மார்க்சிஸ்ட் இதழின் ஏப்ரல் அச்சில் கிடைக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் மகாராஷ்டிர விவசாயிகள் மேற்கொண்ட நெடும்பயணம் குறித்த கட்டுரை இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது.
லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படக் காரணமாக அமைந்த நவ தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான, மிக முக்கியமான எதிர்த்தாக்குதலாக அந்த நெடும்பயணம் அமைந்தது. ஒரே நாளில் நிகழ்ந்துவிட்ட அதிசயமல்ல. போராட்டத் தயாரிப்பும், அதன் வீச்சும் குறித்து நாம் கற்பது அவசியம். அதற்கு ஏதுவான கட்டுரையை, தோழர் அசோக் தவாலே எழுதியுள்ளார், தோழர் ரமணி மொழிபெயர்த்துள்ளார்.
பிரண்ட் லைன் இதழில் வெளியான, ஜான் பெல்லாமி பாஸ்டர் (மன்த்லி ரிவ்யூ ஆசிரியர்) நேர்காணலில் ஒரு பகுதி இந்த இதழில் இடம்பெறுகிறது. இதனை ராமச்சந்திர வைத்தியநாத் மொழியாக்கம் செய்துள்ளார். சூழலியல் குறித்த மார்க்சிய பார்வையைச் செழுமைப்படுத்திக்கொள்ள இந்த நேர்காணல் உதவிடும்.
சீனத்தில் சமீபத்தில் நடந்துவரும் மாற்றங்கள், குறிப்பாக 19வது தேசிய மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தை புரிந்துகொள்ளும் நோக்கிலான கட்டுரையை தோழர் இரா.சிந்தன் எழுதியிருக்கிறார். புதிய காலகட்டத்திற்குள் நுழையும் சீனத்தின் அறிவிப்பை விளக்கி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதப்பட்டது, இக்கட்டுரை மேலும் சில புதிய கருதுகோள்களை அறிமுகப்படுத்திடும்.
கட்சித்திட்டத்தை விளக்கும் தொடரின் அடுத்த பகுதியை தோழர் என்.குணசேகரன் எழுதியுள்ளார். ‘மக்களே இறையாண்மை கொண்டவர்கள்‘ என்ற கட்டுரை மக்கள் ஜனநாயகத்திட்டத்தின் லட்சியப் பார்வையை புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவியாக அமையும்.
குறிப்பிடத்தக்க விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் காலமானார். அவரது அறிவியல் பங்களிப்பை புரிந்துகொள்ளும் வகையில் ‘கடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங்‘ என்ற கட்டுரை இவ்விதழில் இடம்பெற்றிருக்கிறது. இக்கட்டுரையை தோழர் ப.கு.ராஜன் எழுதியிருக்கிறார்.
கார்ல் மார்க்ஸ் 200, கொண்டாட்டங்கள் நிறைவடையவுள்ள சூழலில், வரும் மே 5 ஆம் தேதி தமிழகமெங்கும் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. மே.4 ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் மையங்களில், மார்க்ஸ் குறித்த வாசிப்பு கூடுகையை நடத்த திட்டமிட்டுள்ளனர். கட்சியின் ஒவ்வொரு கிளையும் இந்த நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தோழர் லெனின் எழுதிய கட்டுரையின் சுறுக்கம் இவ்விதழில் தரப்பட்டுள்ளது. தோழர் வீ.பா.கணேசன் தமிழில் கொடுத்துள்ளார்.
இக்கட்டுரையின் முழுமையான வடிவம் இணையத்தில் கிடைக்கும். ஒலி வடிவிலும் கிடைக்கும் என்பதால் கூடுகைகளில் வாசிப்பு ஒலிக்கோப்பை இசைக்கவிடவும் உதவியாக அமைந்திடும். ஒவ்வொரு மார்க்சிஸ்ட் இதழ் குறித்தும் விமர்சனங்கள், கருத்துக்கள், வாசகர் வட்டங்களின் விவாதங்களைத் தொகுத்து அனுப்புவதும் எதிர்பார்க்கிறோம். மார்க்சிஸ் இதழை செலுமைப்படுத்த வாசகர் கருத்துக்கள் மிகவும் பயன்படும்.
- ஆசிரியர் குழு
Leave a Reply