வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
2017 பிப்ரவரி 1 அன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லி தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் இரண்டு வகையில் ‘புதுமையானது’ என்று பேசப்பட்டது. ஒன்று, பிப்ரவரி இறுதிநாள் வழக்கமாக தாக்கல் செய்துவரப்பட்ட மத்திய பட்ஜெட் இந்த ஆண்டு பிப்ரவரி முதல நாளில் தாக்கலானது. இரண்டு, ரயில்வே துறைக்கு கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து விவாதிக்கப்பட்ட முறையை மாற்றி, இந்த ஆண்டு தனி ரயில்வே பட்ஜெட் கைவிடப்பட்டு, ரயில்வே தொடர்பான வரவு செலவு விவரங்கள் பொது பட்ஜெட்டின் பகுதியாகவே இடம் பெற்றன. இவ்விரு மத்திய அரசு முடிவுகளுமே சர்ச்சைக்கு உரியவை.
முதலாவதாக, இந்தியாவின் அனைத்துப்பகுதிகளையும் இணைக்கும் ரயில்வே துறை பிற துறைகளைப் போல் பார்க்கப்படுவது சரியல்ல. நாட்டின் பாதுகாப்ப்புக்கும் ஒற்றுமைக்கும் மிக முக்கிய பங்காற்றும் துறை ரயில்வே. இந்திய நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிக முக்கியமான சேவையை சகாய விலையில் அளித்துவரும் துறை. மேலும் கணிசமான அளவில் வரவு-செலவு கொண்ட துறை. இத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலும் தனி விவாதமும் பயனளித்திருக்கும். ஆனால் அரசு ஏன் துறையில் பணியாற்றும் உழைப்பாளி மக்களின் கருத்துக்களையோ, ரயில்வே சேவையை பயன்படுத்தும் சாதாரண மக்களின் கருத்துக்களையோ கேட்காமல், பொருட்படுத்தாமல், இந்த முடிவை எடுத்தது? காரணம் இது தான்: இரயில்வே பட்ஜட்டை பொதுபட்ஜட்டின் பகுதியாக ஆக்குவது ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது என்ற திட்டத்தின் பகுதியாகவே அமைகிறது.
இரண்டாவதாக, மத்திய பட்ஜட்டை பிப்ரவரி முதல் நாள் சமர்ப்பிப்பதால், வரும் ஆண்டிற்கான வரவு-செலவு முன்மொழிவுகளில் தரப்பட்டுள்ள விவரங்களின் தயாரிப்பில் அனுமானங்கள் கூடுதல் பங்கு வகிக்கின்றன. ஏனெனில், தற்சமயம், நடப்பு நிதி ஆண்டான 2016-17இல் இந்தியப் பொருளாதாரத்தின் முதல் ஆறு மாதங்களுக்கான செயல்பாடு பற்றிய விவரங்கள் தான் அரசிடம் உள்ளது. எனவே மொத்த ஆண்டிற்கான விவரங்கள் ஊக அடிப்படையில் தான் இடம் பெரும் நிலை ஏற்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசு நிதித்துறையின் ஆவணமான பொருளாதார ஆய்வறிக்கை நடப்பு ஆண்டு வளர்ச்சி, வரி வசூல் உள்ளிட்ட பல அம்சங்களில் போதுமான தரவுகள் இன்றி எழுதப்பட்டுள்ளதும் இதனால் தான்.
பட்ஜெட் எதிர்கொள்ளும் சூழல்
பட்ஜெட் என்பது அரசு பயன்படுத்தும் பல பொருளாதார ஆயுதங்களில் ஒன்று தான். அவ்வப்பொழுது வேறு பல புதிய கொள்கைகளையும் பொருளாதார நடவடிக்கைகளையும் அரசு கையாளுகிறது. மேலும், நமது நாட்டில் நிலவும் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டால், அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நிர்ணயம் செய்வதில் செல்வந்தர்களுக்கும் இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கும் அதிகமான செல்வாக்கும் பங்கும் உண்டு என்பது புரியும்.
அடுத்து, மத்திய அரசின் பட்ஜெட் சூன்யத்தில் போடப்படுவது அல்ல. குறிப்பிட்ட பன்னாட்டு, இந்நாட்டு பொருளாதார சூழலில் பட்ஜெட் உருவாக்கப்பட்டு முன்மொழியப்படுகிறது. தாராளமய கொள்கைகளின் தீவிரமாக அமலாக்கம் 1991இல் துவங்கிய பொழுது நமது நாட்டின் ஏற்றுமதி மதிப்பையும் இறக்குமதி மதிப்பையும் கூட்டி தேச உற்பத்தி மதிப்பால் வகுத்தால் அத்தொகை 14% ஆகத்தான் இருந்தது. இப்பொழுது அத்தொகை 50 % ஐயும் தாண்டி விட்டது. மேலும் நமது நாட்டுக்குள் அந்நிய நிதி மூலதனம் வருவதும் வெளியே செல்வதும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் வருகையும் செல்கையும் பன்னாட்டு சூழலை பெருமளவிற்கு சார்ந்ததாக உள்ளது. எனவே முந்தைய காலங்களைப் போல் இல்லாமல், இப்பொழுது பட்ஜெட்டின் தன்மையை நிர்ணயிப்பதில் பன்னாட்டு பொருளாதார அரசியல் சூழலின் பங்கு கூடியுள்ளது.
தற்சமயம், கடந்த ஒன்பது ஆண்டுகளாக உலக முதலாளித்தவ அமைப்பில் நிலவும் பொருளாதார மந்த நிலை தொடர்கிறது. உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் சூழலில் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள போதிலும் இது நடப்பது நிச்சயமல்ல. மொத்தத்தில், பன்னாட்டு சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு நமது நாட்டின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி மதிப்பு கூடுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அதுமட்டுமின்றி கச்சா எண்ணய் விலை நீண்டகாலம் சரிந்து வந்த நிலை மாறி மீண்டும் உயரத்தொடங்கிவிட்டது. இது நமது இறக்குமதி செலவுகளை உயர்த்தவும் உள்நாட்டில் விலை உயர்வை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதி ஆகியுல்லதும் நமது அந்நிய செலாவணி ஈட்டலுக்கு சிக்கலை உண்டாக்கக்கூடும். இவற்றை எல்லாம் கணக்கில் கொள்வதோடு நடப்பு ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதையும் கணக்கில் கொண்டு பட்ஜெட் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
பொருளாதார ஆய்வறிக்கை
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை நடப்பு ஆண்டின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்ட 7.6 % இலக்கை விட 1.1 % வரை குறையக்கூடும் என்றும், அது 6.5 – 6.75% என்ற அளவில் இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் அறிக்கை பதிவு செய்கிறது. இருந்தாலும் அரசு ஆவணம் என்ற வகையில் நீண்ட காலப்பார்வையில் சில நன்மைகள் ஏற்படலாம் என்றும் அது கூறுகிறது. ஆனால் அவை ஏற்படுமா என்பதை அறுதியிட்டு சொல்ல இயலாது என்பதையும் ஒத்துக்கொள்ளுகிறது. எனினும் குறைவான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள அறிக்கை பொதுவாக நடப்பு ஆண்டு பொருளாதார நிலைமை பற்றி உற்சாகமூட்டுவதாக பேசவில்லை. அதேசமயம் தாராளமய அணுகுமுறையைப் பற்றி நின்று அரசின் வரி கொள்கைகள் மற்றும் ஒதுக்கீட்டு தேவைகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரசின் செலவுகள் கட்டுப்படுத்தப்படவேண்டும், வரவு-செலவு பற்றாக்குறை தொடர்ந்து இதன்மூலம் குறைக்கப்படவேண்டும் என்ற சிக்கன நடவடிக்கை அணுகுமுறையை அறிக்கை பொதுவாக தழுவி நிற்கிறது.
பட்ஜெட்டின் உள்ளடக்கம்
மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைக் கூற வேண்டியுள்ளது: பட்ஜெட் உரை வேறு, பட்ஜெட் வேறு! மூன்றில் இரண்டு பகுதி மக்கள் கிராமங்களில் வாழும், ஏழை மக்கள் நிறைந்த முதலாளித்வ இந்தியாவில் நிதி அமைச்சர் உரை வேளாண்மை பற்றியும் ஊரக வளர்ச்சி பற்றியும் விவசாயிகள் பற்றியும், ஏழ்மை பற்றியும் ஏழை எளிய மக்கள் பற்றியும் தேன் ஒழுகப் பேசும். ஆனால், நிதி ஒதுக்கீடுகள், வளங்களை திரட்டும் வழிகள் ஆகியவை பெரும் பணமுதலைகளுக்கு சாதகமாகவும் ஏழை மற்றும் உழைப்பாளி மக்களுக்கு எதிராகவே அமையும். ஜைட்லியின் 2017-18 பட்ஜெட் இதே பாணியில் தான் அமைந்துள்ளது.
இந்த பட்ஜெட் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள பெரும் பொருளாதார நாசத்தின் பின்னணியில் முன்மொழியப்படும் பட்ஜெட். ஆனால் தனது உரையில் நிதி அமைச்சர் இந்த நாசகர நடவடிக்கையை மிகவும் சிலாகித்து பேசியுள்ளார். இதற்கு நேர் மாறாக உண்மைகள் உள்ளன என்பதை அமைச்சரின் துறையே தந்துள்ள மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கையால் கூட மறைக்க முடியவில்லை. தன் பணம் எடுக்க வரிசையில் நின்றவர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ரொக்கம் இல்லாததால் சிகிச்சை பெற இயலாமல் இறந்தவர்கள், படிப்பை தொடர முடியாமல் போன மாணவர்கள் என்று இந்த நடவடிக்கையால் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர். விவசாயம் நிலைகுலைந்துள்ளது. அறுவடை செய்த தானியத்தை விற்க இயலாமலும், விற்றிருந்தால் பழைய நோட்டுகளை வைத்து சகுபடிவேலைகளை துவக்க முடியாமலும் வட நாட்டின் பல மாநிலங்களில் விவசாயிகள் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். ஏராளமான சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. எண்ணற்ற கூலிதொழிலாளிகள் வேலை இழந்தாது, அதில் புலம் பெயர்ந்து வந்தவர்கள் தட்டித்தடுமாறி சொந்த ஊர் சென்றது உள்ளிட்ட கொடுமைகள் அரங்கேறியுள்ளன. பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடும் கிராக்கி சரிவு ஏற்பட்டுள்ளது. இதோடு நாட்டின் தென் பகுதிகளில் கடும் வறட்சியும் நிலவுகிறது. இத்தகைய சூழலில் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது?
கிராக்கியை தூக்கி நிறுத்த பட்ஜெட் அரசின் ஒதுக்கீடுகளையும் முதலீடுகளையும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செல்லாக்காசு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், சிறு குறு தொழில்முனைவோர், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கூலி தொழிலாளிகள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கும் என்றும் நியாயமாக எதிர்பார்க்கப்பட்டது. விவசாயிகளுக்கு கடன் ரத்து, சிறு குறுதொழில்களுக்கு வரிச்சலுகைகள், செல்லாக்காசு நடவடிக்கையால் இறந்தவர் குடும்பங்களுக்கும் வேலை இழந்தவர்களுக்கும் நட்ட ஈடு உள்ளிட்டு எந்த நிவாரணத்தையும் பட்ஜெட் வழங்கவில்லை. இரண்டு மாத வட்டி கழிவு, சிறு நடுத்தர தொழில்கள் தொடர்பாக் அறிவிக்கப்பட்டுள்ள வரி சலுகை ஆகியவை மிகக்குறைவான அளவு நிவாரணம் ஆகும். சம்பளம் வாங்கும் உழைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறு அளவிலான வருமான வரி சலுகைகள் கண்துடைப்பு தான். ஏனெனில், மறைமுக வரிகள் கடுமையாக கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளன.
ஒதுக்கீடுகள்
ஒரு பட்ஜெட்டின் மையமான அம்சங்கள் வரவு மற்றும் செலவு விவரங்கள் தான். முதலில் செலவு – அதாவது, ஒதுக்கீடுகள் – பற்றி பார்ப்போம்.
2016-17 ஆண்டில் மத்திய அரசின் மொத்த செலவு திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ20 லட்சம் கோடிக்கு சற்று அதிகம். வரும் ஆண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட ரூ21.5 லட்சம் கோடி. இது 5% உயர்வுதான். பணவீக்கத்தைகூட ஈடுகட்டாது. நடப்பு ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 13.4% ஆக இருந்த மத்திய அரசின் த்த செலவு வரம் ஆண்டில் 12.7% ஆகக்குறைய உள்ளது. கிராக்கியை மேம்படுத்த வேண்டிய சூழலில் அரசின் ஒதுக்கீடு பொருத்தமானது அல்ல. கிராக்கியை உயர்த்தி பொருளாதாரத்தில் மீட்சி கண்டிட உதவாது.
துறைவாரி ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் விவசாயத்தையும் கிராமங்களையும் மையப்படுத்தி பட்ஜேட் அமைந்துள்ளது என்ற நிதி அமைச்சரின் வாதத்திற்கு எதிராகவே உள்ளன. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ 167,768 கோடியில் (2016-17 திருத்தப்பட்ட மதிப்பீடு) இருந்து ரூ 187,223 கோடியாக இந்த பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. இது சொற்பமே. கல்வி மற்றும் ஆரோக்கிய துறைகளுக்கான ஒதுக்கீடு ரூ 114,806 கோடியில் இருந்து ரூ 130,215 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இத்துறைகளுக்கான ஒதுக்கீடுகள் மிகச்சொற்பம் என்பதால் இதையும் குறிப்பிடத்தக்க உயர்வாக கருத முடியாது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு மிகப்பெரிய பாதிப்பு முறைசாரா துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அதனால் பல லட்சக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டதும் ஆகும். இந்த பட்ஜெட்டில் குறிப்பாக வேலை இழப்பு பிரச்சினை கணக்கில் கொள்ளப்பட்டு வேலைகளை உருவாக்குவதற்கு மிகக் கூடுதலான ஒதுக்கீடு செய்யபட்டிருக்க வேண்டும். ஆனால், கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு 2016-17 திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ 47,499 கோடியில் இருந்து ரூ 48,000 கோடியாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இத்தொகை குறைந்தபட்சம் இரட்டிப்பாக்கப் பட்டிருக்கவேண்டும். இங்கு இன்னொருசெய்தியையும் சொல்ல வேண்டும். ஆண்டுக்கு 1 கோடிப்பேருக்கும் அதிகமானோர் நமது உழைப்பு படைக்குள் வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டில் 1,35,௦௦௦ பணியிடங்களைத்தான் நமது பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தகைய சூழலில் பட்ஜெட் ஒதுக்கீடுகள் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.இதைப் பற்றி பட்ஜெட்டில் கவனம் ஏதும் இல்லை.
மத்திய பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீட்டில் பழங்குடி மக்களுக்கு 1.48 % ம் தலித் மக்களுக்கு 2.44 % ம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் இப்பிரிவினர்களின் பங்குகளை விட இவை மிகக் குறைவு ஆகும். அதேபோல், பாலின அடிப்படையில் பார்த்தால் பெண்களுக்கான ஒதுக்கீடு 5.3 % என்ற அளவில் தான் உள்ளது.
கட்டமைப்புகளுக்கான மொத்த மூலதன ஒதுக்கீடும் ஜி டி பி யின் பங்கு என்ற அடிப்படையில் கணக்கிட்டால் சிறிதளவு குறைந்துள்ளது. விவசாயிகளின் தலா வருமானத்தை ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம் என்ற அரசின் முழக்கம் பட்ஜெட் ஒதுக்கீடுகளில் பிரதிபலிக்கவில்லை என்பதையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
வங்கிகள் மூலம் விவசாயத்திற்கு பத்து லட்சம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு முன்வைக்கப்பட்டாலும், இது நடக்குமா என்பது சந்தேகமே. மேலும் இது விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வும் அல்ல. பெரும் கம்பனிகளின் வாராக்கடனில் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடிக்கு மேல் திரும்பாது என்று கணக்கு எழுதப்பட்டுள்ள நிலையில் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு கடன் ரத்து இல்லை என்பது வேதனைக்குரியது.
பட்ஜெட்டின் வரி விதிப்பு முன்மொழிவுகள்
பா ஜ க அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து செவந்தர்களுக்கு வரி சலுகைகளை கொடுத்துவருகிறது. இதனால் ஏற்படும் வரி இழப்பை சரி செய்ய மறைமுக வரிகளை – சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை – அதிலும் குறிப்பாக கலால் (எக்சைஸ்) வரிகளை உயர்த்திக்கொண்டே வருகிறது. சொத்து வரியை அறவே ரத்து செய்து விட்டது. சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் இமயமலை அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் அரசின் வர்க்கத்தன்மையை தெளிவு படுத்துகின்றன. இந்த ஆண்டும் அதே கதை தான் . பட்ஜெட் அளித்துள்ள நேர்முக வரி சலுகைகளால் அரசுக்கு 2௦ ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். பட்ஜெட் விவரங்களை ஆராய்ந்தால், இந்த மறைமுக வரிச்சுமை எழுபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்ப்பது தெரிகிறது. கலால் வரிகளை தொடர்ந்து உயர்த்தி வருவதை அரசின் புள்ளிவிவரங்களே தெளிவுபடுத்துகின்றன. எக்சைஸ் வரி வசூல் 2015- 16 இல் இரண்டு லட்சத்து எண்பத்தி எட்டாயிரம் கோடி ரூபாய். நடப்பு (2016-17) ஆண்டில் இது மூன்று லட்சத்தி எண்பத்தேழு ஆயிரம் கோடி ரூபாயாக கிட்டத்தட்ட ஒருலட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. பட்ஜெட் மதிப்பீடு மூன்று லட்சத்து பதிநெட்டாயிரம் கோடி என்று சென்ற ஆண்டு இது முன்மொழியப்பட்டு அதைவிட கூடுதலாக எழுபது ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அனைத்து உழைப்பாளி மக்களையும் தாக்கும் பெட்ரோல் டீசல் விலையுயர்வுகள் கலால் வரி உயர்வு மூலம் இவ்வாறு நிகழ்கிறது. இத்தகைய பட்ஜட்டைக்காட்டிலும் கூடுதல் கலால் வரி வசூல் என்பது கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட அறுபது ஆயிரம் கோடி ரூபாய். நடப்பு ஆண்டில் எழுபதாயிரம் கோடி ரூபாய். இந்த கண்ணுக்குத்தெரியாத வரிக்கொள்ளையை மறைக்க குறைந்த வருமான வரி செலுத்தும் ஐந்து லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் பெறுவோருக்கு கண்துடைப்பாக சில நேர்முக வரிச்சலுகைகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
2017-18 பட்ஜெட்டில் 1.3 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வருமான வரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் மிகையான எதிர்பார்ப்பு. செல்லாக்க் காசு நடவடிக்கையால் எதிர்காலத்தில் வரி ஏய்ப்பு குறைந்துவிடும் என்று அரசு கற்பனையில் மிதக்கிறது. அனைத்துப்பழய செல்லா நோட்டுகளும் வங்கிகளுக்குள் வந்துள்ள நிலையில் வைக்கப்போரில் ஊசி தேடும் பணியில் அரசு இறங்கியுள்ளது. இது ஏராளமான சிறு நடுத்தர மக்களை துன்புறுத்த உதவும். பெரும் கம்பனி கொள்ளையர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள். மக்கள் பணம் வங்கிகளுக்குள் வந்துள்ள நிலையில் இனி குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் கொடுக்க இயலும் என்ற தவறான கருத்தை பட்ஜெட் உரையில் அமைச்சர் முன்வைத்துள்ளார். வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான நிபந்தனைகள் நீங்கிவிட்டால் மக்கள் பணத்தை வெளியே எடுப்பார்கள். எனவே இந்த பணத்தை வைத்து கடன் வழங்குவது சாத்தியமல்ல. இன்னும் சொல்லப்போனால் அரசின் செல்லாக்காசு நடவடிக்கை வங்கிகள் மீதான நம்பிக்கையை தகர்த்துள்ள நிலையில் ரொக்கம் கைவசம் வைத்துக்கொள்ளப்படுவது கூடலாம்.
இந்த பட்ஜெட் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வரிச்சலுகை அளித்துள்ளது. ஆனால் இச்சலுகை ஒரு ரியல் எஸ்டேட் குமுழியை வேண்டுமானால் உருவாக்கலாம். உண்மையான வளர்ச்சிக்கு உதவாது.
அரசியல் கட்சிகளுக்கு பெருமுதலாளிகள் அளிக்கும் நன்கொடைகளை நியாயப்படுத்தும் நடவடிக்கையிலும் நிதி அமைச்சர் தேர்தல் நிதி தொடர்பான தனது பட்ஜெட் முன்மொழிவுகளில் இறங்கியுள்ளார். இதுவும் கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது.
மொத்தத்தில் இந்த பட்ஜெட்டின் பின் உள்ள பொருளாதார தத்துவம் நாட்டு வளர்ச்சியில் அரசு ஆற்ற வேண்டிய முக்கிய பங்கை மறுக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கும் செல்வந்தர்களுக்கும் வரிசலுகை அளித்து ஒக்குவித்து மட்டுமே முதலீடுகளை அதிகப்படுத்தி வளர்ச்சியை அடைய முடியும் என்று கருதுகிறது. அரசின் வரவு செலவு பற்றாக்குறையையை செலவுகளைக் கட்டுப்படுத்தி மட்டுமே குறைக்க வேண்டும் என்றும் கருதுகிறது. பன்னாட்டு நிதி மூலதனம் தங்கு தடையின்றி நாட்டுக்குள்ளே வருவதும் வெளியே செல்வதும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் செலவு குறைப்பு நடவடிக்கை தான் அரசின் தந்திரமாகி விட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் அதையே பிரதிபலிக்கிறது. நாடும் மக்களும் எதிர்கொள்ளும் கடும் பிரச்சனைகளை இந்த பட்ஜெட் தீர்க்க உதவாது. மாறாக, தீவிரப்படுத்தும்.
Leave a Reply