மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வரலாற்றைத் திரித்து வழங்குதல்!


ஜியா உஸ் சலாம்

தமிழில் தழுவி எழுதியவர்: கி.ரா.சு.

பாஜக ஆட்சிக்கு வரும்போது வரலாற்றைத் திரித்து அனைவரின் மனங்களிலும், குறிப்பாக இளம் மனங்களில் மதவெறியைத் திணிக்கும் வகையில் வரலாற்றைத் திரித்து எழுதுவது வழக்கமாகி விட்டது. இதை வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் பார்த்தோம்; ராமஜென்ம பூமி விஷயத்திலும் பார்த்தோம்; இப்போதும் பார்க்கிறோம். இப்போது பல்கலைக்கழகங்களிலேயே ஊடுருவும் போக்கு மோசமாக அரங்கேறி வருகிறது.

ராஜஸ்தான் பல்கலைக்கழகப் பாடப்புத்தகத்திலேயே அங்குள்ள பாஜக அரசு இதனை அரங்கேற்றியுள்ளது. மேவாரின் ஆட்சியாளரான ராணாபிரதாப்பை ஹல்திகட்டி போரில் வென்றவராகச் சித்தரிக்கும் ஒரு பாடத்தை ராஜஸ்தான் பல்கலை தன் பாடதிட்டத்தில் சேர்த்துள்ளது. மேலும் அப்போரில் அவர் முகலாயர்களை அழித்தொழித்து விட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு வரலாற்றில் எந்த ஆதாரமும் கிடையாது. இந்தப் புத்தகத்தின் பெயர் ராஷ்டிர ரத்தன்: மகாராணா பிரதாப் (ஆர்யவ்ரத் சன்ஸ்க்ரித் சன்ஸ்தான், தில்லி, 2007) எழுதியவர் சந்திரசேகர் ஷர்மா. அவர் 1576ல் நடந்த ஹல்திகட்டிப் போரில் ராணா பிரதாப்தான் வென்றதாகவும், முகலாயர்கள் வெல்லவில்லை என்றும் எழுதியுள்ளார்.

வரலாற்றை அரசியலாக்குவது என்ற இந்த முயற்சியின்பால் தன் ஆற்றாமையைப் பதிவுசெய்துள்ள பிரபல வரலாற்று நிபுணர் சதீஷ் சந்திரா இவ்வாறு கூறியுள்ளார்: “தாராளமான, மதச்சார்பற்ற குரல்கள் இத்தகைய சீர்குலைக்கும் போக்கை அனுமதிக்காது என்று நம்புகிறேன்.” மத்தியகால இந்தியாவைப் புரிந்துகொள்ள அவரதுசுல்தனேட்டிலிருந்து முகலாயர்கள்வரைஎன்ற நூல்தான் அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது. அதில் அவர் சுட்டிக்காட்டுகிறார்: “மான்சிங் என்ற ரஜபுத்திரரின் தலைமையிலான அக்பரின் படைக்கும், ஹக்கிம்கான் சுர் என்பவரின் தலைமையிலான ஆஃப்கான் படை உள்ளிட்ட ராணா பிரதாப் சிங்கின் படைக்கும் இடையிலான போர் முதலில் வெற்றிதோல்வியின்றி முடிவுற்றது. அதனை இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான போர் என்றோ, ரஜபுத்திரர்களின் சுதந்திரத்துக்கான போர் என்றோ கருத முடியாது. ஏனென்றால் இருபுறமும் ரஜபுத்திரர்கள் இருந்தனர்.” ஆனால் இதைத்தான் தற்போது ராஜஸ்தான் அரசு நிறுவ விரும்புகிறது.

சந்திரசேகர ஷர்மா உதய்பூரின் அரசு மீரா கன்யா மகாவித்யாலயாவில் ஆசிரியர். அந்தக் காலத்தில் ராணா பிரதாப் தனது ராஜ்ஜியத்தின் மீதான பிடியை இழக்கவில்லை என்று நிறுவுவதற்கு ஹல்திகட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த சில மத நிலப்பதிவேடுகளையும், ராணா பிரதாப்பின் சில நிர்வாக முடிவுகளையும் அவர் அடிப்படையாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரு பாஜக சட்டசபை உறுப்பினரான மோகன்லால் குப்தா ராஜஸ்தான் பல்கலையில் வரலாறு கற்பிக்கப்படும் முறை மாற்றப்பட வேண்டுமென்று வாதிட்டார். இதை ஆதரித்துப் பேசிய, மேலும் மூன்று சட்டசபை உறுப்பினர்களான முன்னாள் உயர்கல்வி அமைச்சர் காளிசரண் சரஃப், பள்ளிக்கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் ராஜ்பால் சிங் ஆகியோர், பல்கலையின் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டுமென்றும், ராணா பிரதாப் இப்போரில் வென்றவராகக் காட்டப்பட வேண்டுமென்றும் வாதிட்டனர். பிறகு பல்கலையின் வரலாற்றுத்துறை இப்புத்தகத்தை மாற்றுப்பார்வையை அளிப்பதற்கான தனது குறிப்புப் புத்தகங்களுக்கான பட்டியலில் ஒன்றாகச் சேர்த்துவிட்டது.

ஆனால் இதைக் கல்வியாளர்கள் ஏற்கவில்லை. மேற்கூறிய புத்தகம் கூறுவதுபோல் ஹல்திகட்டி போர் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலானதல்ல என்று அவர்கள் வாதிடுகின்றனர். இரண்டு படைகளிலுமே இந்துக்களும், முஸ்லீம்களும் கலந்திருந்தனர். ஷேர்ஷா சூரியின் பரம்பரையில் வந்த இஸ்லாம்கான் சூர் மேவார் அரசருக்கு ஆதரவாகப் போரிட்டார். அதே சமயத்தில் அக்பரின் படைக்குத் தலைமை தாங்கியவர் அம்பேரின் அரசர் ராஜா மான்சிங். முகலாயர்களுக்கு ராணா பிரதாப்பின் சகோதரரான சக்தி சிங்கின் ஆதரவும் இருந்தது.

ஹல்திகட்டியில் நடந்தபோர் 1576, ஜூன் 18 அன்று வெறும் நான்கு மணி நேரம்தான் நடந்தது என்று கூறப்படுகிறது. சந்திரசேகர் ஷர்மா எழுதியுள்ளது போல் சூரிய உதயத்திலிருந்து, சூரிய மறைவு வரை நடைபெறவில்லை. அது பாரம்பரியமுறையில் காலாட்படை, யானைப்படையுடனேயே நடத்தப்பட்டது. ஏனென்றால் அந்தக் கடுமையான நிலப்பரப்பில் முகலாயர்களால் தமது ஆயுதங்களைக் கொண்டுவர முடியவில்லை. அந்த ஆயுதங்கள்தான் அவர்களது பலமும்கூட. பாரம்பரிய முறையிலான போரில் ரஜபுத்திரர்களின் கை மேலோங்கியிருந்தது.

அலிகார் முஸ்லீம் பல்கலைஆசிரியரான பேரா. சையத் அகமத் ரிசாவி, தமது மத்தியகால இந்தியா பற்றிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்: “ராணா பிரதாப்புடன் மற்ற ரஜபுத்திரர்களின் கடுமையான தாக்குதல் முகலாயர்களின் இடது, வலதுபுறப் படைகளை நாசம் செய்வதற்கு இட்டுச் சென்றதுடன், மத்தியில் மான்சிங் படைகள்மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.. ஆனால் அக்பர் வந்துவிட்டார் என்ற புரளியால் நிலை மாறி, ரஜபுத்திரர்கள் பின்வாங்க நேர்ந்தது. ஜூலையில் ராணா பிரதாப் தான் இழந்த சில நிலங்களை மீட்டு கும்பல்காவைத் தனது தளமாக்கிக் கொண்டார். விரைவில் அக்பர் தானே நேராக வந்து போரிட்டதில் கும்பல்கா உள்ளிட்ட பல நிலப்பகுதிகளை ராணா பிரதாப்பிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். ராணா பிரதாப் மேவாரின் தென்பகுதியில் இருந்த மலைப்பகுதிக்குத் தப்பிச் செல்ல நேர்ந்தது.”

முகலாயர்களின் படையெடுப்பு அத்துடன் முடிந்து விடவில்லை. ஜலோரின் ஆஃப்கான் தலைவர் மீதும், இதார், சிரோஹி, பன்ஸ்வாரா, டுங்கர்புர், புண்டு ஆகியவற்றின் ரஜபுத்திரத் தலைவர்கள் மீதும் நிர்ப்பந்தம் செலுத்தினர். மேவார், குஜராத், மால்வாவின் எல்லைகளில் அமைந்த இந்த அரசுகள் அப்பகுதியில் ஆதிக்க சக்தியின் மேலாண்மையைக் காலங்காலமாக மதித்து வந்தவை. இதன் விளைவாக, அவை முகலாயர்களுக்குக் கீழ்ப்படிந்தன. புண்டியிலும், அதன் அருகாமையிலுள்ள சில இடங்களிலும் தன் ஆட்சியை நிறுவ ராவ் சர் ஜான் ஹாடாவின் மூத்தமகன் டூடா ராணா பிரதாப்புடன் கைகோர்த்திருந்தார். டூடாவின் தகப்பனாரான சர் ஜான் ஹாடாவும் அவர் இளைய சகோதரரான போஜும் முகலாயர்களுடன் இந்தப் போரில் கைகோர்த்திருந்தனர். ராணா பிரதாப் இறுதியில் மலைகளுக்குத் தப்பியோடினார்.

சதீஷ் சந்திரா இவ்வாறு கூறுகிறார்: “ராணா பிரதாப் ஹல்திகட்டி போரில் வென்றதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. வீரமிக்க போருக்காக அவர் அறியப்படுகிறார். அவரது கொரில்லா போர்முறை பின்னர் சிவாஜியால் பின்பற்றப்பட்டது. அக்பருடனான அவரது போரை மதப் போராக வகைப்படுத்துவது தவறு. தற்கால அரசியல் பார்வையில் வரலாற்றை நாம் பார்க்க முடியாது. ராணா பிரதாப் துணிவும், வீரமும் மிக்கவர் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அவருக்கு பில்களும், ஆஃப்கானியர்களும் ஆதரவளித்தனர். பெரும்பாலான ரஜபுத்திரர்கள் அக்பருக்கு அடிபணிந்துவிட்ட காலத்தில் அவர் சில கொள்கைகளுக்காக நின்றார். சுதந்திரம் அடையும்வரை அவருக்கு எந்த சிலையும் இல்லை. உதய்பூரில் அவர் பெயரில் எந்த சாலையும் இல்லை. இப்போது அரசியல் காரணங்களுக்காக அவரைப் பற்றி அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர். அவரைப் பொறுத்தவரை இந்துத்துவாவுடன் எந்தத் தொடர்புமில்லை. அவரை இன்று இந்து வீரர் என்று புகழ்பவர்கள், இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் தீராத பகையை மூட்ட பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் மத்தியகால இந்தியா பற்றி எழுதியதை காப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

அது ஒரு மத மோதலல்ல

ஹல்திகட்டி போரும், ராணா பிரதாப்புக்கும், முகலாயர்களுக்கும் இடையிலான போரும் இரண்டு மதங்களுக்கு இடையிலான போர்களல்ல; அது ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கான போர். அதில் முகலாயர்கள் தீர்மானகரமான வகையில் வென்றனர். இதில் முகலாயர்களுக்கு ஏராளமான ரஜபுத்திரர்களின் ஆதரவும் இருந்தது. ராணா பிரதாப்புக்கு ஆஃப்கானியர்களின் ஆதரவு இருந்தது.

ஆக, இந்த முரண்பாட்டை ஏன் ராஜஸ்தான் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது என்பது தெளிவு. இளம் மனங்களில் மதவெறியை விசிறிவிடும் பணிதான் அதன் நோக்கம். இத்தகைய வரலாற்றை போதிப்பதன் மூலம் அதைச் செய்யவே விரும்புகிறார்கள்.

மேவார் போன்ற சிறு, சிறு ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்களை மகாராணா என்றும், சிவாஜி போன்றவர்களை வீர சிவாஜி என்றும் போற்றும் ஒருவகை புகழ்பாடுதலின் பகுதிதான் மேற்கூறிய திரிபுவாதமும்.

ரெசாவி கூறுகிறார்: மத்தியகால வரலாற்றில் சிறு, சிறு ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள்கூட தம்மை மேலானவர்களாகக் காட்டிக்கொள்ள பெரிய பட்டங்களைச் சூடிக்கொண்டனர். மேவாரின் அரசர் தன்னை மகாராணா என்று அழைத்துக் கொண்டார். அந்தப் பட்டம் ரஜபுத்திர தலைவர்களிடையே ராணாவை மிக முக்கியமானவராக்கியது. அம்பேரின் கச்சவாகாக்களையும், புண்டேலாக்களையும் ஒப்பிடுகையில் மார்வாரும், மேவாரும் பெரிய ரஜபுத்திர தலைவர்கள்தான். கச்சவாகாக்கள் முகலாயர்களுடன் கைகோர்த்தபிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தார்கள். முகலாயர்கள் இல்லாமலேயேகூட மார்வாரும், மேவாரும் புகழ் பெற்றிருந்தன.”

சதீஷ் சந்திரா கூறுகிறார்: “அவர்கள் (அரசியல்வாதிகள்) எல்லா இடங்களிலும் வரலாற்றைத் திரிக்க விரும்புகின்றனர். அவர்கள் எவ்வளவுதான் கடுமையாக முயன்றாலும் அவர்களால் வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. ராணா பிரதாப் வீரமிக்க, ஆனால் தனிமையான போரை நிகழ்த்தினார். ரஜபுத்திரர்களில் ஒரு பகுதியினர்தான் அவருக்கு ஆதரவளித்தனர். அவர்களில் பெரும்பாலோரை அக்பர் ஏற்கனவே வென்றுவிட்டார்.”

அக்பர் ரஜபுத்திரர்களையும், கத்ரிக்களையும் தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினார். அக்பர் நிர்வாகத்தில் பன்னிரண்டு திவான்களில் எட்டுப்பேர் கத்ரிக்களும், காயஸ்தாக்களுமாவர். எனவே மதமோதல் என்ற கட்டுக்கதையை இதுவே அம்பலப்படுத்தும்.

இன்னொருபுறம் முகலாயக் குறிப்புகள் சிவாஜியை சிவா என்றே குறிப்பிடுகின்றன. மாராத்தாக்கள் மிகவும் பிற்காலத்தில்தான் பேஷ்வாக்களின் கீழ் மேலெழுந்தனர். ரெசாவி கூறுகிறார்: “சிவாஜியும், சாம்பாஜியும் சிறு மலைக்கோட்டைகளின் குறுந்தலைவர்களேயாவர். அவர்கள் பாதுகாப்பு மாமூல் வசூலித்தே வாழ்ந்து வந்தனர். சிவாஜி புரந்தர் போரில் ரஜபுத்திர மிர்சா ராஜா ஜெய்சிங்கால் தோற்கடிக்கப்பட்டார். அதற்கு முன் அவருடன் போரிட்ட முகலாய தளபதிகள் செய்ஷ்டா கானும் ஜஸ்வந்த்சிங் ரத்தோருமாவர். சிவாஜியை ஆக்ராவில் அவுரங்கசீபின் கோட்டைக்குக் கொண்டு வந்தபோது சபையில் அவரை எள்ளிநகையாடியவர் வேறு யாருமல்ல; இந்த ரத்தோர்தான். அவர் ஜெய்சிங்கின் மகன் ராம்சிங்கின் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு, அங்கிருந்து தப்பினார்.

கதைகள் வரலாறானால்?

கதைகளை வரலாறுகளாக்குவது எதில் சென்றுமுடியும்? நமது சமூகத்தின் ஒற்றுமையைக் குலைக்க இதைத்தான் மதவெறி அமைப்புகள் செய்து வருகின்றன. இளம் மனங்களில் விஷத்தை விதைக்க இவற்றைப் பள்ளி, கல்லூரிப் புத்தகங்களில் திணிக்கின்றன.

நாஜிக்களும் இதைத்தான் செய்தனர். பாகிஸ்தானும் இதைத்தான் செய்தது. அக்பர் பற்றிய குறிப்புகளே பாகிஸ்தான் பாடப்புத்தகங்களிலிருந்து அகற்றப்பட்டு விட்டன. இந்துக்களுடனும், ரஜபுத்திரர்களுடனும் சேர்ந்து இஸ்லாமுக்கு ஊறுவிளைவித்தவர் என்று அக்பரைப் பற்றி பாகிஸ்தான் பள்ளிகள் போதிக்கின்றன. இந்தியாவிலோ அக்பர் உண்மையில் மோசமானவர் என்று இளம் மனங்களில் விதைக்க முயற்சி நடக்கிறது. ஏன்? ஏனென்றால் இந்த அடிப்படைவாதிகள் அக்பரின் மதமற்ற போக்கைக் கண்டு அஞ்சுகின்றனர். அக்பரின்சுல்குல்(நிறைந்த அமைதி அல்லது அமைதிப்படுத்திக் கொள்வது என்ற கொள்கை) இந்து, முஸ்லீம் அடிப்படைவாத சக்திகளுக்குஅச்சமூட்டுகிறது என்கிறார் ரெசாவி.

1585ல் அக்பரின் சபைக்கு வருகைதந்த பாதிரியார் மொன்சரேட் அக்பர் அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதன் மூலம் அனைத்தையும் எதிர்க்கிறார் என்கிறார். அதுதான் பாகிஸ்தானிய முல்லாக்களுக்குஅச்சமூட்டுகிறது. அதுதான் இந்தியாவில் இந்துத்துவப் பரிவாரங்களுக்கு அச்சமூட்டுகிறது. அவர்கள் இருவருக்கும் பல கட்டுக்கதைகள் சூழ்ந்த அவுரங்கசீப்தான் உண்மை நாயகர். முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கு அவர் ஒரு இறைத்தூதர், இந்து அடிப்படைவாதிகளுக்குத் தமது வெறுப்பைப் பரப்ப அவர் ஒரு அடையாளம்.

இந்திய மக்கள் முட்டாள்களல்ல. அரசர்களுக்கு எந்தமதமும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த அரசர்களுக்கு எந்தமதமும் கிடையாது. ஆனால் அவர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல மதங்களைத் தற்கால ஆட்சியாளர்களைப் போல் உபயோகித்தனர்.

முகலாயர்கள் முஸ்லீம்கள் என்பதாலேயே ராணா பிரதாப்பும், சிவாஜியும் அவர்களை எதிர்த்ததாக சில அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. ராணா, சிவாஜி ஆகியோரின் படைகளில் பெருமளவு முஸ்லீம் தளபதிகளும், வீரர்களும் நிறைந்திருந்தனர். முகலாய படையில் இந்துக்களான ரஜபுத்திரர்கள் இருந்தனர். இந்து பத்பத் ஷாகி என்று அவர் அழைத்த படைகளுக்கு சிவாஜி தலைமை தாங்கினார். பீட்டர் முண்டி போன்றோர் தற்போது கூறுவதை நம்புவதானால், பெரும்பாலான அவரது சிறைகளில் பிராமணர்களே நிறைந்திருந்தனர். அவர் சவுத்தையும், சர்தேஷ் முக்தியையும் (மாமூல்) முஸ்லீம் விவசாயிகளே இல்லாததால் இந்து விவசாயிகளிடமிருந்தே வசூலித்தார்.

ஆக, பாபரை வரவேற்று முடிசூட்டிய ராணா சங்காவாக இருக்கட்டும்; ராணா பிரதாப்பாக இருக்கட்டும்; சிவாஜியாக இருக்கட்டும்;அவர்கள் முகலாயர்கள் வெளிநாட்டினர் என்பதற்காகவோ, முஸ்லீம்கள் என்பதற்காகவோ எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்பதற்காகவே எதிர்த்துப் போரிட்டனர்; அல்லது ஒரு அரசருக்கெதிராக இன்னொருவர் போரிட்டனர்.

1961ல் வெளிவந்த ஒரு இந்திப்படம் ஜெய்சித்தூர். அது ராணா பிரதாப்பின் புகழ்பெற்ற குதிரை சேட்ட அவரது உயிரைப் போரில் காப்பாற்றியது குறித்த லதா மங்கேஷ்கரின் ஒரு பாடலை உள்ளடக்கியது. ஆனால் அந்தப் படத்தில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது, அதாவது இந்தக்கதை வரலாறல்ல; கட்டுக்கதை என்பதே அது.

இவர்கள் வரலாற்றை கட்டுக்கதைகளால் நிரப்ப முயல்வதற்கு எதிராக நாம் இந்த எச்சரிக்கையைத்தான் கொடுக்கவேண்டியுள்ளது.

Thanks: Frontline, March 31, 2017.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: