சுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை!


ஏ.கே.பத்மநாபன் நேர்காணல் …

14324230_296972730682567_2748406671079088980_oசெப் 2 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் வெற்றியாக எதைக் கருதுகிறீர்கள்?

வெற்றி என்பதில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. இது தனிப்பட்ட ஒரு வேலை நிறுத்தம் அல்ல. கடந்த 25 ஆண்டுகளில் நவதாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்கு எதிராக இந்திய தொழிலாளர்கள் நடத்தும் 17 வது, நாடுதழுவிய வேலை நிறுத்தம் ஆகும்.

1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், புதிய தாராளமயக் கொள்கைகளை அமலாக்கத் தொடங்கியது. (எனினும், 1980களிலேயே இந்திகாந்தி அரசாங்கம் ஐ.எம்.எப் உடன் ஒப்பந்தம் போட்டு ரகசியமாக வைக்கப்பட்டதை பத்திரிக்கைகள் வெளிக்கொண்டுவந்தன) குறிப்பாக, ‘புரட்சியின் 25 ஆண்டுகள்’ என முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடிக் கொண்டுள்ள சூழலில், அந்தக் கொள்கைகளுக்கு வலுவான எதிர்ப்பை இந்திய தொழிலாளி வர்க்கம் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் இப்போராட்டங்களில் பங்கேற்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகின்றது.

2013 பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி, இந்திய வரலாற்றில் காணாதவகையில் 48 மணி நேர வேலை நிறுத்தம் நடந்தது. 15 கோடிப்பேர் கலந்துகொண்ட அந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்களில் 40 சதவீதம் பேர் எந்தத் தொழிற்சங்கத்திலும் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. அதாவது, தொழிலாளர் சட்டத் திருத்தங்களால் நேரடியாக பாதிக்கப்படும் ஆலைத் தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர். உதாரணமாக ஹரியானா குர்கானில் இருந்து ராஜஸ்தான் எல்லை வரையில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள். ஹைதராபாத் ரெங்காரெட்டி மாவட்டத்திலும், புனே தொழிற்பேட்டையிலும், நாசிக்கிலும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பங்கேற்பைச் சொல்லலாம்.

தங்களை தொழிலாளர்களாக நடத்தவே மறுக்கும் நிலைக்கு எதிராக திட்டப்பணியாளர்கள் (ஸ்கீம் வொர்க்கர்ஸ்) வேலை நிறுத்தங்களில் பங்கேற்றனர்.

வேலைநிறுத்தக் கோரிக்கைகள் தொழிலாளர்களிடம் எடுத்துச் செல்லப்படும்போது, அவர்கள் உணர்ந்து பங்கேற்பது இங்கே முக்கியமாகச் சொல்லவேண்டியதாகும். இந்தியாவில் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை அதிகம், அதே சமயம் சங்கங்கள் ஏதிலும் இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம். இந்த சூழலில், செப்.2 ஆம் தேதி நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் (கடந்த இரண்டு வேலை நிறுத்தங்களில் கடைசி நேரத்தில் பிஎம்எஸ் விலகிக்கொண்டபோதிலும்) 18 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இது முதல் அம்சம்.

2009 ஆம் ஆண்டு வரையிலான 12 வேலைநிறுத்தங்களை இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகள் ஒருங்கிணைத்தன. அந்தப் போராட்டக் கோரிக்கைளை ஏற்ற பிற சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் (சங்கங்கள் போராட்டத்தில் இணையாதப்போதிலும் கூட) இப்போராட்டங்களில் பங்கேற்றனர். இந்த நிர்ப்பந்தமும், அரசின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள தீவிரமான மாற்றங்களும், ‘வேறு மாற்று இல்லை’ என்று பேசிவந்த சங்கங்களையும் போராட்டத்தில் இணைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, 2010 ஆம் ஆண்டிலிருந்து ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்களும் அதைத் தொடர்ந்து பிஎம்எஸ் சங்கங்கள் இணைந்தனர். (இரண்டு வேலை நிறுத்தங்களில்தான் பிஎம்எஸ் பங்கேற்றது என்றபோதிலும்) இது இரண்டாவது அம்சம் ஆகும்.

குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உண்மை ஊதியம் என்பவை என்ன?

இந்தியாவில் பல கொள்கைகள் உள்ளன. ஆனால், அரசுக்கென்று ஒரு ஊதியக் கொள்கை மட்டும் இல்லை. அப்படியொரு கொள்கை வேண்டுமென 1957 ஆம் ஆண்டில், 15வது இந்திய தொழிலாளர் மாநாடு விவாதித்து, (குடும்பத்தில் 3 பேர் இருப்பதாக மட்டும் ஒரு அடிப்படையை எடுத்துக் கொண்டு) உடலுக்குத் தேவையான கலோரி உள்பட கணக்கிட்டு அறிவியல் பூர்வமானதொரு கொள்கையை முன்மொழிந்தது. அந்தக் கொள்கையை ஏற்பதாக இன்றுவரையில் எந்த அரசும் சொல்லவில்லை.

1991 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒன்றில், தொழிலாளர்களின் மாறியுள்ள தேவைகளைக் கணக்கில்கொண்டு 25 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கவேண்டுமென கூறியது. அப்படிக் கணக்கிட்டால், இன்றைய விலைவாசி நிலைமையில் ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வருகிறது. இருப்பினும் நடப்பில் உள்ள மிகக் குறைந்த ஊதியத்திற்கும், கோரிக்கைக்குமான இடைவெளி மிக அதிகமாக உள்ள சூழலில், மத்திய அரசின் 7 வது ஊதியக் குழு நிர்ணயித்த ரூ.18 ஆயிரமாவது, குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்க என்று கோரிக்கை வைத்துள்ளோம். இது ஒரு இடைக்கால இலக்குதான்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். ஊதியம் உயராமலே இருந்து விலைவாசி மட்டும் உயரும்போது, உண்மை மதிப்பில் குறைவு ஏற்படுகிறது. ஆண்டுகள் நகர நகர இந்த இடைவெளி கடுமையாக அதிகரிக்கிறது. திரட்டப்பட்ட தொழில்களில் பஞ்சப்படி கணக்கிடப்படும்போதும் அனைத்து தொழிலாளருக்கும் பஞ்சப்படி கிடைப்பதில்லை. எனவேதான், ஊதியம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஒவ்வொரு சங்கமும் தன் நலனை மையப்படுத்தித்தானே செயல்படும். சிஐடியு ஏன் தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்க விரும்புகிறது?

இப்போது சிஐடியு மட்டும்தான் இதைச் செய்கிறதென்று சொல்லவில்லை. அதே சமயம், தொழிலாளர்களின்  பலம் என்பது அவர்களுடைய ஒற்றுமையில்தான் இருக்கிறது. நாடு முழுமையிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, ஒரு சமூக ரீதியிலான மாற்ற வேண்டும் என்று போராடுவதே சிஐடியுவின் நோக்கம். ஆரம்பத்தில் தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் தனிப்பட்ட பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகத்தான் வருவார்கள். ஆனால், அதோடு முடிந்துவிடக் கூடாது.

உதாரணமாக, விலைவாசி உயர்வுக்கு ஏற்ற ஊதியத்தை எடுத்துக் கொள்வோம்.  ஒரு முதலாளியால் ஊதியத்தைக் கொடுக்க முடியுமே தவிர, விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அரசின் கொள்கைகளில் மாற்றம் வேண்டும். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதுமே உண்மை ஊதியம் குறைந்துகொண்டே வருகிறது. கொள்கையோடு தொடர்புபடுத்தி சிந்திக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் வளர்வதற்கு பரந்துபட்ட ஒற்றுமை தேவைப்படுகிறது.

பல்வேறு சங்கங்களில் செயல்பட்டுவந்த நாங்கள் 1970 ஆம் ஆண்டில் சிஐடியு அமைப்பை உருவாக்கினோம். அப்போதே மிகத் தெளிவான முறையில் ‘ஒன்றுபடுவோம், போராடுவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தோம். ஒற்றுமை என்பது போராடுவதற்காக, அதற்கு பயன்படாத ஒற்றுமையை ஏற்க முடியாதென்பது சிஐடியு நிலைப்பாடு. இதற்காகத்தான் சிஐடியு இந்த கோஷத்தை எழுப்பியது.

அப்போதே 1970 ஆம் ஆண்டுகளில் யுனைட்டட் கவுன்சில் ஆப் டிரேட் யூனியன்ஸ் (யூசிடியு) என்ற பொது மேடையை உருவாக்கினோம். அதில், சிஐடியு, இன்சூரன்ஸ் ஊழியர்கள், தபால் ஊழியர்கள், ஹெச் எம் எஸ் அமைப்பில் ஒரு பகுதி என ஒரு சிறு பகுதி தொழிற்சங்கங்கள் இணைந்து நின்றன. அப்போதே என்.சி.டியு என்று மற்றொரு மேடை உருவாக்கப்பட்டு இந்த ஒற்றுமையை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1974 ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நடைபெற்றது. அதன் பின் பல்வேறு கட்ட அரசியல் மாற்றங்களைக் கடந்து, 1980 ஆம் ஆண்டில் நேஷனல் கேம்பைன் கமிட்டீ என ஒரு கூட்டு மேடை உருவானது. அதில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச் எம்எஸ்-இல் ஒரு பகுதி இணைந்தன. அது ஸ்பான்சரிங் கமிட்டி ஆப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் என்று மேலும் விரிவானது.

அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட வெகுஜன இயக்கங்களில் தேசிய மேடை ‘என்பிஎம்ஓ’ என்ற பொது மேடையில் விவசாயிகள், மாணவர் என பல சங்கங்களும் இணைந்தன. இந்த அமைப்பு 1982 ஆம் ஆண்டு நடத்திய போராட்டக் கோரிக்கைகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இதன் விளைவாக விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒரு சட்டம் உருவாக்கும் தேவை எழுந்தது, இருப்பினும் அரசு அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத்தவறியது. இப்படி, ஒன்றுபட்ட போராட்டங்களுக்கான தொடர் முயற்சி இன்றைக்கு மத்திய தொழிற்சங்களின் ஒற்றுமையாக மலர்ந்திருக்கிறது.

அதே சமயம், எதிர்த் தரப்பு வலுவாக இருக்கிறது. தொழிலாளர்கள் மீது வலுவான தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. தற்காப்பு நிலையில் இருத்தப்பட்டிருக்கிற தொழிலாளிவர்க்கத்தின் முன்னேற்றத்தை சாதிக்க வேண்டியுள்ளது. தொழிலாளிகளின் ஒற்றுமை விரிவுபடுத்தப்பட்டு அனைத்து உழைப்பாளி மக்களின் ஒற்றுமையாக கொண்டுவரப்படவேண்டும். இதுவரை நடைபெற்றுள்ள கூட்டுப் போராட்டங்களால் நாம் ஒரு படி முன்னேற்றம் அடைந்துள்ளதாகப் பார்க்க வேண்டும். அதே சமயம், இலக்கை நோக்கிய பயணம் நீண்டதென்று உணர்ந்திருக்கிறோம். அதற்கான உணர்வு மட்டம் உயர வேண்டும். போகவேண்டிய திசையில் சரியாக நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

உலகமயமாக்கலின் தாக்கமும் – தொழிலாளர் இடம்பெயர்தலும் அதிகரித்துள்ள சூழலில் தொழிற்சங்கங்களால் தொழிலாளர்களைத் திரட்ட முடிகிறதா?

இரண்டு வெவ்வேறு விசயங்களை இணைத்து ஒரு கேள்வியாக கேட்டிருக்கிறீர்கள். தொழிலாளர்கள் வேலையைத் தேடி ஓடுவது ஒன்றும் நவீன காலப் பிரச்சனை அல்ல. கடந்தகாலத்தில், மலேசியாவிற்கும், இலங்கைக்கும், பிஜி தீவுகளுக்கும் கடத்திச் செல்லப்பட்டு வேலைவாங்கப்பட்டிருக்கலாம். அல்லது கங்கானிகள் அழைத்துச் சென்றிருக்கலாம். உலகம் முழுவதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட குடியேற்றங்கள் நடந்துள்ளன.

இடம்பெயர்தல் என்பது பல வடிவங்களில் நடக்கிறது. கிராமங்களில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு இடம்பெயர்தல். மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்தல். சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டை நோக்கி இடம்பெயர்வது. அதிலும், மூளை உழைப்பாளர்களும், உடல் உழைப்பாளர்களும் உள்ளனர்.

அஸ்ஸாமிலிருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களைத் திரட்டவேண்டுமென்றால் அவர்களின் மொழி தெரியாமல் இங்கு தொழிற்சங்க ஊழியர்கள் படும் பாடு ஒரு சவால்தான், அதற்கான தீர்வுகளை விவாதிக்கிறோம். மொழி உள்ளிட்ட தடைகளை நீக்க வேண்டியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் இந்தியத் தொழிலாளர்களை திரட்டும் பணிக்கு உதவியாக சிஐடியு தொழிலாளர்கள் அங்கு சென்றுவந்தோம். கிரேக்கம் சென்றபோது, நானே அவ்வாறு தொழிலாளர்களிடம் பேசியுள்ளேன்.

இவ்வாறான தொழிலாளர்களில், தொழிற்சங்க உரிமையே இல்லாத பகுதிகளின் நிலைமை வேறு. ஐரோப்பிய, ஆப்ரிக்க நிலைமைகள் வேறு. தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்கள் செல்வோர், அங்கிருந்து இங்கே வருவோரின் நிலைமைகள் வேறு. இந்த அனைத்துப் பகுதி தொழிலாளர்கள் மீதும் உழைப்புச் சுரண்டல் நிகழ்ந்தே வருகிறது. சுரண்டல் நடப்பதை ஏற்றுக்கொள்ளாத பகுதியினர் மீதும் சுரண்டல் நடந்தே வருகிறது.

உலகமயம் – நவீன கால சூழலின் வெளிப்பாடு. உலகமயத்தின் பிரச்சனை என்னவென்றால், மூலதனம் உலகின் எந்த மூலைக்கும் பாயலாம், ஆனால் தொழிலாளிக்கு அத்தகைய சுதந்திரம் இல்லை என்பதுதான். இந்தியாவில் மூலதனம் தங்குதடையற்றுப் பாய்ந்து இந்திய வளங்களை சுரண்ட அனுமதிக்கப்படுகின்றது. மராட்டியத்திலும், குஜராத்திலும் முதலாளிகளுக்கு சலுகைகளும், வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றன. அதேசமயம் தொழிலாளி, தன் விருப்பம்போல் வேலை இருக்கும் இடத்திற்குச் சென்று வேலை செய்ய முடியாது. அரசிடமிருந்து சலுகைகளும், வசதிகளும் கோர முடியாது. உலகமயத்தால் கிடைக்கும் வளர்ச்சியும் அனைவருக்குமானதாக இல்லை.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசுகள், நிதிக் கொள்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களால் தொழிலாளர் நலத்திட்டங்களே பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம் அவர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்பு ரீதியாக திறப்பட்ட, தொழிற்சாலைகளில் பணியாற்றுவோராக இல்லை. மேலும், இந்திய முதலாளித்துவம் வரலாற்று ரீதியாகவே, ஒரு வரையரைக்கு உட்பட்டுத்தான் வளர்ந்திருக்கிறது என்பதை இங்குள்ள உழைக்கும் மக்களின் நிலையும், குணாம்சங்களும் பிரதிபலிக்கின்றன. அதோடு உலகமயமாக்கலின் தாக்கத்தையும் அது காட்டுகிறது. விவசாய நெருக்கடியால் வேலை தேடி வருவோருக்கு வேலை கொடுக்கும் அளவு உற்பத்தித் துறை வளர்ச்சி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. ‘வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி’ என்ற முரண்பட்டதொரு நிலையையே எட்டியிருக்கிறோம். இத்தகைய சுரண்டலைத் தீவிரப்படுத்துவதில் அரசுகளும் உதவிபுரிகிறது.

தொழில் நிறுவனங்களின் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சங்கம் ஏற்படுத்துவதை பாதிக்கிறதா?

முதலாளித்துவ வளர்ச்சிமுறையின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாற்றங்கள் நடக்கின்றன. காண்டிராக்ட், அவுட்சோர்சிங் என்பதெல்லாம் அதன் பகுதியாக உருவாகின. நான் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். அந்தத் தொழிற்சாலையிலேயே  அனைத்துப் பாகங்களும் உருவாக்கப்பட்டு ’தரத்துக்கு நாங்கள் பொறுப்பு’ என்று மார்தட்டிய காலம் அது. இப்போது வெறும் ஸ்க்ரூ டிரைவர் தொழில்நுட்பமாகியிருக்கிறது. அதாவது தனித்தனி பாகங்களை வாங்கி, இணைப்பது மட்டுமே ஒரு தொழிற்சாலையின் பணியாகிறது.

இவை முதலாளித்துவ லாப வேட்கையில் அவர்களுடைய தேவையை ஒட்டி ஏற்படுகிற மாற்றங்கள். நிரந்தரத் தொழிலாளி நியாயம் கேட்கும்போது அவனைத் தோற்கடிக்க பலவீனப்படுத்த என்ன வழி? என யோசிக்கின்றனர். அன்று தொழிலாளர் நல அதிகாரியாக செயல்பட்டவரின் இடத்தில் ‘மனித வளத் துறை’ செயல்படுகிறது. ஆனால், அந்த ‘மனித வள’ நிர்வாகிக்கு ஒரு மனிதனோடு எப்படிப் பழகுவதென்று தெரியவில்லை. முன்பைவிடவும் சுரண்டல் மோசமாகியுள்ளது. அதே சமயம், உளவியலாக ஒரு தொழிலாளியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்வது, திருமண நாள் வாழ்த்து என சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

லாபத்தை எப்படியாவது அதிகப்படுத்த நடக்கும் முயற்சிகள் ஒரு பக்கமும், அதனால் ஏற்படும் விளைவுகளை நிர்வகிப்பது மறுபக்கமும் நடக்கின்றன. தொழிற்சங்கங்களும் தன்னை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தியே வந்துள்ளோம். செங்குத்தாக அமைப்புக் கட்டுவது மட்டுமல்ல, பக்கவாட்டிலும் சங்கங்கள் வளர்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் அதுசார்ந்த கோரிக்கைகளில் சங்கங்கள் வளர்க்கப்படுகின்றன. புதிய புதிய சவால்களைக் குறித்து விவாதித்து முடிவுகளை அடைகிறோம்.

இந்தியாவுக்கென பிரத்யேக நிலைமைகள் உள்ளனவே, அதனை சங்கம் கவனிக்கிறதா?

ஒரு வலு வாய்ந்த எதிரியை அதன் எல்லா முனையிலிருந்தும் சந்திக்க வேண்டிய சவால் தொழிற்சங்களுக்கு உள்ளது. சுரண்டலைத் தக்கவைக்கும் எல்லா வடிவங்களுக்கு எதிராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டே ஒரு சங்கம் செயல்படுகிறது. பன்முகத் தன்மை கொண்டதாக ஒரு சங்கம் இருக்க வேண்டும். பிரச்சனைகளில் இருந்து கொள்கைகளையும், அதிலிருந்து அரசியலையும் வந்தடையும் தெளிவு வேண்டும். இதுதான் இன்றைய தொழிற்சங்கம் செய்ய வேண்டிய பணியாகும். சிஐடியு தனது நோக்கமாக இதைத்தான் கொண்டிருக்கிறது. சுரண்டலற்ற சமதர்ம சமுதாயத்தை விரும்பும் ஒரு சங்கம் அப்படித்தான் செயல்பட முடியும்.

காற்று பலமாக அடிக்கிறது, புயலடிக்கிறதென்றாலும் அவைகளுக்கு நடுவில்தான் நாம் பணியாற்ற வேண்டும். விழுந்தும், எழுந்தும் எழுந்தும் விழுந்துமாக முன்செல்கின்றன  தொழிற்சங்கங்கள், நேரடியாக சங்கம் வேண்டாம் என்று மறுப்பது ஒரு பக்கம். சாதியைச்சொல்லி, மதத்தைச் சொல்லி, தரம் சொல்லி என்று பல்வேறு வகைகளில் தொழிலாளர் ஒற்றுமைக்கு எதிரான செயல்பாடுகள் நடக்கின்றன.

இந்தியாவில் சாதி ஒரு யதார்த்தமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து சாதியும், வர்க்கமும் இரண்டும் இணைந்து செயல்படுவதை புரிந்துகொண்டே சங்கம் செயல்பட வேண்டும்.  சாதியின் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுடைய, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் உடன் நின்று, வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான ஒன்றுபட்ட அணியை உருவாக்குவது அவசியம். இத்தகைய இணைப்பில் முன்னைக்காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

 

இப்போது, தொழிலாளர்களே தனித்தனி தீவாக மாறியிருக்கிறார்களா? ஐடி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை வேறுதானே?

ஐடி துறையில் பணியாற்றுவோரை ஒரே வகையான தொழிலாளர்களாகப் பார்க்கவில்லை. குறைந்த சம்பளத்தில் 4000, 5000 சம்பளத்திலும் வேலை வாங்கப்படுகிறது. 1 லட்சம், 2 லட்சம் என உயர்ந்த சம்பளமும் பெறுவோர் உள்ளனர். அவர்களுக்கு கல்லூரிக் காலத்திலிருந்தே சங்கமாகத் திரளும் அனுபவத்திலிருந்து விலக்கிவைக்கப்படுகின்றனர். உடலுழைப்பு குறித்த துவேசம் கூட அவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. அந்தத் தொழில்களில் ‘கூட்டு உற்பத்தி சூழல்’ இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனால், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல், சொந்த நண்பர்களுடனே போட்டிபோட ஆயத்தமாக்கப்படும் நிலைமையும் உள்ளது.

சில நிறுவனங்களில் ‘பிங்க் ஸ்லிப்’ வழங்கப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான கோப உணர்வு உருவானதை சமீபத்தில் பார்த்தோம். எனவே, அனைத்து தரப்பு தொழிலாளர்கள் மத்தியிலும், சங்கமாகத் திரண்டு போராடும் சூழல் எழுந்துதான் தீரும்.

இல்லை. இது எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. அரசுத்துறை ஊழியர்கள், சங்கம் சேர்வதும் போராடுவதும் தங்களுக்கு அவமானம் என்று கருதியது உண்டு. ஆனால் அதிலேயே உடைப்பு ஏற்பட்டது.

காலனி ஆதிக்க காலத்திலேயே, ஆங்காங்கு தொழிலாளர் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடந்துவந்துள்ளன. 8 மணி நேர வேலைக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. 1918 ஆம் ஆண்டிலேயே முதல் முறையான சங்கம் சென்னையில் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே 1908 ஆம் ஆண்டில் வ.உ.சி தூத்துக்குடியில் போராடியுள்ளார். இந்திய அளவில் 1920 ஆம் ஆண்டு ஏஐடியுசி உருவாக்கப்பட்டு, அது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் இந்திய தொழிலாளார்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசின்நேரடி கட்டுப்பாட்டில் இருந்து பலிவாங்குதலுக்கு உள்ளான தபால் மற்றும் தந்தி ஊழியர்களும்  சங்கமாகத் திரண்டனர். சுரண்டலுக்கு எதிராக ஒன்றுபட்டனர். எனவே, தனித்தனித் தீவுகளாக இருக்கும் தொழிலாளர்களை, சங்கமே ஒன்றுபடுத்துகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s