மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்?


மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எந்த அடிப்படையில் அமைய வேண்டும்?

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களுடன் உயிரோட்டமான தொடர்போடு இயங்குவது மிக மிக அத்தியாவிசயமான ஒன்றாகும். அதன் அவசியத்தை மார்க்சிய முன்னோடிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். மக்களோடு இருப்பதன் பொருள், பொது நீரோட்டத்தில் கரைந்து போவது அல்ல.திட்டவட்டமான சூழல்களுக்கு ஏற்ப மார்க்சியத் தீர்வுகளுக்கு வந்தடைவது முக்கியம். ஆனால்,  தர்க்க அடிப்படையில் வந்தடையும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தி அதன் அனுபவத்தில் கற்க வேண்டும். அனுபவத்தில் கிடைத்த பாடத்தை வைத்து மீண்டும் நம் தத்துவப் புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தான் ‘உயிரோட்டமான’ தொடர்பு என்கிறோம். இது இதயத்திற்கும் இரத்த நாளங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பைப் போன்றது. இது மூளைக்கும், மெல்லிய நரம்புத்தொடருக்கும் இடையிலான தொடர்பைப் போன்றது. கட்சியின் அனைத்து மட்டத்திற்கும் மேற்சொன்ன புரிதல் மிக அவசியம்.

உள்ளூர் அளவிலான கிளைகளுக்கு பகுதிக் குழுயே வழிகாட்டுகிறது. குழுகளின் செயல்பாடுகளைக் குறித்து பேசும்போது தோழர் மாவோ, ‘படைப் பிரிவு’ என்று குறிப்பிடுகிறார். அதன் தலைவரும் உறுப்பினர்களும் எத்தகைய உறுதியோடும், திறனோடும் செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடும் அவர், குழு முடிவுகள் எடுக்கும்போது ஜனநாயகமும், செயல்படும்போது  பெரும்பான்மை முடிவுக்கு சிறுபான்மை கட்டுப்படும் ஒழுங்கும் மிக முக்கியம் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.

தமிழ்நாட்டில் 480 இடைக்குழுக்களில் 4738 குழு உறுப்பினர்கள் உள்ளனர். இடைக்குழு செயல்பாடுகளை, திருநெல்வேலி ப்ளீனம் ஆய்வு செய்தது. கட்சி இடைக்குழு உறுப்பினர்களுக்கு கட்சித் திட்டம் மற்றும் அமைப்புச் சட்டத்தைக் குறித்து கற்றுக்கொடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. குழு செயலாளர்களும், முழு நேர ஊழியர்களும் புதிய சிந்தனைகளுடன், பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி இடைக்குழு செயல்பாடுகளை முன்னேற்ற வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியது. தமிழகத்தில்  உயிரோட்டமான கட்சியை வளர்த்தெடுக்க இவை மிக அவசியமான கடமைகள்.

நவ தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்து அமலாக்கப்பட்டுவருவதன் விளைவாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருகின்றன. கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ – பணக்கார வர்க்கங்களின் கூட்டு உருவாகியுள்ளது. அவர்களால் சிறு குறு விவசாயிகளும், கிராமப்புற தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் சுரண்டப்படுகின்றனர். உள்ளூர் அளவில் இந்த மாற்றங்களை உணர்வதற்கான முயற்சிகளை நாம் செய்திருக்கிறோமா? உள்ளூரில் இந்த முரண்பாடுகள் எப்படி வெளிப்படுகின்றன என்ற விவாதங்கள் குழு அளவில் நடத்தப்பட்டுள்ளனவா?

முரண்பாடுகள் பல வடிவங்களில் வெளிப்படலாம். கந்துவட்டிச் சுரண்டலாக இருக்கலாம், கூட்டுறவு அமைப்புகளில் அதிகாரத்தைக் கைப்பற்றி மேற்கொள்ளும் முறைகேடுகளாக இருக்கலாம், சிறு குறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக இருக்கலாம். இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி போராடுவது மட்டுமல்ல. நாம் அவற்றின் பின் உள்ள வர்க்க – சமூக அரசியலை விவாதித்தோமா? போராட்ட முழக்கங்கள் நாம் திரட்டும் மக்களிடையே வர்க்க – சமூக (சாதி, பாலினம்) ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்தனவா? நம் அரசியலை நோக்கி மக்களை ஈர்க்க அது பயன்பட்டதா? என்ற கேள்விகளையும் ஒரு உள்ளூர் குழுயே கூடுதலாக விவாதிக்க வேண்டும். சரியான புரிதல் கிளைகளுக்கு ஏற்படுத்தும் வகையில் வழிகாட்ட வேண்டும்.

மேல் குழு முடிவுகளையும் ‘அறிக்கைகளையும்’ மக்கள் மொழியில், மக்களின் அன்றாட சிக்கல்களோடு இணைத்து முன்னெடுத்துச் செல்லவேண்டியது இடைக்குழுக்களின் அதிமுக்கியப் பணியாகும்.

நமது பிரச்சாரத்தை நோக்கி ஈர்க்கப்ப்படும் மக்களை பொருத்தமான வெகுஜன அமைப்புகளில் திரட்டுவது, நிதியாதாரத்தை திட்டமிட்டு பலப்படுத்துவதும் குழுகளின் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளாகும். குழுகளின் விவாதங்கள், செயலுக்கான உந்துதலைக் கொடுப்பதாக அமையவேண்டும்.

கல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபன ப்ளீனம், “கூட்டு செயல்பாடு, தனி நபர் பொறுப்பு, முறையான கண்காணிப்பு என்ற ஸ்தாபன கோட்பாட்டை, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உறுதியாக அமல்படுத்துவது; தனி நபர் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்ட விதம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்வது” என்ற கடமையை வகுத்துள்ளது. இவ்வகையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை குழுக் கூட்டத்திற்கு அழைக்கும்போதும், பங்கேற்கும்போதும் பணிகளைக் குறித்த பரிசீலனை மனதில் ஓடுகிறதா? அடுத்து என்ன, விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலில் புதிதாக என்ன சேர்க்க வேண்டும்? புதிதாக எழுந்திருக்கும் வாய்ப்புகள் என்ன? நாம் செயல்படும் பகுதியில் உழைக்கும் வர்க்கத்தைத் திரட்ட பரிசீலிக்க வேண்டிய புதிய சிக்கல்கள் என்ன? இந்தக் கேள்விகளெல்லாம் மனதில் ஓடுகிறதா? எனப் பார்க்க வேண்டும்.

ஒரு குழு உறுப்பினர் கட்சி திட்டத்தை முறையாக உள்வாங்கிக் கொள்வதுடன், அமைப்புச் சட்ட விதிகள், கம்யூனிஸ்ட் நெறிமுறைகளில் உறுதியோடு நின்றுகொண்டு செயலாற்ற வேண்டும்  – மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும். தத்துவ விவாதங்களையும், அரசியல் விவாதங்களையும் குழுகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். மார்க்சிய வாசகர் வட்டங்களைப் போன்ற ஏற்பாடுகளில் பங்கேற்க வேண்டும். செயல்பாடுகளுடன் இணைத்து தத்துவச் சர்ச்சைகளுக்கு பதில் தேட வேண்டும். கற்கவும், கற்பிக்கவும் வேண்டும்.

பெண்களையும், இளைஞர்களையும் கூடுதலாக இணைக்க வேண்டும் என ப்ளீனம் வழிகாட்டியிருக்கிறது. திட்டமிட்டு பயிற்றுவித்து இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எனவே நாம் மேற்சொன்ன வகையில் குழு செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது மிக மிக அத்தியாவிசயமான ஒன்றாகும்.

 



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: