மானுட வரலாற்றில் ரஷ்ய புரட்சி ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை மனிதனை மனிதன் ஒடுக்கும் வரலாறாகவே மனித சமூக வரலாறு நீடித்து வந்த நிலையில், ஒடுக்குமுறையினையும், சுரண்டலையும் ஒழித்துவிட முடியும் என்று உலகுக்கு புது வழி காட்டிய புரட்சி,ரஷ்யப் புரட்சி.
மனித சமத்துவம் கனவாக மட்டுமே இருந்த சூழலில், ரஷ்யப் புரட்சி முற்றிலும் புதிய ஒரு சமூகத்தை படைத்தது. புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையில் அமைந்த சோவியத் சோசலிச அரசு,மக்களை முதன்மைப் படுத்திய அரசு. நிலம்,தொழில் அனைத்தும் மக்கள் சமூகத்தின் உடைமையாக்கிய அரசு.
சோவியத்தில் இருந்து பிரிந்த நாடுகளில் இன அடிப்படையில் மோதல்களும், அடையாள அரசியல் உலகம் முழுவதுமே தலைதூக்கியுள்ள நிலையினையும் இன்று நாம் காண்கிறோம். இனப் பிரச்னைக்கு ஜனநாயத் தீர்வினைக் கண்ட பெருமை சோவியத் சோசலிசத்திற்கு உண்டு.பல நூற்றாண்டு இன ஒடுக்குமுறையை ரஷ்யப் புரட்சி முடிவிற்கு கொண்டு வந்தது.
சோவியத் புரட்சி காலனியாதிக்கத்தில் இருந்து பல நாடுகள் விடுபட தூண்டுகோலாக இருந்தது என்பதும்,அன்று இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளின் மக்களுக்கு உத்வேகம் அளித்த சமுக முறையாக சோவியத் சோசலிசம் விளங்கியது என்பதும் வரலாற்று உண்மைகள்.
நாடுகளை அடிமைப்படுத்தும், ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளுக்கு சவால் விடுத்த அரசாக சோவியத் சோசலிசம் திகழ்ந்தது.குறுகிய காலத்தில் மிகப் பெரும் உலகப் பொருளாதாரமாக உயர்ந்தது, சோவியத் நாடு. கல்வி,சுகாதாரம்,வேலை வாய்ப்பு அனைத்திலும் உண்மையான சமூக நீதியை அது நிலை நாட்டியது.20-நூற்றாணடு வரலாற்றை அடியோடு புரட்டிப் போட்ட நிகழ்வாக மட்டுமல்லாது,எதிர் வரும் நூற்றாண்டுகளிலும், மீண்டும் மீண்டும் அலசி ஆராய்கிற வரலாற்று நிகழ்வாக ரஷ்ய புரட்சி திகழுகிறது.
சோசலிச இலட்சியப்பார்வையுடன், மக்கள் ஜனநாயக உழைக்கும் மக்களின் அரசு இந்தியாவில் மலர வேண்டும் என்ற நோக்கோடு மார்க்சிஸ்ட் கட்சி செயலாற்றி வருகின்றது.இந்த இலட்சியங்ளுக்கான தத்துவார்த்தப் பங்களிப்பை கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக “மார்க்சிஸ்ட்” மாத இதழ் மேற்கொண்டுவருகிறது. இந்த (2016-2017) ஆண்டு முழுவதும் ரஷ்ய புரட்சியின் மகத்துவம் குறித்தும்,அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் பல படைப்புக்கள் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவர உள்ளன.
- தற்போதைய நவம்பர் இதழில் மறைந்த தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் எழுதிய கட்டுரையை வெயிட்டுள்ளோம்.
- ரஷ்ய புரட்சியின் மகத்துவம் இந்தியாவில் ஒளிவீசிய காலங்களில் வாழ்ந்த தலைமுறையைச் சார்ந்தவர்,தோழர் சுர்ஜித்.சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையோடு நட்புரீதியாகவும்,விமர்சன ரதியாகவும் தொடர்புகளை கொண்டிருந்தவர்.வாழ்நாள் முழுவதும் சோசலிசப் புரட்சி இலட்சியக கனல் குன்றாமல் வாழ்ந்தவர். அந்த மாண்புகளைக் கொண்டதாக அவரது கட்டுரை திகழ்கிறது.
- முதலாளித்துவம் பெண்ணடிமைத்தன பிற்போக்குத்தனங்களை சமூகத்தில் நீடிக்கச் செய்துள்ளது.சோவியத் சோசலிசம் பெண் சமத்துவம் என்ற இலட்சிய பயணத்தில் சிகரங்களைத் தொட்டது.தோழர் வாசுகி இந்த பரிமாணத்தை அலசுகிறார்.
- சோவியத் பொருளாதாரம் சாதித்த சாதனைகளை தோழர் ஆத்ரேயா சித்தரிக்கின்றார்.
- புரட்சி, தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினை தோழர் சிசுபாலன் பதிவு செய்துள்ளார்.
- மார்க்சிய செவ்வியல் இலக்கிய அறிமுகப் பகுதியில் “போல்ஷிவிக் கட்சியின் வரலாறு”நூலை அறிமுகப்படுத்தியுள்ளோம். புரட்சியை வழிநடத்திய ‘ஒரு புதிய வகை கட்சி ‘என்று வரலாற்று நோக்கில் அழைக்கப்பட்ட போல்ஷிவிக் கட்சியின் வரலாற்றினை தோழர் செல்வா அறிமுகப்படுத்தியுள்ளார்.
- தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகி வரும் மாநில கட்சிகளின் மாறிவரும் தன்மை எனும் பிரச்னை குறித்து கேள்வி -பதில் பகுதியில் தோழர் டி.கே.ரங்கராஜன் பதில் அளித்துள்ளார். வாசகர் வட்டங்களில் விமர்சன கருத்துக்களை பகிர்ந்துகொண்டு அக்கருத்துக்களை ஆசிரியர் குழுவிறகும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
– ஆசிரியர் குழு.