மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


எங்கெல்ஸ் 125: மார்க்சியத்தின் அடித்தளம் எங்கெல்ஸ்


ச. லெனின்

பொதுவாக, மார்க்ஸ் என்றோ, எங்கெல்ஸ் என்றோ, தனித்தனியாக அறியப்படுவதைவிட மார்க்ஸ்-எங்கெல்ஸ் என்று இணைந்தே அவர்கள் அறியப்பட்டனர். ஆனால் எங்கெல்ஸ் குறித்து எழுதும் பலர் எங்கெல்ஸ் மார்க்சின் மறு பாதி மட்டுமல்ல; எங்கெல்சுக்கு என்று தனித்த அடையாளம் உண்டு என்று வேண்டுமென்றே எழுதுகின்றனர். நிச்சயம் அவரின் தனித்த படைப்புகள், அவருக்கேயான தனித்த அடையாளத்தை கொடுக்கும். ஆனால் அதுவும் மார்க்சியம் என்கிற வரையறைக்குள்தான் அடங்கும் என்பதை தெரிந்தே அவர்கள் கதையாடுகின்றனர். உண்மையில் சொல்லப்போனால் எங்கெல்ஸ் தான் முதல் மார்க்சிஸ்ட். மார்க்சின் எழுத்துக்கள் மீதான முதல் விமர்சகரும், அந்த எழுத்தை கவனமாக மேம்படுத்துபவரும் அவரே.

தங்களுக்கான தனித்த அடையாளம் என்று அவர்களுக்குள் எந்த தன்முனைப்பும் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இருந்ததில்லை. மார்க்சின் எழுத்துக்களுக்கு ஒரு தனி வாசகர் கூட்டமே இருந்தது. மூலதனம் எழுதும் பணியில் மார்க்ஸ் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, பல பத்திரிக்கைகளில் மார்க்சின் ஒப்புதலுடன் மார்க்சின் பெயரில் வந்த கட்டுரைகளை எழுதியது எங்கெல்ஸ்தான். இதை எங்குமே எங்கெல்ஸ் குறிப்பிட்டது கிடையாது. ரஷ்ய புரட்சிக்கு பிறகு மார்க்ஸ், எங்கெல்ஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தே இந்த தகவலை வெளிக்கொண்டு வந்தது.

முதலாளித்துவ சிந்தனைப் போக்குதான் தனி மனிதர்களை முன்னிறுத்தி சமூகத்தை பின்னால் தள்ளும். இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறை குறித்து மார்க்சும் எங்கெல்சும் கூறும் போது கூட, இது தங்களது தனித்த கண்டுபிடிப்பல்ல என்றும், எங்களுக்கு முந்தையவர்களின் பங்களிப்புகளை சற்று மேம்படுத்தி நாங்கள் வழங்கியுள்ளோம் என்றே குறிப்பிடுகின்றனர்.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஆளுமைகளும் உண்டு. அதில் யாருக்கும் இருவேறு கருத்து கிடையாது. மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் ஒருங்கிணைவுக்கு பிறகுதான் வர்க்கம், வர்க்கப் போராட்டம் என்கிற புரிதலும், கற்பனாவாத சோஷலிசம் என்பதிலிருந்து விஞ்ஞான சோஷலிசம் என்கிற வளர்ச்சியும், இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்கிற ஆய்வு கண்ணோட்டமும் சாத்தியப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த ஒருங்கிணைவு இல்லாமல் போயிருந்தால் இருவரும் தனித்தனியே பெரிய ஆளுமைகளாக இருந்திருக்கலாமே அன்றி, மக்களுக்கான செழுமைப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் கிடைத்திருக்குமா? என்பது மிகப் பெரிய கேள்வியே.

அரசியல் பொருளாதாரம்

1859-ம் ஆண்டு வெளியான “அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம்” என்கிற நூல் மார்க்சின் ஆகச் சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அந்த நூலின் இரண்டாம் பாகத்தை மார்க்ஸ் எழுதத் துவங்கினார். அதுவே “மூலதனம்” நூலாக வடிவம் எடுத்தது.

அரசியல் பொருளாதாரம் குறித்த ஒரு துவக்கப் புள்ளியை முதலில் வைத்தவர் எங்கெல்ஸ் தான். 1843-ம் ஆண்டின் இறுதியில் அவர் எழுதிய “அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம் பற்றிய ஒரு பார்வை (outline)” என்ற சிறு கட்டுரை மூலம் முதலில் அதை துவக்கி வைக்கிறார். அக்கட்டுரையின் முதல் வரியிலேயே “வர்த்தகம் விரிவானதன் ஒரு இயற்கை நிகழ்வு போக்காகவே அரசியல் பொருளாதாரம் நிலைபெற்றது. துவக்க நிலையில் உள்ள, அறிவியல் பூர்வமற்ற, சிறு வர்த்தகத்தை அறிவியல் தன்மையோடு, விரிந்து பரந்த அங்கீகாரம் பெற்ற, பித்தலாட்ட வேலைகளை செய்வதற்கான முறையாக மாற்றி அமைத்துள்ளது” என்று முதலாளித்துவ முறையை எங்கெல்ஸ் விமர்சிக்கிறார்.

மேலும் தனிச் சொத்துடமை இருக்கும் வரை “தேச வளம்” (national wealth) என்கிற வார்த்தையே அர்த்தமற்றதாகும் என்றும், பொதுச் சொத்து என்பதே தனிச் சொத்துடையோரின் நலன்களை பேணுவதற்காக இருப்பதுதான் என்கிறார் எங்கெல்ஸ்.

மார்க்சும் எங்கல்சும் மேஜை புரட்சியாளர்கள் அல்ல. 1848-49 ஆண்டுகளில் ஜெர்மனியில் நடந்த புரட்சியில் அவர்கள் இருவரும் நேரடியாக பங்கேற்றனர். 1849-ம் ஆண்டு ப்ரஷ்ய முடியாட்சிக்கு எதிரான ஆயுதம் தங்கிய புரட்சியில் எங்கெல்ஸ் பங்கேற்றார். அதோடு ப்ரசில்ஸ்-இல் கம்யூனிஸ்ட் இயக்க அமைப்பை உருவாக்குதல், ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் அமைப்பை கட்டுதல், ஜெர்மன் தொழிலாளர் அமைப்பு, கம்யூனிச புரட்சிக்கான சர்வதேச அமைப்பு, முதல் சர்வதேச அகிலம், இரண்டாம் சர்வதேச அகிலம் (எங்கல்ஸ்) உள்ளிட்டவைகளை கட்டியமைப்பதில் மார்க்சும் எங்கெல்சும் தீவிரமாக பங்கேற்றனர்.

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்

எங்கல்ஸின் “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற நூல் 1880-ம் ஆண்டு வெளியானது. இதில் வர்க்கப் போராட்டத்தையும், இயக்கவியல் வரலாற்று பொருள்முதல் வாதத்தையும் தெளிவாக விளக்கி, சோஷலிசம் என்பது கற்பனையல்ல; அது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் தவிர்க்கமுடியாத கட்டம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைப்பார்.

“முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்து கிடந்த அந்தத் தீர்வினை கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள்”. (அதேபோல்)”அந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையும் இன்னமும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன. இங்கிலாந்தில் அப்போதுதான் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை, ஃபிரான்சில் இன்னமும் அறியப்படாததாகவே இருந்தது. ஆனால், நவீன தொழில்துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவத் தன்மைக்கு முடிவு கட்டுதலையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது. தான் தோற்றுவித்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்களை மட்டுமின்றி, தான் உருவாக்கிய அதே உற்பத்தி சக்திகளுக்கும் பரிவர்த்தனை வடிவங்களுக்கும் இடையேயான மோதல் களையும் வளர்க்கிறது.” என்கிறார்.

முதலாளித்துவத்தின் ஆரம்பக்கட்டத்தில் “சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்குச் சற்றும் திறனற்றிருந்த அந்த தொழிலாளி வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது. தனக்குத் தானே உதவிக் கொள்ளும் திறனற்றிருந்த அந்நிலையில், அதிகம் போனால் வெளியிலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோதான் தனக்குத் தேவையான உதவியைப் பெற்றிட முடியும். இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோஷலிசத்தின் நிறுவனர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியது. முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே (கற்பனாவாத சோஷலி

ஸ்டுகளால்) முன்வைக்கப்பட்டன.”

வளர்ச்சியடையாத முதலாளித்துவ காலத்தில், முதிர்ச்சியடையாத பாட்டாளி வர்க்கத்தின் காலத்தில் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மனித மூளையின் சிந்தனையின் மூலமே உருவாக்கிட முடியும் என்று முயன்றனர். உண்மையில் சமூக மாற்றத்திற்கான தத்துவத்தை ஒருவரின் அகவய புரிதலால் மட்டுமே உருவாக்கிட முடியாது. சமூக எதார்த்தமும், வரலாற்று ரீதியான வளர்ச்சிப்போக்கும் அதற்கு மிக மிக அவசியம். சமூகம் உடைமைகளை மொத்தமாக கொண்ட பெரு முதலாளிகளாகவும், உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிளவுற்ற சூழலையும், பிரம்மாண்ட உற்பத்திச் சக்திகள் இதுநாள் வரை தனிநபர்களைச் செழிப்பாக்கவும், சாதாரண மக்களை அடிமையாக்கவுமே பயன்படுத்தி வந்தன என்ற சமூக எதார்த்தத்தை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து மார்க்சும் எங்கல்சும் விஞ்ஞான சோஷலிசத்தை முன்வைத்தனர். அதுவரை யாரும் மேற்கொள்ளாத இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அதை வகுத்தளித்தனர்.

இனிமேலும் சோஷலிசம் என்பது ஏதோவொரு அறிவுசார்ந்த மூளையின் தற்செயலான கண்டுபிடிப்பில்லை. வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். சாத்தியமான அளவுக்குக் குறைகளற்ற, முழுநிறைவான, ஒரு சமுதாய அமைப்பை உற்பத்தி செய்வது சோஷலிசத்தின் பணியாக இனியென்றும் இருக்கப் போவதில்லை; இந்த வர்க்கங்களும் அவற்றுக்கு இடையேயான பகைமையும் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழக் காரணமாக இருக்கும் நிகழ்வுகளின் வரலாற்று-பொருளாதாரத் தொடர்ச்சியை நுணுகி ஆய்வதும், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளில் இந்த மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான சாதனங்களைக் கண்டறிவதும்தான் சோஷலிசத்தின் பணியாகும்.

முந்தைய கால சோஷலிசம் நடப்பிலுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தது உண்மை தான். ஆனால், அவற்றை விளக்கிட, அதனால் முடியவில்லை. முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை, எந்த அளவுக்குக் கடுமையாக கண்டித்ததோ, அந்த அளவுக்குத் தெளிவாக, இச்சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, அது எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் எடுத்துக்காட்ட முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் முதலாளித்துவம் தவிர்க்க முடியாதது என்பதை போலவே, அதன் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது என்பதை சுட்டிக்காட்டியதோடு, உபரி மதிப்பு என்ற மார்க்சின் கண்டுபிடிப்பு மூலம் இதுநாள்வரை இரகசியமாக இருந்து வந்த, முதலாளித்துவத்தின் சாராம்சத் தன்மை தோலுரித்துக் காட்டப்பட்டது என்கிறார் எங்கெல்ஸ் .

கற்பனாவாத சோஷலிஸ்டுகள் முயன்றது போல் சோஷலிசம் என்பது அறிவுசார் சிந்தனையின் தற்செயல் கண்டுபிடிப்பு அல்ல. மாறாக அது சுரண்டப்படும் வர்க்கமான பாட்டாளி ( தொழிலாளி ) வர்க்கத்திற்கும், அவர்களை சுரண்டும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாகவே சோஷலிசம் பிறக்கும் என்று மார்க்சும் எங்கல்சும் கூறினர்.

வேலைப் பிரிவினை

மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையே ஒரு வேலைப்பிரிவினை இருந்தது என்றும், மார்க்ஸ் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முழு வடிவத்தையும் அதன் சுரண்டலையும் பற்றி எழுத தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டார் என்றும், எங்கெல்ஸ் மார்க்சியத்தின் அடிப்படைகளான இயக்கவியல் குறித்தும், விஞ்ஞான சோஷலிசம் பற்றியும், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் குறித்தும் எழுதினார் என்று சிலர் கூறுகின்றனர். மார்க்ஸ் எது குறித்து எழுதுகிறார் என்று எங்கெல்சுக்கும், எங்கெல்ஸ் எதில் கவனம் செலுத்துகிறார் என்று மார்க்சுக்கும் நன்றாகவே தெரியும். இருவரும் இணைந்து எது பற்றி எழுதுவது என்றும் முடிவு செய்து எழுதியுள்ளனர். அவர்களின் எழுத்துக்களை பார்த்தால் இருவரும் தத்துவம், பொருளாதாரம், இயக்கவியல் என பல தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பது புரியும். மார்க்ஸ் தனது மூலதனம் நூலுக்கான வேலையை 1859-ல் வெளியான “அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம்” எனும் நூலுக்கு முன்பிருந்தே துவங்கிவிட்டார். மூலதனம் நூலுக்கான வேலைக்கு மார்க்ஸ் கூடுதல் நேரம் ஒதுக்கினார் என்ற போதும், ஃபாயர்பாக் பற்றிய ஆய்வறிக்கை, தத்துவத்தின் வறுமை, பாரிசில் ஜூன் புரட்சி, பிரான்சில் வர்க்கப் போராட்டம், லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமெர் என வரலாற்று பொருள்முதல்வாதம் குறித்தும், தத்துவம் இயக்கவியல் பற்றியும் மார்க்ஸ் இக்காலத்தில் எழுதியுள்ளார். இங்கிலாந்தின் நிலைமை, இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை, கம்யூனிஸத்தின் கோட்பாடுகள், ஜெர்மனியில் விவசாயிகள் புரட்சி, ஜெர்மனியில் புரட்சியும் எதிர் புரட்சியும் ஆகிய நூல்களை எங்கெல்ஸ் இதே காலத்தில் எழுதியுள்ளார். இக்காலத்தில்தான் புனிதக் குடும்பம், ஜெர்மன் தத்துவம், கம்யூனிஸ்ட் அறிக்கை போன்றவற்றை மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதியுள்ளனர். இவை தவிர பல்வேறு இதழ்களில் கட்டுரைகளும், மாநாட்டு அறிக்கைகளும் முன்மொழிவுகளும் என இன்னும் எத்தனையோ முக்கியமான அம்சங்களை மூலதனம் முதல் தொகுதி வெளிவருவதற்கு முன்பே எழுதியுள்ளனர்.

1883-ல் மார்க்ஸ் மறைந்த பிறகு மார்க்சின் கையெழுத்தை அறிந்தவரும், மார்க்சின் கருத்துக்களை மற்ற எவரைவிடவும் நன்கு அறிந்திருந்த ஒரே நபர் எங்கெல்ஸ்தான். எங்கெல்ஸிடம் தான் தனது அனைத்து குறிப்புக்களையும் ஒப்படைக்குமாறு மார்க்ஸ் தனது மகளிடம் கேட்டுக் கொண்டார். மூலதனம் நூலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகள் எங்கெல்ஸ் இல்லையெனில் வெளிவந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை.

தனது உடல் நலம் பாதிக்கப்பட்ட போது கூட எங்கு மூலதனம் நூலின் பணிகளை முடிக்காமல் போய்விடுவோமோ என்றே எங்கெல்ஸ் கவலைப்பட்டுள்ளார். ஆனால் இதே கால கட்டத்தில்தான் எங்கல்சின் சிறந்த படைப்புகளான “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” “ லுத்விக் ஃபாயர்பாக் மற்றும் மூலச் சிறப்புமிக்க ஜெர்மன் தத்துவத்தின் முடிவு” ஆகிய நூல்களை எழுதினார். தான் இறப் பதற்கு ஓராண்டுக்கு முன் மூலதனம் நூலின் இறுதி பகுதியான மூன்றாம் தொகுதியையும் வெளியிட்டு, தான் தீர்மானித்த பணியையும் சிறப்பாக செய்து முடித்தார் எங்கெல்ஸ்.

“மார்க்சும் அவர் குடும்பத்தினரும் கொடிய வறுமையில் சிக்கித் துன்பப்பட்டார்கள். எங்கெல்ஸ் மட்டும் தன்னல மறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டே இருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல; தவிர்க்க முடியாதபடி அவர் வறுமையால் மடிந்திருப்பார்” என்று லெனின் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வதற்கும், காலத்தை வென்று மார்க்ஸ் என்றும் நிலைத்து நிற்பதற்கும், மார்க்சிய தத்துவம் வலுவான அடித்தளம் பெறுவதற்கும் எங்கெல்சின் அயராத பங்களிப்பே அனைத்திற்கும் அடிப்படையாக திகழ்ந்தது என்பதே உண்மை.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: