(குரல்: ராம் பிரகாஷ்)
- பிரகாஷ் காரத்
தமிழில் : க.சுவாமிநாதன்
சர்வதேச சூழலை உற்று நோக்குபவர்களுக்கு அதன் குழப்பமான, நிலையற்ற, ஊசலாட்டம் குறித்த சித்திரம் கிடைக்கும். புதிய முரண்பாடுகள், மோதல்கள், புதிய அரசியல் சக்திகளின் தோற்றம், அரசாங்கங்களில் ‘வலிமையான மனிதர்கள்‘, சூழலியல் மாற்றங்களின் எதிர்மறை விளைவுகள் பற்றிய வெளிப்படையான அறிகுறிகள், தொடர்ந்த இயற்கைச் சீற்றங்களாக வெளிப்படும் அவற்றின் தாக்கங்கள் ஆகியனவும் நமக்கு காணக் கிடைக்கின்றன.
அண்மைய ஆண்டுகளில் நாம் பார்த்த நிகழ்வுகள் இவை. எந்த “வரைமுறைகளுக்கும் உட்படாத”, பில்லியனர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராக வந்தது; ஐரோப்பிய இணையத்தை விட்டு வெளியேறுகிற பிரிட்டனின் முடிவு; ஏகாதிபத்தியங்களுக்கிடையே அதிகரித்துள்ள முரண்பாடுகள் மற்றும் இரஷ்யாவிற்கும் மேற்குலகிற்குமிடையே வளர்ந்து வரும் முரண்கள்; ஐரோப்பாவில் வளர்ந்து வருகிற தீவிர வலதுசாரி சக்திகள் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தொடுக்கப்படும் வலதுசாரி எதிர் தாக்குதல்கள் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். இதே காலத்தில் சீனா ஓர் பொருளாதார, அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளதையும் காண முடிகிறது. உலக நடப்புகளில் சீனாவின் தாக்கம் அதிகரித்திருப்பது அதன் வெளிப்பாடே.
தனித்தனி நிகழ்வுகளா இவை?
எப்படி இந்நிகழ்வுகளை ஆய்வு செய்கிறோம்? இந்நிகழ்வுகளின் ஊடே ஏதேனும் திட்டவட்ட இணைப்பு உள்ளதா அல்லது இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி நிகழ்வுகளா? நவீன தாராளமயத்தின் நெருக்கடி என்ற பின்புலத்தைத் தவிர்த்து விட்டு ஆய்வு செய்தால் தற்போதைய உலகப் போக்குகளை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. உலக நிதி நெருக்கடியாக, பிரம்மாண்டமாக 2007-08ல் வெளிப்பட்டதும், அதற்குப் பின்னர் பத்து ஆண்டுகளாகியும் மீள முடியாமல் தொடர்கிற தோல்விகளும் நவீன தாராளமயம் எதிர்கொண்டு வருகிற நெருக்கடிகளின் விளைவுகளாகும். இன்றைய பொருளாதார, அரசியல், சமூக நிகழ்வுகளும் இதன் விளை பொருள்களே ஆகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 22வது அகில இந்திய மாநாடு இக்குறிப்பிட்ட அம்சத்தைத் தெளிவாகச் சுட்டுகிறது.
“நவீன தாராளமய நெருக்கடி உருவாக்கியுள்ள புதிய முரண்கள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே முறிவுகளுக்கும் மோதல்களுக்கும் வழிவகுக்கின்றன. பிரக்சிட் (க்ஷசுநுஓஐகூ) – பிரிட்டன் ஐரோப்பிய இணைத்திலிருந்து வெளியேறியது – போன்றவை அவை. புதிய அரசியல் சக்திகள் உருவாவதும், அதிகரிக்கும் பதட்டங்களும் அன்றாட நடப்புகளாக உள்ளன”
நாற்பது ஆண்டு ஏகாதிபத்திய உலகமயமே – அதாவது ஏகாதிபத்திய நிதிமூலதனமும், நவீன தாராளமய ஒழுங்குமுறைமையும் – பொருளாதார இன்னல்களுக்கு, நிதி நெருக்கடிகளுக்கு, வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளில் ஏற்பட்டு வரும் வரலாறு காணாத ஏற்றத்தாழ்வுகளுக்கு ஊற்றுக்கண்ணாக உள்ளது.
“முதலில் அமெரிக்காதான்!”
உலகின் முதற்பெரும் முதலாளித்துவ சக்தியான அமெரிக்க ஐக்கிய நாடுகளும் நவீன தாராளமயத்தின் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. நிதிமூலதனம் பல தொழில்களை அமெரிக்காவிலிருந்து வளர்முக நாடுகளுக்கு இடம் பெயரச் செய்துள்ளது. இது வேலையிழப்புகள், உழைப்பாளி மக்களின் சமூக மதிப்பில் சரிவு ஆகியவற்றுக்கு வழிவகுத்துள்ளது. ஏகாதிபத்திய நிதி முறைமை ஊடு பரிவர்த்தனை நாணயத்திற்கு டாலரைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. டாலரின் மேலாதிக்கம் உலகம் முழுவதுமுள்ள மூலதனம் அமெரிக்க ஐக்கிய நாடுகளை நோக்கி வருவதை உறுதி செய்துள்ளது. ஆகவே வால்ஸ்ட்ரீட் நிதி முதலீட்டாளர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் அதீதமான இலாபங்களை அடைய முடிந்துள்ளது. உண்மை ஊதியமும், உழைப்பாளி மக்களின் வேலைகளும் இடையறாத தொடர் வீழ்ச்சிக்கு ஆளாகியுள்ளன.
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் நவம்பர் 2016ல் தெரிவு செய்யப்பட்டதற்குக் காரணம், நவீன தாராளமயம் மற்றும் நிதி மூலதனத்தால் உந்தப்படும் உலக மயமாக்கலுக்கு எதிராக பெரும் பகுதி உழைப்பாளி மக்கள் பதிவு செய்த எதிர்ப்பு வாக்குகளே ஆகும். மீண்டும் வல்லமைமிக்க அமெரிக்காவை உருவாக்குவேன் என்றும், தொழில்களை மீட்டு அமெரிக்காவுக்கு கொண்டு வருவேன் என்றும் ட்ரம்ப் வாக்குறுதியும் அளித்தார். இது அவருக்கு உழைப்பாளி மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது.
எனினும், ஒரு அதி தீவிர வலதுசாரி தலைமை அமெரிக்காவின் அதிபராக வந்திருப்பதும், அது நிதி மூலதனத்தின் சூறையாடலுக்கு இரையாகியுள்ளோரின் தெரிவாக இருந்திருப்பதும் முரணே ஆகும்.
“முதலில் அமெரிக்கா தான்” (ஹஆநுசுஐஊஹ குஐசுளுகூ) என்கிற வகையிலான டொனால்டு ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் நிதி மூலதனத்தின் நேசிப்பிற்குரிய கொள்கைகளுக்கு எதிரானவையாக உள்ளன. அவர் பலதரப்பு வர்த்த உடன்பாடுகள் பலவற்றிற்கு எதிராக உள்ளார்; அமெரிக்க தொழில், உற்பத்தி பொருட்களுக்கு பாதுகாப்பு சுவர்கள் வேண்டுமென அவர் விரும்புகிறார்; அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகள் இராணுவ செலவினங்களை அதிகரிக்க வேண்டும், அமெரிக்க இராணுவ பட்ஜெட்டை சார்ந்து இருக்கக் கூடாது என்று அவர் கோருகிறார்.
அமெரிக்க பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக சீனா, ஐரோப்பிய இணையம், கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிகள் எல்லாவற்றின் மீதும் வரிகளை ட்ரம்ப் அதிகரித்துள்ளார். இந்நாடுகளும் பதில் வரிகள் மூலம் அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர் கொண்டுள்ளன. சீனாவிலிருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது 200 பில்லியன் டாலர் பெறுமான (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 14 லட்சம் கோடிகள்) வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார். சீனாவும் இதே போன்ற பதில் வரிகள் வாயிலான எதிர்வினை ஆற்றியுள்ளது. இது வர்த்தகப் போர் மூள்வதற்கு வழி வகுத்துள்ளது. இதன் நிகர விளைவு, அமெரிக்க சரக்கு ஏற்றுமதிகளும் பாதிக்கப்படும். அமெரிக்கா வேலையிழப்புகளுக்கும் ஆளாகும்.
இந்நெருக்கடிக்கு நவீன தாராளமயத்தின் கட்டமைப்பிற்கு உட்பட்டே தீர்வு காண்பதற்கு ட்ரம்ப் முயற்சிக்கிறார். நவீன தாராளமயத்தின் முக்கிய அம்சமான நிதி மூலதனத்தின் சர்வதேச பரவலைப் பாதிக்காமல் செய்வதற்கு முனைகிறார். நவீன தாராளமய நெருக்கடிக்கு காரணமே நிதி மூலதனத்தின் குணம்தான். ஆகவே நெருக்கடியின் வேர்களைத் தொட விரும்பாத ட்ரம்பின் முயற்சிகள் நிச்சயமாய்த் தோல்வியையே தழுவும்.
மொத்தத்தில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதும், அரசாங்கமும்-வங்கிகளும் பெருமளவு கடன்களை வாங்கிக் குவித்திருப்பதும் இன்னொரு நிதி நெருக்கடிக்கான இருள் சூழ்ந்து வருவதையே உணர்த்துகின்றன.
முற்றுகிற முரண்கள்…
மேலும் ட்ரம்ப்பின் கொள்கைகள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளை உந்தித் தள்ளுவதாகவே அமையப் போகின்றன. அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளிகளான ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியன ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்களின் எதிர்ப்பு பொருளாதார தளத்தில் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் வெளிப்படுகிறது. உதாரணமாக ஈரானுடனான அணு உடன்பாட்டிலிருந்து வெளியேறுவதென்ற அமெரிக்காவின் முடிவை இம் மூன்று கூட்டாளிகளும் எதிர்த்துள்ளன. ஈரானுடனான அணு உடன்பாடு செல்லத்தக்கதென்ற நிலையை அந்நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அதுபோல பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதென்ற ட்ரம்ப்பின் முடிவை ஐரோப்பிய இணையம் எதிர்த்துள்ளது.
இரஷ்யாவுடனான அமெரிக்காவின் முரண்கள் கூர்மையடைந்துள்ளன. ட்ரம்ப், இரஷ்ய நாட்டுடனும் அதன் அதிபர் புடினுடனும் நல்ல உறவுகளை வைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறினாலும் முரண்கள் முற்றுகின்றன. அமெரிக்காவின் ஆட்சி இயந்திரம் முழுவதுமே இரஷ்யாவோடு மோதலையே விரும்புகிறது. ட்ரம்ப் ஆட்சியில் இரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நவீன தாராளமயத்தின் நெருக்கடிகள், ஏகாதிபத்திய முகாமிற்குள் உருவாக்கும் புதிய மோதல்களையே பிரக்சிட் (BREXIT) வெளிப்படுத்துகிறது. ஐரோப்பிய இணையத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான பிரிட்டன் வாக்கெடுப்பு நடத்தி அதிலிருந்து வெளியேறிவிட்டது. கருத்து வாக்கெடுப்பின் இம்முடிவு நிதி மூலதனத்தின் விருப்பங்களுக்கு மாறானதாகும். ஆனால் நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான பிரிட்டன் உழைப்பாளி மக்களின் கடும் எதிர்வினைகளே இந்த அதிரடி முடிவுக்கு காரணமாகும். கடந்த முப்பது ஆண்டுகளில் பிரிட்டன் தொழில் சீரழிவு, பெருமளவு வேலையிழப்புகளுக்கு ஆளாகியுள்ளது. இது நகரங்கள் மற்றும் பாரம்பரிய தொழில் மையங்களிலிருந்த மக்களை வறிய நிலைக்குத் துரத்தியுள்ளது.
நடப்புக் காலம், தொடர்ந்த இயற்கைச் சீரழிவுகளைக் கொண்டதாக உள்ளது. பெரு வெள்ளம், காட்டுத் தீ, பருவம் தவறிய மழை, அதிக வெப்ப விகிதங்கள், புவி நடுக்கங்கள் மற்றும் இதர இயற்கைப் பேரழிவுகள் பூமியின் பல்வேறு பகுதிகளில் நடந்தேறி வருகின்றன. இவையெல்லாம் எதிர்காலத்தில் வரவுள்ள மோசமான பருவ நிலை மாற்ற அழிவுகளுக்கான அபாய எச்சரிக்கைகளே ஆகும். இதிலுங்கூட அமெரிக்காவுக்கும் அதன் மேற்குலக கூட்டாளிகள் மற்றும் இதர உலக நாடுகளுக்கும் இடையேயான மாறுபாடுகள் ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான மற்றும் வளர்ந்த நாடுகள், வளர்முக நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தப் போகின்றன. சூறையாடுகிற குணம் கொண்ட நவீன தாராளமய முதலாளித்துவமே இக்குற்றத்திற்குக் காரணம் ஆகும். அதனால் பூமியின் எதிர்காலத்திற்கு சவால் விடுகிற இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.
வலது திருப்பம்
ஐரோப்பிய இணையத்தின் கொள்கைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நவீன தாராளமயக் கட்டமைப்பிற்கும் உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். பிரிட்டன் உழைப்பாளி மக்களின் பெரும்பகுதியின் கருத்து, ஐரோப்பிய இணையத்திலிருந்து வெளியேறுவதே அபாயகரமான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி என்பதாக இருந்தது. இக்காலத்தில் மலிவான உழைப்பைப் பயன்படுத்துவதற்காக ஆளும் வர்க்கங்கள் புலம் பெயர் தொழிலாளர்களை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தன. இதனால், உழைப்பாளி மக்கள் மத்தியில் எழுகிற அதிருப்தியையும், கோபத்தையும் தீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிச சக்திகள் பயன்படுத்துகின்றன. பிரான்சில் நேசனல் ப்ரண்ட், ஜெர்மனியில் ஆல்டர்நேடிவ், ஆஸ்திரியாவில் ஃபிரீடம் பார்ட்டி, கிரிஸில் கோல்டன் டான், இத்தாலியில் நார்தர்ன் லீக் ஆகிய அமைப்புகள் இப்பின்புலத்தைச் சார்ந்தவையாக உள்ளன. இந்த அமைப்புகள் புலம் பெயர் மக்களின் வருகை குறித்த அம்சங்களை எழுப்புகின்றன. வெளிநாட்டவர் எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு ஆகியனவற்றைப் பயன்படுத்தி வளர்கின்றன.
முதலாளித்துவ அமைப்பை ஆழமான நெருக்கடி பாதிக்கும் போது, அது தானாகவே இடதுசாரிகளின்; உழைப்பாளி மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்து விடாது. எவ்வாறு தீவிர வலதுசாரி, பாசிச சக்திகள், தொடர்கிற முதலாளித்துவ நெருக்கடியை பயன்படுத்தி வளர்கின்றன என்பதற்கு 1929-33 காலத்திய பெரு வீழ்ச்சி உள்ளிட்ட வரலாறு நமக்குக் காண்பித்துள்ளது. நவீன தாராளமயத்தின் கடந்த 10 ஆண்டு நெருக்கடியும் தீவிர வலதுசாரி, நவீன பாசிச சக்திகளின் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது ஐரோப்பாவுடன் மட்டும் சுருங்கியிருக்கிற போக்கு அல்ல.
இக்காலத்தில் வலது திருப்பம் உலகப் போக்காக வெளிப்பட்டுள்ளது. 1990 மத்தியில் துவங்கி 2000ன் துவக்ககாலம் வரை லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகள் எட்டிய முன்னேற்றங்களுக்கு எதிரான வினைகள் வலதுசாரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மைய-இடதுசாரிகள் அல்லது சமூக ஜனநாயக அரசாங்கங்கள் இருந்த பிரேசில், அர்ஜெண்டினாவில் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள்ளனர். பிரேசிலில் மென்மையான கவிழ்ப்பின் வாயிலாக இது அரங்கேற்றப்பட்டுள்ளது. வெனிசூலா தற்போது நிலைகுலைவிற்கான இலக்காக மாற்றப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவின் வலதுசாரி சக்திகள் அமெரிக்காவின் ஆதரவோடே இயங்குகின்றன.
எனினும் வலதுசாரி தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களும் நடந்தேறுகின்றன. சில நாடுகளில் பின்னடைவுகள் இருப்பினும், மெக்சிகோவில் அண்மையில் இடதுசாரி சார்புள்ள அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெனிசூலாவில் சாவிஸ்டாஸ் மற்றும் இடதுசாரி சக்திகள் மதுரோ அரசைக் கவிழ்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளைப் போராடித் தடுத்துள்ளன.
இடதுசாரிகளுக்கு புதிய வாய்ப்புகள்
எனினும், தற்போதைய நெருக்கடியும் மற்றும் வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியும் இடதுசாரிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளன.
ஐரோப்பாவில் வலதுசாரி முன்னேற்றத்திற்கான காரணங்களில் ஒன்று, உழைப்பாளி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்த பாரம்பரிய சமூக ஜனநாயகக் கட்சிகள் இழந்திருக்கிற தளத்தை வலதுசாரிகள் கைப்பற்றியிருப்பதே ஆகும். 1990களிலிருந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளை ஆட்சி செய்த சமூக ஜனநாயகக் கட்சிகள்-பிரிட்டன் லேபர் கட்சி, பிரான்சின் சோஷலிசக் கட்சி, ஜெர்மனின் சமூக ஜனநாயக் கட்சி, ஸ்பெயின், கிரீஸ் நாடுகளில் சோஷலிசக் கட்சிகள் போன்றவை – நிதி மூலதனத்தின் முன்பு சரணடைந்ததோடு நவீன தாராளமயத்தை தழுவிக் கொண்டன.
அண்மை ஆண்டுகளில் சமூக ஜனநாயகக் கட்சிகள் தங்களின் தளங்களையும் வேகமாக இழந்துள்ளன. இந்நாடுகள் பெரும்பாலானவற்றில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவீனமாக உள்ளன. நவீன தாராளமயம், உலகமயத்திற்கு எதிராக மக்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த போது அந்த எதிர்ப்பிற்கு தீவிர வலதுசாரிகள் தலைமையேற்றனர். மக்களின் ஆதரவையும் பெற்றனர்.
இப்போக்குகளிலிருந்து ஓர் பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எங்கெல்லாம் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கு எதிராக உறுதியான நிலை எடுக்க முடிந்ததோ, உழைப்பாளி மக்களின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் மக்களின் அதிருப்தியை திரட்ட முடிந்துள்ளது. முன்னேறவும் முடிந்துள்ளது. பிரிட்டனின் லேபர் கட்சி இதற்கு பளிச்சிடுகிற உதாரணம். இங்கு புதிய தலைவர் ஜெரமி கார்பின் ஜீன் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பாலும் இடதுசாரித் தன்மை கொண்ட தேர்தல் அறிக்கையை முன்வைத்தார். தனியார்மயம், ஏகாதிபத்திய போர்களுக்கு எதிரான வெகுஜன இயக்கங்களும் அதற்கு பக்கபலமாக இருந்தன. லேபர் கட்சி 40 சதவீத வாக்குகளை பெற்றதோடு கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை ஈட்டுவதையும் தடுத்து நிறுத்தியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், 25 வயதுக்குக் கீழான இளம் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் லேபர் கட்சிக்கு வாக்களித்தனர் என்பதாகும்.
பிரான்சில் முதல் சுற்றில் இடதுசாரிக் கூட்டணியின் வேட்பாளர் ஜீன்லக் மெலங்கான் சற்றேறக் குறைய 20 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஸ்பெயினில் போடேமாஸ், கிரிசில் சிரிஜா போன்ற புதிய மாற்றங்களைத் தீவிரமாக முன்வைக்கிற மேடைகள் உருவெடுத்தன. ஆனால் கிரிசில் ஆட்சி அமைத்த பின்னர் சிரிஜா சிக்கன நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய இணையத்துடன் சமரசம் செய்து கொண்டது.
போர்ச்சுசுகலிலும், கிரிசிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் வெகுசன தளத்தின் மீதான பிடிமானத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது. காரணம், நவீன தாராளமயம் மற்றும் ஐரோப்பிய இணையத்தின் தனித்தன்மைக்கு இடமற்ற பொருளியல் பாதை ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்திருப்பதேயாகும்.
ஐரோப்பிய இடதுசாரிகளின் எதிர்வினைகள் மற்றும் உறுதியான நிலைபாடுகள் உள்ளிட்ட அனுபவங்கள், எவ்வாறு நிதி மூலதனம், நவீன தாராளமயத் தாக்குதல்களை எதிர் கொள்வது என்பதற்கான திசைவழியைக் காண்பிப்பனவாக உள்ளன.
இருந்தாலும் அமெரிக்காவை நவீன தாராளமய நெருக்கடியின் காரணமாக பலவீனமடைந்த சக்தியாகக் கருதினால் தவறு இழைப்பதாகி விடும். நிதி மூலதன முறைமையில் முக்கியப் பங்காற்றுவதாலும், டாலர் மேலாதிக்கத்தினாலும் அமெரிக்கா ஏகாதிபத்திய முகாமின் தலைமையாக தற்போதும் நீடிக்கிறது. இராணுவரீதியாக, அமெரிக்கா உலகின் முதற்பெரும் பலமான சக்தியாக தொடர்கிறது. அமெரிக்காவின் பலம், தலைமை தாங்கும் ஆற்றலை நம்பியே மொத்த ஏகாதிபத்திய முகாமும் இருக்கிறது.
சீனா விடுத்துள்ள எதிர் சவால்
ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக கண்ணெதிரே நிற்கிற ஒரே சவாலாக இருப்பது சீனா மட்டுமே. சீனாவின் வளர்ந்து வருகிற உறுதிப்பாடும், பாத்திரமும் உலக அளவில் தனக்கு விடுக்கப்படுகிற கேந்திர சவால் என அமெரிக்காவால் பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க முறைமைக்கு எதிர்வினையாக பல்வேறு பலதரப்பு மேடைகளில் முனைப்போடு சீனா தலையிடவும், பங்கேற்கவும் செய்கிறது. சீனாவுக்கும், இரஷ்யாவுக்கும் இடையிலான கேந்திரக் கூட்டணி ஆழமாகியுள்ளது. இந்தியாவையும், பாகிஸ்தானையும் முழுமையான உறுப்பினர்களாக உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது குறிப்பிடத்தக்க பிராந்திய உருவாக்கமாக மலர்ந்துள்ளது. பிரிக்ஸ் வங்கி, ஏசியன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் வங்கி, மூன்று கண்டங்களில் உள்ள 72 நாடுகள் இணைந்துள்ள பெல்ட் அண்டு ரோடு முன் முயற்சி ஆகியன குறிப்பிடத்தக்க வினைகள் ஆகும்.
இத்தகைய முன்னேற்றங்கள் பன்துருவ உலகை நோக்கிய போக்குகளை வலுப்படுத்தியுள்ளன. அமெரிக்கா, பாதுகாப்பு சுவர்களை பொருளாதாரத்தில் எழுப்புகிற சூழலில், புதிய கூட்டணிகள், புதிய அமைப்புகள் உருவாகும். அமெரிக்காவின் தன்னிச்சையான போக்குகளை அவை எதிர்கொள்ளும்.
சீனாவை எதிர்கொள்வதற்கான புவி-அரசியல் திட்டத்தை அமெரிக்கா கடந்த 20 ஆண்டுகளாக வகுத்து வருகிறது. ஆசிய பகுதியை முன்னிலைப்படுத்தி ஒபாமா ஆட்சியில் இது துவங்கியது. இந்தோ-பசிபிக் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்கா-இந்தியா இடையே வளர்ந்து வரும் இராணுவ உறவுகள் அனைத்துமே அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு அபாயமாகக் கருதப்படும் சீனாவை எதிர்கொள்வதற்கான வியூகத்தின் பகுதிகளே ஆகும்.
Leave a Reply