மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


முன்கூட்டியே பட்ஜெட் – சரியான முடிவா?


  1. பொதுவாக நமது நாட்டில் மத்திய அரசின் வரவு செலவு அறிக்கை பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் மக்களவையில் சமர்ப்பிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1 அன்றே வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சரியான முடிவா?

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தடாலடியாக பல புதிய முடிவுகளை அறிவித்து அதன் ஆட்சியின் அவலங்களை மறைக்க, திசை திருப்ப முயன்று வருகிறது. இதுவும்  – செல்லாக்காசு நடவடிக்கை போலவே – இந்த வரிசையில் வருகிறது. அது மட்டுமின்றி ரயில்வே துறைக்கு தனி வரவு-செலவு அறிக்கை என்பதை நீக்கி விட்டு, அதன் அம்சங்களை பொது பட்ஜெட்டின் பகுதியாக  தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது.  இவ்விரண்டு முடிவுகளுமே சர்ச்சைக்கு உரியவை. ஜனநாயக மாண்புகளின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. தன்னிச்சையாக மத்திய அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

ரயில்வே துறை வரவு செலவு அறிக்கை தனியாக இதுவரை தாக்கல் செய்யப்பட்டதன் காரணங்களில் இத்துறை ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மிக முக்கியமானது என்பதும் நாட்டின் ஒருங்கிணைப்பும் பாதுகாப்பும் இதில் மையப்பங்கு  வகிக்கின்றன என்பதும் இரண்டு குறிப்பிடத்தக்க காரணங்களாகும். இது தவிர வேறு காரணங்களும் உள்ளன. எனவே, ரயில்வெ  பட்ஜெட் தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் ரெயில்வே பட்ஜெட்டை  மத்திய பொது பட்ஜெட்டுடன் இணைப்பதில் உள்ள அரசின் அஜண்டா ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவது, மானியங்களை வெட்டுவது போன்ற நோக்கங்கள் கொண்டதாகும்.

மத்திய அரசின் வரவு செலவு அறிக்கையைப் பொருத்த வரையில், நடப்பு ஆண்டு வளர்ச்சிப் போக்கு, இதுவரை அரசால் செய்யப்பட்டு உள்ள செலவுகள்,வந்துள்ள வரவுகள், இதன் அடிப்படையில் வரும் ஆண்டு பொருளாதார செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றை செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி துவக்கத்தில் இருக்காது.குறிப்பாக, நடப்பு ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான – ஒன்பது மாதங்களுக்கான – விவரங்கள் – பிப்ரவரி இறுதியில் தான் கிடைக்கும். பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பும் பாதிக்கப்படும், சரியான விவரங்கள் அடிப்படையில் அமையாது.   இத்தகைய விவரங்கள் இன்றி பட்ஜெட் தயாரிப்பது சரியாக இருக்காது. ஆனால் பா ஜ க அரசுக்கு இதைப்பற்றி கவலையில்லை. உத்தர் பிரதேசம் மற்றும் சில மாநிங்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களை மனதில் கொண்டு பட்ஜெட் தாக்கலை  பிப்ரவரி முதல் தேதிக்கு கொண்டு வர அரசு விரும்புகிறது. இது சரியான தரவுகளின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்க உதவாது.

  1. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, மற்றும் அதன் தாக்கம் ஆகிய பின்னணியில் வரவிருக்கும்பட்ஜெட் எப்படி இருக்கும்?

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை – இதை நாம் செல்லாக்காசு நடவடிக்கை என்றே அழைக்கலாம்! –  கிராக்கியை வீழச்செய்து மந்த நிலையை உருவாக்கியுள்ளது. விவசாயமும் தொழில் துறையும் மட்டுமின்றி சேவை துறையும் கூட  பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்களின் வேலை வாய்ப்பும் வாழ்வாதாரங்களும் கடுமையான இழப்புக்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய சூழலில் பட்ஜெட்டில் அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாய மற்றும் இதர முறைசாரா தொழிலாளர்கள்,சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஆகிய பகுதியினருக்கு சலுகைகள் வழங்குவதாக பட்ஜெட் இருக்கவேண்டும் என்பதே ஜனநாயக கோரிக்கையாக இருக்க முடியும். அதேபோல், கிராக்கியை மேம்படுத்தும் வகையில் அரசு கூடுதல் பொது முதலீடுகள் மேற்கொள்வது அவசியம். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். இதனால் வரவு – செலவு இடைவெளி அதிகரிப்பதை, செல்வந்தர்கள், கார்ப்பரேட்டுகள் மீதான நேர்முக வரிகள் கறாராக வசூல் செய்து குறைக்க இயலும். பல வரிவிலக்குகளை நீக்குவதும் பொருத்தமாக இருக்கும்.  மறுபக்கத்தில்  கடும் விவசாய மற்றும் கிராம பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படவேண்டும். மேலும் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்படவேண்டும். நகரப்புரங்களிலும் வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

பா ஜ க தனது கடந்த மூன்று பட்ஜெட்டுகளிலும் நேர்முக வரிகளை  குறைத்துவந்துள்ளது. மறைமுக வரிகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வரிக்கொள்கை மாறவேண்டும். கடந்த பட்ஜெட்டில் சொத்து வரியையே மத்திய அரசு நீக்கியது. கருப்புப்பண முதலைகளுக்கு  வருமான மூலத்தை தெரிவிக்காமல் வரிகட்ட சலுகை திட்டத்தை முன்வைத்தது. இத்தகைய கொள்கைகள் கைவிடப்படவேண்டும்.

ஆனால் தாராளமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிவரும் பா ஜ க அரசு நாம் பரிந்துரைக்கும் திசைவழியில் பயணிக்காது. எனவே, மேலும் பலசுமைகளை மக்கள் தலையில் ஏற்றும். அதேசமயம் கவர்ச்சிகரமான, ஆனால் மிகக்குறைந்த ஒதுக்கீடு கொண்ட பல திட்டங்களை அரசு அறிவிக்கக்கூடும். இதைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: