மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


முகிலினியில் கலந்த முதலாளித்துவம் …


– ந. ரகுராம்

ஒருஆறு, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை. அதனையொட்டி முளைக்கும் தொழிற் சாலை, அதன் மூலம் விளையும் நன்மை-தீமைகள் இவைகளை மையமாகக் கொண்டு கோவை மாநகரையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 60 முதல் 70 ஆண்டுகளாக வாழ்ந்த மூன்று தலைமுறை மக்களின் வரலாற்றை பதிவு செய்கிறது முகிலினி நாவல்.

எழுத்தாளர் முருகவேள், மூன்று தலைமுறை வரலாற்றை, குறிப்பாக கோவை போன்ற தொழிற் சாலைகளும், தொழிலாளி வர்க்கம் மிகவும் எழுச்சியோடு வளர்ந்த ஒருநகரின் வரலாற்றை 500 பக்கத்திற்குள் கொண்டு வந்திருப்பது 100 யானைகளைக் கட்டி இழுப்பதற்கு சமம். அதை அவருடைய முன்னுரையிலேயே அறிந்து கொள்ள லாம். இத்தகைய பணியை பலரது உதவியோடு மிகவும் நேர்த்தியாக செய்து முடித்துள்ளார்.
ஒவ்வொரு ஆலையும், தொழிற்சாலையும், அணுமின்நிலையங்களும் துவங்கப்படும்போதும் இவையனைத்தும் “வளர்ச்சிக்கானது” என மீண்டும் மீண்டும் ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கின்றன. “கூடங்குளம் அணுஉலை அமைப்பதற்காக அடிக் கல்நாட்ட அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வருகை” என்ற செய்தியை வாசிக்கும்போது பள்ளிச்சிறுவனாக இருந்த என்மனதில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வல்லரசாகிவிடும் என்றே தோன்றியது. உண்மை அவ்வாறில்லை; முதலாளித்துவ ஆளுகையில் எந்த வளர்ச்சியும் அனைவருக்குமானதாக இல்லை.

நாவலின் காலச் சூழல்:
1940 களில் பவானி ஆற்றை ஒட்டிய சிறுமுகை என்னும் கிராமத்திலிருந்து துவங்குகிறது நாவல். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நகருகிறது. மக்கள் அனைவருக்கும் எவ்வித பிரச்சினையும், கவலையுமின்றி வாழ்ந்து வந்தார்கள் என்று அர்த்தமல்ல. பஞ்சம் தலைவிரித்தாடியது; மக்கள் உண்ண அரிசியின்றி கம்பும் சோளமும், கேழ்வர கும் உண்டு வாழ்ந்தார்கள். அதுவும் போதிய அளவு கிடைப்பதில்லை.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்று விடுதலை பெற்றபின்னர் இந்திய நாடு புதியதொரு யுகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த தருணத்தில், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை திணிக்கப்படுகிறது. அப் போது, ஆடைஉற்பத்தி தொழிலை மையமாகக் கொண்டு இயங்கிவரும் கோவைநகரம் பொருளா தார பாதிப்புகளை எதிர்கொள்கிறது. முக்கிய மூலப் பொருளான பருத்தி பாகிஸ்தானிலிருந்தே இறக்குமதியாகிய சூழலில், கடும் பாதிப்புகள் உருவாகின.

விஸ்கோசின் இந்திய நுழைவு:
மாற்று வாய்ப்புகளைத் தேடிய ஆலைமுத லாளிகளில் ஒருவரான கஸ்தூரிசாமிநாயுடு, இத்தாலியை சேர்ந்த இத்தாலியானா விஸ்கோ ஸின் தொழில்நுட்பத்தை பெற முனைந்தார். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்து துவண்டு போயிருந்த இத்தாலியின் அந்த நிறு வனம், இசைவு தெரிவித்தது. வரலாற்றுப் பார் வையில் நோக்கும்போது, போர்தோல்வியிலிருந்து மீண்டு வரும் ஒரு நாட்டின் மூலதனமும், அடிமைப்பட்டுக் கிடந்து எழுந்து வரும் மற்றொரு நாட்டின் மூலதனமும் “முன்னேற்றம்” என்று கூறிக்கொண்டே ஒன்றாகப் பயணிக்கத் துவங்கின.

உற்பத்தியும், உடல் உபாதைகளும்:
சுற்றுப்புறத்திலிருக்கும் பெரும்பாலான கூலித் தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலை நம்பிக்கை கொடுத்தது. கோவை மில்களில் கிடைக்கும் கூலியைவிட ஓரிருமடங்கு அதிகமான கூலியுடன் வேலை கிடைத்தது. ஆலையின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் முன்னாள் இராணுவ வீரரும், தமிழ் ஆர்வலரும், திராவிடக் கொள்கையின் தீவிர பற்றாளருமான ராஜூவுடன், அவரது நண் பரும், கம்யூனிச ஈடுபாடுகொண்டவரும், தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபாடு கொண்ட வருமான ஆரான் மேற்கொள்ளும் விவாதங்கள் வழியாக அன்றைய தமிழகத்தில் கம்யூனிச மற்றும் திராவிட சிந்தனைகளின் தாக்கம் நம் கண்முன் விரிகிறது.

கூலி கொடுக்கப்படும் நாட்கள் திருவிழாக் கோலமே. கூலி வந்தவுடன் தொழிலாளிகள் பலர் மேட்டுப்பாளையத்திற்கு செல்வதும், துணி மணிகள், இனிப்பு வகைகள் வாங்குவது என களைகட்டும்.

இத்தாலியிலிருந்து இறக்குமதியாகும் மரஅட்டை களுடன் கந்தகஅமிலம், சுண்ணாம்புக்கல் என பல வேதிப்பொருட்களைச் சேர்த்து ரேயான் செயற்கை இழை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது. தொழிலாளிகள் பல வேதிப் பொருட்களை கையாண்டு வருவதால் அவர் களுக்கு தோல் வியாதிகளும், நுரையீரல் வியாதி களும் என பல வியாதிகள் தென்படத் துவங்கின. ஆலையில் கணக்கராக வேலைபார்க்கும் ராஜூ வுக்கும் ஆஸ்துமா அறிகுறிகள் தென்படத் துவங் கின. கைநிறைய ஊதியம் வருவதால் யாரும் தங்களுக்கு வந்து கொண்டிருக்கின்ற வியாதி களைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்ட தாகத் தெரியவில்லை.

யூகலிப்டஸ் அட்டைகள்:
மர அட்டைகள் இத்தாலியிலிருந்து இறக்கு மதி செய்வதற்கு பதிலாக, ஊட்டி நீலகிரி மலைத் தொடர்களில் வளர்ந்து கிடந்த யூகலிப்டஸ் மரங் களை கொண்டு தயாரிக்க முடிவு செய்தார்கள். மரங்களை வெட்டுவதற்கான உரிமைப்பெற அன் றைய தமிழக முதலமைச்சர் காமராஜரை, கஸ்தூரி சாமி நாயுடுவும் அவருடைய மாமனாரும் காந்தியவாதியுமான சௌந்தர்ராஜனும் சந்தித்து ஒப்புதல் பெற்றனர்.

1965 முதல் 1990 வரை:
அப்போது தமிழகம் அரசியல் மாற்றத்திற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது. நீதிக் கட்சி, பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கம், திரா விட இயக்கங்களின் எழுச்சி இதனூடே கம்யூனிசக் கொள்கைகளும் வளர்ந்து கொண்டிருந்தது. ஆலை முதலாளிகளுக்கிடையேயான விவாதங்களின் போது இயல்பாகவே கம்யூனிசஎதிர்ப்பு இடம் பெற்றது, அத்தோடு குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக பிராமணரல்லாத முதலாளிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குலக்கல்வி திட்டம் தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது என்ற எண்ணம் வெகுவாக வளர்ந்திருந்தது. மத்திய அரசு கொண்டுவந்த இந்தித் திணிப்பிற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை திமுக வெகுவாக தனதாக்கிக் கொண்டது.
பல கலவரங்கள், துப்பாக்கிச்சூடு என மாநிலம் முழுவதும் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண் டிருந்தது. தொடர்போராட்டம் மத்தியஅரசைக் கீழ்ப்படிய வைத்தது. இத்தகைய சூழலில் தேர் தலில் திமுக வென்று அண்ணா தமிழகத்தின் முதலமைச்சரானார். 1969 இல் அண்ணா மறை விற்குப்பிறகு திமுக உடைந்துவிடும்; ஆட்சி கலைந்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் முதலாளிகளின் பெரும்பகுதியின ரின் ஆதரவு திமுகவிற்கு இருந்தது. அதன் தலை வராகவும் தமிழகத்தின் முதலமைச்சராகவும் கருணாநிதி தன்னை உயர்த்திக் கொண்டார்.

“தனியார்த்துறை நிர்வாகிக்கும் எல்லாத்துறை யும் திறம்பட செயல்படும்” என்று கூறுவோர்கள் உண்டு. ஆனால் “அரசின் ஒத்துழைப்பின்றி இங்கே எந்தவொரு தொழிற்சாலையும் முன்னேற இயலாது”. ஊட்டி, நீலகிரி மலைத்தொடர்களில் யூகலிப்டஸ் மரங்களை வெட்டி மரக்கூழ் உற்பத்தி செய்யும் பிரிவை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

காகிதம், அட்டை, கந்தக அமிலம், உரம், பூச்சிக்கொல்லி மருந்து என பல பொருட்களின் உற்பத்திகள் தொடங்கின. மரக்கூழ் உற்பத்தி 25 டன்னிலிருந்து 60 டன் என்ற இலக்கை நிர்ண யித்தது ஆலைநிர்வாகம். எப்படியாவது டெக்கான் ரேயான் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து விடவேண்டும் என்ற ஆவலோடு பல விவசாயக் கூலிகளும், பழங்குடியினரும் காத்திருந்தனர். யூகலிப்டஸ் மரங்களை வெட்டும் பணியில் 3 மாதங்களுக்கு ஈடுபட்டால் கம்பெனி வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்படும் என்ற வாக்குறுதி யோடு, பழங்குடியினர் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடும்குளிர், முதுகெலும்பு சில்லிடும் அதிகாலைப்பனியில் மரம் வெட்ட வைத்தார்கள். 3 மாத கடும்வேலைக்குப்பிறகு வீடு திரும்பிய மாரிமுத்துவுக்கு “கடும்பனி, சேறு நிறைந்த சகதியில் தொடர்ந்து வேலை பார்த்ததால் இரண்டு கால்விரல்களை துண்டிக்க நேர்ந்தது”.

உலக மாற்றங்களும், உள்ளூர் முதலாளிகளும்:
1980 களுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வு பரவலாக மக்களிடம் பரவியது. இதனையொட்டி நடை பெற்ற போராட்டங்களால் பல தொழிற்சாலை கள் நெருக்கடிகளை சந்தித்தன. சூழலியல் சார்ந்து ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இத்தாலியான விஸ்கோஸ் நிறுவனம் மரக்கூழ் மற்றும் ரேயான்நூலிழைகள் தயாரிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது.
இலாபம் மட்டுமே குறிக்கோளாக இயங்கிக் கொண்டிருக்கும் கஸ்தூரிசாமி நாயுடு போன்ற முதலாளிகளுக்கு, ஐரோப்பாவின் இத்தகைய மாற்றம் விசித்திரமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தன. இப்போதும் கூட, ஒரு பேரழிவு நிகழும்போது எத்தகைய நடவடிக் கைகள் எடுக்கவேண்டுமென்ற அடிப்படை அறிவோ வசதியோ இல்லாமல்தானே இந்தியா போன்ற நாடுகளில் ‘வளர்ச்சி’ கட்டமைக்கப் படுகிறது!

பங்குகளின் மடைமாற்றம்:
இத்தாலியான விஸ்கோஸாவின் 24 சதவித பங்குகள் துபாயைச் சேர்ந்த சமியாவுக்கு மாற்றப் பட்டது. பின் டாடா குழுமத்தின் பங்குதாரரா கவுள்ள கேன்டி என்பவர் வசம் வந்தது. நீதி மன்றத்தில் சில முயற்சிகளுக்கு பின் கஸ்தூரிசாமி நாயுடுவும் தன்பங்குகளையும் கேன்டியிடம் விற்று விட முடிவு செய்தார். அவர் இதற்கு முன்னரே ரேயான் உற்பத்தியல்லாமல் டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ் என்னும் தொழிற்சாலையை நிறுவி யிருந்தார். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயத்திற்குத் தேவையான பம்புசெட்டுகள், மோட்டார்கள் என டெக்கான் அக்ரோ கெமிக் கல்ஸ் நிறுவனம் வேறொரு பாதையில் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. இலாபம்- அதிகஇலாபம்- கொள்ளைஇலாபம் என்ற நோக்கத்தோடு மட்டும் இயங்கும் தொழிற் சாலை, மரக்கூழ் உற்பத்தியளவை 60 டன்னி லிருந்து 250 டன்னுக்கு உயர்த்துவதை நோக்கி பயணித்தது.

முகிலியின் வேதிக் கழிவுகள்:
உற்பத்தி பெருகும்போது டெக்கான் ரேயான் ஆலையின் கழிவுகளும் பெருகின. அமிலமும், வேதிப்பொருட்களும் கலந்த கழிவுகள் இரவு நேரங்களில் ஆற்றில் டன்கணக்கில் திறந்து விடப் பட்டது. ஒருகட்டத்தில் தொழிற்சாலையிலிருந்து கூடுதுறைவரையிலான சுமார் 70 கிமீ தொலை விற்கு ஆறு முழுவதுமாக மாசுபட்டிருந்தது. இந்த நீரை குடித்த ஆடு, மாடு, மான் ஆற்றுநீரில் வாழ்ந்த மீன்கள் என அனைத்தும் பாதிக்கப் பட்டன. செத்து மடிந்தன.

ஆற்றைச் சுற்றிய விவசாய நிலங்கள் யாவும் அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தன. மக்களின் கோபம் மெதுவாக டெக்கான் ரேயான் நிறுவனத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந் தது. இதற்காக பல போராட்டங்கள், ஊர்வலங் கள், தெருமுனைக் கூட்டங்கள் என நாள்தோறும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன. ஆற்றைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப் புகள் யாவும் தொழிற்சாலையை இழுத்து மூடக் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.

ஆலையில் பணியாற்றிய ராஜூ குடும்பத்தார் அனைவரும் பவானி ஆற்றினை, முகிலினி என்றே அழைத்து வந்தனர். ராஜூவின் பேரன் கௌதம் கோவை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வந்தான். அதேவேளையில் தனது தாத்தாவின் தமிழ்ப்புலமையும், தாத்தாவின் நண்பர்ஆரான் அவர்களின் இடதுசாரிக் கொள்கைகளையும் சிறுவயதிலிருந்தே கேட்டுவளர்ந்தான். ஆறு, அதையொட்டிய தனது குடும்ப வளர்ச்சியைக் கண்டு வளர்ந்த அவன், ஆற்றையும் சுற்றுப்புறச் சூழலை காக்கும் போராட்டத்தில் இயல்பாகவே தன்னை இணைத்துக் கொண்டான்.

உலக மயமாக்கலுக்குப் பிறகு சூழலியல் பாதுகாப்பில் கவனம் செலுத்திய இடதுசாரி இளைஞர் அமைப்பு போராட்டங் களை நடத்தியது. வழக்கின் தீர்ப்புகள் ஆலைக்குச் சாதகமாக வந்தன. இந்த சூழலில், இளைஞர் அமைப்பின் கவனம் மலைவாழ் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் சங்கம் கட்டுவதை நோக்கித் திரும்பியது.

”டெக்கான் ரேயான் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்” என நதிநீர் பாதுகாப்பு அமைப் புகள் தொடர்ந்து குரல் கொடுத்தன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்த காரணத்தால், தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. இதுபற்றிய விவாதங்கள் இரு அமைப்புகளுக்குமிடையே நடந்து வந்தது.
“இப்ப நீங்க என்ன சொல்றீங்க, இந்த மண்ணை யும், ஆத்தையும் விட, இயற்கை வளத்த காப் பாத்திரத விட வேறென்ன உங்களுக்கு முக்கியமா படுது? உங்களுக்கும் கேன்டிக்கும் அப்படி யென்ன உறவு? ” என ஒரு இளைஞன் கேள்விகளை அடுக்கினான்.

இளைஞனை நோக்கி பேசிய தொழிற்சங்கத் தலைவர் நிதானமாக “கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை சற்று சிந்தியுங்கள். 40 க்கும் அதிகமான மில்கள் இங்கே மூடப்பட்டு விட்டது. ஒரு மில் மூடப்படும்போது அதற்கு காரணமாக நிர்வாகக் கோளாறு என்றே வெளியே கூறபட்டு வந்தது. ஆனால் ஒவ்வொரு மில்லாக தொடர்ந்து மூடப்படும்போது அது நிர்வாகக் கோளாறோ அல்லது குளறுபடியோ இல்லை… டெக்ஸ்டைல் துறையில்தான் முதன்முதலாக உலகமயமாக்க லும், தாராளவாதமும் சோதித்துப் பார்க்கப் பட்டது. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு ஆலை, அதாவது ஸ்பின்னிங், வீவிங், டிரையிங் என பல பிரிவுகள் உருவாக்கப்பட்டது. பல கிராமங்களிலிருந்து மக்கள் கோவை, திருப்பூர் நகரிலுள்ள ஆலைகளை நோக்கி ஆளும் வர்க்கம் நகர்த்தி வந்தது. தொடர்ச்சியான போராட்டங் கள், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்களின் மூலம் குறிப்பிட்ட சில சலுகைகளையும் வெற்றிகளையும் பெற்றோம்.

உலகமயமாக்கல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, தொழிலாளர்களின் நிலை மீண்டும் 40 , 50 ஆண்டுகளுக்கு பின்னே நகர்த்தப்பட்டு விட்டது. வேறுவழியின்றி பள்ளிக்குச் சென்று கொண் டிருந்த குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிட்டு, அவர்களை வேலைக்கு அனுப்பும் போக்கு காண முடிகிறது. இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் மதவாதமும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வளர்க் கப்பட்டு வருகிறது. இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் தொழிற்சங்க இயக்கங்கள் தங் களுடைய செயல்பாடுகளை பூஜ்ஜியத்திலிருந்து துவங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஆலை மூடப்பட்டால் இன்னும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்து வீதிக்கு வருவார்கள். அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வும் கேள்விக்குறியாகி விடும்” என்றார்.

அத்தோடு நில்லாமல் “உங்களின் கோரிக்கை மிகவும் முக்கியமானது; நியாயமானது; நம் போராட்டங்கள் வருங்காலத்தில் உறுதியாக ஒரு புள்ளியில் இணையும்” என்றும் கூறினார். இதைக் கேட்ட கௌதமுடைய மனதில் “தொழிற்சங் கங்களும் நம்மோடு இந்த போராட்டத்தில் உடன் நின்றிருக்க வேண்டும். எது அவர்களை இந்தப் போராட்டத்திலிருந்து நம்மிடமிருந்து பிரித்து வைத்தது.” என்னும் கேள்வி ஆழமாக எழும்பியது.

தீர்ப்பும் அதன் பின்னரும்:
நதிநீர் பாதுகாப்பு போராட்டத்தில், அதிகார வர்க்கம் காவல்துறையைக் கொண்டு தடியடி, கண்ணீர்புகைக்குண்டு என வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டது. கடும் போராட்டத்திற்குப் பின் நீதிமன்றம் கழிவுகளை அகற்றவும், தொழிற் சாலையை நிரந்தரமாக மூடவும் தீர்ப்பெழுதியது. மறுமுனையில் அந்த ஆலையில் வேலை பார்த்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலையையிழந்து, ”ஆலையைதிற! அல்லது தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய ஓய்வுகால வைப்புத்தொகை மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் உடனே வழங்கு! தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே! “  என தொழிற்சங்கங்கள் ஆலைக்கு முன்பாக போராட்டத்தில் இறங்கினார்கள். நேற்றுவரை இது வேறொருவருடைய போராட்டம், இன்று இது இவர்களுடைய போராட்டம். இவ்வாறு பிரித்தது யாருடைய வெற்றி? எங்கே தொழிற் சங்கம் தவறியது? எங்கே நதிநீர்ப்பாதுகாப்பு அமைப்பு தவறியது? என்ற பல கேள்விகளை கௌதம் வாயிலாக வாசகர்களுக்கு கடத்து கிறார் ஆசிரியர். ஆலை மூடப்பட்டு விட்டது. எல்லாம் முடிந்துவிட்டதா? என்னும் கேள்வி எழுந்தது. மூடப்பட்ட ஆலைக்கு உள்ளிருந்து மோட்டார்கள், இரும்பு சாமான்களை சிலர் திருடும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்தது. சிலர் சூழ்நிலையின் காரணமாக வலுக்கட்டாயமாக அத்தகைய திருட்டுவேலைகளில் திணிக்கப் பட்டனர். கோவை நகரில் 1990களுக்குப் பிறகு மதவாதம் காலுன்றியது.

அமெரிக்காவில் தனது படிப்பை முடித்து விட்டு நாடு திரும்பிய கஸ்தூரிசாமி நாயுடுவின் பேரன் ராஜ்குமார் பாலாஜி வந்ததும் வராதது மாக இயற்கை விவசாயத்தைப் பற்றி தனது குடும்பத்தினருடன் குறிப்பாக தனது தாத்தா கஸ்தூரிசாமி நாயுடு மற்றும் பாட்டி சௌதா வுடன் தீவிரமாக ஆலோசித்தான். “ஆர்கானிக் விளைபொருட்களுக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய சந்தை இங்கே உருவாகும்” என்று விவரித் தான். இவையெல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் 80 வயதைத் தாண்டிய கஸ்தூரிசாமி நாயுடு, பிறகு தனது பேரன் விவரித் ததை ஆமோதிப்பதுபோல தலையையசைத்து தனது சம்மதத்தையும் தெரிவித்துச் சென்றார். தங்களுக்கு சொந்தமான நிலத்திலேயே இயற்கை விவசாயம் செய்வதைத் துவங்கினான் பாலாஜி.

கதைப்போக்கில் சாமியார்கள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பதை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறார் ஆசிரியர். ஆசிமானந்தசாமிகள் ஜக்கிவாசுதேவன் வகையறாக்களை ஞாபகப் படுத்துகிறார். விளைபொருட்களை வெளிநாடு களுக்கும் ஆசிமானந்தசாமிகளின் ஆசிரமத்திற் கும் விற்கும் தொழிலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தான் பாலாஜி.
அமெரிக்காவில் தகவல்தொழில்நுட்பத் துறை யில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு இயற்கையோடு இயைந்த இயல்பான வாழ்வைத் தேடி நாடு திரும்பியிருந்த திருநாவுக்கரசுவிற்கும், கௌதமிற்கும் இடை யிலான கம்யூனிசம் மற்றும் இயற்கை விவசாயம் பற்றிய விவாதங்கள் வெளிப்படுகின்றன.

துறவி போல வாழத்துவங்கியிருந்த திருநாவுக் கரசைப் பார்த்து இது ஓய்வுக்கால வாழ்வு என்றும், ‘ஒவ்வொரு நாளும் ஏரி, குளங்கள், ஆறு, ஆற்றுமணல், காடு, மலை என அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக் கிறது, அதைப்பற்றி சிந்திக்காமல் தான் ஒருவன் மட்டுமே மாறுவதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?’ என்று கௌதம் கேட்கிறான். இருப் பினும் திருநாவுக்கரசின் நோக்கமும், தனது நோக்கமும் ஒருபுள்ளியில் நிச்சயம் இணையும் என்றே எண்ணினான்.

சூழலியலும், மார்க்சியமும்:
முதலாளித்துவம் எல்லாவற்றையும் லாப நோக்கிலேயே அணுகுகிறது. மக்களிடம் நுகர்வு கலாச்சாரத்தைத் திணிக்கும் உலகமயம், பாதிப் புகளை மூன்றாம் உலக நாடுகளிடமும், சாமானிய மக்கள் தலையிலும் கட்டி நழுவுகிறது. முதலாளித் துவத்தின் குழந்தைப் பருவத்திலேயே அதன் கோர முகத்தை இந்த உலகுக்கு காட்டிய மார்க்ஸூம் ஏங்கெல்சும் “சூழலியல்” ஒரு தனிக்கருத்தாக்க மாக அறிமுகமாகாத காலத்திலேயே, இது பற்றிய எச்சரிக்கை மணியைஅடிக்கத் தவறவில்லை.
“மக்களை, குறிப்பாக ஏழைகளையும் ஒதுக்கப் பட்டவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழலியல் பிரச்சனைகளை கட்சி கையிலெடுக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானித் துள்ளது. இடது ஜனநாயகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, “சூழலியல் பாதுகாப்பும், ஆற்றல், நீர் நிலைகள் மற்றும் தேசிய வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் சமநீதி கடைப்பிடிக்கப்பட வேண் டும்” என குறிப்பிடுகிறது.
மூலதனம் புத்தகத்தில் கார்ல் மார்க்ஸ்,”ஒரு குறிப்பிட்ட சமுதாயமோ, ஒரு குறிப்பிட்ட தேசமோ, ஏன் ஒட்டுமொத்த சமுதாயமோ அல்லது அனைத்து தேசங்களுமோ இவ்வுலகில் உள்ள இயற்கை வளங்களை ஒரு போதும் சொந்தம் கொண்டாட முடியாது. அனைத்து சமூகமும், மனிதர்களும் வெறும் பயனாளிகள் மட்டுமே. எக்காரணத்தைக் கொண்டும் உரிமை கொண்டாடிவிட முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

இயற்கையின் இயங்கியல் புத்தகத்தில் எங்கெல்ஸ், “மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால் பிற மிருகங்கள் இயற்கையின் பயன்களை மட்டுமே அனுபவிக்கிறது. ஆனால் மனிதஇனம் இயற்கை வளங்களை அனுபவிப்ப தோடு மட்டுமின்றி அதனை அடக்கி ஆள்வதன் மூலம் அதை ஒடுக்கி வெல்லத் தலைப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும்போதும் அதற்கான வெற்றி சன்மானமாக இயற்கை மனித இனத்தை வெல்கிறது.” என்கிறார்.
சூழலியல் இழப்புகளைக் கண்டுணர்ந்தோரிடம் எழும் இயல்பான அக்கறையும், சூழலியல் சிக்கல் களை ஏற்படுத்திய அதே முதலாளிகள் ‘இயற்கை விளைபொருட்கள்’ என்ற நோக்கில் சந்தை வாய்ப் பாக மாற்றிக் கொள்வதும் நாவலின் போக்கில் கண் முன் காட்சிப்படுகின்றன. இயற்கை வளங் களை வரன்முறையற்றுச் சுரண்டிக் குவிக்கும் முதலாளிகளும், அவர்களுக்குத் துணைபோகும் அரசுக் கட்டமைப்பும் – மிகத் தெளிவான பார் வையுடன் எதிர்கொள்ளப்பட வேண்டியவை. மனித சமூகத்தின் ஒட்டுமொத்த நலவாழ்வுக்கான நம் போராட்டத்திற்கு, முகிலினி வாசிப்பு உதவியாக அமையும்.



One response to “முகிலினியில் கலந்த முதலாளித்துவம் …”

  1. இரா.முருகவேள் Avatar
    இரா.முருகவேள்

    மார்க்ஸிஸ்ட் இதழுக்கும் விமர்சனம் எழுதிய தோழர் ரகுராமுக்கும் மனமர்ந்த நன்றிகள். நாட்டின் மிக முக்கியமான பொதுவுடமைக் கட்சியின் அரசியல் தத்துவார்த்த இதழில் முகிலினிக்கு விமர்சனம் வந்துள்ளது எனக்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சியை அளிக்கிறது. மீண்டும் ஒரு முறை நன்றி தோழர்களுக்கு.

    இரா.முருகவேள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: