என்.குணசேகரன்
மனித சமூக வரலாற்றின் உயிர்நாடியான ஒரு உண்மையை கம்யூனிஸ்ட் அறிக்கை கொண்டுள்ளது.
“இது வரை இருந்து வரும் சமூகத்தின் வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” இந்த பொன்னான வரிகள் ஒரு புதிய வரலாற்றுப் பார்வையைக் கொண்டுள்ளது. முதலாவதாக, சமூகத்தை வர்க்கங்களின் தொகுதி என்று அணுகும் முறையை இது வழங்குகிறது. அடுத்து, வர்க்கங் களுக்கிடையே எழும் முரண்பாடுகளினால் நடக்கும் போராட்டங்கள்தான், வரலாற்றின் உந்து சக்தி என்ற புதிய வரலாற்று வெளிச்சத்தை நமக்கு வழங்குகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, மார்க்சியத்தின் மகத்து வமாகும். வர்க்கங்களிடையே நடக்கும் போராட்டம் உற்பத்தி மற்றும் பொருளியல் தளத்தில் மட்டும் நடப்பதல்ல. அரசியல், சட்டம், பண்பாடு என பல தளங்களில் நடைபெறுகிறது.அதில் முக்கியமான தளம் தத்துவம். பல சந்தர்ப்பங்களில் நேரடிக் காட்சியாக இது தெரிவதில்லை. ஆனால் சமூகத் தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் வலுவான தாக்கத்தை தத்துவத்தில் ஏற்படுத்துகின்றன.
தத்துவம் – அறிமுகம்
தத்துவச் சிந்தனை மிகவும் பழமையானது. பண்டைய கிரேக்கத்திலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தத்துவ விவாதங்கள் நடந்து வந்து உள்ளன. ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதற்கான தேடலை ஒருவர் மேற்கொண் டால், அவரை தத்துவவாதி என்று அழைப்ப துண்டு.
philosophy என்ற ஆங்கில சொல் இரண்டு கிரேக்க சொற்களைக் கொண்டது. philo என்பதற்கு நேசித்தல் என்றும் sophia என்பதற்கு அறிவு என்றும் பொருள்படும். அறிவை நேசித்தல் என்ற பொருள் கொண்டதாக தத்துவம் என்ற துறை புரிந்துகொள்ளப்பட்டது.
மனிதர்கள் பகுத்தறிவு கொண்ட ஒரு உயிரினம். பகுத்து அறியும் ஆற்றல் உள்ளதால், அவர்கள் எப்போதும் அறிவுத் தேடல் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். மனித இனத்தின் இந்த அறிவுத் தேடல் தேவையை நிறைவேற்றுவதற்கு தத்துவத் துறை பயன்பட்டு வந்துள்ளது.
தனது வாழ்க்கையையும் தனது இருப்பையும் பற்றி, அறிந்து கொள்ளவும், தான் வாழும் உலகமும் அதைச் சுற்றியுள்ள இயற்கையையும் பற்றி அறிந்து கொள்ளவும் மனிதர்கள் இடையறாது ஆர்வம் கொண்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் உருவாகும் அறிவே தத்துவம்.
இயற்கை, சமூகம், மனிதர்கள் என்ற பரிமாணங் களில் தத்துவ செயல்பாடு அமைந்துள்ளது. தத்துவா சிரியர்கள் இயற்கை, உலகம், பிரபஞ்சம் ஆகியவற்றின் இருப்பு பற்றியும் மனிதர்கள் உள்ளடங்கிய சமூகத்தின் இருப்பு பற்றியும் சிந்தித்து வந்துள்ளனர்.
மார்க்சியத்தின் வரையறை
தத்துவம் அனைத்து அறிவியல் துறைகளுக் கும் தாய் போன்று விளங்கியது. இயற்கை அறிவியல், பௌதிகம் போன்ற துறைகளில் புதிதாக சேர்ந்திடும் அறிவுப் பங்களிப்பு அனைத்தும் தத்துவமாகவே பார்க்கப்பட்டது. 1729-ம் ஆண்டில் நியூட்டன் எழுதிய நூலின் தலைப்பு,” இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கோட்பாடுகள்”. அன்று பௌதிகம், கணிதம், வானவி யல் போன்ற அனைத்தும் தத்துவ அறிவின் பிரிவு களாகவே கருதப்பட்டன.
தத்துவம் பற்றி பல பார்வைகளும், வரையறை களும் நிலவி வந்த சூழலில் மார்க்சியத்தின் வருகை ஒரு புதிய தடத்தினை உருவாக்கியது.
எங்கெல்ஸ் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை பற்றி எழுதுகிற போது குறிப்பிடுகிறார்.
“எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படைக் கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையே யான உறவு பற்றியதுதான்’’
அதாவது, புற உலகு சார்ந்த பொருட்களுக் கும், அதனையொட்டி எழுகிற மனித சிந்தனைக் கும் உள்ள உறவு குறித்து தத்துவங்களும் தத்து வவியலாளர்களும் தொடர்ந்து சிந்தித்து வந்துள்ளனர்.
இது எப்போது துவங்கியது? இதற்கும் எங்கெல்ஸ் ஒரு சுவாரசியமான விளக்கத்தை தருகிறார்:
“தங்களது உடல் அமைப்பு பற்றி, எந்த அறிவும் இல்லாத ஆதிகால மனிதர்கள், தாங்கள் கண்ட கனவுகளில் வந்த ஆவி கற்பனை உருவங்களின் தாக்கத்தால், தங்கள் எண்ணங்களும் உணர்வு களும் உடலின் செயல்பாடுகள் அல்ல; உடலில் இருக்கும் ஆன்மாதான் அவற்றுக்குக் காரணம்; அது மரணத்தின்போது, உடலை விட்டு வெளியேறி விடுகிறது என்று கருதினர். அன்றிலிருந்து மனிதர் கள் தங்கள் ஆன்மாவிற்கும் புற உலகத்திற்குமான உறவு பற்றி ஆராயத் துவங்கினர்.” இந்த அற்புத சித்தரிப்பு, தத்துவத் துறையின் துவக்கத்தை எளிமை யாக எடுத்துரைக்கிறது.
இந்தக் காலங்களுக்குப் பிறகுதான் தத்துவ சண்டைகள் துவங்கின. தத்துவக் களத்தில் போரிடும் இரு முகாம்களை எங்கெல்ஸ் விளக்குகிறார்.
ஆன்மா, புற உலகு உறவு பற்றி “…பதிலளித்த தத்துவவாதிகள் இருகூறாகப் பிரிந்தனர். ஆன் மாவை இயற்கைக்கு முதன்மையாக கருதியவர் கள் கருத்துமுதல்வாத முகாமாகப் பிரிந்தனர். இயற்கையை பிரதானமாக முதன்மைப்படுத்திய வர்கள் பொருள்முதல்வாத முகாமாக இயங்கினர்.”
மார்க்சியத்தின் இந்த வரையறை அடிப்படை யில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் பொருள் முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். இவ்வாறு, தத்துவத்தில் அதுவரை நீடித்து வந்த குழப்பங்களுக்கு எல்லாம் மார்க்சிய தத்துவம் தீர்வு கண்டது. இந்த புதிய பார்வை, தத்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
கருத்து முதல் வாதம்
பல்கலைக்கழக தத்துவப் பாடங்களில் கருத்து முதல்வாதம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப் படுவதில்லை. இந்த தத்துவ முறைக்கு பல சொற் கள் பயன்படுத்தப்படுகின்றன. மீமெய்யியல் (அநவயயீhலளiஉள) என்பது உள்ளிட்டு பலவாறு சொற் கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழில் அப்பாலைத் தத்துவம் என்ற சொற்றொடர் பயன்பட்டு வந்துள்ளது.
புலன்கள் உணரும் பொருட்களுக்கு அப்பால், புலன்களால் உணர முடியாதவற்றை விவாதிக் கும் தத்துவமுறை என்பதால் இது அப்பாலைத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு தூண் இருக்கிறது என்றால் சாதாரணமாக அது எந்த மூலப்பொருட் களால் ஆனது என்று விளக்கம் கூறலாம். ஆனால் அப்பாலைத் தத்துவம் அந்த தூணுக்குள் உள்ள ‘மறைபொருளைப்’ பற்றி பேசுகிறது. இறுதியாக, “தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்” என்று அது முடிவு கூறும். அதாவது கடவுள்தான் எல்லாம் என்று இறுதியாக வந்தடையும் தத்துவ முறை அது.
இந்த அப்பாலைத் தத்துவம் அரிஸ்டாட்டில் காலத்திலும், அதற்கு இணையாக அதே காலங் களில் இந்தியாவிலும் பெரும் செல்வாக்குடன் தத்துவத் துறையில் செயல்பட்டது.
மேற்கண்ட எடுத்துக்காட்டில், தூண் கட்டப் படுகிற மூலப்பொருட்களும், தூணின் வடிவமும் மாறலாம்; ஆனால், ’மறைபொருளாக’ உள்ள ஒன்று எப்போதும் மாறுதலுக்கு உள்ளாவதில்லை, அது நிரந்தரமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த அநவயயீhலளiஉள என்ற சொல்லுக்கு பிந்தைய காலங்களில் மாறாநிலை தத்துவம் என்று அழைக்கிற வழக்கம் ஏற்பட்டது.
சமூகத்தில் எடுத்துக்காட்டு கூற வேண்டுமானால், சாகாவரம் பெற்ற, மாறாத, மாற்ற முடியாத சமூகம் முதலாளித்துவ சமுகமே என்கிற பார்வையைக் குறிப்பிடலாம்.
பொருட்கள், சமூக நிகழ்வுகள் அனைத்தும் மாறாதவை என்ற பார்வை கொண்டது மாறா நிலைத் தத்துவமாகும். இதற்கு நேர் எதிரான தத்துவ முறை, இயக்கவியல் எனப்படும். மார்க் சிற்கு முந்தைய இயக்கவியலானது, கருத்து முதல்வாத குழப்பங்களுடன் இருந்தது. அதனைப் பொருள்முதல்வாதத்துடன் இணைத்து இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவ முறையினை மார்க்சும், எங்கெல்சும் படைத்தனர்.
கிழக்கு,மேற்கு தத்துவங்கள்
தத்துவங்களை மேற்கத்திய தத்துவம், கிழக்கு தத்துவம் என வகைப்படுத்தி பயில்கின்றனர். ஆனால் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னைகளில் பிர தேசம், நாடு வித்தியாசங்கள் இருப்பதில்லை. மனித சிந்தனைக்கும் இயற்கைக்குமான தொடர்பு குறித்து, எல்லாத் தத்துவங்களும் ஒரு நிலைபாடு எடுத்து விளக்குகின்றன. எங்கெல்ஸ் குறிப் பிட்டது போன்று இயற்கையா? சிந்தனையா? என்ற கேள்விக்கு விடை கண்டதில், எது மூல முதலானது என்பதனையொட்டி, இரு பிரிவு களாக கிழக்கு, மேற்கத்திய தத்துவங்களும் வகைப்படுத்தப்படுகின்றன.
தத்துவங்களின் கால வரிசையை ஆராய்கிற போது மனித நாகரிகங்களின் வளர்ச்சியோடு இணைந்ததாக தத்துவங்கள் தழைத்திருக்கின்றன. இது மேற்கு, கிழக்கு உள்ளிட்டு உலகத் தத்துவங் கள் அனைத்துக்கும் பொருந்தும். இந்திய தத்து வத்தில் வேதங்கள் தோன்றியதாக கணிக்கப்படும் காலத்திலிருந்தே பொருள் உருவாவது பொருளி லிருந்துதான் போன்ற துவக்க கால பொருள் முதல்வாத தத்துவக் கருத்துக்களும் தோன்ற ஆரம்பித்தன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற தத்துவ முறையாக சார்வாகம் அல்லது உலகாயதம் எனப்படும் இந்திய பொருள் முதல்வாத தத்துவம் வளர்ந்தது. இந்த உலகு, மனிதர்கள் எல்லாம் காற்று, நீர், நெருப்பு, மண், ஆகாயம் ஆகியவற்றிலிருந்து தோன்றியதாக இந்தியப் பொருள்முதல்வாதம் கருதியது.
இதே காலங்களில் கிரேக்கத்தில் தேல்ஸ் என்ற தத்துவவாதி வாழ்ந்திருக்கிறார். அவர் தண்ணீர் தான் மூலாதாரப் பொருள் என்றும் அதிலிருந்து, உலகமும், பிரபஞ்சத்தின் தோற்றமும் நேர்ந்ததாக பொருள்முதல்வாத நிலையினைக் கொண்ட தத்துவத்தை உருவாக்கியவர். அவருக்குப் பிறகு காற்றுதான் முதன்மையானது என்ற தத்துவ நிலைபாட்டைக் கொண்ட அநேக்சிமினஸ் வாழ்ந் திருக்கிறார். இவ்வாறு கிழக்கிலும், மேற்கிலும் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வளர்ந்து வந்துள்ளன.
இந்திய சமூகத்தில் நிலவுடைமை சமூகம் நிலைபெற்று, ஆளுகின்ற வர்க்கங்கள் நிலப் பிரபுத்துவ சக்திகளாக வலுப்பெற்ற நிலை, நால் வருண சாதிய அமைப்பு இறுக்கமாக வேரூன்றிய சூழல் ஆகியவற்றால், பொருள்முதல்வாதம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
மனித சமூக வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் ஆன்மீக தத்துவங்களும் கருத்துமுதல் வாத தத்துவங்களும் மேலாதிக்கம் செலுத்தத் துவங்கின. சமூகம் வர்க்கங்களாக பிரிந்து, தொடர்ந்து வந்த வர்க்கப் போராட்டத்தில் நிலவுடைமை சமூகம் பரிணமித் தது. இந்த சூழலில்தான் கருத்துமுதல்வாதம் ஆதிக்கம் செலுத்தியது.
ஆக, மேலாதிக்கம் செலுத்தும் சொத்துடைமை வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக் கும் நடைபெறும் வர்க்கப் போராட்டம் தத்துவத் துறையில் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள் முதல் வாதத்திற்குமான போராட்டமாக நடை பெற்று வந்துள்ளது. இதனை தத்துவ வரலாறு முழுவதும் காண முடியும்.
மதமும் தத்துவமும்
மதங்களின் தோற்றம், வளர்ச்சிக்கும் தத்துவ வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயற்கையின் இயக்கங்களின் மீது ஏற்பட்ட மனித உணர்வுகள், சிந்தனைகள், மத வழிபாட்டு முறைகளாகவும் தத்துவ விளக்கங்களாகவும் பரிணமித்து வந்துள்ளன. பல தத்துவங்களில் மத நம்பிக்கை எது, தத்துவக் கருத்து எது என்று பிரித்து தெரிந்துகொள்ள இயலாத அளவிற்கு இணைந்துள்ளன.
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மதத்தை யும் தத்துவத்தையும் பிரித்து பார்ப்பது மட்டு மல்லாது, மதம் உருவானதற்கான சமூகச் சூழல், பொருளாதாரக் காரணிகளை ஆராயவும் கற்றுக் கொடுக்கிறது.
இந்தியத் தத்துவம் மதம் சார்ந்தது என்றும் ஆன்மீகத் தன்மை கொண்டது என்றதுமான கருத்துக்கள் இன்றளவும் ஆழமாக வேரூன்றி வந்துள்ளன. இந்தியாவின் குடியரசுத் தலைவ ராக இருந்த தத்துவ ஆசிரியரான டாக்டர் ராதா கிருஷ்ணன் “இந்திய தத்துவம் என்பது சாரம் சத்தில் ஆன்மீக தத்துவம்” என்று எழுதியுள்ளார். அதாவது இந்திய தத்துவத்தில் கடவுள் மறுப்புக் கொள்கைகள் எதுவும் இல்லை என்று அடிப் படையற்ற கருத்து சொல்லப்பட்டு வந்துள்ளது. இதனை உடைத்தெறிந்த பெருமை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களையே சாரும். இந்தியத் தத்துவத்தில் தொன்மைக்காலமாக நிலைத்திருந்த நாத்திக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்து, இந்திய தத்துவம் ஆன்மீக தத்துவமே என்ற வாதத்தின் பொய்மையை தோலுரித்துக் காட்டினார் அவர்.
தத்துவ இயக்கத்தின் அடிப்படை
பல்வேறுபட்ட தத்துவ சிந்தனைகள் உருவா வதற்கு எது அடிப்படை? இந்தக் கேள்விக்கான விடையினை மார்க்சியத்தில்தான் பெற முடியும். குறிப்பிட்ட மக்கள் சமூகத்தில் நிலவும் சமூக உற்பத்தி நிலைமைகள்தான் குறிப்பிட்ட தத்துவப் போக்கு தோன்றிட அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக இந்தியாவில் பௌத்த தத்துவம் தோன்றிய வரலாற்றைக் குறிப்பிடலாம். மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதனை கீழ்கண்டவாறு விவரிகின்றார்:
“வட இந்தியாவில் பேரரசுகள் காலத்தில், வேள்விகளையும், வேதமுறைகளையும் எதிர்த்து, சமணமும், பௌத்தமும் இயக்கம் கண்டன. சாதி அடிப்படையிலான சனாதன அமைப்பு தொலை தூர வர்த்தக வளர்ச்சிக்கு தடையாக இருந்தன. தொலைதூர வர்த்தகம் வளர சமணப் பள்ளி களும் மடங்களும் பேருதவி புரிந்தன… பல்வேறு சமூகக் குழுக்களை ஏற்றுக் கொள்ளும் சமத்துவக் கொள்கை கொண்ட பௌத்தமும் சமணமும் இயல்பாகவே வர்த்தக வளர்ச்சிக்கு உதவின.”
சமூகத்தில் நிலவுடைமையோடு சேர்ந்து வணி கப் பொருளாதாரம் வளரத் துவங்கிய காலத்தில் பௌத்தம் வளரத் துவங்கியது. ஏற்கனவே வேளாண்மை உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட மக்கள் ஆன்மிக தத்துவப் பிரிவுகள் மற்றும் வேதங்களின் பெயரால் அடிமைகள் போன்று நடத்தப்பட்டு வந்தனர். அவ்வாறு வாழ்ந்த நிலையில் வணிக வளர்ச்சித் தேவைகளின் விளை வாக உருவான பௌத்தம் அடக்கப்பட்ட மக்க ளின் குரலாக உருவெடுத்தது.
மேலை நாடுகளிலும் இப்படிப்பட்ட தத்துவ வெளிப்பாடுகளை காணலாம். ஐரோப்பிய சமூ கத்தில் 15-ம் நூற்றாண்டுகளில் நகரங்களும் வணி கமும் தொழிற்சாலைகளும் வேகமாக வளரத் துவங்கின. நிலப்பிரபுத்துவ சமூக அமைப் பிலிருந்து முதலாளித்துவ சமுகமாக மாறும் கட்டமாக அது இருந்தது. அறிவியல் வளர்ச்சி யும் இந்த நிகழ்வுப்போக்கிற்கு உறுதுணையாக அமைந்தது.
இந்த சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு, புதிதாக ஆளும் வர்க்கமாக உருவெடுத்த முதலாளித்துவ வர்க்கங்களின் தேவைகளை பிரதிபலிப்பதாக அன்றைய தத்துவ வளர்ச்சி ஏற்பட்டது. திதராட் உள்ளிட்ட பிரெஞ்சு தத்துவவாதிகள், மார்க் சுக்கு முந்தைய காண்ட், ஹெகெல் போன்ற தத்துவவாதிகளை குறிப்பிடலாம். அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட சூழலில் இவர்களில் பலர் பொருள்முதல்வாதிகளாக இருந்தனர்.
எனவே தத்துவ வரலாறு படிப்பவர்கள் மார்க்சின் கீழ்க்கண்ட கூற்றினை ஆழமாக உணர வேண்டும்: “…பொருளாதார வாழ்க்கையின் உற்பத்திமுறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க் கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை. அவர் களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர் களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது… ”
சமூக வாழ்க்கை நிலையில் பொருளாதார உற்பத்தி முறை முக்கியமானது. அதுவே அறிவுலக வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸ் கூறுகிறபோது, தத்துவமும் அதில் அடக்கம். தத்துவமும் உற்பத்தி முறை இயக்கத்திற்கு ஏற்ற தாக இயங்குகிறது. உற்பத்தியில் கட்டுப்பாடு கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் தத்துவம் பயன்படுகிறது.
ஆனால் இதனை இயந்திரகதியில் பார்ப் பதை மார்க்சியம் ஏற்கவில்லை. தத்துவ நிலை பாடுகளை உன்னிப்பாக ஆராய வேண்டும் என்பதுடன் அதன் பின்னணியாக உள்ள உற்பத்தி முறை மற்றும் சமூக சூழலை கருத்தில் கொள்ள வேண்டுமென மார்க்சியம் வழிகாட்டுகிறது.
தத்துவத்தின் இலக்கு
பொருளியல் துறையில் நிகழும் மாற்றங்கள் – தத்துவத் துறை இயக்கம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தாக்கம் செலுத்துகின்றன என்பதனை மறந்திடக் கூடாது. பாட்டாளி வர்க் கத்திற்கு சுரண்டலிலிருந்து விடுதலை பெறும் போராட்டத்தினை ஊக்குவிக்கும் முக்கிய காரணி யாக முற்போக்கான தத்துவ வளர்ச்சி திகழ்கிறது.
சமூக உருவாக்கத்துடன் இணைத்து தத்துவ வரலாற்றை அறிதல் அவசியம். தொன்மைக் காலம் சமூக ஏற்றத் தாழ்வுகளின் துவக்க காலம். அதிலிருந்து தொடங்கி, இன்று வரை, உற்பத்தி உபரியைக் கையகப்படுத்தும் அதிகாரமும் வலிமையும் கொண்டோர் அறிவுத் தளத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். எனவே தத்துவமும் ஒடுக்குவோரின் குரல் ஒரு புறமும், ஒடுக்கப்பட் டோரின் குரல் மறுபுறமும் என இரு வகைப் போக்குகள் கொண்டதாக இருந்துள்ளது.
இந்நிலையில் தத்துவத்தின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
“தத்துவஞானிகள் உலகை பல்வேறு வகை களில் வெளிப்படுத்தி விளக்கியுள்ளனர்; ஆனால் மையமான பிரச்னை என்னவென்றால், உலகை மாற்றுவதுதான்.” என்பது கார்ல் மார்க்சின் கூற்று. மார்க்சிய தத்துவமான வரலாற்றியல், இயக்க வியல் பொருள்முதல்வாதம் இந்த நோக்கத் துடன் செயலாற்றுகிறது.
நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலகிய, அந்நியப்பட்ட ஒரு துறையாக இருந்த தத்துவத்தை நிஜ உலகில் மனிதர்கள் நடத்தும் போராட்டத்தோடு இணைத்தவர் காரல் மார்க்ஸ். மனிதம் மேம்படு வதற்கு தத்துவம் கருவியாக பயன்பட, வழி காட்டும் தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது. இதனால், மார்க்சியம் இதர தத்துவங்களிலிருந்து மேம்பட்டு நிற்கிறது.
சமகால சவால்கள்
சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத் தும் தேவையில் நின்று, கடந்த காலத் தத்துவங் களை கற்று உணர்ந்தால், எதிர்காலத் தத்துவப் புரிதல் புதிய திசையில் பயணிக்கும். சுரண்டப் படும் மக்களுக்கு உன்னத வாழ்வு மலர அது உதவிடும். மானுடத்தின் பல பிரச்னைகளை பல பரிமாணங்களில் கற்றிட தத்துவம் துணை நிற்கிறது. தெளிவாக அணுகிடவும், மோதிக் கொள்ளும் பல கருத்துக்களை ஆராய்வதற்கான வழிமுறைகளையும் அது நமக்கு கற்றுத் தருவதால் தத்துவம் பயில்வது அவசியமானது.
இந்தியாவில், இன்றைய நிலைமைகளை எதிர்கொள்ளவும், தத்துவம் தேவை. இன்று, முக்கியமான கேள்வி இது: இன்றைய ஆர்.எஸ். எஸ் சங்பரிவாரங்களின் இந்துத்துவத்தைதத்து வப் பார்வையில் எப்படி புரிந்து கொள்வது?
முதலாவதாக நம்பிக்கை என்பதனை இந்துத்துவம் முன்னிறுத்துகிறது. நம்பிக்கை என்று சொல்கிறபோது மனிதர்களுக்கு அப்பாற் பட்ட சக்தி என்ற பொருளில் பயன்படுத்தப்படு கிறது. மனிதர்களால் எதுவும் செய்ய இயலாது என்கிற உணர்வும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த சக்தி கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்றும் பகுத்தறிவிற்கு அதில் இடமில்லை; அறிவியலுக்கு முற்றாக இடமில்லை என்ற கூறுகளும் இந்த நம்பிக்கை பரிமாணத்தில் அடங்கியிருக்கிறது.
இரண்டாவதாக நம்பிக்கை என்பதில் இந்துத் துவம் இந்து மத நம்பிக்கையை முன்னிறுத்து கிறது. இந்து மத நம்பிக்கை என்றால் அனைத்து இந்து மதப் பிரிவுகளையும் இந்துத்துவம் பிரதி பலிக்கவில்லை. இந்து மதத்திலேயே மிகவும் பிற்போக்கான மதக்கூறுகளை அடையாளப் படுத்தி சுவீகரித்துக் கொண்டது இந்துத்துவம். ஆனால், தங்களது பார்வையே உண்மையான இந்து மதம் என சித்தரித்து சாதாரண மத நம்பிக்கையாளர்களை அவர்கள் திரட்டுகின்றனர். அந்த திரட்டலுக்கு இதர மதங்கள்? மீது வெறுப்பை வளர்ப்பது, அவர்களது முக்கிய தந்திரம். இது, அரசியல் அதிகாரத்திற்கான திரட்டல். இது, ஜனநாயக விரோதமானது.
இந்திய தத்துவத்தில் பரிணமித்த பல கருத்தாக் கங்களில் மறைக்கப்பட்ட பல கூறுகள் உண்டு. இதற்கு,தொடக்க கால சிந்தனைகளான உபநிட தங்களின் சில பிரிவுகளில்,உலகினை ஆராய பொருள்முதல்வாத சாயலில் பகுத்தறிவைப் பயன்படுத்திய விதம், பிந்தைய போக்குகளான துவைதம், வசிஷ்டாத்வைதம் போன்ற பல சிந்தனை களில் அடங்கியிருந்த மனிதநேயம், பன்முக சிந்தனை களை மதிக்கும் போக்கு, போன்றவைகளைக் குறிப்பிடலாம். ஆனால், இந்த கூறுகள் அனைத் தையும் நிராகரிக்கும் சித்தாந்தப் பார்வை கொண்டது இந்துத்துவம். ஆக, இந்திய தத்துவம், இந்து மத நம்பிக்கை ஆகிய இரண்டிலும் மிக பிற்போக்கான போக்கினையே இந்துத்துவம் கொண்டுள்ளது.
எனவே இந்துத்துவத்தை தத்துவ நோக்கில் ஆராய்ந்தால், அது பொருளின் இருப்பையே முற்றாக மறுக்கும் தன்மை கொண்டது என்பதை அறிய முடியும். இதனால், இந்துத்துவத்தை அகநிலை கருத்துமுதல்வாதம் எனும் பிரிவில் தான் சேர்க்க வேண்டும். அதாவது, பொருளை மறுத்து, பொருளாயத உலகு மாயையானது என்ற கருத்தை அது விதைக்கிறது. ஒரு சக்தி அல்லது கடவுள் என்ற பிம்பமே உண்மையானது என்ற நிலைபாட்டை அது கொண்டுள்ளது. உண்மையில் கடவுள் என்ற கருத்தாக்கத்தை அனைத்து சக்தியும் படைத்த தனிநபர் அல்லது தனிநபர் கூட்டமே மக்கள் மேலாண்மைக்கு உகந்தது என்ற உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனால் தான் நரேந்திர மோடியின் பிம்பம் சாதாரண மனிதர்களிலிருந்து மேம்பட்ட தெய் வீக சக்தி கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது.
எனவே தத்துவத் தளத்திலிருந்தும் இந்துத்து வாவை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை என்று அவர்கள் முன்னிறுத்துவதை பகுத்தறிவு, அறிவியல் சார்ந்த பொருள்முதல்வாத கருத்து களை கொண்டு கருத்துரீதியான தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய தத்துவத்தில் முற்போக்கு கூறுகளை உயர்த்திப் பிடிப்பது அவசியம். ஆனால் இந்திய தத்துவம் உருப்பெற்ற வரலாறு முழுவதும் வர்க்க சமுதாயம் வளர்ந்து வந்த வரலாற்றோடு இணைந்தது. இந்த நிலையில் உழைக்கும் வர்க்கங்களின் வர்க்கப் போராட்ட வீரியத்தின் விளைவாக எழுந்த சிந்தனை கீற்றுக்களாக அவற்றை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பழைமையை உயர்த்திப் பிடிப்பதில் எச்சரிக்கை தேவை. பல சந்தர்ப்பங்களில் இது இந்துத்துவத்திற்கு பயன் பட்டுவிடும் நிலை ஏற்படலாம். ஏனென்றால், பழைமையும், பிற்போக்குத்தனங்களும் இந்துத்து வாவின் செயல்பாட்டு தளங்களாக உள்ளது.
அறிவியலோடு தத்துவம்
உலக, பிரபஞ்ச இரகசியங்களை இறைக்கருத்தில் தேடும் போக்கு முடிவில்லாமல் தொடர்கிறது. இந்தியாவில் பொருளின் இருப்பையே மறுத்து, அனைத்தும் மாயை, பொருளே இல்லை அனைத் தும் பிரம்மம் என்று வாதிட்ட அத்வைதம் இன்றும் பல வடிவங்களில் நீடிக்கிறது.
இதற்கு காரணம்? முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தில் தொடர்ந்து வரும் வர்க்கப் போராட்டம் தான். சுரண்டல் முறைக்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு வழிதெரியாமல் பாட்டாளி வர்க்கம் உள்ள நிலையில், இறை கருத்தே மூல முதலானது என்ற தத்துவப் போக்கு தொடரும்.
பொருள்தான் முதலானது, பொருளின் பிரதிபலிப்பே சிந்தனை என்ற அடிப்படையி லிருந்து உலக, பிரபஞ்ச, இயற்கை இயக்கங்களை மார்க்சியம் விளக்குகிறது. அறிவியலோடு இணைந்த இந்த மார்க்சியம் சுரண்டல் முறையிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்ற உத்வேகத்தை அளிக்கிறது.
அறிவியலின் பல துறைகள் வளர்ச்சி பெற்ற நிலை யில் பிரபஞ்சத்தின் தோற்றம், உலகம், உயிர் தோற்றம் பற்றியெல்லாம் ஏராளமான பல கண்டு பிடிப்புக்கள் வெளிவந்த நிலையில் அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு தத்துவம் பயணிப்பது பயனற்றதாக அமைந்திடும். எனவே, அறிவியல் பார்வையுடன் இணைந்து தத்துவப் பிரச்னைகள் ஆராய்வது இன்றைய முக்கிய தேவை.
Leave a Reply