மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தமிழகத்தில் இடது ஜனநாயக அணி …


ஜி.ராமகிருஷ்ணன்

“கல்லாமை, இல்லாமை, அறியாமை இல்லாத ஏற்றத்தாழ்வற்ற நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் கொண்ட சுதந்திர நாடாக இந்தியா மலர வேண்டும், இதுகாறும் நாம் சந்தித்து வந்த கேடுகளை அகற்றுவது தான் விடுதலை” – நேரு

1947 ஆம் ஆண்டு, செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நேரு ஆற்றிய பிரகடன உரையின் வாசகங்கள் அவை. கடந்த 70 ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது?. சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் விடுதலைப் போராட்டத்தில் முன்நின்று போராடிய கோடானுகோடி மக்களின்  விருப்பங்களும், எதிர்பார்ப்புக்களும் நிறைவேறவில்லை.

கடந்த 70 ஆண்டுகளில் ஏழைகளைப் பரம ஏழைகளாக்கி, பணக்காரர்களை செல்வம் குவிக்க வைக்கும் கொள்கைகளாகத்தான்  மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகள் அமைந்தன. தேசத்தின் மேல்தட்டில் உள்ள ஒரு சதவிகித குடும்பங்கள் நாட்டின் மொத்த சொத்தில் 58.4 சதவிகிதத்திற்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாக உள்ளது. வேலையின்மை பிரச்சனை தீர்க்கப்படாதது மட்டுமல்ல ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இன்றைய அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சிப் போக்குகளுக்கு நம்மை ஆளும் வர்க்கங்களும், இந்த வர்க்கங்களுக்கு ஆதரவாக கடைபிடிக்கப்படும் கொள்கைகளும் தான் அடிப்படை காரணம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்ட ஆவணத்தில், “நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கத்திற்கு அரசும், அதனுடைய செயல்பாடும் அரசினுடைய வர்க்கத் தன்மையும் தான் காரணம்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்க்க சமன்பாட்டை மாற்றுதல்:

“இன்றைய இந்திய அரசு என்பது பெருமுதலாளிகளினால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சி பாதையை பின்பற்றுகிறது, அந்நிய நிதி மூலதனத்தின் ஒத்துழைப்பை அதிகரித்து கொண்டு வருகிறது.”

மேலே சுட்டிக்காட்டப்பட்ட பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசை அகற்றி விட்டு தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவிட வேண்டும் என்பது தான் இந்திய புரட்சியின் அடிப்படையான கடமையாகும். இதைத்தான் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று கட்சி திட்டம் கூறுகிறது.

இதற்கு எவ்வளவு நாளாகும் என்பது இந்த புரட்சியில் பங்கேற்க வேண்டிய உழைக்கும் மக்களை திரட்டுவதைப் பொருத்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால் வர்க்க சமன்பாட்டில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் திரட்டுவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக மாற்றத்தை இந்தியாவில்  உருவாக்கிட வேண்டுமென்பது தான். இதனால் தான் நாம்  மக்கள் ஜனநாயக அணி என்பதையும் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பதையும்  தொலைநோக்குத் திட்டம் என்று கூறுகிறோம். இந்த தொலைநோக்குத் இலக்கை அடைய நமது கட்சி வகுத்த அரசியல் நடைமுறைக் கொள்கை தான் ‘இடது ஜனநாயக அணி’.

இடது ஜனநாயக அணியின் நோக்கம்

மக்கள் ஜனநாயக அணிக்காக, மக்கள் ஜனநாயகப் புரட்சியில் கலந்து கொள்ளக் கூடிய வர்க்கங்களை திரட்டுவது தான் இடது ஜனநாயக அணியின் நோக்கம். தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம், கைவினைஞர்கள், சிறு-குறு முனைவோர்கள், சிறு வியாபாரிகள், வியாபாரிகள் போன்ற பிரிவினர் தான் மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டியவர்கள்.

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெருமுதலாளிகளும், நிலப்பிரபுத்துவ சக்திகளும் தலைமையேற்றுள்ளனர். தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளின் தலைமையில் இயங்குகின்றன. இவற்றிற்கு  உண்மையான மாற்று இடது ஜனநாயக அணி தான். எனவே, இடது ஜனநாயக அணி என்று வரும்போது அதில்  முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கு இடமில்லை. தற்போது இடது ஜனநாயக அணியில் திரட்டவேண்டிய வர்க்கப் பிரிவினர் பெரும்பான்மையாக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் பின்னால் உள்ளனர். அதாவது ஆளும் வர்க்கங்களின் தத்துவப் பிடியில் உள்ளனர். இவர்களை நம் பக்கம் கொண்டு வருவது, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் திரட்டுவது என்பதே நாம் முன்னெடுக்கவேண்டிய அம்சம்.

தேர்தல் போராட்டம் மட்டுமல்ல:

இடது ஜனநாயக அணி என்பது தேர்தலை சந்திப்பதற்கான ஒரு அணியல்ல. இத்தகைய அணியை ஏற்படுத்த பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகத் தளங்கள் என பல்வேரு தளங்களில், நீடித்த தீவிரமான போராட்டங்களைக் கட்டமைக்க வேண்டும். ( தத்துவார்த்த தளம் என்பது பண்பாட்டு தளத்தையும் உள்ளடக்கியது. )

மேற்கண்ட அனைத்து தளங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்க  அகில இந்திய அளவிலும், மாநில  அளவிலும் கோரிக்கைகளை கட்சி உருவாக்கியுள்ளது. 21வது கட்சி காங்கிரஸ் முடிந்த பிறகு 2015ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு “தமிழகத்தில் இடது ஜனநாயக அணி” என்று திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டம் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு  முற்றிலும் மாறுபட்டது. இடது ஜனநாயக அணியை கட்டமைப்பது  கட்சியின் அன்றாட கடமைகளில் ஒன்றாக அமைந்திட வேண்டும்.

இடது ஜனநாயக அணி என்பது தொலைநோக்குத் திட்டம் அல்ல. மாறாக இது உடனடிக் கடமை. கடந்த காலத்தில் இடது ஜனநாயக அணி அமைப்பது ஒரு நீண்ட காலப் பணியாகக் கருதிய தவறான பார்வை கட்சிக்கு இருந்தது என்பதையும் 21வது கட்சி காங்கிரஸ் சுயவிமர்சனமாக சுட்டிக்காட்டியுள்ளது.

அந்நிய மூலதனம், பெருமுதலாளிகள், நிலச்சுவான்தார்கள் ஆகிய வர்க்கங்களின் நலன்களுக்கு ஆதரவான கொள்கையை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கும் போது அந்த அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி வலுவான இயக்கங்களை நடத்திட வேண்டும். இந்த வர்க்கங்களின் நேரடி சுரண்டலை எதிர்த்தும் ஆலைகளில், வயல்வெளிகளில் வர்க்கப் போராட்டத்தை நடத்திட வேண்டும். தற்போது மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்து வரும் நவதாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும் போராட்டம் நடத்திட வேண்டும். உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்திட மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் பாஜக தலைமையிலான அரசையும், சங்பரிவார நடவடிக்கைகளையும் எதிர்த்து இயக்கங்கள் நடத்திட வேண்டும்.

வர்க்கச் சுரண்டலை எதிர்ப்போம்:

கிராமப்புறங்களில், கிராமப்புற பணக்காரர்களாக உள்ளவர்கள் கடந்த காலங்களைப் போல அல்ல. பெரும் நில உடமையாளர்கள், பணக்கார விவசாயிகள், பெரும் ஒப்பந்தக்காரர்கள், பெரும் வர்த்தகர்கள் போன்ற பணக்கார வர்க்கங்களின் கூட்டு உருவாகியிருப்பதை நமது கட்சித் திட்டம் விளக்குகிறது. இவர்கள் அந்த பகுதி மக்களை பெரிதும் சுரண்டுபவர்களாகவும், ஒடுக்குபவர்களாகவும் பல சந்தர்ப்பங்களில் சாதி வெறியைத் தூண்டி மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்துபவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் பிரதானமான பிராந்திய கட்சிகளின் நிர்வாகிகளாகவும் உள்ளனர். இவ்வர்க்கங்களால் சுரண்டப்படும் கிராமப்புற உழைப்பாளிகளை அணிதிரட்டி நடத்த வேண்டிய போராட்டத்தின் மூலமாகத்தான் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை திரட்ட முடியும்.

இடது ஜனநாயக அணியில் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கு இடமில்லை என்றால் பிராந்திய கட்சிகளோடு அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டியக்கம் எதற்காக என்ற கேள்வி இயல்பாக எழும். இடது ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டிய வர்க்கங்களைத் திரட்டுவது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு அமைந்திடும். தமிழகத்தில் இடதுசாரிகள் வலு குறைவாக உள்ள சூழலில் சில முதலாளித்துவக் கட்சிகளோடு போராட்ட அணி அமைப்பதும், பொது மேடைகளை அமைப்பதும் அவசியமாகும். இடது ஜனநாயக அணி என்ற நோக்கத்தை அடைய அவ்வப்போது இத்தகைய உத்திகளை மேற்கொள்ள வேண்டும். நாம் ஏற்படுத்திய மக்கள் நலக் கூட்டியக்கமே  இடது ஜனநாயக அணி அல்ல. மாற்று சாத்தியம் என்பதை முன்வைத்து உழைக்கும் மக்களின் திரட்டுவதற்கான முயற்சிகளில் ஒன்று.

தேர்தல் உத்திக்கான முக்கிய அம்சங்கள்:

இடது ஜனநாயக அணி தேர்தலுக்கான அணி இல்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தியின் முக்கிய அம்சங்கள் என்ன? இடது ஜனநாயக அணிக்காக போராடுகிற அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைகள் மீது பிராந்திய கட்சிகளோடு இணைந்து கூட்டியக்கம் நடத்திட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழலில் பிராந்திய கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டிற்கும் செல்லலாம். இத்தகைய உடன்பாடு கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.

  1. கட்சி நலனைப் பாதுகாத்திட,
  2. இடது ஜனநாயக அணியைத் திரட்டிட பயன்படும் என்றால் பிராந்திய கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டிற்கு செல்லலாம்.

இத்தகைய உடன்பாடு 17வது கட்சிக் காங்கிரஸ் சுட்டிக்காட்டிய ஐக்கிய முன்னணி உத்தியின் அனுபவத்தை கணக்கில் கொண்டே செய்திட வேண்டும்.

கூட்டு இயக்கங்கள்:

போராட்டத்தின் மூலமாக இடது ஜனநாயக அணியை கட்டுவதற்கான போராட்டத்தில் எத்தகைய சக்திகளை பங்கேற்கச் செய்திட வேண்டும். சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்-லிபரேசன்), எஸ்.யு.சி.ஐ.(சி) ஆகிய இடதுசாரி கட்சிகளும், இக்கட்சிகளின் தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளும் இணைந்து கூட்டுப்போராட்டத்தை நடத்திட வேண்டும்.

மேற்கண்ட சக்திகள் மட்டுமல்ல இடதுசாரி குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள் பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடக்கின்ற சோசலிச கருத்தில் ஆர்வமுள்ளவர்கள், மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகப்பூர்வமான பிரிவினர், மலைவாழ் மக்கள், தலித் மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினரின் ஜனநாயகப் பூர்வமான அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகளுக்காக போராடக் கூடிய சமூக இயக்கங்கள் மற்றும் மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமாக செயல்படக் கூடிய தொண்டு நிறுவனங்கள் ஆகிய சக்திகளை எல்லாம் ஒன்றிணைத்து இடது ஜனநாயக அணி அமைப்பதற்கான போராட்டத்தை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் மேற்கண்ட இடதுசாரி கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சியினால் இணைத்து சில இயக்கங்களை நடத்தியுள்ளோம். இக்கட்சிகளின் தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளை உள்ளடக்கி “தமிழக மக்கள் மேடை” என்ற மேடையை உருவாக்கினோம். அந்த மேடை போராட்டத்தை நடத்துவதற்கான கோரிக்கை பட்டியலையும் உருவாக்கியது. தாமதமாக உருவான இந்த மேடையின் சார்பில் நேரடி இயக்கத்திற்கு இதுவரை செல்ல இயலவில்லை.

கூட்டு இயக்கத்திற்கு அப்பால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கட்சி தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்தும் தனியான இயக்கங்களும் இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வெகுமக்களை திரட்டுவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதி தான்.

இடதுசாரி கட்சிகளின் தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளின் ஒற்றுமைப்படுத்தி தமிழக மக்கள் மேடையின் சார்பாக இயக்கம் நடத்துவதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளை இணைத்து கூட்டு இயக்கத்திற்கும் செல்ல வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு வேலையின்மைக்கு எதிராக ஒரு கூட்டு இயக்கத்தை நடத்தினோம். அது நல்ல தாக்கத்தையும் உருவாக்கியது. அவ்வாறு இடது ஜனநாயக அணி முன்வைத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் கூட்டு இயக்கங்களை நடத்திட வேண்டும்.

இடது ஜனநாயக அணி முன்வைக்கும் கோரிக்கைகளை வென்றெடுக்க களப்போராட்டத்தை நடத்துவதோடு இப்போராட்டங்களில் பங்கேற்கின்ற, பலன்பெறுகின்ற மக்கள் மத்தியிலும் கருத்தியல் போராட்டத்தையும் நடத்திட வேண்டும்.

கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் கருத்தியல் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்திட வேண்டும். இடது ஜனநாயக அணி முன்வைத்திடும் அரசியல், பொருளாதார, கருத்தியல், சமூக பிரச்சனைகள் மீது மக்கள் மத்தியில் கருத்தியல் ரீதியில் போராட்டத்தை நடத்தி இடது ஜனநாயக அணியினுடைய திட்டத்தினால் தான் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் உள்ள மக்களுக்கு உணர்த்துவதன் மூலம் தான் அவர்களை நம் பக்கம் திரட்ட முடியும். அதன் மூலமே வர்க்க சமன்பாட்டில் மாற்றத்தை உருவாக்க முடியும்.



One response to “தமிழகத்தில் இடது ஜனநாயக அணி …”

  1. […] முயற்சிகளுடன் சேர்த்து, இடது ஜனநாயக அணி   கருத்தாக்கங்களை    விளக்கியுள்ளார் தோழர் […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: