மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இடது மாற்றும் !


  • சுபாஷிணி அலி

தமிழில் : குணவதி

25 ஆண்டுகால நவதாராளமயத்தின் விளைவாக சொத்துக்கள் ஒரு பக்கம்  பெருமளவில் குவிகின்றன , பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. வேலையின்மை பெருகியது மட்டுமல்லாமல் நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்கத்தாரின் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்தும் வருகிறது. பணிப்பலன்கள் உறுதி செய்யப்பட்ட வேலைகளின் இழப்பு மற்றும் ஊதியக்  குறைப்பின் இயற்கையான விளைவுகள் அவை. சந்தை கருணையுடையதல்ல என அடிக்கடி சொல்லப்பட்டுள்ளது, அது சுரண்டப்படுபவரிடமும், வறியவரிடமுமே அதிக கருணையற்று நடந்துகொள்கிறது. இப்படிச் சொல்வதன் பொருள் , உழைக்கும் மக்கள், விவசாயிகளிலும் கூட சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களே அதிக துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பதாகும். கடந்த இருபத்தைந்து வருடங்களில் வகுக்கப்பட்டிருக்கும் கடுமையான சந்தை சார்ந்த கொள்கைகள், பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள், தலித்துகள், ஆதிவாசிகள் ஆகியோரின் முதுகில் மென்மேலும் சுமையை ஏற்றியுள்ளன.

சுரண்டலுக்கு எதிரான எழுச்சி:

நவதாராளமய தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது நாள்தோறும் நிகழ்த்தப்படும்  புதுப்புது வகையான, தீய வடிவிலான சுரண்டலுக்கு எதிர்வினையாற்றும் வழிமுறைகளை இயக்கங்கள் புரிந்துகொள்ளவும், கற்கவும் அவசியமிருக்கிறது. மிகவும் பாதிக்கப்பட்ட சமூகக் குழுக்களின் சுரண்டலுக்கு எதிரான இத்தகைய  போராட்டங்களின் ஒரு பகுதியாக நாம் பார்க்கவேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  தலித் மக்களின் எழுச்சியைப் பார்த்துவருகிறோம். இந்தியாவில் தலித் மீதான ஒடுக்குமுறைகளில்  எப்போதும் சாதி (சமூக) மற்றும் வர்க்க (பொருளாதார) அம்சங்கள் இணைந்தே காணப்படுகின்றன. சமூகப் படிநிலையில் கடை மட்டத்திலும் கூட இடம் மறுக்கப்பட்ட, சாதி விலக்கம் செய்யப்பட்ட பகுதியினரை  உருவாக்கியதன் காரணமாக – உழைக்கவும் சேவையாற்றவும் மிகப்பெரும் எண்ணிக்கையில் அரை அடிமைகள் (semi-slaves) கிடைத்தனர், அவர்களுக்கு அதுதான் போதிக்கப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுவதால், பல்வேறு வகையிலான உடல் உழைப்புக்களில் இருந்து விடுபட முடியாத நிலைக்கு தலித்துகள் தள்ளப்பட்டனர். அப்படி ஒதுக்கப்படும் தொழில்கள் அனைத்தும் மிகவும் தாழ்த்திப் பார்க்கப்படும், தூய்மையற்ற தொழில்களாகவும் உள்ளன. பலதும் மாற்றத்திற்குள்ளாகியுள்ள இந்த ”நவீன” யுகத்தில் நாம் நுழைந்துவிட்டபொழுதும் கூட, தலித்துகளின் அன்றாட வாழ்வில் சமூக ஒடுக்குமுறைகளும், மனிதத்தன்மையற்ற பொருளாதார சுரண்டலும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தனியார்மயமாகும் வேலைவாய்ப்புகள்:

சேவைகளைத் தனியார்மயமாக்கி, வேலைவாய்ப்புகளை ஒப்பந்த அடிப்படையிலானதாக மாற்றியமைத்திட அழுத்தம் கொடுக்கும் நவ தாராளமய சீர்திருத்தங்கங்களின் காரணமாக, தலித்துகளுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் கிடைத்துவந்த வாய்ப்புகள் துயரமளிக்கும் விதத்தில் வெட்டிச் சுறுக்கப்பட்டுள்ளன. அடக்குமுறையுடன் இணைந்து, அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலும் நிகழ்த்தப்படுகிறது. அடக்குமுறைகளை எதிர்த்தும், முன்னேற்றத்திற்காகவும் தலித்துகள் நடத்துகின்ற போராட்டங்களின் மீது மிக மோசமான வன்முறையும், அநீதியும் நிகழ்த்தப்படுகிறது. இதே நேரத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் சுருக்கப்படுகின்றன. எனவே, தலித்துகளுக்கு அளிக்கப்படும் மிகக் குறைவான வாய்ப்புகளும் கூட தலித் அல்லாதவர்களால் தீவிரமான எதிர்ப்புக்குள்ளாகிறது.

தாக்குதலும், எதிர்ப்புணர்வும்:

மத்தியில் இந்துத்துவ சக்திகள் அதிகாரத்திற்கு வந்திருப்பதையும், மாநிலங்களில் ஆட்சியமைத்திருப்பதையும் அடுத்து, இந்துத்துவத்தின் உள்ளார்ந்த தன்மைகளான  சமூக, பாலின அடிப்படையிலான படிநிலைப் பாகுபாடுகள் பரவலாக முன்நிறுத்தப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். இதன் விளைவு, வெளிப்படையாகவும், தீவிரமாகவும் தலித்துகள் மீது ஒடுக்குமுறைகள் அதிகரிப்பது மட்டுமல்ல, தாக்குதலுக்கு எதிரான தலித்துகளின் போராட்டங்களையும், எழுச்சியையும் காண்கிறோம்.

தாக்குதல், அதற்கெதிரான போராட்டம், மேலும் தாக்குதல் என அலையலையாக எழும் நிகழ்வுகள் இந்துத்துவத் திட்டத்தின் உள் சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன. ஒரு மதத்திற்குள் இருக்கும் மனிதத்தன்மையற்ற படிநிலைப் பாகுபாடுகளைக் களையாமல், இந்து அடையாளத்தில் ஒன்றிணையவைக்கும் மோசடியான திட்டமே இந்துத்துவம் என்பது அம்பலமாகியுள்ளது. சாதிப் படிநிலையில்  ஒடுக்குமுறைகளைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, சாதிகளை தந்திரமாக மதிப்பாக்கிக் காட்டுவதுடன், சிறுபான்மை மதங்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்குவதன் மூலம் இந்துத்துவ மத அடையாளம் கட்டமைக்கப்படுகிறது.

பாலின, சமூகப் பாகுபாடுகளுக்கு ஊக்கமளித்து வர்ணாசிரம தர்மத்தைப் தூக்கிப்பிடிப்பதன்  மூலமாக இந்து அடையாளத்தை மக்கள் மீது திணிப்பதும்  இந்துத்வத் திட்டம். பெண்களை கீழ்ப்படிந்தவராக்குவதும், ஏற்றதாழ்வான அனைத்து அடையாளங்களையும் இந்து அடையாளத்திற்கு உள்ளடக்குவதுமே அந்த திட்டம்.  இந்துத்வ சக்திகள் அமலாக்கிவரும் திட்டங்களுக்கு எதிராகக்  கிளர்ந்தெழுந்த எந்தவித போராட்டத்தையும் விட, தற்போது ஏற்பட்டிருக்கும் தலித் எழுச்சியானது  இந்துத்துவத்தை தாக்குவதற்கான உயிர்நாடியான இடம் எது என  (Achilles heel) தெளிவாக வெளிக்காட்டிவிட்டது.

தொழிலாளிவர்க்கம், விவசாயிகள் மற்றும் அனைத்துப் பிரிவு ஏழைகளையும் கூறு போட்டுள்ள சமூகப் படிநிலையின் காரணமாக, சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்திற்கான நமது போராட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கமானது, சாதியையும்  வகுப்புவாதத்தையும் பயன்படுத்திய அடையாள அரசியலை ஊக்குவிப்பதன் மூலமும் பலப்படுத்துவதன் மூலமும் துல்லியமாக இத்தகைய பிளவுகளைச் செய்து வருகின்றன. போராட்டங்களின் மூலமாக வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவதன் வழி பல்வேறு சாதியினருக்கும், சமூகங்களுக்கும் இடையேயான ஒற்றுமையை கட்டமைக்க நமது இயக்கம் உறுதிகொண்டிருந்தாலும், சாதிய ஒடுக்குமுறை கொடுமைகளுக்கு எதிர்வினையாற்றாமல் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. நாட்டின் பொருளாதார, பாலின, சமூக சுரண்டல்களின் பாறைப்படுகையாக சாதி ஆதிக்கம் அமைந்திருப்பதை உணரவேண்டும். நமது இயக்கம், சாதி மற்றும் பாலின சமத்துவமின்மையையும், சமூக, பொருளாதார சமத்துவமின்மையையும் அழிக்கவேண்டிய போராட்டத்தை உள்ளடக்கியுள்ளது. நமது கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கும் தலித் எழுச்சியானது, அத்தகையதொரு போராட்டத்தைக் கைக்கொண்டு புதிய வலுவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான வரலாற்று வாய்ப்பாக உள்ளது.

சமரசமற்ற போராட்டத்தின் தேவை:

இந்த சூழலில், தோழர் இ.எம்.எஸ்   1979-இல் கூறியதைப்போல, “நவீன, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கோட்பாடுகளுடைய இந்தியாவைக் கட்டமைப்பதற்கு சாதி அடிப்படையிலான இந்து சமூகத்திற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் எதிரான ஒரு சமரசமற்ற போராட்டம் தேவை என்பதை உணர வேண்டும். இந்தியாவின் பழமை நிறைந்த  “நாகரிகமும் கலாச்சாரமும்” சாதிப் படிநிலை அடிப்படையில் சமூகத்தைக் கூறுபோடும் வரையில், சோசலிசத்தைப் பற்றி பேசுவதற்கும், மதச்சார்பற்ற ஜனநாயகம் குறித்து பேசுவதற்கும் இடமே இல்லை. வேறுவிதமாகக் கூறுவதென்றால்,  ஜனநாயகத்திற்கும், சோசலிசத்திற்குமான தீவிரமான போராட்டத்தை சாதிய சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கவே முடியாது. இன்று நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்திருக்கும் தலித் எழுச்சி, ஈ.எம்.எஸ்ஸின் புரிந்தலை செயல்படுத்தும் புதிய வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது.

வகுப்புவாத தாக்குதல்கள்:

கடந்த இரண்டாண்டுகளில், தலித்துகளின் பிரச்சனைகளின் மீது பல வகைத்  தளங்களிலிருந்தும் ஏராளமான எழுச்சிகள் உருவெடுத்துள்ளன. மோடி அரசு அமைந்ததற்கு பின்னர் வெடித்த முதல் எதிர்ப்புக்களில் ஒன்று, ஐஐடியில் அமைந்த  அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம். ஐஐடி-சென்னை பெரும்பாலும் ‘ஐயர்-ஐயங்கார்’ நிறுவனமாகவே இருந்து வந்துள்ளது. ST / SC / OBC மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய சமீபத்திய ஆண்டுகளில்தான்  வாசகர் வட்டம் என்பது உருவாகியுள்ளது. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம், சாதிப் பாகுபாடு குறித்த ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்ததன் காரணமாக, ஐஐடி நிர்வாகம் ஆய்வு வட்டத்தைத் தடை செய்ய முடிவு செய்தது. மாணவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். SFI,DYFI, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற இயக்கங்கள் வெளியிலிருந்து ஆதரவுப் போராட்டங்களை நடத்தினர். அந்தத் தடை வேறுவழியின்றி நீக்கப்பட்டது ஒரு வெற்றியாக அமைந்தது. கடந்த மாதம்,இதே ஐஐடி வளாகத்தில், மாட்டுக்கறி விழாவில் பங்கேற்ற மாணவர், சூரஜ், பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே ABVP ஆதரவாளர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் போராட்டச் செய்திகளை பின்னுக்குத்தள்ளி மற்றொரு செய்தி முன்னுக்குவந்தது. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில்  ரோஹித் வெமுலாவின் தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றது. அங்கே போராட்டத்தை ரோஹித் வெமுலா முன்னெடுத்தார். யாகூப் மேமனைத் தூக்கிலிட்டதற்கும், முசாஃபர்நகர் கலவரத்தைக் குறித்த ஆவணப்படத்தின் திரையிடல் மீதான தடைக்கு எதிராகவும் நிகழ்ந்த எதிர்ப்பு அது. தலித்துகளின்  உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட கலாச்சார உரிமைகளை உறுதி செய்வதற்கான குரலின் வெளிப்பாடாக அது அமைந்தது. மத்திய அமைச்சர்களின் துணையுடன், தலித் மாணவர்களின் உதவித்தொகை, உணவகம் மற்றும் விடுதி வசதிகள் ஆகியவற்றை மறுத்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது பல்கலைக்கழக நிர்வாகம். திறன் வாய்ந்த மாணவரான ரோஹித் வெமுலா தற்கொலைக்கு உந்தப்பட்டு, நாடெங்கிலும் நிகழ்ந்த போராட்டங்களில் துயரச் சின்னமானார்.

ரோஹித் வெமுலா ‘நிறுவனக்கொலை’ செய்யப்பட்ட பின்பு, ஆறு மாதங்களுக்குப் பிறகு, இறந்த பசுக்களின் தோலை அகற்றிய தலித்துகள் குஜராத்தின் உனாவில் மிகவும் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். குற்றம் செய்தவர்களே அவர்கள் நிகழ்த்திய மனிதமற்ற வன்முறையை காணொளியாகப் பதிவு செய்து, இணையத்தில்  பதிவிட்டனர். அதனை எதிர்த்து புதிய, மாபெரும் எழுச்சி கிளம்பியது. ஜிக்னேஷ் மேவானியின் தலைமையின் கீழ், பல்வேறு இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் உறுப்பினர்களும், ஆயிரக்கணக்கான தலித் மக்களும் இணைந்து  அஹமதாபாத்தில் இருந்து உனாவிற்கு பேரணியாகச் சென்றனர். இறந்த விலங்குகளின் தோலை உரிப்பது மற்றும் அகற்றுவதை நிறுத்துவதாக உறுதிபூண்டதோடல்லாமல், குஜராத் அரசாங்கத்தை ஒவ்வொரு நிலமற்ற தலித் குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் வழங்க வலியுறுத்தியும் நீண்டது அப்பேரணி. ஆயிரக்கணக்கான தலித் ஆண்களும், பெண்களும் பங்கேற்று முழங்கிய அப்பேரணி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தலித் மக்களின் இந்த போராட்டம் வழக்கம்போலவே அதிகார வர்க்கத்தை அசைத்துப் பார்த்த்து. போலீசாரோடு, தலித் அல்லாத இளைஞர்களைக் கொண்டு போராட்டத்தைக் கலைக்கும் வேலைகளைச் செய்தது அதிகார வர்க்கம். கலகக் குரலாக எழுந்த இவ்வியக்கம் முடங்கிப்போகாமல், துப்புரவுத் தொழிலாளிகளின் பிரச்சனைகளுக்கும், குஜராத்தில் தலித்துகள் மீதான வன்முறைகளையும் எதிர்த்து செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிர்வை ஏற்படுத்திய எழுச்சியிது.

மிக சமீபத்தில், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சிக்குப் பிறகு, அகந்தையைக் கூர்மையாக்கிக் கொண்ட ராஜ்புத் சமூகத்தினரால், சஹரான்பூரின் ஷபீர்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் தாக்கப்பட்டனர். அங்கே கொதித்துக் கிளம்பிய தலித் இளைஞர்கள் பீம் சேனாவைத் தொடங்கினார்கள் (அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே பிராமணீய ஆணவ தாக்குதல்களில் இருந்து தலித் மக்களைக் காக்க பீம் சேனா அமைக்கப்பட்டது)  அது எதிர்ப்பின் அடையாளமாகியது, வட இந்தியாவில் சுயமரியாதை அடையாளமானது. பீம் சேனாவின் நிறுவனராகிய, துடிப்புமிக்க இளைஞர் ராவணா,ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். ராவணன் என்ற புனைப்பெயரை, பிராமணீய நம்பிக்கைகளுக்கு எதிரான அடையாளமாக சூட்டிக்கொண்டவர். மே 21-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் திரளான போராட்டத்தை ஒருங்கிணைத்தார். பாரம்பரியமாக இடதுசாரிகள் வலுக்குன்றிய மேற்கு உ.பி., மற்றும் அருகாமைப் பகுதிகளிலிருந்தும் கூட, அரசு அடக்குதலையும் மீறி ஆயிரமாயிரம் தலித் மக்கள் திரண்டு போராட்டத்தில் பங்கெடுத்தது ஒடுக்குமுறைக்கு எதிரான கலகத்தின் குறியீடு.உடனடியாக, சந்திர சேகர ராவணனும், சபிர்பூரைச் சேர்ந்த தலித்துகளும், ஊராட்சி (சர்பாஞ்ச்) தலைவர் உள்ளிட்டு  கைது செய்யப்பட்டனர்.  ஊராட்சித் தலைவர் கண் முன்னமே  அவரின் வீடு சாம்பலாக்கப்பட்டது, அவரது மகன் அடித்து குற்றுயிராக்கப்பட்டார். வன்முறையையும் கலவரத்தையும் நிகழ்த்திய ராஜ்புத்திரர்களும், பாஜக எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் சுதந்திரமாக உலவுகிறார்கள்.

மதிப்பிழக்கும் சாதித் தலைவர்கள்:

இப்பகுதியில் வாழும் தலித் மக்கள், அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்ததாகக் கூறியிருப்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது. அதில் சிலர் பி.எஸ்.பியால் ஏமாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இந்துத்துவ சக்திகளை எதிர்கொள்ளும் வகையில் நாம் இந்த இயக்கத்தில் செய்ய வேண்டிய தலையீடு குறித்தான நம்முடைய புரிதல் எவ்வளவு சரியானது என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டாகும்.

மேற்சொன்ன  நிகழ்வுகள் மட்டுமல்ல. தலித்துகளுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், தாக்குதல்களும் முடிவற்று நீள்கின்றன. இந்த தாக்குதல்களின் பெரும்பாலானவை தனிநபர்களுக்கு எதிராக தனிநபர்களால் நடத்தப்படுபவை அல்ல,  மாறாக தனிப்பட்ட தலித் அல்லது தலித் குடும்பம் அல்லது ஒரு தலித் குழுவினருக்கு எதிராக தலித் அல்லாத பிரிவினரின் பெரும்பான்மை பிரிவுக தளைத் திரட்டி நடத்தும் தாக்குதல்களாகும். தலித்துகளுக்கு ”அவர்களின் இடம்” எது என பாடம் கற்பிக்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்படும் இழிவான தாக்குதல்கள் அவை. அதாவது, நிலம், வாழ்வுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, என அனைத்தும் மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு காலகமாக இவை மறுக்கப்பட்டே வருகின்றன நவ தாராளமயமாக்க காலத்தில் இந்த போட்டி மனப்பான்மையும், கசப்பும் மேலும் குரூரமாக வளர்ந்து நிற்கிறது.

இந்த எழுச்சியின் பரிமாணங்களையும் அதன் தன்மையையும் புரிந்து கொள்வது அவசியம். பாரம்பரியமான சாதித் தலைவர்கள் பல்வேறு விதங்களில் மதிப்பிழந்து வரும் தருணமும் இதுதான். எனினும் இந்த காரணங்களால், இடதுசாரிக் கருத்துக்களும், சித்தாந்தங்களும் தானாகவே ஏற்றுகொள்ளப்படப் போவதில்லை. இன்னும் சொல்வதென்றால், தூய அம்பேத்கரியம் என்னும் பெயரில், தீவிரமான கம்யூனிச எதிர்ப்பை விதைத்து, போராடுகின்ற  துன்புறுகின்ற மக்களை இடதுசாரிக் கருத்துக்களை விட்டு விலக்குவது மட்டுமல்லாமல், இடதுசாரி இயக்கங்களைக் குறித்த அதீதி முன்முடிவுகளை உருவாக்குகின்றன.

சஹரான்பூர் வன்முறையைக் குறித்து எந்த அரசியல் கட்சிகளும் வாய்திறக்காத அந்த நேரத்தில் பேசியதற்காக, நமது டி.எஸ்.எம்.எம் அமைப்பின் தலைவர் நத்து பிரசாத், ஜந்தர் மந்தர் பேரணியில் உரையாற்ற அழைக்கப்பட்டார். பேரணியில் கலந்துகொண்ட பலர் இதை பாராட்டியிருந்தாலும், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைக் குறித்து ‘தலித்’ அறிவுஜீவிகள் பெரும் விமர்சனத்தையும், கண்டனங்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தது கருத்தில் கொள்ளவேண்டியதாகும்.

சில தலித் குழுக்களின் இத்தகைய தீவிர கம்யூனிச எதிர்ப்பு, சாதி அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் நாம் அடையாளப்பூர்வமான செயல்படுவதற்கான சமாதானமாக பல நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. (தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்கள் விதிவிலக்காக இருப்பினும்) இது மாற்றப்பட வேண்டும்.

ஒடுக்குமுறைகளை எதிர்ப்போம்:

இத்தகைய ‘நண்பர்கள்’ மற்றும் ‘நட்பு சக்திகளால்’ நமக்குக் கிடைத்த அனுபவங்கள், கம்யூனிச எதிர்ப்பு மற்றும் அவதூறுகள் ஆகியவற்றால் அரசியல் கூட்டாக இயங்குதல்  அல்லது அணிச்சேர்க்கை அல்லது தொழிற்சங்க ரீதியிலான முயற்சிகளை நாம் கைவிடவில்லை வர்க்க நோக்கில்  நம்மிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அவர்களில் பலர், ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் ஆதரிக்கின்றனர். குறிப்பிட்ட சிக்கல்களில் கூட்டுப் போராட்டங்களின் முக்கியத்துவத்தை புரிந்து நாம் செயல்படுவதால், இத்தகைய விசயங்களை புறக்கணித்துவிட்டு, கையிலெடுத்துள்ள பிரச்சனைகளில் கவனத்தைச் செலுத்துகிறோம்.

இத்தகைய சித்தாந்த வேறுபாடுகளைக் காரணமாகச் சொல்லி, தலித் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதில், பங்கேற்பதில் உள்ள தயக்கத்தை நியாயப்படுத்துவது சரியான வாதமில்லை என்பதுடன் நமது காலை நாமே வாறிக்கொள்வதாகும். தற்போது நாட்டில் நிகழ்ந்துவரும் தலித் மக்களின் எழுச்சி என்பது, அடையாள அரசியல் என்ற வட்டத்தை ஏற்கனவே கடந்துவிட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சிறுபான்மையினருடன் ஒருமைப்பாட்டை முன்நிறுத்துவது, பாலின பாகுபாடுகள் குறித்த விவாதங்களை எழுப்புவது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் குற்றங்களையும் எதிர்த்து செயலாற்றுவது, இந்துத்வ செயல்திட்டத்தை அம்பலப்படுத்தி எதிர்கொள்வது என்று செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன. ஆதரவுக்கரம் நீட்டுவதோடல்லாமல் போராட்டங்களில் பங்குபெறுவதும், இவ்வியக்கங்களில் உள்ள தலித்துகளால் எதிர்கொள்ளப்படும் அரச வன்முறையை எதிர்கொள்வதும், சாதி அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்துவதும், நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும், நம் கண்முன்னே நிற்கும் தேவைகளாகும்.

இதனைச் செய்வதற்கு ‘சாதிச்’ சிக்கல்கள், அவற்றின்  சாரத்தில் ‘வர்க்கச்  சிக்கல்களே’ என்பதை உணர வேண்டும். பட்டியல் சாதி மக்களுக்கு கல்வி மறுக்கப்படுவதும், நல்ல வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதும் எந்த அளவுக்கு சாதிச் சிக்கலோ, அதே அளவு அவை வர்க்கச் சிக்கலுமாகும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதும். வேலைவாய்ப்புகள் ஒப்பந்த முறையில் மாற்றப்படுவது தலித், பழங்குடியினரையே அதிகம் பாதிக்கப்படுகின்றன, மிகப்பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் அரசு ‘திட்டங்களில்’ அத்துக் கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர், உயர் கல்வி நிலையங்களில் தலித் பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம், அவர்களின் மனநிலையை சிதைத்து பலரை தற்கொலையை நோக்கித் தள்ளியுள்ளது, தலித்துகளுக்கு எதிரான நாகரீகமற்ற தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன, அதிலும் குறிப்பாக கல்விகற்ற வாய்ப்புள்ள, வாழ் நிலையில் சற்று உயர்வுகண்ட தலித்துகள் தாக்கப்படுகின்றனர். தொழிற்சாலைகளில், கல்வி நிலையங்களில், நிலத்தில் தலித் பெண்கள் முடிவற்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இவை அனைத்துமே, சாதிச் சமூகத்தில் நிலவுகின்ற வர்க்கப் பிரச்சனைகளாகும், வர்க்கமாக பிளவுபட்ட சமூகத்தின் சாதிப் பிரச்சனைகளாகும்.  இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிற்து என்னும் புரிதல் மிக அவசியமானது.

பி.டி.ரணதிவே போதனை:

பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே தொழிலாளர் வர்க்கத்தை நோக்கி தோழர் பி.டி.ரணதிவே கூறினார்  “பொருளாதார போராட்டத்தின் மூலமாக உருவாக்கப்படும் பொது மனநிலையை மேலும் முன் நகர்த்த, சாதிய ஒடுக்குமுறைகளின் மீதும் சம அளவிலான போராட்டத்தைக் கட்டமைக்காமல் முடியாது.” ”வர்க்கம், சாதி மற்றும் சொத்து உறவுகள்” என்ற புத்தகத்தில், “பெரும் வெகுஜன போராட்டங்களை ஒருங்கிணைக்கும் தலைவர்கள், போராடும் மக்களிடையே தீவிரமான சாதி எதிர்ப்புச் சிந்தனையை உண்டாக்கி, சாதி, தீண்டாமையின் சவாலை தீர்க்கமான முறையில் எதிர்கொள்ளவேண்டும். வெகுஜன மக்கள் இயக்கங்கள், பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஆகியோரது பிரச்சனைகளில் அதிகமான கவனத்தைக் குவித்து செயல்பட்டு அம்மக்களை ஒன்றிணைத்தால் மட்டுமே, ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை உருவாகும். ஒன்றுபட்ட உழைக்கும் சக்தியின் பெரும் சக்தியே, விவசாயப் புரட்சிக்கான தீர்க்கமான தாக்குதலை நடத்திடும், அதுவே சாதி வேறுபாடுகளையும், தீண்டாமையின் அடிமைச் சங்கிலியையும் தகர்க்கும் என்கிறார்.

நமது இயக்கம், இத்தகைய அவரது வார்த்தைகளின் மீது, மிகக் குறைவான கவனத்தை, சீரற்ற முறையில் மட்டுமே செலுத்தியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ’சமூக அதிகாரப் படிநிலைகளை நசுக்குவதில் தான் நமது முன்னேற்றமும், வெற்றியும் உள்ளது. ’விமர்சனங்கள், எதிர்ப்புகள், தடைகள் ஆகியவற்றைத் தாண்டியும் இந்த திசையில் முன்னேறிச் செல்வது நமது பொறுப்பாகும்’ என்று தோழர்கள் ஈ.எம்.எஸ் மற்றும் பி.டி.ஆர் ஆகியோர் எவ்விதக் குழப்பத்திற்கும் இடமின்றிக் கூறிய கருத்துக்களை நாம் உள்ளடக்கிக்கொள்ளவில்லை.

நமது வர்க்க வெகுஜன இயக்கங்களில் அதிக எண்ணிக்கையில் தலித் சமூகத்திலிருந்து வந்த தோழர்கள் செயல்பட்டுவருகின்றனர். அவர்கள் முன்னணித்தோழர்களாக இயங்கி, போராட்டங்களில் வலுவாக ஈடுபடுகின்றனர். நமது இயக்கத்தின் போராட்டங்களில், சாதி ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கான எதிர்ப்பையும் இணைத்து முன்னெடுப்பதில், அவர்கள் பெரும்பங்காற்ற முடியும்.

ஜெய்பீமும், லால்சலாமும் சந்திக்கையில்:

தலித் இயக்கங்களைச் சார்ந்த செயற்பாட்டாளர்களும், சிந்தனையாளர்கள் பலரும்,  கம்யூனிஸ்ட்டுகளும், தலித் இயக்கங்களும் இணைந்து நிற்கும்போதே சாதி ஒழிப்பை சாத்தியமாக்கி, சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என உணர்ந்து ஏற்றுக்கொண்டிருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சாதி அமைப்பைக் குறித்து பேசும்போது, இது உழைப்புப் பிரிவினை அல்ல, உழைப்பாளர்களின் பிரிவினை என விவரிக்கிறார் டாக்டர் அம்பேத்கர். ”சோஷலித்தை நனவாக்க சோஷலிஸ்ட்டுகள் விரும்பினால், அதற்கு சமூக மாற்றமே அடிப்படையானது என்பதை அவர்கள் உணரவேண்டும். சமூக மாற்றமில்லாமல் சோஷலித்தை அடைவது சாத்தியமில்லை” என்கிறார்.

சீரிய சிந்தனாவாதியும், தலித் எழுத்தாளரும், மார்க்சிய அணுகுமுறை கொண்டவருமான டாக்டர் ஆனந்த டெல்டும்டே, ’பி.ஆர் அம்பேத்கர், இந்தியா மற்றும் கம்யூனிசம் என்னும் புத்தகத்தின் முன்னுரையில், ”கம்யூனிஸ்ட்டுகளுக்கும், அம்பேத்கருக்கும் மக்களே குறிக்கோள், கற்பிதமான தேசம் அல்ல. மக்களின் மீதான இந்த கவனக்குவிப்பே அவர்களை ஒரே புள்ளியில் இணைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ” இத்தப் புத்தகம், இந்தியாவின், உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தாமதமான முயற்சிக்கு தலித்துகளையும், கம்யூனிஸ்ட்டுகளையும் ஊக்கப்படுத்தட்டும்” என்று முன்னுரையை முடித்துள்ளார்.

ஜே.என்.யூ பேராசிரியரும், முன்னாள் யூ.ஜி.சி செயலாளருமான டாக்டர் எஸ்.கே தொராட், ஜே.என்.யூவில் எஸ்.எஃப்.ஐ போன்ற இயக்கங்களின் காரணமாக எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் இடங்கள் நிரப்பப்படுவது உறுதிப்படுத்தப்படுவது மட்டுமல்ல, மத்திய பல்கலைக் கழகங்களிலும் நாட்டின் பிற பகுதிகளிலும்  எஸ்.சி/எஸ்.டி ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்ட இடங்களும் நிரப்படுவதற்கும்  துணைபுரிகிறது என்று குறிப்பிடுகிறார்.

செப்டம்பர் 16, 2016-ஆம் தேதி நிகழ்ந்த வரலாற்றுப் புகழ் வாய்ந்த பேரணிக்குப் பிறகு, அக்டோபர் 14-ஆம் தேதி வெளியான “ஜெய் பீமும், லால் சலாமும் சந்திக்கையில்” என்னும் ‘தி இந்து’ நாளிதழ் கட்டுரையில், ”செப்டம்பர் 16-ஆம் தேதி, ஜந்தர் மந்தருக்கு அருகிலிருக்கும் பாராளுமன்றத் தெருவில் சமீபத்தில் காணாத ஒரு பெரும் தலித் பேரணி நடைபெற்றது. பல இடதுசாரித் தலைவர்களின் பேச்சு அதன் தனித்துவமாக அமைந்தது. பிரகாஷ் அம்பேத்கர், ராதிகா வெமுலா, ஜிக்னேஷ் மேவானி, சீத்தாரம் யெச்சூரியும் பங்கெடுத்த மேடையாக அமைந்தது. தலித்துகளாக அடையாளப்படுத்திக்கொண்ட அந்த திரளில், ஜெய் பீம் என்னும் முழக்கத்துடன் லால் சலாம் முழக்கத்தையும் கேட்கமுடிந்தது. குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற எழுச்சிகள், ஜெய் பீமும், லால் சலாமும் இணைவதால் ஏற்படப்போகும் மாற்றத்தைக் குறித்த பார்வையை நமக்கு வழங்கியது.

ரோஹித் வெமுலா, தனது நாட்குறிப்பில் ‘நீல வானத்தில், சிகப்பு சூரியன் உதிக்கவேண்டும்’ என எழுதியுள்ளார். சில நேரங்களில், வானம் பெரியதாகவும் சூரியன் சிறியதாகவும், அதுவே சில சமயங்களில் சூரியன் பெரியதாகவும், வானம் சிரியதாகவும் காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். அவரின் கனவை நனவாக்கிடவேண்டும். நீல வானத்தில், ஒளிர்விடும் சிகப்பு சூரியனே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டு, தனித்தனியாக சாதியாக பிரிக்கப்பட்டிருக்கும் அவலத்தை மாற்றி, ஒரே அமைப்பாக, ஒரே வர்க்கமாக போராடி வலிமையான கட்டமைப்பை உருவாக்க இந்த ஒற்றுமையே வழிகோலும்.



One response to “தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இடது மாற்றும் !”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: