மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை!


பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் ஆட்சியிலிருந்து அகற்றுவதே பிரதான கடமை

எடிட்: மதன் ராஜ்

– உ.வாசுகி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய  மாநாடு, ஏப்ரல் 18-22 ஆகிய நாட்களில் தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெற்றது. 758 பிரதிநிதிகளும், 71 பார்வையாளர்களும் பங்கேற்ற இந்த மாநாட்டில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான அரசியல் நடைமுறை உத்தி வரையறுக்கப்பட்டது.

மக்களின் வாழ்வுரிமை மீதும், நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதும் ஆர்.எஸ்.எஸ்./பாஜக கட்டவிழ்த்து விட்டிருக்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவுகளைப் பரிசீலிக்கும் முன்னர், உலகளாவிய நிகழ்வுகளின் பின்னணியில் அவற்றைப் பொருத்திப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தீவிரமாகும் பொருளாதார சுரண்டல்:

2008-ம் ஆண்டு துவங்கிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து உலக முதலாளித்துவம் இன்னும் மீளவில்லை. இதனை எதிர்கொள்ள, பிரச்சனையின் சுமையை மக்கள் மீது சுமத்துவது; ஜனநாயக உரிமைகளைப் பறித்து, எதிர்ப்புகளை ஒடுக்குவது என்ற வழிமுறையை முதலாளித்துவ ஆட்சியாளர்கள் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் கடைப்பிடிக்கின்றனர். இது, மக்கள் மீதான பொருளாதார சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துகிறது. உண்மையில் இந்நிலை எப்படி உருவானது என சற்று திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, உற்பத்தியாகும் பொருட்களை விற்க வழியில்லாத சூழல் உருவான போது, தற்காலிக வாங்கும் சக்தியைக் கடனாக அளிக்க, புதிய வடிவிலான  நிதிசார் சாதனங்களை நவீன தாராளமயம் உருவாக்கியது. வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலை பரவலான போதுதான் 2008-ல் அமெரிக்காவில் நிதிசார் நெருக்கடி உருவாகி, பின்னர் உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாறியது. அதை எதிர்கொள்ள முதலாளித்துவம் எடுக்கும் முயற்சிகள் மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைக்கின்றன. எனவே, நெருக்கடியிலிருந்து மீள, நவீன தாராளமய கொள்கைகளின் அடிப்படையில் முதலாளித்துவம் எடுக்கும் நடவடிக்கைகள் இன்னொரு நெருக்கடியை உருவாக்குகின்றன. மொத்தத்தில் நவீன தாராளமயமே நெருக்கடியில் இருக்கிறது. இந்த நிலை, ஏகாதிபத்திய நாடுகளிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் உருவாக்குகிறது; சமூக பதட்டங்களை ஏற்படுத்துகிறது. வளரும் நாடுகளை மேலும் தீவிரமாக சுரண்டவும் ஏகாதிபத்திய நாடுகளும் பன்னாட்டு முதலாளிகளும் முயல்கிறார்கள்.

இதனால் மக்களின் வாழ்க்கை தரம் சீரழிகிறது. வேலை வாய்ப்புகள் அழிக்கப்படுகின்றன. கிடைக்கும் வேலைகளும் குறைந்த கூலி, தரம் குறைவு, பகுதி நேரம், காசுவல், ஒப்பந்த அடிப்படையில் அமைந்தவையாகவே உள்ளன. புதிய தொழில் நுட்ப வளர்ச்சிகள், இயந்திரமயமாக்கலை அதிகப்படுத்துகின்றன. இதுவும் வேலை வாய்ப்புகளை இழக்க செய்கிறது. மேல் மட்ட 1 சதவீதம் பேருடன் ஒப்பிடும் போது, அடிமட்டத்திலுள்ள 50 சதவீதம் பேரின் வருமான வளர்ச்சி மந்தமாகவோ அல்லது அறவே இல்லாமலொ இருக்கிறது என உலக சமத்துவமின்மை அறிக்கை 2018 எடுத்துக் காட்டுகிறது. இந்நிலை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்குகிறது. போராட்டங்கள் வெடிப்பதும், ஒடுக்கப்படுவதும் இக்கால கட்டத்தின் காட்சிகளாக நீடிக்கின்றன.

வலதுசாரி அரசியல் திருப்பம்:

இந்த அதிருப்தியின் விளைவு எத்தகைய அரசியல் போக்குக்கு சாதகமாக திரும்பும் என்பது முக்கியமான அம்சம். உலக நாடுகளின் நடப்புகள் எதைக் காட்டுகின்றன? எங்கு இடதுசாரி சக்திகள் வலுவாக இருக்கின்றனவோ அங்கு அதிருப்தியின் விளைவு அவர்களுக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்குகிறது.  எங்கு அவர்கள்  வலுவாக இல்லையோ, அங்கு வலதுசாரி அரசியல் சக்திகள் இதனை அறுவடை செய்கின்றன. பிரச்சனை என்னவென்றால், எந்த நவீன தாராளமய கொள்கைகள் மக்கள் வாழ்வை சீரழித்து கடும் அதிருப்தியை உருவாக்கினவோ, அதே கொள்கைகளை இன்னும் தீவிரமாகப் பின்பற்றுபவர்களாக வலதுசாரி அரசியல் சக்திகள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த 3 ஆண்டு காலத்தில் பொதுவாக அவ்வாறான ஒரு வலதுசாரி அரசியல் திருப்பம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க பிற்போக்கு சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டிரம்ப்  அதன் அதிபரானது இத்தகைய போக்கினை வலுப்படுத்தியிருக்கிறது. இனி வரும் காலத்தில், மக்களின் அதிருப்தியும், கோபமும் இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாக மாறுகிறதா, வலதுசாரிகளைத் தேர்வு செய்ய வைக்கிறதா என்பதே பல நாடுகளின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். 1929-33 வரையிலான பொருளாதார பெரு மந்தநிலை ஏற்பட்ட காலத்தில் தான், மக்களின் வெடித்துக் கிளம்பிய அதிருப்தியை பாசிச சக்திகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தின. இப்போதும் இடதுசாரிகள் அதில் வெற்றி பெறா விட்டால், நவீன பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள் வெற்றி பெறும் அபாயம் முன்னெழும்.

இக்கால கட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் இக்கட்டுகளை சமாளிக்கவும், உலகளாவிய தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அரசியல், பொருளாதாரம், ராணுவம் என அனைத்து துறைகளிலும் கடும் தலையீடுகளை செய்து கொண்டிருக்கிறது. இடதுசாரி சக்திகள் அரசாங்கத்தில் உள்ள பல நாடுகளைக்  கொண்ட லத்தீன் அமெரிக்க பிரதேசத்தில் அவற்றைக் கீழே இறக்க பல்வேறு உத்திகளை வலுவாகக் கையாண்டு வருகிறது. ஒரு துருவ உலகமாக, தன் தலைமையின் கீழ் உலகைக்கொண்டு வர அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு மாற்றாக, பிரதேச ஒத்துழைப்பு என்ற பெயரில் பல்வேறு இடங்களில் நாடுகள் எடுக்கும் முயற்சிகளில் சில தடங்கல்கள் நிகழ்ந்துள்ளன. ஒத்துழைப்பில் இருக்கும் நாடுகளில் சில அமெரிக்க சார்பு நிலை எடுப்பது இதற்கு ஒரு காரணம். இந்தியாவும் இதற்கு ஓர் உதாரணம்.

அதே சமயம், பல நாடுகளில் இடதுசாரி பார்வையுள்ள அமைப்புகள், மேடைகள் உருவாகியுள்ளன. சமூக ஜனநாயக கட்சிகள் பின்னடைவை சந்தித்திருக்கின்றன. சோஷலிச நாடுகளில் மக்கள் சீனம் தன் வலுவையும், உலகளாவிய செல்வாக்கையும் அதிகரித்திருக்கிறது. வியத்நாமும், கியூபாவும் ஓரளவு நீடித்த பொருளாதார வளர்ச்சியைக் காட்டியிருக்கின்றன. லாவோஸ் ஆசியாவிலேயே மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. வட கொரியாவைப் பொறுத்த வரை, 50 ஆண்டுகளுக்கும் மேலான பொருளாதார தடைகளின் காரணமாக, தனது கனிம வளங்களைக் கொடுத்து உணவு, இதர அத்தியாவசிய பொருட்களைப் அது பெற்றுக் கொண்டிருந்தது. தற்போது அமெரிக்க – தென்கொரிய ராணுவ கூட்டு அச்சுறுத்தலிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளுக்குத் தனது வளங்களை அது செலவழிக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் சமீபத்தில் தென் கொரியாவுடன் ஒத்துழைப்புக்கான சில முன்முயற்சிகளை எடுத்துள்ளது.  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உண் உடன் உயர்மட்ட பேச்சு வார்த்தை நடத்த டிரம்ப் (முரண்களுடன் கூடவே) ஆர்வம் காட்டி வருகிறார்.

அண்டை நாடுகளில் நேபாளத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டியதோடு, ஒரே கட்சியாவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு நேபாளம் ஒரு குடியரசாக பிரகடனம் செய்துள்ள பின்னணியில் இத்தேர்தல் நடந்துள்ளது.

இலங்கையில் உள்ள கூட்டணி அரசு, (இலங்கை சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி) புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அம்சத்தை இது உள்ளடக்கி வரும் எனக் கூறப்படுகிறது. இந்த முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். புத்த மத வெறியர்களால் முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், பல்வேறு சமூகங்களுக்கிடையே பதட்டம் தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது.

சர்வதேசக் கடமைகள்:

இச்சூழலில் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வலுப்படுத்துவதும், மோடி அரசு அமெரிக்காவின் கீழ்நிலை கூட்டாளியாக மாறி, அதற்கு சரணாகதி அடைவதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும்  மட்டுமல்ல; உலகெங்கிலும் ஏகாதிபத்திய, நவீன பாசிச சக்திகள், அடிப்படைவாதம், மதவெறி, பழமைவாதம், பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக செயல்படும் அனைத்து சக்திகளுடனும் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். சோஷலிச நாடுகளுடன் தோழமை உணர்வை வலுப்படுத்த வேண்டும்., உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகளுடன் உறவைப் பேண வேண்டும். இவற்றை, உலகச் சூழல் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் நமது கடமைகளாக அரசியல் தீர்மானம் வரையறுக்கிறது.

தேசிய சூழல்:

சென்ற மாநாட்டில் சுட்டிக்காட்டியபடி, பாஜக ஆட்சிக்கு வந்ததை ஒட்டி இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பமும், பல்வேறு பெரும் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. நான்கு  வடிவங்களில்  இவை வெளிப்படுகின்றன. 1)நவீன தாராளமய கொள்கைகள் தீவிர கடைப்பிடிப்பு; இதன் மூலம் மக்களின் மீது பல்முனை தாக்குதல்கள்; 2)இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக சட்டத்தை அச்சுறுத்தக் கூடிய ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அமலாக்க தொடர் முயற்சி; இதன் விளைவாக தலித், இசுலாமியர்கள் மீது கடும் தாக்குதல்கள்; பாசிசத் தன்மை கொண்ட போக்குகள் முன்னெழுவது;  3)அமெரிக்காவுடன் கேந்திர கூட்டை வலுப்படுத்தி அதன் இளைய பங்காளி என்ற பாத்திரத்தை வகிப்பது; 4)நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்புகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை சீர்குலைத்து, எதேச்சாதிகாரத்தைக் கட்டமைப்பது.

பாஜகவை எதிர்ப்பது என்பது, மேற்கூறிய சித்தாந்தத்தையும், நவீன தாராளமய கொள்கைகளையும், எதேச்சாதிகார போக்குகளையும், அமெரிக்காவுடனான இளைய பங்காளி நிலைபாட்டையும்  எதிர்ப்பதாகும். மாற்று என்பது, இவற்றிலிருந்து தெளிவாக வேறுபட்ட மாற்று.

அதிகரிக்கும் பொருளாதார பயங்கரவாதம்:

ஜி.எஸ்.டி., உயர்பண மதிப்பு நீக்க நடவடிக்கைகள் முறை சாரா தொழிலாளியின் வாழ்க்கையையும், சிறு குறு தொழில்களையும் சிதைத்துள்ளன. தனியார்மயம் தீவிரமடைந்துள்ளது.  அந்நிய நேரடி மூலதனம் நுழையாத துறையே இல்லை எனலாம். பெருமுதலாளிகளுக்குப் பெருமளவில் வராக் கடன் கொடுப்பதன் மூலம்  பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்படுகின்றன. மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி வேலை வாய்ப்பு துறையில் தான் எனக் கூறமுடியும். 2017ம் ஆண்டு ஜனவரி-ஏப்ரல் வரையிலான காலத்தில் இருக்கும் பணி இடங்களில் சுமார் 15 லட்சம் பணியிடங்கள் பறிக்கப்பட்டன. வேளாண் நெருக்கடி கூர்மையாக முன்னுக்கு வந்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விளை பொருளுக்கு நியாயமான விலை வழங்கப் படவில்லை. ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள்ளேயே இது சாத்தியமில்லை என உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றில் அஃபிடவிட் தாக்கல் செய்து விட்டது அரசு. சர்வ தேச கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் வரிகளைக் குறைக்காமல் மக்களைப் பிழிந்து கொண்டுள்ளது. இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க, சுற்றுச்சூழல் குறித்துக் கவலையின்றி லாப வேட்டை ஆடுவதை அனுமதிக்கும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை பளிச்சென புலப்பட்டது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கியதன் மூலம் பல சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. உணவு, ஊதியம் பாதிப்புடன் சேர்த்து, அது குடிமக்கள் மீது அரசு கண்காணிப்பை வலுப்படுத்துகிறது. ஊரக வேலை உறுதி சட்டம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சி போக்குகள் பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் ஏழை குடும்பங்கள் மீதான சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர்  நல சட்டங்கள் திருத்தப்பட்டு, முதலாளிகளுக்கு வாழ்க்கை சுலபமாகவும், உழைப்பாளிகளின் வாழ்க்கை வாழ்வதற்கே தகுதியற்றதாகவும் மாறிப்போயிருக்கிறது. ஊதிய விகிதங்கள் குறித்தும், தொழில் உறவு குறித்தும் வரையறைகள் பாதகமாக மாற்றப்படும் ஏற்பாடு நடக்கிறது. இதனால் சங்கம் வைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் அடையாளம் இல்லாமல் ஆக்கப்படும். பெண் தொழிலாளார்களின் பெரும் எண்ணிக்கையில் பணி புரியும் ஸ்கீம் என சொல்லப்படும் அரசின் திட்டங்கள் தனியார்மயமாவதன் மூலம், ஏற்கனவே மோசமாக உள்ள அவர்களின் பணி நிலை மேலும் மோசமடையும்.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, பெண் குறித்த பிற்போக்கு பார்வை, மூட நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. ஏழை, தலித், பழங்குடியின பெண்களின் நிலை கவலைக்கிடம். என்ன படிப்பது, என்ன உடுத்துவது, யாருடன் நட்பாக இருப்பது, யாரை நேசிப்பது என்று அனைத்தும் (பசு குண்டர்கள் போல) அரசு ஊக்குவிக்கும் ரவுடி படைகளால் கண்காணிக்கப்பட்டு தாக்குதல் நடைபெறுகிறது. 2015-2017 வரையிலான கால கட்டத்தில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளன. சிறுபான்மை மக்கள் மீது கடும் தாக்குதல்கள் ஏவி விடப்பட்டுள்ளன. அறிவார்ந்த முறையில் எதிர் வாதம் செய்வோர் கொலை செய்யப்பட்டு, கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது. பாசிசத் தன்மை கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் திட்டமிட்டு நடப்பதைக் கடந்த 3 ஆண்டுகளில் பார்த்து வருகிறோம்.

வகுப்புவாத மயமாகும் சூழல்:

கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் வகுப்புவாதமயமாக்கப்பட்டுள்ளன. உயர் கல்வி நிறுவனங்களில், ஆராய்ச்சி மையங்களில், வரலாற்று கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். நபர்கள் பதவி அமர்த்தப்பட்டுள்ளனர். பாடத்திட்டங்களில் அறிவியல் கண்ணோட்டம் அகற்றப் படுகிறது. மதச்சார்பின்மை தகர்க்கப்படுகிறது.

கூட்டாட்சி தத்துவம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது. மாநில  உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. சட்ட திருத்தங்கள் மூலமும், தேர்தல் பத்திரங்கள் மூலமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குத் தரும் நன்கொடையின் உச்சவரம்பு அகற்றப்பட்டு, யார் வாங்குகிறார்கள், யார் கொடுக்கிறார்கள் என்ற விவரங்களும் தேவையற்றதாக்கப்பட்டு விட்டன. இது உயர்மட்ட ஊழலுக்குத் தான் தோதாகும்.

எதிர்ப்பு இயக்கங்கள்:

இவற்றையெல்லாம் இந்திய தொழிற்சங்க இயக்கங்களும், விவசாய இயக்கங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டோ, சகித்துக் கொண்டோ இல்லை. கடுமையாக எதிர்ப்பு இயக்கங்களை நடத்தியிருக்கின்றன. கூட்டு போராட்டங்களாகப் பல நடைபெற்றுள்ளன. இவற்றை எல்லாம் அரசியல் தீர்மானம் பட்டியல் போட்டுக் காட்டுகிறது. பெருமை தரும் இயக்கங்கள் இவை. தன்னெழுச்சி போராட்டங்களும் பரவலாக நடந்து வருகின்றன. எதிர்ப்பு இயக்கங்கள் மோடி அரசின் மீதான பல பகுதி மக்களின் அதிருப்தியைக் காட்டுகின்றன. ஆளும் வர்க்கங்களுக்கும் தொழிலாளர் விவசாய பகுதிகளுக்கும் இடையிலான முரண்பாடு வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. நமது தலையீடு பல்வேறு பகுதி மக்களை அணி திரட்டிப்  போராட்ட களத்தில் நிறுத்துவதாக அமைய வேண்டும். அமைப்பு முறைமையானது, பெருமுதலாளி – நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும் சூழலில், பல வடிவங்களில் எதேச்சாதிகாரம் வெளிப்படும். எனவே, போராட்டங்கள் பெருமுதலாளி-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட வேண்டும்.

இந்தப் பின்னணியில் என்ன அரசியல் உத்தியைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் மையமான கேள்வி. மேற்கூறியவைகளைப் பார்க்கும் போது, ஆட்சியிலிருந்து பாஜக அரசை அகற்றுவது என்பதே பிரதான அரசியல் கடமையாக முன்னுக்கு வருகிறது. கட்சி திட்டமும், பாஜகவை சாதாரண பெருமுதலாளித்துவ கட்சியாகப் பார்க்கவில்லை. பாசிச தன்மையுள்ள ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை வழி நடத்துவதால் அதற்குரிய குணாம்சத்துடன் அது இருப்பதை கவனிக்க வேண்டும். 29 மாநிலங்களில் 21-ல் தனியாகவோ, அல்லது கூட்டணியாகவோ அக்கட்சி ஆட்சியில் இருக்கிறது. மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை, மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சி. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் இருவருமே முதன் முறையாக ஆர்.எஸ்.எஸ். நபர்கள்.

கட்சிகள் குறித்த நிர்ணயிப்பு:

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும் பணியை எப்படி செய்வது என்ற முடிவுக்குப் போவதற்கு முன்னால், இதர கட்சிகள் குறித்த நிர்ணயிப்பை கவனிக்க வேண்டும். காங்கிரசைப் பொறுத்த வரை, பாஜகவின் அதே வர்க்கத் தன்மை கொண்டது. ஆளும் வர்க்கத்தின் பிரதான பிரதிநிதி என்ற தன் இடத்தை பாஜகவிடம் இழந்திருக்கிறது. அதன் அரசியல் செல்வாக்கு தேய்ந்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சியாக இருந்தாலும், மத வெறி நடவடிக்கைகளை நீடித்த முறையில் எதிர்த்துப் போராடும் திராணியற்றதாக இருக்கிறது. நவீன தாராளமயத்தின் முன்னோடி. அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு சாய்மானமான அயல்துறை கொள்கையை உருவாக்கியது. பிரதான எதிர்க்கட்சி என்ற பாத்திரத்திலும் அக்கொள்கைகளை ஆதரித்தே வருகிறது. இக்கொள்கைகள் கறாராக எதிர்க்கப்பட வேண்டும்.

கட்சி திட்டம், மக்கள் ஜனநாயக புரட்சியை ஏகபோக எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்டதாக முன்வைத்து, பெருமுதலாளித்துவத்தையும், அதன் முன்னணி அரசியல் பிரதிநிதிகளையும் தீர்மானகரமாக எதிர்த்துப் போராடாமல் இக்கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று சுட்டிக்காட்டுகிறது. பாஜக, காங்கிரஸ் இரண்டுமே பெருமுதலாளித்துவத்தின் முன்னணி பிரதிநிதிகள். எனவே, கறாராக எதிர்த்துப் போராட வேண்டிய காங்கிரசுடன் ஐக்கிய முன்னணி வைக்கும் எவ்வித உத்திக்கும் இடமில்லை. அதே சமயம், வீழ்த்த வேண்டிய முதன்மை சக்தியாக பாஜகவே இருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் சம அபாயங்களாகப் பார்க்க முடியாது.

மாநில முதலாளித்துவ கட்சிகளின் மாறுபட்ட பாத்திரத்தை 21வது மாநாட்டு அரசியல் உத்தி பரிசீலனையிலேயே பார்த்தோம். மாநில முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலனைப் பிரதிபலிக்கும் இக்கட்சிகளின் நவீன தாராளமயம் குறித்த அணுகுமுறை அவர்களின் வர்க்க நலன் சார்ந்த பார்வையுடனேயே இருக்கின்றன. காங்கிரஸ், பாஜக இரண்டில் எதனோடு வேண்டுமானாலும் மத்தியில் கூட்டணியில் அமரும் அரசியல் சந்தர்ப்பவாதம் இவற்றுக்கு உண்டு. சில மாநில முதலாளித்துவ கட்சிகள் பாஜகவுடனும், சில அதனுடன் இல்லாமலும், ஏற்கனவே இருந்து இப்போது இல்லாமலும், ஏற்கனவே கூட்டணியில் இல்லாத, ஆனால் இப்போது இருக்கும் கட்சிகள் என ரகம் ரகமாய் உண்டு. சாத்தியமாகும் இடங்களில் பாஜகவுடன் இல்லாத கட்சிகளுடன், மக்கள் பிரச்சனைகள், வகுப்புவாத எதிர்ப்பு, ஜனநாயக உரிமைகள் பறிப்பு போன்ற அம்சங்களில் கூட்டு இயக்கங்களுக்குத் திட்டமிடலாம்.

ஒரு மாநிலத்தில் இயங்கும் மாநில முதலாளித்துவ கட்சியின் கொள்கைகள், பாத்திரம் இவற்றைப் பொறுத்து இவற்றுடனான நமது அணுகுமுறை அமைய வேண்டும். கட்சியின் நலன் மற்றும் இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க உதவுவதாக இந்த அணுகுமுறை இருக்க வேண்டும். இது மாநிலங்களுக்கே பொருந்தும். இவற்றுடன் அகில இந்திய அளவிலான கூட்டணிக்கு சாத்தியமில்லை.

இடதுசாரி சக்திகள்:

நமது இடதுசாரி தளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. இடதுசாரிகளின் ஆட்சியில் இருக்கும் கேரளா, ஆட்சியில் இருந்த மேற்கு வங்கம், திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் கொலை வெறித்தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசின் வன்கொடுமைகள் வேறு. கேரள அரசு, இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் பல மக்கள் நல திட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறையாக்கி வருவது பெருமைக்குரியது. இவற்றைப் பாதுகாப்பதுடன், நாடு முழுவதும் நம் கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதே இடதுசாரி ஒற்றுமையைக் கட்டவும், இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவும் உதவும். ஆர்.எஸ்.எஸ்./பாஜகவின் தாக்குதல்களைக் களத்திலும், சித்தாந்த ரீதியாகவும் எவ்வித சமரசமும் இன்றி எதிர்ப்பவர்கள் நாம் என்பதால் குறி வைத்துத் தாக்கப்படுகிறோம். மக்கள் மத்தியில் நாம் வேரூன்றி நிற்கும் போதுதான், எதிர்ப்புகளைப் பரவலாக்கும் போது தான் தாக்குதலை திறனுடன் எதிர்கொள்ள முடியும்.

இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், இடதுசாரி கட்சிகளின் வர்க்க – வெகுஜன அமைப்புகளை இணைத்த மேடையை உருவாக்கியிருக்கிறோம். இவற்றுடன் மக்கள் அமைப்புகள், அறிவுஜீவிகளை ஒருங்கிணைக்க வேண்டும். மாநில அளவிலும் முயற்சிகள் செய்ய வேண்டும். கூட்டு மேடைகளை பலப்படுத்த வேண்டும். போராட்டங்களை பெரும் வீச்சோடு கட்டவிழ்த்து விட வேண்டும். மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் இவற்றை செய்ய வேண்டும் எனக் கூறும் அரசியல் தீர்மானம், அத்திட்டத்தின் சுருக்கத்தையும் அளித்துள்ளது. கடந்த காலத்தில் பிரச்சார முழக்கமாக இருந்த நிலையிலிருந்து நடைமுறை சாத்தியம் மிக்கதாக, நமது அன்றாட நடவடிக்கைகள் இந்த நோக்கத்துடன் அமைவதாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் உத்தி:

இந்தச் சூழலில், அரசியல் திசைவழி 10 அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி, பாஜகவையும், அதன் கூட்டாளிகளையும் தோற்கடிப்பதே பிரதான கடமை. ஆனால் காங்கிரசுடன் அரசியல் கூட்டணி வைக்காமல் இதை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது. மத்திய குழுவின் சிறுபான்மை தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்ட பின்னர், விவாதங்களைக் கேட்டு, வழிகாட்டும் குழு (அரசியல் தலைமை குழு)  காங்கிரசுடன் எவ்வித புரிந்துணர்வோ, தேர்தல் கூட்டணியோ இருக்கக் கூடாது என்ற வழிகாட்டுதலை நீக்கி விட்டு, காங்கிரசுடன் அரசியல் கூட்டணி கூடாது என்ற வழிகாட்டுதலை இணைத்திருக்கிறது. காங்கிரசுடன் ஏன் ஐக்கிய முன்னணி உத்திக்கு இடமில்லை என்பது ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது.

புரிந்துணர்வு என்பது ஏன் அகற்றப்பட்டது அப்படியானால், காங்கிரசுடன் புரிந்துணர்வு இருக்கலாமா என்ற கேள்வியும் எழும். புரிந்துணர்வு இருக்கலாம்; ஆனால் அதன் வரையறை என்ன என்பதை தீர்மானம் விளக்குகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் பிரச்னைகளின் அடிப்படையில் புரிந்துணர்வு இருக்கலாம். நாடாளுமன்றத்துக்கு வெளியே, மதவெறிக்கு எதிராக பரந்து பட்ட மக்களை ஒருங்கிணைக்க மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கலாம். காங்கிரஸ், மற்றுமுள்ள முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் மக்களை ஈர்க்கும்படியாக வர்க்க வெகுஜன அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

எல்லாம் சரி. தேர்தலில் என்ன செய்யப் போகிறோம்? எப்படி பாஜகவைத் தோற்கடிக்க போகிறோம்? தேர்தல் உத்தி என்பது அரசியல் நடைமுறை உத்திக்கு உட்பட்டதாகவே இருக்கும். இரண்டும் இரு வேறு திசைகளில் பயணிக்க முடியாது. எனவே தேர்தல் நேரத்தில், மேற்கூறிய நடைமுறை உத்திக்கு உட்பட்டு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்திக் குவிப்பதற்கு ஏற்ற தேர்தல் உத்தி பொருத்தமாக உருவாக்கப்படும். நோக்கம் ஒன்று என்றாலும் மாநிலத்துக்கு மாநிலம்  பாஜகவின் நிலை என்ன, அதனுடன் யார் இருக்கிறார்கள், எதிர் பக்கம் எந்தெந்த மாநில முதலாளித்துவ  கட்சி இருக்கிறது, அவர்களின் பங்குபாத்திரம் அம்மாநிலத்தில் அந்த குறிப்பிட்ட காலத்தில் என்னவாக இருந்திருக்கிறது என அனைத்தையும் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சி, இடதுசாரிகளுடன் உடன்பாடு வைக்க விரும்புகிறதா என்பதும் ஓர் அம்சம். சென்ற மக்களவை தேர்தலில் பல மாநிலங்களில் முதலாளித்துவ கட்சிகள் அவ்வாறு முன்வரவில்லை என்பதையும் பார்த்தோம். காங்கிரசும் பாஜகவும் மட்டுமே பிரதானமாகக் களத்தில் இருக்கும் மாநிலங்களில் கடந்த காலங்களில், பாஜகவைத் தோற்கடிப்போம் என்ற முழக்கத்துடன் நாம் பணியாற்றியிருக்கிறோம். அது உட்பட தேர்தல் உத்தி உருவாக்கப்படும் போது பரிசீலிக்கப்படும்.

கடந்த கால அரசியல் நடைமுறை உத்திகளைப் பரிசீலித்து விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டில் முன்வைத்த அரசியல் நடைமுறை உத்தி தொடர்கிறது. இது இடது ஜனநாயக அணியைக் கட்டுவதை முக்கிய கடமையாக வரையறுத்துள்ளது. எனவே, இடது ஜனநாயக திட்டத்தின் அடிப்படையில், அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களும் வேலை, நிலம், உணவு, ஊதியம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அணி திரட்டப்பட வேண்டும். தன்னெழுச்சி போராட்டங்களிலும் நிச்சயம் தலையிட வேண்டும். அதே போல கோட்பாட்டு அளவில் அரசியல், சமூக, பண்பாட்டு, தத்துவார்த்த தளங்களில் மதவெறியை எதிர்ப்பது மட்டுமல்ல; ஸ்தல அளவில், மக்கள் ஒற்றுமையை உறுதி செய்து, வகுப்புவாத சக்திகளை எதிர்த்து நிற்க வேண்டும். இதில் அழுத்தம் இருக்க வேண்டும் என்று தீர்மானம் பதிவு செய்கிறது. பெண்கள், தலித், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் காவலராகக் கட்சி இருக்க வேண்டும். இதற்காகப் பரந்த ஒற்றுமையைக் கட்ட வேண்டும். ஜனநாயகம், படைப்புரிமை, கல்வியாளர்களின் சுதந்திரம் எதேச்சாதிகார முறையிலும், பாசிச தன்மை கொண்ட வடிவங்களிலும் தாக்குதலுக்கு உள்ளாகும்போது உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்பன போன்ற கடமைகளைத் தீர்மானம் வரையறுக்கிறது.

பொதுவானதைக் குறிப்பானதுடன் இணை என்கிறார் மாவோ. இல்லையெனில், தீர்மானம், மாநாட்டு மேசையுடன் நின்று விடும் என்றும் எச்சரிக்கிறார். அரசியல் தீர்மானத்தின் ஒட்டு மொத்த அம்சங்களை உள்வாங்கி, மாவட்டத்தில்/பகுதியில்/அரங்கத்தில் இக்கடமைகளை எவ்வாறு நடைமுறையாக்குவது என்பதிலேயே முழு கவனம் தேவைப்படுகிறது. அதற்கு ஸ்தாபனமே பேராயுதம். அதனையும் கூர்மைப்படுத்தி முன்னேறுவோம்.



One response to “பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை!”

  1. […] இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் நிலைப்பாட்டை விளக்கி உ.வாசுக…, வரும் 3 ஆண்டுகளில் கட்சி […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: