மார்க்ஸ் பிறந்த 200 ஆம் ஆண்டை முன்னிட்டு மார்க்சிஸ்ட் இதழில் நாம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு கட்டுரைகளை கடந்த ஆண்டு முழுவதும் வெளியிட்டு வந்தோம். அதன் நிறைவாக, சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மார்க்ஸ் பிறந்த நாள் இருநூற்றாண்டு விழாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மக்கள் சீனத்தின் குடியரசுத்தலைவருமான ஜி ஜின்பிங் மார்க்ஸ் குறித்தும், மார்க்சியத்தை பயில்வதின் அவசியம் குறித்தும், சீனாவில் அதை அமலாகும் விதம் குறித்தும் ஆற்றிய உரையின் பகுதி “மார்க்சை பயில்வது என்பது என்ன?” என்ற கட்டுரையாக கொண்டுவரப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் முனைவர் தா.சந்திரகுரு மொழியாக்கம் செய்துள்ளார்.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் சிங்காரவேலரின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் (18.02.1860 – 11.02.1946) என இரண்டும் பிப்ரவரி மாதத்தில் வருவதை கருத்தில் கொண்டு தோழர் சிங்கரவேலரின் பரந்த மார்க்சிய ஞானம் மற்றும் அனைத்து தளத்திலும் அதைப் பரப்புவதற்கு அவர் மேற்கொண்ட முறை, விவசாய தொழிலாளி ஒற்றுமை குறித்த ஆழ்ந்த புரிதல் ஆகியவற்றை உள்ளடக்கி தோழர் என்.குணசேகரன் எழுதிய “சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை” எனும் கட்டுரை அமைகிறது. அதேபோல் சென்னை நகராட்சியில் சிங்காரவேலர் நகரசபை உறுப்பினராக இருந்த போது அவர் ஆற்றிய பணியை தோழர் க. உதயகுமார் எழுதிய ” நகரசபை உறுப்பினராக சிங்காரவேலரின் மக்கள் பணி” என்கிற சிறு தொகுப்பு விளக்கும்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய மத்திய பி.ஜே.பி அரசு வரம்புகளை மீறி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. தேர்தலை முன்னிட்டு சில பளபளப்பான அறிவிப்புகளை செய்திருந்தாலும் விவசாயம் மற்றும் வேலையின்மை பிரச்சனைகளை அது தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கார்ப்பரேட்களுககு சேவை செய்யும் மத்திய அரசின் செயலையும், புள்ளிவிபரங்களையும் மறைப்பதோடு தவறான புள்ளிவிபரங்களை திணிப்பதையும் தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயாவின் “மோடி அரசின் மோசடி பட்ஜெட் 2019″ என்கிற கட்டுரை விளக்குகிறது.
மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வி.பி.சிங் அரசு நடந்து கொண்ட முறையில் கோட்பாட்டு ரீதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் மீது வைத்த விமர்சனங்களை உள்ளடக்கிய, அதனூடாக சாதி குறித்த வர்க்க பார்வை, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்? என்றும் முற்பட்டோர், பிற்பட்டோர், தீழ்த்தப்பட்டோர் என்கிற பிரிவினையை ஏற்படுத்தி சமூக பிளவை அதிகப்படுத்தும் முயற்சிகளை முறியடித்தான் என பல்வேறு அம்சங்களை விளக்கி தோழர் இ .எம்.எஸ் எழுதி 1990 களில் வெளியான “இட ஒதுக்கீடு ஏன் ? எவ்வாறு?” என்ற சிறு பிரசுரத்தின் சுருக்கம் காலத்தின் தேவை கருதி பிரசுரிக்க பட்டுள்ளது.
ஆசிரியர் குழு
Leave a Reply