மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை


  • வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கடந்த பல வாரங்களாக ஊடகங்களில் இந்திய பொருளாதாரம் தற்போது எதிர்கொள்ளும் மந்த நிலையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெரு முதலாளிகள் மீண்டும் மீண்டும் அவர்களது வர்க்க கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைக்கின்றனர். அவர்களுக்கு விசுவாசமாக உள்ள மத்திய பாஜக அரசு பெரும் நிறுவனங்களுக்கு தினமும் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால் பொருளாதாரம் மீட்சி அடைவதற்குப்பதில் மந்தநிலை தீவிரமடைந்து வருகிறது.

பரவலான மந்தநிலை

துவக்கத்தில் மோட்டார் வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள கிராக்கி சரிவும் அதையொட்டி நிகழ்ந்துவரும் ஆலை மூடலும் ஆட்குறைப்பும் தான் பிரதான கவனம் பெற்றன. 2௦19 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான ஐந்து மாதங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளிகள் இத்துறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. மோட்டார் வாகனத்துறையில் மட்டும் வேலை இழப்பு 1௦ லட்சத்தை தாண்டலாம் என்று கருதப்படுகிறது. அடுத்தடுத்து, ‘விரைவில் விற்பனையாகும் நுகர்பொருள்’ (FMCG) சந்தைகள், ஜவுளி, வைரம் உள்ளிட்ட பொதுவான ஏற்றுமதி துறைகள் இவை அனைத்திலும் மந்தநிலை பரவியது. ரியல் எஸ்டேட், கட்டுமானம், என்று மேலும் விரிவான மந்தநிலை இன்று ஏற்பட்டுள்ளது. பரவலாக கிராக்கி வீழ்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சி விகிதத்தை அதீதமாக உயர்த்திக்காட்டும் அரசின் கணக்கின்படி பார்த்தாலும்கூட,  ஒட்டுமொத்த நாட்டு உற்பத்தி மதிப்பின் – ஜிடிபி(GDP) யின் – வளர்ச்சி விகிதம்  கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சரிந்து வருகிறது. இது இன்றைய பொருளாதார அமைப்பு மற்றும் கொள்கைகளில் உள்ள தீவிர முரண்பாடுகளின் விளைவு தான்.

முதலாளித்துவமும் பொருளாதார மந்தமும்

முதலாளித்துவ அமைப்பில் பொருளாதாரம் வளர்வதும் ஒரு கட்டத்தில்   மந்தநிலை அடைவதும் பின்னர் மீட்சி ஏற்பட்டு வளர்ச்சி தொடர்வதும் வரலாற்று அனுபவமாக உள்ளது. பேரறிஞர் கார்ல் மார்க்ஸ் மூலதனம் நூலில்  முதலாளித்துவத்தின் இயக்கவிதிகளை விரிவாக ஆராய்ந்து அவ்வப்போழுது முதலாளித்துவ அமைப்பில் மறு உற்பத்தி ஏன் தடைபடுகிறது என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை முன்வைத்துள்ளார்.

முதலாவதாக, முதலாளித்துவ அமைப்பு திட்டமிட்ட அடிப்படையில் செயல்படும் அமைப்பு அல்ல. ஒவ்வொரு உற்பத்தி துறையிலும் அதன் சரக்கிற்கான விற்பனை வாய்ப்புகளை  முதலாளிகள்  அவரவர் செய்யும் நிர்ணயிப்புகளின் அடிப்படையில் உற்பத்தியை மேற்கொள்கிறார்கள். இந்த நிர்ணயிப்புகள் தவறாக அமைந்திட வாய்ப்பு உண்டு. அவ்வாறு சில சமயங்களில் ஒரு முக்கிய துறையில் அதீதமான கிராக்கி நிர்ணயிப்பின் காரணமாக உற்பத்தி செய்யப்பட சரக்குகள் விற்பனையாகாமல் தேங்கிவிடும் நிலை ஏற்படும். இது இத்துறையுடன் சம்பந்தப்பட்ட இதர துறைகளிலும் கிராக்கி பிரச்சினையை ஏற்படுத்தும். சில முக்கிய துறைகளில் இத்தகைய நிகழ்வு ஏற்படுவதால் அளிப்புக்கும் கிராக்கிக்குமான இடைவெளி மிக அதிகமாகி மூலதன மறுஉற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும். இதனை, முதலாளித்துவ அமைப்பின் திட்டமற்ற, அராஜகமான தன்மையின் விளைவாக நாம் பார்க்கலாம். இது பொதுவான காரணம்.

குறிப்பான இரண்டு காரணங்களையும் மார்க்ஸ் விளக்குகிறார். ஒன்று, முதலாளித்துவத்தில், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயான வர்க்க முரண்பாடும் முதாளிகளிடையேயான போட்டியும் தொடர்ந்து உற்பத்தி சக்திகளை இயந்திரமயமாக்கல் மூலம் உயர்த்திக்கொண்டே போகின்றன.  ஆனால். இவற்றால் நிகழும் ஆட்குறைப்பும் அதிகரிக்கும் வேலையின்மையும் சிறுமுதலாளிகளை பெரு முதலாளிகள் விழுங்குவதும், எண்ணற்ற சிறு உற்பத்தியாளர்களின் அழிவும் சமூகத்தின் நுகர்வு சக்தியின் வளர்ச்சிக்கு கடிவாளமாக அமைந்துவிடுகின்றன. எனவே முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தி சக்திகள் வேகமாக வளரும்பொழுது  அளிப்பு பெருகுவதும், முதலாளித்துவ அமைப்பின் வர்க்க தன்மை காரணமாக நுகர்வு சக்தியின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு அளிப்பின் அதிகரிப்பிற்கு கிராக்கி ஈடு கொடுக்கமுடியாத நிலையும், இதனால் கிராக்கிசார் நெருக்கடியையும் மந்தநிலையையும் மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகின்றன.

முதலாளித்துவத்தில் கிராக்கி என்பது தொடர் பிரச்சினை என்று கூறலாம். இரண்டாவதாக, முதலாளித்துவ வளர்ச்சியில் நிகழும் இயந்திரமாக்கல் நேரடி உழைப்பின் பங்கை குறைத்து, கடந்தகால உழைப்பு உறைந்திருக்கும் இயந்திரங்களின் பங்கையும் இதர மூலப்பொருள் உள்ளிட்ட உற்பத்திசாதனங்களின் பங்கையும் அதிகரிக்கிறது. ஆனால் உபரி மதிப்பு நேரடி உழைப்பின் மூலமே உருவாக்கப்படுகிறது. அதன் பங்கு குறைவது லாப விகிதத்தை காலப்போக்கில் குறைக்கும். இத்தகைய, நீண்டகால கண்ணோட்டத்தில் லாப விகிதம் சரிவது என்ற போக்கும் இடைவெளி விட்டு முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாவதற்கான காரணம்.

ஆகவே முதலாளித்துவத்தில் நெருக்கடியும் மந்தநிலையும் தவிர்க்க இயலாதவை என நாம் புரிந்துகொள்ளலாம். நீண்ட கால கண்ணோட்டத்தில், முதலாளித்துவ மறுஉற்பத்தி அவ்வப்பொழுது தடைபடுவது நிகழும்.

சமகால முதலாளித்துவமும் மந்தநிலையும்

 மார்க்ஸ் காலத்திற்குப்பின் முதலாளித்துவம் உலகம் முழுவதும் பரவி பல மாறுதல்களும் ஏற்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் கிராக்கிசார் மந்தநிலையை தவிர்க்க அரசு தலையிட்டு செலவுகளை மேற்கொண்டு கிராக்கியை உயர்த்திக்கொடுப்பது என்ற “கிராக்கி மேலாண்மை” கொள்கைகளை மேலை நாட்டு ஆளும் வர்க்கங்கள் அமலாக்கின. (இக்கொள்கைகளுக்கு தத்துவார்த்த அடித்தளம் அமைத்துக்கொடுத்த பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் கெய்ன்ஸ் [Keynes] பெயராலும் இவை அறியப்படுகின்றன). 1945 முதல் 1974 வரை மேலை நாடுகளில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டது. கடும் மந்தநிலை எழவில்லை. இதில் கிராக்கி மேலாண்மை கொள்கைகளுக்கும் ஒரு பங்கு இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்கு பின் தங்களது ஓரளவு வலுவை இழந்திருந்த மேலை நாட்டு வல்லரசுகள், இந்த 30 ஆண்டு கால வளர்ச்சியில் மீண்டும் வலுப்பெற்றன. இப்பின்புலத்தில், பழைய காலனியாதிக்க முறைகளை நேரடியாக அமல்படுத்த முடியாவிட்டாலும், வளரும் நாடுகளின் சந்தைகளை, மூலப் பொருட்களை,  அங்கிருக்கக் கூடிய மலிவான உழைப்பை எப்படி பயன்படுத்துவது என்பதில் தீவிரமாக மேலை நாட்டு வல்லரசுகள் 198௦களில் களம் இறங்குகிறார்கள்.  பன்னாட்டு கம்பெனிகள் ஒரு மிகப் பெரிய சக்தியாக வருகின்றன. குறிப்பாக, மேலை நாடுகளில் 1950 முதல் 1980 வரை இருந்த 30 ஆண்டு காலத்தில் சேர்க்கப்பட்ட ஏராளமான செல்வங்கள் (பெரும் பெரும் கம்பெனிகளின் லாபங்கள், மேலை நாட்டு உழைப்பாளிகளின் சேமிப்புகள்)  அனைத்தும் பன்னாட்டு சந்தைகளில் பணமாக உலா வருகின்றன. இதிலிருந்து  பண மூலதனத்தின் ஆதிக்கத்தை உலகில் நீங்கள் 80களில் பார்க்க முடியும். (பன்னாட்டு பணமூலதன வளர்ச்சிக்கு வேறு சில காரணங்களும் உண்டு.)  

இந்த பண மூலதன ஆதிக்கம் படிப்படியாக சோசலிச நாடுகளையும் சிதைக்கிறது. அங்கேயும் அதனுடைய செயல்பாடு துவங்குகிறது. இதேபோன்று, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் பன்னாட்டு பண மூலதனம் வரும்போது, பன்னாட்டு வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கி வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தித்தருகிறது. முந்தைய காலங்களில் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகள், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டில் உற்பத்தி, ஒரு வரம்புக்கு உட்பட்ட நிலசீர்திருத்தம் போன்ற நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்தி வளர்ந்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல இடங்களில் கடன்களை வாங்குகின்றன. 

இந்நிலையில், விரைவாக இந்த கடன்களை திருப்ப முடியாத நெருக்கடி நிலை ஏற்படும்போது, மேலைநாடுகள் சொல்வதைக் கேட்கிற இடத்திற்கு கடன் வாங்கிய நாடுகள்  வந்து விடுகின்றன. உலக வங்கி, ஐஎம்எப், உலக வர்த்தக அமைப்பு போன்ற  அமைப்புகளின் ஆதிக்கம் மேலைநாடுகளிடம் (ஐரோப்பா, அமெரிக்கா) இருக்கிறது. தொழில்நுட்பம், சந்தை, நிதி, தகவல் தொடர்பு ஆகிய  துறைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மேலை நாட்டு வல்லரசுகளும் பன்னாட்டுக் கம்பனிகளும்  ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த பன்னாட்டு சூழல் வளரும் நாடுகளுக்கு சொந்த காலில் நின்று வளருவது என்பதை  சவாலாக்குகிறது. குறிப்பாக, சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்ட பிறகு அமெரிக்கா தலைமையில் ஒருதுருவ உலகம் உருவானது. வளரும் நாடுகள் மேலும் கூடுதலாக மேலை நாடுகளை சார்ந்து வளரவேண்டிய நிலை வலுப்பெற்றது.

இதற்கு விதிவிலக்காக ஒரு சில சோஷலிச நாடுகள் சுயசார்பு தன்மையிலான வளர்ச்சிக்கு முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன.  இவற்றில் மிக முக்கியமானது மக்கள் சீனம். நீண்ட நெடிய போராட்டங்களுக்குப்பின்  சோசலிச புரட்சி செய்து, மக்கள் சீனம் வளர்கிறது. ஆனால், பொதுவான விதியாக, வளரும் நாடுகள் மேலை நாடுகளைச் சார்ந்து நிற்கின்ற நிலை பரவலாக உள்ளது.  மேலை நாடுகள், உலக வங்கி போன்ற அமைப்புகள்  மூலமாக வளரும் நாடுகளின் கொள்கைகளை நிர்ணயிக்கிறார்கள். தேவை என்று கருதினால், நேரடியாகவும் தலையிடுகின்றனர். உலகவங்கி, ஐ எம் எப் நிறுவனங்களில் முக்கிய  பொறுப்பில் இருந்தவர்கள் இந்திய அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார கொள்கைகள் வகுக்கும் பொறுப்புகளுக்கு வருகின்றதை தற்போது நாம் பார்க்கிறோம். குறிப்பாக, அண்மைக் காலங்களில் இது அதிகரித்திருக்கிறது.

நவீன தாராளமயம்

1980களுக்குப் பிறகு, உலக அளவில் மேலைநாடுகள் மீண்டும் பெரும் வல்லரசுகளாக முன்வரும்போது, 80களின் இறுதியில் 90களின் துவக்கத்தில் சோசலிச நாடுகள் பலவீனமடைகின்றன. இது ஒரு துருவ உலகத்தை நோக்கி உலகை தள்ளியது. அப்போது மேலை நாடுகளின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கிறது. அந்த பின்புலத்தில்தான், 90களின் துவக்கத்தில் இந்தியாவில் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகள் அமலாகின்றன.  1960, 70களில் இருந்தது போல் நாம் இப்போது இருக்க முடியாது என சொல்லப்படுகிறது. அரசு முதலீடு செய்ய முடியாது, அரசிடம் பணம் இல்லை என்பதே புதிய கதையாடலாக வருகிறது. இந்திய பெரு முதலாளிகள் மற்றும்  பன்னாட்டு நிதி மூலதனங்களின் கைகள் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் ஓங்குகின்றன. பெரும்பாலான இந்திய பெருமுதலாளிகள் உலகச்சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது, பிறநாடுகளில் முதலீடு செய்வது போன்ற  கனவுகளுடன் தாராளமய கொள்கைகளை வரவேற்கின்றனர்.

தாராளமயத்தின்கீழ், செல்வந்தர்களுக்கு உடன்பாடு இல்லாத கொள்கைகளை அரசுகள் பின்பற்றுவதில்லை.  செல்வந்தர்கள் மீது வரி போட அரசு தயாராக இல்லை. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் அதே வேகத்தில் அரசின் வரி வருமானம் உயர்வதில்லை. “அரசின் செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளிடம் கொடுத்து விடுவோம். பன்னாட்டு சரக்கு வர்த்தகம் மற்றும் பன்னாட்டு பணமூலதனம்  ஆகியவற்றின் மீதான அரசு  கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். இது தான் உலக அனுபவம்.” என்ற கதையாடல் முன்வைக்கப்படுகிறது.

சமூக நலன் கருதி பெருமுதலாளிகள் மீது போடப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என்ற குரல் தாராளமயத்தின்கீழ் ஓங்குகிறது. தனியார்மயத்தின் பகுதியாக, அரசுப் பொறுப்பு என்று கருதப்பட்டு வந்த கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு  துறைகள்கூட காசுக்கான பொருளாக, சந்தைப் பொருளாக மாற்றப்பட்டு, முழுவதும் தனியார்மயமாக்கலும், தாராளமயமாக்கலும் கொண்டு வரப்படுகிறது. உலகமயம் என்ற பெயரில்  பன்னாட்டு கம்பெனிகள் இன்னும் விரிவாக இந்தியாவின் சந்தைகளுக்குள் நுழையவும், மூலதனத்தை பணமாக கொண்டுவந்து பங்கு சந்தைகளில், நாணய சந்தைகளில் ஊக வணிகம் செய்யவும்  சிகப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.

உலகமயமாக்கத்தால் ஏராளமான தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்துவிட்டதென்று சொல்லப்படுகிறது. செல்போன், கம்ப்யூட்டர் போன்றவை மானுடத்தின் சாதனைகள், உலகமயத்தின் சாதனைகள் அல்ல. உலகமயம் என்பது இந்த தொழில்நுட்பங்களின் உதவியோடு வளரும் நாடுகளை, மேலைநாடுகள் கையகப்படுத்தக்கூடிய வாய்ப்பை முன்வைக்கிறது. இதுதான் உலகமயம். மேலை நாட்டு பன்னாட்டு கம்பனிகளுக்கு சாதகமான விதிமுறைகள்,   பொருளாதார அம்சங்கள் என்ற குறிக்கோளை வைத்துத்தான் இந்த பயணமே நடக்கிறது. இக்கொள்கைகள் ஏகப்பட்ட மூலதனத்தை இந்தியாவில் உற்பத்திக்கு கொண்டுவரும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும், ஏற்றுமதியை பெருக்கும், வறுமை ஒழிந்துவிடும் என்ற கதையாடல்கள் துவங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன

இந்தியாவின் முப்பது ஆண்டு அனுபவம்

30 ஆண்டு அனுபவம் என்ன? பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதாகத்தான் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீதம் தேசத்தின் உற்பத்தி மதிப்பு ((ஜிடிபி- சந்தை விலைகளின்படி, இந்திய உற்பத்தி மதிப்பு-உள்நாட்டு உற்பத்தி மதிப்பு)  பெருகுவதாக கணக்கு சொல்கிறார்கள்.   அப்படிஎன்றால், பிரம்மாண்டமாக உற்பத்தியும் வருமானமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இந்த வளர்ச்சியின் தன்மை என்ன? என்னென்ன துறைகளில்  வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கெங்கு வளர்ச்சி ஏற்படவில்லை? இதன் பயன்கள் யாருக்கு போயிருக்கிறது? இது நிலைத்து நிற்குமா? நீடிக்குமா? என்ற கேள்விகளை எழுப்பும்போது, பல சங்கடமான உண்மைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற இரண்டுமே அரசை விலக்கி வைத்துவிட்டு, பெரும் தனியார் முதலீட்டாளர்கள் (பெட்டிக் கடைகள் அல்ல)  பெரிய பெரிய முதலாளிகள், தங்குதடையின்றி நம் நாட்டில் செயல்படக்கூடிய வழிகளை ஏற்படுத்துகிறது.  அப்படியென்றால், இவர்கள் எந்தவொரு சூழல் பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டியதில்லை. தொழிலாளர்களின் வாழ்க்கைதரத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. லாபத்தை ஈட்டுவது மட்டுமே அவர்கள் இலக்கு. எப்படி வேண்டுமானாலும் லாபத்தை ஈட்டலாம் என்று பச்சைக் கொடி காட்டப்பட்ட சூழல்தான் இங்கு உள்ளது.  

இந்த 30 ஆண்டு கால வளர்ச்சியில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த  தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. நாம் பொதுவாக பேசுகின்ற  ஆலை உற்பத்தியும் பாய்ச்சல் வேகத்தில் நாட்டில் வளரவில்லை. நிகழ்ந்துள்ள வளர்ச்சியில் பெரும்பகுதி சேவைத்துறை (Service Sector) யில்தான்.

இந்தியாவின் மொத்த தேச உற்பத்தியில் 60 சதவீதம் சேவைத்துறை. அடுத்து 23 அல்லது 24 சதவீதம் ஆலை உற்பத்தி, மின்சாரம், உள்ளிட்ட தொழில்துறை, மீதி 16, 17 சதவீதம் தான் விவசாயத்தின் பங்கு. ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டு மக்கள் தொகையில் 68.4% மக்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள். மொத்த இந்திய மக்களில் பாதிக்கும் சற்று அதிகமானோர் வேளாண்துறை வருமானத்தை சார்ந்திருக்கிறார்கள். அந்தத் துறை சரியாக செயல்படவில்லை. அதில் பெரும் முன்னேற்றமில்லை. அந்தத் துறையில் பெரும்பகுதி மக்கள் சாகுபடி செய்வதையே லாபகரமாக செய்ய முடியவில்லை என்ற நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில் 3.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் சாகுபடியே செய்ய முடியாமல், செய்கிற சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காமல், விளைபொருட்கள் விலை சரிந்து, இடுபொருட்கள் விலைகள் ஏறி கடுமையான நெருக்கடியில் வாழ்கின்றனர்; கடன் கிடைப்பதில்லை.

இதெல்லாம் எங்கிருந்து வந்தது? தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கை என்ன சொல்லியது? நாட்டை திறந்துவிடு, வெளிநாட்டிலிருந்து அந்நிய வேளாண் பொருட்கள் வரட்டும்; விலை குறையும்; இடுபொருள் விலையை ஏற்ற வேண்டும். மானியம் கொடுத்தால் அரசுக்கு பற்றாக்குறை அதிகரித்துவிடும். பற்றாக்குறை கூடினால் வெளிநாட்டு நிதி முதலாளிகள் இங்கு வரமாட்டார்கள். வெளி நாட்டு முதலாளிகளை குஷிபடுத்துவதற்கு, ஈர்ப்பதற்கு  அரசு தனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வரிகளைப் போடக் கூடாது, போட்டால், ஊக்கம் குறைந்துவிடும். இக்கொள்கை தான் விவசாயிகளின் வாழ்வை பறித்துள்ளது.

ஏரளானமான வரிகள் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்கப்படுவது போல் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. உண்மை என்னவெனில், மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வாங்குகிற மொத்த வரி என்பது தேசத்தின் உற்பத்தியில் 15,16 சதவீதம் கூட கிடையாது. அதில் 3 இல்  2 பங்கு சாதாரண உழைக்கும் மக்கள் கொடுக்கின்ற மறைமுக வரிகள் (கலால் வரி, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் வரி). சாதாரண மக்கள்தான் பெரும்பகுதி மறைமுகவரிகளை  கொடுக்கின்றனர். வரி கொடுப்பவர்கள் கோட்-சூட் போட்ட ஆள் என்று தொலைகாட்சிகளில் காட்டப்படும் பிம்பங்கள் உண்மைக்கு மாறானவை. வரிவசூலின் பெரும்பகுதி உழைக்கும் மக்களிடம் இருந்துதான் வருகிறது. வளங்களைத் திரட்டாமல், மக்களுக்கு தேவையான கல்வியையோ, ஆரோக்கியத்தையோ, அடிப்படை கட்டமைப்பு வசதிகளையோ அரசு கொடுக்க முடியாது. அப்படி வருமானங்களை திரட்ட வேண்டுமானால், செல்வந்தர்கள், பெருமுதலாளிகள் இடமிருந்து முறையாக வரிவசூல் செய்ய வேண்டும்.

அரசின் அணுகுமுறை

இன்றைக்கு மந்தநிலையை எதிர்கொள்ளக் கூடிய இடத்தில் என்ன முன்வைக்கப்படுகிறது? அரசு, பெரிய பெரிய கம்பெனிகளுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டும், வரி விகிதங்களை குறைக்க வேண்டும், அரசினுடைய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற குரல்தான் ஒலிக்கிறது. ஆனால், இந்திய நாட்டினுடைய தொழில் வளர்ச்சி நிலைத்தகு வளர்ச்சியாக இருக்க வேண்டுமானால், பெரும்பகுதி மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வருமானம் உயர்ந்தால்தான் பொருளை வாங்க முடியும்.

இன்றைக்கு, நாம் எதிர்கொள்ளும் நெருக்கடி, மந்தநிலை கடந்த 30 ஆண்டு வளர்ச்சி என்பது பெரும்பகுதி இந்திய மக்களின் வாங்கும் சக்தியை சார்ந்து இல்லை, என்பதை காட்டுடிறது. பெரும் வேலையின்மை, கொடிய வேளாண் நெருக்கடி, குறைந்த கூலி ஆகியவை நாட்டின் பெரும்பகுதி மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை என்பதை தெளிவாக்குகிறது. 

இந்திய நாட்டில் கிராக்கியை அதிகப்படுத்த என்ன வழி? மக்களின் நுகர்வு ஒருபகுதி. இது கடந்த ஐந்து ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் பரவலான வருமான சரிவினால் மந்தமாக உள்ளது. இன்னொரு வழி  ஏற்றுமதி. (ஏற்றுமதி என்பது பிறநாடுகளின் மக்கள் நமது நாட்டின் உற்பத்திக்கு கொடுக்கும் கிராக்கி). ஆனால், ஏற்றுமதியை வேகமாக நம்மால் உயர்த்த முடியவில்லை. தாராளமய கொள்கைகளை திணித்த பொழுது, இனி நாம்  ஏற்றுமதி அதிகம் செய்வோம். இறக்குமதியை அது தாண்டிவிடும், அதன்மூலம் அந்நிய செலாவணி அதிகம் வரும் என்றெல்லாம் கூறினர். கடந்த 3௦ ஆண்டுகளில் ஒரு வருடத்தில்கூட அது  நடக்கவில்லை. 30 ஆண்டுகளிலும் இந்தியாவின் சரக்கு (goods) ஏற்றுமதி மதிப்பு என்பது இறக்குமதி மதிப்பை விட குறைவாகத்தான் நிற்கிறது. பள்ளம் விழுகிறது. சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை (merchandise trade deficit) பிரம்மாண்டமாக உள்ளது. தாராளமயம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை நீக்கி இறக்குமதிக்கு கதவை திறந்து விட்டோம். இறக்குமதியின் மூலமாக பெரும் அளவில் அந்நிய செலாவணி நம்மை விட்டு போகிறது. அப்படியானால் இந்த பள்ளத்தை நிரப்புவதற்கு என்ன வழி? இரண்டு வழிகளில் வர்த்தக பற்றாக்குறை ஓரளவு குறைக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுலா துறை சார்ந்த சேவை துறை ஏற்றுமதி மூலம்   நமக்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. வெளிநாடுகளில் உழைத்து வாழ்கின்ற இந்திய உழைப்பாளி மக்கள், கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புகிறார்கள். இவ்வாறு இந்திய உழைப்பாளி மக்கள் செலுத்தும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ள உதவுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து சரக்கு வர்த்தகப் பள்ளத்தை ஓரளவு இட்டு நிரப்புகிறது. அதற்குப் பிறகும் பற்றாக்குறை உள்ளது. இதுதான் நடப்புக் கணக்கு பற்றாக்குறை. இதனை எப்படி  ஈடு செய்வது? எப்படியாவது அந்நிய செலாவணியை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது. அதனால்தான் அந்நிய மூலதனத்தை ஈர்க்க அரசு அவர்கள் காலில் விழுகிறது. “ நீங்கள் இங்கு வந்து தொழில் நடத்த வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. பங்குச் சந்தையில் சூதாடினாலும் பரவாயில்லை. பணத்தை கொண்டு வாருங்கள். வருடம் முழுவதும் எங்களுக்கு பணம் வந்து கொண்டேயிருக்க வேண்டும். நீங்கள் லாபத்தை அடித்துக் கொண்டு போங்கள். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நீங்கள் வந்தால் போதும்.”

என்கிறது இந்திய அரசு. அந்நிய செலாவணியை தொடர்ந்து வெளிநாட்டினர் இங்கு கொண்டு வரவில்லையென்றால், இந்திய பங்குச் சந்தை படுத்துவிடும். ரூபாய் மதிப்பு சரிந்துவிடும். இந்த நெருக்கடியில் நாம் சிக்கி உள்ளோம்.

உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை மையப்படுத்திய, உள்நாட்டு மக்களின் நல்வாழ்வு வளர்ச்சிப் பாதையை நாம் பின்பற்றவில்லை. தாராளமயத்தில் பெரிய முதலாளிகளுக்கு லாபம் இருக்கிறது. ஒருபகுதி நடுத்தர மக்களுக்கு கூட அதில் பயன் கிடைக்கிறது. ஆனால், பெரும்பகுதி இந்திய உழைப்பாளி மக்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு தொழில் முனைவோருக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயத் தொழிலாளிகளுக்கு கடந்த 30 ஆண்டு கால தாராளமயம் அவர்கள் வாழ்வை பெரும்பாலும்  மேம்படுத்தவில்லை.  

நிலைத்தகு வளர்ச்சிக்கு நிலச்சீர்திருத்தம் அவசியம் 

சீனா விடுதலை பெற்றபோது, பெரும் மிராசுதாரர்களை எல்லாம் பலவீனப்படுத்தி, அவர்களது நிலங்களை கிராம விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். இன்று அவர்களுக்கு பிழைப்பிற்கு பிரச்சனையில்லை.

 நிலச்சீர்திருத்தம் என்பது பரவலாக மக்களின் வாங்கும் சக்தியை கிராமங்களில் சீனத்தில் ஏற்படுத்தியது. இதை இந்தியா செய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. கேரளா, மேற்குவங்கத்தில் அதை செய்யும்போது முன்னேற்றம் இருந்தது. இந்தியாவில் இன்றும் நிலக்குவியல் இருக்கிறது. பெரும்பகுதி நிலம் ஒரு சிறிய பகுதியினர் கையில் தான் இருக்கிறது. கிராமங்களில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். அதில் பெரும்பகுதியினர் நிலமற்றவர்கள்.அல்லது கால், அரை, ஒரு ஏக்கர் என்ற அளவில் நிலம் கொண்ட சிறு-குறு விவசாயிகள்.  ஒன்று விவசாயம் நன்றாக இருக்க வேண்டும், அல்லது கூலி வேலை கிடைக்க வேண்டும். இந்த இரண்டுமே இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை.

  
கடந்த 5, 6 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு சுருங்கிவிட்டது. குறிப்பாக, மத்தியில் பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிதியை குறைத்துவிட்டது. இதனால் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. வேறு வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஒரு 4, 5 வருடங்களில்மட்டும் தான் – 2004-2008 காலத்தில்  – வேலை வாய்ப்பு சற்று அதிகரித்தது. ஆனால் இப்போது, ஆட்டோமொபைல் துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகள் படுத்து கிடக்கின்றன.  நடுத்தர வர்க்க மக்கள் பிரிட்ஜ், ஏசி, கார் வாங்குவர். ஆனால் எவ்வளவு வாங்குவர்?. இது ஒரு குறுகிய சந்தை. இது ஒரு சுற்று சுற்றும். அடுத்த சுற்றில் கிராக்கி இருக்காது. இதுவும்கூட, இத்தகைய நுகர்பொருட்கள் வாங்க, வீடுகட்ட, கட்டுபடியாகும் வட்டியில் வங்கிக்கடன் கொடுத்தும்  வரிச்சலுகைகள் அளித்தும் தான் நிகழ்ந்தது. இப்பொழுது வங்கி உள்ளிட்ட நிதித்துறை நெருக்கடியும் உள்ளது. நீண்ட கால கடன் கொடுக்க முன்பு உருவாக்கப்பட்ட வங்கிகளை மூடிவிட்டு, வர்த்தக வங்கிகளே நீண்டகால கடனையும் கொடுக்கலாம் என்ற கொள்கையால், பெரும் தனியார் கம்பனிகள் கட்டமைப்பு முதலீடுகளுக்காக பெருமளவில் கடன் வாங்கி, இப்பொழுது கொடுக்க முடியாமல் உள்ளனர். அரசும் அவர்கள் கடன்களை ரத்து செய்ய முனைகிறது. இவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் இன்று கடன் கொடுக்க முன்வரவில்லை.  நுகர்வு செலவுகளுக்கு கடன் கொடுத்து கிராக்கியை அதிகப்படுத்தும் வாய்ப்பு மிகக்குறைவு. பெரும்பகுதி மக்களை புறக்கணித்துவிட்டு, கிராக்கியை தொடர்ந்து தக்கவைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

வளர்ச்சி விகிதம் அல்ல, அதன் தன்மை தான் முக்கிய பிரச்சினை

 இந்தியாவில் மந்த நிலை என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி ஜீரோ (பூஜ்ஜியம்) ஆகவில்லை. ஆனால் குறைந்து வருகிறது. கடந்த ஆறு காலாண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து 2௦19 ஏப்ரல் ஜூன் காலத்தில் அரசு கணக்குப்படியே  5% ஆக குறைந்துள்ளது. இதுவே மிகை மதிப்பீடு என்றும் உண்மையில் வளர்ச்சி விகிதம் 3% தான் என்றும் பல வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்திய அரசினுடைய நிதித்துறை ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் “இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2011-2012 லிருந்து 2017,-2018 வரை, ஒரு ஆண்டிற்கு 4.5 சதவீதம் போலத் தான் இருந்துள்ளது.அரசு ஆவணங்களில் குறிப்பிடப்படும் விகிதத்தை விட 2.5 சதவிகிதப் புள்ளிகள் குறைவாகவே உள்ளது.” என்கிறார். இதன்படி கடந்த மூன்றுமாத வளர்ச்சி ஆண்டுக்கு 3 % தான்.

ஆனால் இதுவும் வளர்ச்சிதானே! உற்பத்தி அதிகரிக்கிறது. தலா உற்பத்தி அதிகரிக்கிறது. தலா உற்பத்தி என்பது மொத்த உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது. அது உங்களுக்கும் எனக்கும் கிடைக்கும் என்பதல்ல பொருள். தலா உற்பத்தி அதிகரித்தாலும் அதன் பெரும்பகுதி ஒரு சிறு பகுதி மக்களுக்கே போய்ச் சேரலாம். பெரும்பகுதி மக்களுக்கு முன்னேற்றம் மிகக் குறைவாக இருக்கலாம். அப்படித்தான் இருக்கிறது.

பொருளாதாரத்தை முற்றிலும் அழித்த மோடி அரசின்  இரு நடவடிக்கைகள்

மோடி அரசாங்கத்தின் இரண்டு நடவடிக்கைகள் இன்றைய மந்த நிலைக்கு முக்கிய காரணம். ஒன்று, நவம்பர் 8, 2௦16 இல் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பண மதிப்பு நீக்கநடவடிக்கை.இது, இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் சிறு-குறு தொழில்களை, வணிகர்களை முற்றிலும் நாசப்படுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி. இது மிக மோசமாக, நிறைய குழப்பங்களுடன் அமலாகிவருகிறது. இது சிறு-குறு தொழில்களை மேலும் சீர்குலையச் செய்தது. அண்மை ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளதற்கும் இன்றைய பொருளாதார மந்தத்திற்கும் தாராளமய கொள்கைகள் மட்டுமின்றி, இவ்விரு நடவடிக்கைகளும் முக்கிய காரணங்கள். இவற்றால், கிராமப்புறங்களில் விவசாயத்தொழிலாளிகளுக்கு கிடைக்கும் உண்மைக் கூலி ஜூனில் முடிந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் சரிந்துள்ளது. வேளாண் அல்லாத பணிகளில் கூலி தேக்கமாக உள்ளது..விவசாயிகளின் வருமானமும் குறைந்துள்ளது.  கடன் வாங்கி செலவு செய்யும் இடத்தில் மத்தியதர வர்க்கம் கூட இல்லை. ரிசர்வ வங்கி வட்டி விகிதத்தை குறைத்து வருகின்ற போதிலும் கடன் வாங்க நுகர்வோரும் வரவில்லை. தனியார் துறை பெருமுதலாளிகளும் வரிசையில் நிற்கவில்லை. வரிவசூலில் பெரும் பற்றாக்குறைஏற்பட்டுள்ள செய்தி அனைவருக்கும் தெரியும். இப்பொழுது ரிசர்வ வங்கியிடம் இருந்து பெற்றுள்ள தொகையை வைத்து அரசு முதலீடுகளை மேற்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வங்கிகளை இணைப்பதோ, ரிசர்வ வங்கி கஜானாவை கைப்பற்றுவதோ மந்தநிலையை முடிவுக்கு கொண்டுவர உதவாது.

தீர்வு எங்கே?

பெரும்பகுதி மக்களைச் சார்ந்த நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிராமப் புறங்களில் முதலீடுகளை மேம்படுத்தி, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம், அனைவருக்கும் தேவையான கட்டமைப்பு என்ற உறுதிப்படுத்துகிற, அனைவருக்கும் வேலையையும் வருமானத்தையும்  உறுதிசெய்கின்ற  வளர்ச்சிப் பாதைதான்  ஒரு நீண்ட கால தீர்வாக இருக்க முடியும்.

உடனடியாக, ஊரக வேலை திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பன்மடங்கு அதிகரித்து கிராமங்களில் வேளாண் உற்பத்திக்கு உதவும் முதலீடுகளை அரசு மேற்கொள்ளவேண்டும். பொதுத்துறை பங்குகளை விற்கும் நாசகர பாதையை கைவிட்டு பொதுத்துறை மூலம் வேளாண் நெருக்கடியை எதிர்கொள்ள. வேளாண் ஆராய்ச்சி, விரிவாக்க பணி அமைப்பு, பாசன விரிவாக்கம் , தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்டவகையில்  முதலீடுகளை அரசு செய்யவேண்டும். நகரப்புறங்களுக்கும் வேலை உறுதி சட்டம் விரிவு படுத்தப்படவேண்டும். இதற்கான வளங்களை அரசால் திரட்ட இயலும். பெரும் கம்பனிகள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் செலுத்தவேண்டிய வரிகள் கறாராக வசூல் செய்யப்படவேண்டும். விவசாயிகளின் விளைபொருளுக்கு கட்டுபடியாகும் விலையையும் கொள்முதலையும் உறுதி செய்ய வேண்டும். சிறு குறு நடுத்தர விவசாயிகளின் கோரிக்கையான ஒரு முறை  கடன் ரத்து அமலாக வேண்டும். இவையெல்லாம் ஓரளவு மந்தநிலையை எதிர்கொள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க உதவும்.

ஆனால் இவையே தீர்வாகாது. தாராளமய கொள்கைகளை அரசு  கைவிடுவது மிக அவசர அவசியம். இதற்கென, நிலசீர்திருத்தம் உள்ளிட்ட  நமது மாற்றுக்கொள்கைகளை முன்வைத்து மக்களை திரட்டும் பணியில் நாம் களம் இறங்கவேண்டும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: