கார்ல் மார்க்ஸ் 200 – சில மேற்கோள்கள் …
ஓவியம்: கோ.ராமமூர்த்தி
மூலதனம் உயிரற்ற உழைப்பு ஆகும். அது ரத்தக்காட்டேரியைப் போல உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது. எவ்வளவு அதிகமாக உழைப்பை உறிஞ்சுகிறதோ அவ்வளவு அதிகமாக வாழ்கிறது.
தொழிலாளி வேலை செய்யும் நேரம் என்பது முதலாளி அவரிடமிருந்து வாங்கியிருக்கும் உழைப்புச் சக்தியை நுகர்கிற காலம் ஆகும்.
– மூலதனம் தொகுதி 1, அத்தியாயம் 10 பிரிவு 1
உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு அதனோடு பொருந்தக்கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.
பொருளாதாய வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.
– அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற நூலில் முதல் பதிப்புக்கு எழுதிய கருத்துரையிலிருந்து
(வர்க்கங்கள் பற்றிய தனது கண்டுபிடிப்பை விளக்கும் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடும்போது)
நான் புதிதாக என்ன செய்தேன் என்றால் அது கீழ்க்கண்டவற்றை விளக்கியதுதான்: 1) வர்க்கங்கள் இருப்பதென்பது உற்பத்தியின் வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது 2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாகத் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும் 3) இந்தச் சர்வாதிகாரம் என்பது எல்லா வர்க்கங்களையும் ஒழிப்பதற்கும் வர்க்க பேதமற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றமாக இருக்கிறது.
– யோசிஃப் வெடமையருக்கு எழுதிய கடிதத்தில் (மார்ச் 5, 1852)
இப்போதைக்கு நாம் சாதித்தாக வேண்டியது மிகத் தெளிவானது. அதாவது நிலவுகின்றவை அனைத்தையும் பற்றிய ஈவிரக்கமற்ற விமர்சனத்தை நாம் செய்ய வேண்டும். அதிகார சக்திகளுடன் மோதும்போது எவ்வாறு சிறிதும் அஞ்சுவதில்லையோ அதே போலத் தான் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியும் அஞ்சாத விமர்சனமாக இருக்கவேண்டும் எனும் பொருளில் அது ஈவிரக்கமற்றதாக இருக்கவேண்டும். எனவே நான் எந்தவொரு வறட்டுக் கோட்பாட்டுப் பதாகையையும் உயர்த்த விரும்பவில்லை மாறாக வறட்டுக் கோட்பாட்டாளர்கள் தங்கள் முன்மொழிவுகளை தங்களுக்குத் தாங்களே தெளிபடுத்திக்கொள்ள உதவ நாம் முயல வேண்டும்.
– கார்ல் மார்க்ஸ், அர்னால்ட் ருஜ்ஜுக்கு எழுதிய கடிதம் 1843
மூலதனத் திரட்சி உபரி மதிப்பை முன் தேவையாகக் கொண்டுள்ளது; உபரி மதிப்பு முதலாளித்துவ உற்பத்தியை முன் தேவையாகக் கொண்டுள்ளது; முதலாளித்துவ உற்பத்திச் சரக்கு உற்பத்தியாளர்களின் கரங்களில் மூலதனமும்உழைப்புச் சக்தியின் கணிசமான திரள்களும் முன்கூட்டியே இருப்பதை முந்தேவையாகக் கொண்டுள்ளது. எனவே இயக்கம் முழுவதும் ஒரு நச்சுவட்டத்தில் சுழல்வதாகத் தோன்றுகிறது. முதலாளித்துவ திரட்சிக்கு முன்னர் நிகழ்கிற ஒரு ஆதித் திரட்சியை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாக அல்லாமல் அதன் துவக்கப்புள்ளியாக உள்ள ஒரு திரட்சியாக அனுமானம் செய்துகொள்வதன் மூலம் மட்டுமே நாம் இந்த நச்சு வட்டத்திலிருந்து விடுபட முடியும்…
ஆதித் திரட்சி என்று அழைக்கப்படுவதாவது, உற்பத்தியாளனை உற்பத்திச் சாதனங்களிடமிருந்து பிணையறுக்கும் ஒரு வரலாற்றுச் செய்முறையேயன்றி வேறொன்றுமில்லை. அது ஆதிகாலத்தியதாகத் தோன்றுவது ஏனென்றால், மூலதனத்தினுடையவும் அதனோடு இணையான உற்பத்தி முறையினிடமும் வரலாற்று முற்காலகட்டமாக அது அமைகிறது.
– மூலதனம் நூலின் முதல் பாகம் பகுதி 8 …
வர்க்கப் பகைமையின் மீது நிறுவப்பட்ட ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருப்பது அத்தியாவிசய நிபந்தனையாகும். எனவே, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலையானது, ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கும் உட்கிடக்கையை அவசியமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே முயன்று பெற்ற உற்பத்தி சக்திகளும், தொடர்ந்துவருகின்ற சமுதாய உறவுகளும் பிணைந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற நிலைமை ஏற்படுவது, ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னைத் தானே விடுதலை செய்துகொள்வதற்கு அவசியமானதாகும். உற்பத்திக் கருவிகள் அனைத்தைக் காட்டிலும் ஆகப்பெரிய உற்பத்தி சக்தியானது புரட்சிகர வர்க்கமே ஆகும். பழைய சமுதாயத்தின் மார்புக்கூட்டுக்கள் உருவாக முடிந்த உற்பத்தி சக்திகள் அனைத்தும் புரட்சிகரக் கூறுகளின் அமைப்பான ஒரு வர்க்கமாக அனுமானிக்கிறது.
– மெய்யறிவின் வறுமை, அத்தியாயம் இரண்டு, பிரிவு 4.
இதற்கு முந்தைய இயக்கங்கள் எல்லாம் சிறு எண்ணிக்கையிலானவரின் நலன்களுக்காக சிறு எண்ணிக்கையிலானவரால் நடத்தப்பட்ட இயக்கங்கள். பாட்டாளிவர்க்க இயக்கம் மிகப் பெரும்பான்மையினருக்காக மிகப் பெரும்பான்மையினர் நடத்தும் சுயேட்சையான இயக்கம். தற்கால சமுதாயத்தின் மிக அடிமட்ட அடுக்கான பாட்டாளிவர்க்கம், அதிகாரப்பூர்வமான சமுதாயத்தை உருவாக்கும் அடுக்குகளின் மேல்கட்டுமானம் முழுவதையும் தகர்த்தெறியாமல் தன்னை எழுந்து நிற்கச் செய்யவோ, நிமிர்ந்து நிற்கச் செய்யவோ முடியாது.
– கம்யூனிஸ்ட் அறிக்கை, பக்கம் 219 (எஸ்.வி.ராஜதுறை மொழியாக்கம்)
One thought on “நிலவுகின்ற அனைத்தையும் குறித்த ஈவிரக்கமற்ற விமர்சனம் …”