மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள்


வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் என்ற வகையில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளும் நிலவும் மத்திய மாநில நிதி உறவுகளும் தமிழக வளர்ச்சிக்கும் அதன் தன்மைக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன.

கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆளும் அரசாங்கங்கள் பின்பற்றிவந்த  தாராளமய கொள்கைகள் தமிழக வளர்ச்சியின் தன்மையை கணிசமான அளவிற்கு நிர்ணயித்துள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து அரசு பொறுப்பில் இருந்து வந்துள்ள திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் அதே தாராளமய கொள்கைகளைத்தான் பின்பற்றி வந்துள்ளன. மக்களின் நேரடி அதிருப்தி இவர்கள் மீது பாயும் பொழுதெல்லாம் சில மக்கள் நல திட்டங்களை அறிவிக்கின்றனர். மக்கள் கோரிக்கைகளை கண்டறிந்து நாமும் இதர ஜனநாயக இயக்கங்களும் நடத்தும் போராட்டங்களும் சில மக்கள் நல திட்டங்களும் நடவடிக்கைகளும் அமலாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எனினும் அடிப்படையில் தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்கள் வாழ்வில் பெரும் சவாலாக வந்து நிற்கிறது.

மாநிலத்தின் ஆண்டு உற்பத்தி ஆண்டுக்கு 6% க்கும் அதிகமாக வளர்ந்துவருவதாக சொல்லப்பட்ட போதிலும்,  மக்களின் அடிப்படை பிரச்சினைகளான வேலையின்மை, சிறு குறு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளும் வேளாண் நெருக்கடி, சிறு குறு தொழில்முனைவோர் சந்திக்கும் தொழில் நெருக்கடி, தொழில் மந்தநிலை, சொத்து, வருமானம், கல்வி, ஆரோக்கியம் அனைத்திலும் நிலவும், மேலும் அதிகரித்துவரும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை கவனிக்கும்போது, மாற்றுக் கொள்கைகளின் அவசியத்தை உணரலாம்.

ஊழல் மலிந்துள்ளதும், தமிழகத்தின் கனிமங்கள், ஆற்று மணல், தாது மணல், நீர், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள்  மிகக் குறைந்த விலையில் பெரும் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படுவதும் மறுபுறம் பொதுத்துறை முதலீடுகள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன, பாசனம், கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், வேளாண் விரிவாக்க அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் மத்திய மாநில அரசுகளால் வெட்டப்பட்டு வருகின்றன. இடுபொருள் மானியங்கள் குறைக்கப்படுகின்றன.

அரசின் வரவு-செலவு இடைவெளியை கடுமையாக குறைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், இதனை செலவைக் குறைப்பதன் மூலம் மட்டுமே செய்யவேண்டும் என்பதே தாரளமய பட்ஜெட் கொள்கை.

அண்மை ஆண்டுகளில் மத்திய பா ஜ க அரசு நலத்திட்டங்களையும்  அழித்து வருகிறது. இதில் ஊரக வேலை உறுதித்தித் திட்டமும் அடங்கும். பொதுவிநியோக அமைப்பையும் மத்திய அரசு திட்டமிட்டு சீரழித்து வருகிறது. தானியங்கள் உள்ளிட்டு வேளாண் விளை பொருட்களை அரசு இனி கொள்முதல் செய்யாது என்ற தொனியில் தான் மைய அரசு பேசி வருகிறது.

இந்தப் பின்புலத்தில் இடது ஜனநாயக முன்னணி கட்டுவது அவசியம் என்ற புரிதலில் அதற்கான அரசியல் – பொருளாதார கொள்கைகளை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.

மாற்று பொருளாதாரக் கொள்கைகள்

விவரங்களுக்குள் போகும் முன், இடது ஜனநாயக முன்னணியின் (இஜமு) மாற்று பொருளாதார பார்வை பற்றிய புரிதல் அவசியம்..

தொழிலாளிவர்க்கம், கிராமப்புறங்களில் விவசாயத்தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர கிராமப்புற, நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்கள், மத்திய தர வர்க்கத்தினர் ஆகிய உழைக்கும் மக்கட்பகுதி இரண்டு முன்னணிகளிலும்  இடம்பெறும். பணக்கார விவசாயிகளைப் பொருத்த வரையில், விடுதலை போராட்ட காலத்திலும் விடுதலைக்கு பின் ஒரு கட்டம் வரையிலும் பணக்கார விவசாயிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையில் வலுவான முரண்பாடுகள் இருந்தன. தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் முடியும் தறுவாயில் இந்த முரண்பாடுகள் மட்டுப்பட்டுள்ளன. எனினும், இஜமுவிலும் மஜமுவிலும் பணக்கார விவசாயிகளை, முன்பின் முரணற்று இல்லாவிடினும், இடம்பெறச் செய்ய முடியும். அதேபோல், பெருமுதலாளிகள் தலைமையிலான அரசில் நிலப்பிரபுக்களுடன் முதலாளிவர்க்கமும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், சிறு நடுத்தர முதலாளிகள் இயல்பாக இஜமு / மஜமு பக்கம் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் முதலாளித்துவ  நிலப்ரபுத்வ வளர்ச்சிப்பாதையின் நெருக்கடிகள் முற்றுகையில் தொழிலாளி வர்க்கம் தனது தலைமைப் பங்கினை சரிவர ஆற்றி  அவர்களை நம்பக்கம் கொண்டுவர இயலும். இத்தகைய புரிதலின் அடிப்படையில் தமிழக சூழலில் இடது ஜனநாயக பொருளாதார மாற்று பற்றி நாம் பரிசீலிப்போம்.

வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி: இடது மாற்று

இடது ஜனநாயக மாற்றின் முக்கிய பொருளாதார அம்சம், நில ஏகபோகத்தை தகர்க்கும் முழுமையான நில சீர்திருத்தம் ஆகும். இதனை சாதிப்பதன் மூலம் தான் கிராமங்களில் நில உடமை அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் பணக்கார ஆளும் வர்க்கங்களின் பிடியை தளர்த்த முடியும். விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாகவும் ஜனநாயகத்தன்மையுடனும் வளர முடியும். சாதி ஆதிக்க சக்திகளை தகர்க்கவும் இது மிகவும் அவசியமான நடவடிக்கை. உள்நாட்டுச்சந்தை விரிவடையவும் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகவும் இது அவசியம்.

தமிழக மக்களில் சரிபாதியினர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஊரகக் குடும்பங்களில் பெரும்பாலானோர் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியையாவது வேளாண்மை மூலம் பெறுகின்றனர். ஆகவே, தமிழகத்தில் நிலப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினையாகும்.  2011 ஆண்டிற்கான வேளாண் சென்சஸ் கணக்கெடுப்பு தரும் தகவல்படி 10 ஏக்கர் அல்லது அதைவிட அதிகமாக நிலம் சாகுபடி செய்வோர் தமிழகத்தின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒருபங்கை சாகுபடி செய்கின்றனர். ஆனால் 5 ஏக்கருக்கு குறைவாக சாகுபடி செய்யும் குடும்பங்கள்  மொத்த சாகுபடி செய்யும் குடும்பங்களில் 92% ஆக இருந்தும் மொத்த சாகுபடிபரப்பில் 61% தான் அவர்களால் சாகுபடி செய்யப்படுகிறது.இது சாகுபடி நிலங்களின் விநியோகம். ஆனால் நில உடமை இதைவிட கூடுதலாக ஒரு சிலரிடம் குவிந்துள்ளது. ஏனெனில் நிலம் உள்ளவர்கள் ஒருபகுதியை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைக்கு நிலம் எடுப்பவர்களில் பெரும் பகுதியினர் சொந்தமாக நிலம் அற்றவர்கள்.

சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2௦11 இன்படி தமிழக கிராமங்களில் 73% குடும்பங்கள் சொந்தமாக விவசாய நிலம் அற்றவை. இதே கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கிராமங்களில் மொத்த  உழைப்பு படையில் சுமார் 20% சாகுபடியாளர்கள், 45% விவசாயத் தொழிலாளர்கள். தலித்துகளில் பெரும்பகுதியினர் விவசாய அல்லது பிற உடலுழைப்பு தொழிலாளர்கள். இதுதான் வன்னியர் உள்ளிட்ட சில ஏழை குடியானவ சாதிகளின் நிலையும். இவ்விவரங்களை இணைத்துப் பார்த்தால், தமிழகத்தில் நிலக்குவியல் தொடர்வதும், ஏராளமான ஊரக குடும்பங்கள் சொந்த சாகுபடிக்கு வாய்ப்பின்றி கூலி தொழிலாளிகளாகவும் குத்தகை விவசாயிகளாகவும் உள்ளனர் என்பதும் தெரிகிறது.

தமிழக கிராமங்களில் நிலவும் நில ஏகபோகத்திற்கு ஒரு முக்கிய சமூக அம்சம் உண்டு. தலித் மக்களில் பெரும் பகுதியினர் நிலம் மற்றும் இதர உற்பத்தி கருவிகள் இல்லாதவர்கள். இதனால் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கம் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. நிலவும் சாதி ஒடுக்குமுறை அமைப்பை தகர்க்க முழுமையான நிலச்சீர்திருத்தம் ஒரு முக்கியமான புள்ளி.

இருக்கும் நிலம் தொடர்பான சட்டங்களை முறையாக அமலாக்கினாலேயே ஓரளவு நில மறுவிநியோகம் சாத்தியமாகும். இதற்கு வலுவான இயக்கமும் அமைப்பும் தேவை என்பது உண்மையே. எனினும் நிலப்பிரச்சினை என்று ஒன்று தமிழகத்தில் உள்ளது, அது கம்பெனிகளுக்கு நிலம் தாரைவார்க்கப்படுவது மட்டுமல்ல. இங்குள்ள நிலமற்ற, மிகக் குறைவான நிலம் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மக்களுக்கு நிலம் மிக அவசியம். இந்த புரிதலை விரிவாக கொண்டுசெல்வது இடதுஜனநாயக முன்னணி கட்டும் பணியில் இடம் பெற வேண்டும்.

விவசாயத்தை பெரும்பகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் தொழிலாக மாற்றவும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும் உற்பத்தியில் மக்களின் ஈடுபாட்டை பன்மடங்கு அதிகப்படுத்தவும் கிராமப்புற சாதி ஆதிக்க விழுமியங்களை உடைக்கவும்  அவற்றிற்கு தொடர்ந்து உயிர் கொடுத்து வரும் பெரும் நில உடைமையாளர்களின் சமூக அரசியல் செல்வாக்கை தகர்க்கவும்  அடிப்படை நில சீர்திருத்தம் தேவை.

இதன் முதல்படியாக, அரசு தரிசுகளை பெரும் கம்பெனிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் குத்தகைக்கு கொடுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி அவற்றை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மறுவிநியோகம் செய்ய வேண்டும்.  சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைத்தால் – குறிப்பாக கோவில், ட்ரஸ்ட் நிலங்களை கையகப்படுத்தினால், பினாமிகளை இனம் கண்டு அகற்றினால், நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான பல விலக்குகளை நீக்கினால் கணிசமாக நிலம் கிடைக்கும்.

எனினும் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கத்தை நடைமுறை முழக்கமாக மாற்றுவது எளிதல்ல. ஆகவே வர்க்கங்களை திரட்டும் பணியில் இந்த முழக்கத்தை திட்டமிட்டு நடைமுறை முழக்கமாக நாம் மாற்ற வேண்டியுள்ளது.

நில மறுவிநியோகம் என்பது துவக்கம் தான். இதனை தொடர்ந்து ஒட்டுமொத்த வேளாண் குடிமக்களுக்கு கூடுதல் அரசு ஆதரவு, பாசனம், சந்தை வசதிகள், கட்டுப்படியாகும் விளைபொருள் விலை, விரிவாக்க உதவி, ஆராய்ச்சி உதவி, நிறுவனக்கடன், இடுபொருள் மானிய உத்தரவாதம் ஆகியவையும் வேளாண் நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் தமிழக கிராமங்களின் முகங்களை மாற்றவும் மிக அவசியம்.

நமது மாற்று கொள்கையின்கீழ் பாசனம், மின்சாரம், வேளாண் பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள், குளிர்சாதன வசதிகள், கிராமப்புற சாலைகள்  உள்ளிட்ட  கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்க வேண்டும். இவற்றை செய்ய,  தனியார்மய, தாராளமய கொள்கைகள் கைவிடப்பட்டு, பொதுத்துறை  முதலீடுகள் உயர்த்தப்படவேண்டும் என்பது இடது மாற்றின் அம்சம்.. அதேபோல், சிதைந்துகிடக்கும் மாநில வேளாண் விரிவாக்க அமைப்பை தூக்கி நிறுத்தி வலுப்படுத்த அரசு நடவடிக்கை தேவை என்பதை மக்கள் இயக்ககங்களின்மூலமாக கொண்டு செல்லும் பொழுது இடது மாற்றுப் பார்வையில் நமது அணிதிரட்டல் நடைபெறும்.. நமது மாற்று பார்வையில்: :வேளாண் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டு, மகசூல் அதிகரிக்க வழி செய்யவேண்டும். பல்வகை வேளாண் மற்றும் பால் கூட்டுறவு அமைப்புகளையும் கூட்டுறவு வங்கிகளையும் வலுப்படுத்தி, வேளாண் மற்றும் கால்நடை துறைகளில் பாடுபடும் சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவும். பெரும் உற்பத்தியின் வலிமையை சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்படுத்தவேண்டும் என்பது நமது மாற்று கொள்கை. வேளாண் துறை மற்றும் வேளாண் குடிமக்கள்  நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை நிர்ப்பந்திப்போம். குறிப்பாக, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை மற்றும் கொள்முதல் உத்தரவாதம், தேசீய வேளாண் விரிவாக்க அமைப்பு, ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல், குறைந்த வட்டியில் போதுமான கடன்களை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்குதல், போதுமான இடுபொருள் மானியங்களை உறுதியாகவும் உரிய நேரத்திலும் வழங்குதல்,  ஊராக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுத்துறை முதலீடுகள் ஆகிய கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றிட நாம் நிர்ப்பந்திப்போம்.

கிராமப்புறங்களில் வேளாண்மையை பிரதான வருவாயாக கொண்டுள்ள குடும்பங்கள் 18 சதவிகிதம் தான். 65 சதவிகித குடும்பங்களின் பெரும்பகுதி வருமானம் உடல் உழைப்பிலிருந்து கிடைக்கிறது.  தமிழக கிராமப்புறங்களில் மொத்தக் குடும்பங்களில் கூலி வேலை செய்து வாழ்பவர்கள் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள். மொத்த கிராமப்புற குடும்பங்களில் சம்பளத்திற்கு ஒருவராவது வேலை செய்யும் குடும்பங்கள் 10 சதவிகிதம்.  இத்தகையோரில் 78 சதவிகிதம் பேரின் மாத வருமானம் ரூ.5000-ம ரூ.5000-க்கு குறைவு. 16 சதவிகிதத்தினர் ரூ,5000 முதல் ரூ.10000 வரை பெறுகின்றனர். ஆக, தமிழக கிராமங்களில் கணிசமான பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர். மாத வருமானம் ரூ.10,000-மும் அதற்கும் குறைவாகவும் உள்ளவர்களே கிராமப்புறத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள். இவர்களுடைய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளுக்கு இடது ஜனநாயக மாற்று முன்னுரிமை அளிக்கும்.

தொழில் துறையில் இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்

விடுதலைக்குப் பின்பும், குறிப்பாக கடந்த இருபத்தைந்து ஆண்டு தாராளமய காலத்திலும், தனியார் பெரும் கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகளும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து, அவர்களது லாபத்தை அதிகரிப்பதன் மூலம் தான் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் பெருக்க முடியும் என்பதே அடுத்தடுத்து வந்த மத்திய மாநில அரசுகளின் தாரக மந்திரமாக  இருந்துள்ளது. கொடுக்கப்பட்ட சலுகைகள் உண்மையிலேயே எந்த அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன, வேலை வாய்ப்புகள் போதுமான அளவு உருவாக்கப்பட்டுள்ளனவா என்றெல்லாம் எந்த ஆய்வும் அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. நாம் தமிழகத்தில் பலமுறை கோரியும் சட்டமன்றத்தில் இவை தொடர்பான வெள்ளை அறிக்கை வைக்கப்படவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் மட்டும் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன.

நமது மாற்றுக் கொள்கையின்கீழ் இதுவரை மாநில அரசுகளால்  பெரும்கம்பெனிகளுடன் போடப்பட்டுள்ள அனைத்து தொழில்சார்  புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் அமலாக்கம் உழைப்பாளி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றப்படும். கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் வேலை வாய்ப்பு அதிகரிப்புடன் இணைக்கப்படும். பயனளிக்காத ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.

தாராளமய கொள்கைகளால் சிறு குறு தொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு என்று இருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, பெரும் நிறுவனங்களுடன் சமமற்ற ஆடுகளத்தில்  போட்டிபோடும் நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்சமயம் ஆட்சியில் உள்ள பாஜக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமும் ஜிஎஸ்டி மூலமும் சிறுகுறு தொழில்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்பது என்ற பெயரில் சிறு குறு தொழில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நமது மாற்றுக்கொள்கையின்கீழ், இத்தகைய அணுகுமுறை முற்றிலும் தவிர்க்கப்படும். சிறு குறு தொழில்முனைவோர் ஊக்கம் பெற, அவர்களுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு அறிவித்துள்ள சலுகைகள் உரிய நேரத்தில் அவர்களை வந்தடையும். சிறு குறு தொழில்முனைவோருக்கு நிறுவனக்கடன் வசதி மிக அவசியம். மாநில அளவில் நமது மாற்று திட்டம் இதனை செய்யும். எனினும், மத்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் காணாமல் கடன் வசதி மேம்பாட்டில் ஓரளவு தான் செய்ய முடியும். ஆகவே, மத்திய அரசின் கொள்கைகளில் தக்க மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதைப் போலவே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தமிழகத்தில் இடது ஜனநாயக அணி ஆவணத்தில் காணலாம்.

கட்டமைப்பு தொடர்பான இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்

ஆற்றல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படும். சுற்றுச்சூழல் அம்சங்களையும் கணக்கில் கொண்டு மின் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்துவகை ஆற்றல் தோற்று வாய்களும் கணக்கில் கொள்ளப்பட்டு மின் உற்பத்திப் பெருக்கம் திட்டமிட்டு அமலாக்கப்படும்.

மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் துறையில் போதிய முதலீடுகள் அரசாலும் கூட்டு நிறுவனங்கள் மூலமும் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு, தொழில் நிறுவனங்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்கங்களின் பங்களிப்பும் இதில் வரவேற்று பெறப்படும். புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல் தோற்றுவாய்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

போக்கு வரத்து, தகவல் தொடர்பு, ஆற்றல், பாசனம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு துறைகளிலும் அந்நிய இந்திய பெருமுதலாளிகளின் முதலீட்டைப்பெறுவதையே மையப்படுத்தும் அணுகுமுறைக்கு மாறாக அரசே முன்கை எடுக்கும். இதற்கான வளங்களை  மத்திய அரசுடன் வாதாடியும், ஊழலை முற்றிலுமாக ஒழித்தும், ஊழலற்ற வரிவசூல் மூலமும்  கனிமப்பொருள்கள் உள்ளிட்ட தமிழக இயற்கை வளங்களை அரசே பயன்படுத்தியும், வரி அல்லாத வளங்களை திரட்டியும் அரசு செயல்படும்.

போக்குவரத்து, ஆற்றல் துறைகள் உள்ளிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் திறம்பட பராமரிக்கப்பட்டு, அவற்றின் பொதுநல தன்மை பாதுகாக்கப்பட்டு, அவற்றை லாபகரமாக செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிறுவனங்களில் பணிபுரியும் உழைப்பாளி மக்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொருத்தமான வகைகளில் பயன்படுத்தவும் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் நீர்வளங்கள் பயன்பாடும் பராமரிப்பும் தொலைநோக்கு அடிப்படையில் திட்டமிடப்படும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை கணக்கில் கொண்டு, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கான, அவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் குறைக்கவும் உதவும் வகையில்  பேரிடர் மேலாண்மை வலுப்படுத்தப்படும்.

வளர்ச்சிக்கான வளம் திரட்டுதல்: இடது ஜனநாயக மாற்று அணுகுமுறை

மக்களுக்கு நன்மை செய்திட அரசின் ஒதுக்கீடுகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் கூடுதல் வளங்கள் மாநிலங்களுக்கு தரப்படவேண்டும் என்ற போராட்டத்தில் தெளிவாக நிலை எடுக்கப்படும். வரிவசூலில் ஊழலுக்கு முடிவுகட்டி  அரசின் வரிவருமானம் உயர்த்தப்படும். வரி வருவாய் திரட்ட பயனளிக்காத, தேவையற்ற  வரி சலுகைகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.

இடது ஜனநாயக மாற்றின் சில பொது பொருளாதார அம்சங்கள்

குறைந்தபட்சக் கூலியை தொழிலாளர் அமைப்புகளைக் கலந்து நிர்ணயித்து சட்டபூர்வமாக உறுதிசெய்வது, விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதிய மாற்றம் செய்வது, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, உழைப்பாளி மக்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்வது, பொதுவிநியோக அமைப்பை பாதுகாப்பது, வலுப்படுத்துவது: சுற்றுச்சூழலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது, மக்கள் ஒப்புதலுடன் தொழில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது, முதியோர் நலன் காப்பதற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கி அமலாக்குவது போன்றவையும் மாற்றுக் கொள்கைகளின் பகுதியாகும்.

இத்தகைய இடது ஜனநாயக முன்னணியின் அடிப்படை பொருளாதார மாற்றுக்கொள்கைக்கான போராட்டங்கள் இடது ஜனநாயக முன்னணியை கட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: