மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?


கேள்வி: திராவிட அரசியல் கட்சிகள் பிராந்திய முதலாளிகளின் நலன்களை பிரதிபலிக்கின்றனவா? அவர்களிடம் தற்போது திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?

டி.கே.ரங்கராஜன் : குறிப்பிட்ட கருத்தியல் என்பது குறிப்பிட்ட காலச் சூழலில் உருவாகிறது. அந்த காலம், தேவை மாற்றம் பெற்று, முடிவடைகின்றபோது வேறு சில கருத்துக்கள் சமூக முரண்பாடுகள் அடிப்படையில் உரு வாகின்றன. வரலாற்றில் ஒரு கருத்தியல் என்றைக்கும் அதே நிலையில் உயிருடன் இருக்க வேண்டுமென்ற அவசியம் இருப்பதில்லை.
திராவிட இயக்கம் தோன்றிய காலத்தின் அரசியல், பொருளாதாரச் சூழலை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்று அவர்கள் பிராமண மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று நினைத்தார்கள். தமிழக முதலாளிகள் முன்னுக்கு வந்த பிறகு அந்த பிராமண எதிர்ப்பு அவர்களுக்கு தேவைப்படவில்லை. நீதிக் கட்சியினுடைய பாரம்பரியம்தான் நாங்கள் என்று திமுக தலைவர் இன்றும் கூறிக் கொண்டேயிருக்கிறார். அந்த பாரம்பரியத்தின் வர்க்கப் பின்னணி என்ன? நீதிக் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் பொருளாதார நிலையில் பெரும்பாலும் ஜமீன்தார்கள், மிராசுதார்கள். (பனகல் ஜமீன்தார் பெயரில் அரசு கட்டிடம் சைதாப்பேட்டை – பனகல் – பார்க் – டாக்டர் நடேசன் பார்க்.)
ஜமீன் ஒழிப்புக்காக கம்யூனிஸ்டுகள் போராடினர். காங்கிரஸ்காரர்களும் பெயரளவில் அதனை பேசினர். அந்நிலையில் ஜமீன்தார்களும், மிராசுதார்களும் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதுதான் அதனுடைய வர்க்க நிலை. அதேநேரத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவும், பிராமண எதிர்ப்பாளர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். கல்வியி லும் தொழிலிலும் பிராமணர்களுக்கு போட்டியிட அந்த எதிர்ப்பு அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆகவே அவர்கள் காலனி ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். தொழில் முதலீட்டாளர்களும் அதற் குள்ளே இருந்தார் கள். இந்தியன் வங்கியை துவகிய இராஜா முத்தையா செட்டியார் மற்றும் இராமசாமி செட்டியார் நீதிக் கட்சியில் தீவிரமாக செயல்பட்டனர். நீதிக்கட்சியில் இருந்து கொண்டே அவர்கள் தங்களது தொழில்களை வளர்த் தனர். நீதிக்கட்சியின் ஆரம்பத்தில் (1916-1946) பிராமணர்கள் உறுப்பினர்களாக முடியாது என்று சட்ட விதி இருந்தது. ஆனால் அதன் இறுதி காலத்தில் பிராமணர்களையும் அக்கட்சி, உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு தன்னுடைய பிராமண எதிர்ப்புக் கொள்கையை மாற்றிக் கொண்டது.
சென்னை பிராந்தியம் முழுவதும் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்த இந்த முதலாளிகள் விரும்பினார் கள். இது, அவர்களின் வர்க்க சார்பு தன்மை. இதற்காக அவர்களுக்கு தனி நாடு தேவைப்பட்டது. ஆகவே திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. சென்னை ராஜதாணி என்பதுதான் திராவிட நாடு. வர்த்தகத்தில், தொழிலில், விவசாயத்தில் இவைகள் எங்களோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் பிராமண ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என்றார்கள்.
கரிமுத்து செட்டியார், ராஜா சர் முத்தையா, எம்.ஏ.சிதம்பரம், அண்ணாமலை செட்டியார், பி.டி.ராஜன், எம்.ஏ.முத்தைய செட்டியார், தியாகராய செட்டியார் போன்றோர் முதலீடுகளைச் செய்தனர். கரிமுத்து தியாகராஜ செட்டியார், தென் மாவட்டத்தின் பஞ்சாலை முதலாளி. இவர்கள் அனைவரும் அப்போதே இணைந்து 1907ல் இந்தியன் வங்கியை துவங்கினர். பின்னர் அண்ணமலை செட்டியார் அதன் இயக்குனராக இருந்தார். பிறகு இராஜா சர் முத்தையா செட்டியார் அதன் இயக்குனராக இருந்தார். பர்மா, சிங்கப்பூர், போன்ற நாடுகளில்கிளைகளை துவங்கினர். ஜின்னிங் தொழிற்சாலை, பஞ்சாலை, பென்சில், அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள் துவக்கினர்.
1942 மார்ச் 30ல் சுந்தரபாண்டி நாடார், சாமியப்ப முதலியார், ஏசி.முத்தைய செட்டியார் ஆகிய முதலாளிகள் கிரிப்ஸினை சந்தித்து திராவிட நாடு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கிரிப்ஸ் திட்டத்தை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர்.
1944ல் பெரியார் நீதிக் கட்சியிலிருந்து விலகி திராவிடர் கழகம் உருவாக்கினார். உண்மை வரலாற்றை நேசிப்பவர்கள் சமூக தளத்தில் எந்த காலத்திலும் பெரியாருடைய பங்கை குறைத்து மதிப்பிடமாட்டார்கள். அதேநேரத்தில் பெரியார் எந்த காலத்திலும் ராஜா சர் முத்தைய செட்டியார் போன்ற முதலாளிகளையோ, ஜமீன்தார்களையோ எதிர்த்தது கிடையாது. ஒரு கட்டத்தில் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் தவறு என்று கூட கூறியிருக்கிறார். சமூக வாழ்க்கையில் முற்போக்கா கவும், பொருளாதார வாழ்க்கையில் முதலாளித்துவப் பார்வையோடும் இருந்தது திராவிடர் கழகம். 1948ல் அறிஞர் அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று திருமுலர் மந்திரத்தைக் கூறியே திமுகவை உருவாக்கினார். தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டாளர்களை மேலும் ஈர்ப்பதற்காகவே திரவிட முன்னேற்ற கழகம் சாதி மத வித்தியாசமில்லாமல் தென்னகத்திற்கு முதலீடுகள் வேண்டும் அல்லது திராவிட நாடு வேண்டும் என்று கூறியது. அவர்களுடையவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, என்ற கோசம் அனைத்து சாதி முதலாளி களும் வளர வேண்டும் என்பதுதான். இது ஒரு வர்க்க கோசம். தொழில் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கோசம்.
பெரியாரும் அண்ணாவும் முகமது அலி ஜின்னாவை சந்தித்து, திராவிட நாடு கோரிக்கையை நீங்கள் ஆதரியுங்கள், நாங்கள் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்கிறோம் என்றார்கள். அதற்கு முகமது அலி ஜின்னா ஆதரவு அளிக்கவில்லை. அம்பேத்கரும் திராவிட நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. இவர்கள் துவக்கத்தில் ஆதரித்து பிறகு பின்வாங்கிவிட்டனர். ஜின்னா, பாகிஸ்தான் ஆளுநர், பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவர். அரசியல் ரீதியாக நேச சக்திகள் என்று கருதிய யாரும் திராவிட நாடு கோரிக் கையை ஆதரிக்கவில்லை. மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை பிரிக்கப்பட்ட பின், அந்த மாநிலங்களில் யாரும் திராவிட கோரிக் கைக்கு ஆதரவளிக்கவில்லை. திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டது.
அண்ணாவின் பேருரைகளில் கூட, அவர் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எந்த இடத்திலும் எதிர்த்தது கிடையாது. கூடுதலான நிதி தமிழகத்திற்கு வேண்டும், கூடுதலான தண்ணீர் தமிழகத்திற்கு வேண்டும் என்கிற உரிமைதான் மாநில சுயாட்சி என்று வந்ததே தவிர வேறொன்றுமில்லை. இந்தியப் பெரு முதலாளிகளின் கட்சியான காங்கிரஸ் கட்சி தன்னுடைய தளத்தை விரிவுபடுத்துவதற்கு சிறு, நடுத்தர முதலாளி களை வளர்த்தெடுப்பதற்கு முயற்சித்தது. சந்தைகள் வளர்கிறபோது தமிழக முதலாளிகள் வேகமாக வளர்ந்தார்கள். அதற்கு முதலாளித்துவ வளர்ச்சி சூழல், காங்கிரசினுடைய 5 ஆண்டு திட்டம் அனைத்தும் உதவி செய்தது, இந்த உதவியால் தமிழக முதலாளிகள் பிராந்தியத்தைத் தாண்டி வெளியே செல்ல ஆரம்பித் தார்கள் இயற்கையாகவே அவர்களது சந்தை விரிவடைந்தது. தமிழக முதலாளிகள் தேசப்பொருளா தாரத்தில் பங்கு வகிக்கும் சூழல் உருவானது. அதன்பின் மத்திய அரசில் பங்கேற்பதற்கான தேவை திமுகவிற்கு வருகிறது. தங்களது வர்க்க அடிப்படையாக உள்ள தமிழக முதலாளிகள் தேசிய அளவில் தங்களை விரிவுபடுத்திக் கொள்வதற்கு,மத்திய அரசில் பங்கு பெறுவது அவசியம் என்ற தர்க்கரீதியான நிலைபாட்டுக்கு திமுகவினர் வருகின்றனர். அதிமுகவிற்கும் அதே போன்ற தேவை இருந்தது.
அவசர நிலையை எதிர்த்தது என்பது திமுகவின் வரலாற்றிலேயே முக்கியமானது. ஜனநாயகம் என்பது முக்கியதேவை. பிஜேபிக்கோ, காங்கிரசுக்கோ சர்வாதி காரம் தேவைப்படலாம், ஆனால் ஒரு மாநிலக் கட்சிக்கு சர்வாதிகாரம் தேவைப்படாது. ஒரு மாநிலக் கட்சிக்கு தேர்தல் முறை கூட ரத்தானால் அது இறந்துபோய்விடும். வீடு இருந்தால்தான் போர்டு மாட்ட முடியும் என்பதில் திமுக தெளிவாக இருந்தது.
1990க்குப் பிறகு தேசிய முதலாளிகள் சர்வதேச அளவில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். ஹீண்டாய் இங்கு வருகிறது, தமிழக முதலாளிகள் தென்னாப் பிரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். ஒட்டுமொத்த மாக, மாநில முதலாளித்துவ கட்சிகளின் வளர்ச்சியை மூன்று படிநிலைகளாகப் பார்க்க வேண்டும்.
1, பிராந்திய சந்தை தேவைப்பட்டது,
2, பிறகு இந்திய சந்தை தேவைப்பட்டது,
3, இன்று உலகச் சந்தையும் தேவைப்படுகிறது, திமுகவும் அதிமுகவும் வெறும் வார்த்தைகளில் இந்த உலகமயத்தை எதிர்ப்பார்களே தவிர, அதன் பெருமுதலா ளிகளின் இளைய பங்காளியாக இருப்பதுதான் அவர்களுடைய வர்க்க நிலை. அவர்களுடைய மற்ற கொள்கைகளான, சாதி மறுப்பு போன்றவைகளெல்லாம் அவர்களுடைய பழைய கதை. இன்று அது தேவையில்லை என்று கருதுகிறார்கள். ஆகவே, திராவிடக் கருத்தியல் என்பது அவர்களுடைய அன்றாட நிலையல்ல. ஏனெனில் இன்றைய உலகமயச் சூழலில் தனியார் துறை வேகமாக வளர்கிறபோது, இந்த கோஷங்கள் எடுபடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். திராவிடர் கழகம் பெண் விடுதலை, சாதி மறுப்பு போன்ற பிரச்சனைகளில் கூட கடந்த காலம் போன்று செயல்படுவதில்லை. இவற்றின் காரணமாகத்தான் பாஜகவோடு திமுக, அதிமுக கைகோர்க்க முடிகிறபோது அதனுடைய திராவிடக் கருத்தியல் என்பது அவர்களிடம் முற்றிலுமாக விடை பெற்று விட்டது என்றுதான் சொல்ல முடியும். தீண்டாமை ஒழிப்பு, சாதி மறுப்பு திருமணங்கள் போன்றவற்றை முன்னுக்கு கொண்டு வந்ததில் திராவிடர் கழகத்திற்கு முக்கிய பங்குண்டு. அந்த அம்சங்களில் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமை இன்றைய இளைய தலைமுறையினருக்கும், அவற்றை வழிநடத்தி மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு கம்யுனிஸ்ட்களுக்கும் இடதுசாரிகளுக்கும் உண்டு.

(தொகுப்பு : சுதிர் ராஜா)



One response to “திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?”

  1. […] தன்மை எனும் பிரச்னை குறித்து கேள்வி -பதில் பகுதியில் தோழர் டி.கே.ரங… பதில் அளித்துள்ளார். வாசகர் […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: