(இந்தக் கட்டுரை ஐன்ஸ்டினால் 1930இல் எழுதப்பட்டு நியூயார்க் டைம்ஸ் வார இதழில் வெளிவந்தது. 1954இல் ஐன்ஸ்டினின் கருத்துக்கள் என்ற நூலில் மீண்டும் வெளியிடப்பட்டது. 2008இல் சிறந்த விஞ்ஞானிகளின் சிறந்த எழுத்துக்கள் என்று ரிச்சர்டு ட்வாக்கின்ஸ் என்ற உயிரியல் விஞ்ஞானி தொகுத்த நூலில் இடம் பெற்றுள்ளது.)
ஆசிரியர் குறிப்பு:
மாற்றுக்கோணத்தில் மத உணர்வு மானுட மனத்தில் பிறக்க நேர்ந்ததை ஐன்ஸ்டின் இக் கட்டுரையில் அலசுகிறார்.
வரலாற்றிலே மதங்களின் தாக்கம் என்பது பலருக்கு மிகுந்த உடல் வேதனைகளையும் சிலருக்கு ஆன்ம சுகத்தையும் தந்த கலவை என்பதை மறுக்க முடியாது. சுரண்டும் வர்க்கத்தின், தத்துவ ஆயுதமாக அது இருந்தது இன்றும் இருக்கிறது. அடையாள அரசியலின் கருப்பொருளாகவும் அதே நேரம், கோடானு கோடி மானுடர்களுக்கு ஆன்ம சுகம் தரும், மனச்சாட்சியாகவும் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை கொண்ட விஞ்ஞானிகளும் உண்டு, பகுத்தறிவாளர்களும் உண்டு, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கற்பிதத்தை ஏற்கவேண்டும் என்று தமிழ்நாட்டு பகுத்தறிவுவாதிகளில் ஒரு சாரார் கூறிவருதை அறிவோம். இது புதிதல்ல, 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் நாட்டு தத்துவ ஞானி இமானுவேல் கான்ட் கடவுள் இல்லை என்றாலும், நடைமுறையில் கடவுள் என்ற கற்பிதம் தேவைப்படுவதால் கடவுள் உண்டு என வாதிட்டவர். ஐன்ஸ்டின் இயற்கைக்கு அப்பால் கடவுள் இருப்பதாக நம்புகிறவர் அல்ல, அந்த வகையில் அவர் ஒரு நாத்திகர், ஆனால் இயற்கையையே கடவுளாகக் கருதுபவர். அந்த வகையில் அவர் ஒரு ஆத்தீகர். அவர் விஞ்ஞான ஆய்வில் ஈடுபடுபவர்கள் மட்டுமே உண்மையான சமய உணர்வுள்ளவர்கள் என்ற முடிவிற்கு நம்மை இழுக்க முன்வைக்கும் வாதங்கள் மிகவும் சுவாரஸ்யமானது. காஸ்மிக் ரீலிஜியஸ் பீலிங் என்று ஒரு உணர்வு இருப்பதாக வாதிடுகிறார்.
கடவுள் உண்டா? இல்லையா? என்ற சர்ச்சை நெடுங்காலமாக அறிவுலகத்தை கலக்கி வருவதை நாம் அறிவோம். இன்று அரசியலில் மதவாதிகள் கை ஓங்கவே, இன்னொரு மட்டத்தில் கடவுள் வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையாக அறிவுலகத்தை கலக்குகிறது. மதம் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானி களையும் வேட்டையாடியதை மறுக்க, வரலாறுகளை திருத்தி எழுதும் முயற்சிகள் இன்று மலிந்து விட்டது. ஆதிகால தத்துவ சர்ச்சைகளுக்கு மத சாயம் பூசவும், எல்லாம் வல்லவன் உண்டு என்று நீரூபிக்க பயன்படுத்துவதும் அதிகமாகி வருகிறது. சுரண்டும் வர்க்க சார்புள்ள தத்துவ மேதைகள் மதமில்லையேல் மானுடம் இல்லை என்று நீரூபிக்க படாதபாடு படுவதையும் காண்கிறோம். இந்நிலையில் இந்தக் கட்டுரை வாசகர்களின் சிந்தனையை கிளறி, தேடும் உணர்வைத் தூண்டும் என்பதால் வெளியிடுகிறோம்.)
– ஆசிரியர் –
ஆன்மீக இயக்கத்தையும் அதன் வளர்ச்சியையும் ஒருவர் புரிந்து கொள்ள விரும்பினால், மனித குலம் எதனைச் செய்தாலும், எதனைச் சிந்தித்தாலும் அவைகள் அனைத்தும் ஆழமாக உணர்கிறத் தேவைகளை நிறைவேற்றி திருப்தியை பெறவும், வலியைப் போக்கி சுகத்தைப் பெறவும் தான் என்பதனை நிரந்தரமாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். மானுட படைப்புக்களும், முயற்சிகளும் மனதை கிளர்ச்சியுறச் செய்தாலும், உணர்வுகள், ஆதங்கங்கள் (குநநடiபே யனே டுடிபேiபே) என்ற இரண்டுமே அந்த மானுட முயற்சிகளையும், படைப்புக்களையும் உருவாக்குகிற உந்து சக்தியாகும். இப்பொழுது கேள்வி என்ன வெனில் மதச் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அதனுடைய பரந்த பொருளில் எந்த ஆதங்கத்தினால் (நுஅடிவiடிn) அல்லது தேவையினால் மானுடம் கண்டது? சற்று யோசித்தாலே, மத சிந்தனைகளும், அனுபவங்களும் பிறக்க பலவிதமான மன உணர்வுகளே காரணம் என்பது தெரியும்.
ஆதிகால மனிதனிடம் எல்லாவற்றிற்கும் மேலாக பயமே மத உணர்வுகளைத் தூண்டியது, பசி, காட்டுமிருகங்கள், நோய், மரணம் இவைகளினால் ஏற்படும் பயம்; இதற்கு காரணம், அன்றைய கட்டத்தில் மானுட சமூகத்திற்கு காரண காரியங்கள் பற்றிய ஞானம் சரிவர வளராமை ஆகும்.
ஆதிகால மானுடன் துவக்கத்தில் உயிருடன் இருப்பதற்கான காரணத் தொடர்புகளை புரிகிற அளவிற்கு மன வளர்ச்சி பெறாத நிலையில் பசி, பயங்கர மிருகங்கள், மரணம் இவைகள் பற்றிய பயமே எல்லாவற்றிற்கும் மேலாக மத எண்ணங்களை தூண்டியிருந்திருக்கிறது. அந்தக் கட்டத்தில் மானுட மனம் சற்றேறக்குறைய தன்னைப் போன்ற ஒன்றை கற்பிதம் செய்திருக்கிறது. அதனுடைய விருப்பத்தினாலும், ஆற்றலாலும் இந்த பயங்கர நிகழ்வுகள் நடப்பதாக கருதியிருக்கிறது, நடவடிக்கைகள், பலிகள் இவைகளை செய்து அவைகளிட மிருந்து சலுகைகள் பெற முயற்சித்திருக்கின்றனர்.
அழிவுறாத அந்த சக்தியை திருப்திப்படுத்தவும், சலுகைகள் பெறவும் எடுக்கும் இந்த முயற்சிகள் பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கேற்ப இருந்திருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது பயத்தால் உருவாகும் மதத்தை பற்றியே.
இந்த மதம் உருவாகவில்லை என்றாலும், பூசாரி சாதி உருவாகி நிலைக்க முதல் படியாக இது இருந்திருக்கிறது.எதைக் கண்டு பயந்தனரோ அதற்கும் இவர்களுக்குமிடையே சமரசம் செய்பவர்களாகி, வழி நடத்தும் நிலையை அந்த பூசாரி சாதி உருவாக்கிக் கொண்டது. பல சமூகங்களில் வேறு காரணிகளால் தலைவராகவோ, ஆளுபவராகவோ அல்லது சலுகைகளை அனுபவிக்கும் வர்க்கமாக ஆனவர்கள் இகலோக நடவடிக்கை களோடு, இந்த பூசாரி கடமையையும் இணைத்து தங்களது பதவியை உறுதிப்படுத்த வைத்திருப்பதை காணமுடியும். அந்தவகையில் ஆட்சியாளர்களும், பூசாரி சாதியும் தங்கள் நலன்களை காக்க இணைந்திருப்பதையும் காண முடியும்.
மதம் திரள இன்னொரு முகாந்திரம் சமூக நிர்ப்பந்தமாகும். தாய், தந்தையர்கள், பெரிய சமூகத் தலைவர்கள் எல்லோருமே தடுமாறுபவர்கள், மரணம் அடைபவர்களே. வழிகாட்டவும், அன்பு செலுத்தவும், ஆதரவு நல்கவும் ஒருவர் தேவை என்ற ஆதங்கம் சமூக அல்லது தார்மீக அடிப்படையில் கடவுள் பற்றிய கருத்துருவாக்கத்திற்கு மற்றொரு காரணியாகிறது. இந்தக் கடவுள் பரிவுகாட்டுபவர், தகுதிக்கேற்ப தண்டிக்கவும், பரிசு வழங்கவும் செய்பவர். நம்புகிறவர்களின் கண்ணோட்டத்திற் கேற்ப ஆற்றலுள்ள இந்தக் கடவுள் அவர்களது குலத்தை அல்லது மனிதராசியை நேசிப்பவராகவும், பாதுகாப்பவராகவும் இருக்கிறார்; உயிரையும் கூட காப்பவராக இருக்கிறார்; துக்கம் ஏற்படுகிறபொழுது ஆறுதல் கூறுபவராக; நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுபவராக; இறந்தவர்களின் ஆன்மாவை போஷிப்பவராக இருக்கிறார். இது சமூக அல்லது தார்மீக அடிப்படையில் உருவாகும் கடவுள் பற்றிய கருத்தாகும். யூத வேதம் பய அடிப்படையிலிருந்து, தார்மீக அடிப்படைக்கு கடவுள் பற்றிய கோட்பாட்டிற்கு வளர்ந்ததை வியக்கத்தக்க முறையில் விளக்குபவையாக இருக்கிறது. இந்த மாற்றம் புதிய ஏற்பாடெனும் வேதத்திலும் தொடர்வதையும் காணமுடியும். நாகரிகமடைந்த எல்லா மக்களின், குறிப்பாக கீழ் திசைமக்களின் மதங்கள் தார்மீக அடிப்படை கொண்டவைகளே. மதங்கள் பய அடிப்படையிலிருந்து மாறி தார்மீக அடிப்படைக்கு வந்தது என்பது மக்களின் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றமாகும். இருந்தாலும் ஆதிகால மதங்கள் முழுவதும் பய அடிப்படை யிலும், நாகரிகமடைந்த மக்களின் மதங்கள் சுத்தமான தார்மீக அடிப்படையிலும் இருப்பதாக ஒருதலைப்பட்சமான முடிவிற்கு வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உண்மையில் எல்லா மதங்களும் இவ்விரண்டின் கலவையாக இருக்கின்றன. இந்த வேறுபாட்டுடன் சமூக வாழ்வின் உயர் மட்டங்களில் தார்மீக அடிப்படை கொண்ட மதமே மேலாதிக்கத்தில் உள்ளது. எல்லா வகையான மதங்களிலும் கடவுளின் அம்சங்கள் என்பது மானுட சாயலுடன் இருப்பது என்பது பொது அம்சமாகும். பொதுவாக சிறப்பாக உயர்ந்த மனப்பக்குவம் கொண்ட சமூகப் பிரிவில் உள்ள தனி நபர்களே இந்த உணர்வை தாண்டி உயர முடியும். ஆனால் மத உணர்வில் மூன்றாவது கட்டமாக ஒன்றை நான் கருதுவது உண்டு, அது அபூர்வமாக சுத்தமான வடிவில் சிலரிடம் இருக்கும், அதனை நான் பரந்த சமய உணருதல் (காஸ்மிக் ரீலிஜியஸ் பீலிங்) என்று அழைக்கிறேன். இது கடவுள் பற்றிய மானுட சாயல் இல்லாத உணர்வாக இருப்பதால் முழுமையாக இந்த உணர்வில்லாத வர்களிடம் அதனை உணர்த்துவது மிகவும் கடினம். சிந்தனை உலகிலும், இயற்கையிலும், வெளிப்படுகிற விந்தைகளையும் உணர ஒருவனது ஆசைகளும், நோக்கங்களும் இயலாது போவதை அவன் உணருகிறான். தனது வாழ்வு சிறைபடுத்தப் பட்டிருப்பதாக கருதுகிறான். அண்ட சராசரங்களனைத்தையும் முழுமையாகக் கண்டு அனுபவிக்க விரும்புகிறான். இந்த பரந்த மத உணருதல் மதங்கள் தோன்றியபொழுதே தோன்றிவிட்டன. இதற்கு டேவிடின் கூற்றுகள், இன்னும் சில ஞானிகளின் கருத்துக்கள் இவைகளை உதாரணமாகக் கூறலாம். சிறப்பாக ஷோபன்ஹுயர் மூலம் அறிந்த புத்தரின் போதனை களில் இந்த உணர்வுகள் பலமாக இருப்பதை அறிகிறோம்.
எல்லா கால கட்டத்திலும் மதத்தின் தன்மைகளில் இந்த வகையான சமய உணர்வுகள் தெளிவாக இருந்திருக்கிறது. இந்த உணர்வுகள் மானுடத் தோற்றத்தில் கடவுள் என்றோ வேதங்கள் என்றோஅறியவில்லை, அதனால் தேவாலயங்கள் அமைத்து, அதன் மூலம் மையப்படுத்தப்பட்ட போதனைகள் என்று எதுவும் இருக்கவில்லை. எனவே ஒவ்வொரு காலகட்டத்திலும் மத எதிர்ப்பாளர்களே இத்தகைய மேன்மையான சமய உணர்வுடன் இருந்தனர். அவர்கள் காலத்தில் அவர்களை நாத்திகர்கள் என்றே கருதப்பட்டனர். சில சமயங்களில் ஞானிகளாகவும் கருதப்பட்டனர். இந்த வெளிச்சத்தில் டெமாகிரிட்டஸ், அசிசியின் பிரான்சிஸ், ஸ்பினோசா ஆகியவர்களை பார்த்தால் ஒருவரைப் போல் ஒருவர் உணர்ந்தவர்கள் எனலாம். கடவுளைப் பற்றிய கருத்தும் இல்லாமல் வேதங்களும் இல்லாமல் பரந்த சமய உணர்வை எப்படி பிறரோடு பகிரமுடியும்?
எனது கருத்து என்னவென்றால் கலை, விஞ்ஞானம் ஆகிய இரண்டும் யார் செவி மடுக்கிறார்களோ அவர்களிடம் இந்த உணர்வை எழுப்புவதையும் உயிரோட்டமுள்ளதாக வைப்பதை யும் முக்கிய கடமையாகக் கொள்ளவேண்டும். இந்த வகையில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் வழக்கத்திற்கு மாறான ஒரு உறவைப்பற்றிய கோட்பாட்டிற்கு வருகிறோம். வரலாற்று ரீதியாக பார்க்கிறபொழுது விஞ்ஞானமும், மதமும் தீர்க்க முடியாத பகைமை முரண்பாட்டில் இருப்பதை ஒருவர் காண்பார். காரணகாரிய நியதிகளை சந்தேகத்திற்கிடமில்லாமல் ஏற்கும் ஒருவருக்கு யாரோ தலையிட்டுத்தான் இது நடக்கிறது என்ற கருத்தை ஒரு நிமிடம் கூட ஏற்க மாட்டார். அவருக்கு பய அடிப்படையிலான மதமோ, தார்மீக அடிப்படையிலான மதமோ இவைகளால் எந்தவிதப் பயனுமில்லை. நல்லதற்கு வரமும், கெட்டதற்கு தண்டனையும் வழங்கும் ஒரு கடவுளை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது. ஏனெனில் ஒரு மனிதனது செயலை தீர்மானிப்பது உள்ளார்ந்தோ அல்லது புறக் காரணங்களாலோ ஏற்படும் கட்டாயத் தேவைகளே. கடவுளின் பார்வையில் ஜடப்பொருட்களின் இயக்கத்திற்கு எவ்வாறு அவைகள் பொறுப்பாக முடியாதோ அது போலத்தான் மானுடர்களின் செயலுக்கு அவர்களைப் பொறுப்பாக்க முடியாது. எனவே தண்டனையோ, பரிசோ வழங்கும் கடவுளை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது.
ஆகையினால் விஞ்ஞானம் நெறி உணர்வை மழுங்கடிக்கிறது என்ற குற்றசாட்டு சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு அநீதியானதாகும். ஒரு மனிதனது அற நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டுமானால் பரிவு, கல்வி, சமூக பந்தம் ஆகியவைகளை அடிப்படைகளாகக் கொண்டிருக்க வேண்டும். மத அடிப்படை இவற்றிற்கு தேவையில்லை. செத்தபிறகு கிடைக்கும் தண்டனை பயமோ அல்லது பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையோ ஒருவனை நெறிப்படுத்த அவசியமென்பது உண்மையில் மானுடத்தை கேவலப்படுத்துவதாகும். எனவே ஏன் மடாலயங்கள் விஞ்ஞானத்தை எதிர்த்து சண்டையிட்டன, விஞ்ஞானிகளை வேட்டையாடின என்பதைக் காண முடிகிறது. மறுபக்கம் பரந்த சமய உணர்வே விஞ்ஞானத் தேடலுக்கு உன்னதமானதும் வலுவானதுமான உந்து சக்தியாக இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மிகுந்த முயற்சியும், ஈடுபாடுமில்லாமல் துவக்க கால விஞ்ஞானத்தை அடைந்திருக்க முடியாது என்பதை யார் உணர்கிறார்களோ அவர்கள் மட்டுமே உடனடி வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் எதார்த்தத்தைக் கண்ட ஆதங்கத்தின் வலுவைப் புரியமுடியும். அண்டசரா சரங்களைப் பற்றிய என்னே அறிவுப்பூர்வமான நம்பிக்கை! எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும் என்னே அதைப் புரியவேண்டும் என்ற ஆதங்கம்!
வானத்தில் உலாவும் ஜடப்பொருட்களின் இயக்க இயல் நியதிகளை விண்டுரைக்க நியூட்டனும், கெப்லரும் தனிமையில் உழைப்பை வருடக்கணக்கில் செலவழித்திருக்க வேண்டு மென்பதை யோசித்துப் பார்த்தால் புரியும். நடைமுறையில் பெறும் முடிவுகளை வைத்தே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அறிமுகம் பெறுபவர்கள் எளிதில் தவறான கருத்துக்களுக்கு ஆட்படும் நிலைமை உள்ளது. அதிலும் அவர்களைச் சுற்றி விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கையற்ற உலகமிருக்கிறது. அதிலும் இத்தகைய மனப்பாங்கு கொண்டோர்களோ பரந்த உலகில் எங்கெங்கோ நூற்றாண்டுக் கால இடைவெளியில் சிதறிக்கிடக் கிறார்கள். இது போன்ற நோக்கங்களுக்கு தன்னை அர்ப்பணித் தவர்களே எண்ணற்ற தோல்விகளைச் சந்தித்த பிறகும் உறுதியுடன் தனது நோக்கங்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கு ஆதர்சமாக இருப்பது எது என்பதை உணர முடியும். அந்தப் பரந்த சமய உணர்வே (ஊடிளஅiஉ சநடபைiடிரள குநநடiபே) ஒருவனுக்கு இந்த பலத்தைத் தருகிறது. இன்றையப் பொருளியல் காலத்தில் ஒரு விஞ்ஞான ஆய்வாளனே உண்மையான, முழுமையான சமயம் தழுவுபவனாக இருக்கிறான் என்று இன்று வாழ்கின்ற ஒருவர் கூறியது அநியாயமல்ல.
தமிழில்: வே. மீனாட்சிசுந்தரம்
Leave a Reply