த போராட்டங்களின் பகுதியாக மாட்டார்கள். உண்மையில், விவசாயிகளின் ஜனநாயக இயக்கத்திற்கு எதிராக உருவெடுப்பார்கள்.

நிலப்பிரபுக்களும் ஆளும் வர்க்கத்தின் பகுதியாக இருந்து அரசு அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் உண்மை முழுமையாகத் தவறவிடப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், ஊரக ஏழைகள் மீது அவர்களால் நடத்தப்படும் வர்க்கச் சுரண்டல் பற்றிய கவனமும் முழுமையாகத் தவறியுள்ளது. அப்படியான வர்க்கப் பகுப்பாய்வும், அணுகுமுறையும் இல்லாமல் அரசு அதிகாரத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிராக வலுவானதொரு இயக்கத்தைக் கட்டமைப்பதோ, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு எதிரான உழைப்பாளி விவசாயி கூட்டணியை ஏற்படுத்துவதோ சாத்தியமில்லை.

தொழில் மற்றும் வணிக மூலதனத்தைப் பொருத்தமட்டில் இந்த பகுப்பாய்வு புதிய தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவை மட்டுமே கணக்கில் கொள்கிறது. முதலாளித்துவ வர்க்கங்களில் இருந்து வலிமையான கார்பரேட் நிறுவனங்களின் வலிமையான படிநிலைகள் எழுந்துள்ளன, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோடு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவிதமான கூட்டணிகளை ஏற்படுத்துவதை அது கவனப்படுத்துகிறது. கார்பரேட் முதலாளித்துவத்தின் மீது கவனம் குவிந்துள்ளது.

பெரு முதலாளிகளை உருவாக்கும் பெரும் மூலதனத்தின் அனைத்துப் பிரிவுகளின் மீதும் கவனம் விரிவாக்கப்படவேண்டும். முன்னமே குறிப்பிட்டதைப் போல, அது பெரும் கார்ப்பரேட்டுகளைக் குறித்தானது மட்டுமல்ல, மற்ற வகையிலான மூலதனவுடைமை மற்றும் வளங்களின் மீதான கட்டுப்பாடு என அனைத்துமாகும்.

பிராந்திய முதலாளிகள் மற்றும் பெருமுதலாளி அல்லாதவர்கள்:

பிராந்திய முதலாளிகளின் நிலை குறித்த ஆய்வும், சித்தரிப்பும் போதுமான அளவு இல்லாதது மற்றுமொரு பிரச்சனை. அதில் பெரும்பான்மை பெரு முதலாளி அல்லாதார் என்ற வரையறுப்பின் கீழ் வருகிறது. ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தில் பிராந்திய முதலாளிகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக அவர்களுக்கு பெரு முதலாளிகளுடனான உறவிலும் மாற்றம் வந்துள்ளது. பெரு முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் மற்ற சிறு பிரிவுகள் இடையிலான முரண்பாடுகளைக் குறிப்பது மட்டும் போதுமானதல்ல. தாராளவாதம் அமலானதற்கு பின், பெரு முதலாளி அல்லாத முதலாளிகளுக்கும் தங்கள் மூலதனத்தை விரிவாக்கவும் அனைத்திந்திய பெரு முதலாளிகளோடு கைகோர்க்கவும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்த நிகழ்முறையின் வழியாக, பெரு முதலாளி அல்லாத முதலாளிகளில் சில பகுதியினர், தங்கள் பிராந்தியத்தில் மூலதன அடித்தளத்தை தக்கவைத்துக் கொண்டே பெரு முதலாளிகள் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.

அன்னிய மூலதனத்திற்கும் பெரு முதலாளி அல்லாதோருக்கும் இடையிலான நீடித்த உறவு இல்லாதது பெரு முதலாளிகளுக்கும் அவர்கள் அல்லாத முதலாளிகளுக்கும் இடையிலான முரண்களின் ஒன்றாகவிருந்தது. தாராளவாத அமலாக்கத்திற்குப் பின் இது மாறிவிட்டது. பெரு முதலாளி அல்லாத பகுதியினரும் அன்னிய மூலதனத்தோடு கைகோர்க்கும் வாய்ப்பைப் பெற்று அதன் பலன்களையும் அடைந்துள்ளனர். இதுவெல்லாம் பெரு முதலாளிகளுக்கும், பெரு முதலாளி அல்லாத முதலாளிகளுக்கும் இடையிலான முரண்களை மெளனமாக்கியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில், பிராந்தியக் கட்சிகளின் பாத்திரத்தைப் பற்றிய வரையறுப்பில் மேற்சொன்ன மாற்றங்கள் கணக்கில்கொள்ளப்படவில்லை. பிராந்தியக் கட்சிகளின் சில இயலாமைகளைக் குறிப்பிடுவதோடு பெரும்பாலும், பிராந்தியக் கட்சிகளை நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்க்கின்றது. அவர்களின் ஆவணம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

அவர்கள் (பிராந்தியக் கட்சிகள்) குறிப்பிட்ட மாநிலம் அல்லது பிராந்தியத்தின் முக்கியப் பிரிவுகளுடைய குரலையும், தேவைகளையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அந்தக் குறிப்பிட்ட பிராந்தியத்தின் மக்கள் முன்னேற்றத்திற்கான குரலை எழுப்புகின்றனர்தீர்மானகரமான அரசியல் கண்ணோட்டம் இல்லாதபோதும், சூழலின் அவசியத்தைப் பொருத்து இந்த பிராந்தியக் கட்சிகள் கம்யூனிஸ்டுகளோடு கரம்கோர்க்க விரும்புகின்றனர்.

மேற்சொன்ன வகைப்படுத்துதலானது இந்தக் கட்சிகளை இடது ஜனநாயக அணியில் இணைக்க முனைகிறது.

பிராந்திய முதலாளிகளிடையே கடந்த இருபதாண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ள மாற்றங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்க முடியாதபோதும், அடுத்தடுத்த கட்சி தீர்மானங்களில் பிராந்திய முதலாளிகளின் பாத்திரத்திலும், நிலைமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் விளைவாக பிராந்தியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிராந்தியக் கட்சிகளுடன் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை நடைமுறை உத்திக்குள் அடங்கும் என்கிறபோதும், பிராந்தியக் கட்சிகளின் வர்க்க அம்சத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொலைநோக்கு உத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது, இது நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வேலைத்திட்ட பிரச்சனைகளை விவாதிப்போம்:

தொகுத்துக் கூறினால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு குறித்த வகைப்படுத்துதலில் குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளது, அது மார்க்சிஸ்ட் கட்சியின் புரிதலோடு நெருங்கச் செய்கிறது. வேலைத்திட்டத்தின் மேலும் சில அம்சங்களில் பல்வேறு வர்க்கங்களின் மீது முதலாளித்துவ வளர்ச்சியின் தாக்கம் சரியாக ஆராயப்பட்டுள்ளது. இருப்பினும், வர்க்க பகுப்பாய்வுகளிலும், மற்ற வர்க்கங்களின் பங்கு பற்றி விளக்குவதிலும் சில குறைபாடுகள் இன்னமும் உள்ளன. ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதிலும் சோசலிசத்திற்கு மாறிச் செல்வதிலும் தொழிலாளி வர்க்கம் தலைமைப்பாத்திரத்தை ஏற்கவேண்டியது அடையாளம்காணப்படவில்லை. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவ்வபோதைய உத்தி சார்ந்த முடிவுகளில் பழைய புரிதல்கள் நீடிக்கின்றன. இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனைகளை ஆய்வுக்குட்படுத்துவது கூடுதல் ஊக்கமளிக்கிறது. புதிய திட்டத்தை ஏற்றுக் கொண்ட 22 வது மாநாட்டில், கட்சியின் திட்டத்தை மறு ஆய்வு செய்து தொடர்ந்து மேம்படுத்த ஏ.பி.பரதன் தலைமையில் ஒரு வேலைத் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தோழர் பரதனின் எதிர்பாராத இழப்பின்போதும், மேற்சொன்ன பணி தொய்வின்றித் தொடருமென நாம் நம்புகிறோம்.

தற்போதைய அரசியல் மாற்றங்கள் தொடர்பாகவும், பின்பற்ற வேண்டிய உத்திகள் தொடர்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையில் விவாதங்கள் தொடர்கின்றன. தொடரும் விவாதங்கள் மற்றும் கூட்டுச் செயல்பாடுகளின் இடையே, திட்டம் சார்ந்த விவாதங்களையும் மேற்கொள்வதும் பயனுள்ளதாக அமைந்திடும் என்று எதிர்பார்க்கலாம்.

(மார்க்சிஸ்ட் இணையதளத்தில் கருத்துக்களை பதிவு செய்யும் வசதி உள்ளது. விவாதிக்க அழைக்கிறோம்)



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: