மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


காவி மயமாகும் கல்வி


ச. லெனின்

“நடை, உடை, பாவனைகளில் ஆங்கிலேயரைப் பின்பற்றக்கூடிய ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தை புதிய கல்விமுறை கொண்டிருக்கிறது”  என்றான் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்க்கான கல்வி திட்டத்தை வடிவமைத்த மெக்காலே. இன்று ஆர்.எஸ்.எஸ்.தனது திட்டத்தின் அடிப்படியில், அதன்  இந்து ராஷ்ட்ரா கொள்கையை, பிஞ்சு உள்ளங்களில் திணிக்கும் வகையில்  பாடத்திட்டத்தை  மாற்றி வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தங்கள் நிர்வாகத்தை நடத்த இடைநிலை அதிகாரிகளையும், போதுமான உயர்நிலை அதிகாரிகளையும் உருவாக்குவதே அவர்களுடைய  கல்வி திட்டத்தின் கூடுதல் அம்சமாக இருந்தது. விடுதலைக்கு பின்பும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ற வகையில், அதிகார வர்க்கத்தையும், குமாஸ்தாக்களையும், உழைப்பாளர்களையும் உருவாக்குவதையே விடுதலைக்கு பிந்தைய கல்வி கொள்கைகள் கொண்டிருந்தன.  ஒருசில பிரத்யேக கல்விநிலையங்கள் மட்டும் சில பிரத்யேக கல்வி முறையை பயிற்றுவித்ததை தவிர மற்றவை எல்லாம் இதையே செய்துவந்தன.

ஆனபோதும், ஆளும் வர்கத்தின் தேவையை கருத்தில் கொண்டேனும் கல்வி பரவலான மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. சாதி போன்ற சமூக கொடுமைகளாலும், மண்டிக்கிடந்த பழமைவாதங்களாலும் முடங்கிக்கிடந்த பலரின் கல்வி வாய்ப்பு திறக்கப்பட்டது.  குறிப்பாக சமூக சீர்திருத்த இயக்கங்களால் ஓரளவு விழிப்புணர்வு பெற்றிருந்த தென் மாநிலங்கள் இதில் கூடுதலாக பயனடைந்தன. துவக்கத்தில் பள்ளிக்கல்விக்கும், தொழிற்கல்விக்கும் கூடுதலாக கவனம் கொடுக்கப்பட்டது. பிறகு நாட்டின் சுயசார்பு தேவையின் அடிப்படியில் ஆய்வித்துறைக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஐ.ஐ.டி களும், இதர பல உயர் கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.

“மனிதனை மனிதன் சார்ந்துள்ள சமூகத்தில் மக்கள் அனைவருக்கும் வாழ்வியல் தேவைகள் உள்ளன. இத்தேவைகளை பெறுவதற்க்கான வாய்ப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும்.  அவ்வாய்ப்பு தொடர்ந்து வளர வேண்டும்; அதன் மூலம் அதற்க்கான பொது கருத்து உருவாக வேண்டும். இதுவே சமூக தொடர் வளர்ச்சியாகும்” இப்படியான புரிதலோடு இளம் தலைமுறையினரை சமூக அறிவு ஜீவிகளாக (organic intelectual) உருவாக்குவதே உயர்கல்வியில் முக்கிய நோக்கம் என்கிறார் பிரபாத் பட்நாயக். ஆனால்  இதுவரை இந்திய வரலாற்றில் இத்தகைய புரிதலோடு கல்விக்கொள்கை வகுக்கப்படாத போதும், கல்வியின் வீச்சால் பல அறிவு ஜீவிகளும், சிந்தனையாளர்களும் உருவாகினர்.

1990 களுக்கு பிறகு இந்தியா பின்பற்றும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாகவும், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளை பின்பற்றியதாலும் நிதி பற்றாக்குறையைஅது சந்தித்தது. இதன் நேரடி விளைவாக கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நல செலவுகள் வெட்டப்பட்டு, கல்வி உள்ளிட்ட சேவைகள் தனியார்மயம் ஆனது. அது சமூக அறிவு ஜீவிகள் உருவாவதையே முடக்கி, ஆளும் வர்கத்தின் வளர்ச்சிக்கு தேவையான உழைக்கும் கூட்டத்தை மட்டும் உருவாக்கும் வேலையை செய்கிறது.

“பசியுள்ளவன் புத்தகத்தை நாடுவான்” என்றார் பெர்ட்லாட் பெர்ச். அவன் நாடுகின்ற புத்தகம் அவனை பசியோடு வைத்திருக்கும் சமூக காரிணிகளை சொல்வதாக இருக்க வேண்டும். ஆனால் அவன் நாடுகின்ற புத்தகத்தில், அவனது பசிக்கு காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவம் தான் என்று சொல்லும் வகையில் பாட திட்டங்களை மாற்றுகிறது ஆளும்  ஆர்.எஸ்.எஸ்.- பி.ஜே.பி. அரசு.

கல்வியை காவி மயமாக்குவதுதான் பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-இன் முக்கியமான நோக்கம். வலுவான ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்டவர்களையே இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற நாட்டின் பல முக்கியமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமை பொறுப்பிற்கு நியமிக்கபட்டுள்ளனர். இந்திய வரலாற்றை திருத்தி எழுத 2016 ஆம் ஆண்டு ஒரு குழுவை பிஜேபி அரசு அமைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்து புராணங்களுக்கு ஏற்றபடி இந்திய வரலாற்றை மாற்றி எழுத அவர்கள் முயல்கின்றனர். மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்கும் இந்தியாவை சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்ட்ராவாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் திட்டமிடுகிறது. எனவே, உயர் கல்வியையும், ஆய்வு புலத்தையும் முழுமையாக வகுப்புவாத நிலைக்கு அது மடைமாற்றுகிறது.  இதை எதிர்க்கும் மாணவர்கள் ஒடுக்கப்படுவதோடு, அவர்களின் எதிர்காலமே பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் நிர்வாக ரீதியாகவும் கடுமையாக பழிவாங்கப்படுகிறார்கள். உதாரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்தின் முனைவர் பட்ட ஆய்வு எவ்வித காரணமுமின்றி சமர்ப்பிக்கவே அனுமதிக்கப்படவில்லை.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்திய உயர் கல்வி ஆணையச் (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956-ஐ திரும்பப் பெறுதல்) சட்டம் 2018 என்கிற வரைவு சட்டத்தை வெளியிட்டுள்ளது.
இச்சட்டம் நிறைவேற்றப்படுமானால் மாநில சட்டமன்றங்கள் மூலம் இதுநாள்வரை உருவாக்கப்ட்ட பல்கலைக்கழகங்களுக்கான சட்டங்கள் அனைத்தும்  காலாவதியாகிவிடும். இது நமது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைகளையே மாற்றும் செயலாகும். இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். அதோடு மட்டுமல்லாமல் உயர்கல்வியை முழுமையாக சந்தையிடம் ஒப்படைக்கும் சரத்துக்களும் இந்த வரைவு சட்டத்தில் உள்ளது.

தாராளமான தனியார்மயம்

உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6 சதவிகிதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்பது 1964-66ல் கோத்தாரி கல்விக்குழு பரிந்துரைத்த காலம் தொட்டு முன்வைக்கப்படும் கோரிக்கையாகும். 2013-14 ஆண்டு 0.71 சதம் மட்டுமே ஜிடிபி-யிலிருந்து கல்விக்கு ஒதுக்கப்பட்து. பிஜேபி அரசோ அதை மேலும் படிப்படியாக குறைத்து 2018-19 ஆம் ஆண்டு ஜிடிபி-யிலிருந்து வெறும் 0.45 சதத்தை மட்டுமே கல்விக்காக ஒதுக்கியது. பொதுக் கல்விக்கான நிதியை தொடர்ந்து வெட்டிச் சுருக்கி, கல்வியில் தனியார் மயத்தை வேகமாக அமல்படுத்துகிறது.

30 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் உள்ள பள்ளியை மூட அரசு வலியுறுத்துகிறது.  பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிக் கல்வியை வேகமாக தனியாரிடம் தாரை வார்க்கும் நிகழ்வுகள் தொடர் கதையாகியுள்ளது. ராஜஸ்தான் அரசு 300 அரசுப் பள்ளிகளை தனியார் மற்றும் பொதுக்கூட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மஹாராஷ்ட்ரா அரசு 4,093 அரசு பள்ளிகளை மூடியுள்ளது. மேலும் மஹாராஷ்ட்ரா அரசு தனியார் கம்பெனிகள் பள்ளிக்கூடங்களை நடத்திட அனுமதிக்கும் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது.

பள்ளிகளில் சத்துணவிற்கான நிதியை குறைத்து குழந்தைகளின் வயிற்றிலடிப்பதில் தொடங்கி, கல்விக்காக அரசு ஒதுக்கும் நிதி ஒவ்வொன்றையும் வெட்டி, தனியாரிடம் தான் கல்வி பெறவேண்டும் என்கிற நிலைக்கு மக்களை தள்ளுகிறது. ஆனால் இதற்கெல்லாம் மாறாக கேரள இடதுசாரி அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வருகின்றனர்.

பக்கோடா விற்பதும் வேலை தான்

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று 2014ம் ஆண்டு தேர்தல் களத்தில் வாக்குறுதி கொடுத்த மோடி, இப்போது பக்கோடா விற்பதும் வேலை தான் என்கிறார்.

ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடியே நாற்பத்தி ஆறு லட்சம் பேர் புதிதாக வேலை தேடும் களத்திற்கு வருகின்றனர். ஆனால் கடந்த 2014 முதல் 2017 அக்டோபர் வரை உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்போ வெறும் 8,23,000 மட்டுமே என்கிறது சர்வதேச தொழிலாளர் ஆணையம். சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது, ஆனால் இந்தியாவோ ஒரு நாளைக்கு 450 பேருக்குத்தான் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. இதே வேகத்தில் போனால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்க சுமார் 77 ஆண்டுகள் ஆகும்.

நாட்டில் 55 சதமானோர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அதிலும் சமூக ரீதியாக பின்தங்கியுள்ள தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் பெரிய அளவில் இருக்கும் இடமும் இதுதான். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய மோடி அதில் ஒரு துளியை கூட செய்யவில்லை. 2014-15 க்கு கிராமப்புற வருமானம் என்பது எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிப் போய் நிற்கிறது. தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கிடைத்து வந்த வேலை வாய்ப்பையும் அரசு தட்டிப் பறிக்கிறது. தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை சரியாக நிறைவேற்ற குறைந்தபட்சம் எண்பதாயிரம் கோடி வரை  தேவைப்படும். ஆனால் அரசு இத்திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியோ  ஐம்பத்தைந்தாயிரம் கோடி மட்டுமே.

பொதுத்தறை நிறுவனங்கள்

இதுவரை ஒரு லட்சத்து தொண்ணுhற்றி ஆறு லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த பத்து ஆண்டுகளில் விற்கப்பட்டதைவிட அதிகமாகும். பொதுத்துறை நிறுவனங்களில்தான் சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எல்லாம் தனியார் மயம் என்கிறபோது சமூக நீதியும் அடிபட்டு போய்விடுகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்கிற கோரிக்கையை கேட்கக் கூட இந்த அரசு தயங்குகிறது.

பொதுத்துறை நிறுவனங்களிலேயே மூன்றில் ஒருபகுதியினர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத்தான் உள்ளனர். தனியார் துறையிலோ 40 முதல் 60 சதம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். நிரந்தர தொழிலாளர்களை விட இவர்களின் ஊதியம் 30 முதல் 50 சதம் வரை குறைவாகும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டே கூறிய போதும் இதை அமல்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

நாட்டின் உழைக்கும் மக்களில் 93 சதமானவர்கள் முறைசாரா தொழிலாளர்களே. குறிப்பாக கட்டுமானம், போக்குவரத்து, விடுதி ஆகிய துறைகளில் முறைசாரா தொழிலார்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புற வறுமை காரணமாக நகர்ப்புறங்களுக்கு பிழைப்பு தேடி வந்தவர்களே ஆவர். கட்டுமான தொழிலாளர்களின் நலன் காக்க கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து சுமார் 37,400 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 9,000 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதிலும் பெரும் பகுதி நிர்வாக செலவுகளே ஆகும்.

சிறிய அளவிளான வேலை வாய்ப்புகளையும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கமும் முடக்கிவிட்டது. இருந்த சிறு குறு தொழிலும் அதனால் கிடைத்துவந்த வேலையும் பறிபோனது. சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேர் 2017 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே வேலை இழந்தனர் என்கிறது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம். அதே ஆண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வேலை இழப்பை மேலும் அதிகப்படுத்தியது.

முதலாளிகளின் அரசு

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் அறுபது சதவீதம் பேர் முப்பத்தி ஐந்து வயதுக்குட்பட்டவர்களாவர். இது தேச வளர்ச்சிக்கான மிகப்பெரிய உழைப்பு சக்தி ஆகும். முதலாளித்துவத்தின் நலன்களுக்காக இந்த இளம் இந்தியர்களுக்கான வாய்ப்பு வசதிகளை அரசு செய்ய மறுக்கிறது.

முதலாளித்துவத்திற்கு எப்போதும் குறைந்த கூலியிலே தொழிலாளர்கள் தேவை. எனவே வேலையில் உள்ள தொழிலாளர்களை போல் பல மடங்கு வேலையற்ற உழைப்பாளர்கள் கூட்டம் இருப்பதையே முதலாளித்துவம் விரும்பும். இந்த வேலையற்ற கூட்டத்தையே தயார் நிலையிலான தொழிலாளர் படை  என்றார் மார்க்ஸ்.

 

பொய்களை கட்டவிழ்த்து, கலவரங்களை அரங்கேற்றி மக்கள் விரோத அரசின் மீதான கோபத்தை மடைமாற்றி தப்பிக்கும் திட்டத்தையே ஆர்எஸ்எஸ், பிஜேபி கையாளும் பாசிச வழிமுறையாகும். பாசிச சக்திகள் பெரு முதலாளிகளின் விருப்பங்களை சுமந்துகொண்டே  தனது அடிப்டைவாத கொள்கையையும் அமலாக்கும். எனவே இந்த இரண்டு அபாயங்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்போது உள்ளோம்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: