(குரல் : ஆனந்த் ராஜ் – ஆடியோ எடிட்டிங் : மதன் ராஜ்)
உ. வாசுகி
மத்திய பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படுகிற அரசு. பிரதமர் மோடி துவங்கி, குடியரசு தலைவர், துணை தலைவர் வரை பலரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள். மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் முழு நேர ஊழியர். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இவர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ்.சின் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள். இந்து மதத்தையும், இந்து சமுதாயத்தையும், இந்து கலாச்சாரத்தையும் வளர்த்தெடுக்க இதய சுத்தியுடன் உறுதி ஏற்றிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைய தம் வாழ்நாள் முழுவதும் தன்னலமற்று செயல்படுவதாக சபதம் செய்திருக்கிறார்கள். தாங்கள் இந்து ராஷ்டிரத்தின் ஒரு பகுதி என்பதும் அதன் ஓர் அம்சம்.
அரசியல் சாசனமோ மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. ஜனநாயகத்தை முன்வைக்கிறது. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்போம் என்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. அதாவது சாதி, மத, பாலின பேதமில்லை என்கிறது. கூட்டாட்சி கோட்பாட்டை வெளிப்படையாக ஆதரிக்கிறது. ஆனால் இவர்களின் இந்துத்வா, மதவெறியுடன், பிராமணிய கலாச்சாரத்தை முன்வைக்கிறது. பெண்ணின் சமூகப் பங்களிப்பை நிராகரித்து, பெண்ணுரிமையை, குடும்பத்தைக் குலைக்கும் போக்காக சித்தரிக்கிறது. வலிமையான மைய அரசு, பலவீனமான மாநிலங்கள் என்பதே சங் பரிவாரத்தின் நிலைபாடு. சர்வாதிகாரி ஹிட்லர்தான் இவர்களின் ஆதர்ஷ புருஷர் என்றால், இவர்களுக்கு சாதகமாக இல்லையெனில் ஜனநாயக உரிமைகளை எந்த அளவு மிதிப்பார்கள் என்று நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது, அரசியல் சாசனத்தின் அடிப்படை மாண்புகளுடன், இந்துத்வா எவ்விதத்திலும் ஒத்துப் போகவில்லை. எனவே, தங்கள் கருத்துக்களோடு வேறுபடுகிற அரசியல் சாசன அம்சங்களைத் திருத்துவதற்கும், சீர்குலைப்பதற்கும் முயற்சிக்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், அரசியல் சாசனத்தை மறு பரிசீலனை செய்ய, வெங்கடாச்சலையா கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு எழுந்த பின்னணியில், அது கிடப்பில் போடப்பட்டது.
குறிப்பாக, இந்தியாவில் குடியிருக்கும் எவரும் இந்திய குடியுரிமை பெறலாம்; வேறு தகுதி எதுவும் தேவை இல்லை என்பதை மாற்றி, மத அடிப்படையில் குடியுரிமை என்ற பிரிவைக் கொண்டு வர திட்டமிடுகின்றனர். அசாமில் முன்னுக்கு வரும் சில பிரத்தியேக சிக்கல்களைப் பயன்படுத்தி, மத அடிப்படையில் குடியுரிமை என்பதை முதலில் அம்மாநிலத்தில் அமலாக்க முயற்சிக்கின்றனர்.
2015 குடியரசு தின அரசு விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோஷலிசம் என்ற வார்த்தைகள் இல்லாத அரசியல் சாசன முன்னுரையே வெளியிடப்பட்டது. அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே, ஒவ்வொருவரும் மத அடையாளத்தையே முன்னிறுத்த வேண்டும்; அதற்காக அரசியல் சாசனம் மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு பாஜக இருக்கிறது என்று பேசினார். (பின்னர் வருத்தம் தெரிவித்தார்) உபி முதல்வர் ஆதித்யநாத், அரசியல் சாசனத்தின் ஓர் அடிப்படை அம்சமான மதச்சார்பின்மை குறித்து, “தேச விடுதலைக்குப் பின் கூறப்பட்ட மிகப் பெரிய பொய்” என்றார். அறிவியல் கண்ணோட்டத்தை சாசனம் முன்வைக்கும் போது, அதற்கு நேர்மறையான புனைகதைகளை உண்மை என்பதாக பிரதமர் உள்ளிட்டோர் பகிரங்கமாகப் பேசுகின்றனர்.
நான்காண்டுகளில் நடந்தது என்ன?
அரசியல் சாசன சட்டகத்தின் கீழ் வரும் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ். நபர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நீதித்துறை, தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் கூட, இந்த நோக்கத்துடன் தலையீடுகள் நடக்கின்றன. இதை, பொதுவாக இதர ஆளும் கட்சிகள் செய்வதுடன் ஒப்பிடக் கூடாது. சங் சித்தாந்தத்தை இந்நிறுவனங்கள் மூலம் பரப்பும் நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். இதைக் கேள்வி கேட்கும் எவரும் தேச துரோகி என முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப்படுகின்றனர்.
நாடாளுமன்றம் பல விஷயங்களில் ஓரம் கட்டப்படுகிறது. அவசர சட்டங்கள் மூலம் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலை சமாளிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதா இதற்கோர் உதாரணம். இடது மற்றும் முற்போக்கு சக்திகளால் மசோதா கொண்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்ட உடன், மாநிலங்கள் அவரவர் சட்டமன்றத்தில் இதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றாக்கி, பாஜக ஆளும் மாநிலங்களில் அதனை முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது நினைவிருக்கும். ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு; ஜவுளித்துறை, நிலக்கரி சுரங்கம் குறித்த அவசர சட்டத்தை மறுபிரகடனம் செய்தது; பிரதமரின் தலைமை செயலாளர் நியமனம் போன்றவை இத்தகைய அவசர சட்ட உதாரணங்களில் சில. முக்கிய மசோதாக்களை, பண மசோதாவாகக் கொண்டு வந்து மக்களவையிலேயே நிறைவேற்றுவது இக்கால கட்டத்தில் நடந்திருக்கிறது.
முதன்முறையாக பெரிய விவாதத்துக்கு இடமளிக்காமல் நிதி நிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டது. மக்களின் வரிப்பணத்தை எதற்கெல்லாம் ஒதுக்கீடு செய்வது என்ற முக்கியமான விவாதத்தை நடத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு இல்லை. அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், விதிகள் இடம் கொடுத்தாலும், பாஜகவைச் சேர்ந்த அவை தலைவரால் அனுமதி மறுக்கப்பட்டது; அவை ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் தீர்மானம், மாநிலங்களவை தலைவரால், அதன் தகுதி குறித்து முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இல்லாத போதும், டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
மாநில அதிகாரம்:
இக்காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட பெரும்பாலான ஆளுநர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், பாஜக அரசின் தந்திரங்களை, விருப்பத்துடன் நிறைவேற்றிக் கொடுத்தார்கள். டெல்லி மற்றும் புதுச்சேரியில் இது வெளிப்படையாகவே தெரிந்தது. உச்சநீதிமன்றம், துணை நிலை ஆளுநர்கள், அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே செயல்பட வேண்டும் என்று அளித்த தீர்ப்பு பாஜகவின் திட்டத்துக்குத் தற்போது தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கோவா, மணிப்பூர், மேகாலயா, கர்நாடக மாநிலங்களில் ஆளுநர்கள், பாஜகவை ஆட்சி அமைக்க முதலில் அழைத்தது, ஆட்சி அமைக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கர்நாடகத்தில் அப்படியும் ஆட்சியை அமைக்கமுடியவில்லை என்பது வேறு விஷயம். பாஜகவின் குதிரை பேரத்துக்கு (இதர கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க) ஆளுநர்களின் தலையீடு உதவியிருக்கிறது. தமிழகத்தில் ஆளுநர், இணை அரசாங்கமாக செயல்பட முயற்சித்து வருகிறார்.
மத்தியிலிருந்து மாநிலங்களின் நிதி தேவையைப் பூர்த்தி செய்ய, இருப்பதைப் பகிர்ந்தளிக்க அரசியல் சாசன பிரிவு 280ன் கீழ் நிதிக் கமிஷன் உருவாக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்தியிலிருந்து மாநிலங்களுக்கும், மாநிலங்களுக்கு இடையேயும் நிதியை இது பகிர்ந்தளிக்கும். அதாவது, மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி கொடுப்பது கருணை அடிப்படையில் அல்ல; அரசியல் சாசனம் அளித்திருக்கும் கடமை என்பதை சரியாகப்புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் 15வது நிதிக் கமிஷனின் வரையறையே, மாநிலங்களுக்கான நிதி பகிர்வைக் குறைப்பதாக உள்ளது. மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட நிதி உதவி செய்யத்தான் வேண்டுமா என்ற கேள்வியைக் கமிஷன் எழுப்பியிருக்கிறது. ஏற்கனவே, ஊதிய கமிஷன் பரிந்துரை நிறைவேற்றம், ஜி.எஸ்.டி. அமலாக்கம், சமூக செலவினங்கள், இன்னும் பொதுவிநியோகமுறைக்கு அளிக்க வேண்டிய மானிய விலையிலான பொருட்கள் மத்திய அரசால் குறைப்பு போன்ற பல காரணங்களால் மாநில நிதி நிலை தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, நிதிக் கமிஷனின் இந்தக் கேள்வி வரப்போகும் ஆபத்தான நிலையைப் பிரதிபலிக்கிறது.
ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதும் ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரத கருத்தியலின் அடிப்படையே. இதன் காரணமாகத்தான் மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. இந்தி மறைமுகமாகத் திணிக்கப்படுகிறது. ஆதிச்சநல்லூர் துவங்கி கீழடி வரையிலான அகழ்வாராய்ச்சிகள் தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன. கீழடியின் 5,000 அகழ் பொருட்கள் சமயச்சார்பற்ற ஒரு சமூக அமைப்பு இருந்ததை எடுத்துக் காட்டுகிறது. சங்கின் நிலைபாட்டுக்கு இது உகந்ததல்ல என்பதால், ஆராய்ச்சிக்குத் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போடப்படுகிறது. இத்திட்டத்தின் அதிகாரி இடமாற்றம் செய்யப்படுகிறார். 5,000 பொருட்களில் இரண்டே இரண்டு மட்டுமே (அதன் காலப்பகுதியை அறிவியல் பூர்வமாக நிர்ணயிப்பதற்கான) கார்பன் டேட்டிங்குக்காக ஏற்கப்பட்டது. அதே நேரத்தில் ஒன்றுமே கிடைக்காத குஜராத் அகழ்வாராய்ச்சிக்கு நிதி தொடர்கிறது.
சிறுபான்மை மக்கள் மீதான கொடூர தாக்குதல்கள்:
உள்நாட்டு எதிரிகளாக முஸ்லீம், கிறித்துவர், கம்யூனிஸ்டுகள் கோல்வால்கரால் அடையாளம் காட்டப்பட்ட பின்னணியில், அவர்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. கம்யூனிஸ்டுகளின் வலுவான தளங்களான கேரளா, திரிபுரா, மேற்குவங்கத்தில் கூடுதல் தாக்குதல்களும், கொலைகளும் நடக்கின்றன.
2014-2017 கால கட்டத்தில் வகுப்புவாத வன்முறை 28% அதிகரித்திருக்கிறது. இக்கால கட்டத்தில் 3,000 வன்முறை நிகழ்வுகள் நடந்து, அவற்றில் 400 உயிர்கள் பறிக்கப்பட்டு, 9,000க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பசு குண்டர்களால் 78 தாக்குதல் சம்பவங்களும், அடித்துக் கொலை செய்வதும் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில் 29 பேர் கொல்லப்பட்டு, 273 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இதில் 148 பேர் படுகாயம். இதில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லீம்கள், மற்றவர்கள் பெரும்பாலும் தலித்துகள். லவ் ஜிஹாத்; கட்டாய மதமாற்றம்; மக்கள் தொகையில் முஸ்லீம்கள் அதிகரிப்பு; தேசபக்தி இல்லை; பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவு; சர்வதேச இசுலாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு; மாட்டுக்கறி பிரச்னை என்று பல அடையாளங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரங்கேற்றப்படுகிறது. லின்ச்சிங் என்று சொல்லப்படும் கும்பலாகத் திரண்டு அடித்து கொலை செய்யும் சம்பவங்களைத் தடுக்க தனி சட்டம் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லும் அளவுக்கு இவை நிகழ்ந்திருக்கின்றன. தற்போது, குழந்தை கடத்தல் என்ற வதந்தியின் அடிப்படையிலும் அடித்துக் கொல்லும் வன்முறைகள் நடக்கின்றன.
கிறித்துவர்களும் சங் பரிவாரத்தின் வன்முறைக்கு இலக்காகி வருகின்றனர். தேவாலயங்கள், பாதிரியார்கள், கிறித்துமஸ்/ஈஸ்டர் கொண்டாட்டங்களின் மீது சுமார் 700 தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களில் இவை நடந்தன. இந்து முன்னணி ஆட்கள் பல்வேறு சொந்த, வியாபார காரணங்களால் கொல்லப்படும் போதெல்லாம் அவற்றை அரசியல் படுகொலை என்று முன்வைத்து, சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுக்கும் வாய்ப்புகளாக அவற்றைப் பயன்படுத்துவதில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் திறமைசாலிகளாக இருக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில், மார்க்சிஸ்ட் கட்சி உரிய தலையீடு செய்திருக்கிறது.
கத்துவாவில் 8 வயது சிறுமிக்கு நடந்த குரூரமான பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்கான காரணங்களில், அப்பகுதி முஸ்லீம்களை அங்கிருந்து விரட்டும் நோக்கமும் ஒன்று. அதாவது பாலியல் வல்லுறவு, மதவெறி ஆயுதமாக மாற்றப்படுகிறது. இதை மேலும் வலுவாகச் செய்ய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை குறுக்கே வருகிறது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மனுநீதிக்கு முரணாக இருக்கிறது. அரசியல் சாசனம் வந்த போதே, ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரின் தலையங்கம், இது என்ன சாசனம், மனு ஸ்மிருதியை விட சிறந்தது வேறு உண்டா என்று எழுதப்பட்டது. கோல்வாலகர், மனுநீதி தான் இந்துக்களின் சட்டம் என எழுதினார். தீன்தயாள் உபாத்யாயா, அரசியல் சாசனம் மேற்கத்திய பாணியில் இருக்கிறது; நமது வாழ்க்கை முறையோடு இணையவில்லை எனக் குறிப்பிட்டார். இந்தக் கண்ணோட்டம் மோடி ஆட்சியில் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
குற்றம் நடந்த உடன், சமூக நிர்ப்பந்தத்தால் மோடி அரசு சில லேசான கண்டன வார்த்தைகளைப் பட்டும் படாமல் சொல்கிறது. ஆனால், மறைமுகமாக குற்றவாளிகளை ஆதரிக்கிறது. கத்துவா குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் அம்மாநில பாஜக அமைச்சர்கள் பங்கேற்றனர். குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு, அம்மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. முகமது இக்லாக்கைக் கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் இறந்த போது, அவருக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. முஸ்லீம்களை அடித்துக் கொல்வது தேசபக்தி என்பதே இதன் மறைபொருள். இந்து சமூகத்துக்காக இதய சுத்தியுடன் பணி செய்வது இது தான். ஜாமீனில் வெளிவந்த 11 பேருக்கும் மாநில பொது துறை நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில், குற்றவாளிகளுக்கு மாநில பாஜக அமைச்சர் மாலை போட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்துத்வா பயங்கரவாதிகள் பலரும் விடுதலை செய்யப்படுகின்றனர். மாலேகாவ்ன், மெக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குற்றங்கள், குஜராத் கோத்ரா சம்பவத்துக்குப் பின் நடந்த கொடும் குற்றங்களில் சிக்கிய பலர், அரசு தரப்பு பலவீனமாக வழக்கு நடத்தியதன் காரணமாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்திய மக்கள் தொகையில் மதவழி சிறுபான்மையினர் 21% என்றாலும், 2018-2019 நிதி நிலை அறிக்கையில், சிறுபான்மை விவகார அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 0.19% தான். சச்சார் கமிட்டி பரிந்துரைகளும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளும் அரசின் நிகழ்ச்சிநிரலை விட்டு விலகி வெகுநாட்களாகின்றன.
ஜம்மு காஷ்மீரில், காஷ்மீர் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி என்பதும் சேர்ந்தே அரசின் தவறான அணுகுமுறையை உருவாக்கியிருக்கிறது.
கருத்து சுதந்திரம்:
அரசியல் சாசனத்தின் பிரிவு 19 கருத்து சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளாக அளிக்கிறது. ஆனால் மோடி ஆட்சியில் விமர்சனமும், மாற்றுக் கருத்தும் பாசிச பாணியில் அடக்கி ஒடுக்கப்படுகிறது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படும்போது விமர்சித்தாலும் அடக்குமுறைதான். மாற்றுக் கருத்தை வலுவாக முன்வைத்தார்கள் என்பதற்காக கல்புர்கி முதல் கவுரி லங்கேஷ் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கருத்து சுதந்திரம் (free speech) அடக்கப்படும் அதே நேரத்தில் வெறியூட்டும் சங் பரிவாரத்தின் பேச்சுக்களுக்கு (hate speech), அது கொலை மிரட்டலாக இருந்தாலும் சரி, தாராள சுதந்திரம் உண்டு. தேசத் துரோக சட்டப்பிரிவுகள் மாற்றுக் கருத்து சொல்வோர் மீது போடப்படுகின்றன. பிரதமரை விமர்சிக்கக் கூடாது; அரசை விமர்சிக்கக் கூடாது; கண்டிக்கக் கூடாது; இவற்றை செய்தாலே தேச விரோதம் என்று முத்திரை குத்தப்படுகிறது. இந்து ராஷ்டிரம் நிச்சயமாக நாம் கனவு காணும் இந்தியா அல்ல. அங்கே தொழிலாளி வர்க்க நீதிக்கு இடம் இல்லை. சமத்துவம் கிடையாது. சாதிய அடுக்குகள்தான் தீர்ப்பு சொல்லும்.
இந்நிலை மாற, செய்ய வேண்டிய அரசியல், ஸ்தாபன கடமைகள் பல உண்டு. அதன் ஒரு பகுதியாக, பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதை முதன்மை கடமையாகக் கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை சீர்குலைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்த வேண்டும்.
ஆதாரம்: சிபிஐஎம் வெளியீடு – ”சீர்குலைக்கப்படும் அரசியல் சாசனம்”
Leave a Reply