மார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை கொள்கை ஓர் ஆய்வு


(குரல் : யாழினி)
இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்

இந்தியப் புரட்சியின் நீண்டகாலத் உத்தி (Strategy) என்பது மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று நமது கட்சித் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறானது தேசிய ஜனநாயகம் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகாலத் திட்டமாகும். இவ்விரண்டு நீண்டகாலத் திட்டங்களுக்கும் ஏற்ப இரண்டு நடைமுறை உத்திகள் (tactical lines) உள்ளன; அவை முறையே வர்க்கப் போராட்டம், வர்க்க ஒத்துழைப்பு என்பவைகளாகும்.

தங்களுடைய நீண்டகால உத்தியானது தேசிய ஜனநாயகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எற்றுக் கொண்ட மூன்று வருட காலத்திற்குள்ளேயே வர்க்க ஒத்துழைப்பு என்ற அதனுடைய அன்றாட நடைமுறை உத்தி தெளிவாக விளங்க ஆரம்பித்துவிட்டது. 1967ம் ஆண்டில் மூன்று மாநிலங்களின் – கூட்டணி அரசாங்கங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தது; இத்தகைய கூட்டணிகளுக்குத் தலைமை தாங்கிய கட்சிகள் “பிற்போக்குக் கட்சிகளென்றும்” “வகுப்புவாதக் கட்சிகளென்றும்” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் நிந்திக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கட்சியானது இந்த கூட்டணி அரசாங்கங்களில் சேர்ந்தது; அதற்கடுத்த இரண்டு வருட காலத்திற்குள்ளாகவே காங்கிரசுடன் கூட்டு சேருவதென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது ; இந்த வழியானது பத்தாண்டு காலம் நீடித்தது. காங்கிரசுடன், அந்த கட்சி கொண்டிருந்த கூட்டு அவசர கால நிலைமையின் பொழுது முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டபோதுதான் அது கைவிடப்பட்டது. அஸ்ஸாமில் சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்தது. 1984-ம் வருடம் டிசம்பர் மாத நாடாளுமன்றத் தேர்தலிலும், பல மாநில சட்டமன்றங்களுக்கு 1985- மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தல் சமயத்திலும் அவர்கள் செய்த தேர்தல் சாகசங்கள் ஆகியவைகளில் காணப்பட்டது போன்று, இடது சாரிகளுக்கெதிராக எந்த முதலாளித்துவ எதிர்க்கட்சியுடனும் கூடிக் குலாவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இன்றும் கூட முயற்சித்து வருகிறார்கள்.

(இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்திற்கு பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை குறித்து அறிய … இக்கட்டுரையை வாசிக்கலாம் : http://marxist.tncpim.org/on-cpi-party-programme/ )

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றாட நடைமுறை உத்தி குறித்து நாம் இங்கே ஆராயப்போவதில்லை. ஒவ்வொரு கட்டமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அன்றாட நடைமுறை உத்தி எவ்வாறு வளர்ச்சியடைந்து வருகிறது என்பதை ஆராய்வதோடு நிறுத்திக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 7-வது காங்கிரஸ் வகுத்த அன்றாட நடைமுறை

உத்தி

வர்க்கப் போராட்டம் என்பது தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அன்றாட நடைமுறை உத்தி; இதற்கான அடித்தளம் 1964 ம் ஆண்டில் கல்கத்தாவில் நடை பெற்ற அந்தக்கடசியின் 7வது காங்கிரஸ் நிறைவேற்றிய இன்றைய நிலைமையும் கடமைகளும் என்ற தீர்மானத்தில் இடப்பட்டிருந்தது.”அரசாங்கத்தின் மக்கள்-விரோதக் கொள்கைகளுக்கெதிரான வெகுஜன நடவடிக்கைகளுக்கு அமைப்பு முறையிலான தலைமை அளிப்பது என்பதுதான்” அந்த அன்றாட நடைமுறை உத்தியின் உண்மையான அம்சமாகும். அத்துடன், வெகுஜன அமைப்புகளின் பலவீனத்திலிருந்து தோன்றிவரும் கடுமையான ஆபத்துக்கள் முற்றிலும் புரிந்து கொள்ளப்பட்டு, அந்தப் பலவீனம் விரைவாக போக்கப்பட்டாலொழிய இந்தக் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்ற இயலாது என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.

அந்தத் தீர்மானம் மேலும் கூறியது:

‘சிவில் உரிமைகள், மக்களாட்சி உரிமைகள் மீது தொடுக்கப்படும் ஒவ்வொரு தாக்குதல்களுக்கு  எதிராகவும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கெதிராகவும், மக்களின் அனைத்து ஜனநாயகப் பகுதிகளையும், கட்சி திரட்ட வேண்டும். அரசாங்கத்தின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், மாற்றுக் கொள்கைகளுக்காகவும் அது பிரச்சாரம் செய்யவேண்டும். உலக சமாதானத்திற்காகவும், அனைத்து அணு ஆயுதங்களை தடை செய்ய வேண்டுமென்பதற்காகவும், பொதுவான படைபலக் குறைப்பிற்காகவும் இடைவிடாத பிரச்சாரத்தை அது நடத்தவேண்டும். மக்கள் ஜனநாயக முன்னணி என்ற முழக்கமும், குறிப்பாக, மக்களாட்சிப் புரட்சிக்கு முக்கியத்துவமுடையது என்ற கண்ணோட்டத்தில் உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கமும் இடைவிடாது பிரபலப் படுத்தப்படவேண்டும்”

கட்சித் திட்டத்தையும், மேலே குறிப்பிடப்பட்ட ”இன்றைய நிலைமையும் கடமைகளும்” என்ற தீர்மானத்தையும் நிறை வேற்றிய 7வது கட்சிக் காங்கிரஸ், ‘திரிபுவாதத்திற்கெதிரான போராட்டம்’ என்ற ஒரு அறிக்கையையும் நிறைவேற்றியது. அந்த அறிக்கை கூறுகிறது:

‘முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஆளுங்கட்சிக்கு வால் பிடிக்கக்கூடிய திரிபுவாதக் கருத்துக்கள், முழக்கங்கள், மற்றும் அன்றாட நடைமுறைக் கொள்கைகளுக்கெதிராக கட்சி உறுதியாகப் போராடும்பொழுதே, கம்யூனிஸ்ட் கட்சியானது (மார்க்சிஸ்ட்) அனைத்து வகைப்பட்ட குறுங்குழுவாத(Sectarian) வெளிப்பாடுகளுக்கு எதிராகவுமான அதனுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியது மக்களாட்சி முன்னணியின் ஒற்றுமையைக் கட்டுவதற்கான ஒரு அத்தியாவசிய நிபந்தனையாகும்”. குறுங்குழுவாதம்(Sectarian) இரண்டு பிரதான வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துக் கொள்கிறது.

(அ) ”ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருக்கக் கூடிய மக்கள் குறித்த குறுங்குழுவாத(Sectarian) போக்கு; –

(ஆ) ”வலதுசாரி பிற்போக்கு அல்லது வெறித்தனமான, கம்யூனிச எதிர்ப்பு என்பதை தங்களுடைய அடிப்படைக் கண்ணோட்டமாகக் கொண்ட – இடதுசாரி எதிர்க்கட்சிகளுக்குப் பின்னால் திரண்டிருக்கும் மக்கள் குறித்த குறுங்குழுவாத(Sectarian) போக்கு”

இவ்விரண்டுமே கிட்டத்தட்ட சரிசமமான அளவில் பிளவுபட்டு காங்கிரசிற்குப் பின்னாலும், கம்யூனிஸ்ட் – அல்லாத எதிர்க்கட்சிகளுக்குப் பின்னாலும் திரண்டிருக்கும் கணிசமான மக்கட்பகுதியினரை மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் வெகுஜன  இயக்கங்களிலும் வென்றெடுக்க வேண்டும் என்பதை, புரிந்துகொள்ளத் தவறியதிலிருந்து எழுகிறது’

திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற அறிக்கையிலிருந்த ஒரு முக்கியமான கட்டளை எதுவென்றால், கட்சியானது ”ஒரு மாநிலத்திலோ அல்லது மத்தியிலோ எந்த இடத்தில் அமைச்சரவை நெருக்கடி தோன்றினாலும் அல்லது வேறெந்த நெருக்கம் உருவானாலும் அத்தகைய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலையிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட அமைச்சரை நீக்குவது, அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தல், ஆளும் கட்சிக்குள் உள்ள விரோதம் நிறைந்த கோஷ்டிகள் குற்றச்சாட்டுக்களையும், எதிர்க் குற்றச்சாட்டுக்களையும் பரிமாறிக் கொள்வது போன்ற சந்தர்ப்பங்களை, ஒட்டுமொத்தத்தில் நாட்டினுள்ளும், ஆளுங்கட்சிக்குள்ளும் உள்ள தீவிரமனநிலையைக் கொண்ட சக்திகளை பலப்படுத்தும் பொருட்டு பயன்படுத்திக்கொள்ளவேண்டும், கையாள வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்குள்ளும், ஆளும் வர்க்கங்களின் பகுதிகளுக்குள்ளும் உள்ள இத்தகைய அற்பத்தனமான மோதல்களை அருவருப்புடன் அணுகும் போக்கும், இத்தகைய நிலைமைகளில் தலையிட்டு அவற்றை மாற்ற மறுப்பதும் (எந்தச்சிறு அளவில் அது சாத்தியம் என்ற பொழுதிலும்) ஒரு வேகமாக மாறிக் கொண்டிருக்கும் அரசியல் நிலைமையில், கட்சியை ஒரு முற்றிலும் செயலூக்கமற்ற சக்தியாக ஆக்கிவிடும்”.

எனினும், இவ்வித அனைத்து அரசியல் தலையீடுகளும் அதைப்போன்ற அனைத்து ஐக்கியப் போராட்டங்களும், பிரச்சாரங்களும் வெகுஜன இயக்கத்தை, உழைக்கும் மக்களின் போராட்டத்தை, பலப்படுத்துவதாகவும், தொழிற்சங்கங்களின் ஒற்றுமை போன்றவற்றைப் பலப்படுத்துவதாகவும், இருக்கவேண்டும்” என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டது … இந்தக் கடமையை அவமதிப்பு செய்வதானது அரசியல் நடவடிக்கையின் பிரதான வடிவம் மேலிருந்து சாகசம் செய்வது என்ற சந்தர்ப்ப வாத அன்றாட நடைமுறை உத்திக்கு இட்டுச் செல்லும்”

முடிவு இது தான் :

“உழைக்கும் மக்களின் ஐக்கியப் போராட்டங்களை உருவாக்குவதற்காகவும் அவர்களுடைய ஐக்கிய அமைப்புகளைக் கவர்வதற்காகவும் அவர்களிடையே செய்யப்படும் விரிந்த அளவினான நடவடிக்கைகளை மேலிருந்து செய்யப்படும் அரசியல் தலையீட்டோடு இணைக்கும் சரியான அன்றாட நடைமுறை கொள்கை வழியை கட்சிக் கடைப்பிடிக்குமானால், அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கெதிராகவும் பிற்போக்காளர்களுக்கு எதிராகவுமான போராட்டத்தில் மக்களின் மிகப்பெரும் எண்ணிக்கையைத் திரட்டுவதற்கு, கட்சி ஒரு சக்திவாய்ந்த பங்கை ஆற்ற முடியும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s