மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சிங்காரவேலர் வரலாற்றில் அறியாத சில பக்கங்கள் …


– ஆய்வாளர் அ.பகத்சிங்

ம.சிங்காரவேலர் பன்முக ஆளுமையைக் கொண்டவர். தன் அளப்பறிய சுயதேடலின் மூலம் பல்வேறு சிந்தனை மரபுகளைக் கற்றுணர்ந் தவர். பவுத்தராகத் தன் பயணத்தைத் துவங்கி பல தடங்களை கடந்து ஒரு பொருள்முதல்வாதியாக, பொதுவுடைமைப் போராளியாக தன்னை வளர்த் துக் கொண்டு, சிறந்த கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்தார். தொழிற்சங்கத் தலைவராக, சிந்தனை யாளராகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லா மல், பொதுவுடைமை கருத்தியலை, முற்போக்கு சிந்தனையை மக்கள் மனதில் விதைக்கத் தன் எழுத்தையும், பேச்சையும் ஆயுதமாக வாழ்நாள் முழுக்க பயன்படுத்திய சிறந்த செயற்பாட்டாளர். தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமை வாதியாகவும், இந்தியாவில் முதன்முதலில் மே தினம் கொண்டாடிய பெருமையை கொண்டவர் மட்டு மல்லாமல், மார்க்சிய சித்தாந்தத்தை உள்வாங்கி அதனை இந்திய சூழுலுக்கு ஏற்றவாறு செயல்வடிவம் தந்த பெருமையும் அவரையே சாரும்.

மார்க்சிய அடிப்படையிலான அவரது சிந்தனை கள் இன்றும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இந்துமதம், சாதியம், தீண்டாமை, மத சிறுபான் மையினர் குறித்த அவரது புரிதல் மிகவும் ஆழமானது. காலம் கடந்திருந்தாலும், சிங்கார வேலரின் முக்கியத்துவத்தை இடதுசாரி இயக்கம் இன்று உணரத் துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. சிங்கார வேலர் சிந்தனைகளை, செயல்பாடு களைக் கண்டறிந்து மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். அதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு சிங்கார வேலரையும், அவரது சிந்தனைகளையும் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழக இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகள் பின்தங்கிய மந்த நிலையிலேயே உள்ளது. இந்தியாவில், தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டக் காலக்கட்டத்தில் ம.சிங்காரவேலரின் பன்முகச் செயல்பாடுகள் என்ன என்பதை முறை யாகப்பதிவு செய்யாமல் போனதால், சுமார் 50 ஆண்டு கால பொதுவுடைமை இயக்கத்தினுடைய வரலாற்று பயணத்தை, பாரம்பரியத்தைப் பொது வுடைமை இயக்கம் இழந்துள்ளது எனலாம். எனவே தமிழக இடதுசாரி இயக்கத்தின் விடுபட்ட வரலாற்றைச் சரியான தரவுகளோடு நேர் செய்ய வேண்டிய கடமையும் இடதுசாரிகளின் முன்னுள்ளது. எனவே சிங்காரவேலரை ஒத்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை, பணிகளை முறையாக தொகுக்க வேண்டும்.

இழந்த பதிவுகள்
ம.சிங்காரவேலர் அவர்களின் சுமார் 86 ஆண்டுகால வாழ்வில், அவரது எழுத்துக்களாக, தொண்டுகளாக, அரசியல் செயல்பாடுகளாக நமக்குக் கிடைப்பது அவர் வாழ்நாளில் சுமார் 15 ஆண்டுகள் (1920-1935) தொடர்புடைய விபரங் கள் மட்டுமே. அவரது சிந்தனைகள், செயல்பாடுகள் குறித்து நாம் அறிய இன்று நம்முன் இருக்கும் ஆவணங்கள் மிகச் சொற்பமே. பெரும்பான்மை ஆவணங்கள் இன்னும் கிடைக்க வில்லை. சிங்கார வேலரின் தீவிர காலனிய எதிர்ப்பு, மார்க்சிய ஆதரவு, தொழிற்சங்க நடவடிக்கைகள் அரசிற்கு நெருக்கடிகளைக் கொடுத்தது. இதனால் பல்வேறு காலகட்டங்களில் அவரது பங்களிப்புகள், செயல் பாடுகள் குறித்த ஆவணங்கள் அழிக்கப்பட்டது. சில நேரங்களில் பிரிட்டிஷ் காவல் துறையின் கெடுபிடிகளுக்கு ஆட்பட்டு அவரே ஆவணங்களை அழித்திருக்கக் கூடும் என்றும் ஆய்வாளர் கள் கருதுகின்றனர்.

சிங்காரவேலர் எழுதிய பத்திரிக்கைகள்
இவற்றை எல்லாம் மீறி நிலைத்திருந்த சொற்ப ஆவணங்களை அழிவதற்கு முன்பாக அவற்றைத் தொகுத்தளித்த முனைவர் முத்துகுணசேகரன், புலவர் பா.வீரமணி ஆகியோரின் பணி மெச்சத்த குந்தது. “சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம்” என்ற மூன்று தொகுதிகளை கொண்ட இத்தொகுப் பினில் புதுவுலகு, குடியரசு முதலான இதழ்களின் கட்டுரைகளும், பிற துண்டுப்பிரசுரங்கள், சிறு நூல்கள், அறிக்கைகள் ஆகியன தொகுக்கப்பட்டு உள்ளன. இவற்றைத் தவிர்த்து இன்னும் பல பதிவுகள் தொகுக்கப்படாமலும், கண்டறிய முடியாமலும் உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் ஈ.எல்.அய்யர் நடத்திய சுவதர்மா (Swadharma) ஆங்கிலப் பத்திரிகை யில் சிங்காரவேலர் எழுதிய பதிவுகள் மிகப் பிரபலம். குறிப்பாக “How Communist think”, “Right to Strike” போன்ற தொடர்கள் முக்கியமானவை. பிரிட்டிஷ் அரசின் அதிகாரியும் பொருளாதார அறிஞருமான Gilbert Slator அவர்களுடனான உரையாடலில். “Right to Strike” என்று சிங்கார வேலர் எழுதிய தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும், சிங்காரவேலர், தான் தொடங்கிய கட்சி யின் சார்பாக லேபர் கிஸான் கெஜட் (Labour Kisan gazette) எனும் ஆங்கிலப் பத்திரிகையும் வெளியிட்டு அதில் தொடர்ந்து எழுதவும் செய் தார். இவற்றை தவிர்த்து அவர் வாழ்நாள் முழுக்க எழுதியவை இன்னும் எங்கெல்லாம் உள்ளதோ, அவற்றைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்த வேண் டியக் கடமை ஆய்வாளர்களுக்கும், பொது வுடைமை அன்பர்களுக்கும் உள்ளது.

வாழ்க்கை வரலாற்றுக்கான தேடல்
சிங்காரவேலர் எழுத்துக்கள் மட்டுமல்லாது அவரது வாழ்க்கை வரலாறும் முழுமையாகக் தொகுக்கப்படவில்லை. மற்ற தலைவர்களைப் போல் சுயசரிதை எழுதாமல் சிங்காரவேலர் வரலாற்று எல்லைக்கு உட்படாதவராகப் போய் விட்டார். பொதுவுடைமை போராளிகள் சி.எஸ்.சுப்பிர மணியம், நாகை முருகேசன் ஆகியோர் முன் முயற்சி எடுக்காமல் போயிருந்தால், சிங்கார வேலர் என்ற போராளியை பற்றி மக்களும், வரலாறும் மறந்திருக்க வாய்ப்புள்ளதை யாரும் மறுக்கமுடியாது. சிங்காரவேலர் அவர்களின் வரலாற்றை முழுமைபடுத்த அக்கால வரலாற்று ஆவணங்களைத் தேடி எடுப்பது பயன் தரலாம்.

அவரது சமகாலத்தவர்களான ஈ.வெ.ராமசாமி, சர்க்கரை செட்டியார், பாரதியார், அயோத்தி தாசர், ம.பொ.சிவஞானம், திரு.வி.க முதலான வர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்வதின் மூலம் சிங்காரவேலரின் வரலாற்று பாதைகயில் புதிய வெளிச்சங்கள் ஆய்வாளர்கள் பாய்ச்சி வருக்கின்றனர். குறிப்பாக புலவர் பா. வீரமணி அவர்கள், சிங்காரவேலர் பிற ஆளுமைகளோடு கொண்டிருந்த நட்பை, தொடர்பை, கருத்தியல் விவாதங்களை பல்வேறு ஆவணங்கள், வாழ்க்கை வரலாறுகள் வழி ஆய்வு செய்து தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். (பார்க்க: சிங்கார வேலரும் பிற சிந்தனையாளர்களும், பாரதி புத்தகாலயம் வெளியீடு). இதுபோன்ற ஆய்வுகளின் வழியே சிங்காரவேலரின் பன்முக ஆளுமையும், பரவலான செயல்பாடுகள் குறித்தும் அறிய முடிகிறது.

அயோத்திதாசர் குறித்த ஆராய்ச்சி
பண்டிதர் அயோத்திதாசரின் பதிவுகள் குறித்த ஆராய்ச்சியின் வழியாய் சிங்காரவேலரின் பௌத்தம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து இதுவரை பதியப்படாத புதிய தரவுகள் வெளி வந்துள்ளது. அயோத்திதாசரின் சிந்தனை மரபு, தலித் இலக்கியம், அரசியல் குறித்து தொடர்ந்து எழுதிவரும் முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் அயோத்திதாசரின் “தமிழன்” இதழில் வெளியான சிங்காரவேலர்-அயோத்திதாசர் இடையே எழுதப்பட்ட கடிதங்களை நூலாகர் பதிப்பித்துள்ளார். (பார்க்க: அயோத்திதாசரும் சிங்காரவேலரும், 2010 கயல்கவின் பதிப்பகம்) இந்தப் பதிவானது சிங்காரவேலர் பௌத்த சங்கத்தில் செயல்பட்ட காலம் குறித்த பதிவினை நமக்கு கொடுக்கிறது. இப்பதிவின் வழியே சிங்கார வேலரும், அயோத்திதாசரும் இணைந்து பௌத்த பணி ஆற்றியதும், அவர்கள் இடையே இருந்த உடன்பாடும், முரண்பாடும் அறிய முடிகிறது. இரண்டு ஆளுமைகளின் கருத்தியல் பலம் மற்றும் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்து பவையாக இந்த ஆவணம் அமைந்துள்ளது. இதைப் போன்று வரலாற்றின் இடுக்குகளில் மறைந்திருக்கும் உண் மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இருக் கும் வாய்ப்புகளை மேலும் கண்டடைய வேண் டும். இதற்கு மற்றுமொரு சான்று கோசாம்பி யின் வாழ்க்கை வரலாறு.

தர்மானந்த கோசாம்பியுடன் சந்திப்பு
அயோத்திதாசருடனான பௌத்த சங்க செயல் பாடுகள் போன்று சிங்காரவேலர் பௌத்தராக இருந்த வாழ்க்கையின் இன்னும் சில பக்கங்கள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது வடநாட்டு பௌத்த ஆராய்ச்சியாளரான தர்மானந்த கோசாம்பியின் வாழ்க்கை வரலாறு. சிங்கார வேலர்- கோசாம்பி இடையேயான தொடர்பு இதுவரை கவனம் பெறாத ஒன்றாகும். தர்மானந்த கோசாம்பி சிங்காரவேலரோடு தொடர்பு கொண்டிருந்தார் என்ற வரலாற்று தகவல், அவரது வாழ்க்கை வரலாறை வாசி க்கையில் அறிய முடிகிறது. இந்தத் தகவலை கண்டடைவதற்கு அடிப்படையாய் அமைந்தது வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதி அவர்களின் ”அயோத்திதாசரை சந்தித்த கோசாம்பி” (காலச்சுவடு ஆகஸ்டு 2011) என்ற கட்டுரை. இக்கட்டுரை வாசிப்பினூடே வியப்பூட்டும் வகையில் சிங்கார வேலர் குறித்த குறிப்பினை காணநேர்ந்தது. கட்டுரையின் தலைப்பு அயோத்திதாசரை குறித்த தாலும், கட்டுரை முழுக்கவும் நிறைந்து இருப்பது சிங்காரவேலர் தான்.

மேற்கண்ட கட்டுரையை சலபதி அவர்களின் கோசாம்பியின் சுயசரிதை நூலான Nivedan: An Autobiography of Dharmanand Kosambi என்ற நூலில் இருந்தே எடுத்தாண்டுள்ளார். மராத்தியில் எழுத் தப்பட்ட இந்நூல் சுமார் 100 ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவே இத்தக வலை நாம் அறிய முடிகிறது. கோசாம்பியின் பெயர்த்தியான பேராசிரியர் மீரா கோசாம்பி இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அறி முகவுரையும் எழுதியுள்ளார். இந்நூலில் இருந்தே கோசாம்பியின் தென்னகம் வருகை, அயோத்தி தாசர் -சிங்காரவேலருடனான தொடர்பு குறித்த தகவல்களை அறிய முடிகிறது.

கோசாம்பியின் பதிவுகள்
தர்மானந்த கோசாம்பி (1876-1947) அவர்கள் சிறந்த பௌத்த ஆராய்ச்சியாளர் ஆவார். புகழ் பெற்ற மார்க்சிய வரலாற்றியலாளர் தாமோதர் தர்மானந்த கோசாம்பி (டி.டி.கோசாம்பி) அவர் களின் தந்தை ஆவார். தர்மானந்த கோசாம்பி பௌத்தத்தை மறுமலர்ச்சி செய்வதிலும், அதன் வரலாற்று மீட்டுருவாக்கம் செய்வதிலும் முக் கியப் பங்காற்றியவர். அவரது ”கௌதம புத்தர்“ மிகவும் முக்கிய நூல். பௌத்தத்தின் வரலாற்றை அறிவதற்காக இந்தியாவின் பல பகுதிகளுக்கும், நேபாளம், இலங்கை, பர்மா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணித்துப் பௌத்தம் பற்றி அறிந்துகொண்டார். பௌத்தத்தை அறிவதற் காக பாலி மொழியைக் கற்றுத்தேர்ந்து, பௌத்த மூல நூல்களைப் பயின்றுள்ளார். மராட்டியில் இவர் எழுதிய பௌத்தம் தொடர்பான நூல்கள் அவருக்குப் புகழைத் தேடித் தந்தன. பௌத்த ஆய்வு தொடர்பாக ஹார்வார்டு பல்கலைக் கழகத்துக்குப் பலமுறை சென்றுவந்ததோடு, அகமதாபாத்தின் வித்யா பீடத்திலும், சோவியத் ஒன்றியத்தின் லெனின்கிராட் பல்கலைக்கழகத் தில் பாலி மொழிப் பேராசிரியராகச் செயல் பட்டார். இந்தியாவில் சோசலிசத்தை அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவர் எனப் பல பெருமைகளைக் கொண்டவர்.

தர்மானந்த கோசாம்பி சிங்காரவேலரை போல் அல்லாமல் தன் வரலாறை எழுதியுள்ளார். அது 1912-1916இல் தொடராக வெளிவந்து 1924ல் “ஆத்ம நிவேதன்” என்ற பெயரில் நூலாக்கம் பெற்று மராட்டிய இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளது. கோசாம்பி தன் வாழ்நாளில் பௌத்தம் குறித்துக் கற்றறிய தெற்காசியா முழுக் கப் பயணித்தார். அதன் ஒரு பகுதியாக 1902 ஆம் ஆண்டு இலங்கை நோக்கிய பயணத்தின் போது தென்னிந்தியாவில் சென்னையில் தங்கி சென்ற பயணத்தின் அனுபவங்களைத் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார். அப்பயணத்தின் போதே சென்னையில் சிங்காரவேலர், அயோத்தி தாசர், லட்சுமிநரசு ஆகியோரை சந்திக்கிறார். சுமார் ஏழு மாதங்கள் சென்னையில் தங்கி பௌத்த பணியாற்றி உள்ளார். இக்காலகட்டத் தில் சென்னையில் கோசாம்பியின் அனுபவங் கள், இப்பகுதியின் அரசியல் சூழலையும், சிங்கார வேலர், அயோத்திதாசர், லட்சுமி நரசு போன்ற ஆளுமைகளின் வெளிப்படாத பக்கங்களை இந்நூல் திறந்துவைக்கிறது.

உதவி தேடி வந்த கோசாம்பி
பௌத்த ஆய்விற்காக இலங்கை பயணம் மேற்கொண்ட கோசாம்பி உதவி வேண்டி, தான் சார்ந்துள்ள கல்கத்தாவின் மகாபோதி சங்கத்தைச் சேர்ந்த சாருசந்திரபோஸ் அவர்களிடம் இருந்து அச்சங்கத்தின் சென்னைக் கிளையின் செயலா ளர் சிங்காரவேலருக்கு ஒரு கடிதம் பெற்றுக் கொண்டு சென்னை வருகிறார். தூத்துக்குடி வழியாக கொழும்பு செல்ல திட்டமிட்டிருந்தார் கோசாம்பி. ஆனால் நோய் தடுப்புச் சோதனை காரணமாகப் பத்து நாட்கள் அங்கு தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் எற்படுகிறது. கையில் வெறும் பத்தரை ரூபாய் மட்டுமே வைத்திருந்த கோசாம்பி இப்பிரச்சனையில் இருந்து மீளவே உதவிக்காக சிங்காரவேலரை நாடுகிறார்.

சென்னையில் மிகவும் சிரமத்திற்கு இடையே சிங்காரவேலரின் வீட்டை அடைந்த வரை புன்முறுவலுடன் வரவேற்று விருந்தோம்பி யுள்ளார் சிங்காரவேலர். சிங்காரவேலருக்கு இந்தி தெரியாததாலும், கோசாம்பிக்கு ஆங்கிலம் பரிச்சியமில்லை என்பதாலும் செய்கை மொழி யிலேயே இருவரும் பேசிக் கொண்டனர். சிங்கார வேலரின் தம்பி இந்தி அறிந்தவர் என்பதால் அவர் மூலமாகத் தனது தேவையை கோசாம்பி வெளிபடுத்தியுள்ளார். தூத்துக்குடியில் மருத்துவ அதிகாரியாக இருந்த தன் நண்பருக்கு சிங்கார வேலர் கடிதம் கொடுத்து அனுப்பியதோடு, தேவை ஏற்பட்டால் பணம் அனுப்புவதாகவும் தெரிவித்து கோசாம்பியை வழி அனுப்பியுள் ளார். சி.எஸ்.சுப்பிரமணியம், நாகை முருகேசன் எழுதிய சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றில் அவர் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் புலமைக் கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இரண்டு ஆவணங்களின் கருத் தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சிங்கார வேலர் தன் ஐம்பது வயதிற்கு பிறகுதான் இந்தி மொழி கற்றிருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது.

பணி நிமித்தமாக இங்கிலாந்து சென்ற சிங்கார வேலர், இலங்கையில் வித்தோதயா ஆசிரமத் திற்குச் சென்றார். உதவி ஆசாரியர் தேவமித்ரா அவர்களைச் சிங்காரவேலர் சந்தித்துள்ளார்.

பிராமணர் எதிர்ப்பு நிலை
கொழும்பு வித்யோதயா ஆசிரமத்தில் ஆய்வு பணிகளை முழு ஒத்துழைப்புடன் செய்து வந்த கோசாம்பியை பற்றி ஆசாரியர் பெருமைப்பட பேசியதாகவும், அதற்குப் பதிலாக “இந்திய பார்ப் பனர்கள் தந்திரமானவர்கள், அவர்களை நம்பக் கூடாது. இவர் எளியவராகவும் அப்பாவியாக வும் தோன்றலாம். ஆனால் நம்பிவிடாதீர்கள். பார்ப்பனர் என்பதை மனதில் கொள்ளுங் கள்” என்று தேவமித்ரா அவர்களிடம் சிங்காரவேலர் கூறியுள்ளார். இதனை ஆசாரியார் கோசாம்பி யிடம் கூறியதாகவும், இதனால் சில அசௌ கரியங்களைச் சந்திக்க நேர்ந்ததாகவும், கோசாம்பி தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் “கற்றவராகிய சிங்காரவேலுவைப் போன்ற ஒருவரின் சுய அழிவுச் செயல்பாட்டை எண்ணி வருந்தியதாகவும். மரியாதையுடன் உணவளித் தும், தூத்துக்குடி மருத்துவருக்குக் கடிதம் வழங்கியும் எனக்கு உதவிய அதே மனிதர், இப் பொழுது சிங்கள மக்களிடையே நான் பிரா மணன் என்பதற்காக மட்டுமே என்னைப் பற்றிய பாதகமான முன்னெண்ணத்தை ஏற்படுத்தத் தயாராக இருந்தார்” என்று தன் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். இந்தச் சம்ப வத்திற்குப் பிறகு ஆசிரமத்தில் வழங்கப்பட்ட உணவை தவிர்த்து இரந்துண்ணும் சூழலுக்கு ஆளானதாகக் கோசாம்பி குறிப்பிட்டுள்ளார். இது பௌத்த துறவிகளின் கடமையாதலால் அதனை ஏற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்காரவேலர், கோசாம்பியுடனான தொடர் பில் இருந்த காலகட்டத்திற்குப்பிறகே காங்கிரஸ் இயக்கத்திலும், பொதுவுடைமை இயக்கத்திலும் பின் பெரியாரோடும் இணைந்து செயல்பட்டார். பிராமணர் எதிர்ப்பு என்பது முன்பாகவே சிங்காரவேலருக்கு இருந்துள்ளதை கோசாம்பி யின் சுயசரிதை வெளிப்படுத்துகிறது. பத்தொன்ப தாம் நூற்றாண்டில் பிரமணரல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை கட்சி துவக்கம், அதன் இயக்க செயல்பாடுகள் ஆகியவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க் கும் போது பிராமணருக்கு எதிரான மனநிலை பார்ப்பன ரல்லாதோர் மத்தியில் இயல்பாக இருந்துள்ளதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. மேலும் சிங்கார வேலர், பாரதியார், ஈ.எல்.அய்யர், கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்ற பார்ப்பன சமூகத்தவர்களுடன் இணைந்தும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிப்படும் முரண்கள்
ஒரு வருடகாலம் கழித்து மார்ச்-26, 1903ஆம் ஆண்டு மீண்டும் சென்னை திரும்பியவர் மீண் டும் சிங்காரவேலரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். கொழும்புவில் இருந்த காலத்தில் ஓரளவு ஆங்கிலம் பயின்றதால் சிங்காரவேலருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். சிங்காரவேலர் அவரை உணவளித்து உபசரித் தாலும் கல்கத்தா செல்ல பயணச்சீட்டு வாங்கித் தர மறுத்து விட்டதாகக் குறிப்பிடுகிறார். சிங்காரவேலர் நடத்திய பௌத்த சங்கம் பொருளாதார ரீதியாக வறியது என்பதால் உதவ முடியவில்லை என்று மறுத்துள்ளார். அதே வேளையில் இலங்கையில் இருந்து பணம் கிடைக்கும்வரை தங்கவைத்துப் பராமரித்துள்ளார். பிறகு பௌத்த சங்கம் ஒன்றை நிறுவி அதில் கோசாம்பி அவர்களை அமர்த்தவும் சிங்காரவேலர் திட்டமிட்டுள்ளார். இலங்கையில் இருந்து எவ்வித உதவியும் கிடைக் காததால் சிங்காரவேலரின் திட்டத்தை வேறு வழியின்றி ஏற்றுள்ளார் கோசாம்பி. இராயப் பேட்டையில் ஒரு சிறிய குடிசையில் “பௌத்த ஆசிரமம்” ஒன்றை புதிதாக நிறுவி ஒவ்வொரு ஞாயிறு மாலையும் பௌத்தம் பற்றிய உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. பாலி மொழியில் உள்ள வற்றைக் கோசாம்பி படித்து விளக்கிட, சிங்கார வேலர் அதனைத் தமிழில் விளக்கவுரையாற்றி யுள்ளார். பல்வேறு சமூக, மதப் பிரிவினரும் இந்த சொற்பொழிவினை கேட்க வந்துள்ளனர். இந்தச் சபையின் செயல்பாடுகள் எந்தவொரு பௌத்த பிரசாரகருக்கும் உவப்பளித்திருக்கும் என்கிறார் கோசாம்பி.

சிங்காரவேலர் செயலாளராகவும், லட்சுமிநரசு தலைவராகவும் இருந்த “சென்னை மகாபோதி சபை” மீதும் அதன் செயல்பாடுகள் மீதும் கோசாம்பி பெரிய அபிப்பிராயம் கொண்டிருக்க வில்லை என்பதையே அவரது வாழ்க்கை வரலாறு விளக்குகிறது. சிங்காரவேலரின் மகாபோதி சபைக் கும் அயோத்திதாசரின் பௌத்த சங்கத்திற்கும் முரண்பாடு இருந்ததாகவும், இவரது வருகைக் குப் பிறகே ஒற்றுமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட் டுள்ளார். ஆனால், சிங்காரவேலரும் அயோத்திதாசரும் பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையில்தான் இணைந்து செயல்பட்டுள்ளனர். சிங்காரவேலரின் பௌத்த சங்கத்தில் அயோத்திதாசர் பங்கேற்றதோடு, தனியாக பௌத்த சங்கத்தை நிறுவியும் நடத்தி யுள்ளார். அதில் பெரும்பாலும் தாழ்த்தப்பட் டோர் திரளாக பங்கேற்றுள்ளனர்.
சிங்காரவேலர், கோசாம்பி இடையேயான உறவு மிக முரண்பாடாக இருந்துள்ளது என்பதையே கோசாம்பியின் சுயசரிதை வெளிப்படுத்துகிறது. சிங்காரவேலர் பற்றிக் கோசாம்பி கூறும் செய்தி களும், அவர் தன்னை நடத்திய விதம் குறித்தும் குறிப்பிடும் செய்திகளே அவர்கள் இருவருக்கும் இருந்த உறவின் தன்மையை புரிந்து கொள் தவற்கான அடையாளம். “சிங்காரவேலு விந்தை யான மனிதர்” என்றும், “கோபத்தில் சில வேளைகளில் கடுமையாகப் பேசிவிடுவார்” என்றும் கோசாம்பி மதிப்பிட்டுள்ளார். “என்னைச் சிறைக் கைதி போல் வைத்திருந்தார்” என்று சிங்காரவேலரை காட்டமாக விமர்சித்துள்ளார். மறுபுறம் சிங்கார வேலரும் “துறவிகளெல்லாம் எகிப்திய சவங்களைப் போல் பயனற்றவர்கள்” என்று காட்டமான விமர் சனங்களை முன்வைத்துள்ளார். இப்படியான காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும் இருவருக்கும் இடையேயான நட்பு முறிந்துவிட வில்லை என்பதை கோசாம்பி சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

சிக்கன வாழ்க்கைமுறை
சிங்காரவேலர் செழிப்பான குடும்பம் பின்னணி யில் இருந்து வந்திருந்தாலும், மிகச் சிக்கனமான வராக இருந்துள்ளார். பொதுவான சங்க கணக்கு வழக்குகளைப் பராமரிப்பதிலும், செலவிடுவ திலும் கறாராக இருந்துள்ளார். அறிவுத் தேடலுக்கு எவ்வித சிக்கனமும் இல்லாமல் புதிய நூல்களை அயல் நாடுகளில் இருந்து வரவழைத்து படித்தவர் சிங்காரவேலர். அதே வேளையில் பொதுப் பணத்தை மிகப் பொறுப்போடு சிக்கனமாகக் கையாண்டுள்ளார். பௌத்த சங்க செயல்பாட்டி லும் சிக்கனமாக இருந்தார் என்பதை “தமிழன்” இதழில் வெளியான கடிதங்கள் வழியே அறிய முடிகிறது. பௌத்தராக உள்ள கோசாம்பி விருந் தினராக இருந்தாலும், உழைப்பில் ஈடுபட வேண்டும் என்பதில் சிங்காரவேலர் தெளிவாக இருந்துள்ளார். இதற்கு பௌத்த ஒழுக்க நெறி களும் காரணமாக இருந்துள்ளது. பௌத்த பிட்சுகள் எகிப்து மம்மிகளை போல் உள்ளனர் என்ற பார்வையை சிங்காரவேலர் கொண்டிருந் தாலும், கோசாம்பியோடு முரண்பட்ட உறவை கொண்டிருந்தாலும் அவரது பௌத்த அறிவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதி லும், அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் சிங்காரவேலர் தெளிவாக இருந்ததை அறியமுடிகிறது.

சென்னையில் தங்கியிருந்த நாட்களை வனவா சமாகவே கடத்தியுள்ளார் கோசாம்பி. சிங்கார வேலருடன் முரண்பாடு கொண்டிருந்தாலும், பேராசிரியர் லட்சமிநரசுவுடன் நல்ல நட்பும், அவர் தொடர்ப்பு குறித்து மிகவும் உயர்வாகப் பதிவுசெய்துள்ளார். லட்சுமிநரசு அவர்கள் ரிக்வேதம் உள்ளிட்ட நூல்களைத் தனது கல்லூரி நூலகத்தில் இருந்த எடுத்துவந்து கொடுத் துள்ளார். ஒப்பியல் ஆய்வை பற்றி அவரிடமே கற்றதாகவும், மேலும் அவரை ஒழுக்கசீலர், தீய பழக்கமும் இல்லாதவர், வெளிப்படையானவர், போலித்தனத்தை வெறுத்தவர் என்றும், சென்னை மாகாணத்தின் தலையாய சீர்திருத்தவாதியாக அவர் மதிக்கப்பட்டார் என்றும் லட்சுமி நரசு குறித்து பெருமைப்பட பதிவு செய்துள்ளார். சிங்காரவேலர், லட்சுமி நரசு இருவரையும் பற்றிய மதிப்பீடு கோசாம்பியின் சார்பு நிலையை வெளிபடுத்துகிறது.

1903 ஆம் ஆண்டு வரை சென்னையில் தங்கியிருந்த கோசாம்பி, பின் தனது பௌத்த ஆய்வை தொடர பர்மா சென்றுள்ளார். முன்பே குறிப்பிட்ட தைப் போல் சிங்கார வேலர் பௌத்தராக இருந்த காலகட்டம், அயோத்தி தாசருடனான முரண்பாடும், உடன் பாடும் ஓரளவு “தமிழன்” இதழ் வழியே கிடைத் துள்ளது.

கோசாம்பி சுயசரிதை, அவர் சென்னையில் தங்கியிருந்து காலக்கட்ட பதிவுகள் வழியே சிங்காரவேலரின் பௌத்தம் தொடர்புடைய வாழ்க்கையின் இன்னும் சில பக்கங்களை நமக்கு கிடைகிறது. கோசாம்பியின் சுயசரியதையில் குறிப்பிடப்படும் தகவலின் மூலம் அன்றைய காலக்கட்டத்தையும், சிங்காரவேலரின் ஆளுமை குறித்து அறியமுடிகிறது. இதுவே முழுமையானது இல்லை என்றாலும், கிடைத்துள்ள தரவுகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

கோசாம்பியின் சுயசரிதை வழியே அறியப் படும் சிங்காரவேலர், எதிர்மறையான அடை யாளத்தோடு வெளிப்படுகிறார். சிங்காரவேலர் குறித்து கோசாம்பியின் அனுபவங்கள் பெரும்ப லும் கசப்பான மனப்போக்குடனேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பதிவுகள் யாவும் கோசாம்பி யின் வாழ்க்கை சூழல், மனநிலை சார்ந்தது. தன் வாழ்நாளின் கடைசி தருணங்களில் எழுதப்பட்ட இந்த பதிவில் சிங்காரவேலரை எதிர்மறையாக பதிவு செய்துள்ள கோசாம்பி, தன் சென்னை வாழ்வின் பெரும் பகுதியை சிங்காரவேலரை நம்பியே கழித்துள்ளார். இலங்கையில் சிங்கார வேலரின் சில செயல்களினால் பாதிக்கப்பட்ட தாக தெரிவித்தாலும் மீண்டும் சென்னைக்கு அவரை நம்பியே அடைக்கலம் தேடி வந்துள்ளார் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோசாம்பி குறித்து சிங்காரவேலரின் பார்வையை அறியும் போது மட்டுமே, இவர்கள் இருவரையும் குறித்து முழு மதிப்பீட்டை காண முடியும். மேலும் இந்த வாழ்க்கை வரலாற்றின் வழியே பொதுப்படையாக யார் நல்லவர், கெட்டவர் என்ற விவாதம் இங்கு தேவையற்றது என்றே கருதுகிறேன். இரு ஆளுமைகளுமே தங்கள் துறை சார்ந்து, சித்தாந்தம் சார்ந்து சிறப்பாகவே பங்களிப்பு செலுத்தியுள்ளனர்.

பொதுவாக, சிங்காரவேலரை இடதுசாரிகள் மறந்துவிட்டார்கள், மறுத்துவிட்டார்கள் என்று தமிழ் ஆர்வலர்களும், திராவிட இயக்கத்தினரும் குற்றம்சாட்டுவார்கள். சிங்காரவேலரின் முக்கியத் துவம் அறிந்து அவரது பங்களிப்பை மீட்டவர்கள் பொதுவுடமைவாதிகளும், இடதுசாரி சிந்தனை யாளர்களும் மட்டுமே.

இடதுசாரிகளுக்கு மிக நெருக்கமான, கோசாம் பியின் சுயசரிதையின் மராத்தி மூலம் 1924ஆம் ஆண்டே வெளிவந்தது. அதன் ஆங்கில மொழியாக்கத்தின் உதவியோடே, நாம் தற்போது புதிய தகவல்களை அறிந்துகொண்டுள்ளோம்.



2 responses to “சிங்காரவேலர் வரலாற்றில் அறியாத சில பக்கங்கள் …”

  1. புதிய தகவல்களோடு அருமையான கட்டுரை….

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: